காலம்சென்ற எங்கள் அப்பாவு தேசிகாமணிக்கு இன்று 83-வது பிறந்தநாள். அப்பாவைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு நான் எழுதிய ‘மாயக்குடமுருட்டி’ (எதிர் வெளியீடு, 2025) காவியத்தின் முதல் படலத்தை இத்துடன் பகிர்ந்துகொள்கிறேன்.
Sunday, September 21, 2025
மாயக்குடமுருட்டி - அப்பாவின் பிறந்தநாள் பகிர்வு
Saturday, June 15, 2024
மாயக்குடமுருட்டிக்கு ஒரு வயது!
![]() |
| முதலில் வெளியான போஸ்டர் |
எனது ‘காவிரியம்’ நெடுங்காவியத்தின் முதல் நூலான ‘மாயக்குடமுருட்டி’யை எழுதத் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. நாவலாக எழுத நினைத்து, குறுங்காவியமாக எழுதி ‘அருஞ்சொல்’ மின்னிதழில் வெளியிட்டேன். எழுதி முடித்ததும் அது காவியமாக வளரும் என்று நெருக்கமான நண்பர்கள் கூறினார்கள். அப்படியே விரித்தெடுத்து காவியமாக 13 அத்தியாயங்கள் அருஞ்சொல்லில் 13 வாரங்கள் வெளியானது. ‘மாயக்குடமுருட்டி’ எழுதி முடித்த தருணத்தில் இது காவியமாகவும் நிறைவடையாது என்றும் தோன்றியது. ஆகவே, அதனை ‘காவிரியம்’ என்ற பொதுத் தலைப்பில் விரித்தெடுத்து முதல் நூலுக்கு ‘மாயக்குடமுருட்டி’ என்ற தலைப்பைத் தக்கவைத்துக்கொண்டேன்.
எழுதி வெளியிடும் முன்னே தமிழின் தலைசிறந்த காவியங்களுள் ஒன்றாக இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டேன். மாயக்குடமுருட்டி நிறைவடையும்போது அதனை மூத்த எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள், வாசகர்கள் பலரும் உறுதிப்படுத்தினார்கள். மாயக்குடமுருட்டியின் முதல் அத்தியாயம் வெளியான அன்று மட்டும் கிட்டத்தட்ட 2,000 பேர் அருஞ்சொல் மின்னிதழில் அதனைப் படித்திருக்கிறார்கள். கவிதையை அதுவும் நெடுங்கவிதையைப் பொறுத்தவரை அது பெரும் சாதனை. என் நெடுங்காவியத்துக்கு ஆதரவளித்த எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள், பேராசிரியர் தங்க. ஜெயராமன், தினமணி சிவக்குமார், பெரு. விஷ்ணுகுமார், அருஞ்சொல் மின்னிதழின் சமஸ், தம்பி சிவசங்கர், ஓவியர்கள் ஜோ.விஜயகுமார், இரா. தியானேஷ்வரன் உள்ளிட்டோருக்கு மிக்க நன்றி. தொடரின் விளம்பர போஸ்டருக்காகத் தங்கள் கருத்துகளைக் கொடுத்துதவிய கவிஞர் அபி, தியடோர் பாஸ்கரன், பேரா.டேவிட் ஷுல்மன் ஆகியோருக்கு நன்றி! பலரின் கருத்துகளையும் அறிந்துகொள்ள இந்தக் காவியத்தைக் கொடுத்திருந்தேன். பெருந்தேவி, ஆனந்த், கண்டராதித்தன், தூயன், பொன்முகலி, வே.நி.சூர்யா, முத்துராசா குமார் உள்ளிட்டோர் முழுவதும் படித்துவிட்டுப் பிரதியை மேம்படுத்தும் விதத்தில் தங்கள் கருத்துகளைக் கூறியிருந்தார்கள். பிரதியின் மீதான என் நம்பிக்கையையும் இவர்கள் உறுதிப்படுத்தினார்கள். அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!
‘காவிரியம்’ நெடுங்காவியத்தின் முதல் பகுதியான ‘மாயக்குடமுருட்டி’யின் அனைத்து அத்தியாயங்களும் ஓரிடத்தில், ‘அருஞ்சொல்’ மின்னிதழில்:
https://www.arunchol.com/asai-poem-maya-kudamurutti-all-links
Wednesday, December 1, 2021
சிறுகதை - கொண்டலாத்தியைப் பார்க்காமல் அப்பா சாகக் கூடாது
ஆசை
பனி பெய்யும் காலைப் பொழுதுக்கு இதமாகக் கையில் காப்பிக் கோப்பையையும் நாளிதழையும் எடுத்துக்கொண்டு திண்ணைக்கு வந்து நாற்காலியில் உட்கார்ந்தேன். அங்கிருந்த படி, திண்ணையின் கொசுக்கதவு வழியாக வாசலைப் பார்த்தேன். வாசலில் சில மீட்டர்களைத் தாண்டி எல்லாமே மங்கலாகிவிடும் அளவுக்குப் பனி பெய்துகொண்டிருந்தது. உண்மையில் பெய்வதைப் போலத் தெரியவில்லை. அது ஆவியாகத் தரையிலிருந்து அந்தரம் வரை நிறைந்திருந்ததைப் போலத் தெரிந்தது. அந்தத் திரைக்குள்ளிருந்து வந்து வீட்டு வாசலில் வந்து நின்றது ஒரு பறவை. அது கொண்டலாத்தி. கறுப்பும் வெள்ளையுமான பட்டைகளுடன் கழுத்திலும் மார்பிலும் செம்பழுப்பு நிறம் கொண்டிருந்தது. தலையில் விசிறிக் கொண்டை. வாசலில் என்ன கிடக்கிறதென்று தெரியவில்லை, மும்முரமாகக் கொத்திக்கொண்டிருந்தது. எப்போதும் ஆள் இருந்தால் பறந்துசென்றுவிடும் கொண்டலாத்தி பத்தடி தூரத்துக்குள் நான் இருந்தும் பொருட்படுத்தாமல் அங்கே எதையோ கொத்திக்கொண்டிருந்தது. கொசுக்கதவின் ஊடே பார்க்கும்போது வலைபோன்ற கித்தானில் வரையப்பட்ட சித்திரம் போன்று இருந்தது. ஏற்கெனவே அழகு மிக்க கொண்டலாத்தி பனியினூடே இன்னும் பேரழகாகத் தெரிந்தது. கொண்டலாத்தியை அதுவரை நேரில் பார்த்திராத என் மகன் அவசியம் இதைப் பார்க்க வேண்டும் என்று நான் அவனை மெதுவான குரலில் அழைத்தேன். அப்போதுதான் எழுந்திருந்த அவன் சோம்பல்முறித்தபடியே வெளியே வந்தான். “சத்தம் போடாமல் அங்கே பார், கொண்டலாத்தி” என்று காட்டினேன். பார்த்துவிட்டு “வாவ், எவ்வளவு அழகா இருக்குப்பா. தம்பியை எழுப்புறேன்” என்றான். “அவனை எழுப்பாதே. தாத்தாவைக் கூப்பிட்டு வா. அவர் கொண்டலாத்தி பார்த்ததே இல்லை” என்றேன். என் அப்பாவை அழைக்க அவன் உள்ளே போனான்.
