Monday, October 2, 2023

காந்தி பிறந்த நாளில் ஒரு சிறப்பு அறிவிப்பு!

 


‘என்றும் காந்தி’ உள்ளிட்ட எனது நூல்களை சிறப்பு விலையில் வாங்கிக்கொள்ளலாம் என்ற திட்டத்தை காந்தி பிறந்த நாளான இன்று அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்தத் திட்டத்தின்படி ‘கொண்டலாத்தி’, ‘அண்டங்காளி’, ‘குவாண்டம் செல்ஃபி’ ஆகிய கவிதை நூல்களையும் ‘இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்’ என்ற இலக்கிய விமர்சன நூலையும் பாதி விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
‘என்றும் காந்தி’, 'பறவைகள் அறிமுகக் கையேடு’, ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’, பௌத்தத் துறவி திக் நியட் ஹானின் ‘அமைதி என்பது நாமே’ ஆகிய நூல்களை 35 சதவீதத் தள்ளுபடியில் பெற்றுக்கொள்ளலாம். விவரங்கள் மேலே உள்ள படத்தில். இந்தத் திட்டம் என் அப்பா நினைவு நாளான அக்டோபர் 11 வரை மட்டுமே. நண்பர்கள் இந்தப் பதிவைப் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் தகவல்களுக்கு வாட்ஸப் எண்: 7401329355
(இந்த நூல்களின் பதிப்பாளர்கள்: க்ரியா, டிஸ்கவரி புக் பேலஸ், இந்து தமிழ் திசை)
பின்குறிப்பு: இந்தப் புத்தகங்களைப் படிக்க விரும்பும் ஆனால் பணம் கொடுத்து வாங்குவதற்கு இயலாத நிலையில் உள்ள அன்பர்கள் கூரியர் செலவுக்கான பணத்தை மட்டும் அனுப்பி இந்த நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இரண்டு ராமராஜ்யங்கள்

 


இரண்டு ராமராஜ்யங்கள்
உள்ளன

ஒன்று
சீதையின் கற்பைத் 
தலைநகராகக் கொண்டது

இன்னொன்று 
சீதையின் துயரைத்
தலைநகராகக் கொண்டது

ஒன்றில் 
சீதைக்கென்று
எப்போதும் அக்னி
எரிந்துகொண்டிருக்கும்

இன்னொன்றில்
சீதைக்காக ராமனே
எப்போதும் அக்னியில் இறங்குவான்

ஒன்றில்
ஒரே ஒரு ராமன்தான்
மீதமுள்ள எல்லோரும்
அனுமன்கள்
நிமிடந்தோறும்
நெஞ்சைப் பிளந்து
அதன் உள்ளே சீதையற்ற ராமன்
படத்தைக் காட்ட வேண்டியவர்கள்
காட்ட மறுப்போரெல்லாம்
வாலிகள் ராவணன்கள்
கும்பகர்ணன்கள் தாடகைகள்
சூர்ப்பநகைகள்
வதம் செய்ய வேண்டியவர்கள்

இன்னொன்றில்
எல்லோருமே ராமர்கள்
அவர்களாகவே தம் நெஞ்சைப் பிளந்து காட்ட
அதில் அனுமன்கள் சீதைகள் 
வாலிகள் இராவணன்கள்
கும்பகர்ணன்கள் தாடகைகள்
சூர்ப்பநகைகள்
தெரிவார்கள்

ஒன்றில்
ஒரே ஒரு சிம்மாசனம் மட்டும் 
இருக்க
அதில் வீற்றிருந்து 
ஆட்சி செய்யும்
ராமனின் பாதுகைகள்

இன்னொன்றில்
சிம்மாசனமே இருக்காது

இரண்டு ராமராஜ்யங்களும்
சந்தித்துக்கொண்டன

ஒன்று
‘ஜெய்ஸ்ரீராம்’ என்று சொல்லிக்
கையில் வில்லெடுத்து
அம்பெய்தது

இன்னொன்று
‘ஹே ராம்’ என்று சொல்லி
மார்பில் அந்த அம்பை வாங்கி
மண்ணில் வீழ்ந்தது
         - ஆசை

Wednesday, September 27, 2023

கடவுளர்களுக்கும் அனுமதிக்கப்படாத உண்டியல்



எனக்குக் கடவுள் நம்பிக்கை
இல்லை
ஆனால் கடவுள்களை
எனக்குப் பிடிக்கும்
அவர்களெல்லாம்
மனிதர்கள் விதவிதமாகச் செய்த
உண்டியல்கள்
கிராமத்து மரத்தடிகளில்
சின்ன உண்டியல்களில் ஆரம்பித்து
பெரியகோயில்களில்
கர்ப்பகிரகத்தின் உள்ளே இருக்கும்
பெரிய உண்டியல்கள் வரை
ஏராளமான உண்டியல்கள்
அந்த உண்டியல்களில்
புவியின் அத்தனை நம்பிக்கைகளும்
வேண்டுதல்களும்
பாவங்களும்
சாபங்களும்
ஆசைகளும்
தேர்வு எண்களும்
கொட்டப்படுகின்றன
அந்த நம்பிக்கைகள்
வேண்டுதல்கள்
பாவங்கள்
சாபங்கள்
ஆசைகள்
மிக அழகியவை
அவற்றுக்கான ஒரே உண்டியல்
என்பதால்
கடவுளர்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்
சிறுவர்களாய் இருக்கும்போது
சிறிய மாரியம்மன் கோயிலில்
மாரியம்மன் கண்முன்னே
வேப்பங்குச்சியில் தாரை ஒட்டி
உண்டியலில் விட்டுக்
காசு திருடினோம்
நானும் கூட்டாளிகளும்
பாவமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்
மாரியம்மன்
எப்போதோதான் அங்கே ஆட்கள் வருவார்கள்
எப்போதோதான் உண்டியலில் காசு விழும்
கடவுளர்களைப் படைத்துவிட்டு
அவர்களுக்குள் எல்லாவற்றையும் கொட்டும்வரை
பிரச்சினை இல்லை
அவர்களுக்குள் குச்சி விட்டு
நோண்டிக்கொண்டிருப்பதுதான் விபரீதம்
அப்படி நோண்டவும்
குழந்தைகளுக்கு மட்டுமே
அனுமதிக்கப்பட்டிருக்கிறது
குழந்தைகள் தங்கள்
பொம்மை உண்டியலை
எத்தனை முறை வேண்டுமானாலும்
தூக்கிப்போட்டு
உடைக்கட்டும்
மற்றவர்கள்
உண்டியலில் போட வேண்டியதைப்
போட்டுவிட்டுத்
திரும்பிப் பார்க்காமல்
போய்விட வேண்டியதுதான்
தங்களுக்குள் வந்து விழுவதைக்
கடவுளர்கள் கூட ஏறெடுத்துப் பார்ப்பதில்லை
-ஆசை

