Wednesday, April 26, 2023

மன்சூர் அலிகான் என்ன பாவம் செய்தார்? - பெயரிலி துயர்க்கவி


(வேட்டையாடத் தெரியாத, கள்ளு எங்கே கிடைக்கும் என்று அறியாத, ஆதிகுடியின் வெறியாடலை ஆடவும் தெரியாத, தாழ்வு மனப்பான்மை கொண்ட இளம் கவிஞர் ஒருவர் எழுதிய கவிதை இது. போன ஆண்டு எனக்கு அனுப்பியிருந்தார். யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று. அவர் துயரத்தை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இங்கே பகிர்ந்துகொள்கிறேன்)


நான் மன்சூர் அலிகானைப் பற்றி

ஒரு கவிதை எழுதுவேன்

அவருடைய வாழ்க்கை சந்திரபாபுவுடையதுபோல

சாவித்திரியைப் போல

அவ்வளவு துயரமானது இல்லை எனினும்

என் கவிதையில் இடம்பெறுவதைவிடவும்

மன்சூர் அலிகானுக்குத் துயரம்

ஏதும் ஏற்பட்டுவிடாது என்ற ஆசுவாசத்தை

அவர் பெறலாம்


நிச்சயம்

‘சக்கு சக்கு வத்திக்குச்சி

சட்டுன்னுதான் பத்திக்கிச்சி’ பாடலும் 

என் கவிதையில் இடம்பெறும்

ஆனால் அதற்கு இசையமைத்த

ஆதித்தியன் இடம்பெற மாட்டார்

அவருக்கு என் அன்பும் வணக்கங்களும் 

இருந்தாலும்


அகால மரணமடைந்தவர்களுக்கு

அஞ்சலி பாடியே ஒட்டடை அடைந்துபோன 

நவீனக் கவிதையில் நான் மேலுமொரு

ஒட்டடை இழையை சேர்க்க மாட்டேன்


மன்சூர் அலிகான் காலைத் தூக்கிச்

சுழற்றி ஆடும் ஆடலில் 

ஆதிகுடியின் 

கள்ளுகுடி ஆடலை நான் நிச்சயம் காண மாட்டேன்


அந்த நேர சந்தோஷத்துக்கு

என் கவிதைக்கு

ஆதி வரை செல்லத் தெரியாது


எனக்குப் பன்றிக்கறி சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது

ஆனால்

எனக்குள்

இருந்த வேட்டையாடியை 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு

சரணாலயம் ஆகாத காடொன்றுக்குள் 

விட்டுவிட்டு வந்துவிட்டேன்

கவிதைக்குள் வந்து புகுந்துவிடுவானென்ற அச்சத்தில்


அவன் அப்படியே வந்தால் பிரச்சினை இல்லை

வரும் வழியில் உருவான சாமி, மதம், சாதி

என்று இழுத்துக்கொண்டு வந்துவிடுவான்

அவன் அங்கேயே வேட்டையாடிக்கொண்டிருக்கட்டும்


ஆனால்

ஆதியில் தின்ற பன்றிக்கறியின் சுவையை

என் உதிரத்தின் பல்லிடுக்குகளிலிருந்து

எந்தத் துடியிசையின் பல்குச்சி கொண்டும்

என்னால் குத்தி அகற்ற முடியவில்லை


வேட்டையாடத் தெரியாத,

குறைந்தபட்சம்

கவிதையில் வேட்டையாடத் தெரியாத

ஒரு 21-ம் நூற்றாண்டு தமிழ்க் கவிஞன்,

(கவனிக்க ‘கவிஞன்’,

பெண் கவிஞர்கள் ஒருபோதும் 

வேட்டைக் கவிதைகள் எழுத முடியாது

என்ற அளவில் நிம்மதி)

இன்பாக்ஸ்களைத் தாண்டிவரும்

தகுதி இழந்துவிடுகிறான்


எனக்கும்

எனது வேட்டையாடிக்கும் இடையிலோ

மூவாயிரம் ஆண்டுகள் காலத்தொலைவு


கைபேசியின் கூகுள் மேப்ஸால்

முடிந்ததெல்லாம்

பக்கத்தில் உள்ள 

நல்லதொரு பன்றிக்கறி உணவகத்துக்கு

டைரக்‌ஷன் காட்டுவதே


அதுவே பேருதவி

மூவாயிரம் ஆண்டுகளுக்கும் சேர்த்து

டைரக்‌ஷன் காட்டினால்

தாங்க முடியாது என்னால்

ஏற்கெனவே

இந்தியனாகவும் தமிழனாகவும்

தலைக்கு மேல் வந்து உட்கார்ந்திருக்கும்

பல்லாயிரமாண்டுகளை 

கம்ப்யூட்டர் வைரஸ் வந்து அழித்திடாதா

என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன் நான்


சாப்பிட்டு முடித்துவிட்டு

ஒரு தம்மைப் போடுவதற்காக

வாயில் சிகரெட்டை வைத்து

வத்திக்குச்சியைத் தீப்பெட்டியில் 

உரசினால்

சக்கு சக்கு வத்திக்குச்சி

சட்டுன்னுதான் பத்திக்கிச்சு மயிலே மயிலே


நவீன செவ்வியல் கவிதையின்மீது

மன்சூர் அலிகான் ஆடுகிறார்

துயரழியதியுயர்மீப்பெரும்

டிக்டாக் நடனம்

- பெயரிலி துயர்க்கவி



Sunday, April 9, 2023

புனித கல்லறையர் சொன்ன சுவிசேஷம்



தேவனே
நீர் உம்மை
உயிருள்ள அப்பமும்
திராட்சை ரசமும் என்றீர்

நானோ
உயிருள்ள கல்லறையாக
இருக்கிறேன்

யாரேனும் திறந்து பார்த்தால்
இப்படி
வெட்டவெளியைப்
புதைத்துவைத்திருக்கிறார்களே
என்ன மடத்தனம்
என்று காறியுமிழ்வார்கள்

