Monday, December 11, 2023

பாரதீ: எம் கவிஞன் நீ!


ஆசை

‘மேன்மேலும் புதியகாற்று எம்முள் வந்து/ மேன்மேலும் புதியஉயிர் விளைத்தல் கண்டீர்’ என்று எழுதித் தமிழ் மொழி மீதும் தமிழ் சமூகத்தின் மீதும் புதிய காற்றைப் படச் செய்தவர் பாரதி. வடிவத்தால் மரபுக் கவிஞராகவும் உள்ளடக்கத்தால் நவீனக் கவிஞராகவும் பாரதி காட்சியளிக்கிறார். மனிதர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இனம், மொழி, நாடு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகள், பிற நாட்டின் விடுதலைப் போராட்டங்கள், பிற நாட்டுத் தமிழர்களின் இன்னல்கள், வானியல் நிகழ்வுகள், இயற்கைச் சீற்றங்கள் போன்ற பல கருப்பொருள்கள் பாரதியிடம்தான் தமிழ்க் கவிதை வரலாற்றில் முதன்முதலில் எட்டிப்பார்த்தன.

பாரதியின் சமத்துவக் கனவு

‘எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்/ எல்லாரும் இந்தியா மக்கள்/ எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை/ எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ என்ற சமத்துவக் குரலை இந்தியாவிலேயே அநேகமாக முதலில் எழுப்பியவர் பாரதி. அதுமட்டுமன்றி ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்/ ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று சத்திய ஆவேசத்துடன் பாடியவர் யார்? ‘இடம்பெரிது உண்டு வையத்தில் – இதில்/ ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?’ என்ற வரிகளுக்கும், பாரதி இறந்து 19 ஆண்டுகள் கழித்து வெளியான, சார்லி சாப்ளினின் ‘த கிரேட் டிக்டேட்டர்’ படத்தின் இறுதிக் காட்சியில் சாப்ளின் ஆற்றும் உரையில் வரும் ‘இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறது’ என்ற வார்த்தைகளுக்கும் இடையில் எத்தனை ஒற்றுமை!

‘பாருக்குள்ளே சமத்தன்மை… சகோதரத் தன்மை’ மட்டுமே புவி எங்கும் விடுதலை செய்யும் என்று பாடியவர் பாரதி. ‘… குடியரசு என்று/ உலகறியக் கூறி விட்டார்’ என்று ‘புதிய ருஷியா’வைப் பற்றி எழுதுகிறார். இந்தியாவை ‘முப்பது கோடி ஜனங்களின் ஸங்கம்/ முழுமைக்கும் பொதுவுடைமை’ என்கிறார். இப்படியாக, சமத்தன்மை, சகோதரத் தன்மை, குடியரசு, பொதுவுடைமை, புரட்சி போன்ற சொற்களையும் அவற்றின் கருத்துகளையும் தமிழ்ச் சமூகத்தில் ஊன்றியவர் அவர். அதனால்தான் ஜீவா, தொ.மு.சி.ரகுநாதன், ஆர்.நல்லகண்ணு உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள் பாரதியை ஆரத்தழுவிக்கொண்டனர்.

பாரதியின் தமிழ்க் கனவு

தமிழ்ச் சமூகத்துக்கு பெரும் பார்வை நோக்கை 20-ம் நூற்றாண்டில் வழங்கிய பேராளுமைகளில் பெரியார், பாரதியார், அண்ணா ஆகிய மூவரும் தலையாயவர்கள். மேலைநாடுகளில் புத்தம் புதிய கலைகள், புத்தம் புதிய தொழில்நுட்பங்கள் வளர்கின்றன; தமிழில் அவையெல்லாம் இல்லை; ஆகவே, ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும் – அந்த/ மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்’ என்று ஒரு பேதை கூறியதைக் கேட்டு பாரதி கொதித்துப் போகிறார். கிண்டி பொறியியல் கல்லூரியில் இருந்த ‘கம்ப்யூட்டரை’ காண 1965-ல் பெரியார் சென்றிருக்கிறார். அந்தச் சாதனத்துக்குத் தமிழ்ப் பெயர் என்ன என்று தன்னுடன் வந்தவரைக் கேட்டிருக்கிறார். அவரால் பதில் சொல்ல முடியவில்லை. “நீ கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்திருந்தால்தானே அதற்குப் பெயர் இருக்கும்” என்று அவரிடம் சீற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் பெரியார். பாரதிக்கு ஏற்பட்டதும் அதேபோன்றதொரு சீற்றமும் ஆதங்கமும்தான். அதேபோல், புவியைக் கடந்த ஹாலி வால்நட்சத்திரத்தைப் பற்றி பாரதி எழுதிய ‘சாதாரண வருஷத்துத் தூமகேது’ கவிதையிலும் அந்த வால்நட்சத்திரத்தைப் பற்றிகூட ‘அன்னியர் உரைத்திடக் கேட்டே தெரிந்தனம்’ என்று குறைபட்டுக்கொள்கிறார்.

பன்மைத்துவக் கவிஞன்

தாயின் மணிக்கொடியைப் புகழ்ந்து பாடும்போது ‘இந்திரன் வச்சிரம் ஓர்பால்- அதில்/ எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்’ என்று எழுதுகிறார். பாரதி கற்பனை செய்த நாடு இந்துகள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறித்தவர்கள் அனைவரையும் உள்ளடக்கியதே. தமிழில் முதன்முதலில் ஏசுவைப் பற்றிப் பாடிய கிறிஸ்தவரல்லாத கவிஞர், அல்லாவைப் பற்றிப் பாடிய இஸ்லாமியரல்லாத கவிஞர், குரு கோவிந்தரைப் பற்றிப் பாடிய கவிஞர் பாரதிதான். தமிழின் முதல் பன்மைத்துவக் கவிஞர் என்று சந்தேகமில்லாமல் பாரதியை நாம் கூறிவிடலாம். அப்பேர்ப்பட்ட பன்மைத்துவக் கவிஞருக்கு, பல வண்ணங்கள் கொண்ட கவிஞருக்குக் காவி நிறத்தை மட்டும் பூசி பிறர் அவரை அபகரிக்க நாம் விடலாகாது.

காதல் கவிதைகள்

பாரதியின் காதல் கவிதைகள் அலாதியானவை. காதலின் உச்சத்தில் காதலனின் முகமே மறந்துபோய்விடும் கொடுமை எங்கேயும் உண்டோ? பாரதியின் கவிதைத் தலைவி பாடுகிறாள், ‘ஆசை முகம் மறந்துபோச்சே – இதை/ ஆரிடம் சொல்வேனடி தோழி?’ தன்னைக் கண்டதும் நாணிக் கண் புதைக்கும் காதலியைப் பார்த்து, ‘நீட்டும் கதிர்களொடு நிலவுவந்தே – விண்ணை/ நின்று புகழ்ந்துவிட்டுப் பின்மருவுமோ?’ என்று தலைவன் கேட்கிறான். ஆனால், பெண் அப்படித்தான். முதலில் நிலவாகிய ஆண், விண்ணாகிய பெண்ணிடம் வந்து ‘எப்படி இருக்கிறாய், உன் பட்டுக் கருநீலப் புடவை அழகு, அதில் பதித்த நல்வயிரங்கள் அழகு’ என்றெல்லாம் வர்ணித்துவிட்டுத்தான் ‘மருவ’ வேண்டும். ஆண்கள் அப்படியில்லை, அவர்களைப் பொறுத்தவரை வாய்ச்சொல்லில் பயனில.

காதல் இந்த உலகத்துக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. உலக இயக்கத்துக்கு உந்துவிசை அது. ஆகவேதான், ‘காதலினால் உயிர் வாழும்;-இங்கு/ காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்;/ காதலினால் அறிவு உண்டாம்,-இங்கு/ காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்’ என்கிறார் பாரதி. ‘காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்’ என்ற வரி நம்முள் முறுக்கேற்றுகிறது.

