Friday, March 14, 2025

ஸ்டீவன் ஹாக்கிங் ஏன் நமக்கு முக்கியமானவர்?



ஆசை

(இன்று ஸ்டீவன் ஹாக்கிங் நினைவு நாள்) 

 'மரணத்தின் குகைவாயில் கண்ணுக்குத் தெரியும்போதுஎழுத்தில் ஒளி ஊடுருவுகிறதுஎன்று சுந்தர ராமசாமி ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலின் தொடக்கத்தில் எழுதியிருப்பார். அது ஸ்டீவனுக்கும் பொருந்தும்! ஆனால்அருகில் தெரிந்த குகைவாயிலைத் தனது அசாத்தியக் கற்பனையின் எரிபொருள் தந்த உத்வேகத்தின் மூலம் நெடியதாக்கிஇரண்டு ஆண்டுகளை 55 ஆண்டுகளாக ஆக்கிஇறுதியில் காலத்தின் குகைவாயில் என்ற கருந்துளைக்குள் போய் மறைந்தார்.

மரணத்தை வாழ்க்கை வென்ற தன் கதையைப் பற்றி ஸ்டீவன் கூறும்போது, “அகால மரணம் என்ற சாத்தியத்தை எதிர்கொண்டிருக்கும்போதுதான் இந்த வாழ்க்கையானது வாழத் தகுந்தது என்றும்நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளமாக இருக்கின்றன என்றும் உங்களுக்குப் புரிபடும்” என்றார். 

ஐன்ஸ்டைனை ஜொலிக்க வைத்த கிரகணம்!



ஆசை

(இன்று ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனின் 146வது பிறந்தநாள்)

சூரிய கிரகணங்களைப் பற்றி ஒவ்வொரு கலாச்சாரத்திலும் வெவ்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. சூரிய கிரகணங்கள் அழிவைக் கொண்டுவரும் என்றெல்லாம் நம்பிக்கைகள் நிலவுகின்றன. இவற்றில் எந்த வித உண்மையும் இல்லை. இந்த நம்பிக்கைகளுக்கெல்லாம் மாறாக 1919-ல் ஒரு சூரிய கிரகணம் ஏற்பட்டது.  அழிவையல்லமனித குலத்துக்கு ஒரு மகத்தான ஒரு விஞ்ஞானியைத்தான் அந்த கிரகணம் பரிசாகத் தந்தது. அவர் வேறு யாருமல்லஐன்ஸ்டைன்தான்.

Thursday, March 13, 2025

மர்ரே ராஜமும் பொக்கிஷப் பதிப்புகளும்!

மர்ரே-ராஜம்


ஆசை

மர்ரே-ராஜம் என்றழைக்கப்பட்ட ராஜம் (பிறப்பு: 22-11-1904, இறப்பு: 13-03-1986) தன்னலம் கருதாமல் தமிழுக்காக உழைத்தவர்களுள் ஒருவர்! கூடவே, தமிழர்களின் மறதியால் விழுங்கப்பட்ட மாமனிதர்களுள் ஒருவர். பழந்தமிழ் இலக்கியங்களை சந்தி பிரித்து, மலிவு விலையில் அவர் பதிப்பித்த நூல்கள் தமிழின் சமீப வரலாற்றின் சாதனைகளுள் ஒன்று. 1986-ல் ராஜம் மறைவுக்குப் பிறகு அவர் உருவாக்கிய பதிப்பு வளங்கள் கிட்டத்தட்ட முடங்கிப் போன நிலை! இந்த நிலையில் பழந்தமிழ் இலக்கியத்தை வெளியிடுவதற்காக 60-களில் ராஜம் ஏற்படுத்திய சாந்தி சாதனா அறக்கட்டளைக்கு அவரது நண்பரின் மகனும் ராஜத்தின் பங்குதாரருமான ஸ்ரீவத்ஸா 2001-ல் புத்துயிர் கொடுக்கிறார். அதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே பணிகள் முடிக்கப்பட்டுக் கைப்பிரதியாக இருந்த நூல்களெல்லாம் ஒன்றொன்றாக வெளிவரத் தொடங்கின. ‘தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி’, ‘வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி’போன்ற அகராதிகளும் ‘பெருங்காதை’, ‘வார்த்தாமாலை’, ‘ஸ்ரீதேசிகப் பிரபந்தம்’ போன்ற நூல்களும் வெளியாகின.