அந்த நேரம் பார்த்து ஒரு கைபேசி அழைப்பு என்னை எழுப்பியது. மணி காலை ஏழரை. இந்த நேரத்தில் கூப்பிடுகிறார்களே என்று எடுத்து பதினோரு மணிக்குக் கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு மறுபடியும் படுத்தேன். கலைந்த தூக்கம் மீண்டும் வருவதுபோல் தெரியவில்லை. இப்போது கனவு எனக்கு நினைவுக்கு வந்தது. சரியாக அப்பாவைக் கூப்பிடும் நேரத்தில் என் கனவு துண்டிக்கப்பட்டதை எண்ணி ஒரே நேரத்தில் கோபமும் வியப்பும் ஏற்பட்டது. அந்தக் கனவையும், அதன் குறுக்கீடலாய், அதுவும் மிகச் சரியாக அப்பாவை அழைக்கப்போவதற்கு முன்பு முந்திக்கொண்ட குறுக்கீடலாய் வந்த அந்தக் கைபேசி அழைப்பையும் பேரண்டத்தின் பிரம்மாண்டமான சதித் திட்டங்களில் ஒன்றாகவே பார்க்க முடிகிறது. சில விஷயங்களை நாம் எவ்வளவு முயன்றாலும் நாம் முயல்கிறோம் என்பதை அறிந்துகொண்டு அதைத் தெரிந்துகொள்ள முடியாதபடி பேரண்டம் ஏதாவதொரு வழியில் தடுத்துவிடும் என்று நான் இயற்பியல் புத்தகமொன்றில் படித்திருக்கிறேன். அதுபோலத்தான் இதுவும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மெய்யுலகில் இறந்துபோன என் அப்பா அந்தக் கனவில் உயிருடன் இருந்தாரா, அவரை என் மகன் அழைத்துக்கொண்டு வந்தானா, அவர் கொண்டலாத்தி பார்த்தாரா, அவர் கொண்டலாத்தியைப் பார்க்க வேண்டும் என்று நான் துடித்தது ஏன் என்பதைப் பற்றியெல்லாம் இனி ஒருபோதும் என்னால் அறிந்துகொள்ள முடியாது என்பது எனக்குள் மெலிதான ஏக்கத்தை ஏற்படுத்தியது. ‘தாத்தாதான் செத்துப்போய்விட்டாரே அப்பா?’ என்று சொல்லாமல் அவரை அழைக்க என் மகன் உள்ளே சென்றது ஏன்? ஒரு படத்தில் நகைச்சுவைக் காட்சியொன்றில் திருடன் வெகு நேரமாகியும் வராததைக் கண்டு காவலர்கள் கதவைத் திறந்தால், கதவுக்கு அப்பால் வெட்டவெளி தெரிவதைப்போல என் மகன் உள்ளே செல்லும்போது கதவுக்கு அப்பால் வீடு இருப்பது போன்றில்லால் அந்தகார அத்துவானம் ஒன்று இருப்பதுபோல்தான் தெரிந்தது.
அந்த வீடு நிஜத்திலும் கிட்டத்தட்ட அப்படித்தான். சாத்தியங்களின் அத்துவானத்தில்தான் இருந்துகொண்டிருந்தது/ இருந்துகொண்டிருக்கிறது. கனவில் வந்த வீடு இருப்பது பாமணியாற்றங்கரையில், சாலையோரத்தில், சாலைக்கும் வாய்க்காலுக்கும் இடையில், புறம்போக்கில். ஆகவே, எப்போது இடிப்பார்கள், எப்போது ஆற்று வெள்ளம் வரும் என்ற நிச்சயங்கள் அற்ற வாழ்க்கை. என் வாழ்வின் பெரும்பாலான ஆண்டுகள்அந்த வீட்டில்தான் கழிந்தன. ஆற்றங்கரை, வாய்க்கால் போன்றவற்றின் அருகாமை சிறு வயதில் அந்த வீட்டை எனக்குச் சொர்க்கமாக மாற்றினாலும் கழிப்பறை வசதியில்லாதது கல்லூரிப் பருவத்தில் அந்த வீட்டை வெறுக்க வைத்தது. வெறுப்புக்கு முக்கியக் காரணம் அக்காவோ அம்மாவோ நாங்களோ கழிப்பறை வசதியில்லாததால் ஆற்றங்கரைச் சரிவில் காலைக்கடன்களைக் கழிக்க வேண்டிய நிலையை எண்ணியல்ல; மழைக்காலங்களில் பிசுபிசுத்த ஆற்றங்கரைச் சரிவில் மலம்கழிக்க இடம் தேடி நாங்கள் அலையும் சிரமங்களால் அல்ல; எப்போதோ சென்னையிலிருந்து வீட்டுக்கு வரும் அண்ணன் இந்த அசௌகரியங்களால் அப்பாவையும் அந்த வீட்டையும் கரித்துக்கொட்டிக்கொண்டிருந்ததால் அல்ல; கல்லூரி படித்துக்கொண்டிருந்தபோது என் வீட்டுக்கு ஒரே ஒரு முறை வந்த, நான் காதலிக்கும் பெண் ‘கழிப்பறை எங்கே இருக்கிறது’ என்று கேட்டபோது தயக்கத்துடன் கொல்லையில் வாய்க்காலுக்கு அருகில் உள்ள தட்டி மறைப்பைக் காட்டியபோதுதான் அந்த வீட்டை அவ்வளவு தீவிரத்துடன் வெறுக்க ஆரம்பித்தேன். அவள் நெற்றி சுருங்கி முகத்தில் ஒரு சுளிப்பு ஏற்பட்டபோது செத்துப்போய்விடலாமா என்னுமளவுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண், முதல்முதலாக ஒரு தட்டிமறைப்புக்குப் பின்னால் அப்போதுதான் சிறுநீர் கழித்திருக்க வேண்டும். அவள் என்னை ஏற்காமல் போனதற்கு அந்த வீடுதான் முக்கியக் காரணம் என்று அந்த வீட்டின் மேலும் அதை இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு சமையற்காரரிடமிருந்து வாங்கியிருந்த அப்பா மீதும் ஆத்திரஆத்திரமாக வந்தது. அப்படி ஆத்திரம் வரும்போதெல்லாம் அப்பாவைத் திட்டித் தீர்த்தேன். அவர் பதிலுக்கு “நான் என்னத்தையப்பா கொண்டுவந்தன், மாளிக வீடு கட்டுறதுக்கு? என் அப்பன் கோவணம் அவுத்த நேரம், என்னால முடிஞ்சது இவ்வளவுதான்” என்று சில சமயம் அழுகையை அடக்கிக்கொண்டு குமுறியிருக்கிறார்.