புதிய பாலம்

பாரதிக்கும் திராவிட இயக்கத்தவருக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் கெடுவாய்ப்பானது. எனினும், பின்னாளில் பாரதியை ‘மக்கள் கவி’ என்று பெயர்சூட்டித் தமிழ்ச் சமூகத்தின் உடைமையாக அண்ணா மாற்ற முயன்றது ஆரோக்கியமான முன்னெடுப்பு. ‘நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கும் வாளும்’ என்ற பாரதியின் வரியிலிருந்து கருணாநிதி தன் சுயசரிதைக்குத் தலைப்பைப் பெற்றுக்கொண்டார் என்பது பாரதி மீது அவருக்கு இருந்த பற்றை வெளிப்படுத்துவது. இப்போது, பாரதியார் நினைவுநாளை ‘மகாகவி நாள்’ என்று கொண்டாடுவது, பாரதி நினைவு நூற்றாண்டை ஓராண்டு கொண்டாடுவது, மாணவர்களிடம் பாரதியைக் கொண்டுசெல்வது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிவிப்புகள் பாரதிக்கும் திராவிட இயக்கத்தவருக்கும் இடையில் இருந்த பிளவைச் சரிசெய்வது மட்டுமல்ல ‘பாரதி தமிழ்ச் சமூகத்தின் சொத்து’ என்று எல்லோருக்கும் உணர்த்தும் செயலாகும். பாரதி அன்பர்களும் தமிழ் மக்களும் எப்போதைக்கும் இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

‘ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள்/ பொற்பைகள் ஜதிபல்லக்கு,/ வயப்பரிவாரங்கள் முதல் பரிசளித்துப்/ பல்ஊழி வாழ்க நீயே!’ என்று எட்டயபுரம் ஜமீன்தாரிடம் பாரதி வைத்த மிரட்டலான விண்ணப்பத்தை அவரும் நிறைவேற்றவில்லை; பாரதி வாழ்ந்த காலத்தில் நம் தமிழ்ச் சமூகமும் நிறைவேற்றவில்லை. ஆனால், அவர் காலத்துக்குப் பிறகு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமே முரசறைந்து கொண்டிருக்கிறது, ‘எம் கவிஞன் நீ!’ என்று! 

- பாரதி நினைவு நூற்றாண்டு கட்டுரை (2021), நன்றி: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 


பாரதி குறித்த ஆசையின் பிற கட்டுரைகளும் பதிவுகளும்:

1. பாரதியும் சூரியனைச் சுட்டிக்காட்டிய மல்பெரியும் 

2. பாரதி: பிரபஞ்சத்தின் பாடகன்

3. மக்கள் கவி பாரதியின் மகத்துவம்! அறிஞர் அண்ணாவின் கட்டுரை


மக்கள் கவி பாரதியின் மகத்துவம்! அறிஞர் அண்ணாவின் கட்டுரை


அறிஞர் அண்ணா
(தமிழில்: ஆசை)

‘மக்களின் கவி’ என்னும் பதமே கவர்ச்சியானதாகவும் முக்கியத்துவம் கொண்டதாகவும் இருக்கிறது. எனினும் இது அந்தக் கவிஞருக்கு மட்டுமே புகழ் சேர்க்கும் பட்டம் அல்ல. ஏனெனில், மக்களெல்லோரும் மன்னாதி மன்னர்களையும் மந்திரிமார்களையும் தானைத் தளபதிகளையும் ஆபத்பாந்தவன்களையும் முக்காலமும் உணர்ந்த முனிவர்களையும் புனிதர்களையும் மாயமந்திரவித்தைக்காரர்களையும் புரோகிதர்களையும் கண்டிருக்கிறார்கள். ஆனால், தங்களுக்கான கவிஞர்களை அவர்கள் கண்டதே இல்லை. காலம்காலமாக மாபெரும் கவிஞர்களெல்லாம் இருந்திருக்கிறார்கள்தான். ஆனால், அவர்களெல்லாம் வேதங்களுக்கும் பக்தி இலக்கியங்களுக்கும் வளம் சேர்ந்தவர்கள், அரண்மனைகளைத் தங்கள் கவித்திறமையால் அலங்கரித்தவர்கள். ஆனால், மக்களுக்காக மக்களின் மொழியில் கவிபாடியவர்கள் மிக மிக அரிது. 

கோயில் மணி செய்யும் வேலையையோ அரசவை முரசு செய்யும் வேலையையோதான் கவிஞர்களின் குரல் செய்துவந்திருக்கிறது. வெகு அரிதாகத்தான் மக்களின் மனதில் கிடப்பவற்றைக் கவிஞர்களின் குரல் பேசியிருக்கிறது. அப்போதும்கூட, மக்களெல்லாம் எவ்வளவு பேராசைக்காரர்களாகவும் சிற்றின்ப நாட்டமுடையவர்களாகவும் ஆகிவிட்டார்கள் என்றும் வெள்ளி என்பது எவ்வளவு பாவப்பொருள் தங்கம் என்பது கடவுளுக்கு எதிரான பொருள் என்பதுபோலெல்லாம் மக்களை இடித்துரைப்பதாகத்தான் இருக்கும். இந்தப் பிரசங்கங்களுக்கு அரச செங்கோலின் ஆசிர்வாதம் தாராளமாகக் கிடைத்தது. இப்படி கவிபாடியவர்களுக்கு தர்பாரிலும் அரசரின் பரிவாரத்திலும் உரிய காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு இடம் கிடைத்தது. தாங்கள் எங்கிருந்து கிளம்பிவந்தார்களோ அந்த மக்கள் கூட்டத்தை அவர்கள் வெறுத்ததோடு மட்டுமல்லாமல் அரசவையில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான கருவியாகத் தங்கள் கவித்திறனைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அங்கு அனுமதி கிடைத்ததும் வார்த்தைகளால் விதவிதமான மாலைகள்செய்து அரசர்களுக்கும் ஜமீன்தார்களுக்கும் சூடினார்கள். அவர்களுக்குச் சன்மானமாகக் கிடைக்கும் தங்கம் சொக்கத்தங்கமாக இருக்க வேண்டுமென்பது இதில் முக்கியம். சங்ககாலக் கவிஞர்கள் இந்த வருந்தத்தக்க நிலைக்கு விதிவிலக்கானவர்கள், ஆனால் இன்றைய நம் மக்களால் அவ்வளவாக அறியப்படாத கவிஞர்கள் அவர்களே.

கவிஞர்கள் அறம், தர்மம் போன்றவற்றின் விற்பனையாளர்களாக தங்களின் கவிதைகளில் மாறினார்கள். அல்லது இன்ப உணர்ச்சியின் வணிகர்களாக மாறினார்கள். மக்களின் கவிஞர்களாக இருப்பதென்பது அவ்வளவாக லாபகரமானது அல்ல என்பதை அறிந்திருந்தார்கள். சங்ககாலத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் பிரமாதமான மக்கள் கவிஞர் எவரையும் நாம் காணவில்லை என்பதற்கு அதுதான் காரணம்.

அறம், தர்மம் போன்றவையெல்லாம் அவ்வுலகு வாழ்வின்பத்துக்கான முதலீடாகப் பார்க்கப்பட்டன. அதனால்தான் இந்தப் பொய்யான, தீங்கான வேதாந்தத்தைப் பிரச்சாரம் செய்தவர்களுக்குப் பிறகு வந்தவர்களும் அதைப் பின்பற்றி, அதற்குத் தங்களைத் தாங்களே முகவர்களாக நியமித்துக்கொண்டார்கள். இப்படி வந்தவர்களின் கவிதைகளெல்லாம் மிகவும் தரமானவையாகவும் சிறப்பானவையாகவும் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. எதுகை, மோனை, சொல்வீச்சு எல்லாம் அபாரம்தான். பகுத்தறிவுதான் அடிபட்டுப் போனது. மக்களைவிட தங்களை உயர்ந்தவர்களாகக் கவிஞர்கள் கருதிக்கொண்ட நிலை அது. இந்தச் சூழலில்தான் பாரதியின் வருகை நிகழ்கிறது.


