Thursday, February 29, 2024

இன்று இறுதி நாள்! பேராதரவு தாரீர்


நண்பர்களுக்கு வணக்கம்! எனது கவிதை நூல்களின் சிறப்பு விலைத் திட்டத்துக்கு இன்றே இறுதி நாள். இதுவரை நல்ல ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆதரவு காட்டிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! என்றாலும் இதைத் தாண்டியும் உங்கள் பேராதரவை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் புத்தகங்களை நீங்கள் வாங்கிக்கொள்வதன் மூலமும், வாங்கிப் பரிசளிப்பதன் மூலமும், இந்த சிறப்பு விலைத் திட்டம் குறித்துப் பிறருடன் பகிர்ந்துகொள்வதன் மூலமும் உங்கள் ஆதரவுக் கரங்களை நீட்டலாம். இன்றைய தினத்துக்குப் பிறகும் இந்த நூல்களைக் கணிசமான தள்ளுபடியில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். இனி எப்போதும் மேற்கண்ட என் கவிதைத் தொகுப்புகள் மூன்றும் சேர்த்து 35% சிறப்புவிலையில் கிடைக்கும் (அஞ்சல் செலவு உட்பட). ஆதரவு தாரீர்!


Wednesday, February 28, 2024

ஒரு ஸ்கிரீன்ஷாட் போதிமரத்தின் நிழலில்...



ஒரு ஸ்க்ரீன்ஷாட் விடியல்
ஆம்
அதை அப்படித்தான்
சொல்ல வேண்டும்

ஒன்றிரண்டு உயிர்நண்பர்களின்
பதற்றமும்
அதைத் தொடர்ந்து
அதைவிட நெருக்கம் குறைந்த
நண்பர்களின் மௌனமும்
காலையிலிருந்து
அழைத்துக்கொண்டிருக்கின்றன

தெரிந்தவர்கள்
தெரியாதவர்கள் என்று
எங்கிருந்தெல்லாமோ புறப்பட்டு
அடித்துக்கொண்டிருந்தார்கள்
நண்பன்தான் சொன்னான்
நான் தொடக்கத்திலேயே
தூரப் போய்விட்டேன்

ஒன்றிரண்டு ஆதரவுக் குரல்களும்
எழுந்ததாய்ச் சொன்னான்
தனியே அவர்களை அழைத்து
வேண்டாமென்று சொல்லிவிட்டேன்

இனி நான்
எல்லாவற்றையும்
முதலிலிருந்து
தொடங்க வேண்டும்
என்று நண்பன் சொன்னான்

ஆனால்
அதற்கு ஒரு வாரமாவது ஆகும்
இதையும்
நண்பன்தான் சொன்னான்

இரண்டாவது நாள்
அதிகாலையில்
பக்கத்துக் கடையில்
டீ சாப்பிடப் போனேன்

வாக்கிங் போய்விட்டு வந்த ஒருவர்
எனக்கருகே
கையில் வடையுடன்
வந்து உட்கார்ந்து
கைபேசியை நோண்ட
ஆரம்பித்தார்

வடையை ஒரு கடியும்
கடித்துக்கொண்டார்
சூடு அதிலிருந்து
பிரிந்தது
அதிகாலையுடன்
கலந்ததைக் கண்டேன்

இப்போது
பழக்க வெறுமையில்
அவர் கைபேசியை
எட்டிப்பார்த்துவிட்டேன்

யாருடைய பதிவிலோ இருந்த
எனது ஸ்கிரீன்ஷாட்தான் அது
அதனைப் பெரிதுபடுத்திப்
பார்த்துக்கொண்டிருந்தார்

எட்டிப்பார்த்தபோது
அந்த வாசகங்கள்
முழுமையாய்
என்னுடையவை 
ஆகியிருந்தன

இந்த டீக்கு
நான் நன்றி சொல்ல
வேண்டும்

அவ்வளவு
அமைதியுடன்
எழுந்துவிட்டேன்
      -ஆசை


குறிப்பு: இந்தக் கவிதைக்குப் பயன்படுத்தியிருக்கும் படங்கள் சித்தரிப்பு நோக்கத்துக்காகப் பயன்படுத்தியவை. யாருடைய மனதையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்!

