Sunday, November 29, 2020

நாம் ஏன் சதிக் கோட்பாடுகளை நம்புகிறோம்?



யுவால் நோவா ஹராரி 

சதிக் கோட்பாடுகள் எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் வருகின்றன. இவற்றில் ரொம்பவும் பரவலானது உலகளாவிய ரகசிய அரசியல் குழுவைப் பற்றிய சதிக் கோட்பாடுதான். “ஒரு குழுவைச் சேர்ந்த மக்கள் ரகசியமாக உலகத்துப் போக்குகளைக் கட்டுப்படுத்தி உலகையே ஆள்கிறார்கள்” என்ற கோட்பாட்டை நம்புகிறார்களா என்று 25 நாடுகளைச் சேர்ந்த 26 ஆயிரம் பேரிடம் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. “நிச்சயமாக அல்லது ஒருவேளை உண்மையாக இருக்கலாம்” என்பது 37% அமெரிக்கர்களின் பதிலாக இருந்தது. 45% இத்தாலியர்களும், 55% ஸ்பானியர்களும் 78% நைஜீரியர்களும் அப்படியே பதிலளித்தார்கள். 

சதிக் கோட்பாடுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கின்றன. அவற்றுள் சில கோட்பாடுகள் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. நாஜிஸத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் வழக்கமாக நாஜிஸத்தை ஒரு சதிக் கோட்பாடாகக் கருதுவதில்லை. அது ஒரு நாடு முழுவதையும் ஆட்கொண்டு இரண்டாம் உலகப் போரைத் தொடக்கியதால் அது தீயதாக இருந்தாலும் நாஜிஸத்தை நாம் வழக்கமாக ஒரு ‘சித்தாந்தம்’ என்றே கருதுவோம். 

நாஜிஸமும் சதிக் கோட்பாடே 

ஆனால், அதன் மையமான சித்தாந்தத்தைப் பொறுத்தவரை, நாஜிஸமானது கீழ்க்கண்ட யூத வெறுப்புப் பொய்யை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய ரகசிய சதிக் கோட்பாடாகவே இருந்தது: “யூத நிதி நிறுவனங்களின் ரகசியக் குழுவொன்று ஒட்டுமொத்த உலகத்தையும் ரகசியமாக ஆதிக்கம் செலுத்துவதுடன் ஆரிய இனத்தை அழிப்பதற்கும் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறது. அவர்கள்தான் போல்ஷ்விக் புரட்சிக்குக் காரணம், மேற்கத்திய ஜனநாயக நாடுகளை இயக்கிக்கொண்டிருப்பவர்கள் அவர்களே, ஊடகங்களும் வங்கிகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஹிட்லரால் மட்டுமே அவர்களின் எல்லா தீய தந்திரங்களையும் கண்டுபிடிக்க முடிந்தது – அவரால் மட்டுமே அவற்றைத் தடுத்து நிறுத்தி மனித குலத்தைக் காப்பாற்ற முடியும்.” இதுதான் அந்தப் பொய். 

இதுபோன்ற உலகளாவிய ரகசிய அரசியல் குழுக்களினுடைய கோட்பாடுகளின் பொதுவான அமைப்பைப் புரிந்துகொள்வது என்பது அவற்றின் கவர்ச்சியையும் அவற்றில் அமைந்திருக்கும் பொய்மையையும் நமக்கு விளக்கும். 

கட்டமைப்பு 

இந்த உலகில் நடக்கும் ஏராளமான நிகழ்வுகளின் பின்னணியில் ஒரு தீய குழுவொன்று இருக்கிறது என்று உலகளாவிய ரகசிய அரசியல் குழுக்கள் தொடர்பான கோட்பாடுகள் வாதிடுகின்றன. இந்தக் குழுவின் அடையாளம் மாறலாம்: இந்த உலகம் ரகசியமாக ஃப்ரீமேஸன்களால், சூனியக்காரிகளால் அல்லது சாத்தானியர்களால் ஆளப்படுகிறது என்று சிலர் நம்புகிறார்கள்; பிறர், அது வேற்றுக்கிரகவாசிகளால், பல்லி மனிதர்களால் அல்லது பல்வேறு இறுக்கமான குழுக்களால் ஆளப்படுவதாக நம்புகிறார்கள். ஆனால், இதன் அடிப்படைக் கட்டமைப்பு ஒன்றுதான்: அந்தக் குழு கிட்டத்தட்ட அனைத்து நிகழ்வுகளையும் கட்டுப்படுத்துகிறது; அதே நேரத்தில், இப்படித் தான் கட்டுப்படுத்துவதை ரகசியமாகவும் வைத்திருக்கிறது. 