இரண்டு யுகங்களுக்கு நடுஎல்லையில் பாரதி பிறக்கிறார். தனது சொந்தப் பிராந்தியத்தில் நிலவுடைமை முழுவீச்சில் இருக்கிறது. குடிசைகள் சூழப்பட்டதாக இருக்கிறது எட்டயபுர சமஸ்தானத்தின் அரண்மனை. காலங்காலமாகத் தொடர்ந்துவரும் சாதியச் சமூகமும் முழு அதிகாரத்தில் இருக்கிறது. இந்தப் பக்கம் நிலவுடைமை அந்தப் பக்கம் சனாதனம் என்ற சூழலில் ஒரு பிராமணக் குடும்பத்தில்தான் பிறக்கிறார் பாரதி. இத்துடன், நவீனத்துவமும் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும் வேளை, தொழில்புரட்சியின் அதிகாலைப் பொழுதும்கூட. புதிய யுகத்தைப் பழைய யுகம் துயர் நிரம்பிய கண்களுடன் எதிர்கொள்கிறது. புதுயுகத்தின் தோற்றமே பழைய யுகத்துக்குச் சவால் விடுக்கிறது. அப்படிப்பட்ட யுகத்தில் பிறந்த பாரதி பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான போர்க்களத்தின் மாபெரும் போராளியாக உருவெடுப்பார் என்று யாராலும் அப்போது கற்பனை செய்திருக்க முடியாது. ஏனெனில், பழைய சமூகத்தின் கட்டமைப்புக்குப் பொருத்தமான ஒரு இடத்திலேயே அவரது பிறப்பு நிகழ்ந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பாரதி பிறந்தேவிட்டார், இப்படிப்பட்ட ஒரு நாட்டில், வரலாறு மிக மெதுவாக நகரும் ஒரு நாட்டில், அதற்கு விசையுடனான ஒரு உந்தித்தள்ளல் கிடைத்தால் வேகமாக நகரும் என்ற நிலை கொண்ட ஒரு நாட்டில். மக்களின் கவிஞராக இப்படிப்பட்ட வேகமான ஒரு உந்தித்தள்ளலை அவர் நம் நாட்டின் வரலாற்றுக்குக் கொடுத்தார் என்பதில்தான் அவரது மகத்துவம் பெரும்பாலும் அடங்குகிறது.

பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல. அவர் மக்கள் கவிஞர் என்பதால் அவர் நிச்சயமாக மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும் கூட. அந்நியரின் ஆதிக்கத்தைக் கண்டு கொதித்துப்போனார், அவர்களை நம் நாட்டிலிருந்து விரட்ட நினைத்தார் என்பதெல்லாம் சரிதான். ஆனால், அவருடைய லட்சியம் அதுவல்ல. உலகத்தின் கண் முன்னால் நம் நாட்டின் மதிப்பை உயர்த்துவதும், ஆணும் பெண்ணும் அனைவருமான ஒரு புதுவகை மனிதர்களால் ஆன ஒரு நாட்டை அவர் கட்டியெழுப்ப நினைத்தார். மக்களெல்லாம் அச்சத்தில் உறைந்திருக்கக் கண்டார். ஒவ்வொருவரின் முகத்திலும் அச்சமானது அச்சிடப்பட்டிருந்தது. ‘அவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே’. துப்பாக்கி வைத்திருக்கும் அந்நியர்களைப் பார்த்து மட்டுமே அவர்கள் அஞ்சவில்லை. சுலோகங்களைச் சொல்லிக்கொண்டிருக்கும் தங்கள் நாட்டின் சகோதரர்களைக் கண்டும் அஞ்சினார்கள். பேய்களையும் ஆவிகளையும் கண்டு அஞ்சினார்கள்.

இப்படிப்பட்ட மக்களால் தங்கள் நாட்டுக்கான விடுதலைப் போராட்ட வீரர்களாக ஆக முடியாது. ஆகவே, தன் நாட்டு மக்களை அச்சத்திலிருந்தும் தாழ்வு மனப்பான்மையிலிருந்தும் விடுவிக்க முனைந்தார் பாரதி. அவர்கள் மனதில் நம்பிக்கையையும் துணிவையும் விதைத்தார், அவர்களுக்கும் மறைந்துகிடந்த ஆற்றல்களையெல்லாம் வெளியில் எடுத்துவந்து அவர்கள் முன்னே வைத்துக்காட்டினார். இப்படிப்பட்ட உள்ளார்ந்த ஆற்றலானது மக்கள் கூட்டத்தின் உறக்கத்தாலும் அப்பட்டமான அறியாமையாலும் மூடநம்பிக்கையாலும் அவர்களின் தாழ்வு மனப்பான்மையாலும் எப்படியெல்லாம் வீணடிக்கப்பட்டுவந்திருக்கிறது! இதையெல்லாம் மிகத் தெளிவாகக் கண்டுகொண்ட பாரதி இந்தத் தீமைகளின் ஆணிவேர்களைப் பிடுங்கியெறிய துணிவுகொண்டார். மக்கள் கவிஞர் ஒருவரால் மட்டுமே மக்களின் இப்படிப்பட்ட பிரச்சினைகளின்மேல் இவ்வளவு ஆழ்ந்த அக்கறை கொள்ள முடியும்.

பாரதிக்கு நன்றாகத் தெரியும், இது எளிய மனிதர்களின் யுகம் என்பதும் ஜனநாயகத்தின் யுகம் என்பதும். ஆகவே, விடுதலைக்காக மக்கள்தான் போராட வேண்டும் என்று விரும்பினார். அவர் வெறுமனே கடவுளர்களை நோக்கிப் பக்தி பாமாலைகளாக வீசிக்கொண்டிருக்கவில்லை; சமஸ்தானங்களை நோக்கி சீட்டுக்கவி மட்டுமே எழுதிக்கொண்டிருக்கவில்லை. ஏருழும் உழவனை நோக்கிப் பாடினார், தொட்டிலை ஆட்டிக்கொண்டிருந்த தாயை நோக்கிப் பாடினார், மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளையை நோக்கிக்கூட பாடினார். தாயகத்தின் விடுதலைக்காக வேதங்களிலிருந்தோ பழங்கால இலக்கியங்களிலிருந்தோ –பழங்காலக் கவிஞர்களைப் போல- மேற்கோள் காட்டிப் பேசவில்லை. முக்கியத்துவம் வாய்ந்த உலக நிகழ்வுகள், தொலைதூர நாடுகளின் சுதந்திரப் போராட்டங்கள் போன்றவற்றை சாதாரண மக்கள் முன்னே எடுத்துவைத்துப் பேசினார். பெருமக்கள் திரட்சியின் எழுச்சியினூடாக, மாஜினியின் பெருமுயற்சியின் பேரில், இத்தாலியில் சுதந்திரப் போராட்டத்தில் விடிவெளிச்சம் எப்படி விழுந்தது என்பதை பாரதி தன் மக்களுக்கு எடுத்துக்கூறினார். 