Tuesday, February 27, 2024

இனிமேலும் இப்படியெல்லாம் அசிங்கப்படுத்தாதீர்கள்!


கடந்த ஆண்டு திருவாரூரிலோ தஞ்சையிலோ நடந்த இலக்கிய விழாவில் நண்பர் ஒருவர் பேசுகிறார் என்ற அறிவிப்பைப் பார்த்தேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்து வாட்ஸப் செய்தி அனுப்பினேன். அவருக்கு ஏதோ குறுகுறுத்திருக்கும் போலிருக்கிறது, ஏனெனில் அவர் எந்த மெசேஜும் எனக்கு அனுப்பாத, தொடர்பில் இல்லாத நிலையில் போய்விட்டவர், உடனே என்னை அழைத்து “ஆசை நீங்கள் சென்னை இலக்கியத் திருவிழாவில் இருக்கிறீர்கள்” என்றார். ஓஹோ முடிவெடுக்கும் இடத்தில் அவர் இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். சென்னை இலக்கியத் திருவிழாவும் வந்து போனது. என்னை யாரும் அழைக்கவில்லை. நானும் வருந்தவில்லை.   நான் அதை மறந்துவிட்டேன்.

இந்த ஆண்டு திருவாரூர் இலக்கியத் திருவிழா, காவிரி இலக்கியத் திருவிழா முடிந்தபோது என் ஊர்க்காரர்கள், நண்பர்கள் பலரும் வருத்தப்பட்டார்கள்.

பேசுவதெல்லாம் பெருமாளே! - ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் பதிகம்


கடந்த சனிக்கிழமை, 24-02-24 அன்று ஆரணி அருகில் அய்யம்பாளையத்தில் உள்ள ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் கோயிலுக்கு நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான ஜி. குப்புசாமியுடன் சென்றிருந்தேன். அங்கே பாடிய பதிகங்கள் இவை. சிறிய கோயில்தான். ஆனால், ரஜினி குடும்பத்தால் புகழ்பெற்ற கோயில். பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு இங்கே வந்து வேண்டிக்கொண்டால் சரியாகிவிடும் என்று ஒரு நம்பிக்கை. கோயிலுக்குச் சென்று தரிசனம் கண்டு அரை மணி நேரத்தில் எழுதிய பத்துக் கவிதைகள் இவை. அநேகமாக என்னால் பாடல் பெற்ற ஸ்தலமாக அந்தக் கோயில் இப்போது ஆகியிருக்கிறது என்பதில் எனக்குத்தான் மகிழ்ச்சி. 

இந்தக் கோயிலுக்கும் பாடகி சுனந்தாவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் தொண்டையில் ஒரு பாதிப்பு ஏற்பட்டு இங்கே வேண்டிக்கொண்டு போன பின் சரியானதாகக் கேள்விப்பட்டேன்.  இந்தப் பதிகங்களை நண்பர் ஜி.குப்புசாமி பாடகி சுனந்தாவுக்கு அனுப்பினார். அவர் படித்துப் பார்த்துவிட்டு இப்படியொரு மறுமொழி ஆற்றினார்: ‘Read this a couple of times, really Lord Perumal's grace! Thank you so much for sending this 🙏'. கோயிலுக்கு வழிநடத்திய ஜி.குப்புசாமி அவர்களுக்கும் படித்துவிட்டு நெகிழ்ந்துபோன சுனந்தா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி! பதிகம் கீழே:

1.
உலகெலாம் ஓரோசை
உலகின் பெயராய் அமைந்த
பேரோசை
மனதுக்குள் குமைந்து
வாய்க்குள் சுழன்று
வெளிப்பட மறுக்கின்றது
இறுக ஒட்டிக்கொண்ட வாயைத்
துளைக்கும் வண்டே
வருக
குழலோசை இவ்வுடல்
செய்க
*

Monday, February 26, 2024

4 கவிதை நூல்கள் ஒரு மாதத்துக்குள்


நண்பர்களுக்கு மேலும் மகிழ்ச்சியான செய்தி. இந்த மாதத்தின் நான்காவது கவிதைத் தொகுப்பைத் தற்போது எழுதி முடித்திருக்கிறேன். 'யோனிமேட்டின் பாடல்கள்' என்பது இந்தத் தொகுப்பின் தலைப்பு. இத்தலைப்பு பின்னால் மாறலாம். 

