Showing posts with label மொழிபெயர்ப்புகள். Show all posts
Showing posts with label மொழிபெயர்ப்புகள். Show all posts

Saturday, July 12, 2025

பாப்லோ நெருதா கவிதைகள் - பிறந்தநாள் பகிர்வு



1. ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு ஒரு பாடல்

ஃபிடல், ஃபிடல்,
செயலாக மாறிய சொற்களுக்கும்
பாட்டாக ஒலிக்கும் செயல்களுக்கும்
நன்றிகாட்டுகிறார்கள் மக்கள்,
காணாத தூரத்தைக் கடந்து நானொரு கோப்பையில்
என் நாட்டின் மதுவோடு வந்திருப்பதும் அதனால்தான்:
நிலத்தடி மக்களின் உதிரம் அது
இருட்டிலிருந்து புறப்பட்டு உனது தொண்டையை
வந்தடைகிறது,

உறைந்துகிடந்த நிலத்திலிருந்து
நூற்றாண்டுகளாய்த் தீயைப் பிழிந்து
வாழ்ந்த சுரங்கத் தொழிலாளிகள் அவர்கள்.
கடலின் ஆழத்திலும்
நிலக்கரியைத் தேடும் அவர்கள்
பேயுருகொண்டு கரையேறுகிறார்கள்:
முடிவில்லா இரவுக்குப் பழகிக்கொண்டுவிட்டார்கள் அவர்கள்,
பகல் வேளையின் வெளிச்சம் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது,

ஆயினும், இதோ, இந்தக் கோப்பை.
சொல்லொணாத் துயரத்தினதும்,
கண்காணாத தூரத்தினதும் கோப்பை.
இருளும் பிரமைகளும்
பேயாய்ப் பற்றிக்கொண்ட,
சிறைப்பட்ட அந்த மனிதர்களின்
மகிழ்ச்சி அது.

சுரங்கங்களின் உள்ளே இருந்தாலும்
வசந்தத்தின் வரவையும்
அந்த வரவோடு வந்த சுகந்தங்களையும்
உணர்கிறார்கள் அவர்கள்.
தெளிவின் உச்சத்துக்காக மனிதன் போராடுகிறான்-
இதனை அறிந்தவர்களல்லவா அவர்கள்.

தெற்குப் பிரதேசத்தின் சுரங்கத் தொழிலாளிகளும்,
பரந்த புல்வெளிப் பிரதேசத்தில் தனியர்களாய் இருக்கும் மைந்தர்களும்,
படகோனியாவின் குளிரில் வாடும் மேய்ப்பர்களும்,
தகரத்துக்கும் வெள்ளிக்கும் பிறப்பளிக்கும் தகப்பன்களும்,
காதில்யெரா மலைத் தொடர்களுக்கு வாழ்க்கைப்பட்டு
சூகீக்கெமாதெ சுரங்கங்களிலிருந்து செம்புத் தாதுவை அகழ்பவர்களும்,
பேருந்துகளின் கூட்டமும்,
நேற்றைய நினைவிலேயே நிலைத்துவிட்ட நெரிசலும்,
வயல்கள் பட்டறைகளில் உழைக்கும் பெண்களும்,
குழந்தைப் பருவத்தை அழுதே கழித்த குழந்தைகளும்,
க்யூபாவைப் பார்க்கிறார்கள்:

இதுதான் அந்தக் கோப்பை, எடுத்துக்கொள் ஃபிடல்.
அவ்வளவு நம்பிக்கையால் நிறைந்திருக்கும் கோப்பை இது!
அருந்தும்போது நீயறிவாய்
ஒருவரால் அல்ல, பலராலும்
ஒரு திராட்சையால் அல்ல, பல தாவரங்களாலும் உருவான,
எனது தேசத்தின்
பழம் மதுவைப் போன்றது உனது வெற்றி என்பதை.

ஒரேயொரு துளியல்ல; பல நதிகள்:
ஒரேயொரு படைத்தலைவன் அல்ல, பற்பல போர்கள்.
நீண்ட, நெடிய போராட்டம் நம்முடையது,
அதன் ஒட்டுமொத்த மகத்துவத்தின் முழு உருவம் நீ.
அதனால்தான் அவர்களின் ஆதரவெல்லாம் உனக்கு.