புரட்சிக்குப் பிந்தையை பிரான்ஸைக் குறித்து வண்ண வண்ணச் சொற்சித்திரம் தீட்டினார். ஜார்களின் கொடுங்கோன்மையிலிருந்து தளையறுத்துவிட்டுப் புத்தம் புதியதாக மினுக்கிய ரஷ்யாவின் புதுச் சித்திரத்தை முன்வைத்தார். இப்படியே சுதந்திர பெல்ஜியம், சுதந்திர பிரான்ஸ், செங்கொடி பறக்கும் ரஷ்யா என்பவைதான் பாரதி முன்வைத்த சித்திரங்களே தவிர இந்திரன் அல்லது பிரம்மனின் ஆன்மிக நாட்டின் சித்திரத்தையல்ல. மேலும் தன்நாட்டு மக்கள் ஃபிஜி தீவுகளில் படும் துயரத்தைக் கண்டும் ஒரு எழுத்துச் சித்திரம் தீட்டி, ஷேக்ஸ்பியரைப் போலவே கேள்வி எழுப்பினார், ‘கரும்புத் தோட்டத்திலே - ஆ! கரும்புத் தோட்டத்திலே/ அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி வருந்துகின்றனரே!’ என்று. 

அவன்தான் மக்கள் கவிஞன். தன் நாட்டு மக்களின் தவறுகளையும் தீயகுணங்களையும் சுட்டிக்காட்டுவதற்கும் துளியளவு கூட அச்சம் கொள்ளாதவன், மற்ற நாடுகளில் உள்ளவர்கள் எவ்வளவு வேகமாக மேன்மையான ஒரு எதிர்காலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்க நாமெல்லாம் சிந்தனையிலும் செயலிலும் எவ்வளவு மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டத் தயங்காதவன். சமூக அடுக்கில் மேல்நிலையில் இருப்பவர்களைக் கண்டு அவர் அஞ்சவில்லை. மக்களுக்கு முன்னால் எல்லா உண்மைகளையும் எடுத்துவைப்பதிலும் தடுமாறவில்லை.

மக்களின் கவிஞராக அவரது கடமையென்பது எப்போதெல்லாம் கபடமும் வஞ்சகமும் கண்ணில் படுகிறதோ அப்போதெல்லாம் அவற்றைத் தோலுரித்துக் காட்டுவது, அதை பாரதி மிகுந்த துணிவுடனும் உற்சாகத்துடனும் செய்தார்.

உள்நோக்கம் கொண்ட சிலர் பாரதியின் சித்திரத்தை விரிவானதாக, அதாவது தேசிய கவியாக, விரிக்க நினைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்தச் சித்திரத்தை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதால் அல்ல, மக்களின் கவிஞர் என்ற பாரதியின் இன்னொரு சித்திரத்தை தேசிய கவி என்ற பிரம்மாண்டமான சித்திரம் மறைக்க உதவும் என்பதற்காகத்தான் இம்முயற்சி.  

பாரதியின் கவிதைகள் கொட்டும் குளவிகள் மட்டுமல்ல. இந்த மக்கள் கவியானவர் தனது நாட்டின் பழைமைவாத மரபுகள், சிந்தனைகள் போன்றவற்றைத் தோலுரித்துக் காட்டத் தயங்கியதே இல்லை. பழமையில் ஊறியவர்களை ‘அறிவீலிகாள்’ என்று கடுமையான சொற்களைக் கொண்டே வசைபாடுகிறார். மாயாவாதத்தையும் கடுமையாக எதிர்த்து மரபுவாதிகளின் கோபத்துக்கு ஆளாகிறார். மாயாவாதம் நம்மைச் செயலற்றுப் போகச் செய்துவிடும் என்கிறார்.

பசி, வறுமை, அறியாமை இவை மூன்றையும் தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்கிறார். பணம்படைத்தோரின் கொடுமைகளுக்கு எதிராகத் தனது ஆற்றல்மிகுந்த குரலை எழுப்புகிறார், ‘தனியொரு மனிதனுக்கு உணவில்லை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்கிறார். தனது நாட்டு மக்கள் நிறைவாழ்வு வாழ்ந்து, தங்கள் அறிவுப் புலன்களை மேம்படுத்திக்கொண்டு, வணிகத்தில் சிறந்து விளங்கி, தங்கள் மண்ணைத் தொழில்மயமாக்கி, புதுயுகத்தின் எல்லாப் பலன்களையும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவரது மதம் என்பது அர்ச்சகர்கள், சுலோகங்கள் பாடுதல் போன்றவற்றைச் சார்ந்ததன்று, மானுடத்துக்கும் சகோதரத்துவத்துக்கும் சேவை செய்வதே அதன் விரிவான பொருளில் அவருக்கு மதமாகப் பொருள்படும்.

மக்கள் கவிஞனுக்கு முன்னுள்ள பணி, மிகவும் பெரியது. புது உண்மையை மக்கள் உணரும்படிச் செய்வது, புதுப் பாதையைத் தேர்ந்தெடுக்கச் செய்வது, எல்லாவற்றையும் மதிப்பிடுவதற்குப் புதுவழிமுறையைத் தேர்ந்தெடுக்கச் செய்வது ஆகியவைதான் ஒட்டுமொத்தமாக அவனது பணிகள். ஜோசியர் கையிலிருந்து விடுவித்து வானியல் அறிஞர் முன்பு மக்களை நிறுத்துவதுதான் அவருடைய வேலை. மக்களின் மனதிலிருந்து ரசவாதியை விரட்டிவிட்டு ரசாயன அறிவியல் அறிஞரை அங்கு குடிபுகச் செய்வதுதான் அவருடைய வேலை. புரோகிதர்களைப் புறக்கணித்துவிட்டு அந்த இடத்தில் ஆசிரியர் வந்தமர்ந்துகொள்ள வழிவகை செய்வதுதான் அவருடைய வேலை. சித்துவேலைக்காரர்களை விரட்டிவிட்டு அந்த இடத்துக்கு உண்மையான மருத்துவர்களை வரச் செய்வதுதான் அவருடைய மாபெரும் வேலை. மூடநம்பிக்கையை எதிர்த்துப் போராடினால்தான் அறிவியல் தழைத்தோங்கும். சுருங்கச் சொல்வதெனில், மக்களின் கவிஞருக்கு ஒரு புரட்சியாளரின் பணி முன்னிற்கிறது, இன்னும் சொல்லப்போனால் புரட்சியாளரைவிட கடினமான பணி அது. ஏனெனில், மக்கள் பொதுவாகக் கொடுங்கோலர்களையே தங்களின் ரட்சகர்களோ என்று தவறாக நினைத்துவிடக்கூடியவர்கள். இந்தப் போரில் மிகுந்த தீரத்துடன் பாரதி போரிட்டார். 

போர் இன்னும் முடிந்துவிடவில்லை என்றாலும் அவர் தற்போது உயிரோடு இல்லையெனினும் அவர் நமக்குச் சிந்தனையின் ஆயுதசாலையைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார், இந்தப் போரை முடித்துவிடக்கூடிய கையளிப்பு அது. மக்களின் கவிஞருக்கு ஒருவர் செய்யக்கூடிய மிகச் சிறந்த புகழாஞ்சலி எதுவாக இருக்குமென்றால் இந்தப் போரைத் தொடர்வதில்தான், மக்கள் விடுதலைக்காகப் போரிடுவதில்தான், அதன் மேன்மையான, முழுமையான அர்த்தத்தில். இதைச் செய்துமுடிக்கும் திறன் படைத்தோர் நம்மிடையே இருக்கிறார்கள், போர் முடிக்கப்படும் உறுதியாக!  


பாரதி குறித்த ஆசையின் கட்டுரைகள்:

1. பாரதியும் சூரியனைச் சுட்டிக்காட்டிய மல்பெரியும் 

2. பாரதி: பிரபஞ்சத்தின் பாடகன்

3. பாரதீ: எம் கவிஞன் நீ!