அந்த வீட்டுக்குப் பட்டா வாங்குவதற்கு ஒரு பக்கம் அப்பா முயன்றுகொண்டிருந்தார் என்றால் ஏதாவது நடந்து அந்த வீடு தரைமட்டமாகிவிடாதா என்று நான் ஏங்கிக்கொண்டிருந்தேன். அதில் கொஞ்சமும் நடந்தது. திண்ணைக்கு வெளியே சாலையை ஒட்டி அப்பா கட்டியிருந்த சுவரை, சாலை போடும்போது இடித்துவிட்டார்கள். வேளாண் அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக அப்பா வேர்வை சிந்தி உழைத்துப் பெற்ற ஆறு மாத சம்பளம் தரைமட்டமாகப் போனது. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். பொதுப்பணித் துறை அசைந்துகொடுக்கவில்லை. அவரது கட்சியபிமானமும் அந்தக் கட்சி ஆட்சியில் இல்லாததால் காப்பாற்றவில்லை. அவரது கண்களில் முன்சுவர் இடிந்துவிழுந்துகொண்டிருந்தது. அப்போது எனக்கு மகிழ்ச்சி அல்ல, குற்றவுணர்வுதான் ஏற்பட்டது. எனினும் முன்சுவர் இடிக்கப்பட்டதை முன்வைத்து அந்த வீட்டின் நிலையற்றதன்மையைச் சுட்டிக்காட்டி மீண்டும் சில நாட்களுக்குள் சண்டை பிடித்தேன். அவரும் வழக்கமான ஒப்பாரியையே வைத்தார்.
சென்னைக்கு வந்த பிறகு விடுதி, அண்ணன் வீடு, நண்பர்களுடன் பல்வேறு அறைகள், பின் திருமணம் ஆன பின் வாடகை வீடுகள், தற்போது சென்னை புறநகர்ப் பகுதியொன்றில் மனைவி பிள்ளைகளுடன் ஒரு சொந்த வீடு என்று அந்த வீடில்லாமல் ஒரு 21 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனாலும், நான் எந்த வீட்டின் மேல் அவ்வளவு ஆங்காரம் காட்டினேனோ அந்த வீடுதான் அதை நீங்கிய 21 ஆண்டுகளில் என் கனவுகளில் திரும்பத் திரும்ப வந்தது. இந்த ஆண்டுகளில் நான் இருந்த வேறு எந்த வீடும் ஒரு முறைகூட என் கனவில் வந்ததில்லை. என்னைத் தண்டிப்பதற்கென்றே மூர்க்கத்துடன் அந்த வீடு இப்படிச் செய்வதைப் போல் இருந்தது. அந்த வீட்டுக்கு ஒருபோதும் சென்றிராத என் மனைவி, மகன்கள் வரும் கனவுகள்கூட அந்த வீட்டில்தான் நிகழ்ந்தன. இவ்வளவு ஏன் அந்த வீட்டைக் குறித்துத் தன் முகத்தில் அருவருப்பை வெளிப்படுத்திய என் காதலியும் கூட கனவுகளில் அந்த வீட்டில்தான் என்னைச் சந்தித்துக்கொண்டிருக்கிறாள். அந்தக் கனவுகளில் அவள் ஒருமுறைகூட கழிப்பறை எங்கே என்று கேட்டதில்லை. நானும், கனவுகளில் காதலிகளுக்குச் சிறுநீர் வருமா வராதா என்று யோசித்துப்பார்த்ததில்லை. நான் நிறைய தடவை கனவுகளில் சிறுநீர் கழித்திருக்கிறேன் என்பது வேறு விஷயம்.
அந்த வீட்டைத்தான் கொண்டலாத்தியும் தன் கனவுக்குத் தேர்ந்தெடுத்தது. பழைய ஏற்பாட்டில் அசுத்தமான பறவைகளில் ஒன்றாகக் கருதப்பட்டதும், குர் ஆனில் சாலமன் (சுலைமான்) மன்னனின் சிறப்புத் தூதுவராகக் கூறப்பட்டதும், பாரசிகப் சூஃபிக் கவிஞர் ஃபரீதுதூன் அத்தார் கி.பி. 1177-ல் எழுதிய ‘பறவைகளின் மாநாடு’ காவியத்தில் ‘உலகிலேயே ஞானமிக்க பறவை’ என்று குறிப்பிடப்பட்டதுமான கொண்டலாத்தி நான் வெறுத்த, அப்பா தன் முழுமூச்சுடன் காப்பாற்றப் போராடிய அந்த வீட்டைத்தான் என் கனவில் வருவதற்குத் தேர்ந்தெடுத்திருந்தது. அந்த வீட்டைப் போல, அப்பாவைப் போல, அதுவும் என்னைப் பழிவாங்க வந்திருக்குமோ என்று யோசித்துப் பார்க்கிறேன். அல்லது சாலமன் மன்னனின் தூதுவராக இருந்ததுபோல் தற்போது இறந்துபோன என் அப்பாவின் தூதுவராக அது ஏதேனும் செய்திசொல்ல வந்திருக்குமோ? நீ எங்கே வேண்டுமானாலும் அலைந்து திரி, ஆனால் என் இரை இங்கேதான் என்று எனக்கு உணர்த்துவதற்காக என் அப்பாதான் கொண்டலாத்தி வடிவில் வந்திருக்கிறாரோ?
அந்தத் தொலைபேசி அழைப்பு மட்டும் வந்திராவிட்டால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். எப்படி யோசித்தாலும் கனவின் செல்திசைகளின் பிடி கிடைக்கவில்லை. அந்தகாரத்துக்குள் சென்ற என் மகன் தன் தாத்தாவை அழைத்துவந்திருப்பானா, அல்லது சற்று தாமதமாக நினைவுவந்ததுபோல் ‘தாத்தாதான் செத்துப்போய்விட்டாரே அப்பா’ என்று கடிந்துகொள்வானா, அல்லது திரும்பி வராமலே அதற்குள் மூழ்கிவிடுவானா?… அய்யோ இந்த சாத்தியம் எனக்கு அச்சமூட்டுகிறதே. நான் ஏன் அவனை அந்த அந்தகாரத்துக்குள் அனுப்பினேன்? ஆனால் ஒன்று, அனுப்பிய பிறகுதான அது அந்தகாரம் என்று தெரியும். பாவம் அவன், கொண்டலாத்தி இருந்திருக்கக் கூடிய கொஞ்ச நேரத்தில் அதைப் பார்த்து ரசித்திருக்க அவனை நான் விட்டிருக்கலாம். ஆனால், நானோ அவனுடைய தாத்தாதான் இதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன்.
அப்பா அழகுணர்வு, இங்கிதம், இயற்கை குறித்த நேசம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே கரப்பான் பூச்சியைப் பார்த்தால் இடக்கையால் அடித்துக் கொன்றுவிட்டு வலக்கையால் சாப்பாட்டைச் சாப்பிட்டுக்கொண்டிருப்பார். ஆற்றங்கரை ஓரத்தில் இருப்பதால் எங்கள் வீட்டுக்கும் அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் அடிக்கடி நல்லபாம்புகள் வரும். அதற்காகவே அப்பா சுளுக்கி ஒன்றை வைத்திருந்தார். அதை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் அவற்றைக் குத்தித் திருகிக் கொன்றுவிட்டுதான் வருவார். இதில் அவருக்கு ஒருமுறைகூட தோல்வி இல்லை. பறவைகள் விஷயத்திலும் அப்படித்தான்.