க்யூபா வீழுமென்றால் நாங்களும் வீழ்வோம்,
அவளைக் கைதூக்கிவிட நாங்கள் வருவோம்,
அவள் பூத்துச் சொரிந்தால்
நாம் வென்றெடுத்த தேன்கொண்டு செழித்திடுவாள்.
உன் கைகளால் கட்டவிழ்ந்த
க்யூபாவின் நெற்றியை யாராவது தொடத் துணிவார்களென்றால்,
மக்களின் முஷ்டிதான் அவர்களுக்கு பதிலளிக்கும்,
புதைந்திருக்கும் நமது ஆயுதங்களைக் கைக்கொள்வோம்:

எங்கள் நேசத்துக்குரிய க்யூபாவைப் பாதுகாக்க
எங்களுக்குத் துணையாய் வரும்
உதிரமும் மாண்பும்!


2. தேனீக்களுக்கு ஒரு பாடல்

மொய்க்கும் தேனீக்கூட்டமே
உலகின் மென்மைக்கும் மென்மையான
சிவப்பு, நீலம், மஞ்சளின் உள்ளே
புகுந்தும் புறப்பட்டும்
தொழிலுக்காகப்
பூவிதழின் அடுக்கினுள்
கவிழ்ந்து விழுந்து, மீண்டு,
பொன்மயமான உடையும்,
கணக்கில்லா மஞ்சள் காலணிகளும்.
கச்சிதமான இடை, கரும்பட்டைக் கோடிட்ட கீழ்வயிறு
துருதுருக்கும் சின்னஞ்சிறிய தலை
புத்தம்புதிய நீராலான இறக்கைகள் ---
மணங்கமழும் ஜன்னல்கள் எல்லாம் நுழைந்து,
பட்டுக் கதவுகளைத் திறந்து,
இணையில்லா மணம் வீசும் காதலின் மணவறையில் நுழைந்து,
வைரப் பொட்டாகப் பனித்துளியைக் கண்டெடுக்கிறீர்கள்.

சென்றுவரும் வீடெல்லாம்
தேன் என்னும் புதிரை, வளத்தை, கட்டமுதை
அள்ளிச்செல்கிறீர்கள்
அது அடர் மணம், ஓடையாய் ஒளிரும் திரவம்.

கூடிவாழும் கூடத்துக்கு மீண்டுவந்து
அதன் கைப்பிடிச் சுவரில்
பூவின், விண்வெளிப் பாய்ச்சலின்
விளைச்சலான அந்த
கந்தர்வ ரசத்தை, மணநாளின் ரகசியச் சூரியனை,
தேனை, சேமித்து வைத்து
மொய்க்கும் தேனீக்களே,
ஒற்றுமையின் புனித முகடே,
ரீங்கரிக்கும் கல்விக்கூடமே.

ரீங்கார ஆரவாரத்தில்
பூவின் மதுவைப் பக்குவமாக்க
அமுதத் துளிகளைப் பரிமாறி
பசுமை படர்ந்த
ஒசர்னோ எரிமலையின் ஏகாந்த வெளியில்
வெய்யில்காலப் பிற்பகலின் கண்ணயர்வு--
உச்சி சூரியன்
ஈட்டிக் கிரணங்களைப் பனிமீது பாய்ச்ச,
எரிமலைகள் ஒளிர
கடலாக நிலம் விரிகிறது.

நீல வெளியின் ஏதோவொரு நடுக்கம்.
கனன்றுவரும் கோடையின் இதயம்,
தேனினிக்கும் இதயங்கள் பெருகின
ரீங்கரிக்கும் தேனீ
நொறுங்கிச் சடசடக்கும் தேன்கூடு
பொன்வண்ணம், சிறகின் படபடப்பு!
தேனீக்களே,
களங்கமில்லா உழைப்பாளிகளே, ஊன்பெருக்காத கூன் உடல்
தொழிலாளர்களே ஒளிவீசும் தொழிலாள வர்க்கமே!

தன்னையே மாய்த்துவிடும் கொடுக்கோடு கொட்டிச் சாடும்
குறையில்லா தீரப் போர்ப்படையே
இரைச்சலிடுங்கள், புவியின் கொடைகளின்மேல்
பொன்வண்ணக் குடும்பமே,
காற்றின் மந்தையே
பூக்களின் தீயை,
மகரந்தக் கேசரத்தின் தவிப்பை,
நாசியைத் துளைக்கும் நறுமண நூலை,
நாட்களை இணைத்துத் தைக்கும் நூலை,
அந்தத் தேனை விசிறித் தெளியுங்கள்
வெம்மையான கண்டங்களைக் கடந்து
மேலை வானின் தொலைதூரத் தீவுகளுக்கும்.