காந்தி கவிதைகள் (62 கவிதைகள்), சக்தி - காளி கவிதைகள் (230), தில்லைக் காளி பதிகங்கள் (56), யோனிமேட்டின் பாடல்கள் (53), பிற கவிதைகள் (25+) என்று இந்த மாதம் இதுவரை மட்டும் 425 கவிதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். ஒரே மாதத்தில் நான்கு கவிதைத் தொகுப்புகளுக்கான கவிதைகள் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. தொடர்ந்து ஆதரவும் அன்பும் தெரிவித்து வரும் நண்பர்களுக்கு அன்பும் நன்றி!

Sunday, February 25, 2024

யோனிமேட்டின் காதலன் - 12 கவிதைகள்



1.
யோனி மேடுகளின்
இணையற்ற காதலன் நான்

இந்த நற்காலையில்
என் முன்னே வருகிறாள்
ஒரு பெண்
ஒரு இனிய ஏந்தலாய்
யோனி மேடு சுமந்து

ஓடுதளமாகிறது
என் மனம்
ஏறிப் பறக்கிறது
அவ்விமானம்

விமானத்தின்
கால்களைப் பிடித்துத் தொங்குபவனுக்கு
விமானத்தின் அடிவயிறே வானம்

வானமே மழை பொழிக
வாய் திறந்து காத்திருக்கிறேன்

வானமுது நானருந்தியபின்
கைப்பற்றுதல்
தேவையில்லை எனக்கு

*

2.
யோனி மேடு
என்முன்னே நடந்துவருகிறது
கைகுவித்த பக்தன் நோக்கி
கர்ப்பகிரகமே
நடந்துவருதற்போன்று

அதுவரை கைகுவித்த பக்தன்
கண்விரித்து
அடிவயிற்றின்
தீபமாகிறான்
*

Saturday, February 24, 2024

புலிக்குப் பெயர் வைக்கும் கலை


இந்த மிருகக்காட்சி சாலைக்குள்
மதமாற்றத்துக்கு 
அனுமதி கிடையாது
சாதி மாற்றத்துக்கு
அனுமதி கிடையாது
பெயர் மாற்றம்
செய்துகொள்ளலாம்

ஆகவே
புலிக்கு எலி என்று
பெயர் வைக்கிறோம்
சிங்கத்துக்கு
முயல் என்று
பெயர் வைக்கிறோம்

இரண்டும்
தாங்கள் என்னவாக இருக்கிறோம் என்று
கவலை கொண்டதில்லை
நாங்கள் கொள்கிறோம்

பழக்கிவிட்டால்
நாளாக நாளாக
எலி இங்கே வா
என்றழைத்தால்
எலியல்ல புலிதான்
வந்து நிற்கும்
பெயரில்
என்ன இருக்கிறது
எலிதான் இருக்கிறது
பெயருக்கும்
மிருகக்காட்சி சாலைக்கும்
நமக்கும் வெளியிலோ
புலி இருக்கிறது
ஆம்
புலி
       -ஆசை

Friday, February 23, 2024

நிலைமத்தின் பாடல்கள்

Inertia - painting by Soraya Silvestri

1. 
நிலைமத்தின் பொறுப்பற்றதனம்
**
மோதிய வேகத்தில்
முன் கண்ணாடியை
உடைத்துக்கொண்டு
வெளியே வந்து
விழுந்து கிடக்கிறார்
லாரி ஓட்டுநர்