இதுபோன்ற உலகளாவிய சதிக் கோட்பாடுகள் எதிரெதிர் துருவமாகக் காட்சியளிப்பவற்றை ஒன்றிணைப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றன. கம்யூனிஸமும் முதலாளியமும் நேரெதிராக இருக்கும் எதிரிகள்போல் மேல் தோற்றத்துக்குத் தோன்றுகிறதல்லவா? தவறு, அப்படித்தான் யூத ரகசிய அரசியல் குழுக்கள் நம்மை நம்பவைக்கின்றன என்று நாஜி சதிக் கோட்பாடு கூறியது. புஷ் குடும்பமும் கிளிண்டன் குடும்பமும் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்று சூளுரைத்துக்கொண்டவை என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் நமக்கு முன்னால் நடிக்கிறார்கள் – மூடிய கதவுக்குப் பின்னால் அவர்கள் ஒரே விருந்து நிகழ்வுக்குத்தான் செல்வார்கள். இப்படியெல்லாம் இந்தச் சதிக் கோட்பாடுகள் எதிரெதிர் துருவங்களை இணைத்துக் கூறுகின்றன. 

மயக்கும் கண்ணி 

இதிலிருந்து இந்த உலகத்தைப் பற்றிய ஒரு கோட்பாடு வெளிப்படுகிறது. செய்திகளில் கூறப்படும் நிகழ்வுகளெல்லாம் நம்மை ஏமாற்றும் விதத்தில் தந்திரமாக வடிவமைக்கப்பட்ட வடிகட்டிகளே. நமது கவனத்தைத் திசைதிருப்பும் பிரபலத் தலைவர்களெல்லாம் உண்மையாக ஆள்பவர்களின் கைகளில் வெறும் பொம்மைகளே. 

உலகளாவிய சதிக் கோட்பாடுகளை நிறைய பேர் நம்பி, பின்பற்றுவதற்கு ஒரு காரணம் என்னவென்றால் எண்ணற்ற சிக்கலான நிகழ்வுகளுக்கு அவை நேரடியான, ஒற்றை விளக்கத்தைத் தருகின்றன. நமது வாழ்க்கை தொடர்ச்சியாகப் போர்கள், புரட்சிகள், பிரச்சினைகள், பெருந்தொற்றுக்களால் அலைக்கழிக்கப்படுகின்றன. ஆனால், சில வகையான சதிக் கோட்பாட்டை நான் நம்பினால் எனக்கு எல்லாம் புரிகிறது என்ற ஆசுவாச உணர்வு எனக்கு ஏற்படுகிறது. 

சிரியாவில் நடைபெறும் போர்? அங்கே என்ன நடைபெறுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு நான் மத்தியக் கிழக்கு வரலாற்றைப் படிக்கத் தேவையில்லை. அது பெரிய சதியின் ஒரு பகுதி. 5ஜி தொழில்நுட்பத்தின் முன்னேற்றம்? மின்காந்த அலைகள் பற்றி நான் எந்த ஆராய்ச்சியும் செய்யத் தேவையில்லை. அது ஒரு சதிக் கோட்பாடுதான். கரோனா பெருந்தொற்று? அதற்கும் உயிர்ச்சூழல்கள், வௌவால்கள், வைரஸ்களுக்கும் தொடர்பில்லை. இது தெளிவாக சதிக் கோட்பாடுதான். 

உலகளாவிய சதிக் கோட்பாடு கொண்டிருக்கும் எல்லாப் பூட்டுகளையும் திறக்கும் சாவியானது உலகின் எல்லாப் புதிர்களையும் திறந்துவிடுகிறது, பிரத்யேக வட்டம் ஒன்றுக்கான, அதாவது எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் மக்களின் வட்டம் ஒன்றுக்கான அனுமதியை எனக்குத் தருகிறது. அது என்னை வழக்கமான நபர்களை விட அதிக புத்திசாலியாக ஆக்குகிறது. பேராசிரியர்கள், இதழாளர்கள், அரசியலர்கள் போன்ற அறிவுஜீவி மேல்தட்டினர், ஆளும் வர்க்கத்தினரைவிடவும்கூட என்னை மேலுயர்த்துகிறது. அவர்கள் காணத் தவறியதை அல்லது அவர்கள் மறைக்க முயல்வதை நான் காண்கிறேன். 

பிழை 

உலகளாவிய சதிக் கோட்பாடுகள் எல்லாம் ஒரே அடிப்படைப் பிழையால் பீடிக்கப்பட்டிருக்கின்றன: வரலாற்றை அவை மிகவும் எளிமையானதாக நினைக்கின்றன. உலகளாவிய சதிக் கோட்பாடுகளின் மையக் கருதுகோள் என்னவென்றால் இந்த உலகத்தைத் தன் வசத்தில் கட்டுப்படுத்துவது ஓரளவுக்கு எளிது என்பதுதான். போர்கள், தொழில்நுட்பப் புரட்சிகள் தொடங்கி பெருந்தொற்றுகள் வரை சிறியதான சில குழுக்களால் புரிந்துகொள்ள முடியும், முன்கூட்டியே கணிக்க முடியும், எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்று சதிக் கோட்பாடுகளை நம்புபவர்கள் நினைக்கிறார்கள். 