Tuesday, September 26, 2023

ஜட்டியின் ஆன்மா




பிள்ளைகள் கலைத்துப்போட்டு
விளையாடியதில்
துவைத்த துணி
அழுக்குத் துணி
எல்லாம்
ஒன்றாய்க் கலந்து
கிடக்கின்றன
இன்று போட்டுக்கொள்ள
ஜட்டி வேண்டும்
எடுத்து முகர்ந்துபார்க்கிறேன்
ஒவ்வொன்றாய்
எது துவைத்தது
எது துவைக்காதது
என்று அடையாளம் காண
இயலவில்லை என்னால்
நாளானால்
அழுக்கும் தன் நாற்றம்
இழக்கிறது
ஜட்டியில்
குடிபுகுந்த பின்
அங்கே ஏற்கெனவே அடைபட்டிருக்கும்
ஜட்டியின் ஆன்மாவுடன்
அழுக்கு பேசியிருக்கும்
வந்தபோது இருந்த
தன் மணத்தையும்
தான் எப்போதோ
இழந்த கதையைச் சொல்லி
ஜட்டியின் ஆன்மா
அழுதிருக்கும்
அதன் பின்
உணர்ந்திருக்கும்
ஜட்டியின் அழுக்கு
எதையும் விடாப்பிடியாக
பிடித்து வைத்திருக்க வேண்டிய
அவசியம் இல்லையென்று
நாள்பட்ட அழுக்குதான்
ஆன்மா ஆகும்
நாள்பட்ட அழுக்குதான்
ஞானமடையும்
ஆனால்
நான் இப்போது
அணிந்திருப்பது
நாள்பட்ட அழுக்கின் ஞானமா
இல்லை
துவைத்து ஆன்மா வெளியேற்றப்பட்ட ஜட்டியா 
- ஆசை

Saturday, September 9, 2023

பிரபஞ்சத்தின் மாபெரும் சர்வாதிகாரி

சார்லி சாப்ளினின் ‘த கிரேட் டிக்டேட்டர்’ திரைப்படத்திலிருந்து



1.
மாபெரும் அடினாய்டு ஹிங்கல்
உம்மை நாங்கள் ஆராதிக்கிறோம்
என்றுமுள்ள சர்வ வல்லமைகொண்ட 
ஒரே சர்வாதிகாரி நீங்கள்
உம் ஆதிக்கத்துக்கு
அகில உலகமும்
அடிபணிவதாக

இவ்வுலகை 
ஒரே குடையின் கீழ் கொண்டுவரும்
உம் அகண்ட தேசக் கனவின்
நிழலில் என்றும் வாழ்ந்திருக்கப்
பேரவா கொண்ட சிறுபூச்சி நாங்கள்

உம் மகிமையின் 
மகுடத்திலிருந்து உதிரும்
மயிலிறகுகள்
என்றும் எமக்கு
சாமரம் வீசட்டும்

உம் வாக்குக் காற்றின் வேகத்தில்
உம் வாய்க்கு முன் 
ஒலிபெருக்கியின்
ஒலிவாங்கித் தண்டுகள்
அஞ்சி வளைந்து
நடுங்குவதுபோல்
எங்கள் உள்ளமும்
நடுங்கி வளைகிறது

உம் ஒரே நாடு 
ஒரே சர்வாதிகாரி
ஒரே இறைவன்
ஒரே மொழி
ஒரே சிந்தனை
ஒரே இனம்
என்ற மாபெரும் கனவு
எங்கள் மனத்திரையில்
படமாக விரியும்போது
வெம்மை தாளாமல்
தீப்பிடிக்கிறது

அந்தத் தீச்சூடு தாளாமல்
எங்கள் ரோமங்கள் 
குத்திட்டுக் கூர்ஈட்டியாய் நிற்கின்றன
வாய்களோ 
உன்னதக் கனவுக்கு
உரத்த கோஷம் 
பொறிபறக்கக் கக்குகின்றன
கைகளோ காட்டுத்தீச் சுவாலைகளாய்
மேலெழுந்து ஆர்ப்பரிக்கின்றன

என்றுமுள்ள சர்வ வல்லமைகொண்ட 
ஒரே சர்வாதிகாரி 
அடினாய்டு ஹிங்கல்
உம்மை நாம் ஆராதிக்கிறோம்

2.
நிற்க
உமக்கான ஆராதனையை அடுத்து
உம்மேலுள்ள விசனமொன்றை
உம்முன் வைப்பதற்கு 
மன்னிக்க வேண்டும் தேவரீர்

சென்றமுறை
உம்மைச் சந்திக்க வந்தார்
உம்மைப் போன்ற கனவுகொண்ட
இன்னொரு சர்வாதிகாரி
நல்ல பெயர் கொண்ட
நப்போலினி