ஆம்,
பசுமைச் சிலைகளை
தேன் மெழுகு உருவாக்கட்டும்!
எண்ணில்லா நாவில் தேன் சிதறட்டும்,
தேன்கூடாய் ஆகட்டும் அந்தப் பெருங்கடல்
புவியே பூக்களாலான கோபுரமாய், அங்கியாய் மாறட்டும்!
உலகமே ஓர் அருவியாகட்டும்
எரிகல்லின் ஒளிரும் வாலாக
தேன்கூடுகளின் முடிவில்லாச் செல்வமாய் ஆகட்டுமே!


3.

உனது உடலின் வரைபடத்தை
நெருப்பின் குறியீடுகளால் 
குறித்துக்கொண்டு செல்கிறேன்எனது இதழ்கள்
உன் உடல் முழுதும் செல்கிறது
ஒளிந்துகொள்ள முயலும் சிலந்தியாய்.
உனக்குள், உன் பின்னே, கோழையாய்,
தாகத்தால் விரட்டப்பட்டு.

மாலையின் கரையில்
உனக்குச் சொல்வதற்கு 
கதைகளுண்டு நிறைய,
சோகவயப்பட்ட நளினமான பொம்மையே,
எனவே நீ துக்கமடைய மாட்டாய்.
ஒரு அன்னம், ஒரு மரம்,
தூரத்திலிருக்கும் மகிழ்ச்சியான ஏதோ ஒன்று.
திராட்சைகளின் பருவம், முதிர்ந்த, நிறைந்த பழங்களின் பருவம்.

எங்கு உன்னைக் காதலித்தேனோ 
அந்த துறைமுகத்தில் வாழ்ந்த நான்.
கனவாலும், அமைதியாலும் 
குறுக்கிடப்பட்ட அந்தத் தனிமை.
கடலுக்கும் துயரத்துக்கும் மத்தியில்
அடைக்கப்பட்டு.

நிசப்தமாக, பீடிக்கப்பட்டு, 
அசைவற்ற இரு படகோட்டிகளுக்கு மத்தியில்.
உதடுகளுக்கும் குரலுக்கும் இடையே
மங்கிக்கொண்டு வருகிறது
ஏதோ ஒன்று.
பறவையின் சிறகுகளுடன் ஏதோ ஒன்று,
வலியுடன், சுயநினைவற்று,
ஏதோ ஒன்று.
வலையால் தண்ணீரைப் 
பிடித்துவைத்திருக்க முடியாததைப் போல.
என் விளையாட்டுப் பொம்மையே,
ஓரிரு துளிகள் மட்டும் 
தனித்து நடுங்கிக்கொண்டிருக்கின்றன.

அப்படியும், ஏதோ ஒன்று பாடுகிறது,
நிலையற்ற இந்த சொற்களால்.
ஏதோ ஒன்று பாடுகிறது, 
எனது பசிகொண்ட வாயில்
பற்றி ஏறுகிறது.
ஓ! பரவசத்தின் அனைத்துச் சொற்களாலும் 
கொண்டாட முடிகிறது
உன்னை.

பாடு, எரி, பற, 
ஒரு பைத்தியக்காரனின் கையில் 
அகப்பட்ட கோயில் மணியைப் போல.
என் சோகவயப்பட்ட கனிவே,
உன்னை சட்டென்று ஆட்கொள்வது எது?
மிகவும் கிளர்ந்திழுக்கும்
குளிர்ச் சிகரத்தை எட்டி முடித்ததும்
என் இதயம் மூடிக்கொள்கிறது
ஒரு இரவு நேர மலரைப்போல.


4.

உன் முலைகள் 
என் இதயத்திற்குப் போதுமானவை
என் சிறகுகள் 
உன் விடுதலைக்கு.
உனது இதயத்தின் மேல் உறங்கிக்கொண்டிருப்பது
என் உதடுகளின் வழியாக வானத்தை நோக்கி
உயரும்.

உனக்குள் ஒவ்வொரு நாளின் 
மாயத்தோற்றம்.
விரிந்த மலர்களில் வீழும் 
பனித்துளிகளைப் போல் வருகிறாய் நீ. 

தொடுவானத்தை மங்கச் செய்கிறாய் நீ
உனது பிரிவால்.
அலைகளைப் போன்று 
முடிவில்லாமல் பறந்துகொண்டிருக்கிறாய்.
ஊசியிலை மரங்களைப் போல
பாய்மரங்களைப் போல
நீ காற்றில் பாடுகிறாய் என்று 
சொல்லியிருக்கிறேன் நான்.
அவற்றைப்போல நீயும் உயரமாக, 
பேசாமடந்தையாக
மேலும் சட்டென்று சோகமாக, 
ஒரு கடற்பயணத்தைப்போல.