குறிப்பாகக் குறிப்பிட வேண்டியது எதுவென்றால் உலகளாவிய சதுரங்கத்தில் பத்து நகர்வுகளை முன்கூட்டியே காணும் இந்தக் குழுவின் திறன்தான். அவர்கள் வைரஸை எங்காவது வெளியிடும்போது அது இந்த உலகம் முழுதும் எப்படிப் பரவும் என்பதைக் கணிப்பது மட்டுமல்லாமல் உலகப் பொருளாதாரத்தை ஒரு ஆண்டு கழித்து எப்படிப் பாதிக்கும் என்பதையும் அவர்கள் கணிக்கக் கூடியவர்கள். ஒரு போரை அவர்கள் தொடங்கினார்கள் என்றால், அது எப்படி முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள். 

இராக் எடுத்துக்காட்டு 

ஆனால், இந்த உலகம் அதைவிடவும் மிகவும் சிக்கலானது. எடுத்துக்காட்டாக, இராக்கில் அமெரிக்காவின் ஊடுருவலைப் பற்றி யோசித்துப் பாருங்கள். 2003-ல் இந்த உலகின் ஒரே ஒரு வல்லரசு, நடுத்தர அளவுள்ள மத்தியக் கிழக்கு நாட்டினுள் ஊடுருவியது. அந்த நாட்டிலுள்ள பேரழிவு ஆயுதங்களை அழிப்பதற்காகவும், சதாம் ஹுசைனின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவும் அந்த ஊடுருவலை நிகழ்த்தியதாக அமெரிக்கா கூறியது. அந்தப் பிரதேசத்தில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், இராக்கின் முக்கியமான எண்ணெய்க் கிணறுகளைத் தன்வசப்படுத்தவும் அமெரிக்கா இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்று சிலர் சந்தேகப்பட்டனர். தனது லட்சியத்துக்கான தேடலில் உலகின் மிகச் சிறந்த ராணுவத்தை அமெரிக்கா ஈடுபடுத்தியதோடு மட்டுமல்லாமல் டிரில்லியன் கணக்கான டாலர்களையும் அதற்காகச் செலவழித்தது.  

சில ஆண்டுகளை வேகமாக முன்னோக்கி ஓட்டிப் பாருங்கள், இந்த பிரம்மாண்டமான முயற்சியின் விளைவுகள் என்ன? பரிபூரணப் பேரழிவுதான். பேரழிவு ஆயுதங்கள் ஏதும் இராக்கில் இல்லை, அந்த நாடு அதலபாதாளத்துள் வீழ்ந்தது. இந்தப் போரில் பெரிய வெற்றியாளர் யாரென்றால் ஈரான்தான். அதுதான் இந்தப் போரின் விளைவாக அந்தப் பிராந்தியத்தில் பெரும் ஆதிக்கச் சக்தியாக உருவானது.  

ஆக, ஜார்ஜ் டபிள்யு. புஷ்ஷும் டொனால்டு ரம்ஸ்ஃபெல்டும் உண்மையில் ஈரானியக் கையாள்கள் என்றும் தீயதும், சாமர்த்தியமானதுமான ஈரானிய சதியை அவர்கள் நிறைவேற்றினார்கள் என்றும் நாம் முடிவுக்கு வரலாமா? வரவே முடியாது. மாறாக, மனித விவகாரங்களைக் கணிப்பதும் கட்டுப்படுத்துவதும் மிக மிகக் கடினம் என்ற முடிவுக்கே நம்மால் வர முடியும்.  

இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வதற்காக மத்தியக் கிழக்கு நாடொன்றை ஊடுருவத் தேவையில்லை. ஒரு பள்ளிக்கூட வாரியத்திலோ உள்ளூர் பஞ்சாயத்திலோ நீங்கள் பணியாற்றியிருந்தாலும் அல்லது உங்கள் அம்மாவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியூட்டும் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ய முயன்றாலும் உங்களுக்குத் தெரியும் மனிதர்களைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினம் என்று. ஒரு திட்டத்தைத் தீட்டுவீர்கள், அது நேரெதிர் விளைவையே ஏற்படுத்தும். நம்பிக்கைக்குரிய நண்பர் ஒருவரோடு நீங்கள் ஒரு சதித் திட்டம் தீட்டுவீர்கள், ஒரு முக்கியமான கட்டத்தில் அவர் உங்கள் முதுகில் குத்திவிடுவார்.  

1,000 அல்லது 100 மனிதர்களையே நம்மால் கணிக்கவும் கட்டுப்படுத்தவும் மிகவும் சிரமமாக இருக்கும் சூழலில் கிட்டத்தட்ட 800 கோடி மக்களை ஆட்டுவிப்பது எளிது என்று சதிக் கோட்பாட்டாளர்கள் நம்மை நம்பச் சொல்கிறார்கள். 

நிதர்சனம் 

நிச்சயமாக, உலகில் உண்மையான சதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. தனிநபர்கள், பெருநிறுவனங்கள், அமைப்புகள், திருச்சபைகள், கட்சிகளின் பிரிவுகள், அரசுகள் போன்றவையெல்லாம் தொடர்ந்து வெவ்வேறு சதிகளைத் தீட்டி அவற்றை நிறைவேற்றுகின்றன. அதனால், அவை ஒட்டுமொத்த உலகத்தையும் கணித்து அதைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறது என்று சொல்லிவிடுவது எளிதல்ல. 