அவர் திமிர் அடக்க
உம் உயரம் காட்ட
உமக்கு உயரமாகவும்
அவருக்குத் தரையொட்டியும்
இருக்கை சமைத்தீர் நன்று அய்யா

ஆனால்
இருக்கை உயரம் போதாமல்
அவர் உம் மேசைமேல்
ஏறியமரத்
திடுக்கிட்டு நீங்கள்
சமைந்ததை
உம் பக்தர்கள் நாம்
எப்படி ஏற்பது

முக்காலத்துக்கும் வாய்க்கால் வெட்டி
அதில் உம் மதுரவாய்ப் பாசனம்
செலுத்துபவரே
இதை முன்னறிய மறந்தீரே

3.
அய்யா
அடுத்த முறை
உலகின் சர்வாதிகாரிகள்
உமை நோக்கி வரும்போது
ஒரே ஒரு நாற்காலி சமையும்
அதில் நீர் மட்டுமே அமையும்

முன்னே மேசையின்றித்
தரைவிரிப்பில்
அவரெல்லாம் 
அமரச் செய்யும்

எம் தேசம்
ஒரே தேசம்
அதில் ஒரே ஒரு நாற்காலிதான்
என்று சொல்லும்

எம் நாட்டில்
விருந்தினர் உபசரிப்பு முறையிதுவே
என்று அவரெல்லாம் ஆற்றுப்படுத்தும்

உம்மைப் பார்த்துவிட்டுச் செல்லும்போது
அவரின் ‘சர்வ’த்தையெல்லாம்
உருவிவிட்டு
வெறும் அதிகாரிகளாய்
வழியனுப்பும்

4.
பூமிப் பந்தின் மேல்
ஒரே சிம்மாசனம் அமைத்து
அதன் மேல் வீற்றிருந்து
பூமி மேல்
நிதம் மும்மாரி
நீர் பெய்வதைப்
பார்த்துவிட்டுக் கண்மூட வேண்டும்

பின் வரும் தலைமுறைகள்
நீர் பெய்த மும்மாரிதான்
உலகுசூழ் 
உப்பு ஆழிகளாயிற்று
என்று இதிகாசங்கள்
இயற்ற வேண்டும்

அதுதான் ஐயன்மீர்
எம் ஒரே ஆசை

5.
ஆயினும் ஓர் ஆபத்து
உம்மை விடப் பெரிய ஆசனத்தைப் 
போட்டு ஒருவர் 
இப்பிரபஞ்சத்தின் மேல் அமர்ந்திருக்கிறார்

அவரை அவ்விடம்
அகற்றி
அங்கே நீவிர் 
அமர வேண்டும்
அதுவரை அவர் தொழுத
அமரர்க்கெல்லாம் 
நீவிர் சர்வ அதிகாரி 
ஆக வேண்டும்

இப்படியாக
நீவிர் புதிய தேசம்
புதிய உலகம் படைப்பதுபோல்
புதிய பிரபஞ்சமும் படைக்க வேண்டும்

அதன் ஒவ்வொரு
நட்சத்திரத்துக்கும்
பழைய பெயரகற்றி
உம் பெயரையே
வைக்க வேண்டும்

நட்சத்திரம் கண்சிமிட்டும்போதெல்லாம்
அது காட்டித் 
தன் குழந்தைக்குச் சோறூட்டும்
தாயெல்லாம்
‘அதோ பார்
அடினாய்டு ஹிங்கல்
கண்சிமிட்டுகிறார்’
என்று சொன்னால்
மேலும் ஒரு கவளம்
சோறிறங்காதா
தேவரீர்
          - ஆசை, 09-09-23

குறிப்புகள்: 
1. ஹிட்லரைப் பகடி செய்து 1940-ல் சார்லி சாப்ளின் எடுத்த ‘த கிரேட் டிக்டேட்டர்’ (The Great Dictator) திரைப்படத்தின் தாக்கத்தால் எழுதிய கவிதை. அந்தப் படத்தில் ஹிட்லரை நினைவுபடுத்தும் பாத்திரத்துக்கு அடினாய்டு ஹிங்கல் என்றும், முசோலினியை நினைவுபடுத்தும் பாத்திரத்துக்கு பென்ஸினோ நப்போலினி என்றும் சாப்ளின் பெயர் வைத்திருப்பார்.

2. வேறு ஏதும் இல்லை.

Friday, September 8, 2023

தெய்வங்களின் தேர்




1.
நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே
என் வண்டியின் 
முன்சக்கரத்தை 
மோந்துபார்த்து
நிதானமாக
ஒன்றுக்கு அடிக்கிறது ஒரு நாய்

எனக்கு அதன் மேல் கோபம்
வரவில்லை

எனக்கே தெரியாமல்
எத்தனை தெய்வங்கள்
என் மீது மோந்துகூட பார்க்காமல்
ஒன்றுக்கு அடித்துக்கொண்டிருக்கின்றனவோ 

அந்த நாய்கள் மீதான கோபத்தால்
இந்த நாயின் மீதா
கல்லெறிவது

2.
என்றாவது ஒரு நாள்
தெய்வங்களின் தேர்
என் மேல் ஏறிச் செல்ல
வரும்

அதன் சக்கரம்
என் மேல் ஏறும்போது
உயிர்போகும் வலியிலும்
மந்தகாசத்துடன்
அதன் மேல் நிச்சயம்
நான் ஒன்றுக்கு அடிப்பேன்

என் வாழ்நாளில்
நான் சேர்த்து வைத்த சிறுநீரெல்லாம்
எவ்வளவு ஆனந்தத்துடன்
அந்தச் சக்கரத்தின் மீது
பீறிட்டு நனைக்கிறது
என்பதை விழி பிதுங்கிக் காண்பதுதான்
என் கடைசிக் காட்சியாக
இருக்க வேண்டும்

