Wednesday, June 18, 2025

க்ரியா ராமகிருஷ்ணன்: தமிழில் முன்னுதாரணமில்லாத ஒரு எடிட்டர் - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு


ஆசை

தமிழில் புத்தகக் கலாச்சாரம் என்பது இல்லை என்பது க்ரியா ராமகிருஷ்ணன் அடிக்கடி வெளிப்படுத்தும் வருத்தங்களுள் ஒன்று. புத்தகக் கலாச்சாரம் என்பது புத்தகங்கள் அதிகம் வெளியாகும் சூழல் அல்ல, புத்தகங்களுக்கு நம் வாழ்க்கையில் நாம் முக்கிய இடம் கொடுப்பதே புத்தகக் கலாச்சாரம். அப்படிப்பட்ட கலாச்சாரம் இல்லாமல் போனதன் விளைவுகளுள் ஒன்றுதான் தமிழில் எடிட்டர்களும் ‘கிட்டத்தட்ட’ இல்லாமல் போனது. அந்தக் குறையைப் போக்க வந்த முக்கியமான இருவர் – ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் (2020), நஞ்சுண்டன் (2019) – சமீப ஆண்டுகளில் காலமானது தமிழுக்கும் தமிழ்ப் பதிப்புத் துறைக்கும் பேரிழப்பு.

எடிட்டிங்கை க்ரியா ராமகிருஷ்ணன் எப்படி அணுகினார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு ‘எடிட்டிங்’ என்பதைப் பற்றித் தமிழ்ச் சூழல் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருந்தது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.

Friday, June 13, 2025

நிலாவுக்குப் போகும் வழி


அண்ணன்காரன் சொல்லிக்கொண்டிருந்தான்
'நான் பெரியவனாகி
சயன்டிஸ்ட் ஆகி
அயன்மேன் சட்டை கண்டுபுடிப்பேன்
தோர் சுத்தியல் கண்டுபுடிப்பேன்
கேப்டன் அமெரிக்கா கவசம் கண்டுபிடிப்பேன்
ஸ்பைடர்மேன்பூச்சி கண்டுபிடிப்பேன்'
கடற்கரை மணலில்
குழி தோண்டிக்கொண்டிருந்த
தம்பிக்காரனிடம் கேட்டால்
நாற்பத்தைந்து டிகிரியில் கையை
உயர்த்தி
நிலாவைக் காட்டிச் சொல்கிறான்
'இலா ஆவணும்'
நிலா பதறிப்போய்விட்டதைப்போல்
தெரிந்தது
நானே குத்துமதிப்பாக நிலாவாக இருக்கிறேன்
என்று புலம்ப ஆரம்பித்ததைப் போன்றும்
தெரிந்தது
சற்றைக்கெல்லாம்
நிலாவுக்குப் பரிதாப முகம்
'அம்மாவும் நிலா
ஆகணும்னா என்ன
செய்யணும்டி'
என்று கேட்டால்
'இந்த மண்ண நோண்டணும்'
என்கிறான்
'எப்போ வரைக்கும்
நோண்டணும்'
என்று கேட்டதற்கு
'நேத்தைக்கு வரைக்கும்'
என்று தலைநிமிராமல்
சொல்லிவிட்டுத்
தொடர்ந்து மண்ணைத் தோண்டுகிறான்
நான்கு திசையிலும்
அண்ணனின்
அயன்மேனையும்
தோரையும்
கேப்டன் அமெரிக்காவையும்
ஸ்பைடர்மேனையும்
காவலுக்கு நிறுத்திவிட்டு
மலைப்பாக இருந்தது எனக்கு
நிலாவுக்குப் போகும் வழியில்
இவ்வளவு மண்ணை யார் கொட்டியது என்று
அதனால்தான்
அம்மாவுக்காக அதையெல்லாம்
அப்புறப்படுத்திக்கொண்டிருக்கிறான்
-ஆசை

