Thursday, February 13, 2025

காதலர் தினத்தை முன்னிட்டுப் பாதி விலையில் எனது மூன்று கவிதை நூல்கள்!

 


அன்புள்ள நண்பர்களுக்குக்கும், வாசகர்களுக்கும் வணக்கம்!
காதலர் தினத்தை முன்னிட்டு எனது ‘அண்டங்காளி’, ’குவாண்டம் செல்ஃபி’, ‘கொண்டலாத்தி’ ஆகிய மூன்று கவிதை நூல்களும் பாதி விலையில் கிடைக்கும். இந்தச் சிறப்பு விலை இந்த மாத இறுதிவரை உண்டு. மேலும் விவரங்களுக்கு மேலே உள்ள படத்தைப் பார்க்கவும். நண்பர்கள் இந்தப் பதிவைப் பகிர்ந்து உதவ வேண்டுகிறேன்.

Thursday, February 6, 2025

பெண்குஞ்சு


ஒன்றாய்க் குளித்துவிட்டு அம்மணங்குண்டியாக ஓடி வருகிறார்கள் அண்ணனும் தங்கையும் ‘அப்பா’ என்று கூவியபடி

ஓடிவந்த வேகத்தில்
ஆடும்
அண்ணன்காரனின் குஞ்சாமணியை உருவி
என் கைக்கு
முத்தமிட்டுக்கொள்கிறேன்
‘அப்பா என் குஞ்சுக்கும் முத்தா தா’
என்று சிணுங்குகிறாள் தங்கை
அவ்விடத்தை எக்கிக் காட்டி
அங்கே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
திசைகாட்டும் சிறுகோடு
என் திசையழிக்கத்
திடுக்கிட்டுச் சமைந்தேன்
’குடுப்பா’
என்று அதட்டிவிட்டு
என் கையைப் பிடித்துத்
தன் குஞ்சின் மேல் வைக்கிறாள்
நல்ல தொடுகை
கெட்ட தொடுகை அண்டாதொரு
கருவறைக்குள்
முழுதாய்க் குளித்துவிட்டு
வந்தவள்
ஒட்டுமொத்த பிரபஞ்சமும்
அவ்விடத்தில்
கொண்டுவந்து சேர்க்கப்போகும்
மர்மமும் புனிதமும்
அவள் அதட்டலில்
நடுங்கி உதிர்கின்றன
அனிச்சையாய் உருவிக்
குவிந்த என் கைக்கு
முத்தம் கொடுக்கிறது
என் வாய்
பொம்மையாய்
மாறிச் சிரிக்கிறது
என் பெண்குஞ்சு
-ஆசை

Tuesday, February 4, 2025

சூரியன் எதைச் சுற்றுகிறது?


ஆசை

சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பெலா டார் எடுத்த அற்புதமான திரைப்படம் ‘வெர்க்மைஸ்டர் ஹார்மனீஸ்’. இதன் தொடக்கக் காட்சி ஒரு மது விடுதியில் இடம்பெற்றிருக்கிறது.

 படத்தின் இளம் நாயகனான யானோஸ் வலுஸ்கா தனது மூன்று நண்பர்களை வைத்து சூரியன், பூமி, நிலவு நடனத்தை நிகழ்த்துவார். சூரியன் போன்று ஒருவர் நடுவில் நிற்க இன்னொருவர் பூமியின் வேடத்தில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுவார்.

Monday, February 3, 2025

முதலறியான்


மறுபடியும் தீயை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் சக்கரம் செய்வதை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் வெடிமருந்தை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் அமெரிக்காவை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் ஹேம்லட்டை
முதல் ஆளாக எழுதத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் பியானோவை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் ஈர்ப்புவிசையை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் டகேரியோடைப் கேமராவை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் மின்சாரத்தை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் முதல் ஆளாக
பீகிள்ஸ் கடற்பயணத்தை மேற்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் ஒளியின் துகள் வடிவை
முதல் ஆளாக நிரூபிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் நிலவுக்கு
முதல் ஆளாகப் போகத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் கடவுள்துகளை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் கடவுளை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கவும்
முதல் ஆளாகக் கைகழுவவும்
வேண்டியிருக்கிறது
கவிஞனாய்
இருப்பதற்கு
இவ்வளவும்
செய்ய வேண்டியிருக்கிறது
வாழ்வதற்கோ
இவ்வளவு சிரமப்பட
வேண்டியதில்லை
நாம் முதல் இல்லை என்ற
எளிய அறிவு
ஒன்றே போதும்
-ஆசை

Saturday, February 1, 2025

கன்னடத்தில் என் கவிதை



எனது ‘ஹே... ராவண்!’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘பாவென்று அழையுங்களேன் பாபுஜி’ கவிதையை நண்பரும் எழுத்தாளருமான தூயனின் தந்தையும் தூயனின் மனைவி பவித்ராவும் இணைந்து கன்னடத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு அன்பும் நன்றியும். கீழே தமிழ் மூலமும் கன்னட மொழிபெயர்ப்பும் கொடுத்திருக்கிறேன்.