தேரில் அடிபட்டுச் செத்தாலும்
தெருநாய்க்குத் திமிர் எவ்வளவு என்று
தெரிந்துகொள்ளட்டும்
இறங்கிப் பார்க்கும்
தெய்வங்கள்

3.
என் கார் முன்சக்கரத்தின் அடியில்
இழுத்துக்கொண்டு கிடக்கும் நாயை
இறங்கிவந்து பார்த்தேன்

நீரும் உயிரும் 
பிரிந்துகொண்டிருந்தன

நீர் 
சக்கரத்தை நனைத்துக்கொண்டிருந்தது

உயிர் 
எதை நனைத்துக்கொண்டிருக்கும்
என்று தெரியவில்லை

அப்போது தீனமான குரலில்
பேச ஆரம்பித்தது
அந்த நாய்
‘ஒரு தத்துவம் சொல்லட்டுமா சார்
வாழ்க்கை என்பது சிறுகச் சிறுக
நாம் சேர்க்கும் சிறுநீர்
மரணம் என்பது
அதை முழுமுற்றாக 
ஒரு சொட்டு விடாமல் 
அடிப்பதற்கான
தருணம்’

நாயின் மேல் ஏற்றிவிட்டோமே
என்ற குற்றவுணர்வு இருந்தது

ஏற்றியது தத்துவவாதி நாய் மீதுதான்
என்பது தெரிந்ததும்
குற்றவுணர்வு போய்விட்டது

4.
தெருநாயோ
தெருத்தெய்வமோ
அவற்றின் மேல் எப்போதும் 
எனக்குப் பொறாமை உண்டு

போர்ஷ்
லம்போர்கினி
பிஎம்டபிள்யு
ஆடி
பென்ஸ்
என்று 
எந்த கார் சக்கரத்திலும்
அவற்றால்
ஒன்றுக்கு அடிக்க முடியும்

என்னால் 
என்னுடைய கார் சக்கரத்தில் கூட 
ஒன்றுக்கு அடிக்க முடியாது

அப்படி 
ஒருமுறை கூட 
எனக்குத் தோன்றாதது குறித்து
வியப்பு கொள்கிறேன்

உன் கார் மேல்
நீ ஒன்றுக்கு அடிக்காமல்
வேறு எந்த நாய் அடிப்பது
என்று என்னையே
காறியுமிழ்ந்துகொள்கிறேன்

ஆனாலும்
என் கார் சக்கரத்தின் மேல் அடிக்க 
ஏதோ ஒன்று
என்னைத் தடுக்கிறது

அப்படி ஒரு எண்ணம் வர
தெருநாயாய் ஆக
பரிணாம வளர்ச்சியின்
பரிவார தெய்வங்களை
வேண்டிக்கொள்கிறேன்

சக்கரம் கண்டால்
தானாய்க் கால்தூக்கும் காலம்
கனியட்டும்

     - ஆசை 

Thursday, September 7, 2023

இருவேறு உலகத்து ஒரே மலர்





மலர்களுக்குக் கண்கள் உண்டு
அவை நம் கண்கள் இல்லை

மலர்களுக்குக் கண்ணீர் உண்டு
அவை நம் கண்ணீர் இல்லை

மலர்களுக்கு மனம் உண்டு
அது நம் மனம் இல்லை

மலர்களுக்கு வலி உண்டு
அது நம் வலி இல்லை

மலர்கள்
நமக்காக மலர்பவை இல்லை
ஆனால் நமக்காக
வைக்கப்படுபவை

அப்படி நமக்கு வைக்கப்படும்போது
இனி இந்த உலகத்தோடு
நாம் பேசுவதற்கான
நம் ஒரே வாயாக
ஆகிவிடுபவை

அப்படி நமக்கு வைக்கப்படும்போது
எல்லோரும் நம்மிடம் பேசுவதை
நாம் கேட்பதற்கான
ஒரே காதாகவும்
ஆகிவிடுபவை

நாம் இருக்கப் போகும் வெறுமைக்கும்
எங்கிருந்து அங்கு சென்றோமோ
அந்த வெறுமைக்கும் இடையே
அதன்பின்
ஒரே ஒரு மலர் மட்டுமே
இருக்கும்

இருவேறு உலகத்தின்
இயற்கைக்கும்
மணம் பரப்பியபடி
      - ஆசை

Monday, August 28, 2023

யாருமில்லாத பிரபஞ்சத்தில் ஒரு தேன்சிட்டு

 




வரலாறு என்பது
வேறெதுவுமில்லை
தேன்சிட்டு தேன் குடித்தது
தேன்சிட்டு தேன் குடிக்கிறது
தேன்சிட்டு தேன் குடிக்கும்
அவ்வளவுதான்
என்று
முன்பு எழுதியிருந்தேன்

இப்போது அதற்கு
வருந்துகிறேன்

தேன்சிட்டு இல்லாமல் போகும் 
காலத்தையும்
தேன்  இல்லாமல் போகும் 
காலத்தையும்
வரலாறு  இல்லாமல் போகும் 
காலத்தையும்
ஏன்
கவிதையே  இல்லாமல் போகும் 
காலத்தையும்
காலமே இல்லாமல் போகும்
காலத்தையும் பற்றி
நான் எழுதியிருக்க வேண்டும்

இந்நிலையில்
யாருமில்லாத டீக்கடையில்
யாருக்காக டீ ஆற்ற வேண்டும்
என்ற கேள்வி இயல்பானதே

ஆனாலும்
யாருமில்லாத டீக்கடையில்
யாரோ எப்போதோ ஆற்றிய டீதான் 
இப்போது
ஆறாய்ப் பெருகி ஓடுகிறது என்பதை 
மறக்கக் கூடாது