Tuesday, June 3, 2025

காஃப்காவின் முன் இரு சிறுமிகள் - காஃப்கா நினைவுநாள் சிறுகதை



ஆசை

1. சர்வீஸ் சாலை

அந்த நெடுஞ்சாலை மிகவும் பெரியது என்றாலும் அதன் ஓரம் நடப்பதற்கு நிறைய இடம் இருக்கிறது என்றாலும் அந்த சாலையில் செல்லும் மிக நீண்டதும் ஏராளமான சக்கரங்களைக் கொண்டதுமான லாரிகளையும் கண்டெய்னர்களையும் பார்க்க எனக்கு அச்சமாக இருந்ததால் அந்த நெடுஞ்சாலையின் இடது பக்கம் இருந்த சர்வீஸ் சாலை என்று சொல்விவிட முடியாத ஆனால் இணையாகச் செல்லும் மண்ணும் தார்ச் சாலையும் கலந்த அந்த சாலையில் குறுக்காக இறங்கி நடக்க ஆரம்பித்தேன். எங்கும் புழுதி மயம். நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்வதால் அங்கே ஓரத்தில் இருந்த புழுதி கிளம்புகிறது என்றால் இந்த சர்வீஸ் சாலையில் ஏன் இந்த அளவுக்குப் புழுதி என்று எனக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் காற்றே இல்லாத புழுக்கமான பகல் பொழுது இது. இந்தப் புழுதிக் காட்டில் சர்வீஸ் சாலையின் ஓரத்தில் வழக்கமாக நெடுஞ்சாலைகளில் இருப்பது போன்று டீக்கடை, பிஸ்கெட் சிகரெட் விற்கும் தண்ணீர் போன்றவை விற்கும் கடைகளும் இருந்தன.

Monday, June 2, 2025

அவரவருக்கான இசை! அவரவருக்கான ராஜா!



ஆசை

(இளையராஜா-75-ஐ முன்னிட்டு 04-06-18 அன்று ‘தி இந்து’ தமிழில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது)

நெடுந்தொலைவு போவது என்றால் பேருந்துப் பயணத்தைவிட ரயில் பயணம் மிகவும் வசதியானது மட்டுமல்ல அழகானதும் கூட. ஒருமுறை சென்னையிலிருந்து டெல்லி வரை ரயிலில் பயணித்திருக்கிறேன். இந்தியாவின் விதவிதமான நிலங்களை அந்த ரயில் பயணம் என் கண்களுக்குள் தொடர்ச்சியாகக் கொண்டுவந்து கொட்டிக்கொண்டே இருந்தது. பேருந்துகள் பெரும்பாலும் ஊர்களுக்கு உள்ளே செல்பவை. ரயில்களோ ஊர்களின் புறப்பகுதி வழியே செல்பவை. பெரும்பாலும் ஏழை எளிய மக்களின் கொல்லைப்புறம் வழியாகச் செல்பவை என்று சொல்லலாம். அப்படிச் செல்லும்போது எத்தனையோ விதமான மனிதர்கள், கிழிந்த உடைகள், அழுக்கு உடைகள், வெறித்த பார்வை, ஒவ்வொரு ஊரிலும் ரயிலுக்கு டாட்டா காட்டும் குழந்தைகள்… கூடவே, ஒவ்வொரு ஊரின் நிறத்தையும் காட்டும் வயல்கள், தரிசு நிலங்கள், இடையிடையே காடுகள், குன்றுகள், மலைப்பரப்புகள். மனிதர்கள் தென்படாவிட்டாலும் அந்த நிலப்பரப்புகள் ஏதேதோ உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டும், நம்மிடமிருந்து உணர்வுகளை எழுப்பிக்கொண்டும் இருக்கும். அங்கே நாம் இருக்க வேண்டும் என்ற உணர்வையும் அந்தக் காட்சிகள் ஏற்படுத்தும். இங்கே இருந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில் நம்மை அங்கேயும் இருக்க வைப்பது அந்தக் காட்சிகளின் தன்மை. ரயில் பயணத்தின் தன்மை. ஆகவேதான், இளையராஜாவின் இசையை நீண்ட ரயில் பயணத்துடன் ஒப்பிடவே நான் விரும்புவேன். நம் மனதுக்குள் அவருடைய இசை காட்டும் நிலப்பரப்புகள், எழுப்பும் உணர்வுகள், கற்பனைகள், இங்கே இருக்கும் நம்மை அங்கே இருக்க வைத்தல் என்று எல்லாவற்றையும் வைத்துத்தான் இதை உறுதியாகச் சொல்கிறேன்.