வீட்டின் வேலியையொட்டிய மரமொன்றில் கொண்டைக்குருவி கூடுகட்டி, முட்டையிட்டுக் குஞ்சுபொரித்திருந்தது. அந்த மரத்தால் கொசுத்தொல்லை அதிகரித்தால் அதன் கிளைகளை அப்பா தறிக்கப்போனார். அவருடன் கெஞ்சிப் பார்த்து, சண்டையிட்டு இறுதியில் அவர் தறிப்பதைத் தடுத்தேன். அந்தப் பறவை தன் குஞ்சுகளோடு பறந்துசென்ற பின்தான் அவரைத் தறிக்க அனுமதித்தேன். கிளைகள் அடர்வதும் கொண்டைக்குருவி மீண்டும் வந்து கூடுகட்டுவதும் அப்பா அந்தக் கிளைகளைத் தறிக்கச் செல்வதும் நான் சண்டையிட்டுத் தடுப்பதும் சீரான இடைவெளியில் நடந்துகொண்டிருந்தது. அப்படிப்பட்டவர் கொண்டலாத்தியை என் கனவில் கண்டிருந்தால் என்னவாகியிருக்கும்?
அவர் உயிரோடு இருந்தபோது பல காலம் வீட்டுக்கு அருகிலும் தொலைவிலும் பறவைகள் பார்க்கச் சென்றிருக்கிறேன். வீட்டு வேலிக்குள்ளும் பறவைகள் நிறைய வருவதுண்டு. அவற்றையெல்லாம் அவருக்கு நான் காட்டியதில்லை. அவருடைய பிரக்ஞையில் பறவைகள் என்ற ஒன்றில்லை; இந்த வீடும் இந்த வீட்டுக்குள் இருக்கும் தன் மனைவி, பிள்ளைகளும் ஏன் அவர் சைக்கிள், சுளுக்கி போன்றவையும்தான் அவர் பிரக்ஞையின் வட்டத்துக்குள் இருந்தன. அப்படிப் பறவைகள் அவர் உலகத்தில் வந்தால் அவை ஆக்கிரமிப்பாளர்களாகவோ அந்நியர்களாகவோதான் இருந்தன. ஆக, நான் ஏன் என் கனவில் அப்பாவுக்குக் கொண்டலாத்தி காட்ட முயன்றேன் என்பது எனக்குத் தீராத ஆச்சரியத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.
அடுத்து வந்த சில நாட்களில் மீதிக் கனவை நான் என் கற்பனையில் உருவாக்கப் பல வழிகளிலும் முயன்றுகொண்டிருந்தேன். கனவைக் கட்டமைக்க முடியும் என்ற துணிவை போர்கேஸின் ‘வட்டச் சிதைவுகள்’ கதை எனக்குத் தந்தது. அப்படி முயன்று பார்க்கலாமா என்று தோன்றியது. அதே நேரத்தில், அந்தக் கதையில் கனவைக் கட்டமைக்க முயல்பவன் இருப்பதுவும் ஒரு கனவுக்குள்தான் என்று கதையின் இறுதியில் அவன் உணர்வான். ஆக, ஒரு கனவை நாமாகக் கட்டமைக்க வேண்டுமென்றால் நாம் கனவுக்குள் இருந்தாக வேண்டும்; நனவுலகிலிருந்து அதைச் செய்ய முடியாது என்று தோன்றியது. நான் இருப்பது நனவில்தான் என்று அவ்வளவு நிச்சயம் எனக்கு எப்படி ஏற்பட்டது? ‘உலகெலாம் ஓர் பெருங்கனவு அஃதுளே/ உண்டுறங்கி இடர்செய்து செத்திடும்/ கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்/ கனவினும் கனவு ஆகும்’ என்று பாரதியும் பாடவில்லையா என்ற நம்பிக்கையில் நான் ஒரு கனவின் மீதியை உருவாக்கத் தொடங்கினேன்.
கனவு தர்க்கங்களை மீறியது என்பதால் அதன் அதர்க்கங்களையும் அதே நேரத்தில் சரிபாதியளவு தர்க்கங்களும் கனவில் இருப்பதால் தர்க்கங்களையும் பொறுக்கியெடுத்துக்கொண்டிருந்தேன். தர்க்கங்கள் எனும்போது நான் இருந்த வீடு, நான், சரியான தோற்றத்துடன் கொண்டலாத்தி, என் மகன் எல்லாவற்றையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமல்லவா? யார் மகனோ, யார் வீடோ அந்தக் கனவில் வரவில்லை. அப்படி வரும் சாத்தியங்களும் உண்டென்றாலும் இப்போதைக்கான குறிப்புச் சுட்டி இந்தக் கனவுதானே. இந்தக் கச்சாப் பொருள்களையெல்லாம் கொண்டு நான் கட்டமைக்கும் கனவைத் தொடங்குவோம்.
மகன் உள்ளே அந்தகாரத்துக்குள் செல்கிறான். நான் அப்பாவுக்காகக் காத்திருக்கிறேன். தன் தாத்தாவைத் தேடிச் சென்ற என் மகன் தாத்தாவாகத் திரும்பி வருகிறான். “அங்க பாருங்கப்பா கொண்டலாத்தி. இதுவரைக்கும் நீங்க பாத்திருக்க மாட்டீங்க. இதைப் பாத்த பிறகுதான் நீங்க சாகணும்” என்கிறேன். “வாவ், எவ்வளவு அழகா இருக்குப்பா. தம்பியை எழுப்புறேன்” என்று என் மகனின் குரலில் பதிலளிக்கிறார் அப்பா. ஆனால், நான் எந்த அதிர்ச்சியும் அடையவில்லை. வாசலைப் பார்க்கிறேன். சின்னவன் வாசலில் ஏதோ பொறுக்கித் தின்றுகொண்டிருந்தான். “அப்பா, போய்த் தூக்குங்க. அவன் பாம்பைத் தின்னுக்கிட்டிருக்கான்” என்று நான் கத்த அப்பா கொசுக்கதவைத் திறக்காமல் அதனூடாகப் பறந்துசென்று அந்தப் பாம்பைச் சிறியவனிடமிருந்து பிடுங்கித் தான் தின்ன ஆரம்பித்தார். இந்த நேரத்தில் ஒரு கைபேசி அழைப்பையோ அல்லது திடுக்கிட்ட விழிப்பையோ கூட நாம் சேர்த்துக்கொள்ளலாம்.