Wednesday, March 12, 2025

உப்பு சத்தியாகிரகம்: காந்தியின் வரலாற்று நடைப்பயணம்!


ஆசை

“தாக்குங்கள் என்று திடீரென்று உத்தரவு வரவே, ஏராளமான போலீஸ்காரர்கள் முன்னே செல்கிறார்கள். உப்பு ஆலையை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் சத்தியாகிரகிகளின் தலை மீது லத்தியால் தாக்குகிறார்கள். சத்தியாகிரகிகளில் ஒருவர்கூட அடியைத் தடுப்பதற்குக் கையை உயர்த்தவில்லை. மண்டை உடைந்து ரத்தம் தெறிக்க அப்படியே சரிகிறார்கள். அடுத்து வரும் வரிசைக்கும் தெரியும் தாங்கள் தாக்கப்படுவோமென்று. அவர்களும் முன்னே செல்ல, தாக்கப்பட்டு வீழ்கிறார்கள். உதவிக்கென்று நின்றிருக்கும் சத்தியாகிரகிகள் கீழே வீழ்ந்தவர்களைத் தூக்கிச் செல்கிறார்கள். எந்தக் கைகலப்பும் இல்லை, போராட்டமும் இல்லை” என்று எழுதுகிறார் அமெரிக்கப் பத்திரிகையாளர் வெப் மில்லர்.

Tuesday, March 11, 2025

வார்ஸன் ஷைர்: வீடென்பது சுறா மீனின் வாயானால்...

வார்ஸன் ஷைர்

ஆசை
(அறிமுகமும் கவிதைகளின் மொழிபெயர்ப்பும்)


சம காலத்தின் முக்கியமான இளம் பெண்கவிஞர்களுள் ஒருவர் வார்ஸன் ஷைர் (Warsan Shire). சோமாலியப் பெற்றோருக்கு கென்யாவில் 1988-ல் பிறந்தவர் வார்ஸன் ஷைர். சிறு வயதிலேயே இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்த வார்ஸன் ஷைர் லண்டன்வாசியானார். பிரிட்டனைத் தாயகமாக்கிக்கொண்டாலும் அங்கே ஒரு அந்நியராகவே வார்ஸன் ஷைர் தன்னை உணர்கிறார்.

தனது பூர்வீக நாடான சோமாலியாவுக்கு வார்ஸன் ஷைர் போனதே இல்லை என்றாலும் தனது எழுத்துகளின் வாயிலாக ஆப்பிரிக்கக் கலாச்சாரம், ஆப்பிரிக்கர்களின் வலி, அகதி வாழ்க்கையின் துயரம், குறிப்பாக அகதிப் பெண்களின் துயரம் போன்றவற்றை வார்ஸன் ஷைர் தொடர்ந்து பதிவுசெய்கிறார். தன் பூர்வீக நாட்டவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் குரலில் அவர்கள் தேசத் தொல்கதைகளை வார்ஸன் ஷைர் பதிவுசெய்துகொள்கிறார். பிறகு, அவற்றுக்குத் தன் கவிதைகளில், இன்ன பிற எழுத்துகளில் உரு கொடுக்கிறார்.

Monday, March 10, 2025

இமையத்தின் ‘சாரதா’ கதையும் மகிழ்ச்சிக்கு எதிரான இந்திய சமூகமும்

இமையம்


ஆசை

(இன்று இமையத்தின் பிறந்த நாள்)

இமையத்தின் நாவல்கள் அளவுக்கு அவருடைய பல சிறுகதைகள் முக்கியமானவை. சாதியத்தின் நுண்ணடுக்குகள், பசி, ஏழ்மை, ஏழ்மையின் மீது நவீன வாழ்க்கை நடத்தும் தாக்குதல்கள், பெண்களின் – குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் – உலகம், அரசியல், காதல் என்று பல பேசுபொருள்களில் அமைந்தவை இமையத்தின் கதைகள். இவையெல்லாம் தனித்தனியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்திருப்பதுதான் இமையத்தின் கதைகளின் தனிச் சிறப்பு. இந்தியச் சமூகமும் அப்படித்தானே.