பழைய பழக்கத்தில்தான்
இன்னும் டீ ஆற்றுகிறோம்
டீயாக இருக்கிறோம்
தேன்சிட்டாக இருக்கிறோம்
தேன் குடிக்கிறோம்
வரலாறு எழுதுகிறோம்
கவிதை எழுதுகிறோம்
காலம் ஆகிறோம்

இல்லாமல் போவதென்பது
பழக்கத்திலிருந்து
முற்றிலும் விடுபடுவது

ஒரு தேன்சிட்டு இல்லாமல் போய்விடும்
என்பதும்
அது அதற்கே தெரியாது என்பதும்
அது இல்லாமல் போய்விடும்போது
முன்பு தான் இருந்தது
அதற்குத் தெரியுமா தெரியாதா என்பதை
நாம் ஒருபோதும்
அறிந்துகொள்ள முடியாது என்பதும்
எவ்வளவு பெரிய துயரம்

அந்தத் துயரத்தை
ஆற்றிக்கொள்ளவாவது
யாருமில்லாத பிரபஞ்சத்தில்
ஒரு தேன்சிட்டு
தேன்குடித்துக்கொண்டிருப்பது பற்றி
நான் கவிதை எழுதித்தான் 
ஆக வேண்டும்
       - ஆசை

Thursday, August 17, 2023

அதிகாரம் என்பது தலித் மக்களுக்கு வெறும் கனவா?



ஆசை


I

அப்போது 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்தது. பலருக்கும் மிகுந்த வலியை ஏற்படுத்திக்கொண்டிருந்த விஷயம் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பின்தங்கிக்கொண்டிருந்ததுதான். மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசம்தானே, எப்படியும் அவர் வென்றுவிடுவார் என்றே பலரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். அப்படியும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்துக்குச் சென்று பார்த்தால் இன்னொரு விஷயமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே தொகுதியில் டி. திருமாவளவன் என்பவர் சுயேச்சையாக நின்று 289 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். அந்தத் தொகுதியில் நோட்டாவுக்காக விழுந்த ஓட்டு 1,025. இந்தக் கணக்குகள் சொல்லும் செய்திகள் புரிந்துகொள்வதற்கு அவ்வளவு கடினமானவை அல்ல. இத்தனைக்கும் அது தனித்தொகுதி; வென்றவரும் தலித் சமூகத்தினர்தான். ஆனால், அவர் தலித் சமூகத்துக்காக ஒரு கேள்வியைக்கூட சட்டமன்றத்தில் கேட்பார் என்றால் அது உலக அதிசயமாகத்தான் இருக்கும்.

திருமாவளவன் என்ற ஒரு கட்சித் தலைவர் வெல்ல வேண்டும் என்று ஏன் முற்போக்காளர்கள் துடித்தார்கள்? ‘அவரும் அரசியல் குட்டையில் ஊறியவர்தானே? பாரபட்சமே இல்லாமல் எல்லாக் கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கடைசியில் விஜயகாந்த்தைத் தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்றவர்தானே? கட்டப்பஞ்சாயத்து செய்யும் கட்சிதானே அது?’  என்றெல்லாம் அவர்மீது  இந்தத் தோல்விக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து விமர்சனங்கள், அவதூறுகள் அள்ளிவீசப்படுகின்றன. ஊழலிலும் அதிகாரத்திலும் காலம்காலமாகத் திளைத்தவர்கள் மீது கூட இவ்வளவு குற்றச்சாட்டுகள் சொல்லப்படுவதில்லை. எந்த அதிகாரத்திலும் இல்லாத திருமாவளவன் போன்றவர்கள் மீது மட்டும் இந்தச் சமூகமும் விமர்சகர்களும் இவ்வளவு குற்றம் சுமத்துகிறார்களே என்ற கேள்விக்கு பதில் காண முயன்றால் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஊறித் திளைத்திருக்கும் சாதியம் நமக்குப் புலப்படும்.

திராவிடக் கட்சிகளின் கணக்கு

கடந்த ஆண்டு வாக்குப் பதிவு அன்று எங்கள் தெருவில் இருந்த தேமுதிக கட்சிக்காரர் ஓட்டுப் போட்டுவிட்டு இப்படி வந்து சொல்கிறார், ‘தே.மு.தி.கவுக்கு ஓட்டு போட்டிருப்பேன். ஆனால், இவர் (திருமாவளவன்) இந்தக் கூட்டணியில் இருக்கிறார் இல்லையா. மேல்ஜாதிப் பொண்ணுங்களெல்லாம் போய் லவ் பண்ணுங்கன்னு சொன்ன ஆளு இருக்குற கூட்டணிக்கு நான் ஓட்டு போட மாட்டேன்’ என்றார். (திருமாவளவனை ஒருமையில்தான் விளித்தார் என்பதைச் சொல்லத் தேவையில்லை). தன் பையனோ பெண்ணோ பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த பையனையோ பெண்ணையோ காதலிப்பார்கள் என்றால் அவருக்கு இந்த அளவுக்குப் பிரச்சினை இருந்திருக்காது. இந்த ஒரு வாக்காளரின் மனநிலைதான் அதிமுக, திமுக என்று கட்சிகள் தொடங்கி ஒட்டுமொத்த சமூகத்திலும் நிலவுகிறது. விசிகவைச் சேர்த்துக்கொண்டால் முக்குலத்தோர் ஓட்டுகள், வன்னியர் ஓட்டுகள் உள்ளிட்ட ஆதிக்க சாதியினர் ஓட்டுகள் தங்களுக்குக் கிடைக்காது என்பது மட்டுமல்ல, அந்தந்த சமூகங்களைச் சேர்ந்த கட்சிகளும் தங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாது என்பது இருபெரும் திராவிடக் கட்சிகளின் கணக்கு. இத்தனைக்குப் பிறகும் திமுக தோற்றதற்கு சமூகநீதி உணர்வுள்ள கருத்தாளர்கள் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பதுதான் வேடிக்கை. ஆரம்ப காலத்தில் வேண்டுமானால் சமூக நீதி என்ற விஷயத்தில் (பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக நீதிதான்!) திமுக பங்களிப்பு செய்திருக்கலாம். இப்போதோ அதிமுகவுக்கும் திமுகவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது. கருணாநிதியின் பிடி திமுகவில் தளர்ந்ததன் விளைவாகவும் இதைக் கருதலாம். ‘தி இந்து’வுக்கு திருமாவளவன் அளித்த விரிவான பேட்டியொன்றில் தலித் சமூகத்தின் உரிமைகள், பிரச்சினைகள் குறித்துத் தன்னால் கருணாநிதியிடம் பேச முடிந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அதே திமுகதான் தற்போது திருமாவளவனுக்குப் பாராமுகம் காட்டியிருக்கிறது. சரி திமுக, அதிமுகதான் இப்படி என்றால் மக்கள்நலக் கூட்டணி மட்டும் என்ன லட்சணம். திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்வைக்கும் துணிச்சல் யாருக்காவது இருந்ததா? தோற்றிருந்தாலும் எவ்வளவு மகத்தான முன்னுதாரணமாக இருந்திருக்கும். 