அல்லது உள்ளே சென்ற என் மகன் தன் தாத்தாவுடன் திரும்பி வருகிறான். அவரிடம் நான் சொல்கிறேன், “அப்பா அங்கே பாருங்கப்பா கொண்டலாத்தி. சாலமன் ராஜா ஏதோ தூது அனுப்பியிருக்கார். என்னென்னு அதுகிட்ட போய்க் கேளுங்க” என்றேன். அவர் திண்ணையின் வலப்புறம் திரும்பி ஓட்டுச் சார்பில் செருகிவைக்கப்பட்டிருந்த சுளுக்கியை எடுக்கிறார். கொசுக் கதவைத் திறந்துகொண்டு செல்கிறார். அவர் அதைக் குறிபார்த்துக்கொண்டிருக்கும்போது அந்தக் கொண்டலாத்தி அவரை நிமிர்ந்து பார்த்துப் பாட ஆரம்பிக்கிறது, “உமது நேசம் திராட்சைரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது. உமது பரிமளத் தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளத்தைலமாகயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.” அப்பா இப்போது திரும்புகிறார். கொண்டலாத்தி அவர் தோளில் வந்து உட்கார்ந்துகொள்கிறது. சுளுக்கியை என்னை நோக்கிக் குறிவைக்கிறார். என் மகன் கைதட்டி ஆர்ப்பரிக்கிறான். நான் திடுக்கிட்டுக் கண்விழிப்பதைப் போல கனவை முடித்துக்கொள்ளலாம். ஏனெனில், என் கனவுகளில் நான் செத்ததே இல்லை. பாம்பு கடித்து, நீரில் மூழ்கி, குத்துப் பட்டு என்றெல்லாம் சாவதற்கு முந்தைய கணம் வரை சென்றிருந்தாலும் ஒருபோதும் செத்துப்போனதில்லை. ஆகவே, அந்த இடத்தில் முடித்துக்கொண்டால் சரியாக இருக்கும்.
அல்லது உள்ளே சென்ற மகன் திரும்பி வராமல் நானும் அந்த அந்தகாரவெளிக்குள் சென்று திகைத்துப்போய் திரும்பும் வழி தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கலாம். ஒரு கொண்டலாத்திக்காக அப்பாவையும் என் மகனையும் தொலைத்ததுடன் என்னையும் தொலைத்துக்கொண்டேனே என்று வருந்திக்கொண்டிருக்கும் நேரத்தில், ஒன்று மீட்சிக்கான பாதை தெரிய வேண்டும் அல்லது பீதியில் விழிப்பு வர வேண்டும்.
நான் கட்டமைக்க முயன்ற எந்தக் கனவுமே எனக்கு திருப்தியளிக்கவில்லை. மிகச் சரியாக அப்பா வர வேண்டிய இடத்தில் ஒரு கைபேசி அழைப்பு (இன்னும் சரியாகச் சொன்னால் இந்தப் பேரண்டம்) என் கனவைத் துண்டித்ததில் ஒரு அமானுஷ்யத் தன்மை, இன்னும் சொல்லப்போனால் மிஸ்டிக்தன்மை இருப்பதை உணர்கிறேன். அந்தத் தன்மையை ஒருபோதும் நான் கட்டமைக்கும் கனவுக்குத் தர முடியாது. அதேபோல், இனி ஒருபோதும் மூலக் கனவின் மீதிப் பகுதியும் எனக்குத் தெரியப்போவதில்லை. இனி, எல்லையற்ற சாத்தியங்களின் வெளியில் அந்தக் கனவின் மீதி மிதந்துகொண்டிருக்கும். மண்ணில் கிடக்கும் சிறு வளையல் துண்டு நாம் கடக்கும் ஒரு நொடியில் சூரியனை மினுக்கிட்டு நம் கண்களைக் கூசச் செய்வதுபோல், எப்போதாவது ஒரு நொடியில் மினுக்கிடலாம் என்ற நம்பிக்கையும், இல்லையில்லை அந்தக் கனவு அப்படித் தொலைந்துபோனதுதான் அதற்கு அழகு என்ற வசீகரமான அவநம்பிக்கையும் ஒன்றாக ஏற்பட்டன.
எனினும், “இந்தப் பேரண்டமானது நாம் கற்பனைசெய்யுமளவுக்கு விசித்திரமானது மட்டுமல்ல, நம்மால் கற்பனை செய்யக்கூடிய அளவை விட விசித்திரமானது” என்று உயிரியலர் ஜே.பி.எஸ். ஹால்டேன் கூறியது எவ்வளவு உண்மை என்று சில நாட்களுக்குள் தெரிந்துகொண்டேன். ஆம்! மீண்டும் கொண்டலாத்தியும் அப்பாவும் என் கனவில் வந்தார்கள். மூலக் கனவின் மீதியாக அல்ல. தனிக் கனவாக. கனவு நாம் நினைப்பதைப் போல் மட்டுமல்ல, நாம் நினைக்கக்கூடியதை விட விசித்திரமானது.
அப்பா மரணப் படுக்கையில் இருக்கிறார் என்று எனக்குச் செய்தி வந்தது. எனக்கு ஒரே பயமும் தவிப்பும். கொண்டலாத்தியைப் பார்க்காமல் அப்பா செத்துப்போய்விடுவாரோ என்று. சாலமன் ராஜாவே எனக்காக ஒரு கொண்டலாத்தியை அனுப்பிவையும் என்று வேண்டிக்கொண்டே போனேன். என் கையில் நான் ஒரு மஞ்சப்பை வைத்திருந்தேன். அதில் என்ன கொண்டுசெல்கிறேன் என்று கையை விட்டுத் துழாவினேன். புசுபுசுவென்று ஏதோவொன்று என் கைக்குள் திமிறியது. கைகளில் எடுத்துப் பார்த்தேன். அது ஒரு கொண்டலாத்தி. ‘முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ அப்படியே குமாரத்திகளுள்ளே எனக்குப் பிரியமான’ என் கொண்டலாத்தி. எனக்கேற்பட்ட பரவசம் என் கனவுக்கு வெளியேயும் கசிந்துகொண்டிருந்ததைக் கனவுக்குள் இருந்துகொண்டே என்னால் உணர முடிந்தது. என் அப்பா கொண்டலாத்தி பார்க்காமல் சாக மாட்டார்; சாகக் கூடாது. ஆனால், நான் போய்ச் சேரும்வரை அவர் உயிருடன் இருக்க வேண்டும் என்பதுதான் என் ஒரே கவலை. ஆமாம், நான் எங்கிருந்து புறப்பட்டு எங்கு போய்க்கொண்டிருக்கிறேன்? சும்மா போய்க்கொண்டிருந்தாலே இறுதியில் அப்பாவைப் பார்த்துவிடலாமா?