Saturday, March 8, 2025

மகளிர் தினத்தில் காந்தியையும் ஏன் நினைவுகூர வேண்டும்?



ஆசை

பகுதி-1

இன்று 'உலக மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது. வரலாறு படைத்த பெண்கள், வரலாற்றால் மறைக்கப்பட்ட பெண்கள் போன்றோரை இன்று நினைவுகூர்வது வழக்கம். பெண்ணுரிமை வரலாற்றில் பெண்களின் பங்கை முதன்மையாகச் சொல்ல வேண்டியது முக்கியம். அதே நேரத்தில் பெண் முன்னேற்றத்துக்காக ஒரு வகையிலோ பல வகைகளிலோ போராடிய ஆண்களையும் நினைவுகூர்வது அவசியம். இந்திய வரலாற்றில் புத்தரில் தொடங்கி பிற்காலத்தில் ராஜாராம் மோகன்ராய், ஜோதிராவ் பூலே, காந்தி, அம்பேத்கர், பெரியார் முதலான பல ஆண் தலைவர்கள் பெண்களின் முன்னேற்றத்துக்குப் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். பெண்கள் முன்னேற்றத்துக்கு காந்தி ஆற்றிய பணிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

Friday, March 7, 2025

ஒரு பொம்மலாட்டம் நடக்குது! - ஒட்டுண்ணிகளின் மர்மக் கதை


ஆசை

ஒருநாள் உங்கள் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு ஒருவர் உள்ளே நுழைகிறார். “ஏன் கதவை உடைத்தாய்?” என்று அவரைக் கேட்பதற்குள் அவர் உங்களை காபி கொண்டுவரச் சொல்கிறார். ஒய்யாரமாக உங்கள் வீட்டு சோபாவில் உட்கார்ந்துகொள்கிறார். உங்களை ஓடிப்போய் சரவணபவனில் நானும் பனீர் பட்டர் மசாலாவும் வாங்கிவரச் சொல்கிறார். நீங்களும் அவர் சொன்னதையெல்லாம் அப்படியே செய்கிறீர்கள். அது எல்லா விஷயங்களிலும் தொடர்கிறது. உங்கள் சம்பளப் பணத்தை அப்படியே அவரிடம் தந்துவிடுகிறீர்கள். உங்கள் வீட்டை அவர் பேருக்கு எழுதித் தந்துவிடுகிறீர்கள். கடைசியில் அந்த வீட்டை அவரிடம் ஒப்படைத்துவிட்டு நீங்களே வெளியேறிவிடுகிறீர்கள். இப்படியெல்லாம் நமக்கு நடந்தால் எப்படி இருக்கும்!

Thursday, March 6, 2025

தான்தான் கடவுள்



தன் வாழ்நாள் முழுவதும்
சிரமப்பட்டு
இந்த ஒரே ஒரு தேன்சிட்டைப்
படைத்தார் கடவுள்
பிறகு தேன்சிட்டுக்கென்று
தேனையும்
தேனுக்கென்று பூவையும்
பூவுக்கென்று செடியையும்
செடியிருக்கத் தரையையும்
தரைக்கென பூமியையும்
பூமிக்காக வானம்
நட்சத்திரங்களென்று
யாவற்றையும் படைத்தார் கடவுள்
எல்லாம் தனக்காகப்
படைக்கப்பட்டிருந்தாலும்
எதைப் பற்றியும்
கவலைகொள்வதில்லை
இந்தத் தேன்சிட்டு
பிரபஞ்சத்தின் எந்த விதிகளையும்
மதிப்பதில்லை
கடவுள் இருக்கிறாரா
இல்லையா என்றுகூட
எண்ணிப் பார்ப்பதில்லை
பாருங்கள்
போகிறபோக்கில்
காலத்தின் உள்ளங்கையில்
எப்படி அது எச்சமிட்டுப் போகிறது
என்பதை
என்னவோ தான்தான்
கடவுள் என்பதைப் போல

-ஆசை, கொண்டலாத்தி (2010, க்ரியா) கவிதைத் தொகுப்பிலிருந்து 

Wednesday, March 5, 2025

இந்தப் பிரபஞ்சத்தின் மையம் எது?