ஒட்டுமொத்த அரசியலும் வாக்கு வங்கியை நம்பிச் செயல்படுகிறது. அப்படியிருந்தும் தலித் மக்கள் என்ற பெரும் வாக்கு வங்கி யாருக்கும் தேவையில்லை. வாக்கு வங்கி என்ற அளவில் கூட தலித் மக்கள் பொருட்படுத்தப்படுவதில்லை என்பது எவ்வளவு வேதனையான விஷயம். இதில் பொதுச் சமூகத்துக்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவுக்கு தலித் கட்சிகளுக்கும் இருக்கிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது. அரசியல் மையநீரோட்டத்தில் கலந்துகொள்ளும்போது மற்றவர்களைப் போலவே தலித் தலைவர்களும் ஊழல்மயப்பட்டுவிடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதில் என்ன பிரச்சினை என்றால், அரசியல் மையநீரோட்டம் என்பது முழுக்க முழுக்க பணபலத்தை நம்பி இயங்குவது. சமூகநீதிக்காகப் போராடும் கட்சியொன்று மையநீரோட்டத்தில் கலந்துகொள்ள விரும்பினால் ஊழல்மயப்பட்டாக வேண்டிய கட்டாயத்தை அமைப்பே ஏற்படுத்திவிடுகிறது. பணத்தை நம்பாமல் அரசியலில் ஈடுபடவும் முடியாது. ஆகவே, தலித் கட்சிகளின் பிரச்சினை என்பது புலி வாலைப் பிடித்த கதைதான்.  


II

அதிகாரமின்மையின் இரண்டாயிரம் ஆண்டுகள்…

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்துக்குத் தொடர்பே இல்லாமல் வாழ்ந்துவருகிறார்கள் தலித் மக்கள் என்று திருமாவளவன் ‘தி இந்து’ பேட்டியில் குறிப்பிட்டிருந்தது பெரும் தவிப்பின் அடையாளம். அப்படியே தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அதிகாரம் கிடைக்கிறது என்றாலும் அதற்கு அவர் எந்த அளவுக்குப் போராட வேண்டும் என்பதற்கு அம்பேத்கரை விட சிறந்த உதாரணத்தைக் காட்ட முடியாது. அவர் காலத்து இந்தியர்கள் யாரை விடவும் அதிகம் படித்திருந்தும், உயர்ந்த பட்டங்களைப் பெற்றிருந்தும், தலித் சமூகத்தில் பிறந்தவர் என்ற ஒரே காரணத்துக்காகப் போகும் இடங்களிலெல்லாம் புறக்கணிப்பை எதிர்கொண்டார். தனது புரவலரின் அலுவலகத்தில் ஆரம்பத்தில் அவருக்கு வேலை கிடைத்தாலும் அங்கும் தனக்குக் கீழ்நிலையில் பணிபுரியும் ஆதிக்கசாதி ஊழியர்களிடமிருந்து கடுமையான சாதிய ஒடுக்குமுறையை எதிர்கொண்டார். அவர் வேலை பார்த்த அலுவலகத்தின் பியூன் கோப்புகளை அம்பேத்கர் மேசைமீது தூக்கித்தான் எறிவார். அலுவலகத்தில் உள்ள தண்ணீர்ப் பானையில் அம்பேத்கர் தண்ணீர் குடிக்கவும் முடியாது.

இன்னும் நெடுக, சமூகத்தினரிடமிருந்தும் அரசியல் வட்டத்திலும் கடும் ஒடுக்குமுறையை எதிர்கொண்டே மேலே மேலே வந்துகொண்டிருந்த அம்பேத்கர் தேர்தல்களில் கூட அதிகம் தோல்விகளையே பெற்றார்.

சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த முதல் அமைச்சரவை என்பது உலகத்துக்கே ஓர் முன்னுதாரணம். ‘சுதந்திரம் என்பது காங்கிரஸுக்கு மட்டும் கிடைக்கவில்லை. எல்லோருக்கும்தான்’ என்று சொல்லிய காந்தி, திறமையானவர்கள், தகுதியானவர்கள் காங்கிரஸுக்கு எதிர் அணிகளில் இருந்தாலும் அவர்களையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். காந்தியின் பரிந்துரையைத் தாண்டியும் அம்பேத்கருக்கு நிகரானவர்கள் அப்போது அநேகமாக யாரும் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