 


Sunday, November 26, 2023

*புகைப்பிடித்தல் கனவுக்குக் கேடு



சிகரெட்
முறிந்துபோவதைவிட
துயரமானது
சிகரெட்
முறிந்துபோவதுபோல்
கனவு வருவது

மறுசிகரெட் வாங்குவதற்கு
கனவு நம்மை
அனுமதிப்பதே இல்லை
       -ஆசை 

Wednesday, November 22, 2023

சொன்னால் கேள்



உண்டாலம்ம
உன்னாலில்லை இவ்வுலகு
உனக்காகவும் இல்லை
இவ்வுலகு
மாபெரும் இயந்திரமும்
இல்லை நீ
மாபெரும் இயந்திரத்தின்
முட்டாள்தனமான பற்சக்கரமும்
இல்லை நீ
அதன் பற்களிலொன்றும்
இல்லை நீ
இரண்டு பற்சக்கரங்களுக்கிடையே
அரைபடும்
கரும்புமில்லை
துரும்புமில்லை நீ
இன்னொன்று சொன்னால்
கோபம் கொள்வாய் நீ
இரண்டு பற்சக்கரங்கள்
வெறுமனே ஓடும்போது
இடையே பிதுங்கி
இல்லாமல் ஆகும்
வெறுமையும் இல்லை
நீ
       -ஆசை 

Friday, November 17, 2023

ஓர் அறிவிப்பு!



க்ரியா ராமகிருஷ்ணனின் மூன்றாவது நினைவு நாள் இன்று! இந்த நாளை ஒட்டி என் வாழ்வின் முக்கியமான ஓர் அறிவிப்பு இதோ. ‘மாயக்குடமுருட்டி’ என்ற தலைப்பில் நான் எழுதிவரும் நெடுங்காவியத்தின் பெயரை ‘காவிரியம்’ என்று மாற்றியிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் எல்லோருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். ‘காவிரியம்’ நெடுங்காவியத்தின் முதல் நூலாக ‘மாயக்குடமுருட்டி’ வெளிவரும். எப்போது வெளிவரும் என்ற தகவல் பிறகு அறிவிக்கப்படும். 

**

என் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியவரும் முக்கியமான விழுமியங்களை எனக்குக் கற்றுத்தந்தவருமான ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மறைந்து இன்று மூன்று ஆண்டுகாள் நிறைவடைகின்றன. 20 ஆண்டுகால நட்பு எங்களுடையது. இதில் 10 ஆண்டுகாலம் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். செய்யும் செயலையே முக்கியமானதாகக் கருதி, தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர் அவர். தினசரி அவரிடம் படித்த பாடங்கள் எவ்வளவோ. ஒருமுறை ‘க்ரியா’ அலுவலகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ராமகிருஷ்ணன் எடுப்பதற்கு முன்பு நான் எடுத்துவிட்டேன். மறுமுனையில் ஏதோ கேட்டதற்கு நான் ‘என் பாஸ் ராமகிருஷ்ணனைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்’ என்று பதில் அளித்தேன். நான் பேசியதை கவனித்த ராமகிருஷ்ணன். மதியம் சாப்பிட்ட பிறகு பால்கனியில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தபோது (இறப்புக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே சிகரெட்டை நிறுத்திவிட்டார்) என்னை அழைத்தார். ‘ஆசைத்தம்பி, இனிமே யார் கேட்டாலும் என்னை பாஸ் (முதலாளி) என்று சொல்லாதீர்கள், Colleague (சக பணியாளர்) என்று சொல்லுங்கள்’ என்றார். இது ஒரு பானை சோற்றில் ஒரு பதம்தான். அவருடன் எத்தனையோ விஷயங்களில் நான் வேறுபட்டிருக்கிறேன். சண்டை போட்டிருக்கிறேன். எங்கள் ரசனையிலும் நிறைய மோதல் உண்டு. என்றாலும் வாழ்க்கைக்கான முக்கியமான படிப்பினைகள் பலவற்றையும் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். வாழ்க்கை குறித்த, கலை, இலக்கியம் குறித்த என் பார்வைகளை விரிவுபடுத்தியிருக்கிறார். அதே நேரத்தில் அவருடைய தாக்கத்திலிருந்து உரிய இடங்களில் உரிய நேரத்தில் விடுபடுவதும் என் ஆளுமை வளர்ச்சிக்கு அவசியம் என்று விடுபட்டும் வந்திருக்கிறேன்.

எனக்கு 24 வயது நடக்கும்போதே என் மீது நம்பிக்கை வைத்து முக்கியமான பதிப்புப் பணிகளிலும் அகராதிப் பணியிலும் அவர் என்னை ஈடுபடுத்தியது எனக்கு ரொம்பவும் பெரிய விஷயம். சிறிய ஊரிலிருந்து சென்னைக்கு வந்து, தாழ்வு மனப்பான்மையால் பீடிக்கப்பட்டு எங்கும் செல்லாமல் யாருடனும் பழகாமல் இருந்த ஒருவன் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துப் பெரும் பொறுப்புகளை ஒப்படைத்தது எனக்குப் பெரிய உந்துசக்தியாக இருந்தது. ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (2008-ம் பதிப்பு), ‘A Handbook of Tamil Verbal Conjugation’ (2009) ஆகிய பெருநூல்களின் ‘துணை ஆசிரியர்’ பொறுப்பை எனக்கு வழங்கினார். இத்தனையும் எனது முப்பது வயதுக்குள். என் கவிதைகள் மீது என்னை விட அதிக நம்பிக்கை கொண்டிருந்தவர் அவர்.

அவர் மறைந்ததை என் ஆழ்மனம் ஏற்றுக்கொள்ளவேயில்லை. அவர் இன்றும் என்னுடன் இருப்பதுபோன்ற உணர்வுதான். ஆனாலும், அவரை நேரில் பார்க்க முடியவில்லையே, அவர் குரலைக் கேட்ட முடியவில்லையே என்ற ஏக்கமும் சூழ்ந்துகொள்கிறது. தமிழ்ச் சமூகத்துக்குப் பெரும் பணியாற்றிவிட்டுச் சென்றிருக்கும் அவரை வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும்!

‘காவிரியம்’ (மாயக்குடமுருட்டி) நெடுங்காவியம் நோக்கி நான் வந்திருப்பதில் அவருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஆகவே, அதற்குப் பெயர் சூட்டுவதற்கு அவருடைய நினைவுநாளான இன்றைய நாளைவிட  மிகவும் பொருத்தமான ஒன்று வேறெதுவும் இருக்காது. ‘காவிரியம்’ விரியும்!