**
பாவென்று அழையுங்களேன் பாபுஜி
உடன் இருந்தபோது
இப்படி
என்றாவது
பாவைப்
பார்த்துக்கொண்டே
இருந்ததுண்டா பாபுஜி
உங்கள் பார்வை கண்டு
பா அஞ்சிய
காலம் உண்டு
பிறகு
பாவின் பார்வைக்கு
அஞ்ச ஆரம்பித்தீர்கள்
நீங்கள்
இன்று இரண்டுமில்லை
ஒருவழிப் பார்வை
மட்டுமே
பாவின் விழிகள்
இறுதியாய் வெறித்த
ஆகா கான் மாளிகையின்
உட்கூரை உச்சியாய்
அப்போது இருக்க
ஆசைப்பட்டீர்களா பாபுஜி
ஒரு மகாத்மா ஆவதற்கு
நிரம்பக் கல்நெஞ்சம்
வேண்டுமென்று
உடனிருந்து கண்டவர்
இன்று அதில் உங்களைத்
தோல்வியடையச் செய்துவிட்டுப்
போய்விட்டாரா பாபுஜி
எப்போதும்
ஏந்திப் பொறுத்துக்கொண்ட
பாவின் அகிம்சை முன்
உங்கள் உன்னத அகிம்சை
மேலும் தோற்றுப்போய்
அதனால்
துவண்டுபோய்
அமர்ந்திருக்கிறீர்களா பாபுஜி
பா என்று அழையுங்களேன்
பாபுஜி
அவர் விருட்டென்றெழுந்து
உங்களுக்கு
ஆட்டுப்பாலும் பேரீச்சையும்
கொண்டுவரப் போய்விடுவார்
பா என்று அழையுங்களேன்
பாபுஜி
அவர் சட்டென்றெழுந்து
உங்களுடன்
கேரம் விளையாட
உட்கார்ந்துவிடுவார்
ஆனால்
நீங்கள் மாட்டீர்கள்
கல்நெஞ்சக்காரர்
கேட்டால்
பாவுக்கு
அவள் துயர்களிலிருந்தும்
என்னிடமிருந்தும்
விடுதலை கிடைத்திருக்கிறது
என்று சாக்கு சொல்வீர்கள்
கூட
ஒரு துயரச் சிரிப்புடன்
-ஆசை

கன்னடம்:
ಭಾ ಎಂದು ಕರೆಯಿರಿ….. ಬಾಪೂಜಿ
ಜೊತೆ ಇದ್ದಾಗ
ಹೀಗೆ
ಎಂದಾದರೂ ಭಾ ವನ್ನು
ನೋಡಿಕೊಂಡಿರುವಡು ಉಂಟ ಬಾಪೂಜಿ
ನಿನ್ನ ನೋಟ ನೋಡಿ ಭಾ
ಭಯಪಡುತ್ತಿದ್ದ ಕಾಲವೊಂದಿತ್ತು.
ನಂತರ
ಭಾ ವಿನ್ ನೋಟಗಿ
ಭಯಪಡಲು ಪ್ರಾರಂಭಿಸಿದ್ದೀರಿ
ನೀವು!
ಇವತ್ತೂ ಎರಡೂ ಇಲ್ಲ.
ಒಂದೇ ದಾರಿಯ ನೋಟ
ಮತರವೆ
ಭಾ ವೆನ ಕಣ್ಣುಗಳು
ಅಂತಿಮದಳ್ಳಿ ದಿಟ್ಟಿಸಿಧ
ಆಗಾ ಖಾನ್ ಅರಮನೆಯ
ಒಳಮೇಲಿನ ಭಾಗವಾಗಿ
ನೀನಾಗಿರಬೇಕೆಂದು ಬಯಸಿದ್ದೀಯಾ ಬಾಪೂಜಿ?
2
ಒಂಧು ಮಹಾತ್ಮನಾಗಲು
ತುಂಬಾ ಕಲ್ಲು ಹೃದಯ
ಬೇಕೆಂದು
ಜೋಧಯಳ್ಳಿ ಇಧ್ಧ ಅರ್ಥಮಾಡಿ ಕೊಂಡವರು
ಇಂದು ಅದರಲ್ಲಿ ನಿನ್ನನ್ನು
ಸೋಲಿಸಿ ಬಿಟ್ಟು
ಹೋಗಿ ಬಿಟ್ಟಾರಾಯೆ ಬಾಪೂಜಿ
ಯಾವಾಗಲು ಸ್ವಕರಿಸಿ
ಸಹಿಸಿಕೊಂಡ
ಬಾ ವಿನ ಅಹಿಂಸೆ ಮುಂದೆ
ನಿಮ್ಮ ಉನ್ನತಾಧ ಅಹಿಂಸೆ
ಮತ್ತೆ ಸೋದಾಗಿ ಹೋಗುವುದೆ ನೋಡಿ
ಮುರಿದ ಹೃದಯಹೊಂದಿಗೆ
ಕುಳಿತು ಕುಳ್ಳತ್ತೇರಿಯೇ ||ಬಾಪೂಜಿ
ಬಾ ಎಂದು ಕರಿಯಿರಿ ……
ಬಾಪೂಜಿ
ಅವರು ಕೊಡಲೇ ಎಧ್ದು
ನಿಮಗಾಗಿ
ಹಾಲು ಮತ್ತು ಖರ್ಜೂರದ ಹಣ್ಣುಗಳು
ತರಲು ಹೋಗಿಪಿಡುವರು
3
ಬಾ ಎಂದು ಕರೆಯಿರಿ ………
ಅವರು ವೇಗವಾಗ ಎಧ್ದು
ನಿಮ್ಮೊಂದಿಗೆ ಕೆರಂ ಆಡಲು
ಕುಳಿದು ಕೊಳ್ಳಿಬಿಡುವರು
ಆದರೇ
ನೀನು ಮಾಡಲಿಲ್ಲ
ಕಲ್ಲು ಮನಸುಗರು
ಕೇಳಿದರೇ
ಅವಳಿಗೆ
ಸಂಕಟಗಳಿಂದ ಮತ್ತು ನನ್ನಿಂದಲೂ
ವಿಮೋಚನ ಸಿಕ್ಕಿತು ಎಂದ
ಅರ್ಧಹೀನ ಕಾರಣ ಕೇಳುವೀರೆ
ಸಹಾ ...ಒಂದು
ದುಃಖದ ನಗುವಿನೊಂದಿಗೆ
ತಮಿಳಿನಲ್ಲಿ: ಆಸೈ ಬರಹಗಾರ ಕನ್ನಡ : ಕುಯೇಲಿ ಮುನುಸಾಮಿ