பொருட்களை திரட்டிக்கொள்கிறாய் உன்னிடத்தில்
ஒரு பழைய சாலையைப்போல.
எதிரொலிகளாலும்
பழைய நினைவுகளின் குரல்களாலும்  
நிறைந்திருக்கிறாய்.

நான் எழுகிறேன்
சில சமயங்களில் 
பறந்துசெல்கின்றன, இடம்பெயர்கின்றன
உன் இதயத்தில் உறங்கிக்கொண்டிருந்த பறவைகள்.


5.

பெண்ணுடல், வெள்ளை மலைகள், வெண்ணிறத் தொடைகள்,
உனது சரணாகதித் தோற்றத்தில் இந்த உலகைப் போன்று தோன்றுகிறாய் நீ.
எனது கொடிய முரட்டுத்தனமான உடல் உன்னில்  தோண்டி
துள்ளியெழச்செய்கிறது குழந்தையைப் புவியின் ஆழத்திலிருந்து.

நான் தனியாகச் சென்றேன் ஒரு வளையைப்போல. பறவைகள் பறந்துசென்றன என்னிடமிருந்து, மற்றும் இரவு தனது வலிமையால் ஊடுருவியது என்னில்.
நான் பிழைத்திருப்பதற்காக உன்னைத் தட்டிதட்டி செய்தேன் ஒரு ஆயுதமாக,
எனது வில்லில் அம்பாக, எனது கவணில் கல்லாக.

ஆனால் பழிவாங்கும் தருணம் வந்துவிட்டது, அதனால் உன்னை நான் நேசிக்கிறேன்.தோலின், பாசியின், விடாயின், நிதானமான பால்.
ஓ முலைகளின் கோப்பைகளே! பிரசன்னமின்மையின் விழிகளே!அடிவயிற்றின் ரோஜாக்களே! ஓ உனது மெல்லிய, துயரமான குரலே!

பெண்ணுடலே, நான் உனது மகிமையால் நிலைத்திருப்பேன்.
எனது விடாய், எனது கட்டற்ற ஏக்கம், எனது குழப்பமான பாதை!முடிவற்ற தாகங்கள் பாய்ந்துசெல்லும்,
களைப்பு பாய்ந்துசெல்லும், எல்லையற்ற சோகம் பாய்ந்துசெல்லும் கருநிற நதிப்படுகைகள்.


 

Thursday, May 8, 2025

பழிக்குப் பழி (பாலஸ்தீனக் கவிதை)

 