1930-களில் உலகெங்கும் கம்யூனிஸப் புரட்சிகளைத் தூண்டிவிட சோவியத் ஒன்றியம் உண்மையில் சதித் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது; முதலாளிய வங்கிகளெல்லாம் நேர்மையற்ற எல்லாவித உத்திகளையும் பின்பற்றின; ரூஸ்வெல்ட்டின் நிர்வாகம் ‘நியூ டீல்’ மூலம் அமெரிக்காவை மறு கட்டமைப்பு செய்யத் திட்டமிட்டது; யூதர்களின் ஸையனிஸ்ட் இயக்கம் பாலஸ்தீனில் தங்கள் தாய்நாட்டை நிறுவும் திட்டத்தை இடைவிடாமல் பேணியது. ஆனால், இவையும் எண்ணற்ற பிற திட்டங்களும் அடிக்கடி ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. ஒட்டுமொத்த ஆட்டத்தையும் இயக்குபவர்களாக ஒற்றைக் குழு ஏதும் இருந்திருக்கவில்லை. 

இன்றும்கூட நீங்கள் நிறைய சதிகளுக்கு இலக்காகலாம். உங்கள் சக ஊழியர்கள் உங்கள் முதலாளியை உங்களுக்கு எதிராகச் செயல்படும்படி சூழ்ச்சி செய்யலாம். தீங்கு விளைவிக்கும் ஓபியாய்டுகளை உங்களுக்குக் கொடுக்கும்படி உங்கள் மருத்துவருக்கு ஒரு பெரிய மருந்து நிறுவனம் லஞ்சம் கொடுக்கலாம். மற்றுமொரு பெருநிறுவனம் அரசியலர்களுக்கு அழுத்தம் கொடுத்து, சுற்றுச்சூழல் விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு நீங்கள் சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்த முயன்றுகொண்டிருக்கலாம். ஒரு அரசியல் கட்சி தங்களுக்கு செல்வாக்கு மிக்க மாவட்டங்களின் எல்லையைத் தேர்தல் வெற்றிக்கு ஏற்றவாறு மறுவரையறுக்கலாம். வெளிநாட்டு அரசு ஒன்று உங்கள் நாட்டில் தீவிரவாதத்தைத் தூண்டிவிடலாம். இவையெல்லாம் உண்மையான சதிகளாக இருக்கலாம். ஆனால், அவையெல்லாம் உலகளாவிய ஒற்றைச் சதியின் பங்காக இருப்பவையல்ல. 

அதிகாரமும் பிரபல்யமும் 

சில சமயம், ஒரு பெருநிறுவனம், ஒரு அரசியல் கட்சி, அல்லது ஒரு சர்வாதிகாரி தம் கைகளில் இந்த உலகின் ஒட்டுமொத்த அதிகாரத்தில் கணிசமான பகுதியைக் கொண்டிருக்க முயன்று வெற்றி காண்பதும் உண்டு. அப்படி ஒரு விஷயம் நிகழும்போது, அதை ரகசியமாக வைத்திருப்பது கிட்டத்தட்ட இயலாத காரியம். பெரும் அதிகாரம் வரும்போது பெரும் பிரபல்யம் வரும்.  

உண்மையில், பெரும் அதிகாரத்தைக் கைக்கொள்வதற்கான அத்தியாவசியத் தேவையாகப் பெரும் புகழ் என்பது பல விஷயங்களிலும் இருந்துள்ளது. பொது மக்களின் பார்வையை லெனின் தவிர்த்திருந்தால் ரஷ்யாவில் அவர் அதிகாரத்தை வென்றிருக்க முடியாது. ஸ்டாலின் ஆரம்பத்தில் ரகசியமாகவே திட்டம் தீட்ட விருப்பம் கொண்டிருந்தார். ஆனால், சோவியத் ஒன்றியத்தில் எல்லா அதிகாரங்களையும் தன் கையில் அவர் குவித்துவிட்டிருந்தபோது பால்டிக் பிரதேசத்திலிருந்து பசிபிக் வரை ஒவ்வொரு அலுவலகம், பள்ளி, வீடு ஆகியவற்றில் ஸ்டாலினின் படம் தொங்கிக்கொண்டிருந்தது. ஸ்டாலினின் அதிகாரம் என்பது அவரது ஆளுமை மீதான் வழிபாடுடன் தொடர்புகொண்டது. லெனினும் ஸ்டாலினும் திரைக்குப் பின்னால் உள்ள ஆட்சியாளர்களின் முகமூடி மட்டுமே என்ற கருத்து எல்லா வரலாற்று ஆதாரங்களுக்கும் முரணானது. 