Friday, January 31, 2025

கிழவன்

 


(எனது முதல் கவிதைத் தொகுப்பான ‘சித்து’ 2006-இல் க்ரியா வெளியீடாக வெளியானது. அதிலிருந்து ஒரு கவிதை.)
**
கிழவன்
**
எப்போதும் என்னைப் பின்தொடர்கிறான்
ஒரு கிழவன்
நான் செல்லும் பேருந்தில்
அவனும் வருகிறான்
நான் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு
அருகிலேயே நிற்கிறான்
என்னை வெறித்தவாறே
அவனை உட்காரவைப்பதுதான்
நியாயம் என்றாலும்
எனக்கு விருப்பமில்லை
இடம் கேட்டுவிடுவான் என்று
வெளியில் ஓடும் சுவரொட்டிகள்
எதையும் பார்க்காமல்
எல்லாவற்றையும் பார்க்கிறேன்
எனக்குத் தெரியும்
அவனொன்றும் அவ்வளவு
பொறுமைசாலி அல்லவென்று
நான் எழும் தருணமும்
அவன் உட்காரும் தருணமும்
எப்படி
காண முடியாதவாறு
ஒன்றாகப்போகிறது என்பதை
நினைத்துப்பார்க்கிறேன் எப்போதும்
மிரட்சியுடன்
-ஆசை

Monday, January 27, 2025

இந்தப் பிரபஞ்சத்தின் மையம் தேடி ஒரு வேள்வி



என்றாவது யோசித்ததுண்டா நீங்கள்
உங்கள் மூளை ஏன்
இன்னொருவர் தலையில் இல்லை என்று
உங்கள் தலைக்குள் இருப்பது
இன்னொருவர் மூளையோ என்று
உங்கள் மூளைக்குள் இருப்பது
இன்னொருவர் மனமோ என்று
உங்கள் உடலில் இருப்பது
இன்னொருவர் கைகளோ என்று
உங்கள் புலன்களில் இருப்பது
இன்னொருவர் உணர்வுகளோ என்று
நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று
யாராவது கேட்டால்
என் மூளையை பார்க்கச்
சென்றுகொண்டிருக்கிறேன்
என்று சொன்னதுண்டா
எங்கோ என் மனதை வைத்துவிட்டேன் என்று
நீங்கள் தேடியது உண்டா
உண்மையில் எதுவும்
அதனதன் இடத்தில் இல்லை
அதனால்தான்
தலைக்கு மேல் மயிரிலிருந்து
தலைக்கு உள்ளே மூளையிலிருந்து
அதற்கு உள்ளே மனதிலிருந்து
இன்னும் புலன்கள் உணர்வுகள்
குறி குறிமயிர்
கால்கள்
அனைத்துமே
இந்த நீட்டம் நீட்டுகின்றன
இந்த அலைச்சல் அலைகின்றன
அங்கொன்றும் இங்கொன்றுமாகத்
தட்டுப்படுவதையெல்லாம்
எடுத்து வைத்துக்கொண்டு
தடவித் தடவி
ஆறுதல் கொள்கின்றன
உங்கள் பிரச்சினை
என்னவென்றால்
இதையும் நம்பிவிடுவீர்கள்
அவ்வளவு
சர்வநிச்சயம்
தேவைப்படுகிறது
நான்
அப்படியெல்லாம்
இருக்க மாட்டேன்
அதோ அங்கே போகிறாரே
அவரிடம் உள்ள என் கையைப்
பிடித்து
இதோ இங்கே இருக்கிறானே
இவன் கன்னத்தில்
மாறி மாறி அறையப் போகிறேன்
இந்த உலகம்
எவ்வளவு சிக்கலானது
என்பதைப் பிறர்க்கோ
எனக்கோ நிரூபிக்க
இங்கிருந்தே
தொடங்க வேண்டும்
ஆனால்
அதற்கு முன்னரே
'இங்கு'வையும் 'இதோ'வையும்
சந்தேகிக்க ஆரம்பித்துவிட்டேனே
இங்கிருந்தோ
எங்கிருந்தோ
இவ்வளவு
குழப்பத்துடன்
ஒரு பிரபஞ்சமும் கவிதையும் தேவையா 
-ஆசை