Tuesday, May 27, 2025

நேரு என்ற மாபெரும் சாகசக்காரர்


ஆசை


நேருவின் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்தை ராமச்சந்திர குஹா தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.

அது 1942-ம் ஆண்டு. காந்தி தனது ஆசிரமத்தில் காங்கிரஸ் கூட்டமொன்றை நடத்துகிறார். அந்தக் கூட்டம் முடிந்தவுடன் அலகாபாத் செல்வதற்காக ரயிலைப் பிடிக்க வேண்டிய அவசரத்தில் நேரு கிளம்புகிறார். ‘சீக்கிரமாகப் போய் ரயிலைப் பிடிப்பதற்குக் கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக’ என்று கஸ்தூர் பா, நேருவை ஆசிர்வதித்திருக்கிறார். அந்த அவசரத்திலும் நேருவுக்குக் கோபம் தலைக்கேறுகிறது. ‘காட்டுமிராண்டித்தனமான போர்களை அனுமதிப்பவர்தான் கடவுளா? விஷவாயு கொண்டு யூதர்கள் படுகொலை செய்யப்படுவதை அனுமதிப்பவர்தான் கடவுளா? ஏகாதிபத்தியமும் காலனியாதிக்கமும் வேட்டையாட அனுமதிப்பவர்தான் கடவுளா?’ என்ற ரீதியில் நேரு பொரிந்துதள்ளியிருக்கிறார். சுற்றிலும் அப்படியொரு அமைதி. கஸ்தூர் பாவை எதிர்த்துப் பேசும் தைரியம் காந்திக்குக்கூட கிடையாது. சங்கடமான இந்தச் சூழலில் காந்தி நுழைகிறார், “பா, ஜவாஹர்லால் என்ன சொல்லியிருந்தாலும் நம்மையெல்லாம் விட கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவர் அவர்தான்” என்கிறார்.

Thursday, May 8, 2025

பழிக்குப் பழி (பாலஸ்தீனக் கவிதை)

 