தாஹா முகம்மது அலி

(போர் ஆதரவாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய கவிதை)
**
சில சமயங்களில்… நான் ஆசைப்படுவதுண்டு…
என் அப்பாவைக் கொன்று
எங்கள் வீட்டைத் தரைமட்டமாக்கி
குறுகலானதொரு நிலத்துக்குள் என்னை விரட்டிய
அந்த மனிதனை ஒரு துவந்த யுத்தத்தில் நேருக்கு நேர் சந்திக்க வேண்டுமென்று
சில நேரங்களில் நான் ஆசைப்படுவதுண்டு.
அந்தச் சண்டையில் அவன் என்னைக் கொன்றுவிடுவான் எனில்
நான் ஒருவழியாக நிரந்தர அமைதியில் ஆழ்ந்துவிடுவேன்…
இல்லையெனில், அவனைப் பழிவாங்கத் தயாராகிவிடுவேன்.
•ஆனால்,
துவந்த யுத்தத்தில் என்னுடைய எதிரியை எதிர்கொள்ளும்போது
அவனுக்காக வீட்டில் அவனுடைய அம்மா காத்துக்கொண்டிருப்பாள் என்பதோ,
குறித்த நேரத்தில் வராமல்
கால்மணி நேரம் தாமதித்தாலும்,
தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கும்
தந்தை ஒருவர் இருப்பார் என்பதோ
எனக்குப் புலப்பட்டால்
நான் நிச்சயம் அவனைக் கொல்ல மாட்டேன்,
என்னால் முடிந்தால்கூட.
• அதேபோல்… அவனுக்குத் தம்பிகளும் தங்கைகளும் இருப்பார்கள் என்பதையோ
அவன்மேல் மிகுந்த அன்பைக் கொண்டிருக்கும் அவர்கள்
அவனுக்காக ஏங்குவார்கள் என்பதோ
எனக்குத் தெரிய வந்தாலும்
அவனை நான் கொல்ல மாட்டேன்.
அவன் வீடு திரும்பும்போது அவனை வரவேற்க மனைவியொருத்தி இருந்தாலோ
அவனது பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத,
அவன் அளிக்கும் பரிசுகளால் குதூகலமடையும் குழந்தைகள் இருந்தாலோ
நான் அவனைக் கொல்ல மாட்டேன்.
அல்லது
அவனுக்கு நண்பர்களோ சகாக்களோ
தெரிந்த அண்டை வீட்டுக்காரர்களோ
சிறையில் மருத்துவமனையில் பரிச்சயமான கூட்டாளிகளோ
பள்ளித் தோழர்களோ இருந்தால்…
அவனைப் பற்றி விசாரிக்கக் கூடியவர்களோ,
அவனுக்கு வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பக் கூடியவர்களோ இருப்பார்கள் என்றால்
நான் அவனைக் கொல்ல மாட்டேன்.
• ஆனால்,
அவனுக்கு யாருமே இல்லை என்றாலோ
-அதாவது மரத்திலிருந்து துண்டிக்கப்பட்ட கிளையைப் போல அவன் இருப்பான் என்றாலோ-
அம்மா, அப்பா இல்லாமல்,
தம்பி, தங்கைகள் இல்லாமல்
மனைவி இல்லாமல், குழந்தைகள் இல்லாமல் அவன் இருந்தாலோ
உற்றார் உறவினரோ அண்டை அயலாரோ
நண்பர்களோ சகாக்களோ கூட்டாளிகளோ
இல்லாதவன் என்றாலோ
ஏற்கெனவே தனிமையில் வாடும் அவனுக்கு
மேலும் வேதனையை ஏற்படுத்த மாட்டேன்.
மரணமெனும் அவஸ்தையை,
இறந்துபோவதன் துக்கத்தைத் தர மாட்டேன்,
அதற்குப் பதிலாக,
தெருவில் அவனைக் கடந்துசெல்லும்போது
அவனைப் பொருட்படுத்தாமல் செல்வதையே விரும்புவேன்,
அவனைக் கண்டுகொள்ளாமல் விடுவதும்கூட
ஒரு வகையில் வஞ்சம் தீர்ப்பதுதான்
என்று எனக்குள் திருப்திப்பட்டுக்கொள்வேன் நான்.
-(நாசரேத், ஏப்ரல் 15, 2006) -தாஹா முகம்மது அலி (1931-2011), பாலஸ்தீனக் கவிஞர்,
-ஆங்கிலத்தில்: பீட்டர் கோல், தமிழில்: ஆசை

Monday, May 5, 2025

21-ம் நூற்றாண்டுக்கு மார்க்ஸ் என்ன சொல்கிறார்? மார்க்ஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை


 

யானிஸ் வரூஃபக்கீஸ்

(தமிழில்: ஆசை)

ஒரு அரசியல் அறிக்கை வெற்றிபெற வேண்டுமென்றால் அது ஒரு கவிதையைப் போல நம் இதயத்துடன் பேச வேண்டும். அதே நேரத்தில் நம் மனதில் அசாதாரணமான புதிய படிமங்களையும் கருத்துக்களையும் விதைக்க வேண்டும். நம்மைச் சுற்றி நிகழும் குழப்பம் நிறைந்த, வருத்தமளிக்கக்கூடிய, பரவசமான மாற்றங்களின் உண்மைக் காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளும் வகையில் நம் கண்களை அது திறக்க வேண்டும்.

கூடவே, நம் தற்போதைய சூழல் தன்னுள் கருக்கொண்டிருக்கும் சாத்தியங்களையும் அது வெளிக்காட்ட வேண்டும். இந்த உண்மைகளை நாமே அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போய்விட்டதே என்று நம் இயலாமையை நினைத்து நம்மை வருத்தப்பட வைக்க வேண்டும். மிகவும் பிற்போக்கான கடந்த காலத்தையே திரும்பத் திரும்ப உற்பத்திசெய்வதில் நாமும் கொஞ்சம் உடந்தையாகத்தான் இருந்திருக்கிறோம் என்ற சங்கடமான உண்மையை நாம் உணர்வதற்குத் தடையாக இருக்கும் திரையை அது அகற்ற வேண்டும்.

Tuesday, March 11, 2025

வார்ஸன் ஷைர்: வீடென்பது சுறா மீனின் வாயானால்...