இப்படித்தான்
எதையாவது
எல்லை தாண்டித்
தொடர்ந்து
போக வைத்துக்கொண்டிருக்கிறது
நிலைமம்
ஒரு தொடரோட்டம் போல

அவரது
பிள்ளைகளுக்கும்
பெண்டாட்டிக்கும்
நிலைமத்தின் மேல்
பழிபோடத் தெரியாது

விபத்தைப் பார்த்த நான்
நேரடியாகப் பழிபோடுவேன்

உலகத்தின்
எல்லா விபத்துகளுக்கும்
காரணம்

ஆனால்
விபத்து நடந்த
இடத்திலிருந்து
நழுவிச் செல்லும்
முதல் ஆள்

நிலைமத்தின்
இந்தப் பொறுப்பற்றதனத்தை
யாராவது ஒருவர்
தட்டிக்கேட்கத்தானே வேண்டும்
*

2. நிலைமத்தின் மறுமொழி
**
தொடங்கும் போதே
உருவாகிவிடுகிறது
போய்ச்சேரும் வரையிலான
உன் வழி

இருக்கும் வரை
இருக்கிறது
நீ தொடர்ந்து
இருப்பதற்கான
உன் இடம்

நீயே குறுக்கீடாய் மாறிவிட
குறுக்கீடு
உனையெட்டிப்
பார்த்துவிட
நிகழ்கிறது
ஆங்கோர் பெருவிபத்து
அண்டம் குலைய
ஆகாசம் சிதற

இரண்டு தனி வழி
ஒன்றையொன்று
எட்டிப்பார்க்கும்
ஆவலில்
ஊடுருவிக்கொண்டால்
உயிர்போனதென்றால்
விழுகிறது
என் மேல் பழி
*


3. நிலைகுத்திய விழிகள்
**
விபத்தில் உயிரிழந்த
ஓட்டுநர் குடும்பத்தைப்
பார்க்கப் போயிருந்தேன்
இன்று

நிலைகுத்திப் போயிருந்தன
ஓட்டுநர் மனைவியின்
விழிகள்

ஓடியாடிய
குழந்தைகள் விழிகளும்
அப்படியே

அவற்றிலிருந்து
ஒரு காட்சி
நிரந்தரமாய்
நீக்கப்பட்டுவிட்டது

நீக்கப்பட்டு
நிலைகுத்தியதன் பெயரும்
நிலைமமே
என்று சொன்னால்
உன் கருமாந்திரம்
எனக்குத் தேவையே இல்லை
*

4. உண்ட களைப்பு
**
எவ்வளவு
அசைந்தாலும்
அசையாமல் இருந்தாலும்
ஆடாமல் அசையாமல்
உயிரை
அசைபோட்டுக்கொண்டிருப்பது
நிலைமம்

முழுவதும்
உண்ட களைப்பில்
அது உறங்கிக் கிடக்கும்போதே
கண்ணுக்குள் வந்து
நிலைகுத்திப் போகும்
*

5. என்றுமுள்ள நிலைமம்
**
என்றுமுள்ள
நிலைமத்தைத் தேடி
எல்லா உயிர்களும்
உடலிழுத்துச் செல்கின்றன

கண்டடையும்போது
உடலைத் தவிக்க விட்டுவிட்டு
உயிர் போகின்றது

நன்றிகெட்ட
உயிரை
ஏதும் செய்ய முடியாத
வேதனையில்
உடல் இங்கேயே கிடந்து
அழுகிச் சாகின்றது
*

6. நிலைமத்தின் வீணை
**
நிலைமத்தை
முடுக்கேற்றியது யாரோ
நிலைமத்தை
உசுப்பேற்றியது யாரோ
உசுப்பேறித்
தலைதெறிக்க
மோதிச் சிதறும்போது
அதை வீணையாய்
மாற்றி மீட்டியது யாரோ
அதைக் கேட்கும்
செவிகளை
எங்கும்
இறைத்தது யாரோ
பின் நாதம் முடிந்ததும்
அதையெல்லாம்
கூட்டிப்பெருக்கி
ஒன்றுமற்ற
குப்பைக் கூடையில்
போடுவதும் யாரோ
*