Saturday, November 11, 2023

சிங்காரத்தின் மாபெரும் சிக்ஸர்



உள்ளூர்ப் போட்டியில்
சிக்ஸர்களாய் அடித்து
எங்கள் தெருவுக்கு
வெற்றிதேடித் தந்தவன் சிங்காரம்
பரிசாய்க் கிடைத்த
மூன்னூறு ரூபாயில்
தெருவுக்கே புது மட்டை
வாங்கிக்கொடுத்தவன்
சிங்காரம்
பகலில்
கிரிக்கெட் மைதானமாகவும்
இரவில்
கேரம் மைதானமாகவும்
மாறிப் போகும்
அவன்
வீட்டு வாசல்
எல்லா நேரத்திலும்
இளமையின்
வர்ணனை மைதானமாக
இருக்கும் அது
கிரிக்கெட்டையும்
இளமையையும்
தெருவையும்
ஒன்றாகப் பறித்துக்கொண்டதன்
பெயர் என்னவென்று தெரியவில்லை
ஊருக்குப் போகும்போது
எப்போதாவது
சிங்காரத்தைப் பார்ப்பதோடு சரி
படிப்பு இல்லையென்றாலும்
வெளிநாடு போய்ச் சம்பாதித்து
அதில் பாதி இழந்து
பின் சொந்தமாய் ஒரு மர இழைப்பகம்
பெரிய கோயிலுக்கு அருகில்
கணினியில் வடிவமைத்து
ஆணையைத் தட்டும்போது
உள்ளே அவனுடைய சிஎன்ஸி இயந்திரம்
சிக்ஸர்களாய் அடிக்க ஆரம்பிக்கும்
வாழ்வை
அப்படித்தான் அனுதினமும்
வென்றுகொண்டிருந்தான்
கடைசியாய் ஊருக்குப் போனபோது
சிங்காரத்தின் மரணச் செய்தி
தடுக்கிப் பின்பக்கமாக விழுந்து
தலையில் அடிபட்டுச்
செத்துப்போனதாய்க் கேள்வி
இளம் மனைவி
வயிற்றில் பிள்ளை
அது இன்னேரம் பிறந்திருக்கும்
ஆணோ பெண்ணோ
எங்கிருக்கிறது தெரியவில்லை
தன் அப்பா அடித்த
சிக்ஸர்களை
அது பார்த்திருக்க வேண்டுமே
அது இருந்திருந்தால்
பரிசில் பங்கு பிரித்துக்கொண்டு
பொம்மை வாங்கிக்கொடுத்திருப்பான்
சிங்காரம்
மிச்சப் பணத்தில்
தண்ணி அடித்திருப்போம்
நாங்கள்
இப்படித்தான் பல நேரங்களில்
நேரிடுகிறது
சிங்காரம் சிக்ஸர் அடித்ததைப் பார்க்க
அப்போது அவன் குழந்தை இல்லாததைப் போலவும்
அவன் அடித்த சிக்ஸர்
அவனது எல்லைக்கோட்டைத் தாண்டிப்போய்
எங்கோ இப்போது கொட்டக் கொட்டக்
கண்ணை உருட்டிக்கொண்டிருப்பதைப் பார்க்க
சிங்காரம் இல்லாததைப் போலவும்

-ஆசை 

(மறைந்த நண்பன் சிங்காரத்தின் பிறந்தநாள் கவிதை)

Friday, November 10, 2023

நான் வெறுங்கையால் பறப்பது உங்களுக்கு வியப்பில்லையா



ஏரிக் கரை மீதமர்ந்த சாலைக்கு
இணையாக
விசைப் படகு செலுத்தினான்
அவன்

அவனைப் பார்த்து
எழுந்து இரு கைகளையும் அசைத்துப்
பறக்க ஆரம்பித்து
அந்தரம் சென்று
அதன் பின் 
தரைமனிதர்களை
மனம்நிறை செருக்குடன்
ஒரு நோட்டம் விட்டேன்

யாரும் கண்டுகொள்ளவில்லை
என்னை

ஒரு மனிதன்
வெறுங்கைகள் வீசிப் பறப்பதொன்றும்
வியப்புக்குரிய நிகழ்வில்லையா
என்பதுதான்
எனக்கு வியப்பு

அவன் 
அப்படியில்லை
படகு செலுத்திக்கொண்டே
தலைநிமிர்த்தி
ஆம் தலைநிமிர்த்தி
என்னைப் பார்த்தான்
அவன் புன்னகை 
இவ்வளவு உயரத்திலிருந்தும் 
தெரிகிறது

நான் பறப்பது தெரிகிறதா
என்று கூவிக் கேட்டேன்
தலையாட்டினான்

எனக்காக ஒன்று செய்ய முடியுமா
நான் பறப்பது 
இவர்களுக்குத் தெரியவில்லை

இன்னும் சொல்லப்போனால்
இவர்களுக்குத் தெரியாததாலோ
அல்லது
இவர்கள் பொருட்படுத்தாதாலோ
நான் பறக்கிறேன்
என்பது குறித்து
எனக்கே ஐயம் ஏற்படுகிறது

உன் கைபேசியில்
என் பறத்தலைப்
படம் பிடிக்கிறாயா
என்று கேட்டதற்கு
மறுப்பேதும் பேசாமல்
புன்னகை மாறாமல்
ஒரு கையால் படகு செலுத்திக்கொண்டு
இன்னொரு கையால் 
கைபேசியில்
படமெடுக்க ஆரம்பித்தான்

அவன் படமெடுக்கிறான் என்ற
மகிழ்ச்சியே
மிச்ச தொலைவின் பறத்தலுக்குக்
கையசைக்கும் தேவையை
இல்லாமலாக்கியது

ஆழ்போலிக் காலத்தில்
இப்படத்தை 
என் பறத்தலை 
யார் வேண்டுமானாலும் மறுக்கலாம்
ஆனால் என்னால் இனி 
மறுக்க முடியாது
அதற்குத்தான் இந்தப் படம்

அவனுக்கு முன்பே ஏரியைத் 
தாண்டிவிட்டேன்

மகிழ்ச்சியிடமிருந்து
என்னை விடுவித்துக்கொண்டு
என் பறத்தலை
அதில் மட்டும் இருக்கும்
என் இருத்தலை
மெய்ப்பிக்க மட்டும் காத்திருக்கும்
தரைக்கு வந்த பிறகு
அவன் என்னிடம் வந்து
கைபேசி தந்தான்

படத்தை ஓட விட்டபோது
தொடக்கத்தில்
கோணச் சமனின்மையில்
ஆடிய காட்சிகள்
பிறகு நிலைபெற்றன
ஒரு தவக்களையின் மீது

தரையில் உள்ள
தவக்களையின் மீது

அது தவ்வித் தவ்வி
ஒரே இடத்தில்
குதித்துக்கொண்டிருந்தது

அதன் பின்
முழுப் படமும் அதேதான்

நான்
நான்
நான் எங்கே

நாக்குழறி
தடுமாறித் தடுமாறிக் கேட்டேன்
அவனிடம்

நீதான்
அது என்றான் அவன்

நான் தவக்களை அல்லவே
மேலும்
நான் பறந்தேனே
நீயும் ஒப்புக்கொண்டாயே
என்று கேட்டதற்கு

ஆமாம் நீ தவக்களை அல்லதான்
மேலும்
நீ பறந்தாய்தான்
நானும் ஒப்புக்கொண்டேன்தான்
என்றான்

அப்படியென்றால்
இதில்
இதில்
இதில்
தவக்களையல்லவா
இருக்கிறது
விடாமல் தவ்வித் தவ்விக் குதிக்கிறது
என்று கேட்டதற்கு

நீ உன்னை நம்புகிறாயா
என்னை நம்புகிறாயா
இந்தத் தவக்களையை நம்புகிறாயா
என்று திருப்பிக் கேட்டான்
           - ஆசை
           - நன்றி: ‘காலா பாணி’ வலைத்தொடருக்கு  

Tuesday, November 7, 2023

கமல்: தமிழ் சினிமாவின் ராஜபார்வை

 


ஆசை

(கமலின் 60-வது பிறந்த நாளுக்கு எழுதிய கட்டுரை)

கமலுக்கு 60 வயது. நம்புவதற்கு மனம் மறுக்கிறது. நம்மில் 30 வயதைக் கடந்தவர்களில் ஆரம்பித்து 60 வயதை எட்டியவர்கள் உட்பட பலருடைய இளமைப் பருவத்துக் கனவுகளின், காதலின், சாகசத்தின் திரைவடிவமாக உலவிய ஒருவருக்கு 60 வயது ஆகிவிட்டது என்பது நம் இளமைக்கு எதிராகக் காலம் செய்த சதி என்றுதானே சொல்ல வேண்டும்! அறிவுஜீவிகளில் பெரும்பான்மையினருக்கு உவப்பானவராக கமல் இன்று இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் உள்ளிட்ட பலரின் இளமைக் காலமல்லவா கமல்!