தாஹா முகம்மது அலி

(போர் ஆதரவாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய கவிதை)
**
சில சமயங்களில்… நான் ஆசைப்படுவதுண்டு…
என் அப்பாவைக் கொன்று
எங்கள் வீட்டைத் தரைமட்டமாக்கி
குறுகலானதொரு நிலத்துக்குள் என்னை விரட்டிய
அந்த மனிதனை ஒரு துவந்த யுத்தத்தில் நேருக்கு நேர் சந்திக்க வேண்டுமென்று
சில நேரங்களில் நான் ஆசைப்படுவதுண்டு.
அந்தச் சண்டையில் அவன் என்னைக் கொன்றுவிடுவான் எனில்
நான் ஒருவழியாக நிரந்தர அமைதியில் ஆழ்ந்துவிடுவேன்…
இல்லையெனில், அவனைப் பழிவாங்கத் தயாராகிவிடுவேன்.
•ஆனால்,
துவந்த யுத்தத்தில் என்னுடைய எதிரியை எதிர்கொள்ளும்போது
அவனுக்காக வீட்டில் அவனுடைய அம்மா காத்துக்கொண்டிருப்பாள் என்பதோ,
குறித்த நேரத்தில் வராமல்
கால்மணி நேரம் தாமதித்தாலும்,
தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கும்
தந்தை ஒருவர் இருப்பார் என்பதோ
எனக்குப் புலப்பட்டால்
நான் நிச்சயம் அவனைக் கொல்ல மாட்டேன்,
என்னால் முடிந்தால்கூட.
• அதேபோல்… அவனுக்குத் தம்பிகளும் தங்கைகளும் இருப்பார்கள் என்பதையோ
அவன்மேல் மிகுந்த அன்பைக் கொண்டிருக்கும் அவர்கள்
அவனுக்காக ஏங்குவார்கள் என்பதோ
எனக்குத் தெரிய வந்தாலும்
அவனை நான் கொல்ல மாட்டேன்.
அவன் வீடு திரும்பும்போது அவனை வரவேற்க மனைவியொருத்தி இருந்தாலோ
அவனது பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத,
அவன் அளிக்கும் பரிசுகளால் குதூகலமடையும் குழந்தைகள் இருந்தாலோ
நான் அவனைக் கொல்ல மாட்டேன்.
அல்லது
அவனுக்கு நண்பர்களோ சகாக்களோ
தெரிந்த அண்டை வீட்டுக்காரர்களோ
சிறையில் மருத்துவமனையில் பரிச்சயமான கூட்டாளிகளோ
பள்ளித் தோழர்களோ இருந்தால்…
அவனைப் பற்றி விசாரிக்கக் கூடியவர்களோ,
அவனுக்கு வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பக் கூடியவர்களோ இருப்பார்கள் என்றால்
நான் அவனைக் கொல்ல மாட்டேன்.
• ஆனால்,
அவனுக்கு யாருமே இல்லை என்றாலோ
-அதாவது மரத்திலிருந்து துண்டிக்கப்பட்ட கிளையைப் போல அவன் இருப்பான் என்றாலோ-
அம்மா, அப்பா இல்லாமல்,
தம்பி, தங்கைகள் இல்லாமல்
மனைவி இல்லாமல், குழந்தைகள் இல்லாமல் அவன் இருந்தாலோ
உற்றார் உறவினரோ அண்டை அயலாரோ
நண்பர்களோ சகாக்களோ கூட்டாளிகளோ
இல்லாதவன் என்றாலோ
ஏற்கெனவே தனிமையில் வாடும் அவனுக்கு
மேலும் வேதனையை ஏற்படுத்த மாட்டேன்.
மரணமெனும் அவஸ்தையை,
இறந்துபோவதன் துக்கத்தைத் தர மாட்டேன்,
அதற்குப் பதிலாக,
தெருவில் அவனைக் கடந்துசெல்லும்போது
அவனைப் பொருட்படுத்தாமல் செல்வதையே விரும்புவேன்,
அவனைக் கண்டுகொள்ளாமல் விடுவதும்கூட
ஒரு வகையில் வஞ்சம் தீர்ப்பதுதான்
என்று எனக்குள் திருப்திப்பட்டுக்கொள்வேன் நான்.
-(நாசரேத், ஏப்ரல் 15, 2006) -தாஹா முகம்மது அலி (1931-2011), பாலஸ்தீனக் கவிஞர்,
-ஆங்கிலத்தில்: பீட்டர் கோல், தமிழில்: ஆசை

Monday, May 5, 2025

21-ம் நூற்றாண்டுக்கு மார்க்ஸ் என்ன சொல்கிறார்? மார்க்ஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை


 

யானிஸ் வரூஃபக்கீஸ்

(தமிழில்: ஆசை)

ஒரு அரசியல் அறிக்கை வெற்றிபெற வேண்டுமென்றால் அது ஒரு கவிதையைப் போல நம் இதயத்துடன் பேச வேண்டும். அதே நேரத்தில் நம் மனதில் அசாதாரணமான புதிய படிமங்களையும் கருத்துக்களையும் விதைக்க வேண்டும். நம்மைச் சுற்றி நிகழும் குழப்பம் நிறைந்த, வருத்தமளிக்கக்கூடிய, பரவசமான மாற்றங்களின் உண்மைக் காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளும் வகையில் நம் கண்களை அது திறக்க வேண்டும்.

கூடவே, நம் தற்போதைய சூழல் தன்னுள் கருக்கொண்டிருக்கும் சாத்தியங்களையும் அது வெளிக்காட்ட வேண்டும். இந்த உண்மைகளை நாமே அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போய்விட்டதே என்று நம் இயலாமையை நினைத்து நம்மை வருத்தப்பட வைக்க வேண்டும். மிகவும் பிற்போக்கான கடந்த காலத்தையே திரும்பத் திரும்ப உற்பத்திசெய்வதில் நாமும் கொஞ்சம் உடந்தையாகத்தான் இருந்திருக்கிறோம் என்ற சங்கடமான உண்மையை நாம் உணர்வதற்குத் தடையாக இருக்கும் திரையை அது அகற்ற வேண்டும்.