நான் போய்ச்சேர்ந்த இடம் பழைய வீடா, சொந்த ஊரில் அண்ணன் கட்டிய புதிய வீடா, அல்லது மருத்துவமனை அறையா என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. இவை எல்லாம் ஒன்றாகக் குழைந்து ஒரே நேரத்தில் வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. அப்பாவை ஒரு கட்டிலில் படுக்க வைத்திருந்தனர். அதுவும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக் கட்டிலாகவும் கயிற்றுக் கட்டிலாகவும் குழைந்து தெரிந்தது. சுற்றிலும் அம்மா, அக்கா, சொந்தக்காரர்கள் நின்றிருந்தார்கள். ஆனால், ஒருவர் முகம் கூட எனக்குப் பரிச்சயமானதுபோல் தெரியவில்லை. அப்பாவைப் பார்த்து விம்மத் தொடங்கினேன். அதுவரை வெறுமையில், உச்சியில் வெறித்திருந்த அவரது பார்வை என்னை நோக்கித் திரும்பியது. “எனக்குத் தெரியும்ப்பா. நீங்க நான் வரும் வரைக்கும் சாக மாட்டீங்கன்னு. நீங்க கொண்டலாத்தி பாக்காம சாகக் கூடாதுப்பா. அதுக்காகத்தான்பா ஓடோடி வந்தேன். பாருங்க சாலமன் ராஜா உங்களுக்காக அனுப்பிவச்ச கொண்டலாத்திய” என்று சொல்லிவிட்டுப் பைக்குள்ளிருந்து கொண்டலாத்தியை வெளியில் எடுத்தேன். அது விடுபடுவதற்கான எந்தப் பிரயத்தனங்களையும், பைக்குள் இருந்தபோதும் சரி என் கைக்குள் இருக்கும்போதும் சரி, செய்யவில்லை. என் கையில் இருப்பதை அப்பாவின் கண்கள் சற்று நேரம் பார்த்தன. அந்தக் கண்களுக்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அந்தக் கண்களில் கொண்டலாத்தி பிரதிபலித்தது ஒன்றே போதும் என்று நிம்மதியுடன் அதனை அவர் நெஞ்சின் மேல் விட்டேன். அதிர்ந்துபோய் சற்று முன்னே வந்த, யார் முகத்தையோ கொண்டிருந்த என் அம்மா “என்னடா தம்பி இது?” என்றாள். “சும்மா இரும்மா. கொண்டலாத்தி இந்த உலகின் பேரழகி. அப்பாவின் நெஞ்சு மேல அவ நிக்குற அழகைப் பாரு. எவ்வளவு நாசுக்கா எச்சம்போடுறா பாரு. இப்படிப்பட்ட பேரழகியைப் பாக்காம எவ்வளவு நாள் வாழ்ந்தா என்ன பிரயோசனம்? அப்பா கொண்டலாத்தி பார்த்துட்டார். அவருக்கு பிரக்கினை இருக்குதோ இல்லையோ அவரு உடம்பு பூரா இன்னேரம் இந்த அழகு நெறைஞ்சிருக்கும். இந்த அழகு நெறைஞ்சிருக்கிற அவர் உயிரத்தான் சாவு எடுத்துக்கிட்டுப் போகணும். இனி அவர் சாகலாம். அவருக்கு வாயில நான் ஊத்த வேண்டிய பால, கண்ணுல ஊத்திட்டேன். அவரைப் போய் சாலமன் ராஜாவோட சிம்மாசனத்துக்குப் பக்கத்துல உக்காந்துக்கச் சொல்லு. அவருக்குன்னு தனி சிம்மாசனம் போட்டுவைக்கச் சொல்லி இந்தக் கொண்டலாத்திய சாலமன் ராஜாகிட்டயே அனுப்பப்போறேன்” என்று சொல்லிவிட்டுக் கொண்டலாத்தியை மறுபடியும் கையில் எடுத்துப் பறக்க விட்டேன்.
பேரண்டம் இந்த முறை சதிசெய்யவில்லை.
(‘உயிர்மை’ நவம்பர்-2021 இதழில் வெளியான சிறுகதை)
Sunday, October 11, 2020
அப்பா இல்லாத வீட்டில் இனி பயமில்லாமல் விளையாடு கொண்டைக்குருவியே!
ஆசை
அப்போது எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு சில நாட்களாகவே சந்தேகத்துக்குரிய நடமாட்டம் இருப்பதை உணர முடிந்தது. நானும் கண்டுகொள்ளாததுபோல் இருந்துவிட்டேன். சில நாள் கழித்து சந்தேகத்துக்குரிய நடமாட்டம் வெளிப்படையான நடமாட்டமாக மாறியது. யாரோ ஒரு அந்நியர் அடிக்கடி எங்களை வேவுபார்க்க வருவது தெளிவாகிவிட்டது. என்ன காரணத்துக்காக வேவு பார்க்க வருகிறார் என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் வேவுபார்த்தல் என்ற நிலையைத் தாண்டித் தன் உரிமையை நிலைநாட்டிக்கொள்வதுபோல் அவர் எங்கள் வீட்டை ஆக்கிரமித்துவிட்டிருந்தார்.
அவர் வேறு யாருமல்ல. கொண்டைக்குருவிதான். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் செம்பிட்டக் கொண்டைக்குருவி (Red-vented bulbul). எங்கள் வீட்டுச் சுற்றுச்சுவருக்குள் இருந்த மரத்தில் அது கூடு கட்ட ஆரம்பித்திருக்கிறது. அது தனி ஆள் கிடையாது, இன்னொருத்தரும் அதற்குத் துணை. இப்போதுதான் எனக்கு விஷயம் புரிந்தது. தான் கூடு கட்டுவதற்கு எந்த மரம் ஏற்றது, எந்தக் கிளை ஏற்றது, எந்த வீடு ஏற்றது என்பவற்றையும் கூடுகட்டும் இடம் பாதுகாப்பானதுதானா, அருகில் உள்ளவர்கள் ஆபத்தற்றவர்களா என்பதை முதலில் அறிந்துகொள்வதற்காகக் கொண்டைக்குருவி நோட்டம்பார்க்க முதலில் வந்திருக்கிறது. நோட்டம்பார்க்க வரும்போதெல்லாம் சுற்றுச்சுவரின் மேல் சற்று உட்கார்ந்துவிட்டுப் போவது, கொடியில் ஊஞ்சலாடுவது, அருகில் உள்ள செடிகொடிகளில் சற்று உலாவிவிட்டு வருவது என்று வழக்கத்தை வைத்திருந்தது. பிறகு தன் வருகையை அதிகரித்து, அதைத் தன்னுடைய பிரதேசமாக ஆக்கிக்கொண்டு அங்கிருக்கும் மரத்தில் கூடு கட்ட ஆரம்பித்தது.