எந்த ஒரு தனி ரகசியக் குழுவும் இந்த ஒட்டுமொத்த உலகையும் ரகசியமாகக் கட்டுப்படுத்தவில்லை என்பது துல்லியமானது மட்டுமல்ல, அது நமக்கு சக்தியையும் அளிக்கிறது. அப்படிப் புரிந்துகொண்டால், நம் உலகில் ஒன்றுக்கொன்று போட்டியிடும் குழுக்களை நம்மால் அடையாளம் காண முடியும் என்றும், சில குழுக்களுக்கு எதிராக சில குழுக்களுடன் உங்களை இனம் கண்டுகொள்ள முடியும் என்றும் அர்த்தமாகிறது. உண்மையான அரசியல் என்பதெல்லாம் இதைப் பற்றியதுதான். 

- யுவால் நோவா ஹராரி, வரலாற்றாசிரியர், ‘சேப்பியன்ஸ்’ நூலாசிரியர். 

© ‘நியூயார்க் டைம்ஸ்’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை, நன்றி: ‘இந்து தமிழ்’ நாளிதழ்

Friday, November 27, 2020

ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அமைப்புடன் போரிடப் போகிறோம்! - வி.பி. சிங்கின் உரை



மண்டல் குழு அறிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கசப்புணர்வை ஏற்படுத்தின. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அமைப்புடன் போரிடப் போகிறோம் என்பதும் அப்படிச் செய்வதன் மூலம் எங்களை நாங்களே நெருக்கடிக்குள் தள்ளப்போகிறோம் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஒருவேளை அதுதான் எனது விதியாக இருக்கலாம்.  

நான்  நிதியமைச்சராக இருந்தபோது பொருளாதார அமைப்புடன் என் பார்வைகள் முரண்பட்டன; ஆக, அந்தப் பதவியிலிருந்து நான் விலக நேரிட்டது. பாதுகாப்பு அமைச்சராக நான் இருந்தபோது எனது பார்வைகள் அரசியல் கட்டமைப்புடன் முரண்பட்டன. ஆகவே, அந்தப் பதவியிலிருந்தும் விலக நேரிட்டது. தற்போது நான் பிரதமராக இருக்கிறேன், சமூக அமைப்பைப் பற்றிய எனது கொள்கையும் தற்போதைய கொள்கையும் முரண்படுகின்றன; ஆகவே, நான் வெகு விரைவில் இந்தப் பதவியை விட்டும் போக வேண்டியிருக்கும். ஆயினும், நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. எங்களுடைய ஐந்தாண்டு கால ஆட்சியை நிறைவுசெய்வதற்காகவே இந்த அமைப்புகளுக்கு நாங்கள் தலைவணங்க வேண்டிய அவசியம் இல்லை. அதிகாரத்திலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம், அதே நேரத்தில் அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து போரிடுவோம். நூற்றுக் கணக்கான தேர்தல்களில் போட்டியிட வேண்டியிருந்தாலும் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை; ஆனால் நீதியின் பாதையிலிருந்து நாங்கள் விலகிச்செல்ல மாட்டோம்.  

இந்த ஆண்டு பாபா சாஹேப் பீம் ராவ் அம்பேத்கரின் நூற்றாண்டு, சமூகநீதியின் ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக நாங்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும் சில வகுப்பினரின் வெறுப்புக்கு உள்ளாகத்தான் நேரிடும். ஏழைகள் எப்படி அதிகாரத்தின் பங்குதாரர்களாக ஆவது என்பதுதான் நம் முன் தற்போது உள்ள கேள்வி. நீதிக்கான போராட்டத்தில் ஏழை எளியோர் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காகப் போராடவில்லை, மாறாக சமூக வாழ்க்கையில் கண்ணியமும் மதிப்பும் கிடைப்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இந்த அதிகாரக் கட்டமைப்பில்- அது இந்த அவையிலாகட்டும் அல்லது அதிகாரத் தரப்பிலாகட்டும்- அவர்கள் பங்கெடுக்காவிட்டால் அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கவே முடியாது என்பது என்னுடைய கருத்தாக இருந்துவந்திருக்கிறது. ஆகவே, நாட்டின் நிர்வாகத்தில் தங்கள் பங்கை அவர்கள் பெறுவதற்கு வழிவகை செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதிகாரத்தில் அவர்கள் பங்கு பெற்றாலொழிய வெறுமனே விவாதங்கள் நடத்துவது வீணாகப் போவதுடன் அவர்கள் புறக்கணிப்புக்குள்ளாவது தொடரவே செய்யும்.     

ஐயா (அவைத்தலைவர்), மிகுந்த போராட்டத்துக்குப் பிறகே இந்தக் கட்டத்தை எட்டியிருக்கிறோம், அரசு அமைப்பது என்பது தற்காலிக நிறுத்தம் மட்டுமே. ஆட்சியில் இருந்தபோதும் எங்களது போராட்டத்தைத் தொடர்ந்தோம், அதிகாரத்தில் இல்லாதபோதும் தொடரவே செய்வோம். விடாமல் போராடுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். முக்கியமான நிகழ்வுகளின் ஒருசில கணங்கள் கூட வரலாற்றில் கணிசமான முக்கியத்துவத்தைப் பெறும்.  