Friday, April 25, 2025

ஒரு ராணுவ வீரரின் குடும்பத்தினர்கூட போர் வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள்!- ராணுவ வீரரின் மகனும் போர்ச் செய்தியாளருமான ஜி.கிருஷ்ணன் பேட்டி



உரத்த குரலில் ‘போர் வேண்டும், போர் வேண்டும்’ என்று ஆளுக்காள் கூவிக்கொண்டிருக்கும் காலத்தில் ஜி.கிருஷ்ணனின் குரல் நிதானமானது. அமைதியை விரும்புவது. ராணுவ வீரரின் குடும்பத்தில் பிறந்து போரைப் பற்றிய கசப்பான நினைவுகளைச் சுமந்து, பின்னாளில் போர் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் செய்தியாளராகப் பணியாற்றியவர். ‘தி இந்து’, ‘அசோசியேட்டட் பிரஸ்’ என்று அவருடைய இதழியல் பணி இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளாவிய பரப்பைக் கொண்டது. தற்போது பாலக்காட்டில் தன் மனைவியுடன் வசித்துவரும் ஜி.கிருஷ்ணனுடன் நடத்திய உரையாடலிலிருந்து…

Wednesday, April 23, 2025

50% சிறப்பு விலையில் என் நூல்களும் மகிழ் ஆதன் நூல்களும்!


அனைவருக்கும் உலகப் புத்தக தின நல்வாழ்த்துகள்! இத்தருணத்தை முன்னிட்டு எனது கவிதைத் தொகுப்புகளும், குட்டிக் கவிஞன் மகிழ் ஆதனின் கவிதைத் தொகுப்புகளும் 50% சிறப்பு விலையில் கிடைக்கும். (தனியாகவும் மொத்தமாகவும் உண்டு). இந்தச் சலுகை ஏப்ரல் 30 வரை மட்டுமே. இந்தத் திட்டத்துக்குப் பேராதரவு தரும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நண்பர்கள் இந்தப் பதிவைப் பகிர்ந்துகொண்டால் மகிழ்வேன். விவரங்கள் மேலே உள்ள படத்தில்!

இது தவிர ‘எதிர் வெளியீடு’ அறிவித்துள்ள சலுகைத் திட்டத்தின் கீழ் எனது மூன்று புதிய நூல்களான ‘உயரத்தில் ஒரு கழுவன்’ (சிறுகதைத் தொகுப்பு), ‘மாயக்குடமுருட்டி’ (காவியம்), ‘ஹே... ராவண்!’ (கவிதைத் தொகுப்பு) ஆகியன 25% சலுகை விலையில் கிடைக்கும்.



Sunday, April 20, 2025

புனித கல்லறையர் சொன்ன சுவிசேஷம்


தேவனே
நீர் உம்மை
உயிருள்ள அப்பமும்
திராட்சை ரசமும் என்றீர்
நானோ
உயிருள்ள கல்லறையாக
இருக்கிறேன்
யாரேனும் திறந்து பார்த்தால்
இப்படி
வெட்டவெளியைப்
புதைத்துவைத்திருக்கிறார்களே
என்ன மடத்தனம்
என்று காறியுமிழ்வார்கள்
மேலும்
வாழ்வது கல்லறை சுமப்பதற்கான
கூலி
என்று நான் எழுதிக்கொண்ட
கல்லறை வாசகத்தைப் பார்த்து
உம் வாக்காக
எடுத்துக்கொண்டு
எல்லோரும்
அஞ்சி அகன்றுவிடுகிறார்கள்
சிலுவை சுமத்தலுக்குக்
கிடைத்த வெளிச்சம்
கல்லறை சுமத்தலுக்குக்
கிடைப்பதில்லையே
என்ற கடுப்பில்
உமக்கே நான் செய்த
இடைச்செருகல் அது
சிலுவையில் மரித்தபின்
உம்மையும்
ஒரு கல்லறையில்
கொண்டுபோய்
வைத்தார்கள்
மூன்று நாட்கள் கூட
தாக்குப்பிடிக்க
முடியவில்லை
இப்போதாவது
ஒப்புக்கொள்ளுங்கள்
கல்லறை சுமத்தலில்
நான்
எவ்வளவு பெரிய
வீரன் என்று
-ஆசை, வெளிவரவிருக்கும் ‘திருவயிற்றின் கனி’ கவிதைத் தொகுப்பிலிருந்து...