அதன் கூடு உருவாகும் விதத்தை அறிந்துகொள்ள எனக்கு ஆவலாக இருந்தது. மாடிப்படிகளுக்கு அருகில் இருந்த மரத்தில்தான் கூடு உருவாக ஆரம்பித்தது. மாடியில் போய்ப்பார்த்தால் இரண்டு அடி தூரத்தில் பார்க்கலாம். அதன் கூடு உருவாகும் இடத்தைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. இலைக்காம்பைவிடச் சற்றுப் பெரிய தளிர்க் கிளைகள் இரண்டுக்கு இடையில் பொதிந்து கூடு உருவாக ஆரம்பித்திருந்தது. அந்தத் தளிர்க் கிளையில் அணில் கூட ஓடாது, அவ்வளவு மென்மை. இதில் என்ன அப்படி பாதுகாப்பு என்று ஆயிரத்தெட்டு தடவை நோட்டமிட்டாய் கொண்டைக்குருவியே என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன். ஆனால் உண்மையில் அதற்கு அந்த இடம் போதுமானது, அவற்றின் கனத்தையும் போடக்கூடிய முட்டைகள், அதிலிருந்து வெளியாகக் கூடிய குஞ்சுகள் எல்லாவற்றையும் கணக்குப்போட்டுதான் கூட்டை உருவாக்க ஆரம்பித்திருந்தது. சிறுசிறு நார்கள் செத்தைகள் போன்றவற்றைக் கொண்டு சிறு கிண்ணம் போன்ற வடிவில் அந்தக் கூடு உருவாக ஆரம்பித்திருந்தது. அந்தக் கூட்டைக் கட்டி முடிப்பதற்குள் ஆயிரமாயிரம் தடவை கொண்டைக்குருவி கட்டுமானப் பொருட்களை எடுத்துக்கொண்டு கூட்டை நோக்கிப் பறந்திருக்கும். எப்படியோ கூடு உருவாகிவிட்டது.
ஒருநாள் மாடிக்குப் போய்ப் பார்த்தேன். கூட்டுக்குள் கொண்டைக்குருவி உட்கார்ந்திருந்தது. அது முட்டையிட்டு அடைகாத்துக்கொண்டிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். சற்றுப் பக்கத்தில் மாடியில் செருகப்பட்டிருந்த கம்பு ஒன்றில் இன்னொரு கொண்டைக்குருவி என்னைப் பார்க்காததுமாதிரி பார்த்துக்கொண்டிருந்தது. சரி அவற்றின் குடும்ப வாழ்க்கையில் தலையிடக் கூடாது என்று நான் நல்லபிள்ளையாகக் கீழே வந்துவிட்டேன். ஆனால் அந்த அந்நியர்கள் என் அளவுக்குக் கண்ணியமாக இல்லை.
காம்பவுண்டு சுவரை ஒட்டி இருந்த தண்ணீர்க் குழாய்க்குக் கீழே உள்ள வாளியில் குதித்துக் குளிப்பது, தண்ணீர் குடிப்பது என்று எங்கள் அனுமதியில்லாமல் அநாகரிகமான செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள்! அது மட்டுமல்லாமல் போர்டிகோ மாதிரி இருந்த இடத்தின் மேலே ஒரு மின்விசிறி இருக்கும். அதன் மேல் வந்து உட்கார்ந்துகொண்டு விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் அத்துமீறிச் செயல்பட்டாலும், அது எங்கள் வீடாக இருந்தாலும் நான் அவர்களை இடையூறு செய்யக் கூடாது என்று எவ்வளவு ஒதுங்கி நடந்தேன் தெரியுமா? அவர்கள் வந்து விளையாடும்போது சிறுவர்கள் பெரியவர்கள் யாரையும் சத்தம்போடாமல் பார்த்துக்கொண்டதுடன் அவை விளையாடும் இடத்துக்கு அருகில் யாரும் வராமலும் பார்த்துக்கொண்டேன். முரட்டு ஆசாமியான என் அப்பாவைக்கூட அதட்டி ஒடுக்கினேன். வீட்டுக் கதவை மெலிதாகத் திறந்துவைத்துவிட்டு அந்த அந்நியர்கள் என்ன அட்டூழியம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருப்பேன்.
லேடிபேர்ட் சைக்கிளுக்கு முன்னால் உள்ள கூடையில் வந்து படுத்துக்கொள்வது அந்த அந்நியர்களுக்குப் பிடித்தமான செயல். படுத்துப் புரள்வார்கள், சமயத்தில் ஆள் வரும்போதுகூட பயப்படாமல் மும்முரமாக விளையாடிக்கொண்டிருப்பார்கள். மனிதர்களை மதிப்பதே இல்லை. உண்மையான வீட்டுக்காரர்களான நாங்கள் அவர்களுக்காக அடங்கி ஒடுங்கி நடந்துகொள்ள அவர்களோ எங்களைச் சட்டை செய்வதே இல்லை. ஆகா! எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆபத்து புரிய வந்தது. அவர்கள் நம் வீட்டை அபகரித்துவிட்டிருக்கிறார்கள். கயவர்கள், இருக்க இடம் கொடுத்துச் சுதந்திரமாக உலவ விட்டதற்கு நன்றியுணர்ச்சியே இல்லாமல் வீட்டைக் கைப்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். போலிப் பத்திரம் ஏதாவது தயாரித்திருப்பார்களா என்று வேறு எனக்குச் சந்தேகம். அந்நியர்களை ஆட்சியை விட்டுத் துரத்த இன்னொரு சுதந்திரப் போர் நிச்சயம் தேவை என்பது எனக்குத் தெரிந்தது. அந்தச் சுதந்திரப் போருக்கு என்ன பெயர் வைக்கலாம்? ‘கொண்டையனே வெளியேறு இயக்கம்’ என்று பெயர் வைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
அவற்றை வெளியேற்றுவதற்கான வேலைகளில் நிஜமாகவே எங்கள் அப்பா ஏற்கனவே இறங்கிவிட்டிருந்தார். கூடு இருந்த மரத்தில் நிறைய கொசு அடைவதாகப் பக்கத்து வீட்டுக்காரர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். அதனால் அப்பா மரத்தை வெட்டத் தீர்மானித்துவிட்டார். அப்போதுதான் முட்டையிட்டு அடைகாத்துக்கொண்டிருக்கிறது. அதற்குள் மரத்தை வெட்டினால் அவ்வளவுதான் என்பதால் அப்பாவிடம் நயமாகக் கெஞ்சினேன். அவர் முரட்டு மனிதர், அவரிடம் மென்மைக்கு இடமே கிடையாது. சாப்பிடும்போது கரப்பான் பூச்சியைப் பார்த்தால்கூட அப்படியே கையால் சப்பென்று அடித்துக் கொன்றுவிடுவார். பக்கத்து வீடுகளில் பாம்பு என்று கேள்விப்பட்டாலே வீட்டில் அதற்காகப் பிரத்தியேகமாகத் தயாரித்து வைத்திருக்கும் சுளுக்கியை எடுத்துக்கொண்டு ஓடுவிடுவார். இதுவரை பாம்பை அடிப்பதில் அவருக்குத் தோல்வியே கிடையாது. அப்படிப்பட்டவரிடம் கெஞ்சிப் பிரயோசனம் இல்லை. பாவபுண்ணியத்தைச் சொல்லிதான் தடுக்க வேண்டும் என்று சொல்லித் தற்காலிகமாக அவரைத் தடுத்துவிட்டேன். குஞ்சு பொறித்து பறந்து சென்ற பிறகு வெட்டிவிடலாம் என்ற ஒப்பந்தத்துக்கு வந்தோம்.