வார்ஸன் ஷைர்

ஆசை
(அறிமுகமும் கவிதைகளின் மொழிபெயர்ப்பும்)


சம காலத்தின் முக்கியமான இளம் பெண்கவிஞர்களுள் ஒருவர் வார்ஸன் ஷைர் (Warsan Shire). சோமாலியப் பெற்றோருக்கு கென்யாவில் 1988-ல் பிறந்தவர் வார்ஸன் ஷைர். சிறு வயதிலேயே இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்த வார்ஸன் ஷைர் லண்டன்வாசியானார். பிரிட்டனைத் தாயகமாக்கிக்கொண்டாலும் அங்கே ஒரு அந்நியராகவே வார்ஸன் ஷைர் தன்னை உணர்கிறார்.

தனது பூர்வீக நாடான சோமாலியாவுக்கு வார்ஸன் ஷைர் போனதே இல்லை என்றாலும் தனது எழுத்துகளின் வாயிலாக ஆப்பிரிக்கக் கலாச்சாரம், ஆப்பிரிக்கர்களின் வலி, அகதி வாழ்க்கையின் துயரம், குறிப்பாக அகதிப் பெண்களின் துயரம் போன்றவற்றை வார்ஸன் ஷைர் தொடர்ந்து பதிவுசெய்கிறார். தன் பூர்வீக நாட்டவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் குரலில் அவர்கள் தேசத் தொல்கதைகளை வார்ஸன் ஷைர் பதிவுசெய்துகொள்கிறார். பிறகு, அவற்றுக்குத் தன் கவிதைகளில், இன்ன பிற எழுத்துகளில் உரு கொடுக்கிறார்.

Wednesday, March 5, 2025

இந்தப் பிரபஞ்சத்தின் மையம் எது?

  


டெனிஸ் ஓவர்பை

இந்தப் பிரபஞ்சம் ஏதோ ஒரு இடத்தில் தொடங்கியது என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையல்ல. பிரபஞ்சத்தின் பிறப்புக்குக் காரணமான பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்தது இடத்தில் அல்ல, காலத்தில்.

பெருவெடிப்பு நிகழ்ந்தது எங்கேஎன்று என்னிடம் பலரும் அடிக்கடி கேட்பதுண்டு. கையெறி குண்டு ஒன்று வெடிப்பதைப் போன்று பிரபஞ்சம் விரிவதையும், அந்தக் கையெறிகுண்டின் சிதறல்கள் பறப்பதுபோல் சூரிய குடும்பத்தையும், பால்வெளியையும் கற்பனை செய்துகொண்டு இது போன்ற கேள்வியைக் கேட்கிறார்கள்

Friday, February 21, 2025

ஆக்டேவியோ பாஸ் கவிதைகள்

 


இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற ஆக்டேவியா பாஸின் ஆறு கவிதைகள்

1. விடியற்பொழுது

குளிர்ந்த விரைவான கரங்கள்
உருவிக்கொள்கின்றன 
இருளின் கட்டுத்துணியை
ஒவ்வொன்றாக

நான் கண் திறந்து பார்க்கிறேன்
  இப்போதும் 
நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
இன்னமும் புதிதாக இருக்கும் 
ஒரு காயத்தின் மத்தியில்

Saturday, February 1, 2025

கன்னடத்தில் என் கவிதை



எனது ‘ஹே... ராவண்!’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘பாவென்று அழையுங்களேன் பாபுஜி’ கவிதையை நண்பரும் எழுத்தாளருமான தூயனின் தந்தையும் தூயனின் மனைவி பவித்ராவும் இணைந்து கன்னடத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு அன்பும் நன்றியும். கீழே தமிழ் மூலமும் கன்னட மொழிபெயர்ப்பும் கொடுத்திருக்கிறேன்.