Friday, April 18, 2025

புனித வெள்ளியின் உதிரத் துளி


இவ்வெள்ளியின்
தரையில்
ஆழ ஊன்றியிருக்கிறது
ஒரு புனித மனம்
அசைவாடா கிளைபோல
தொய்ந்திருக்கும் தலை
களைப்பு நிரம்ப
இனி
இடமில்லா உடல்
கீழிறங்கும்
ஒவ்வொரு சொட்டும்
தரையின் ஆழத்துக்குள்
மேலும் மேலும்
ஒரு அடி என
இறுதிச் சொட்டு
பூமியின் மையத்தை
எட்டியதும்
பெருங்குரலொன்று
ஓவென்றெழுந்து
அண்டம் உலுக்கியது
ஆதியிலிருந்து
அங்கே குமைந்திருப்பதும்
எல்லா உதிரச் சொட்டுகளின்
ஆகர்ஷணப் புள்ளியாய்
அமைந்திருப்பதும்
படைப்பின்போது
பிதாவிடமிருந்து பிய்ந்து தங்கியதுமான
ஆதாரவலியின் குரல் அது
‘என் தேவனே என் தேவனே
என்னை ஏன் கைவிட்டீர்’
என்றபோது
விசும்பி எழுந்தாலும்
வெளிப்பட விரிசலில்லாமல்
தவித்த குரல் அது
ஒரு சொட்டு
தட்டிக் கதவகற்ற
வீறிட்டெழுந்து
மூன்றாம் நாளில்
கல்லறை பெயர்த்ததும்
எழுப்பித்ததும்
உயிர்ப்பித்ததும்
விண்ணேற்றியதும்
அக்குரலே
அக்குரலை எட்டுமொரு
சொட்டு
எம்முடலிலும்
தாருமென் பிதாவே
அது
கண்ணீராக இருந்தாலும் சரி
உதிரமாக இருந்தாலும் சரி
-ஆசை

Wednesday, April 16, 2025

மகிழ் ஆதன்-13: சிறப்புப் பகிர்வு



கவிஞரும் எங்கள் மகனுமான மகிழ் ஆதனுக்கு இன்று 13-ஆம் பிறந்த நாள். இன்று அவர் பதின்பருவத்தில் அடியெடுத்துவைக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. மகிழ் ஆதனின் கவிதைகளுள் சிலவற்றை இங்கே படிக்கலாம்.

மகிழ் ஆதனின் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ (2021) தொகுப்பிலிருந்து…



1.
பூக்கள் நம்மளை
வாசனை ஏத்த வைக்கும்
நம்மள்
புல்லாங்குழல் வைச்சு
வாசனை ஏத்த வைப்போம்


2.
என் வெயில்
என் முகத்திலே பட்டு
நினைவாய் ஆகிறது

3.
கண்முத்தம்
பறவை முத்தம்
ஊதா முத்தம்
மனசு முத்தம்
ஏசப்பா முத்தம்
நீலப்பறவை முத்தம்


4.
நான் பறவை ஒளி
நீ பறவை கண்காட்சி
நான் முந்திரிக் கண்
நீ முத்தம் கண்

5.
சிறுத்தைக் கண்
என்மீது பாயும்போது
ஒரு நடு ஒளி வரும்

6.
நீலத்துக்குள்ளே வட்டம்
வட்டத்துக்குள்ளே நான்
எனக்குள்ளே ரயில் பூச்சி

7.
எரிகல்
வானத்தில் இருக்கும்போதே
வானத்தைக்
காதலிக்கும்


8.
மழைச் சொட்டுக்கள்
என் கண்ணில் விழுந்து
என் கண்
பழச்சொட்டுக்களாக மாறும்


9.
நான்தான்
உலகத்தை வரைந்தேன்
வானத்தில் மிதந்தேன்
வானத்தை நான்
கையில் பிடித்துக் கூட்டிச்சென்றேன்
வானம் என்னைக்
காற்றால் கட்டிப்போட்டது
கட்டிப்போடும் நேரத்தில்
சூரியன் என்னை வரைந்தது
         -மகிழ் ஆதனின் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’
         தொகுப்பிலிருந்து.
         நூலைப் பெற: வானம் வெளியீடு – 91765 49991    

**

மகிழ் ஆதனின் ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’ (2022) கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்…



1.

காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்
காலத்தில் பறப்பான்
காலத்தை நேரில் பார்ப்பான்
காலத்தைக் கற்பனை பண்ணிப்பான்

2.
காலம் என்றால் என்ன
அது ஒரு பூ
அந்தப் பூவுக்குள்
ஒரு உலகம் இருக்கிறது


3. காலத்தின் சொல்

காலத்திற்கு வடிவம் இருக்கா
சொல்லுக்கு முடிவு இருக்கா
காலத்திற்கு இடம் உண்டா
சொல்லுக்கு வெளிச்சம் உண்டா
காலத்திற்கு வீடு இருக்கா
சொல்லுக்கு முத்தம் இருக்கா
காலத்திற்குக்  கனவு இருக்கா
சொல்லுக்கு உடம்பு இருக்கா
காலத்திற்கு உணர்வு இருக்கா
சொல்லால் வளர முடியுமா
சொல் என்றால் என்ன
அது ஒரு நிறம்
காலம் என்றால் என்ன
அது ஒரு புதிய மண்


4. புதிய காலம்

காலத்தின் அழகு
கண்ணால் மறைந்து
காதால் தெரியும்

நான் காலத்தின் மேல்
காலத்தின் வெளிச்சத்தை வரைந்தேன்

காலம் ஒரு கற்பனை

அந்தக் கற்பனையை
நான் உடைத்தேன்

காலத்துக்குள் ஒரு புதிய காலம்
பிறக்கிறது


5. பகலிரவு

பகல்
வண்ணங்களின் நிழலைக்
காட்டும்

இரவு
வண்ணங்களின்
கலைந்த கனவைக் காட்டும்

பகல்
ஒளியின் கோடு

இரவு
வண்ணங்களின் திட்டம்

பகல்
பார்வையின்  ஒளி

இரவு
வெளிச்சத்தின் குளிர்


6. நமக்குள் கருந்துளை

கருந்துளை காலத்தை முழுங்கியது
நம்மள் கருந்துளைக்குள் இருக்கிறோம்
கருந்துளை ஒரு கருப்புபூதம்
கருந்துளை  காந்தத்தின் கண்
காலத்தின் நிறம் கருப்பு
காலத்தின் நிறம்
கருந்துளையைக் கற்பனையில் உருவாக்கியது
கருந்துளை ஒரு கதையிலிருந்து வந்தது

நமக்குள் கருந்துளை

கருந்துளை
பூவுக்குள் தூங்கியது

காலமும் கருந்துளையும்
ஒரு பாட்டின் சந்தம்

கருந்துளை
சத்தத்தின் கனவு


7. எதிர்காலத்தில் வீசும் காற்று

பூக்கள்
பூக்களில் ஒட்டும் காலம்

காலம்
ஒளியைக் கூறிச் செல்லும் காலம்

பூக்களின் நிறம்
காலத்தின் மேல்

காலம்
ஒரு தட்டில் தெரியும் முகம்

கனவு
ஒரு எதிர்காலத்தில் வீசும் காற்று

காலம்
காற்றின் நிழல்

காலம்
கண்கட்டும் பூச்சாண்டி

காலத்துக்குள்
கரைந்த மேகம் இருக்கு


8. காலம் என்றால்

காலம் என்றால் மேகம்
ஒளி
மழை
கடல்
பறவை
சிங்கம்
சத்தம்
காற்று
புலி
ஆறு
சுனாமி
சூறாவளி
காட்டு யானை
நெருப்பு
குளிர்
மண்
வாசனை
விசில் குருவி
இறகு
கிளி
பச்சை
மான்
உலகம்
காலம் என்றால் கதை சொல்லும் பூ
          - மகிழ் ஆதனின் ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’
           தொகுப்பிலிருந்து.
           நூலைப் பெற: எதிர் வெளியீடு – 99425 11302, 98650 05084

