Friday, April 25, 2025

ஒரு ராணுவ வீரரின் குடும்பத்தினர்கூட போர் வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள்!- ராணுவ வீரரின் மகனும் போர்ச் செய்தியாளருமான ஜி.கிருஷ்ணன் பேட்டி



உரத்த குரலில் ‘போர் வேண்டும், போர் வேண்டும்’ என்று ஆளுக்காள் கூவிக்கொண்டிருக்கும் காலத்தில் ஜி.கிருஷ்ணனின் குரல் நிதானமானது. அமைதியை விரும்புவது. ராணுவ வீரரின் குடும்பத்தில் பிறந்து போரைப் பற்றிய கசப்பான நினைவுகளைச் சுமந்து, பின்னாளில் போர் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் செய்தியாளராகப் பணியாற்றியவர். ‘தி இந்து’, ‘அசோசியேட்டட் பிரஸ்’ என்று அவருடைய இதழியல் பணி இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளாவிய பரப்பைக் கொண்டது. தற்போது பாலக்காட்டில் தன் மனைவியுடன் வசித்துவரும் ஜி.கிருஷ்ணனுடன் நடத்திய உரையாடலிலிருந்து…

Wednesday, April 23, 2025

50% சிறப்பு விலையில் என் நூல்களும் மகிழ் ஆதன் நூல்களும்!


அனைவருக்கும் உலகப் புத்தக தின நல்வாழ்த்துகள்! இத்தருணத்தை முன்னிட்டு எனது கவிதைத் தொகுப்புகளும், குட்டிக் கவிஞன் மகிழ் ஆதனின் கவிதைத் தொகுப்புகளும் 50% சிறப்பு விலையில் கிடைக்கும். (தனியாகவும் மொத்தமாகவும் உண்டு). இந்தச் சலுகை ஏப்ரல் 30 வரை மட்டுமே. இந்தத் திட்டத்துக்குப் பேராதரவு தரும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நண்பர்கள் இந்தப் பதிவைப் பகிர்ந்துகொண்டால் மகிழ்வேன். விவரங்கள் மேலே உள்ள படத்தில்!

இது தவிர ‘எதிர் வெளியீடு’ அறிவித்துள்ள சலுகைத் திட்டத்தின் கீழ் எனது மூன்று புதிய நூல்களான ‘உயரத்தில் ஒரு கழுவன்’ (சிறுகதைத் தொகுப்பு), ‘மாயக்குடமுருட்டி’ (காவியம்), ‘ஹே... ராவண்!’ (கவிதைத் தொகுப்பு) ஆகியன 25% சலுகை விலையில் கிடைக்கும்.



Sunday, April 20, 2025

புனித கல்லறையர் சொன்ன சுவிசேஷம்


தேவனே
நீர் உம்மை
உயிருள்ள அப்பமும்
திராட்சை ரசமும் என்றீர்
நானோ
உயிருள்ள கல்லறையாக
இருக்கிறேன்
யாரேனும் திறந்து பார்த்தால்
இப்படி
வெட்டவெளியைப்
புதைத்துவைத்திருக்கிறார்களே
என்ன மடத்தனம்
என்று காறியுமிழ்வார்கள்
மேலும்
வாழ்வது கல்லறை சுமப்பதற்கான
கூலி
என்று நான் எழுதிக்கொண்ட
கல்லறை வாசகத்தைப் பார்த்து
உம் வாக்காக
எடுத்துக்கொண்டு
எல்லோரும்
அஞ்சி அகன்றுவிடுகிறார்கள்
சிலுவை சுமத்தலுக்குக்
கிடைத்த வெளிச்சம்
கல்லறை சுமத்தலுக்குக்
கிடைப்பதில்லையே
என்ற கடுப்பில்
உமக்கே நான் செய்த
இடைச்செருகல் அது
சிலுவையில் மரித்தபின்
உம்மையும்
ஒரு கல்லறையில்
கொண்டுபோய்
வைத்தார்கள்
மூன்று நாட்கள் கூட
தாக்குப்பிடிக்க
முடியவில்லை
இப்போதாவது
ஒப்புக்கொள்ளுங்கள்
கல்லறை சுமத்தலில்
நான்
எவ்வளவு பெரிய
வீரன் என்று
-ஆசை, வெளிவரவிருக்கும் ‘திருவயிற்றின் கனி’ கவிதைத் தொகுப்பிலிருந்து...