சென்னைக்கு வந்துவிட்டு மறுபடியும் ஊருக்குத் திரும்பியபோது அங்குள்ள சிறுவர்கள் வந்து என்னிடம் சென்னார்கள், குஞ்சு பொறித்துவிட்டதென்று. மாடியில் நின்றுகொண்டு அவர்கள் கிளையைச் சற்று இழுத்துக் கூட்டினுள் இருந்த குஞ்சைப் பார்த்திருக்கிறார்கள். நான் அப்படிச் செய்யக் கூடாது என்று அவர்களை எச்சரித்துவிட்டு மாடிக்குச் சென்று கிளையையோ கூட்டையோ தொடாமல் எட்டிப் பார்த்தேன். கூட்டினுள் ஒரே ஒரு குஞ்சு அப்படியே பொதிந்து உட்கார்ந்துகொண்டிருந்தது. அருகே இருந்த ஒரு கம்புக்கு மேலே அதன் தாய்ப் பறவை உட்கார்ந்து கண்காணித்துக்கொண்டிருந்தது. நான் அதைப் பார்த்தபோது, "நான் கண்காணிக்கவில்லை, உன்னைப் பற்றித்தான் எனக்குத் தெரியுமே, நான் சும்மாதான் இங்கு உட்கார்ந்துகொண்டிருக்கிறேன்" என்று அது என்னிடம் சொன்னது.
என் வாழ்வில் என்னை மிகவும் நெருங்கி வந்த பறவைகள் காகமும் கொண்டைக்குருவியும்தான். காகம் என் கையில் இட்லியோ பிஸ்கட்டோ வாங்கித் தின்னும் அளவுக்கு நெருங்கிவந்திருக்கிறது. கொண்டைக்குருவியோ மாடியில் சாயங்காலம் நான் படித்துக்கொண்டிருக்கும்போது இரண்டடி தள்ளியிருக்கும் கட்டையில் வந்து உட்கார்ந்துகொண்டிருக்கும். அப்படி உட்கார்ந்திருக்கும்போது நான் அதை மிகவும் என் மனதுக்கு நெருக்கமானதாக உணர்வேன். ஒரு துணையோடுதான் நாம் மாடியில் இருக்கிறோம் என்று எனக்கு உற்சாகமாக இருக்கும். மற்ற பயல்கள் அப்படியில்லை. கரிச்சான் பயல்கூட ஓரளவுக்குப் பக்கத்தில் வருவான். ஆனால் இந்தத் தேன்சிட்டுப் பயல் பண்ணிக்கொள்ளும் பிகு இருக்கிறதே. அருகில் போனாலே ஓடிவிடுவான். என்னவோ தான்தான் உலக அழகி (அழகன்) என்று நினைப்பு, அவனை/ளை ஒளிந்து நின்றுதான் பார்க்க வேண்டுமாம். ஆனால் கொண்டைக்குருவிப் பயல் அப்படியில்லை. ஆமாம் அவன் ஏன் என்னருகில் வரப் பயப்பட வேண்டும். அவன்தான் இந்த வீட்டை உரிமையாக்கிக்கொண்டானே. நான்தானே அவனுக்குப் பயப்பட வேண்டும். தன் உரிமையை நிலைநாட்டிக்கொள்ளும் விதத்தில்தான் அவன் எனக்கு அருகில் தைரியமாக உட்கார்ந்திருக்கிறான் போல. அவன் என்னருகில் வரும்போதெல்லாம் ஏதோ அவனுடைய இடத்தில் நாம் இருக்கிறோமோ என்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுவான்.
அப்போது என் நண்பன் அவனுடைய மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து ஓரிரு நாட்கள் தங்கினான். அவனுக்கு மூத்தது ஒரு பெண், அடுத்து ஒரு சிறு பையன். அந்தப் பையன் வீட்டுக்குள் நுழைந்த கணத்தில் ஒட்டுமொத்த வீடும் தலைகீழாகப் புரள ஆரம்பித்தது. புதிய இடம் என்ற உணர்வு சற்றும் இல்லாமல் ஓடவும் உருளவும் புரளவும் ஆரம்பித்தான். அவனுடைய விளையாட்டுக்குத் துணை யாரும் தேவையில்லை. அவன் விளையாடுவதற்கு அவன் மட்டுமே போதும். யாராலும் அவனை அடக்க முடியவில்லை. அவ்வளவு விளையாட்டு! நண்பனும் நானும் நெருக்கமாகப் பேசிக்கொள்வதற்காக வெளியில் வந்தோம். அப்போது தன் பையனைப் பற்றி அவன் வியந்து பேசினான். "தம்பிகிட்ட ஒரு இயல்பு இருக்கு அவன் எந்த எடத்துக்குப் போனாலும் அவன் அதத் தன்னோட இடமா மாத்திக்குவான்" என்றான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது, முதல் நாள்தான் கொண்டைக்குருவியைப் பற்றி இந்தக் கவிதையை எழுதினேன்:
என் இடம்
நீ வந்தால்
அது
உன் இடம்
ஆகிவிடுகிறதே
எப்படிக்
கொண்டைக்குருவியே?
கொண்டைக்குருவியைப் பற்றி நான் எழுதியது என் நண்பன் தன் குழந்தையைப் பற்றிச் சொன்னதோடு எவ்வளவு பொருந்திப்போகிறது!
***
சில நாட்கள் கழித்து கூட்டில் ஆட்களை யாரும் காணோம். அப்பா மரத்தை அடியோடு வெட்டாமல் பாதி மட்டும் வெட்டியிருந்தார். மாடியில் உட்கார்ந்து ஒருநாள் படித்துக்கொண்டிருந்தபோது மாடியின் சுவரில் இரண்டு ஆசாமிகளைப் பார்த்தேன். ஒரு ஆசாமி வாயைப் பிளந்துகொண்டிருந்தார்; மற்றொரு ஆசாமி ஒரு வேப்பம்பழத்தை அப்படியே முழுசாக மேற்படியார் வாயில் ஊட்டியதும் அவர் அப்படியே விழுங்கிவிட்டார். நமக்கெல்லாம் தொண்டையை அடைத்துக்கொள்ளுமே, மேற்படியார் எப்படி விழுங்கினார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை விட ஆச்சரியம் மேற்படியார் எவ்வளவு விரைவில் வளர்ந்திருக்கிறார். கூட்டில் பார்த்த முட்டை இனி வானை அளக்க ஆரம்பிக்கும்!
***
மரம் வளர்வதும் அதில் அதே கொண்டைக்குருவியோ அல்லது வேறு ஒரு கொண்டைக்குருவியோ கூடு வைப்பதும், கொசுவுக்காக அப்பா மரத்தை வெட்டுவதும் எல்லாம் திரும்பத்திரும்ப இயற்கையின் சுழற்சிபோல் மாறிமாறி நிகழ்ந்துகொண்டிருந்தது. சமீபத்தில் அப்பா மரணமடைந்த பின் ஒட்டுமொத்த வானத்தையும் அதன் கீழுள்ள அந்த வீட்டையும் ஏகபோகமாக அந்தக் கொண்டைக்குருவியே எடுத்துக்கொண்டிருக்கும். இனி அதனுடன் போர் தொடுக்க அந்த வீட்டில் யாருமில்லை!