**

இன்னும் நூலாக்கம் பெறாத புதிய கவிதைகள்

1.
ரயில் பூச்சி
நீங்கள்
என் மனசைத் தொட்டால்
என் மனசு
புதிய இடமாக
ஆகும்

2. விக்கலால் இறந்துபோன எலி

ஒரு நாள் காலையில்
விக்கலால் இறந்துபோன எலி
இறந்த உடனே
தூரத்தில் இருந்து
கண்காணித்துக்கொண்டு இருக்கும் காகங்கள்
ஆசையால் பறந்துவந்து
இறந்த எலியைக் கொத்திக் கொத்திக்
கனவின் முடிவிற்கு வரவைத்தது

நானும் விக்கிக்கொண்டுதான் இருந்தேன்
இரண்டு நிமிடம்


3. அதிசயங்கள்

இயற்கை நமக்குத் தரும்
அதிசயங்கள்
நம் நினைவைப்
பூட்டுப் போட்டுப் பூட்டும்

அதிசயங்கள் சிட்டுக்குருவியின்
இறகில் வாழ்ந்துகொண்டு
இருக்கட்டுமே


4.
வானத்தின் ஜன்னல்
என் நினைவின் முயல்


5.
காட்டுக்கு அடங்கிய ஆடு
ஆட்டைப் பார்த்த பூக்கள்
மரத்திடம் என்ன சொன்னது
ஆட்டுக்கு வந்த பசிதான்
நம் எதிரி
ஆட்டின் மனசைப் பார்த்து ஓடிய புலி
காட்டுக்குள் ஆடிய ஒளி
காட்டின் சத்தம் பறவைகளின் இதயம்
காட்டுக்குள் நுழைந்த ஒளியின் பதில்
காடு காலத்தில் படுக்கும் பாய்
காட்டுக்கு வந்த தூக்கம்
உணர்வில்லாத மரம்


6.
‘பூவுக்குள் இருக்கும் தேன்
யாருக்காக ஒளிந்திரிக்கிது

பறவைகளின் குரல் தேனின் காதில்
புல்லாங்குழல் வாசித்தது

தேனின் நிறம் ஆசையின் புதையல்

தேனிடம் மாட்டிய சத்தங்களை
பூமியில் புதைத்தது

பூமியில் இருந்து சத்தத்தின் பூக்கள் பூக்கும்
அதில் இருந்த தேன்கள் சிரித்தன

பூவுக்குள் இருக்கும் தேன்
முத்தத்தின் இருள்

பூவின் மேல் படும் வெயில்
தேனுக்கான அலாரம்
**


மகிழ் ஆதன் உலகத்துக்கு நான் எழுதிய அறிமுகம்:

ஸ்பைடர்மேனால் வரையப்பட்டவன் – மகிழ் உலகத்துக்கு ஓர் அறிமுகம்


மகிழ் ஆதன் கவிதைகள் தொடர்பாக மேலும் விரிவாக அறிந்துகொள்ள கீழ்க்கண்ட கட்டுரைகளைப் படிக்கலாம்:


எஸ். ராமகிருஷ்ணன்:

https://tinyurl.com/4tswh7pu

https://tinyurl.com/sy24wtt3

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்: https://tinyurl.com/3anudu2f

சுந்தர் சருக்கை: https://tinyurl.com/yrrt7vk3

டாக்டர் கு.கணேசன்: https://tinyurl.com/3bredys2

மு.இராமநாதன்: https://tinyurl.com/bdaavhjj

ந. பெரியசாமி: https://tinyurl.com/yu3y94jk

The New Indian Express: https://tinyurl.com/543wx4zj

இந்து தமிழ் திசையின் ‘மாயாபஜார்’: https://tinyurl.com/5bzpcdts

குங்குமம்: https://tinyurl.com/4ak3pmwh

தமிழ் விக்கி: மகிழ் ஆதன் - Tamil Wiki