கடவுளின் படைப்பான, நமது சக மனிதர்கள் மீது நாம் நமது கவனத்தைத் திருப்புவோமாக. எண்ணற்ற மனிதர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு துயர்மிகுந்த வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். அந்த மக்களுக்கு உதவிசெய்வது நம் கடமையாகிறது, நாங்கள் செய்ததும் சரியாக அதைத்தான். அரசுக்கு அதிகாரம் இருக்கிறது; அந்த அதிகாரம் ஏழைகளுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உதவவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுதான் சில பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மண்டல் குழுவானது சாதியம் என்ற பிரச்சினையை எழுப்புகிறது என்று எதிர்க் கட்சித் தலைவர் கூறினார். இந்த அம்சத்தை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சமூக அமைப்பும் அரசியல் கட்டமைப்பும் பல வழிகளில் ஒன்றையொன்றைச் சார்ந்தவையாகும். சமூக, பொருளாதார அமைப்புகளில் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் கீழ்மட்ட அளவில் பெருமளவிலான கூட்டுறவு காணப்படுகிறது. இந்தக் கீழ்மட்டமானது பெரிதும் தலித் மக்களாலும் சிறு விவசாயிகளாலும் ஆனது. அவர்களில் 99% ஏழைகள். மேலும் அவர்களில் 90% பேர் சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகள். உயர்சாதி மக்கள் பணக்காரர்கள் என்பதும் உண்மை. சமூக அமைப்புக்கும் பொருளாதார அமைப்புக்கும் வேறுபாடுகள் இருக்கும் என்றால் சமூக அமைப்புக்கும் அரசியல் கட்டமைப்புக்கும் இடையே ஒற்றுமைகளும் இருக்கவே செய்கின்றன. அரசியல் கட்டமைப்பை மாற்றாமல் சாதியத்தை ஒழிக்கவோ சமூக அமைப்பை மாற்றவோ நம்மால் முடியாது. சாதியத்தை வேரோடு அழிக்க அரசியல் கட்டமைப்பில் நாம் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். மண்டல் குழு தொடர்பாக நாங்கள் எடுத்த முடிவு தீவிரமான பரிசீலனைக்குப் பிறகு மனவுறுதியுடன் எடுக்கப்பட்டது. நாம் எல்லோரும் கிராமங்களிலிருந்து வந்திருக்கிறோம், ஆகவே கிராமத்தினரின் நலன்களுக்கு உதவுவதற்காக எங்களின் அதீத சக்தியைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் தயார் 

ஐயா, இந்தக் கணத்தில் எங்கள் தரப்பைப் பொறுத்தவரை அதீதத் திமிரோ கடுமையான  வேதனையோ எதுவும் எங்களுக்கு இல்லை. மாறாக, நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் கூடவே நாங்கள் அவமானகரமான முறையில் செல்லவில்லை என்று பெருமிதமும் அடைகிறோம். சிலநேரம் மரணம் என்பது வாழ்க்கையை விட உயர்வானது. ஐயா, ஒரு நபர் தனக்கு மிக மிக முக்கியமான ஒரு லட்சியத்தை அடைவதற்காகத் தன் வாழ்க்கையையே இழக்கத் துணிவார் என்றால், அவர் அதற்காக வருத்தப்பட மாட்டார். இது ஒரு நல்ல நோக்கத்துக்கான போராட்டம், நாங்கள் அதிகாரத்தில் இருந்தபோது இந்த நோக்கத்துக்காக தொடர்ந்து போராடினோம், அதிகாரத்தை விட்டு விலகினாலும் இந்தப் போராட்டத்தைத் தொடரவே செய்வோம்.      

-தமிழில்: ஆசை

Saturday, November 21, 2020

வல்லபி: மலை தேவதையின் காதல் பாடல்கள்


தேன்மொழி தாஸின் கவிதைகளைப் படிக்கும்போது சமவெளியிலிருந்து வந்து தன்னை நேசித்துவிட்டுப் பிரிந்துசென்ற ஒருத்தனுக்காக ஒரு மலை தேவதை நெடிய காத்திருப்பில் இருப்பதுபோன்ற பிம்பம் உருவாகும். குறிஞ்சி நிலத்தில் பிறந்த தேன்மொழி தாஸின் பெரும்பாலான கவிதைகளுக்கான உரிப்பொருள் முல்லைத் திணைக்கான காத்திருத்தலும், பாலைத் திணைக்கான பிரிவும்தான். திணை மயக்கம் சங்கக் கவிதைகளிலேயே காணப்படும் ஒரு விஷயம்தான் என்பதால் நவீன கவிதை அந்தக் கட்டுப்பாட்டையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லைதான். இந்தத் திணை மயக்கம்தான் தேன்மொழி தாஸின் கவிதைகளுக்கு ஒருங்கே அழகும் துயரமும் ஊட்டியிருக்கிறது. 