**
பாவென்று அழையுங்களேன் பாபுஜி
உடன் இருந்தபோது
இப்படி
என்றாவது
பாவைப்
பார்த்துக்கொண்டே
இருந்ததுண்டா பாபுஜி
உங்கள் பார்வை கண்டு
பா அஞ்சிய
காலம் உண்டு
பிறகு
பாவின் பார்வைக்கு
அஞ்ச ஆரம்பித்தீர்கள்
நீங்கள்
இன்று இரண்டுமில்லை
ஒருவழிப் பார்வை
மட்டுமே
பாவின் விழிகள்
இறுதியாய் வெறித்த
ஆகா கான் மாளிகையின்
உட்கூரை உச்சியாய்
அப்போது இருக்க
ஆசைப்பட்டீர்களா பாபுஜி
ஒரு மகாத்மா ஆவதற்கு
நிரம்பக் கல்நெஞ்சம்
வேண்டுமென்று
உடனிருந்து கண்டவர்
இன்று அதில் உங்களைத்
தோல்வியடையச் செய்துவிட்டுப்
போய்விட்டாரா பாபுஜி
எப்போதும்
ஏந்திப் பொறுத்துக்கொண்ட
பாவின் அகிம்சை முன்
உங்கள் உன்னத அகிம்சை
மேலும் தோற்றுப்போய்
அதனால்
துவண்டுபோய்
அமர்ந்திருக்கிறீர்களா பாபுஜி
பா என்று அழையுங்களேன்
பாபுஜி
அவர் விருட்டென்றெழுந்து
உங்களுக்கு
ஆட்டுப்பாலும் பேரீச்சையும்
கொண்டுவரப் போய்விடுவார்
பா என்று அழையுங்களேன்
பாபுஜி
அவர் சட்டென்றெழுந்து
உங்களுடன்
கேரம் விளையாட
உட்கார்ந்துவிடுவார்
ஆனால்
நீங்கள் மாட்டீர்கள்
கல்நெஞ்சக்காரர்
கேட்டால்
பாவுக்கு
அவள் துயர்களிலிருந்தும்
என்னிடமிருந்தும்
விடுதலை கிடைத்திருக்கிறது
என்று சாக்கு சொல்வீர்கள்
கூட
ஒரு துயரச் சிரிப்புடன்
-ஆசை

கன்னடம்:
ಭಾ ಎಂದು ಕರೆಯಿರಿ….. ಬಾಪೂಜಿ
ಜೊತೆ ಇದ್ದಾಗ
ಹೀಗೆ
ಎಂದಾದರೂ ಭಾ ವನ್ನು
ನೋಡಿಕೊಂಡಿರುವಡು ಉಂಟ ಬಾಪೂಜಿ
ನಿನ್ನ ನೋಟ ನೋಡಿ ಭಾ
ಭಯಪಡುತ್ತಿದ್ದ ಕಾಲವೊಂದಿತ್ತು.
ನಂತರ
ಭಾ ವಿನ್ ನೋಟಗಿ
ಭಯಪಡಲು ಪ್ರಾರಂಭಿಸಿದ್ದೀರಿ
ನೀವು!
ಇವತ್ತೂ ಎರಡೂ ಇಲ್ಲ.
ಒಂದೇ ದಾರಿಯ ನೋಟ
ಮತರವೆ
ಭಾ ವೆನ ಕಣ್ಣುಗಳು
ಅಂತಿಮದಳ್ಳಿ ದಿಟ್ಟಿಸಿಧ
ಆಗಾ ಖಾನ್ ಅರಮನೆಯ
ಒಳಮೇಲಿನ ಭಾಗವಾಗಿ
ನೀನಾಗಿರಬೇಕೆಂದು ಬಯಸಿದ್ದೀಯಾ ಬಾಪೂಜಿ?
2
ಒಂಧು ಮಹಾತ್ಮನಾಗಲು
ತುಂಬಾ ಕಲ್ಲು ಹೃದಯ
ಬೇಕೆಂದು
ಜೋಧಯಳ್ಳಿ ಇಧ್ಧ ಅರ್ಥಮಾಡಿ ಕೊಂಡವರು
ಇಂದು ಅದರಲ್ಲಿ ನಿನ್ನನ್ನು
ಸೋಲಿಸಿ ಬಿಟ್ಟು
ಹೋಗಿ ಬಿಟ್ಟಾರಾಯೆ ಬಾಪೂಜಿ
ಯಾವಾಗಲು ಸ್ವಕರಿಸಿ
ಸಹಿಸಿಕೊಂಡ
ಬಾ ವಿನ ಅಹಿಂಸೆ ಮುಂದೆ
ನಿಮ್ಮ ಉನ್ನತಾಧ ಅಹಿಂಸೆ
ಮತ್ತೆ ಸೋದಾಗಿ ಹೋಗುವುದೆ ನೋಡಿ
ಮುರಿದ ಹೃದಯಹೊಂದಿಗೆ
ಕುಳಿತು ಕುಳ್ಳತ್ತೇರಿಯೇ ||ಬಾಪೂಜಿ
ಬಾ ಎಂದು ಕರಿಯಿರಿ ……
ಬಾಪೂಜಿ
ಅವರು ಕೊಡಲೇ ಎಧ್ದು
ನಿಮಗಾಗಿ
ಹಾಲು ಮತ್ತು ಖರ್ಜೂರದ ಹಣ್ಣುಗಳು
ತರಲು ಹೋಗಿಪಿಡುವರು
3
ಬಾ ಎಂದು ಕರೆಯಿರಿ ………
ಅವರು ವೇಗವಾಗ ಎಧ್ದು
ನಿಮ್ಮೊಂದಿಗೆ ಕೆರಂ ಆಡಲು
ಕುಳಿದು ಕೊಳ್ಳಿಬಿಡುವರು
ಆದರೇ
ನೀನು ಮಾಡಲಿಲ್ಲ
ಕಲ್ಲು ಮನಸುಗರು
ಕೇಳಿದರೇ
ಅವಳಿಗೆ
ಸಂಕಟಗಳಿಂದ ಮತ್ತು ನನ್ನಿಂದಲೂ
ವಿಮೋಚನ ಸಿಕ್ಕಿತು ಎಂದ
ಅರ್ಧಹೀನ ಕಾರಣ ಕೇಳುವೀರೆ
ಸಹಾ ...ಒಂದು
ದುಃಖದ ನಗುವಿನೊಂದಿಗೆ
ತಮಿಳಿನಲ್ಲಿ: ಆಸೈ ಬರಹಗಾರ ಕನ್ನಡ : ಕುಯೇಲಿ ಮುನುಸಾಮಿ