அந்த முதல் அமைச்சரவைதான் அப்படிப்பட்ட கடைசி அமைச்சரவையாக அமைந்துபோய்விட்டது என்பது இந்திய ஜனநாயகத்தின் பெருந்துயரம். அதற்குப் பிறகு மறுபடியும் தேர்தல் அரசியலில் அம்பேத்கர் தோற்றுப்போனார். தலித் வேட்பாளர்களுக்கான தனித்தொகுதி இருந்தாலும் பெருங்கட்சிகளைச் சேர்ந்த தலித் வேட்பாளர்களாலோ, பெருங்கட்சியினருடன் கூட்டணி வைத்த தலித் வேட்பாளர்களாலோதான் இந்தத் தேர்தல் அரசியலில் வெல்லவோ தாக்குப்பிடிக்கவோ முடிந்தது. தலித் கட்சிகளாக இருந்தால் அவற்றுக்குப் பொதுச் சமூகத்தின் ஆதரவும் ஓட்டுக்களும் கிடைக்காது. தலித் சமூகத்தினரின் ஓட்டுக்களும் பெருங்கட்சிகளிலுள்ள தலித் வேட்பாளர்களுக்கே பெரும்பாலும் விழும். அந்த வேட்பாளர்கள் தலித்களின் உரிமைகளுக்காக அநேகமாகப் பேசுவதே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

தலித்களுக்குக் கொடுக்கப்படும் பதவிகள், பொறுப்புகள் பெரும்பாலும் பெயரளவில் அடையாளச் சின்னமாகத்தான் இருக்கின்றன. முன்னாள் குடியரசுத் தலைவர் நாராயணன், பாஜகவின் முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் போன்றவர்களை அப்படித்தான் பார்க்க வேண்டும். இதையும் தாண்டி, மாயாவதியின் வருகை என்பது இந்திய அரசியலில் ஓர் அதிசயம்தான். பிஹார் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சிகூட ஒரு வகையில் பொம்மை முதல்வராகத்தான் ஆக்கப்பட்டிருந்தார்.

மாயாவதியின் முக்கியத்துவம்

தலித்கள் அதிகாரத்துக்கு வருவதற்கான அவசியம், முக்கியத்துவம் குறித்துப் பிற சமூகத்தினர் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. மாயாவதியின் மீது மற்ற எல்லோரையும்விட அதிகமாக ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதில் பெருமளவு உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தலித் நண்பர் ஒருவர் சொன்ன செய்தியின் மூலம் மாயாவதி என்ற நிகழ்வின் முக்கியத்துவத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.  “தலித் முதல்வர் என்பதெல்லாம் சரிதான். ஆனால், இந்த அளவுக்கு ஊழல்வாதியாக இருக்கிறாரே மாயவாதி, அவரை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது?” என்ற கேள்விக்கு அவர் இப்படிப் பதில் அளித்தார்: “நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், ஒரு விஷயத்தை நீங்கள் பார்க்க வேண்டும். மாயாவதி முதல்வராக ஆவதற்கு முன் ஒரு தலித் ஏதாவது புகார் கொடுக்கக் காவல் நிலையம் சென்றால், ‘ஓ, காவல் நிலையம் வந்து புகாரெல்லாம் கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டாயா?’ என்று கேட்டுக் கைகால்களை முறித்துவிட்டுத்தான் அனுப்புவார்கள். மாயாவதி முதல்வரான பின்புதான் தலித்கள் புகார் கொடுக்க வந்தால் மதித்து உட்காரச் சொன்னார்கள். தலித் உரிமைகளைப் பொறுத்தவரை இது எவ்வளவு பெரிய பாய்ச்சல் என்பதைப் புரிந்துகொண்டால்தான் உங்களால் மாயாவதியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும்” என்றார். திருமாவளவன் மீது யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் குற்றச்சாட்டுகள் வைக்கட்டும்; அவர்களுக்கும் சேர்த்துதான் அந்த உத்தர பிரதேசத்துக்காரர் பதில் சொல்லியிருக்கிறார்.


III

எந்த பாதை நோக்கி?

தலித் மக்கள் காலம்காலமாக அனுபவித்துவரும் கொடுமைகளுக்குத் தீர்வு  என்பது அவர்கள் அதிகாரத்துக்கு வருவதுதான். ஆனால், அதிகாரத்தை நோக்கி மற்றவர்கள் சென்ற பாதையிலேயே அவர்களும் கட்டாயம் காரணமாகச் செல்ல முயன்றுகொண்டிருப்பதும், சமூகத்தின் புரையோடிய சாதிய உணர்வும்தான் தலித்களின் அதிகாரப் பாதை நோக்கிய பயணத்தை சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதற்குக் காரணங்கள். பொதுச் சமூகத்தின் பொதுப்புத்தியை மாற்றாமல் தலித்களால் அதிகாரத்தை அடையவே முடியாது. இதற்கு அரசியல் அதிகாரத்துக்கான முயற்சிகள் மட்டுமே போதாது. ஏனெனில், அந்த முயற்சிகளை அடையும் வழியை வழக்கமான ஊழல் பாதையாகவே அமைப்பு போட்டு வைத்திருக்கிறது. ஊழலை விட சாதியம் எவ்வளவு மோசமானது, இந்தியாவின் தலையாய பிரச்சினை சாதிதான் என்பதை தலித் மக்களும் முற்போக்காளர்களும் சொல்லிவந்தாலும் பொதுச் சமூகத்தின் பொதுப் புத்தியில் ஊழல்தான் பிரதானப் பிரச்சினையாகத் தோன்றும். (வெளித்தோற்றத்துக்காகவாவது) ஊழலற்ற மனிதர்களால், ஊழலற்ற அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களே பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. ஆகவே, ஒரு பக்கம் அரசியல் பாதையை நோக்கிய பயணம் இருக்க, இன்னொரு பக்கம் தலித் மக்களிடையே இயங்கி, பொதுச் சமூகத்துக்கும் தலித் மக்களுக்கும் இடையிலான உரையாடலை, உறவை மேம்படுத்தி, அரசியலின் ஊழலுக்கு அப்பால் இயங்கும் தலித் அமைப்புகள் ஆகிய இரண்டு தரப்புகளும் அவசியமகின்றன.