7. பெருநிலைமம்
**
சிறுநிலைமமெல்லாம்
ஆடை அணிந்திருக்கிறது
ஓட்டை அணிந்திருக்கிறது
கூட்டை அணிந்திருக்கிறது
தோலை அணிந்திருக்கிறது
மயிர்கள் அணிந்திருக்கிறது

பெருநிலைமம்
கண்டதும்
மோதித் துகிலுரிந்து
ஒன்றாய்க் கலக்கிறது

போன உயிர்
கவலையில்லை
இருக்கும் மயிர்
வலிக்கின்றது
*

8. நிலையாமையின் தலைவிதி

நிலையாய் இருந்தால்
நிலைமம்
நிலையாய் சென்றால்
நிலைமம்

நிலையாமைக்கும்
இவ்விதி என்பதால்
நிலையற்ற
வாழ்வதற்கு

முடுக்கும் கணம்
விழிக்கும்
விழிப்பில் நிலைத்தால்
இறக்கும் 
        -ஆசை

Thursday, February 22, 2024

பாவென்று அழையுங்களேன் பாபுஜி


இன்று கஸ்தூர்பா காந்தியின் 80வது நினைவுநாள். இந்த நாளை முன்னிட்டு 'சர்வோதயம் மலர்கிறது' இதழில் என்னுடைய 'பாவென்று அழையுங்களேன் பாபுஜி' கவிதை வெளியாகியிருக்கிறது. இக்கவிதையை வெளியிட்ட காந்தியத் தம்பதியினர் பிரேமா அண்ணாமலை அவர்களுக்கும், அண்ணாமலை அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி

🙏💕 கவிதை 👇
**
பாவென்று அழையுங்களேன் பாபுஜி
**
உடன் இருந்தபோது
இப்படி
என்றாவது
பாவைப்
பார்த்துக்கொண்டே
இருந்ததுண்டா பாபுஜி

உங்கள் பார்வை கண்டு
பா அஞ்சிய
காலம் உண்டு
பிறகு
பாவின் பார்வைக்கு
அஞ்ச ஆரம்பித்தீர்கள்
நீங்கள்

இன்று இரண்டுமில்லை
ஒருவழிப் பார்வை
மட்டுமே

பாவின் விழிகள்
இறுதியாய் வெறித்த
ஆகா கான் மாளிகையின்
உட்கூரை உச்சியாய்
அப்போது இருக்க
ஆசைப்பட்டீர்களா பாபுஜி

ஒரு மகாத்மா ஆவதற்கு
நிரம்பக் கல்நெஞ்சம்
வேண்டுமென்று
உடனிருந்து கண்டவர்
இன்று அதில் உங்களைத்
தோல்வியடையச் செய்துவிட்டுப்
போய்விட்டாரா பாபுஜி

எப்போதும்
ஏந்திப் பொறுத்துக்கொண்ட
பாவின் அகிம்சை முன்
உங்கள் உன்னத அகிம்சை
மேலும் தோற்றுப்போய்
அதனால்
துவண்டுபோய்
அமர்ந்திருக்கிறீர்களா பாபுஜி

பா என்று அழையுங்களேன்
பாபுஜி
அவர் விருட்டென்றெழுந்து
உங்களுக்கு
ஆட்டுப்பாலும் பேரீச்சையும்
கொண்டுவரப் போய்விடுவார்

பா என்று அழையுங்களேன்
பாபுஜி
அவர் சட்டென்றெழுந்து
உங்களுடன்
கேரம் விளையாட
உட்கார்ந்துவிடுவார்

ஆனால்
நீங்கள் மாட்டீர்கள்
கல்நெஞ்சக்காரர்
கேட்டால்
பாவுக்கு
அவள் துயர்களிலிருந்தும்
என்னிடமிருந்தும்
விடுதலை கிடைத்திருக்கிறது
என்று சாக்கு சொல்வீர்கள்
கூட
ஒரு துயரச் சிரிப்புடன்
- ஆசை


கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: 

1. பாபாசாகேபின் தனிமொழி

2. மகாத்மாவின் மறுமொழி



5. TENET











 

Wednesday, February 21, 2024

குங்கும அந்தாதி


1.