நவீன கவிதைகளுக்கு நேர்ந்த பெரும் துயரங்களுள் ஒன்று அது இடத்தையும் சூழலையும் பெரிதும் இழந்தது. பறவை வெறுமனே பறவையாகத்தான் வரும், மரம் பெயரின்றி மரமாக வரும், சிலர் விதிவிலக்குகளாக இருந்தாலும் பெரும்பாலான போக்கு அப்படி. தேன்மொழி தாஸ் கவிதைகளில் அக உலகத்தோடு புற உலகும் பின்னிப் பிணைந்தே அவையவற்றின் அடையாளங்களுடன் வருகின்றன. ஆதிமனது இயற்கையை வியப்பதன் அல்லது வழிபடுவதன் தொடர்ச்சி என்றும் தேன்மொழி தாஸின் கவிதைகளைக் கூறலாம். குளவிப் பூம்புதர், வலம்புரிக் காய், வெந்தயப் பூ, தும்பிகை மரம், அடைக்கலாங் குருவி, காட்டுப்பூனை, மலைவேம்பு, நீலச் சங்குப்பூ, வச்சிரதந்திப் புழுக்கள், புல்குருவி, மலைராணிப் பூக்கள், கிளிப்பூக்கள், அழிஞ்சில் கனி, பேய்க்காளான், மந்திரக் காளான், தூக்கணாங்குருவி, கடமான் என்று காடும் மலையும் சார்ந்த உயிர்கள் பலவும் துருத்தாமல் தேன்மொழி தாஸின் கவிதையில் இடம்பெற்றிருக்கின்றன. 

‘வச்சிரதந்திப் புழுக்கள் மரம்குடையும் காட்சி/ மனதை மத்தியானம் ஆக்கும்’ என்ற வரிகளெல்லாம் நவீன படிம மொழியில் சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாகவே தென்படுகின்றன. வார்த்தைகளால் விவரிக்க முடியாத சௌந்தர்யங்களை அடுத்தடுத்து வெவ்வேறு உணர்வு நிலைகளைக் கொண்டு கோத்துத் தருபவை தேன்மொழி தாஸின் கவிதைகள். ஒரு கருவை எடுத்துக்கொண்டு அதை விரித்துச்செல்பவையல்ல அவை; கரு அல்லாமல் மனநிலையே கவிதையாகிறது. அந்த மனநிலை பிரிவின் வலியைச் சுமந்திருக்கலாம், காத்திருப்பைச் சுமந்திருக்கலாம், ஏமாற்றத்தைச் சுமந்திருக்கலாம். ‘நித்திரையடையாமல்/ இமையினுள் உருளும் காதல் கண்களுக்கு/ கடுகுத்தோலின் மினுமினுப்பு’, ‘கண்கள்/ வருத்தங்களைக் குவித்து விளையாடும்/ கண்ணாடி/ அவைகளுக்கு மூளையின் முடிச்சிலிருந்து ஒருவரியேனும்/ காதல் கடிதம்/ எழுதிவிட வேண்டும்’, ‘காத்திருப்பது/ காதலின் ஈரப்பதத்தை/ காற்றின் ஒத்திசையில் இசைப்பது’, ‘கதவருகே நின்றுகொண்டு நினைவுகளோடு பேசுவது/ காட்சிப் பிழையாகவேனும் நீ/ வந்துவிடுவாய் என்பது தான்’ போன்ற வரிகளெல்லாம் அப்படி அந்தந்தச் சமயத்தின் மனநிலைகள் கவிதைகளாக ஆனதற்குச் சில உதாரணங்கள். 

இந்தக் கவிதைகளைப் படிக்கும்போது கம்பீரமான ஒரு பெண், அதுவும் காதல் வயப்பட்டதாலேயே கம்பீரமான ஒரு பெண், இன்னும் சொல்லப்போனால் பிரிவுவயப்பட்ட பெண் பற்றிய சித்திரம் நம் மனதில் தோன்றிவிடுகிறது. ‘பெண் ஸ்தனங்களின் கம்பீரமே/ ஆண் விழிகளின் மேல் தோல்களில்/ பல அடுக்குகளாக இருப்பதையும் கண்டேன்’ என்று ஒரு இடத்தில் எழுதுகிறார். இன்னொரு இடத்தில், ‘எனது அகத்தின் புன்னகை அசையா தீபச்சுடர்’ என்கிறார். பெண்ணின் காதலுக்கு முன்பு ஆண்கள் சுருங்கித்தான் போகிறார்கள். 

கவிதையே பெரிதும் தர்க்கத்தை மீறுவதுதான் என்றாலும் சமயத்தில் சேர்த்துவைத்துப் பொருள்கொள்ள முடியாத அளவுக்கு, ஆனால் அழகுடன் தேன்மொழி தாஸின் கவிதைகளில் தர்க்கம் மீறப்பட்டிருக்கிறது. ‘ஆணின் கணிதம்/ பெருங்காய வாசனையோடு விரியும் வளைகோடு’, ‘அகம் அழிவின்மையின் நீலத் தீ’, ‘காற்று பொற்கம்பியாய்/ பார்வையை எங்கோ இழுத்துச்செல்கிறது’, ‘பூமி கணித இதயம் கொண்ட நூல்கண்டு/ அதன்மேல் அவர்களோ நெல்பூவாய் நடப்பார்கள்’ போன்ற வரிகளை உதாரணமாகக் காட்டலாம். 