  


டெனிஸ் ஓவர்பை

இந்தப் பிரபஞ்சம் ஏதோ ஒரு இடத்தில் தொடங்கியது என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையல்ல. பிரபஞ்சத்தின் பிறப்புக்குக் காரணமான பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்தது இடத்தில் அல்ல, காலத்தில்.

பெருவெடிப்பு நிகழ்ந்தது எங்கேஎன்று என்னிடம் பலரும் அடிக்கடி கேட்பதுண்டு. கையெறி குண்டு ஒன்று வெடிப்பதைப் போன்று பிரபஞ்சம் விரிவதையும், அந்தக் கையெறிகுண்டின் சிதறல்கள் பறப்பதுபோல் சூரிய குடும்பத்தையும், பால்வெளியையும் கற்பனை செய்துகொண்டு இது போன்ற கேள்வியைக் கேட்கிறார்கள்

Tuesday, March 4, 2025

ஆன்மா என்பது உடலின் சிறை


நீ என்மேல்
படரும்போது
முதன்முறையாக
என்மேல்
தோல் போர்த்தியதுபோல்
இருக்கும்
உன் தொடுதலின்
பரப்பில் எதிர்பட்ட
என் உடலின் பரப்பெல்லாம்
புலனெல்லாம்
தத்தமது உணவுக்கான
ஒளிச்சேர்க்கையை
நடத்திக்கொள்ளும்
உன் உடல்
என்னுடலில்
தனக்கான
இன்பத்தின் கனிகளைக்
கொய்து
எனக்கான கனிகளைக்
கொட்டிவிட்டுச்செல்லும்
அதில் எடுத்து
நான் கொறிக்கும்
கனியொன்று
யோனிக்கருப்பில்
கனிந்திருக்கும்
இன்னொன்று
முலைத்திரட்சியில்
திரண்டிருக்கும்
மற்றொன்று
உதட்டுச் சிவப்பில்
சிவந்திருக்கும்
நாம் நீக்கமற
ஒருவரையொருவர்
புசித்துக்கொள்வதற்கான இடமே
இவ்வுடல்கள்
என்றறி
நீ உண்ணும் கனி
எனக்கான கனியாய்
மாறும் விளையாட்டு
இது என்றறி
ஒவ்வொரு அங்குலமாக
என் உடலில் நீ ஏறும்போது
அவ்வவ்விடங்களின்
ஆன்மாவைத் தேடாதே
ஆன்மா என்பது
உடலின் சிறையென்றறி*
ஆன்மாவிலிருந்து
உடலை விடுவிக்கவே
நம்
ஒட்டுமொத்த இன்பத்தையும்
கொண்டு
தாக்குதல் செய்துகொள்கிறோம்
ஏதோ எப்போதோ
உடலின் ரூபத்தை
ஆன்மா எடுத்துக்கொண்டுவிட்டது
அதனிடம் நீ உடலில்லை எனவும்
உடலிடம் நீதான் உடல்
உடல்தான் இறுதி எனவும்
சொல்ல நாம்
கடமைப்பட்டுள்ளோம்
நம் ஒவ்வொரு
அங்குலத்துக்கும்
நாவிருக்கிறது
அதைக் கொண்டு
ஒரு இடம் விடாமல்
சுவைப்போம்
நம் ஒவ்வொரு அங்குலத்துக்கும்
குறியுண்டு
அதைக் கொண்டு
ஒரு இடம் விடாமல்
புணர்வோம்
ஆன்மாவைத்
துரத்திவிட்டு
அந்த இடத்தில்
குடிபுகும்போது
நாம் இருவரும்
குறிகளாய் மட்டும்
எஞ்சுவது
எவ்வளவு பேரானந்தம்
நம் குறிகள்
பிரபஞ்சத்தின்
இரட்டை விண்மீன்களாய்
பதிந்துவிட
வீழ்ந்த தேவதையான
ஆன்மா தூரத்திலிருந்து
தன் கப்பல் திசைக்கு
நம்மை விண்மீன் பார்ப்பது கண்டு
ஒருவரையொருவர் பார்த்து
நாம் சிரித்துக்கொள்வோம்
-ஆசை, குவாண்டம் செல்ஃபி (2021) தொகுப்பில் இடம்பெற்ற கவிதை
*ஆன்மா என்பது உடலின் சிறை: மிஷேல் ஃபூக்கோ

Thursday, February 27, 2025

நாளை காப்பாற்றலாம்



மனம் சிதறுண்டு
ஒருவன்
உட்கார்ந்திருக்கிறான்
அவன்
தனது கழிவிரக்கத்தைச்
சிற்பமாகச் செய்து
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை
சிதறலின் இடைவெளிக்கு அப்பால்
கொஞ்சமே கொஞ்சம் தெரியும்
மிச்ச வாழ்க்கை
தன்னைப் போல் இருக்கிறதா
என்று மட்டும் பார்த்துக்கொண்டே
இருக்கிறான்
உங்களுக்கு அவன்
தன் சிதறலுக்கு
மாடலாய்
உட்கார்ந்திருப்பதாகத்
தோன்றலாம்
இந்தக் கிறுக்குத்தனத்திலிருந்து
எப்படியாவது
அவனைக் காப்பாற்ற வேண்டும்
என்று நீங்கள் துடிதுடிக்கலாம்
உங்களிடம்
அவனைக் காப்பாற்றுவதற்கான
எல்லா உபாயங்களும்
ஆயுதங்களும்
கருவிகளும்
இருக்கலாம்
இது அவனுக்கும்
பரிபூரணமாகத் தெரியும்
ஆனால்
உங்கள் அன்பையும் அக்கறையையும்
சிதறல்களை ஒட்டும் பசையையும்
சிதறலின் வேர்களைக்
கண்டுபிடிக்கும் கருவிகளையும்
நாளைக்குக் கொண்டுவாருங்கள் என்றும்
வெளியேறும் வெற்றிடத்தின்
ஓசையை
சிறிது நேரம்
கேட்டுக்கொண்டிருக்க மட்டும்
அவனை அனுமதியுங்கள்
என்றும்
அவன் சொல்லத் தெரியாமல்தான்
உங்கள் முன் சீறி வெடிக்கிறான்
என்பதை
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்
அவனை
நாளையோ
நாளை மறுதினமோ
நிச்சயம்
நீங்கள் காப்பாற்றிவிடுவீர்கள்

            -ஆசை

Wednesday, February 26, 2025

பசி, பட்டினியைத் தமிழகம் விரட்டியடித்த வரலாறு முக்கியமானது! - பொருளியலாளர் ஜெயரஞ்சன் பேட்டி


 

ஆசை


பொருளாதாரம் எப்படி நம் அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கிறது, அரசின் பொருளாதார முடிவுகளெல்லாம் எப்படிக் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் தாக்கமும் பாதிப்பும் ஏற்படுத்துகிறது என்பதையெல்லாம் எல்லோருக்கும் புரியும் விதத்தில் எழுதுவதில் வல்லவர் பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன். பணமதிப்பு நீக்கத்தின்போது இவர் எழுதிய ‘கருப்புப் பணமும் செல்லாத நோட்டும்’ நூல் பெரும் புகழ்பெற்றது. தற்போது ‘தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை’ என்ற இவரின் புதிய புத்தகம் வெளியாகியிருக்கும் சூழலில் அவருடன் உரையாடியதிலிருந்து...

தமிழில் பொருளாதாரம் சார்ந்த எழுத்துகளின் நிலை எப்படி இருக்கிறது?

ரொம்பவும் குறைவுதான். நான் படிக்கும்போது தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தமிழ் வழிக்கல்விக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்தது. முக்கியமான பொருளாதாரப் புத்தகங்களை ஒருசில நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்திருந்தார்கள். அதற்குப் பிறகு படிக்கவே முடியாத அளவுக்கு மோசமான மொழிபெயர்ப்புகள் வர ஆரம்பித்தன. அதற்குப் பிறகு பொருளாதாரம் சார்ந்த எழுத்துகள் இரண்டு வகையாக இருந்தன. முதல் வகை நிதி ஆலோசகர்களின் எழுத்து. பங்குச் சந்தையில் எப்படிப் பணம் போடுவது, தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்பது போன்று எழுதுபவர்கள் அதிகம். அதை விட்டால் இரண்டாவதாக, இடதுசாரி சிந்தனையாளர்களின் எழுத்து. இதைத் தாண்டி, பொருளாதாரத்தைத் தமிழில் விரிவாக விளக்கி எழுதியதுபோல் எனக்கு யாரும் நினைவில் இல்லை.

Tuesday, February 25, 2025

மன்னார்குடி உங்களை வரவேற்கிறது ஞானக்கூத்தன்! - மாயக்குடமுருட்டி காவியத்திலிருந்து...


ஆசை

வணக்கம் ஞானக்கூத்தன்
மன்னார்குடி உங்களை வரவேற்கிறது

நீங்கள் பிறந்த திருஇந்தளூர் சென்றுவிட்டு
கும்பகோணம் வழியே
மன்னார்குடி வந்திருக்கிறீர்கள்
நன்றி

பாரம்பரிய மிக்க ஊர் இது

Monday, February 24, 2025

அதிகம் நம்மைக் கொல்லும்!


ஆசை

முதன்முதலில் ஊரிலிருந்து சென்னைக்கு வந்தபோது என்னை மலைக்கவைத்த, பயமுறுத்திய விஷயம் என்ன தெரியுமா? மக்கள் கூட்டம், வாகனங்கள், கட்டிடங்கள், கடைகள், கடைகளில் உள்ள பொருட்கள் என்று எதையெடுத்தாலும் மிதமிஞ்சிக் காணப்பட்ட நிலைதான். முதன்முதலில் சென்னைக்கு வந்து சட்டை, பேண்ட் எடுக்கப்போனபோது சரவணா ஸ்டோரைப் பார்த்து எனக்கு மயக்கமே வந்துவிட்டது. என்னுடைய அளவுக்கு நல்ல பேண்ட் வேண்டும் என்று கேட்டபோது வகைவகையாக என்னென்னவோ எடுத்துப் போட்டார்கள். ஊரில் இருந்தவரை எனக்குத் தெரிந்தது இரண்டுதான், ஒன்று சாதா பேண்ட். இன்னொன்று ஜீன்ஸ் பேண்ட். ஒரு பேண்ட் கேட்டதற்கு என் முன்னால் மலைபோல் குவித்துப் போட்டதும் எனக்கு எதை எடுப்பது என்று தெரியாமல் சங்கடத்துடன் நின்றேன்.

Saturday, February 22, 2025

பாவென்று அழையுங்களேன் பாபுஜி! - கஸ்தூர்பா காந்தி நினைவுநாள் கவிதை


இன்று கஸ்தூர்பா காந்தியின் நினைவு நாள். எனது ‘ஹே... ராவண்!’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற ‘பாவென்று அழையுங்களேன் பாபுஜி’ கவிதையை இத்துடன் பகிர்ந்துகொள்கிறேன்.

**
பாவென்று அழையுங்களேன் பாபுஜி
**
உடன் இருந்தபோது
இப்படி
என்றாவது
பாவைப்
பார்த்துக்கொண்டே
இருந்ததுண்டா பாபுஜி
உங்கள் பார்வை கண்டு
பா அஞ்சிய
காலம் உண்டு
பிறகு
பாவின் பார்வைக்கு
அஞ்ச ஆரம்பித்தீர்கள்
நீங்கள்
இன்று இரண்டுமில்லை
ஒருவழிப் பார்வை
மட்டுமே
பாவின் விழிகள்
இறுதியாய் வெறித்த
ஆகா கான் மாளிகையின்
உட்கூரை உச்சியாய்
அப்போது இருக்க
ஆசைப்பட்டீர்களா பாபுஜி
ஒரு மகாத்மா ஆவதற்கு
நிரம்பக் கல்நெஞ்சம்
வேண்டுமென்று
உடனிருந்து கண்டவர்
இன்று அதில் உங்களைத்
தோல்வியடையச் செய்துவிட்டுப்
போய்விட்டாரா பாபுஜி
எப்போதும்
ஏந்திப் பொறுத்துக்கொண்ட
பாவின் அகிம்சை முன்
உங்கள் உன்னத அகிம்சை
மேலும் தோற்றுப்போய்
அதனால்
துவண்டுபோய்
அமர்ந்திருக்கிறீர்களா பாபுஜி
பா என்று அழையுங்களேன்
பாபுஜி
அவர் விருட்டென்றெழுந்து
உங்களுக்கு
ஆட்டுப்பாலும் பேரீச்சையும்
கொண்டுவரப் போய்விடுவார்
பா என்று அழையுங்களேன்
பாபுஜி
அவர் சட்டென்றெழுந்து
உங்களுடன்
கேரம் விளையாட
உட்கார்ந்துவிடுவார்
ஆனால்
நீங்கள் மாட்டீர்கள்
கல்நெஞ்சக்காரர்
கேட்டால்
பாவுக்கு
அவள் துயர்களிலிருந்தும்
என்னிடமிருந்தும்
விடுதலை கிடைத்திருக்கிறது
என்று சாக்கு சொல்வீர்கள்
கூட
ஒரு துயரச் சிரிப்புடன்
- ஆசை

Friday, February 21, 2025

ஆக்டேவியோ பாஸ் கவிதைகள்

 


இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற ஆக்டேவியா பாஸின் ஆறு கவிதைகள்

1. விடியற்பொழுது

குளிர்ந்த விரைவான கரங்கள்
உருவிக்கொள்கின்றன 
இருளின் கட்டுத்துணியை
ஒவ்வொன்றாக

நான் கண் திறந்து பார்க்கிறேன்
  இப்போதும் 
நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
இன்னமும் புதிதாக இருக்கும் 
ஒரு காயத்தின் மத்தியில்

Thursday, February 20, 2025

மலேசியா வாசுதேவன் நினைவாக ஒரு கவிதை


இன்று மலேசியா வாசுதேவனின் நினைவு நாள். எனக்குப் பிடித்த பாடகர்களில் ஒருவர். எனது ‘குவாண்டம் செல்ஃபி’ கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதையை அவரது ‘வா வா வசந்தமே’ என்ற பாடலுக்குச் சமர்ப்பித்திருக்கிறேன். அந்தப் பாடலில் வரும் ‘தேவமின்னல்’ என்ற சொல்லால் உந்தப்பட்டு எழுதிய கவிதை அது. அந்தக் கவிதை இங்கே:

**
தேவமின்னல்
**
தீய்ந்து கருகிய வானின்
தேவமின்னல் நீ
கீழிருந்தே எழும்
சரமழை நீ
என்ன நினைக்குமந்த
வானம்
இத்தனை கத்திகள்
படையெடுத்து வந்தால்
குறுக்கே பறக்கும்
கொக்கே
வானம் தவிர்த்து
தரை தவிர்த்து
நேரே போய்க் கொத்தி
நுழைகிறாய்
முடிவின்மையில்
-ஆசை
புதுக்கவிதை படத்தில் இடம்பெற்ற ‘வா வா வசந்தமே’ பாடலுக்கு...

Wednesday, February 19, 2025

அமைதி மரம்


அமைதியின் மீது பறவை வந்தமரும்போதுதான் மரம் உண்டாகிறது மனம் உண்டாகிறது

-ஆசை

(தேவதேவனுக்கு)

Tuesday, February 18, 2025

பேஸிவ் ஸ்மோக்கிங் நாய்கள்


பேஸிவ் ஸ்மோக்கிங் நாய்களைப் பற்றி
முதன்முறையாகக்
கவலை கொண்டபோது
சம்பந்தமே இல்லாமல்
ஆன்மா பற்றிய
நினைப்பு
அவனுக்கு
தன் முன்னே கிடக்கும்
பேஸிவ் ஸ்மோக்கிங் நாய்க்கும்
தனக்கும் இடையிலான
எட்ட முடியாத ஒரு தொலைவு
ஆன்மாவுக்கும் தனக்கும்
இருப்பதால்
அப்படி நினைப்பு
ஆனால்
நாய் இருக்கிறது
ஆன்மா இருக்கிறதா இல்லையா
என்பது தெரியாது
அவனுக்கு
அப்படியென்றால்
இல்லாத இடத்திலிருந்து
இருக்கும் இடம் வரையிலான
தொலைவை
அளப்பது போன்றுதான்
இந்த ஒப்பீடே
அர்த்தமற்ற
இந்தத் தொடர் அளத்தலில்
அவன் அலுத்தும் களைத்தும்
போய்விட்டான்
ஆன்மா இருக்கிறதா
இல்லையா என்பதை
அறிந்தாக வேண்டும்
அதற்காகத்தான்
எலிவளைக்குள் செலுத்துவதுபோல்
இவ்வளவு புகை
ஆன்மா இருந்தால்
மூச்சுத் திணறி
வெளியே வந்து
ஓடட்டும்
வரமுடியாது போனால்
உள்ளேயே செத்து
அழுகிக் கிடந்து நாறட்டும்
ஆன்மா
இல்லவே இல்லை என்றால்கூட
பரவாயில்லை
வெற்றிடத்தைப் புகைபோட்டுப்
பழுக்க வைத்தவன் என்ற பெயர்
தனக்குக் கிட்டட்டும் என்று
தொடர்ந்து
புகைபோடுகிறான்
*புகைப்பிடித்தல் மனிதர்க்கும் நாய்க்கும் கேடு
தரும் (ஆன்மாவுக்கு என்ன தரும் என்று
தெரியாது)
-ஆசை

Monday, February 17, 2025

கொஞ்சமாய் ஏமாந்துதான் பாரேன்


’அன்னை ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து
வருகிறோம் சார்’
என்று ஒரு சிறு கண்ணாடிப் பெட்டியை
உன்னிடம் நீட்டுகிறார்கள்
இரண்டு பெண்கள்
அதில் இரண்டு மூன்று பத்து ரூபாய்த் தாள்கள்
ஒரு ஐம்பது ரூபாய் நோட்டு
சில பல சில்லறைகள்
இந்தக் காசெல்லாம் உண்மையில்
ஆதரவற்றோருக்குப் போய்ச்சேருமா
இல்லை அவர்கள் பேரில்
நடக்கும் ஒரு தொழிலா
என்று ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்
உனக்குள் பூவா தலையா
போட்டுப் பார்த்து நீயே விரும்பித்
தலையைத் தேர்ந்தெடுக்கிறாய்
இதெல்லாம் சில நொடிகளுக்குள்
பிறகு
’இல்லைம்மா’
என்று அனுப்பிவிடுகிறாய்
ஆனாலும்
நீ நிம்மதியாய் இல்லை
நீ கொஞ்சம் ஏமாறுவதற்காகக்
காத்திருக்கின்றன
எத்தனையோ பசித்த வயிறுகள்
கட்டிங்குக்காகத் தவிக்கும் வயிறுகள்
அவற்றின் மேல்
உன் பத்து ரூபாயை
நடக்க விட்டுத்தான் பாரேன்
எத்தனை பூ பூக்கும் என்று
பெரிதுபெரிதாய் ஏமாந்துபோவதால்
சிறிய ஏமாற்றுகளை
வஞ்சம் தீர்க்காதே
கொஞ்சம் ஏமாறுவதில் ஒன்றும்
குறைந்துபோய்விட மாட்டாய்
மேலும்
கொஞ்சம் ஏமாறுவதென்பது
21-ம் நூற்றாண்டின் இனிய ஆன்மிகம்
கொஞ்சம் ஏமாந்துதான் பாரேன்
அது
கொஞ்சம் உடம்புக்கும் நல்லது
-ஆசை