Friday, April 18, 2025

புனித வெள்ளியின் உதிரத் துளி


இவ்வெள்ளியின்
தரையில்
ஆழ ஊன்றியிருக்கிறது
ஒரு புனித மனம்
அசைவாடா கிளைபோல
தொய்ந்திருக்கும் தலை
களைப்பு நிரம்ப
இனி
இடமில்லா உடல்
கீழிறங்கும்
ஒவ்வொரு சொட்டும்
தரையின் ஆழத்துக்குள்
மேலும் மேலும்
ஒரு அடி என
இறுதிச் சொட்டு
பூமியின் மையத்தை
எட்டியதும்
பெருங்குரலொன்று
ஓவென்றெழுந்து
அண்டம் உலுக்கியது
ஆதியிலிருந்து
அங்கே குமைந்திருப்பதும்
எல்லா உதிரச் சொட்டுகளின்
ஆகர்ஷணப் புள்ளியாய்
அமைந்திருப்பதும்
படைப்பின்போது
பிதாவிடமிருந்து பிய்ந்து தங்கியதுமான
ஆதாரவலியின் குரல் அது
‘என் தேவனே என் தேவனே
என்னை ஏன் கைவிட்டீர்’
என்றபோது
விசும்பி எழுந்தாலும்
வெளிப்பட விரிசலில்லாமல்
தவித்த குரல் அது
ஒரு சொட்டு
தட்டிக் கதவகற்ற
வீறிட்டெழுந்து
மூன்றாம் நாளில்
கல்லறை பெயர்த்ததும்
எழுப்பித்ததும்
உயிர்ப்பித்ததும்
விண்ணேற்றியதும்
அக்குரலே
அக்குரலை எட்டுமொரு
சொட்டு
எம்முடலிலும்
தாருமென் பிதாவே
அது
கண்ணீராக இருந்தாலும் சரி
உதிரமாக இருந்தாலும் சரி
-ஆசை

Wednesday, April 16, 2025

மகிழ் ஆதன்-13: சிறப்புப் பகிர்வு



கவிஞரும் எங்கள் மகனுமான மகிழ் ஆதனுக்கு இன்று 13-ஆம் பிறந்த நாள். இன்று அவர் பதின்பருவத்தில் அடியெடுத்துவைக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. மகிழ் ஆதனின் கவிதைகளுள் சிலவற்றை இங்கே படிக்கலாம்.

மகிழ் ஆதனின் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ (2021) தொகுப்பிலிருந்து…



1.
பூக்கள் நம்மளை
வாசனை ஏத்த வைக்கும்
நம்மள்
புல்லாங்குழல் வைச்சு
வாசனை ஏத்த வைப்போம்


2.
என் வெயில்
என் முகத்திலே பட்டு
நினைவாய் ஆகிறது

3.
கண்முத்தம்
பறவை முத்தம்
ஊதா முத்தம்
மனசு முத்தம்
ஏசப்பா முத்தம்
நீலப்பறவை முத்தம்


4.
நான் பறவை ஒளி
நீ பறவை கண்காட்சி
நான் முந்திரிக் கண்
நீ முத்தம் கண்

5.
சிறுத்தைக் கண்
என்மீது பாயும்போது
ஒரு நடு ஒளி வரும்

6.
நீலத்துக்குள்ளே வட்டம்
வட்டத்துக்குள்ளே நான்
எனக்குள்ளே ரயில் பூச்சி

7.
எரிகல்
வானத்தில் இருக்கும்போதே
வானத்தைக்
காதலிக்கும்


8.
மழைச் சொட்டுக்கள்
என் கண்ணில் விழுந்து
என் கண்
பழச்சொட்டுக்களாக மாறும்


9.
நான்தான்
உலகத்தை வரைந்தேன்
வானத்தில் மிதந்தேன்
வானத்தை நான்
கையில் பிடித்துக் கூட்டிச்சென்றேன்
வானம் என்னைக்
காற்றால் கட்டிப்போட்டது
கட்டிப்போடும் நேரத்தில்
சூரியன் என்னை வரைந்தது
         -மகிழ் ஆதனின் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’
         தொகுப்பிலிருந்து.
         நூலைப் பெற: வானம் வெளியீடு – 91765 49991    

**

மகிழ் ஆதனின் ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’ (2022) கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்…



1.

காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்
காலத்தில் பறப்பான்
காலத்தை நேரில் பார்ப்பான்
காலத்தைக் கற்பனை பண்ணிப்பான்

2.
காலம் என்றால் என்ன
அது ஒரு பூ
அந்தப் பூவுக்குள்
ஒரு உலகம் இருக்கிறது


3. காலத்தின் சொல்

காலத்திற்கு வடிவம் இருக்கா
சொல்லுக்கு முடிவு இருக்கா
காலத்திற்கு இடம் உண்டா
சொல்லுக்கு வெளிச்சம் உண்டா
காலத்திற்கு வீடு இருக்கா
சொல்லுக்கு முத்தம் இருக்கா
காலத்திற்குக்  கனவு இருக்கா
சொல்லுக்கு உடம்பு இருக்கா
காலத்திற்கு உணர்வு இருக்கா
சொல்லால் வளர முடியுமா
சொல் என்றால் என்ன
அது ஒரு நிறம்
காலம் என்றால் என்ன
அது ஒரு புதிய மண்


4. புதிய காலம்

காலத்தின் அழகு
கண்ணால் மறைந்து
காதால் தெரியும்

நான் காலத்தின் மேல்
காலத்தின் வெளிச்சத்தை வரைந்தேன்

காலம் ஒரு கற்பனை

அந்தக் கற்பனையை
நான் உடைத்தேன்

காலத்துக்குள் ஒரு புதிய காலம்
பிறக்கிறது


5. பகலிரவு

பகல்
வண்ணங்களின் நிழலைக்
காட்டும்

இரவு
வண்ணங்களின்
கலைந்த கனவைக் காட்டும்

பகல்
ஒளியின் கோடு

இரவு
வண்ணங்களின் திட்டம்

பகல்
பார்வையின்  ஒளி

இரவு
வெளிச்சத்தின் குளிர்


6. நமக்குள் கருந்துளை

கருந்துளை காலத்தை முழுங்கியது
நம்மள் கருந்துளைக்குள் இருக்கிறோம்
கருந்துளை ஒரு கருப்புபூதம்
கருந்துளை  காந்தத்தின் கண்
காலத்தின் நிறம் கருப்பு
காலத்தின் நிறம்
கருந்துளையைக் கற்பனையில் உருவாக்கியது
கருந்துளை ஒரு கதையிலிருந்து வந்தது

நமக்குள் கருந்துளை

கருந்துளை
பூவுக்குள் தூங்கியது

காலமும் கருந்துளையும்
ஒரு பாட்டின் சந்தம்

கருந்துளை
சத்தத்தின் கனவு


7. எதிர்காலத்தில் வீசும் காற்று

பூக்கள்
பூக்களில் ஒட்டும் காலம்

காலம்
ஒளியைக் கூறிச் செல்லும் காலம்

பூக்களின் நிறம்
காலத்தின் மேல்

காலம்
ஒரு தட்டில் தெரியும் முகம்

கனவு
ஒரு எதிர்காலத்தில் வீசும் காற்று

காலம்
காற்றின் நிழல்

காலம்
கண்கட்டும் பூச்சாண்டி

காலத்துக்குள்
கரைந்த மேகம் இருக்கு


8. காலம் என்றால்

காலம் என்றால் மேகம்
ஒளி
மழை
கடல்
பறவை
சிங்கம்
சத்தம்
காற்று
புலி
ஆறு
சுனாமி
சூறாவளி
காட்டு யானை
நெருப்பு
குளிர்
மண்
வாசனை
விசில் குருவி
இறகு
கிளி
பச்சை
மான்
உலகம்
காலம் என்றால் கதை சொல்லும் பூ
          - மகிழ் ஆதனின் ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’
           தொகுப்பிலிருந்து.
           நூலைப் பெற: எதிர் வெளியீடு – 99425 11302, 98650 05084