மேலும்
வாழ்வது கல்லறை சுமப்பதற்கான
கூலி
என்று நான் எழுதிக்கொண்ட
கல்லறை வாசகத்தைப் பார்த்து
உம் வாக்காக 
எடுத்துக்கொண்டு
எல்லோரும்
அஞ்சி அகன்றுவிடுகிறார்கள்

சிலுவை சுமத்தலுக்குக்
கிடைத்த வெளிச்சம்
கல்லறை சுமத்தலுக்குக்
கிடைப்பதில்லையே
என்ற கடுப்பில்
உமக்கே நான் செய்த
இடைச்செருகல் அது

சிலுவையில் மரித்தபின்
உம்மையும்
ஒரு கல்லறையில்
கொண்டுபோய்
வைத்தார்கள்
மூன்று நாட்கள் கூட
தாக்குப்பிடிக்க
முடியவில்லை

இப்போதாவது
ஒப்புக்கொள்ளுங்கள்
கல்லறை சுமத்தலில்
நான்
எவ்வளவு பெரிய
வீரன் என்று

-ஆசை 

Friday, April 7, 2023

புனித வெள்ளியின் உதிரத் துளி


இவ்வெள்ளியின் தரையில் ஆழ ஊன்றியிருக்கிறது ஒரு புனித மனம்

அசைவாடா கிளைபோல
தொய்ந்திருக்கும் தலை
களைப்பு நிரம்ப
இனி
இடமில்லா உடல்
கீழிறங்கும்
ஒவ்வொரு சொட்டும்
தரையின் ஆழத்துக்குள்
மேலும் மேலும்
ஒரு அடி என
இறுதிச் சொட்டு
பூமியின் மையத்தை
எட்டியதும்
பெருங்குரலொன்று
ஓவென்றெழுந்து
அண்டம் உலுக்கியது
ஆதியிலிருந்து
அங்கே குமைந்திருப்பதும்
எல்லா உதிரச் சொட்டுகளின்
ஆகர்ஷணப் புள்ளியாய்
அமைந்திருப்பதும்
படைப்பின்போது
பிதாவிடமிருந்து பிய்ந்து தங்கியதுமான
ஆதாரவலியின் குரல் அது
‘என் தேவனே என் தேவனே
என்னை ஏன் கைவிட்டீர்’
என்றபோது
விசும்பி எழுந்தாலும்
வெளிப்பட விரிசலில்லாமல்
தவித்த குரல் அது
ஒரு சொட்டு
தட்டிக் கதவகற்ற
வீறிட்டெழுந்து
மூன்றாம் நாளில்
கல்லறை பெயர்த்ததும்
எழுப்பித்ததும்
உயிர்ப்பித்ததும்
விண்ணேற்றியதும்
அக்குரலே
அக்குரலை எட்டுமொரு
சொட்டு
எம்முடலிலும்
தாருமென் பிதாவே
அது
கண்ணீராக இருந்தாலும் சரி
உதிரமாக இருந்தாலும் சரி
-ஆசை

Tuesday, April 4, 2023

உன் பதினெட்டு வயதின் பட்டம்

உன் பதினெட்டு வயதை விட்டு
வெகு தொலைவில் போய்விட்டாய்

அது ஒரு பட்டமாய்
இன்னும் அங்கேதான்
பறந்து கொண்டிருக்கிறது
அதன் மேல்தான்
நானும் மிதக்கிறேன்

நூலறுந்து போயிருந்தாலும்
என்னை
கீழே தள்ளி விடாமல்
காப்பாற்றி
ஏந்தியிருக்கிறது
உன் பதினெட்டு வயதின் பட்டம்

சற்றே நழுவினாலும்
உன் 42ன் மீதோ
என் 43ன் மீதோ
விழுந்துவிடுவேன்

அந்தரம்
பதினெட்டு
ஏறிச்செல்லும்
ஒருவழிப் படிக்கட்டு

அதில்
தனியாக நான்
ஏறிச்சென்றதால்தான்
உனக்கே இனி
வாய்க்காத
உன் பதினெட்டின் அருகாமை
எனக்கெப்போதும்
வாய்க்கிறது

உன் பதினெட்டின் மேல்
என்றும் மலர்ந்திருக்கும்
என் பதினெட்டைப் பார்க்கவே
நீங்காமல்
அங்கிருப்பேன்

இப்போதுன்
பிறந்தநாளுக்கு
நான் பூத்தூவுவது
அங்கிருந்துதான்

என்ன பூ வென்று
எடுத்துப் பார்த்துத் திகைக்காதே
அது உன் பதினெட்டு
உனக்கனுப்பும்
இறவாமை திறவுகோல்
- ஆசை