அன்னைக் குங்குமப் பிரகாசம்
ஒரு சன்னிதி

உடலை நிறைப்பது
ஒரு சான்னித்தியம்

மனதில் மலர்வது
ஒரு மகத்துவ யோனி
  
2.
மனதில் மலர்ந்த
மகத்துவ யோனி

உடலின் எல்லைகள்
விசும்பின்
எல்லையாய்
மாறிடக் கண்டேன்

உடலின் அவயவங்கள்
ஒவ்வொன்றும்
பறவையாய் மாறி
எங்கெங்கும் பறந்திடக் கண்டேன்

3.
பறந்திடக் கண்டேன்
பயிர்செய் வயலெல்லாம்
விசும்பின் வளியில்

விசும்புக்குச் சிலிர்த்தாற்போல்
ஒற்றைப் புல்லாய்
மாறியது விசும்பு

அப்பசும்புல் 
அசைப்பது எவ்வளி

4.
வளிசெய் துருத்தியின்
வழிகேட்டுப் பறக்கிறேன்

எதிர்வளி பறத்தல்
எளிதன்று

எனினும்
அதுவொன்றே தரும்
உயிர்வளி

5.
உயிர்வளி ஓசை
வெற்றிடம் செய்யும்

வெற்றிடத்துள்
பறத்தல் தேவையில்லை
இருத்தல் போதும்
இருப்பிடம் சேர்க்கும்

6.
இருப்பிடம் சேர்ந்தால்
என்ன வரும்
இருப்பிடம் தன்னில்
கண்கள் என்ன காணும்

இங்கிருந்தே காண
ஆவல் துடிக்கிறது
மனதை உதைத்துப் பறக்கிறது

இருக்கும் இடத்துக்கே
இருப்பிடம் வரும்
இடமதை அழி மனமே

7.
அழிந்த மனதில்
இடமிருக்காது
காலமிருக்காது என்று
அங்கிருந்தே இருப்பிடம்
சொல்வது இங்கெனக்குக்
கேட்கிறதென்றால்
இருந்த இடத்திலிருந்தே
பறக்கின்றேனா நான்
இருப்பிடத்துக்குள்

8.
இருப்பிடப் பறத்தலில்
அமர மரமிருக்காது
அருந்த நீரிருக்காது
சிறகு மறைய
உடல் கரைய
இருப்பிடம் தோன்றும்
கடைசி இணுக்கும்
மறைந்த பின்

9.
மறைந்த பின்
தோன்றும் இடத்தில்
நானிருக்க மாட்டேன் என்றால்
ஏனிந்தப் பறத்தல்
என்று கேட்க
இருப்பிடம் சொன்னது
மறைந்த இடத்தில்
தோன்றும் பறவையாய்
இருந்து பார் என்று

10.
பாரென்று சொன்னது பார்
பார் தோன்றி மறைந்தது பார்
யாரென்று தெரியவில்லை
நானென்பது புரியவில்லை
செஞ்சுடர் சோதியெழுந்தது
கண்கள் கண்டதை நோக்கிப் 
பறந்தது பறவை
அங்கே அப்படியொரு தகிதகிப்பு
அன்னைக் குங்குமப் பிரகாசம்
      -ஆசை, 21-02-24

தில்லைக் காளியின் குங்குமக் கொதிப்புக்கு
*

கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்:



Tuesday, February 20, 2024

தில்லைக் காளி பதிகம்! நவீனத் தமிழ் கவிதையில் பதிக முயற்சி!