**

இன்னும் நூலாக்கம் பெறாத புதிய கவிதைகள்

1.
ரயில் பூச்சி
நீங்கள்
என் மனசைத் தொட்டால்
என் மனசு
புதிய இடமாக
ஆகும்

2. விக்கலால் இறந்துபோன எலி

ஒரு நாள் காலையில்
விக்கலால் இறந்துபோன எலி
இறந்த உடனே
தூரத்தில் இருந்து
கண்காணித்துக்கொண்டு இருக்கும் காகங்கள்
ஆசையால் பறந்துவந்து
இறந்த எலியைக் கொத்திக் கொத்திக்
கனவின் முடிவிற்கு வரவைத்தது

நானும் விக்கிக்கொண்டுதான் இருந்தேன்
இரண்டு நிமிடம்


3. அதிசயங்கள்

இயற்கை நமக்குத் தரும்
அதிசயங்கள்
நம் நினைவைப்
பூட்டுப் போட்டுப் பூட்டும்

அதிசயங்கள் சிட்டுக்குருவியின்
இறகில் வாழ்ந்துகொண்டு
இருக்கட்டுமே


4.
வானத்தின் ஜன்னல்
என் நினைவின் முயல்


5.
காட்டுக்கு அடங்கிய ஆடு
ஆட்டைப் பார்த்த பூக்கள்
மரத்திடம் என்ன சொன்னது
ஆட்டுக்கு வந்த பசிதான்
நம் எதிரி
ஆட்டின் மனசைப் பார்த்து ஓடிய புலி
காட்டுக்குள் ஆடிய ஒளி
காட்டின் சத்தம் பறவைகளின் இதயம்
காட்டுக்குள் நுழைந்த ஒளியின் பதில்
காடு காலத்தில் படுக்கும் பாய்
காட்டுக்கு வந்த தூக்கம்
உணர்வில்லாத மரம்


6.
‘பூவுக்குள் இருக்கும் தேன்
யாருக்காக ஒளிந்திரிக்கிது

பறவைகளின் குரல் தேனின் காதில்
புல்லாங்குழல் வாசித்தது

தேனின் நிறம் ஆசையின் புதையல்

தேனிடம் மாட்டிய சத்தங்களை
பூமியில் புதைத்தது

பூமியில் இருந்து சத்தத்தின் பூக்கள் பூக்கும்
அதில் இருந்த தேன்கள் சிரித்தன

பூவுக்குள் இருக்கும் தேன்
முத்தத்தின் இருள்

பூவின் மேல் படும் வெயில்
தேனுக்கான அலாரம்
**


மகிழ் ஆதன் உலகத்துக்கு நான் எழுதிய அறிமுகம்:

ஸ்பைடர்மேனால் வரையப்பட்டவன் – மகிழ் உலகத்துக்கு ஓர் அறிமுகம்


மகிழ் ஆதன் கவிதைகள் தொடர்பாக மேலும் விரிவாக அறிந்துகொள்ள கீழ்க்கண்ட கட்டுரைகளைப் படிக்கலாம்:


எஸ். ராமகிருஷ்ணன்:

https://tinyurl.com/4tswh7pu

https://tinyurl.com/sy24wtt3

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்: https://tinyurl.com/3anudu2f