புனைகதையில் ‘நனவோடை’ என்பது ஒரு உத்தி. மனதில் எண்ணங்கள் ஒரு ஒழுங்கற்று வெளிப்படுவது இயல்பு. அந்த இயல்பில் அந்தப் போக்கில் எண்ணங்களைப் புனைகதையில் எழுதுவார்கள். கவிதையே சில சமயங்களில் நனவோடையின் ஒரு துண்டாக வெளிப்பட்டாலும் இது தேன்மொழி தாஸின் கவிதைகளில் ஆழமாக வெளிப்படுகிறது. வழக்கமாக இது நவீன இலக்கிய உத்தி என்றாலும் தேன்மொழி தாஸின் கவிதைகளில் இது செவ்வியல் தொனியில் வெளிப்பட்டிருக்கிறது. அகமொழி ஒரு இடத்தில் தொடங்கி இடையே புறமும் ஆங்காங்கே எட்டிப்பார்த்து கவிதை வேறொரு இடத்தில் முடியும். அப்படி வரும்போது இரண்டிரண்டு தொடர்புடைய வரிகளின் தொகுப்புபோல் கவிதை காட்சியளிக்கிறது. ஆழ்ந்த கவித்துவத்துடன் இப்படி தேன்மொழி தாஸ் எழுதும்போது ஒரே சமயத்தில் புரியாமையும் தித்திப்பும் ஈர்ப்பும் சௌந்தர்யமும் ஏற்படுகிறது. 

இந்த மலையுச்சியில் இருந்துகொண்டு எதிரே உள்ள மலைச்சரிவின் காட்டைப் பார்க்கும் உணர்வை அவரது பல கவிதைகள் தருகின்றன. ‘பெருவனம் காலங்களால் புலம்புகிறது’ எனும்போது காடே காலத்தின் ரூபம் கொள்கிறது. அபி தனது கவிதைகளில் ‘மாலை’ எனும் அரூபத்துக்குச் செய்திருப்பதை தேன்மொழி தாஸ் ‘மலை’, ‘காடு’ எனும் ரூபங்களுக்குச் செய்திருக்கிறார். ‘புலிக் குட்டியின் மேல் சவாரி செய்யும்/ புல் குருவி காற்றைச் சுவைக்கும்/ சம்பூரணராகம் காடுகளின் மத்தியில் தொங்குகிறது’ என்பது போன்ற வரிகள் இதற்கு உதாரணம். 

மொழி அலங்காரத்தை நவீன கவிதை புறக்கணித்தே வந்திருக்கிறது. அது நல்லதே. அதே நேரத்தில் மொழியழகும் தீண்டப்படாத ஒரு வஸ்துவாக ஆகிவிட்டதோ என்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால், தேன்மொழி தாஸின் கவிதைகள் சொல்லின்பம் கூடியவையாக இருக்கின்றன. ‘நுழுந்துதல்’, நீல வாசம்’, ‘தில்லோலம்’, ‘மணிமான் கதிர்’, ‘வாழ்வின் ஆயல் மொழி’, ‘ஒழுங்கின்மையின் பச்சைச் சுடர்’, ‘குளவிப் பூம்புதர்’, ‘புலரி நிலப்பூண்’ போன்ற சொற்களும் பிரயோகங்களும் அவருடைய கவிதைகளுக்குப் பேரழகைச் சேர்க்கின்றன. அவருடைய உணர்வையும் உலகத்தையும் சொல்வதற்கென்று விரிந்த சொற்களஞ்சியம் அவரிடம் இருக்கிறது. அகத்தின் மொழி அவருக்குப் பலம் என்றால் புறத்தைப் பற்றி எழுதும்போது சில இடங்களில் கவித்துவப் பொன்மொழிகளாகவே வரிகள் எஞ்சிவிடுகின்றன. ‘கிணற்றில் கேதுதல் சூரன்கலையாகுமோ’ போன்ற வரிகளை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். 

‘வல்லபி’ தேன்மொழி தாஸின் ஆறாவது கவிதைத் தொகுப்பு. அபூர்வமான, அழகிய, செறிவான கவிதைகளுக்குச் சொந்தக்காரரான தேன்மொழி தாஸின் கவிதைகள் பரவலாகச் சென்றடையும்போது அவற்றின் சௌந்தர்யங்கள் வாசகர்களைத் திளைக்க வைப்பது நிச்சயம். 



வல்லபி 

தேன்மொழி தாஸ் 

எழுத்துப் பிரசுரம் வெளியீடு 

அண்ணா நகர், சென்னை – 40. 

தொடர்புக்கு: 98400 65000 

விலை: ரூ.200 



('இந்து தமிழ்’ நாளிதழில் 21-11-20 அன்று வெளியான கட்டுரை)