தன்னுடைய 6-வது வயதில் களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமாகி, தற்போதைய ‘பாபநாசம்’ வரையிலான 54 ஆண்டு காலப் பயணம் என்பது குறுகிய காலம் அல்ல. அப்போது சிறுவனாக ‘களத்தூர் கண்ணம்மா’ பார்த்த ஒருவர், இப்போது ‘பாபநாசம்’ படத்தைப் பார்க்க, தன் பேரன், பேத்திகளோடு போகக் கூடும். இந்த நீண்ட காலகட்டத்தில் (சிறுவனாக நடிக்க ஆரம்பித்து, பதின்பருவம் வரையிலான காலம் நீங்கலாக), கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தமிழ் சினிமாவில், தமிழர்களின் வாழ்க்கையில் கமல் தவிர்க்க முடியாத ஒரு பாகமாக இருந்துவந்திருக்கிறார். ஒவ்வொரு தலைமுறைக்கும் மிகச் சிலர்தான் அந்தத் தலைமுறையின் நினைவுகளின் தொகுதியாக இருப்பார்கள். அந்த வகையில் கமல் இரண்டு தலைமுறைகளின் நினைவு.

புதுமையின் நாயகன்

தமிழ்த் திரைப்படத்தைப் பொறுத்தவரையில் கமலும் புதுமையும் பிரிக்க முடியாத இரண்டு பெயர்கள். நாடக மரபிலிருந்து வந்தவர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் வெகு காலமாக ஆட்சிசெய்துகொண்டிருந்ததால், கமலின் வருகைக்கு முன்பு தமிழ்த் திரைப்படங்களெல்லாம் நாடகங்களாகவே இருந்தன. கமலும் நாடகப் பின்னணியிலிருந்து வந்தவர்தான். ஆனாலும், மாறும் காலத்தின் ஒரு பிரதிநிதி அவர். அவர் திரைத் துறையில் நட்சத்திரமாக வலம்வர ஆரம்பித்த காலத்தில் மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, இளையராஜா போன்றவர்களும் தங்கள் கணக்கைத் தொடங்கியது பெரும் வியப்பு. இவர்கள் அனைவரும் ஒன்றாகக் களமிறங்கிய காலத்தில்தான் தமிழ் வெகுஜன சினிமாவில் புதுமையின் பொற்காலம் ஆரம்பித்தது. மேற்கண்ட பெயர்களில் மகேந்திரன் தவிர, அனைத்துக் கலைஞர்களின் ஆரம்ப கால முயற்சிகளில் கமலும் இருந்திருக்கிறார். அந்தக் காலத்தில், நல்ல திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற தாகத்துடன் வருபவர்கள் இயல்பாகவே கமலை நாடுவார்கள். அவர்களால் கமலும், கமலால் அவர்களும் பலனடைந்தார்கள்.

கமல் தரும் பொறி

நடிப்பு மட்டுமே திரைப்படம் இல்லை என்பதை அறிந்திருந்ததால், திரையுலகின் பெரும்பாலான துறைகளில் கமலுக்குத் தேர்ச்சி இருந்தது. காலம்தோறும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டே வந்தார். தான் கற்றுக்கொண்டதைத் திரையிலும் பிரதிபலித்தார். இந்தப் புதுமைகள் வழியாகத் தனது ரசிகர்களின் அறிவையும் ரசனையையும் மேலே மேலே கொண்டுசென்றபடியே இருக்கிறார் கமல். ‘ஓடிவிளையாடு பாப்பா’, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ போன்ற பாடல்களைத் தாண்டி, பாரதியின் பாடல்கள் பரிச்சயமாகாதிருந்த பலருக்கு ‘மகாநதி’யில் கமல் சொன்ன ‘தேடிச் சோறு நிதம் தின்று’ கவிதை பாரதி மீது பைத்தியம் கொள்ள வைத்தது. இப்படியாகப் பல விஷயங்களில் கமல் ஒரு பொறியைத் தருவார். அந்தப் பொறியை ஊதி ஊதிப் பெரும் தீயாகப் பெருக்கும் ஒருவர், ஒரு கட்டத்தில் கமலை விட்டு விலகிப் போய்விடுவார் என்பது நியதி. அதேபோல், கமல் கொடுத்த பொறியையே பெரிதாக நினைத்துக்கொண்டிருப்பவர் கமல்தான் உலகின் உச்சம் என்று கருதுவார்.

கமலின் விருந்து

தனது குழந்தைப் பருவத்தையும் இளமைப் பருவத்தையும் கமலின் திரைப்படங்களோடு கழித்த ஒருவருக்குச் சந்தேகமில்லாமல் கமல் பெரும் விருந்தே படைத்திருக்கிறார். இதில் வெகுஜன திரைப்படம், கலைத்தரம் மிக்க வெகுஜனத் திரைப்படம், மாற்றுத் திரைப்பட முயற்சிகள் எல்லாமே அடங்கும். இந்த மூன்று வகைகளிலும் கமல் ரசிகர்களுக்கு அதிகமாகத் தீனி போட்டவை என்று இந்த 20 படங்களைக் குறிப்பிடலாம்: 16 வயதினிலே, அவள் அப்படித்தான், சிகப்பு ரோஜாக்கள், மூன்றாம் பிறை, நினைத்தாலே இனிக்கும், ராஜபார்வை, சகலகலா வல்லவன், சலங்கை ஒலி, நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், குணா, தேவர் மகன், மகாநதி, குருதிப்புனல், இந்தியன், ஹேராம், அன்பே சிவம், விருமாண்டி.

கமலால் ஏன் முடியவில்லை?

உலக சினிமா எல்லோருடைய பென் டிரைவுக்குள்ளும் வந்துவிட்டது. எனவே, எல்லோருமே சினிமா விமர்சகராக மாறி, கமலைக் குறைகூறுவது வழக்கமாகிவிட்டது. சராசரி ரசிகர்களுக்கு உலக சினிமா எட்டாமல் இருந்த காலத்தில்சினிமா ரசனையையும் உலக சினிமாவையும் பற்றி, வெகுஜன சினிமாவுக்குள்ளேயிருந்து பேசிக்கொண்டிருந்த ஒருசிலருள் கமலும் ஒருவர் என்பதை மறந்துவிட முடியாது.

‘முழுக்க உலகத் தரத்திலான ஒரு திரைப்படத்தை கமலால் ஏன் எடுக்க முடியவில்லை?’ என்பதுதான் அவருடைய விமர்சகர்கள் பெரும்பாலானோருடைய கேள்வி.

இது போன்ற கேள்வியை அவர்கள் அநேகமாக கமலிடம் மட்டுமே எழுப்பினார்கள் என்பதைக் கொண்டு அதை ஒரு ஆதங்கமாகவும், கமல்மீது உள்ள உரிமையில் எழுந்த கோபம் என்றும் கருத முடியும்.

கலைப் படங்களை எடுக்க விரும்பியவர் அல்ல கமல். கலைப்படங்களை உள்வாங்கிக்கொள்ளும் கலாச்சாரங்களில் ஒன்றோ, கலைப்படங்கள் வெற்றிகரமாக ஓடும் நாடுகளில் ஒன்றோ அல்ல நம்முடையது. சிறுபான்மையினராக இருக்கும் அறிவுஜீவிகள் சினிமாவைத் தூய்மையான கலை வடிவமாகப் பார்க்கிறார்கள். பெரும்பான்மை மக்களுக்கோ சினிமா என்பது கொண்டாட்டம், துயரங்களின் வடிகால், கனவுகளின் பதிலீடு. இங்குதான் கமல் வருகிறார். வெகுமக்களைத் தூக்கியெறிந்து

விடாமல் அவர்களின் உலகத்தில் இருந்துகொண்டு, அவர்கள் பார்க்கும் வெகுஜனத் திரைப்படங்களுக்குக் கலையம்சத்தைக் கூட்டினார் அவர். இதில் வெற்றியும் தோல்வியும் சரிபாதி கிடைத்திருக்கிறது அவருக்கு. தமிழில் ஜனரஞ்சகத் திரைப்படங்கள் மட்டுமே எடுக்கப்பட்டுவந்த சூழலில், கமல் அதன் அடுத்த கட்டமே தவிர, உச்சக்கட்டம் அல்ல. அதைச் செய்ய வேண்டியவர்கள் அடுத்தடுத்து வருபவர்கள்தான்.