கடந்த ஞாயிறு (18-02-24) தில்லைக் காளியைச் சென்று பார்த்தேன். அங்கே அரை மணிநேரத்தில் பதிகம் எழுதிவிட்டேன் (பத்துப் பாடல்கள்). தில்லைக் காளி பதிகம்! நாயன்மார்கள், ஆழ்வார்கள் வழியில் என்றாலும் அவர்களுக்கு தூரத்தில் கூட நாம் நிற்க முடியாது. ஆயினும் அவர்களுக்கும் நமக்கும் பொதுவாய்த் தமிழ் இருக்கிறாள். அவளின் தன்னம்பிக்கைதான் இம்முயற்சிக்கும் காரணம். அநேகமாக நவீனத் தமிழ் இலக்கியத்தில் திருத்தலம் சென்று பதிகம் இயற்றுவது இதுதான் முதன்முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இனி தொடர்ந்து எல்லா மதத் திருத்தலங்களிலும் பதிகம் பாடவிருக்கிறேன். சர்வமதப் பதிகங்கள் என்பதால் தமிழ் இலக்கிய வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாத ஒன்றாக இந்த முயற்சி இருக்கும்!

இந்தப் பதிகங்களில் எந்தத் திட்டமிடலும் இருக்காது. அங்கே போய் எழும் உணர்வுகளையே அப்போதே எழுதுவேன். பிறகு மிகச் சிறிய அளவில் திருத்தங்கள், சேர்த்தல்கள் மட்டும் உண்டு. அடிப்படையில் மாற்றம் இருக்காது.

கோயில் சார்ந்த நடைமுறைகள், சொல்வழக்குகள் ஏதும் அறியாதவன் என்பதால் பிழையேதும் இருந்தால் மன்னித்தருள்க!
*

தில்லைக் காளி பதிகம்
**
1.
அபிஷேகம் முடிந்து
அம்மைக்கு ஒப்பனை
கண்ணை மட்டும்
தொடவில்லை

ஒப்பனையெல்லாம்
அண்ட முடியாத
அண்டம் அது

அதன் முன்னே
நீண்ட வரிசை நிற்கிறது
கண்திறந்த அபிஷேகத்தில்
குளிக்கிறது

திரைபோட்டாலும்
நடை சாத்தினாலும்
நிற்காத அபிஷேகம்
*

2.
எனக்கோ கண்ணாடி இல்லாத
மங்கலான பார்வை கிடைத்தது
ஒரே ஒரு நிமிடப் பார்வை

அப்பார்வையில்
ஒப்பனை இல்லாத ஒரே இடமான அம்மையின் கண்ணோ கண்ணாடிபோல் காட்சியளிக்கிறது

தன் வெப்பம்
தான் தணித்து
அருளை முன்நீட்டும்
கண்ணாடியோ

முன்வெப்பம்
இருந்த இடத்திலேயே
அருளாக்கும் கண்ணாடியோ
*

3.
பதிகத்தின் முதல் கவிதை மேல்
வந்து விழுந்தது
ஒரு சாமந்திப் பூ
தரையில் ஓடும்
அம்மை அபிஷேகத் தாரையின்
நிறம்கொண்டு

அபிஷேகம்
தன்னைப் பற்றிய கவிதைக்கா
இல்லை
அபிஷேகம்
கவிதையின் முடிவா
இல்லை
அபிஷேகம்தான்
கவிதையை எழுதியதா
*

4.
வந்த நேரம்
வெகு தாமதம்

பிள்ளைகளைக் கிளப்பிக்கொண்டு
வந்ததால்
அப்படி

அபிஷேகம் இல்லாமலேயே
அவர்களும் வந்துவிட்டார்கள்

காத்திருந்ததும்
வெகு நேரம்

உச்சிக் கால பூஜையின்
கடைசி அபிஷேகம் முடிந்து
திரை திறந்து
அம்மை காட்சியளித்தது
சிறு நேரம்