காந்தியின் காலத்தில் ஆதிக்கசாதியினரிடையே அவர்களது மனசாட்சியைத் தட்டியெழுப்ப அவர் பணியாற்றியதுபோல் இன்று யாரும் செய்யக் காணோம். இரு தரப்பும் பிளவுபட்டு, உரையாடலும் உறவும் சாத்தியமற்ற சூழல் காணப்படுகிறது. தலித் அமைப்புகள்-கட்சிகள், இடதுசாரிகள், பெரியாரியர்கள், திராவிடக் கட்சிகள், காந்தியர்கள் போன்றோர் தங்கள் கருத்துவேறுபாடுகளைத் தூரத்தில் வைத்துவிட்டு சாதியொழிப்பை நோக்கியும் தலித் மக்கள் உள்ளிட்ட நசுக்கப்பட்ட மக்கள் அதிகாரம் பெறுவதை நோக்கியும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நிச்சயம் பெருமளவிலான மாற்றம் ஏற்படும். ஆனால், இங்கே தலித் அமைப்புகள், தலித் தலைவர்கள் காந்தியையும் காந்தியவாதிகளையும் அடியோடு வெறுக்கின்றனர். பெரியார் மீதும் கணிசமானோருக்கு விமர்சனம் உண்டு. இடதுசாரிகள் மீதும் முழு நம்பிக்கை இல்லை. இது ஒரு பக்கம் என்றால், காந்தியவாதிகளுக்கு அம்பேத்கர் ஒரு பொருட்டல்ல (காந்தி அப்படிக் கருதியவரல்ல), பெரியாரியர்கள் பலரும் பிராமணியத்துக்கு எதிராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகவும் போராடிய அளவுக்கு தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. கீழ்வெண்மணி போன்ற பிரச்சினைகளில் தலித் மக்களுடன் நின்றவர்கள் இடதுசாரிகள். ஆனால், அவர்களில் பலரும் சாதியத்தை வர்க்கப் பிரச்சினையாக பார்க்கும் மனநிலையைத் தாண்டி வரவில்லை. இப்படி இரு தரப்பிலும் காணப்படும் வேறுபாடுகளால், பிளவுகளால் இழப்பென்பது தலித் மக்களுக்கும், லாபம் என்பது சாதியவாதிகளுக்குமாகத்தான் இருக்கிறது. இந்தப் பிளவு மேலும் மேலும் மோசமாகிக்கொண்டுதான் போகிறது. அதிகாரத்தை நோக்கிய தலித் மக்களின் பயணம் இதனால் அடைந்திருக்கும் பின்னடைவை முற்போக்காளர்கள் அனைவரும் ஆழமான அகவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

பொது மனசாட்சியைக் குறிவைத்து…

ஜனநாயகத்துக்குத் தேர்தல் எவ்வளவு அவசியமாக இருந்தாலும் தேர்தலுக்கு ஜனநாயகம் பொருட்டல்ல என்பதுதான் அம்பேத்கரில் ஆரம்பித்து திருமாவளவன் வரையிலானோரின் தோல்விகள் நமக்கு உணர்த்தும் உண்மை. அந்த அளவுக்கு சாதியத்துக்குள் பொதிந்துவைக்கப்பட்டிருக்கிறது நம் சமூகம். மற்றவர்களெல்லாம் கோபம் வந்தால் வன்முறையில் இறங்கலாம், கலவரத்தில் ஈடுபடலாம். ஒரு தலித் அப்படிச் செய்ய முடியாது. எதிர்க்க நினைத்தாலும் பாதிப்பு அவருக்குத்தான். அவர் ஒரு அடி கொடுத்தால் அவர் சமூகம் முழுமைக்கும் பல அடிகள் திருப்பி விழும். ‘அம்பேத்கர் நினைத்திருந்தால் நம்மீது வன்முறையைப் பிரயோகித்திருக்கலாம். அதற்குரிய எல்லா நியாயமும் அவருக்கு இருந்தது. ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் நம்மீது காறித் துப்பினாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று காந்தி கூறினார். தலித்கள் என்னவோ அகிம்சையை விரும்பித் தேர்ந்தெடுத்ததுபோல் நமக்குத் தோற்றமளித்தாலும் உண்மை என்னவென்றால் அவர்கள் திருப்பி அடிக்க முடியாதவாறு, அப்படிச் செய்தால் அவர்களுக்கே பாதிப்பு ஏற்படும்விதத்தில் இந்தச் சாதியச் சமூகம் அவர்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது. அதுதான் யதார்த்தம்! தலித்கள் அகிம்சையை மேற்கொண்டிருப்பது இருக்கட்டும், இந்தச் சமூகம் எப்போது அகிம்சைக்குத் திரும்பப் போகிறது என்ற கேள்விக்குப் பதில் காண வேண்டுமானால், தலித்களின் அதிகாரத்தை நோக்கிய பயணம் முன்திசையில் செல்ல வேண்டுமானால் பிளவுகளைக் கடந்த உரையாடலும் உறவாடலும் பொது மனசாட்சியைக் குறிவைக்கும் முயற்சிகளும் நடைபெற்றால் மட்டுமே சாத்தியம்! இது ஒரு கை ஓசையாக இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் கரகோஷமாக ஆக வேண்டும். ஒற்றுமையாய்க் கைகோத்துக்கொண்ட சாதியப் பெருமிதங்களை உள்வாங்கிக்கொண்டு பிரம்மாண்டமாய் இந்துத்துவம் எழுச்சி பெற்றிருக்கும் இந்தக் காலத்தில் முற்போக்காளர்கள் மட்டும் சிதறிக் கிடப்பது இந்தக் கனவைக் கனவாகவே வைத்திருக்கும் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.

 (2017-ல் வெளியான கட்டுரை)