    - நன்றி: இந்து தமிழ்திசை

கமல் தொடர்பான பிற பதிவுகள்:


Friday, November 3, 2023

நாயகனுக்குக் கண்டிப்பா ஆஸ்கார் கொடுத்திருக்கணுங்க (கேசட்டுக் கடை கவிதைகள்)



மழையில நனைஞ்சுகிட்டே
நானும் சித்தியும்
தஞ்சாவூர் விஜயா தியேட்டர்ல
நுழைஞ்சப்போ
சரியா
நான் அடிச்சா நீ செத்துருவே’ன்னு
பிரதீப் சக்திகிட்ட கமல்
வசனம் பேசுற சீனு
அது என்னைப் பாத்து
சொன்ன மாதிரி இருந்ததால
ரொம்பவே பயந்துட்டேன்
அதுனாலதான்
இன்னை வரைக்கும் கமலை
நேரில பார்க்கவே இல்லை
ஒருதடவ கூப்புட்டு அனுப்புனாரு
இலக்கியவாதிய சினிமாக்காரங்கதான்
வந்து சந்திக்கணும்’னு
தெனாவட்டா சொல்லிட்டேன்
அப்புறம் அதை எல்லாருக்கும் சொல்லிட்டேன்
அவரை சந்திக்கக் கூடாதுன்னுலாம்
எந்த வைராக்கியமும் இல்லீங்க
ரஜினி விஜய் கூப்புட்டா
ஓடோடிப் போய் நிப்பேன்
ஆனா
கமல் பேசுன அந்த வசனம்தான்
இன்னைக்கு வரைக்கும்
என்னைத் தடுக்குது
அது இருக்கட்டும்
கமல் ரசிகனா
எனக்குப் பெரிய வருத்தம் என்னன்னா
நாயகனுக்கு
ஆஸ்கார் குடுக்கலங்குறதுதான்
போலீஸ்காரரான பிரதீப் சக்தி
செத்த பிறகு அவரோட துப்பாக்கியை
காவல் துறை வாங்கியிருக்கும்னும்
அந்தத் துப்பாக்கியை வைச்சுப்
பின்னாடி அவரோட பையன் டினு ஆனந்த்
கமலை சுடுற மாதிரி காமிச்சதால
லாஜிக்கல் மிஸ்டேக்குன்னு சொல்லி
ஆஸ்கார் கொடுக்கலன்னும்
எங்க தெரு பாலா அண்ணன்
சொன்னாங்க
அப்புறம் தேவர் மகன்ல
வயல்ல செருப்பு போட்டு நடக்குற மாதிரி
ஒரு சீனு வச்சதால
அதுக்கும் கெடைக்கலன்னு
அந்த அண்ணன் சொன்னாங்க
இப்படி வாழ்க்கையில்
எத்தனையோ கமல் படங்கள் வர்றப்பல்லாம்
அடுத்த வருஷம்
ஆஸ்கார் வாங்கும் ஆஸ்கார் வாங்கும்னு
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாந்திருக்கேன்
ஹே ராம் படத்துல
ராணி முகர்ஜி புட்டத்தை
கமல் கடிக்கிற சீனப் பாத்து
உறுதியா நம்புனேன்
அடுத்த வருஷம்
ஹே ராமுக்குத்தான் ஆஸ்காருன்னு
அப்பவும் கிடைக்கல
என்ன பண்ணுனாதான்
கொடுப்பாய்ங்கன்னு தெரியலை
ஒருநாள் இல்லன்னா ஒருநாள் பாருங்கடா
கமல் தன்னோட புட்டத்த
தானே கடிக்கிற மாதிரி ஒரு சீனு எடுப்பாரு
அந்தப் படத்துக்கு
நீங்க கண்டிப்பா
ஆஸ்கார் கொடுக்கத்தான் போறீங்க
அப்போ மேடையில ஏறி
ஐயாம் த கிங் ஆஃப் த வேர்ல்டு
எல்லாப் புகழும் இறைவனுக்கே’ங்கிற மாதிரி
கமலும்நான் அடிச்சா நீங்கல்லாம்
செத்துடுவீங்கடா’ன்னு
வசனம் பேசணும்
அதான் என்னோட ஆசை

          -ஆசை

Thursday, November 2, 2023

அப்படித்தான் பேசுவீங்களா ஸ்ரீதேவி (கேசட்டுக் கடை கவிதை வரிசை)



ஜானி படப்பிடிப்பு
நடந்துகிட்டு இருந்திச்சு
சரியா
‘ஆமாம் நான் அப்படித்தான் பேசுவேன்’னு
ஸ்ரீதேவி பேசுற காட்சியைப்
படமாக்கி முடிச்சாங்க
அதுக்கு என்ன பண்ணுறது
எப்படி நடிக்கிறதுன்னு தெரியாம
ரஜினி திகைச்சுப் போக
அதையும் சேத்துதான் படமாக்குனாங்க
முடிஞ்சி காருக்குள்ள வந்து
உக்காந்தாங்க ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி நமக்கு அவ்வளவு பக்கத்துல
உக்காந்தா
ஒரு மேட்டுநிலத்துல
நமக்காக மட்டும் ஒரு பியானோவை
யாரோ வாசிக்கிற மாதிரியும்
அதுலருந்து பெய்யுற மழையில
நனைஞ்சு செம்மறியாடு மாதிரி
சிலுப்பிக்கிட்டு
ஸ்லோமோஷன்ல துள்ளி ஓடணுங்கிற
மாதிரியும்தான்
யாருக்குமே தோணும்
உள்ளே என்னப் பாத்ததும்
முகம் இருண்டுபோயி
தலைகுனிஞ்சிக்கிட்டாங்க
அவங்ககிட்ட கேட்டேன்
‘முடியவே முடியாதா’ அப்புடின்னு
‘வாழ்க்கை என்னை
வேற திசையில கொண்டு போற மாதிரி இருக்கு
என்னை மன்னிச்சிடுங்க’ அப்படின்னாங்க
இல்லை இல்லை
அப்புடி சொன்னமாதிரி
அவங்க கண்ணுகலங்குச்சு
‘ஜானியா’ன்னு கேட்டேன்
‘போனி’ன்னு சொன்னாங்க
அது ஆச்சு
இருவத்தஞ்சு வருஷம்
அப்போ என்ன
எனக்கு ஒரு 19 வயசு இருக்குமா
ஜானி வந்தப்போ
11 மாசக் குழந்தையா இருந்திருப்பேன்
நான் தாமதமா பொறந்ததும்
நான் தாமதமா ஜானி பார்த்ததும்
என் தப்பான்னு தெரியலை
ஆனா
ஸ்ரீதேவி மட்டும்
ஜானிக்கும்
போனிக்கும் நடுவுல
கனவோட காலத்துல
இன்னும் வாழ்ந்துகிட்டுதான் இருக்காங்க
அந்தக் கனவு ஒரு
குமிழி மாதிரி
அதுக்குள்ள இருக்குற வரைக்கும்
மூச்சுக்காத்துக்கு
எந்தக் குறையும் இருக்காது
அந்தக் குமிழி
எந்தத் தண்ணியிலயும்
மூழ்கவும் மூழ்காது
உடையவும் உடையாது
அதுக்குள்ள இருந்துக்கிட்டு
என்னோட ஸ்ரீதேவி என்கிட்ட
எப்போதும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க
‘ஆமாம் நான் அப்படித்தான் பேசுவேன்’
அப்படின்னு
-ஆசை