சுந்தர் சருக்கை: https://tinyurl.com/yrrt7vk3

டாக்டர் கு.கணேசன்: https://tinyurl.com/3bredys2

மு.இராமநாதன்: https://tinyurl.com/bdaavhjj

ந. பெரியசாமி: https://tinyurl.com/yu3y94jk

The New Indian Express: https://tinyurl.com/543wx4zj

இந்து தமிழ் திசையின் ‘மாயாபஜார்’: https://tinyurl.com/5bzpcdts

குங்குமம்: https://tinyurl.com/4ak3pmwh

தமிழ் விக்கி: மகிழ் ஆதன் - Tamil Wiki

Tuesday, April 15, 2025

முந்நூறு முறை சாம்பியன்


வாழ்க்கை என்றால்
என்ன
அது ஒரு
பழைய அனுபவம்
அதன் மறுமுனையை
ஒரு பிணம்
கொறித்துக்கொண்டே வருகிறது
யாரும் நகர வேண்டியதில்லை
அதுவே வந்துவிடும்
அவன் மட்டுமே
கலந்துகொள்ளும் போட்டியென்றாலும்
ஒவ்வொரு முறையும்
அவனே சாம்பியனாக வேண்டிய
கட்டாயத்தில்
அலுத்துப்போய்
முன்பு வென்ற கோப்பையில்
விஷமருந்தி
இதோ இறந்து கிடக்கிறான்
முந்நூறு முறை கோப்பை வென்றவன்
அவன் கைவிட்ட நினைவுகள்
அவனைத் தூக்கிச் செல்ல
ஊர்ந்து வந்துகொண்டிருக்கின்றன
வாழ்க்கை
எவ்வளவு இனியதொரு
பிண அனுபவம்
ஆடாமல் அசையாமல்
அப்படியே இருந்தால் போதும்
சுமந்து செல்பவர்களின்
கொண்டாட்டத்தைப் பாருங்கள்
-ஆசை

Monday, April 14, 2025

சமத்துவம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை


டிசம்பர் 25, 1949-ல் அரசியல் சட்ட நிர்ணய சபையில் அம்பேத்கர் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்...

ஜனவரி 26, 1950 அன்று முரண்பாடுகள் நிறைந்த ஒரு வாழ்க்கையில் நாம் அடியெடுத்து வைக்கப்போகிறோம். அரசியலில் சமத்துவமும் சமூக, பொருளாதார வாழ்வில் சமத்துவமின்மையையும் ஒருங்கே அடையவிருக்கிறோம். அரசியலைப் பொறுத்த வரை ‘ஒரு மனிதர் ஒரு ஓட்டு ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தை நாம் அங்கீகரிக்கவிருக்கிறோம்.
அதே நேரத்தில் நமது சமூக, பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக நமது சமூக, பொருளாதார வாழ்வில் ‘ஒரு மனிதர் ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தைப் புறக்கணிப்பதைத் தொடரப்போகிறோம்.

Friday, April 11, 2025

மேஸ்திரியால் அழைக்கப்பட்டவர்கள்


மேஸ்திரி அழைத்தாரென்று
திண்டிவனத்திலிருந்தோ
விழுப்புரத்திலிருந்தோ
திருவண்ணாமலையிலிருந்தோ
இந்நகரம் வந்து
முகவரி தொலைத்ததாகவும்
திரும்பிப் போகப்
பணம் வேண்டுமென்றும்
குடும்பத்துடன்
தயங்கித் தயங்கிக் கேட்பவர்கள்
இன்னும் இருக்கிறார்கள்
இந்நகரத்தில்
அவர்கள் விரும்புவதெல்லாம்
திண்டிவனத்துக்கோ
விழுப்புரத்துக்கோ
திருவண்ணாமலைக்கோ
திரும்பிச் செல்வதையல்ல
தங்கள் குரலுக்குப்
பிச்சைக்கும் சற்று மேலான
கௌரவத்தைக்
கொடுப்பதுதான்
அதை
ஒரு ஈதலோ
ஒரு மறுத்தலோ
இழுத்துப்
பிச்சைக்கும் கீழே
போட்டுவிடுமோவென்ற
அச்சத்துடனே
ஆரம்பிக்கிறார்கள் ஒவ்வொருவரிடமும்
‘சார் ஒரு நிமிஷம்
மேஸ்திரி அழைத்தாரென்று நாங்கள்…’
என்று
இதைக் கேட்கும் ஒவ்வொருவரும்
சகலவல்லமையும்
சகலமறதியும்
உள்ள ஒரு மேஸ்திரியைக்
கற்பனை செய்துகொள்ளவே
தடுமாறிப் போகிறார்கள்
ஒரு நொடி
-ஆசை

Wednesday, April 9, 2025

ஒளியே சொல்


கோடி கோடி மைல் நீ
கடந்துவந்ததெல்லாம் என்
குட்டித் தேன்சிட்டின் மூக்கில்
பட்டு மிளிரவா ஒளியே சொல்?

-ஆசை, ‘கொண்டலாத்தி’ (2010) கவிதைத் தொகுப்பிலிருந்து...