Tuesday, December 31, 2024

காந்தி, ராமனை எண்ணுதல், எழுதுதல்: ஆசையின் கவிதைகள் - பேரா. ராஜன் குறை


(எனது புதிய கவிதைத் தொகுப்பான ‘ஹே ராவண்’ நூலுக்குப் பேரா. ராஜன் குறை வழங்கிய அணிந்துரை)

தமிழில் எண்ணிப் பார்ப்பது என்றால் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுவதையும் குறிக்கும்; சிந்தித்துப் பார்ப்பதையும் குறிக்கும். 

       எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 

       கண்ணென்ப வாழும் உயிர்க்கு  

என்பது குறள். இங்கே எண் என்பது ஆங்கிலத்தில் நம்பர் எனப்பட்டாலும், டிஜிட் என்றும் கூறலாம். எண்ணை முதலில் சொல்லி, எழுத்தை அடுத்து சொல்லியிருப்பது மிகவும் கருதத்தக்கது. இப்போது நான் கணினியில் தட்டச்சு செய்வது டிஜிட்டலாகத்தான் எழுத்தாக மாறுகிறது என்பதைக் கருதாமல் இருக்க முடியவில்லை. வள்ளுவருக்கு டிஜிட்டல் யுகம் பற்றிய முன்னறிதல் இருந்தது என்று பொருளல்ல. ஆனால் ‘எண்ணி’ப்  ‘பார்ப்பது’ என்பதில் எண்ணும், கண்ணும் இணைந்திருப்பதும் அதுவே எழுத்தாவதும் தமிழ் சிந்தனை மரபில் பதிவாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

Saturday, December 28, 2024

சென்னை புத்தகக் காட்சியில் மகிழ் ஆதனின் கவிதை நூல்கள்

படம்: கோபி

சென்னை புத்தகக் காட்சியில் எங்கள் மகன் மகிழ் ஆதனின் கவிதை நூல்கள் கிடைக்கும் அரங்குகள் பற்றிய விவரங்கள்  இங்கே:

நூல்வனம் (வானம்) அரங்கு எண்: 438

*நான்தான் உலகத்தை வரைந்தேன்

(கவிதைகள்)

விலை: ரூ.50

எதிர் வெளியீடு அரங்கு எண்: F-43

*காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்
(காலத்தைப் பற்றிய கவிதைகள்)

இந்த நூல்கள்  க்ரியா பதிப்பகம் அரங்கு எண் 611-612லும் கிடைக்கும்

இந்தப் புத்தகங்களை வாங்கி குட்டிக் கவிஞனுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்!





Friday, December 27, 2024

சென்னை புத்தகக் காட்சியில் என் புத்தகங்கள்


சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி வெளிவரும் மூன்று புதிய நூல்கள் உட்பட இதுவரை 12 நூல்கள் வெளியிட்டிருக்கிறேன். இவற்றுள் 6 கவிதை நூல்கள் (ஒரு காவியம் உட்பட), மூன்று உரைநடை நூல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் அடங்கும். இவற்றுள் என் முதல் கவிதைத் தொகுப்பான ‘சித்து’ அச்சில் இல்லை. இவை தவிர கிட்டத்தட்ட 20 சிறார் நூல்களை Tulika பதிப்பகத்துக்காக மொழிபெயர்த்திருக்கிறேன். என் நூல்களின் விவரங்களையும் அவை இந்தப் புத்தகக் காட்சியில் கிடைக்கும் அரங்குகள் விவரங்களையும் இங்கே தருகிறேன்.

எதிர் வெளியீடு அரங்கு எண் F-43

*மாயக்குடமுருட்டி

(காவியம்)

விலை: ரூ.350

*ஹே ராவண்!

(கவிதைகள்)

விலை ரூ.200

*உயரத்தில் ஒரு கழுவன்

(சிறுகதைத் தொகுப்பு)

விலை: ரூ.220

க்ரியா பதிப்பக அரங்கு எண்: 611-612

*கொண்டலாத்தி

(பறவைக் கவிதைகள், வண்ணப் படங்களுடன்)

விலை: ரூ.180

ருபாயியத் -ஒமர் கய்யாம்

(மொழிபெயர்ப்புக் கவிதைகள், பேரா.தங்க.ஜெயராமனுடன் இணைந்து)

விலை: ரூ.125

பறவைகள்: அறிமுகக் கையேடு

(ப.ஜெகநாதனுடன் இணைந்து)

அமைதி என்பது நாமே - திக் நியட் ஹான்

(பௌத்த மொழிபெயர்ப்பு நூல்)

விலை: ரூ.180

இந்து தமிழ் திசை அரங்கு எண்கள்: 55-56, 668-669

*என்றும் காந்தி

விலை: ரூ.280

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் அரங்கு எண்கள்:  F-4, 75-76

அண்டங்காளி

(கவிதைகள்)

விலை: ரூ.100

குவாண்டம் செல்ஃபி

(கவிதைகள்)

விலை: ரூ.160

இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்

(கலை, இலக்கியக் கட்டுரைகள்)

விலை: ரூ.330

Tulika - 426

என் சிறார் இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள்

Friday, November 22, 2024

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்: அபத்தத்தைக் கொண்டு அர்த்தத்தை அளவிடும் படைப்பாளி (பிறந்தநாள் மீள்பகிர்வு)


பாலசுப்ரமணியன் பொன்ராஜ் இதுவரை, ‘கனவு மிருகம்’ (பாதரசம் வெளியீடு), ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ (யாவரும் பப்ளிஷர்ஸ்) ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கிறார்.

பாலசுப்ரமணியனின் சிறுகதைகள் பல வகைகளிலும் உற்சாகப்படுத்துகின்றன. கூடவே, நம் மனஅடுக்கின் இயல்பான அமைப்பில் இடையூறும் ஏற்படுத்துகின்றன. உற்சாகப்படுத்துவதற்கு முதன்மையான காரணம், பாலசுப்ரமணியனிடம் வெளிப்படும் சிந்தனை வீச்சு. தத்துவம், அரசியல், உலக இலக்கியம், இசை, அறிவியல் என்ற பல துறைப் பரிச்சயத்தையும் சரியாக உள்வாங்கித் தனது படைப்புகளில் ஆழமான சுயவெளிப்பாடுகளாக வெளியிட்டிருக்கிறார். இதற்கு உதாரணமாக ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பல்’ தொகுப்பில் பல இடங்களையும் காட்ட முடியும்.

Sunday, November 17, 2024

க்ரியா ராமகிருஷ்ணன்: தமிழில் முன்னுதாரணமில்லாத ஒரு எடிட்டர்: நினைவுநாள் பகிர்வு


ஆசை

தமிழில் புத்தகக் கலாச்சாரம் என்பது இல்லை என்பது க்ரியா ராமகிருஷ்ணன் அடிக்கடி வெளிப்படுத்தும் வருத்தங்களுள் ஒன்று. புத்தகக் கலாச்சாரம் என்பது புத்தகங்கள் அதிகம் வெளியாகும் சூழல் அல்ல, புத்தகங்களுக்கு நம் வாழ்க்கையில் நாம் முக்கிய இடம் கொடுப்பதே புத்தகக் கலாச்சாரம். அப்படிப்பட்ட கலாச்சாரம் இல்லாமல் போனதன் விளைவுகளுள் ஒன்றுதான் தமிழில் எடிட்டர்களும்கிட்டத்தட்டஇல்லாமல் போனது. அந்தக் குறையைப் போக்க வந்த முக்கியமான இருவர் – ‘க்ரியாராமகிருஷ்ணன் (2020), நஞ்சுண்டன் (2019) – சமீப ஆண்டுகளில் காலமானது தமிழுக்கும் தமிழ்ப் பதிப்புத் துறைக்கும் பேரிழப்பு.

எடிட்டிங்கை க்ரியா ராமகிருஷ்ணன் எப்படி அணுகினார் என்பதைப் பார்ப்பதற்கு முன்புஎடிட்டிங்என்பதைப் பற்றித் தமிழ்ச் சூழல் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருந்தது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.

Tuesday, June 18, 2024

க்ரியா ராமகிருஷ்ணன் 80வது பிறந்த நாள்

தமிழின் முன்னோடிப் பதிப்பாளர்களுள் ஒருவரும் என் வழிகாட்டியுமான க்ரியா ராமகிருஷ்ணனுக்கு இன்று 80வது பிறந்த நாள் நிறைவு. இருபது ஆண்டுகள் அவருடன் பயணித்திருக்கிறேன். இயற்கை, அறிவியல், கலை, இலக்கிய, சினிமா, இசை ரசனை என்று ஏராளமான விஷயங்களை அவரிடமிருந்து கற்றிருக்கிறேன். எல்லாவற்றையும் விட வாழ்க்கை சார்ந்த தார்மீக நெறிகளை அவரிடம் பெற்றிருக்கிறேன். அவரது இழப்பை ஒவ்வொரு நாளும் உணர்ந்தாலும் ஒரு விதத்தில் அவர் என்னுடன் இருப்பது போலவே உணர்கிறேன். க்ரியா வெளியிட்ட ஒவ்வொரு புத்தகமும் கண்ணில் படும்போதெல்லாம் அவரை நான் பார்க்கிறேன்.

இதையெல்லாம் தாண்டி காலத்துடன் உறவாடிய ஒரு தீர்க்கதரிசனப் பதிப்பாளராகவே அவரை நான் உணர்கிறேன். சமூக ஊடகங்கள் பெரிய அளவில் உருவாகும் முன்பே அவர் வெளியிட்ட பியர் பூர்தியுவின் ‘தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்’, ரே பிராட்பரியின் ‘ஃபாரன்ஹீட் 451’ போன்ற படைப்புகள் முக்கியமானவை. புத்தகங்கள் தடைசெய்யப்படும் காலத்தில் ஆசிரியர்கள் கொல்லப்படும், தாக்கப்படும் காலத்தில் பிராட்பரியின் புத்தகம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னோடியான சுற்றுச்சூழல் புத்தகங்களை வெளியிட்டவர் ராமகிருஷ்ணன். நீர்வளம் குறைந்துகொண்டே வரும் காலகட்டத்தில் ‘தோண்டுகிணறுகளும் அவற்றின் அமைப்புகளும்’ புத்தகத்தை 80களின் தொடக்கத்தில் சி.மணியின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டார். 1986ல் வெளியான ‘இந்தியாவின் சுற்றுச்சூழல்’ ஒரு முன்னோடிப் புத்தகம். அதுமட்டுமல்ல அணுசக்தி பிரச்சினையைப் பேசும் ஜோஷ் வண்டேலூவின் ‘அபாயம்’ குறுநாவல்கள் தொகுப்பு பிரமாதமானது. துரதிர்ஷவசமாக இவையெல்லாம் தூய இலக்கியச் சூழலில் பேசப்படவில்லை.
பாசிசம், நாசிசம் இரண்டும் மறுஎழுச்சி பெறும் காலகட்டத்தில் யூழேன் இயனெஸ்கோவின் ‘காண்டாமிருகம்’, ஸீக்ஃப்ரீட் லென்ஸின் ‘நிரபராதிகளின் காலம்’, காஃப்காவின் ‘விசாரணை’ போன்ற படைப்புகளை வெளியிட அவர் தேர்ந்தெடுத்ததில் வெளிப்படும் தீர்க்கதரிசனம் வியக்க வைக்கிறது.
மரண தண்டனை, போர், வன்முறை, அதீதம் என்ற போன்ற நம் காலத்தின் முக்கியமான பிரச்சினைகளுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட 2500 ஆண்டுகளுக்கும் முந்திய ‘தாவோ தே ஜிங்’ படைப்பை சி.மணியின் மொழிபெயர்ப்பில் அவர் வெளியிட்டார். அதுவே அவர் வெளியிட்ட புத்தகங்களுள் அவருக்கு மிகவும் பிடித்தமானது, எனக்கும் கூட. மேலும் ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’, விக்தோர் ஹ்யூகோவின் ‘மரண தண்டனைக் கைதியின் இறுதிநாள்’ போன்ற படைப்புகளும் மரண தண்டனைக்கு எதிரானவை.
இவை தவிர சாதியத்தின் கொடுமை பற்றிப் பேசும் இமையத்தின் படைப்புகளும் பூமணியின் படைப்புகளும் முக்கியமானவை.
என் 5 நூல்கள் க்ரியாவில் வெளியாகியிருக்கின்றன என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
காலத்துடன் உறவாடிய, காலத்துக்கு முன்பே சிந்தித்த பதிப்பாளர் க்ரியா ராமகிருஷ்ணனின் 80வது பிறந்த நாளில் அவரை வணங்குகிறேன்!

Saturday, June 15, 2024

மாயக்குடமுருட்டிக்கு ஒரு வயது!

முதலில் வெளியான போஸ்டர்

எனது ‘காவிரியம்’ நெடுங்காவியத்தின் முதல் நூலான ‘மாயக்குடமுருட்டி’யை எழுதத் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. நாவலாக எழுத நினைத்து, குறுங்காவியமாக எழுதி ‘அருஞ்சொல்’ மின்னிதழில் வெளியிட்டேன். எழுதி முடித்ததும் அது காவியமாக வளரும் என்று நெருக்கமான நண்பர்கள் கூறினார்கள். அப்படியே விரித்தெடுத்து காவியமாக 13 அத்தியாயங்கள் அருஞ்சொல்லில் 13 வாரங்கள் வெளியானது. ‘மாயக்குடமுருட்டி’ எழுதி முடித்த தருணத்தில் இது காவியமாகவும் நிறைவடையாது என்றும் தோன்றியது. ஆகவே, அதனை ‘காவிரியம்’ என்ற பொதுத் தலைப்பில் விரித்தெடுத்து முதல் நூலுக்கு ‘மாயக்குடமுருட்டி’ என்ற தலைப்பைத் தக்கவைத்துக்கொண்டேன். 

எழுதி வெளியிடும் முன்னே தமிழின் தலைசிறந்த காவியங்களுள் ஒன்றாக இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டேன். மாயக்குடமுருட்டி நிறைவடையும்போது அதனை மூத்த எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள், வாசகர்கள் பலரும் உறுதிப்படுத்தினார்கள். மாயக்குடமுருட்டியின் முதல் அத்தியாயம் வெளியான அன்று மட்டும் கிட்டத்தட்ட 2,000 பேர் அருஞ்சொல் மின்னிதழில் அதனைப் படித்திருக்கிறார்கள். கவிதையை அதுவும் நெடுங்கவிதையைப் பொறுத்தவரை அது பெரும் சாதனை. என் நெடுங்காவியத்துக்கு ஆதரவளித்த எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள், பேராசிரியர் தங்க. ஜெயராமன், தினமணி சிவக்குமார், பெரு. விஷ்ணுகுமார், அருஞ்சொல் மின்னிதழின் சமஸ், தம்பி சிவசங்கர், ஓவியர்கள் ஜோ.விஜயகுமார், இரா. தியானேஷ்வரன் உள்ளிட்டோருக்கு மிக்க நன்றி. தொடரின் விளம்பர போஸ்டருக்காகத் தங்கள் கருத்துகளைக் கொடுத்துதவிய கவிஞர் அபி, தியடோர் பாஸ்கரன், பேரா.டேவிட் ஷுல்மன் ஆகியோருக்கு நன்றி! பலரின் கருத்துகளையும் அறிந்துகொள்ள இந்தக் காவியத்தைக் கொடுத்திருந்தேன். பெருந்தேவி, ஆனந்த், கண்டராதித்தன், தூயன், பொன்முகலி, வே.நி.சூர்யா, முத்துராசா குமார் உள்ளிட்டோர் முழுவதும் படித்துவிட்டுப் பிரதியை மேம்படுத்தும் விதத்தில் தங்கள் கருத்துகளைக் கூறியிருந்தார்கள். பிரதியின் மீதான என் நம்பிக்கையையும் இவர்கள் உறுதிப்படுத்தினார்கள். அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

எழுதத் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறும் இந்நாளில் எடிட்டிங்குக்காக ‘மாயக்குடமுருட்டி’யை மறுபடியும் தொடுகிறேன். இந்த இடைவெளியில் என் கவிதைகள் வேறு வேறு திசையில் சென்று பெரும் ஆட்டம் ஆடிவிட்டன. இந்த இடைவெளி ஒரு பிரதிக்குத் தேவையும் கூட. கூடிய விரைவில் ‘மாயக்குடமுருட்டி’யை புத்தகமாக உங்கள் கண்முன் கொண்டுவருகிறேன். 2,500 ஆண்டுகால தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு ஆற்றை இந்த அளவுக்குக் கொண்டாடும் இன்னொரு கவிதைப் படைப்பு இல்லை என்பதை மீண்டும் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். அதைத்தான் நண்பர்கள், வாசகர்கள் பலரும் என்னிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

‘காவிரியம்’ நெடுங்காவியத்தின் முதல் பகுதியான ‘மாயக்குடமுருட்டி’யின் அனைத்து அத்தியாயங்களும் ஓரிடத்தில், ‘அருஞ்சொல்’ மின்னிதழில்:

https://www.arunchol.com/asai-poem-maya-kudamurutti-all-links

Sunday, May 5, 2024

21-ம் நூற்றாண்டுக்கு மார்க்ஸ் என்ன சொல்கிறார்? - மார்க்ஸ் பிறந்த நாள் பகிர்வு


யானிஸ் வரூஃபக்கீஸ்

(தமிழில்: ஆசை)

ஒரு அரசியல் அறிக்கை வெற்றிபெற வேண்டுமென்றால் அது ஒரு கவிதையைப் போல நம் இதயத்துடன் பேச வேண்டும். அதே நேரத்தில் நம் மனதில் அசாதாரணமான புதிய படிமங்களையும் கருத்துக்களையும் விதைக்க வேண்டும். நம்மைச் சுற்றி நிகழும் குழப்பம் நிறைந்த, வருத்தமளிக்கக்கூடிய, பரவசமான மாற்றங்களின் உண்மைக் காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளும் வகையில் நம் கண்களை அது திறக்க வேண்டும்.

கூடவே, நம் தற்போதைய சூழல் தன்னுள் கருக்கொண்டிருக்கும் சாத்தியங்களையும் அது வெளிக்காட்ட வேண்டும். இந்த உண்மைகளை நாமே அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போய்விட்டதே என்று நம் இயலாமையை நினைத்து நம்மை வருத்தப்பட வைக்க வேண்டும்.

Friday, April 26, 2024

ராஜா... ரஹ்மான்: க்ளிஷே சமூகமாக ஆகிவிட்டோமா?



நான் இளையராஜா ரசிகனாக (வெறியனாக) மட்டும் இருந்தபோது உலகிலேயே சிறந்த இசையமைப்பாளர் அவர் மட்டுமே என்ற அசைக்க முடியாத எண்ணத்தில் இருந்தேன். (வேறு யாரையும் கேட்டதில்லை). அந்த எண்ணத்தில் எனக்குள் முதல் முறையாக மாற்றம் ஏற்பட்டது என் 19 வயதில்.
அப்போது மன்னார்குடி கல்லூரியில் இரண்டு நாள் ரோட்டரி நிகழ்வு ஒன்று நடைபெற்றது. வீடு மன்னார்குடி என்றாலும் அங்கேயேதான் இரண்டு நாள் இருக்க வேண்டும். அந்த நிகழ்வில் விக்டர் என்ற மூத்த ரொட்டேரியன் தன் வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

Monday, April 22, 2024

புத்தக வாரத்தில் ஒரு சிறப்பு அறிவிப்பு!

புத்தக வாரத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு அறிவிப்பு. என் கவிதை நூல்களும் குட்டிக் கவிஞன் மகிழ் ஆதனின் கவிதை நூல்களும் 50% சிறப்பு விலையில் கிடைக்கும். இச்சலுகை இன்று தொடங்கி ஏப்ரல் 30 வரை. அனைவரும் வழக்கம்போல் பேராதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். விவரங்கள் இப்பதிவில் உள்ள படத்தில்.

Tuesday, April 16, 2024

மகிழ் ஆதன் 12வது பிறந்த நாள்!


மகனும் கவிஞனுமாகிய மகிழ் ஆதனுக்கு இன்று 12வது பிறந்த நாள். மகிழ் ஆதனின் கவிதைகள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அதற்கு முன் சில குறிப்புகள்.

பெற்றோர்களாகிய எங்களின் விருப்பமும் திணிப்பும் இன்றி அவனாகவே 4 வயதில் கவிதை சொல்ல ஆரம்பித்தான். நான் கவிஞனாக இருப்பதுதான் அவன் கவிதை எழுதுவதற்குக் காரணம் என்று கூறினால் அது அவனது இயல்பான மேதமையைச் சிறுமைப்படுத்துவதாகும் என்றே கருதுகிறேன். 

மகிழ் ஆதனின் முதல் கவிதைத் தொகுப்பான ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ வானம் (நூல்வனம்) வெளியீடாக 2021ல் வெளியானது.

Friday, March 29, 2024

திருவயிற்றின் கனி - புனித வெள்ளி சிறப்புக் கவிதைகள்



1. புனித வெள்ளியின் உதிரத் துளி

இவ்வெள்ளியின்
தரையில்
ஆழ ஊன்றியிருக்கிறது
ஒரு புனித மனம்

அசைவாடா கிளைபோல
தொய்ந்திருக்கும் தலை

களைப்பு நிரம்ப
இனி
இடமில்லா உடல்

கீழிறங்கும்
ஒவ்வொரு சொட்டும்
தரையின் ஆழத்துக்குள்
மேலும் மேலும்
ஒரு அடி என
இறுதிச் சொட்டு
பூமியின் மையத்தை

Wednesday, March 27, 2024

ஒரு ஓட்டு சுந்தரேசன் - சிறுகதை


ஆசை

'நான் இந்த எலக்ஷன்ல நிக்கப்போறன் மாப்புள்ள' என்று குண்டைத் தூக்கிப்போட்டார் சுந்தரேசன் மாமா.

'நெசமாத்தான் சொல்றீங்களா மாமா, இல்ல ஒங்களுக்குக் கிறுக்கு எதுவும் புடிச்சிப்போச்சா?'

'நெசமாத்தான் சொல்றன் மாப்புள்ள. இந்தத் தேர்தல்ல நான் நிக்கப்போறன், சுயேச்சை வேட்பாளரா' என்றார் மாமா.

'அத்தைக்குத் தெரிஞ்சிச்சுன்னா ஒங்கள வுட்டுட்டுத் தேடாதே மாமா. அத வுடுங்க அய்யாவுக்குத் தெரிஞ்சிச்சின்னா என்னல்ல ஒதைக்கப் போறாரு'

'மாப்புள்ள, நான் ஒரு சுதந்திர ஜீவி ஒன் அத்தயால எல்லாம் என்ன ஒன்னும் பண்ண முடியாது. என்ன சொன்ன ஒன் அய்யாவா' என்று சொல்லிவிட்டு 'ஹா ஹா'என்று சிரித்துவிட்டுப் பின் தொடர்ந்தார்

Monday, March 25, 2024

வெற்றோட்டம் - கவிதை

அந்த நாய்க்கு
நான்காம் கால்
தொடையோடு
துண்டிக்கப்பட்டிருந்தது
துண்டிப்பைப்
பொறுத்தவரை
அது முதலாம் காலாகவும்
இருக்கலாம்
துண்டித்த கால்
உட்பக்கமாய்
ஊன்றியிருந்தது
அது துடிதுடித்து
வெற்றிடமாய்
வெளிப்பக்கமாய் ஓடிக்கொண்டிருந்தது 
-ஆசை