பின் திரை போட
நடைசாத்த
கதவுசாத்த
துரத்தப்படுகிறோம்

கொஞ்ச நேரத்துக்கா அப்பா
இவ்வளவு தூரம்
இவ்வளவு நேரம்
என்றே சிணுங்கும்
பிள்ளைகள்

கொஞ்ச நேரம்தான்
அந்தக்
கொஞ்ச நேரத்தில்
எனக்குள் பாய்ந்தது எது

காலத்தைச் சுருக்கி விரித்துச்
சுருக்கும் இதயமல்லவா

இதயம் பெறுவது
கண நேரம்தான்
அதன் பின்
இதயத்துள் வாழ்வதென்பது
நித்தியம்
*

5.
அபிஷேகத்தின் போது
அம்மையின் வெற்றுடம்பில்
கரும் உடம்பில்
சலசலக்கிறது
ஒரு ஓடை

அம்மை உடம்பு
ஓடையின் அடித்தரையாய்
நெளிகிறது

அவள் உடலின்
இருளுக்குள்ளிருந்து
அருளைச் சுரந்தெடுக்க
எத்தனையெத்தனைதான்
அபிஷேகம்
*

6.
அம்மை சன்னிதிக்குள்
அம்மையும் ஒரு யாசகி
யாவரும் அங்கே யாசகரே
பெறும் சன்னிதியிலும்
அதிகம் பெறுபவள் அவளே
அருள் செய்யும் சிலிர்ப்பே
யாவினும் மிகப் பெரிது
*

7.
யாவரும் அருள் பாலிக்கின்றனர்
அம்மை சன்னிதிக்குள்

யாவருக்குமான
அருள்பாலிப்பு வளையம் இது

யாரோ இரு சகோதரிகள்
மாயி மகமாயி நீ சூலி
என்று பாடி அருள்பாலிக்கின்றனர்

பதின்சிறுமியொருத்தி
பச்சைப் பாவாடை யவ்வனத்தால்
அருள்பாலிக்கின்றாள்

ஒரு குடும்பம்
தேன்குழைத்த பொங்கலில்
முந்திரியை நீந்த விட்டுத்
தந்தருள்பாலிக்கின்றது

யாரோ ஒரு பெண்
செம்மதுரக் கொய்யா கொடுத்து
முருகா வாங்கிக்கொண்டாயே
என்று தொட்டு வணங்குகின்றாள்
என் குழந்தைகளின் காலை

ஒருவர் தன்னைக்
கீழே வைக்குமிடத்தில்
அருளின் கோபுரம் மேலே
எழக் கண்டேன்

அதை இச்சன்னிதிக்குள்
கண்டேன்
*

8.
உற்சவ அம்மை
முந்தியடைத்தாள்
மூலவர் அம்மை
பிந்தியடைத்தாள்
சாத்தப்பட்டது கதவு
திறக்கப்பட்டது திட்டிவாசல்
எப்போதும் உறங்காத
அம்மையின் கண்போல
*

9.
இறுதியில் என்ன செய்ய வேண்டும்

தரையில் விழுந்து கும்பிடு
என்றாள் உடலம்மை
நானொரு நாத்திகனென்று
அங்கே விளக்க நேரமில்லை
அம்மையைக் கும்பிட
நாத்திகனாயிருப்பது தடையுமில்லை

அப்படியே படுத்துவிட்டேன்
மூடிய அம்மைத் திருவுரு இதயம்
எனக்காகத் துடித்துக்கொண்டிருந்தது
தரையில்
குளிர்ந்து

அக்குளிருக்கே
இம்முழுவுடல்
நெடுவணக்கம்

அக்குளிரை உண்டு
குளிராய்
சன்னிதியிலிருந்து வெளிவருக
உடலே
*

10.
ஆறுமுகம்
அருளிடும்
அனுதினமும்
ஏறுமுகம்
என்றொரு மந்திரம்

கோயிலுக்கு வெளியே
கிடைத்தது

அம்மைக்கு
அதிலொன்றும்
பிரச்சினை இருக்காது

அதை அருளியவளே
அவள்தானே
செம்பிழம்பு பொட்டுவைத்து
பொட்டின் சுடராய்
உடல்கொண்ட யாரும்
அம்மைதானே
-ஆசை, 18-02-24


கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: