Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Thursday, October 9, 2025

கருத்துச் சுதந்திரமில்லாக் காலத்துக்கு காந்தி!



சுதந்திரம் பெற்றதற்குப் பிந்தைய இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்துக்கு மோசமான காலகட்டங்களாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று, நெருக்கடி நிலை காலகட்டம், இன்னொன்று தற்போதைய காலகட்டம். கடந்த 70 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், பாஜக உள்ளிட்ட வலதுசாரிக் கட்சிகள் என்று எதுவுமே கருத்து சுதந்திரப் பரிசோதனையில் மிஞ்சாது. சல்மான் ருஷ்தியின் ‘சாத்தானின் பாடல்கள்’ (The Satanic Verses) நாவலை காங்கிரஸ் அரசு தடைசெய்தது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ அரசு ஆண்டபோது தஸ்லிமா நஸ்ரினின் நாவலைத் தடைசெய்தது. ‘தி டாவின்சி கோட்’ திரைப்படத்தை திமுக அரசு தடைசெய்தது. பாஜக கட்சியும் சரி அரசுகளும் சரி அந்தக் கட்சி சார்பான அமைப்புகளும்சரி பல்வேறு புத்தகங்களுக்கும் பல்வேறு கலைஞர்களுக்கும் முட்டுக்கட்டை போட்டிருக்கின்றன. எம்.எஃப். ஹுசைன், சிவாஜியைப் பற்றிய ஜேம்ஸ் லைனின் புத்தகம் தொடங்கி பெருமாள் முருகன் வரை ஏராளமான உதாரணங்களைக் காட்டலாம்.

Monday, September 29, 2025

கரூர் துயரம்: தொண்டர்களைத் தயார்ப்படுத்தாத அரசியலின் விளைவு!


கரூரில் கூடிய யாரும் அரசியல்வாதி விஜய் பேசுவதைக் கேட்க வந்த தொண்டர்கள் இல்லை. நடிகர் விஜயைப் பார்க்க வந்த ரசிக வெறியர்கள். பெண்கள் உட்பட பலரும் முதல் நாள் இரவே அந்த இடத்தில் வந்து படுத்துக்கொண்டனர். 12 மணி நேரத்துக்கு மேலாக சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல் ஒன்றுக்குப் போகாமல் விஜய்க்காகக் காத்திருக்கிறார்கள். அதுதான் மயங்கி விழுந்திருக்கிறார்கள். நெரிசலில் மூச்சுத் திணறி இறந்திருக்கிறார்கள். விஜய் நேரத்துக்கு வந்திருந்தால் இவ்வளவு அசம்பாவிதம் நடந்திருக்காது. நடந்ததற்கு விஜய்தான் முழுமுதல் காரணம்.

எம்.ஜி.ஆர். தன் படங்களின் வழியே பொறுப்பான பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தார். திரையில் மது அருந்த மாட்டார், புகைப்பிடிக்க மாட்டார், ரவுடியிசத்தில் ஈடுபட மாட்டார். அவரது ரசிகர்களும் அவரைப் பின்பற்றினார்கள். எனக்குத் தெரிந்து என் நண்பரின் தந்தை ஒரு எம்.ஜி.ஆர். ரசிகர். இன்றுவரை மதுப் பழக்கம், புகைப்பழக்கம் கிடையாது. கேட்டால் தலைவர்தான் காரணம் என்பார். ஆனால், விஜய் இதற்கு நேரெதிர். தன் ரசிகர்களைத் தன் திரைப் பிம்பத்தைப் போலவே தற்குறிகளாக ஆக்கிவிட்டிருக்கிறார். அதுதான் இதற்கு காரணம். தன் ரசிகர்களை எந்த விதத்திலும் தயார்படுத்தாமல் அரசியலில் குதித்திருக்கிறார். 

சௌரிசௌரா வன்முறை (1922) நடைபெற்றபோது காந்தி வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருந்த ஒத்துழையாமையை, மக்கள் இன்னும் தயாராக ஆகவில்லை என்று கருதி நிறுத்திவிட்டார். இதற்காக அவர் இன்னும் விமர்சிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அந்தப் போராட்டம் தொடர்ந்திருந்தால் மேலும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கும்; அது மக்களுக்குத்தான் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்று காந்தி நன்கு அறிந்திருந்தார். அதற்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்தே உப்பு சத்தியாகிரகம் (1930) என்ற பெரிய போராட்டத்தை காந்தி முன்னெடுத்தார். அப்போது தொண்டர்கள் ஒரு பெரிய போராட்டத்துக்குத் தயாராக அரசியல்மயப்பட்டிருந்தார்கள். 

அதுமட்டுமல்ல காந்தி எந்தப் பகுதியில் போராட்டம் நடத்தச் சென்றாலும் அங்கே முதல் காரியமாக அங்குள்ள மக்களுக்கு போராட்டத்துக்கு அடிப்படையான கல்வியைப் புகட்டினார். சுத்தம், சுகாதாரம், ஒழுங்கு ஆகியவற்றைப் பேணுதல், எல்லோரும் ஒன்றாக சமைத்து உண்ணுதல், எல்லா வேலைகளையும் எல்லோரும் செய்தல் (கழிப்பறைகளைச் சுத்தம் செய்தல் உட்பட), கல்வி கற்பித்தல், தீண்டாமையைப் பின்பற்றாமல் இருத்தல் என்று அவர் மேற்கொண்டநடவடிக்கைகளில் மக்கள் அரசியல்மயமானார்கள். அதனால்தான் அவருடைய போராட்டங்கள் கட்டுக்கோப்பாக நடைபெற்றன. அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தாலும் போராட்டம் கட்டுக்கோப்பாக நடக்கும். அந்த அளவுக்குத் தனக்குக் கீழே அடுத்த கட்ட தலைவர்களைத் தயார்செய்திருந்தார். 

அதுபோன்று தலைமைகளுக்குத் தன் தொண்டர்கள் மீது கட்டுப்பாடு வேண்டும். எம்.ஜி.ஆருக்கு கூடாத கூட்டமா? ஆனால், விஜய்க்காகக் கூடியவர்களெல்லாம் தற்குறிகள். அவ்வளவு ஏன் விஜயகாந்த் கூட்டத்தில் யாராவது ஏதாவது செய்தால் விஜயகாந்த் மேடையில் இருந்தே மிரட்டுவதைப் பார்க்கலாம். விஜய் அப்படி எதுவும் செய்யவில்லை. மரங்களில் ஏறுதல், அத்துமீறி பிறர் வீடுகளின் பால்கனியில் ஏறுதல், மின்சார கம்பங்களில் ஏறுதல், பிறருடைய சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் என்று தன் ரசிகர்கள் செய்த எதையும் அவர் கண்டிக்க வில்லை. அவர் இதையெல்லாம் ரசிக்கவே செய்தார்

திமுக, அதிமுக தொண்டர்களெல்லாம் ஒழுக்கமானவர்கள் என்று சொல்வதற்கில்லைதான். ஆனால் கட்டுக்கோப்பானவர்கள்.  வார்டு மெம்பர், வட்டச் செயலாளர் தொடங்கி மாவட்டச் செயலாளர் வரை அவர்களைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்வார்கள். இங்கே விஜய், புஸ்ஸி ஆனந்த் தவிர இரண்டாம் கட்ட மூன்றாம் கட்டத் தலைவர்கள் என்று எவரும் இல்லை. இறந்துபோனவர்களையும் காயம்பட்டவர்களையும் பார்க்க விஜயில் தொடங்கி எந்தக் கட்ட நிர்வாகிகளும் வரவில்லை என்பது கட்சி நிர்வாகம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அங்கே விஜய் மட்டும்தான் முகம், தலைவர், கடவுள். எம்.ஜி.ஆருக்கும் ஓரளவு அப்படித்தான் என்றாலும் அவருக்கு வலுவான மாவட்டச் செயலாளர்கள் இருந்தார்கள். திமுகவை பின்பற்றிய கட்டமைப்பு இருந்தது. த.வெ.கவில் ஒவ்வொரு உள்ளூர் பகுதியிலும் யார் வட்டச் செயலாளர் என்று பார்த்தால் 25 வயது அரைவேக்காடாக, ரசிகத் தற்குறியாக இருக்கும்.

தன் தொண்டர்களைத் தயார்ப்படுத்தவும் அரசியமயப்படுத்தவும் எம்.ஜி.ஆர். திரைப்படங்களைப் பயன்படுத்திக்கொண்டார். அதற்குக் குறிப்பிட்ட காலம் எடுத்துக்கொண்டார். ஆனால், விஜய் தன் பிம்பத்தைக் கட்டமைக்க, வெறியர்கள் கூட்டத்தை உருவாக்க மட்டுமே திரைப்படங்களைப் பயன்படுத்திக்கொண்டார். அவரும் அரசியலுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளவில்லை. அவருடைய தொண்டர்களையும் அவர் தயார்ப்படுத்தவில்லை. அதன் விளைவுதான் கரூர் மரணங்கள். இந்தத் துயரம் இதற்கு முன்பே வேறு விஜய் பேரணிகளிலோ மாநாடுகளிலோ ஏற்பட்டிருக்கலாம். வெடிக்கக் காத்திருந்த அணுகுண்டு போல் இப்போது வெடித்துவிட்டது. இனி  முன்பைப் போல அரசியல் செய்ய முடியாது என்பதை ராஜா வீட்டுக் கன்றுக்குட்டியான விஜய் உணர்ந்திருப்பார்.

 - ஆசை

Tuesday, August 19, 2025

காந்தியும் 60 நாய்களும்!


ஆசை

‘திரு. காந்தி அவர்களே, நாங்கள் கேள்விப்பட்டது உண்மையா? திரு. அம்பாலால் சொன்னதற்கு ‘வேறென்ன செய்துவிட முடியும்?’ என்று தாங்கள் பதில் கூறியது உண்மைதானா? எந்தவொரு உயிரையும் எடுப்பதற்கு இந்து மதம் அனுமதிக்காததோடு, அதைப் பாவம் என்று கருதும்போது வெறிநாய்களைக் கொல்வது சரிதான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’ என்று அகமதாபாத் மனிதநேய சங்கத்திலிருந்து காந்திக்குக் காட்டமாக ஒரு கடிதம் வந்திருந்தது. படித்துவிட்டுத் தன் உதவியாளரைப் பார்த்து மெலிதாகப் புன்னகை புரிந்தார் காந்தி.

1926-ன் முற்பகுதி அது. தீவிர அரசியலிலிருந்து ஒரு ஆண்டு காலம் ஓய்வு எடுத்துக்கொள்ளப்போவதாக காந்தி அறிவித்திருந்தார். ஒரு வகையில் அது அமைதி ஆண்டு. அந்த ஆண்டில்தான் வாரந்தோறும் ஒரு நாளை அமைதி நாளாக அனுசரிக்கும் வழக்கத்தை காந்தி தொடங்கினார். அடுத்த 23 ஆண்டுகள் இந்த வழக்கத்தை அவர் கைவிடவே இல்லை. அந்த நாட்களில் அவர் மக்களைச் சந்திக்காமல் இருப்பதில்லை. அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொள்வார். அவருடைய பதில் அவசியமான இடங்களில் ஒரு தாளில் எழுதித் தருவார். அதிக அளவில் பயணம் செய்தது, நிறைய இடங்களில் பேசியது போன்றவற்றால் அதீதக் களைப்படைந்த காந்தி, சிறு இளைப்பாறுதலாகக் கண்டுபிடித்த உத்தி இந்த அமைதி தினம். அதுவே அவருக்கு மிகுந்த புத்துணர்ச்சியைக் கொடுப்பதாக மாறியது.

Wednesday, June 18, 2025

க்ரியா ராமகிருஷ்ணன்: தமிழில் முன்னுதாரணமில்லாத ஒரு எடிட்டர் - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு


ஆசை

தமிழில் புத்தகக் கலாச்சாரம் என்பது இல்லை என்பது க்ரியா ராமகிருஷ்ணன் அடிக்கடி வெளிப்படுத்தும் வருத்தங்களுள் ஒன்று. புத்தகக் கலாச்சாரம் என்பது புத்தகங்கள் அதிகம் வெளியாகும் சூழல் அல்ல, புத்தகங்களுக்கு நம் வாழ்க்கையில் நாம் முக்கிய இடம் கொடுப்பதே புத்தகக் கலாச்சாரம். அப்படிப்பட்ட கலாச்சாரம் இல்லாமல் போனதன் விளைவுகளுள் ஒன்றுதான் தமிழில் எடிட்டர்களும் ‘கிட்டத்தட்ட’ இல்லாமல் போனது. அந்தக் குறையைப் போக்க வந்த முக்கியமான இருவர் – ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் (2020), நஞ்சுண்டன் (2019) – சமீப ஆண்டுகளில் காலமானது தமிழுக்கும் தமிழ்ப் பதிப்புத் துறைக்கும் பேரிழப்பு.

எடிட்டிங்கை க்ரியா ராமகிருஷ்ணன் எப்படி அணுகினார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு ‘எடிட்டிங்’ என்பதைப் பற்றித் தமிழ்ச் சூழல் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருந்தது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.

Monday, May 5, 2025

21-ம் நூற்றாண்டுக்கு மார்க்ஸ் என்ன சொல்கிறார்? மார்க்ஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை


 

யானிஸ் வரூஃபக்கீஸ்

(தமிழில்: ஆசை)

ஒரு அரசியல் அறிக்கை வெற்றிபெற வேண்டுமென்றால் அது ஒரு கவிதையைப் போல நம் இதயத்துடன் பேச வேண்டும். அதே நேரத்தில் நம் மனதில் அசாதாரணமான புதிய படிமங்களையும் கருத்துக்களையும் விதைக்க வேண்டும். நம்மைச் சுற்றி நிகழும் குழப்பம் நிறைந்த, வருத்தமளிக்கக்கூடிய, பரவசமான மாற்றங்களின் உண்மைக் காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளும் வகையில் நம் கண்களை அது திறக்க வேண்டும்.

கூடவே, நம் தற்போதைய சூழல் தன்னுள் கருக்கொண்டிருக்கும் சாத்தியங்களையும் அது வெளிக்காட்ட வேண்டும். இந்த உண்மைகளை நாமே அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போய்விட்டதே என்று நம் இயலாமையை நினைத்து நம்மை வருத்தப்பட வைக்க வேண்டும். மிகவும் பிற்போக்கான கடந்த காலத்தையே திரும்பத் திரும்ப உற்பத்திசெய்வதில் நாமும் கொஞ்சம் உடந்தையாகத்தான் இருந்திருக்கிறோம் என்ற சங்கடமான உண்மையை நாம் உணர்வதற்குத் தடையாக இருக்கும் திரையை அது அகற்ற வேண்டும்.

Friday, April 25, 2025

ஒரு ராணுவ வீரரின் குடும்பத்தினர்கூட போர் வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள்!- ராணுவ வீரரின் மகனும் போர்ச் செய்தியாளருமான ஜி.கிருஷ்ணன் பேட்டி



உரத்த குரலில் ‘போர் வேண்டும், போர் வேண்டும்’ என்று ஆளுக்காள் கூவிக்கொண்டிருக்கும் காலத்தில் ஜி.கிருஷ்ணனின் குரல் நிதானமானது. அமைதியை விரும்புவது. ராணுவ வீரரின் குடும்பத்தில் பிறந்து போரைப் பற்றிய கசப்பான நினைவுகளைச் சுமந்து, பின்னாளில் போர் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் செய்தியாளராகப் பணியாற்றியவர். ‘தி இந்து’, ‘அசோசியேட்டட் பிரஸ்’ என்று அவருடைய இதழியல் பணி இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளாவிய பரப்பைக் கொண்டது. தற்போது பாலக்காட்டில் தன் மனைவியுடன் வசித்துவரும் ஜி.கிருஷ்ணனுடன் நடத்திய உரையாடலிலிருந்து…

Monday, April 14, 2025

சமத்துவம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை


டிசம்பர் 25, 1949-ல் அரசியல் சட்ட நிர்ணய சபையில் அம்பேத்கர் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்...

ஜனவரி 26, 1950 அன்று முரண்பாடுகள் நிறைந்த ஒரு வாழ்க்கையில் நாம் அடியெடுத்து வைக்கப்போகிறோம். அரசியலில் சமத்துவமும் சமூக, பொருளாதார வாழ்வில் சமத்துவமின்மையையும் ஒருங்கே அடையவிருக்கிறோம். அரசியலைப் பொறுத்த வரை ‘ஒரு மனிதர் ஒரு ஓட்டு ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தை நாம் அங்கீகரிக்கவிருக்கிறோம்.
அதே நேரத்தில் நமது சமூக, பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக நமது சமூக, பொருளாதார வாழ்வில் ‘ஒரு மனிதர் ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தைப் புறக்கணிப்பதைத் தொடரப்போகிறோம்.

Wednesday, March 19, 2025

மொழிப் பிரச்சினை – ஒரு பார்வை



ஆசை

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களின் வரலாறு?

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் கிட்டத்தட்ட தமிழகமே இந்திய அளவில் தனித்து நிற்கிறது. இதுவரை நடந்தவை ஆறு போராட்டங்கள். நடந்த ஆண்டுகள்: 1938, 1948, 1950, 1965, 1968, 1968. இவற்றில் மிகவும் உக்கிரமாகப் போராட்டங்கள் நடந்த ஆண்டுகள் 1938-ம் 1965-ம். நடராசன், தாளமுத்து என்ற இருவர் 1938 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்போது சிறைசென்றார்கள். 73 பெண்களும் இவர்களில் அடங்குவார்கள். இவர்களுடன் சிறைக்குச் சென்ற 32 கைக்குழந்தைகளும் உண்டு. 1965 போராட்டத்தின்போது சின்னசாமி என்ற இளைஞர் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தீக்குளித்து இறந்தார். அந்தப் போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை ஏறத்தாழ 70. எனினும் 500 பேருக்கும் மேல் உயிரிழந்திருக்கக்கூடும் என்று மொழிப்போர் வரலாற்றுப் புத்தகங்கள் கூறுகின்றன.   

போராட்டங்கள் ஏன்?

Monday, March 10, 2025

இமையத்தின் ‘சாரதா’ கதையும் மகிழ்ச்சிக்கு எதிரான இந்திய சமூகமும்

இமையம்


ஆசை

(இன்று இமையத்தின் பிறந்த நாள்)

இமையத்தின் நாவல்கள் அளவுக்கு அவருடைய பல சிறுகதைகள் முக்கியமானவை. சாதியத்தின் நுண்ணடுக்குகள், பசி, ஏழ்மை, ஏழ்மையின் மீது நவீன வாழ்க்கை நடத்தும் தாக்குதல்கள், பெண்களின் – குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் – உலகம், அரசியல், காதல் என்று பல பேசுபொருள்களில் அமைந்தவை இமையத்தின் கதைகள். இவையெல்லாம் தனித்தனியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்திருப்பதுதான் இமையத்தின் கதைகளின் தனிச் சிறப்பு. இந்தியச் சமூகமும் அப்படித்தானே.

Wednesday, February 26, 2025

பசி, பட்டினியைத் தமிழகம் விரட்டியடித்த வரலாறு முக்கியமானது! - பொருளியலாளர் ஜெயரஞ்சன் பேட்டி


 

ஆசை


பொருளாதாரம் எப்படி நம் அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கிறது, அரசின் பொருளாதார முடிவுகளெல்லாம் எப்படிக் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் தாக்கமும் பாதிப்பும் ஏற்படுத்துகிறது என்பதையெல்லாம் எல்லோருக்கும் புரியும் விதத்தில் எழுதுவதில் வல்லவர் பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன். பணமதிப்பு நீக்கத்தின்போது இவர் எழுதிய ‘கருப்புப் பணமும் செல்லாத நோட்டும்’ நூல் பெரும் புகழ்பெற்றது. தற்போது ‘தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை’ என்ற இவரின் புதிய புத்தகம் வெளியாகியிருக்கும் சூழலில் அவருடன் உரையாடியதிலிருந்து...

தமிழில் பொருளாதாரம் சார்ந்த எழுத்துகளின் நிலை எப்படி இருக்கிறது?

ரொம்பவும் குறைவுதான். நான் படிக்கும்போது தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தமிழ் வழிக்கல்விக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்தது. முக்கியமான பொருளாதாரப் புத்தகங்களை ஒருசில நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்திருந்தார்கள். அதற்குப் பிறகு படிக்கவே முடியாத அளவுக்கு மோசமான மொழிபெயர்ப்புகள் வர ஆரம்பித்தன. அதற்குப் பிறகு பொருளாதாரம் சார்ந்த எழுத்துகள் இரண்டு வகையாக இருந்தன. முதல் வகை நிதி ஆலோசகர்களின் எழுத்து. பங்குச் சந்தையில் எப்படிப் பணம் போடுவது, தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்பது போன்று எழுதுபவர்கள் அதிகம். அதை விட்டால் இரண்டாவதாக, இடதுசாரி சிந்தனையாளர்களின் எழுத்து. இதைத் தாண்டி, பொருளாதாரத்தைத் தமிழில் விரிவாக விளக்கி எழுதியதுபோல் எனக்கு யாரும் நினைவில் இல்லை.

Monday, February 24, 2025

அதிகம் நம்மைக் கொல்லும்!


ஆசை

முதன்முதலில் ஊரிலிருந்து சென்னைக்கு வந்தபோது என்னை மலைக்கவைத்த, பயமுறுத்திய விஷயம் என்ன தெரியுமா? மக்கள் கூட்டம், வாகனங்கள், கட்டிடங்கள், கடைகள், கடைகளில் உள்ள பொருட்கள் என்று எதையெடுத்தாலும் மிதமிஞ்சிக் காணப்பட்ட நிலைதான். முதன்முதலில் சென்னைக்கு வந்து சட்டை, பேண்ட் எடுக்கப்போனபோது சரவணா ஸ்டோரைப் பார்த்து எனக்கு மயக்கமே வந்துவிட்டது. என்னுடைய அளவுக்கு நல்ல பேண்ட் வேண்டும் என்று கேட்டபோது வகைவகையாக என்னென்னவோ எடுத்துப் போட்டார்கள். ஊரில் இருந்தவரை எனக்குத் தெரிந்தது இரண்டுதான், ஒன்று சாதா பேண்ட். இன்னொன்று ஜீன்ஸ் பேண்ட். ஒரு பேண்ட் கேட்டதற்கு என் முன்னால் மலைபோல் குவித்துப் போட்டதும் எனக்கு எதை எடுப்பது என்று தெரியாமல் சங்கடத்துடன் நின்றேன்.

Sunday, May 5, 2024

21-ம் நூற்றாண்டுக்கு மார்க்ஸ் என்ன சொல்கிறார்? - மார்க்ஸ் பிறந்த நாள் பகிர்வு


யானிஸ் வரூஃபக்கீஸ்

(தமிழில்: ஆசை)

ஒரு அரசியல் அறிக்கை வெற்றிபெற வேண்டுமென்றால் அது ஒரு கவிதையைப் போல நம் இதயத்துடன் பேச வேண்டும். அதே நேரத்தில் நம் மனதில் அசாதாரணமான புதிய படிமங்களையும் கருத்துக்களையும் விதைக்க வேண்டும். நம்மைச் சுற்றி நிகழும் குழப்பம் நிறைந்த, வருத்தமளிக்கக்கூடிய, பரவசமான மாற்றங்களின் உண்மைக் காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளும் வகையில் நம் கண்களை அது திறக்க வேண்டும்.

கூடவே, நம் தற்போதைய சூழல் தன்னுள் கருக்கொண்டிருக்கும் சாத்தியங்களையும் அது வெளிக்காட்ட வேண்டும். இந்த உண்மைகளை நாமே அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போய்விட்டதே என்று நம் இயலாமையை நினைத்து நம்மை வருத்தப்பட வைக்க வேண்டும்.

Saturday, March 23, 2024

ஊரூரில் ஓர் சமத்துவக் கொண்டாட்டம்! - மேல்தட்டினரின் திணிப்பா?


கர்னாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து சில நாட்களாக சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. கர்னாடக சங்கீத உலகின் வலதுசாரிகள் பெரும்பாலானோர் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பதற்கு, கிருஷ்ணா பெரியாரைப் பற்றிப் பாடியது உட்பட பல குற்றச்சாட்டுகளைக் கூறி, எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இன்னொரு தரப்பும் டி.எம். கிருஷ்ணாவுக்கு அவர் ஒரு போலி முற்போக்கு என்று கூறி எதிர்ப்பு தெரிவிக்கிறது. உண்மையில் டி.எம். கிருஷ்ணா முன்னெடுத்த ‘ஊரூர் ஆல்காட் குப்பம் திருவிழா’வில் என்ன நடக்கிறது? சில ஆண்டுகளுக்கு முன் அந்த நிகழ்வைப் பார்த்த அனுபவத்தை எழுதினேன். அதன் மீள்பகிர்வு இங்கே: 

ஊரூர் ஆல்காட் குப்பத்துக்கும் ஆழ்வார்பேட்டைக்கும் இடையில் எவ்வளவு தூரம் இருக்கும்? 7 கி.மீ. என்கிறது ‘கூகுள்’. ஆனால், இந்த இரண்டு பகுதிகளின் வாழ்க்கை முறைக்கும் கலாச்சாரத்துக்கும் இடையேயுள்ள இடைவெளி இதைவிட பல மடங்கு அதிகம்.

Friday, March 22, 2024

காஃப்காவின் முன் இரு சிறுமிகள் - காஃப்கா நினைவு நூற்றாண்டு சிறப்புச் சிறுகதை


ஆசை

1. சர்வீஸ் சாலை

அந்த நெடுஞ்சாலை மிகவும் பெரியது என்றாலும் அதன் ஓரம் நடப்பதற்கு நிறைய இடம் இருக்கிறது என்றாலும் அந்த சாலையில் செல்லும் மிக நீண்டதும் ஏராளமான சக்கரங்களைக் கொண்டதுமான லாரிகளையும் கண்டெய்னர்களையும் பார்க்க எனக்கு அச்சமாக இருந்ததால் அந்த நெடுஞ்சாலையின் இடது பக்கம் இருந்த சர்வீஸ் சாலை என்று சொல்விவிட முடியாத ஆனால் இணையாகச் செல்லும் மண்ணும் தார்ச் சாலையும் கலந்த அந்த சாலையில் குறுக்காக இறங்கி நடக்க ஆரம்பித்தேன். எங்கும் புழுதி மயம். நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்வதால் அங்கே ஓரத்தில் இருந்த புழுதி கிளம்புகிறது என்றால் இந்த சர்வீஸ் சாலையில் ஏன் இந்த அளவுக்குப் புழுதி என்று எனக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் காற்றே இல்லாத புழுக்கமான பகல் பொழுது இது. இந்தப் புழுதிக் காட்டில் சர்வீஸ் சாலையின் ஓரத்தில் வழக்கமாக நெடுஞ்சாலைகளில் இருப்பது போன்று டீக்கடை, பிஸ்கெட் சிகரெட் விற்கும் தண்ணீர் போன்றவை விற்கும் கடைகளும் இருந்தன.

Wednesday, March 13, 2024

பச்சையின் ஆயிரம் வண்ணங்கள் - புதிய சிறுகதை


ஆசை

1. உலகம் கறுப்பு வெள்ளையாய் இருந்தபோது…

“கால்வின், கால்வின்! இன்னைக்கு உன் அப்பாகிட்ட என்ன கேட்டே?”

“‘பழைய படம் எல்லாம் ஏன் கறுப்பு வெள்ளையில இருக்கு? அப்போல்லாம் கலர் ஃபிலிம்கள் கிடையாதா அப்பா?’ன்னு கேட்டேன்”

“அவர் என்ன சொன்னார்?”

“‘இருந்துச்சி. உண்மையில அந்த பழைய படங்கள்லாம் கலர் படங்கள்தான். ஆனா, உலகம் அப்போ கறுப்பு வெள்ளை கலர்ல மட்டும்தான் இருந்துச்சு’ அப்படின்னார்.”

“அப்படியா சொன்னார்?”

“ஆமாம்! ‘1930கள் வரைக்கும் உலகம் கலரா ஆகலை. அதுக்கு அப்பறம்தான் கலரா மாறுனுச்சு. ஆனாலும் கொஞ்சம் மங்கலான கலர்தான்’ அப்படின்னார்.”

“விநோதமா இருக்கே?”

“நானும் இதேதான் அப்பாகிட்ட கேட்டேன். ‘உண்மைங்கிறது கதைகள்ல வர்றத விட விநோதமா இருக்கும்’னு அவர் சொன்னார்.”

“நீ அத்தோட விட மாட்டியே?”

“ஆமாம் காவிரி. ‘அப்புறம் பழைய கால ஓவியர்கள் வரைஞ்ச ஓவியங்கள் மட்டும் ஏன் கலர்ல இருக்கு?

Saturday, March 9, 2024

புரட்சி அக்காவின் கதை - சிறுகதை

 


ஆசை  

(இது முழுக்க முழுக்க கற்பனைக் கதை. அதே போல் மேலே உள்ள படமும் சித்தரிப்பு நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கதைக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இந்தக் கதை தற்செயலாக எதையாவது யாரையாவது நினைவுபடுத்தினால் மன்னிப்பு கோருகிறேன்)

    நேத்து நடந்த நேர்காணலப் பத்தியா கேக்கற, அது பெரிய கூத்து மாமா. நான் சின்னப்புள்ளயா இருக்கறப்பலருந்தே வாத்தியாரோட ரசிகன். எனக்குப் பத்து வயசா இருந்தப்ப கணக்குக் கேட்டாருன்னு அவரக் கட்சிய உட்டுத் தூக்குனாங்க. வெவரம் புரியாத அந்த வயசிலேயே எங்கப்பாவோட சேர்ந்துகிட்டு 'குள்ளநரி குருசாமியே கணக்குக் காட்டு கணக்குக் காட்டு'ன்னு கோஷம் போட்டுட்டுப் போனேன். கட்சி உறுப்பினரா முப்பது வருஷத்துக்கு மேல இருக்கன் மாமா, நானும் எவ்வளவோ தலையாலத் தண்ணி குடுச்சுப் பாத்துட்டன், கட்சில நல்ல நல்ல பதவியல்லாம் நம்ம கைல மாட்டாம போயிட்டே இருக்கு.

Friday, March 8, 2024

மகளிர் தினத்தில் காந்தியையும் ஏன் நினைவுகூர வேண்டும்?


ஆசை

பகுதி-1

இன்று 'உலக மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது. வரலாறு படைத்த பெண்கள், வரலாற்றால் மறைக்கப்பட்ட பெண்கள் போன்றோரை இன்று நினைவுகூர்வது வழக்கம். பெண்ணுரிமை வரலாற்றில் பெண்களின் பங்கை முதன்மையாகச் சொல்ல வேண்டியது முக்கியம். அதே நேரத்தில் பெண் முன்னேற்றத்துக்காக ஒரு வகையிலோ பல வகைகளிலோ போராடிய ஆண்களையும் நினைவுகூர்வது அவசியம். இந்திய வரலாற்றில் புத்தரில் தொடங்கி பிற்காலத்தில் ராஜாராம் மோகன்ராய், ஜோதிராவ் பூலே, காந்தி, அம்பேத்கர், பெரியார் முதலான பல ஆண் தலைவர்கள் பெண்களின் முன்னேற்றத்துக்குப் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். பெண்கள் முன்னேற்றத்துக்கு காந்தி ஆற்றிய பணிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

தன் தாயார் புத்தலிபாய், மனைவி கஸ்தூர்பாயில் தொடங்கி கடைசியில் காந்தி சுட்டுக்கொல்லப்படும்போது அவருடைய ஊன்றுகோல் போல் கூட நடந்துவந்த மனு, ஆபா போன்றோர் வரை காந்தி வாழ்வில் இடம்பெற்ற பெண்கள் ஏராளமானோர். காந்தியைப் போல் பெண்களை ஈர்த்த தலைவர்கள் இந்திய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் வெகு குறைவு. எனினும், இளமைப் பருவத்தில் காந்தி வழக்கமான இந்திய ஆண் போலவே பெண் குறித்த பார்வையைக் கொண்டிருந்தார். 13 வயதிலேயே காந்திக்குத் திருமணம் செய்யப்படுகிறது. தன் மனைவி கஸ்தூர்பாவை ஒரு போகப் பொருளாகவே காந்தி ஆரம்பத்தில் கருதி வந்திருக்கிறார். காமமும் சந்தேக உணர்ச்சியும் அவரை ஆரம்பத்தில் வாட்டிவதைத்தன.

தமிழ்ச் சமூகம் என்ற simulacrum - சாரு நிவேதிதா


(என்னுடைய ‘
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ கதை குறித்து சாரு நிவேதிதா தன் தளத்தில் எழுதிய அறிமுகம் இது. அவருக்கு என் மனமார்ந்த நன்றி - ஆசை)


Simulacrum என்ற கோட்பாடு ஃப்ரெஞ்ச் பின்நவீனத்துவத் தத்துவவாதியான Jean Baudrillard (உச்சரிப்பு: ஜான் பொத்ரியா) மூலமாகப் பிரபலம் ஆயிற்று.

சிருஷ்டிகரத்துவத்தைப் போலவே எனக்குத் தத்துவமும் முக்கியம். நீட்ஷே, ஜார்ஜ் பத்தாய், ரொலாந் பார்த், மிஷல் ஃபூக்கோ என்ற தத்துவவாதிகள் இல்லையேல் என் எழுத்து இல்லை. நானும் சுந்தர ராமசாமியின் எழுத்தில் மயங்கிக் கிடந்திருப்பேன். தத்துவம் என்பது எனக்கு உடலும் உயிரும் போல. சிருஷ்டி பாதி, தத்துவம் பாதி. இந்தப் பிரபஞ்சத்தையும் இதில் வாழும் உயிர்களின் ஓட்டத்தையும் புரிந்து கொள்ள தத்துவம் எனக்குக் கிடைத்த ஒரு ஆதாரமான கருவி. தத்துவம் இல்லையேல் நான் ஒரு வெட்டி எழுத்தாளனாக ஆகியிருப்பேன்.

ஆனால் தத்துவத்தின் துணையின்றியே சிருஷ்டிகரத்துவத்தின் உச்சம் தொட்ட போர்ஹேஸ் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் நான் மறக்க மாட்டேன்.

Wednesday, February 28, 2024

ஒரு ஸ்கிரீன்ஷாட் போதிமரத்தின் நிழலில்...



ஒரு ஸ்க்ரீன்ஷாட் விடியல்
ஆம்
அதை அப்படித்தான்
சொல்ல வேண்டும்

ஒன்றிரண்டு உயிர்நண்பர்களின்
பதற்றமும்
அதைத் தொடர்ந்து
அதைவிட நெருக்கம் குறைந்த
நண்பர்களின் மௌனமும்
காலையிலிருந்து
அழைத்துக்கொண்டிருக்கின்றன

தெரிந்தவர்கள்
தெரியாதவர்கள் என்று
எங்கிருந்தெல்லாமோ புறப்பட்டு
அடித்துக்கொண்டிருந்தார்கள்
நண்பன்தான் சொன்னான்
நான் தொடக்கத்திலேயே
தூரப் போய்விட்டேன்

ஒன்றிரண்டு ஆதரவுக் குரல்களும்
எழுந்ததாய்ச் சொன்னான்
தனியே அவர்களை அழைத்து
வேண்டாமென்று சொல்லிவிட்டேன்

இனி நான்
எல்லாவற்றையும்
முதலிலிருந்து
தொடங்க வேண்டும்
என்று நண்பன் சொன்னான்

ஆனால்
அதற்கு ஒரு வாரமாவது ஆகும்
இதையும்
நண்பன்தான் சொன்னான்

இரண்டாவது நாள்
அதிகாலையில்
பக்கத்துக் கடையில்
டீ சாப்பிடப் போனேன்

வாக்கிங் போய்விட்டு வந்த ஒருவர்
எனக்கருகே
கையில் வடையுடன்
வந்து உட்கார்ந்து
கைபேசியை நோண்ட
ஆரம்பித்தார்

வடையை ஒரு கடியும்
கடித்துக்கொண்டார்
சூடு அதிலிருந்து
பிரிந்தது
அதிகாலையுடன்
கலந்ததைக் கண்டேன்

இப்போது
பழக்க வெறுமையில்
அவர் கைபேசியை
எட்டிப்பார்த்துவிட்டேன்

யாருடைய பதிவிலோ இருந்த
எனது ஸ்கிரீன்ஷாட்தான் அது
அதனைப் பெரிதுபடுத்திப்
பார்த்துக்கொண்டிருந்தார்

எட்டிப்பார்த்தபோது
அந்த வாசகங்கள்
முழுமையாய்
என்னுடையவை 
ஆகியிருந்தன

இந்த டீக்கு
நான் நன்றி சொல்ல
வேண்டும்

அவ்வளவு
அமைதியுடன்
எழுந்துவிட்டேன்
      -ஆசை


குறிப்பு: இந்தக் கவிதைக்குப் பயன்படுத்தியிருக்கும் படங்கள் சித்தரிப்பு நோக்கத்துக்காகப் பயன்படுத்தியவை. யாருடைய மனதையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்!

Monday, December 11, 2023

பாரதீ: எம் கவிஞன் நீ!


ஆசை

‘மேன்மேலும் புதியகாற்று எம்முள் வந்து/ மேன்மேலும் புதியஉயிர் விளைத்தல் கண்டீர்’ என்று எழுதித் தமிழ் மொழி மீதும் தமிழ் சமூகத்தின் மீதும் புதிய காற்றைப் படச் செய்தவர் பாரதி. வடிவத்தால் மரபுக் கவிஞராகவும் உள்ளடக்கத்தால் நவீனக் கவிஞராகவும் பாரதி காட்சியளிக்கிறார். மனிதர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இனம், மொழி, நாடு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகள், பிற நாட்டின் விடுதலைப் போராட்டங்கள், பிற நாட்டுத் தமிழர்களின் இன்னல்கள், வானியல் நிகழ்வுகள், இயற்கைச் சீற்றங்கள் போன்ற பல கருப்பொருள்கள் பாரதியிடம்தான் தமிழ்க் கவிதை வரலாற்றில் முதன்முதலில் எட்டிப்பார்த்தன.

பாரதியின் சமத்துவக் கனவு

‘எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்/ எல்லாரும் இந்தியா மக்கள்/ எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை/ எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ என்ற சமத்துவக் குரலை இந்தியாவிலேயே அநேகமாக முதலில் எழுப்பியவர் பாரதி. அதுமட்டுமன்றி ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்/ ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று சத்திய ஆவேசத்துடன் பாடியவர் யார்? ‘இடம்பெரிது உண்டு வையத்தில் – இதில்/ ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?’ என்ற வரிகளுக்கும், பாரதி இறந்து 19 ஆண்டுகள் கழித்து வெளியான, சார்லி சாப்ளினின் ‘த கிரேட் டிக்டேட்டர்’ படத்தின் இறுதிக் காட்சியில் சாப்ளின் ஆற்றும் உரையில் வரும் ‘இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறது’ என்ற வார்த்தைகளுக்கும் இடையில் எத்தனை ஒற்றுமை!

‘பாருக்குள்ளே சமத்தன்மை… சகோதரத் தன்மை’ மட்டுமே புவி எங்கும் விடுதலை செய்யும் என்று பாடியவர் பாரதி. ‘… குடியரசு என்று/ உலகறியக் கூறி விட்டார்’ என்று ‘புதிய ருஷியா’வைப் பற்றி எழுதுகிறார். இந்தியாவை ‘முப்பது கோடி ஜனங்களின் ஸங்கம்/ முழுமைக்கும் பொதுவுடைமை’ என்கிறார். இப்படியாக, சமத்தன்மை, சகோதரத் தன்மை, குடியரசு, பொதுவுடைமை, புரட்சி போன்ற சொற்களையும் அவற்றின் கருத்துகளையும் தமிழ்ச் சமூகத்தில் ஊன்றியவர் அவர். அதனால்தான் ஜீவா, தொ.மு.சி.ரகுநாதன், ஆர்.நல்லகண்ணு உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள் பாரதியை ஆரத்தழுவிக்கொண்டனர்.

பாரதியின் தமிழ்க் கனவு

தமிழ்ச் சமூகத்துக்கு பெரும் பார்வை நோக்கை 20-ம் நூற்றாண்டில் வழங்கிய பேராளுமைகளில் பெரியார், பாரதியார், அண்ணா ஆகிய மூவரும் தலையாயவர்கள். மேலைநாடுகளில் புத்தம் புதிய கலைகள், புத்தம் புதிய தொழில்நுட்பங்கள் வளர்கின்றன; தமிழில் அவையெல்லாம் இல்லை; ஆகவே, ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும் – அந்த/ மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்’ என்று ஒரு பேதை கூறியதைக் கேட்டு பாரதி கொதித்துப் போகிறார். கிண்டி பொறியியல் கல்லூரியில் இருந்த ‘கம்ப்யூட்டரை’ காண 1965-ல் பெரியார் சென்றிருக்கிறார். அந்தச் சாதனத்துக்குத் தமிழ்ப் பெயர் என்ன என்று தன்னுடன் வந்தவரைக் கேட்டிருக்கிறார். அவரால் பதில் சொல்ல முடியவில்லை. “நீ கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்திருந்தால்தானே அதற்குப் பெயர் இருக்கும்” என்று அவரிடம் சீற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் பெரியார். பாரதிக்கு ஏற்பட்டதும் அதேபோன்றதொரு சீற்றமும் ஆதங்கமும்தான். அதேபோல், புவியைக் கடந்த ஹாலி வால்நட்சத்திரத்தைப் பற்றி பாரதி எழுதிய ‘சாதாரண வருஷத்துத் தூமகேது’ கவிதையிலும் அந்த வால்நட்சத்திரத்தைப் பற்றிகூட ‘அன்னியர் உரைத்திடக் கேட்டே தெரிந்தனம்’ என்று குறைபட்டுக்கொள்கிறார்.

பன்மைத்துவக் கவிஞன்

தாயின் மணிக்கொடியைப் புகழ்ந்து பாடும்போது ‘இந்திரன் வச்சிரம் ஓர்பால்- அதில்/ எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்’ என்று எழுதுகிறார். பாரதி கற்பனை செய்த நாடு இந்துகள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறித்தவர்கள் அனைவரையும் உள்ளடக்கியதே. தமிழில் முதன்முதலில் ஏசுவைப் பற்றிப் பாடிய கிறிஸ்தவரல்லாத கவிஞர், அல்லாவைப் பற்றிப் பாடிய இஸ்லாமியரல்லாத கவிஞர், குரு கோவிந்தரைப் பற்றிப் பாடிய கவிஞர் பாரதிதான். தமிழின் முதல் பன்மைத்துவக் கவிஞர் என்று சந்தேகமில்லாமல் பாரதியை நாம் கூறிவிடலாம். அப்பேர்ப்பட்ட பன்மைத்துவக் கவிஞருக்கு, பல வண்ணங்கள் கொண்ட கவிஞருக்குக் காவி நிறத்தை மட்டும் பூசி பிறர் அவரை அபகரிக்க நாம் விடலாகாது.

காதல் கவிதைகள்

பாரதியின் காதல் கவிதைகள் அலாதியானவை. காதலின் உச்சத்தில் காதலனின் முகமே மறந்துபோய்விடும் கொடுமை எங்கேயும் உண்டோ? பாரதியின் கவிதைத் தலைவி பாடுகிறாள், ‘ஆசை முகம் மறந்துபோச்சே – இதை/ ஆரிடம் சொல்வேனடி தோழி?’ தன்னைக் கண்டதும் நாணிக் கண் புதைக்கும் காதலியைப் பார்த்து, ‘நீட்டும் கதிர்களொடு நிலவுவந்தே – விண்ணை/ நின்று புகழ்ந்துவிட்டுப் பின்மருவுமோ?’ என்று தலைவன் கேட்கிறான். ஆனால், பெண் அப்படித்தான். முதலில் நிலவாகிய ஆண், விண்ணாகிய பெண்ணிடம் வந்து ‘எப்படி இருக்கிறாய், உன் பட்டுக் கருநீலப் புடவை அழகு, அதில் பதித்த நல்வயிரங்கள் அழகு’ என்றெல்லாம் வர்ணித்துவிட்டுத்தான் ‘மருவ’ வேண்டும். ஆண்கள் அப்படியில்லை, அவர்களைப் பொறுத்தவரை வாய்ச்சொல்லில் பயனில.

காதல் இந்த உலகத்துக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. உலக இயக்கத்துக்கு உந்துவிசை அது. ஆகவேதான், ‘காதலினால் உயிர் வாழும்;-இங்கு/ காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்;/ காதலினால் அறிவு உண்டாம்,-இங்கு/ காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்’ என்கிறார் பாரதி. ‘காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்’ என்ற வரி நம்முள் முறுக்கேற்றுகிறது.

புதிய பாலம்

பாரதிக்கும் திராவிட இயக்கத்தவருக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் கெடுவாய்ப்பானது. எனினும், பின்னாளில் பாரதியை ‘மக்கள் கவி’ என்று பெயர்சூட்டித் தமிழ்ச் சமூகத்தின் உடைமையாக அண்ணா மாற்ற முயன்றது ஆரோக்கியமான முன்னெடுப்பு. ‘நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கும் வாளும்’ என்ற பாரதியின் வரியிலிருந்து கருணாநிதி தன் சுயசரிதைக்குத் தலைப்பைப் பெற்றுக்கொண்டார் என்பது பாரதி மீது அவருக்கு இருந்த பற்றை வெளிப்படுத்துவது. இப்போது, பாரதியார் நினைவுநாளை ‘மகாகவி நாள்’ என்று கொண்டாடுவது, பாரதி நினைவு நூற்றாண்டை ஓராண்டு கொண்டாடுவது, மாணவர்களிடம் பாரதியைக் கொண்டுசெல்வது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிவிப்புகள் பாரதிக்கும் திராவிட இயக்கத்தவருக்கும் இடையில் இருந்த பிளவைச் சரிசெய்வது மட்டுமல்ல ‘பாரதி தமிழ்ச் சமூகத்தின் சொத்து’ என்று எல்லோருக்கும் உணர்த்தும் செயலாகும். பாரதி அன்பர்களும் தமிழ் மக்களும் எப்போதைக்கும் இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

‘ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள்/ பொற்பைகள் ஜதிபல்லக்கு,/ வயப்பரிவாரங்கள் முதல் பரிசளித்துப்/ பல்ஊழி வாழ்க நீயே!’ என்று எட்டயபுரம் ஜமீன்தாரிடம் பாரதி வைத்த மிரட்டலான விண்ணப்பத்தை அவரும் நிறைவேற்றவில்லை; பாரதி வாழ்ந்த காலத்தில் நம் தமிழ்ச் சமூகமும் நிறைவேற்றவில்லை. ஆனால், அவர் காலத்துக்குப் பிறகு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமே முரசறைந்து கொண்டிருக்கிறது, ‘எம் கவிஞன் நீ!’ என்று! 

- பாரதி நினைவு நூற்றாண்டு கட்டுரை (2021), நன்றி: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 


பாரதி குறித்த ஆசையின் பிற கட்டுரைகளும் பதிவுகளும்:

1. பாரதியும் சூரியனைச் சுட்டிக்காட்டிய மல்பெரியும் 

2. பாரதி: பிரபஞ்சத்தின் பாடகன்

3. மக்கள் கவி பாரதியின் மகத்துவம்! அறிஞர் அண்ணாவின் கட்டுரை