Monday, March 11, 2024

வார்ஸன் ஷைர்: வீடென்பது சுறாமீனின் வாயானால்...



ஆசை
(அறிமுகமும் கவிதைகளின் மொழிபெயர்ப்பும்)

சம காலத்தின் முக்கியமான இளம் பெண்கவிஞர்களுள் ஒருவர் வார்ஸன் ஷைர் (Warsan Shire). சோமாலியப் பெற்றோருக்கு கென்யாவில் 1988-ல் பிறந்தவர் வார்ஸன் ஷைர். சிறு வயதிலேயே இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்த வார்ஸன் ஷைர் லண்டன்வாசியானார். பிரிட்டனைத் தாயகமாக்கிக்கொண்டாலும் அங்கே ஒரு அந்நியராகவே வார்ஸன் ஷைர் தன்னை உணர்கிறார்.

தனது பூர்வீக நாடான சோமாலியாவுக்கு வார்ஸன் ஷைர் போனதே இல்லை என்றாலும் தனது எழுத்துகளின் வாயிலாக ஆப்பிரிக்கக் கலாச்சாரம், ஆப்பிரிக்கர்களின் வலி, அகதி வாழ்க்கையின் துயரம், குறிப்பாக அகதிப் பெண்களின் துயரம் போன்றவற்றை வார்ஸன் ஷைர் தொடர்ந்து பதிவுசெய்கிறார்.

Sunday, November 29, 2020

நாம் ஏன் சதிக் கோட்பாடுகளை நம்புகிறோம்?



யுவால் நோவா ஹராரி 

சதிக் கோட்பாடுகள் எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் வருகின்றன. இவற்றில் ரொம்பவும் பரவலானது உலகளாவிய ரகசிய அரசியல் குழுவைப் பற்றிய சதிக் கோட்பாடுதான். “ஒரு குழுவைச் சேர்ந்த மக்கள் ரகசியமாக உலகத்துப் போக்குகளைக் கட்டுப்படுத்தி உலகையே ஆள்கிறார்கள்” என்ற கோட்பாட்டை நம்புகிறார்களா என்று 25 நாடுகளைச் சேர்ந்த 26 ஆயிரம் பேரிடம் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. “நிச்சயமாக அல்லது ஒருவேளை உண்மையாக இருக்கலாம்” என்பது 37% அமெரிக்கர்களின் பதிலாக இருந்தது. 45% இத்தாலியர்களும், 55% ஸ்பானியர்களும் 78% நைஜீரியர்களும் அப்படியே பதிலளித்தார்கள். 

சதிக் கோட்பாடுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கின்றன. அவற்றுள் சில கோட்பாடுகள் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. நாஜிஸத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் வழக்கமாக நாஜிஸத்தை ஒரு சதிக் கோட்பாடாகக் கருதுவதில்லை. அது ஒரு நாடு முழுவதையும் ஆட்கொண்டு இரண்டாம் உலகப் போரைத் தொடக்கியதால் அது தீயதாக இருந்தாலும் நாஜிஸத்தை நாம் வழக்கமாக ஒரு ‘சித்தாந்தம்’ என்றே கருதுவோம். 

நாஜிஸமும் சதிக் கோட்பாடே 

ஆனால், அதன் மையமான சித்தாந்தத்தைப் பொறுத்தவரை, நாஜிஸமானது கீழ்க்கண்ட யூத வெறுப்புப் பொய்யை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய ரகசிய சதிக் கோட்பாடாகவே இருந்தது: “யூத நிதி நிறுவனங்களின் ரகசியக் குழுவொன்று ஒட்டுமொத்த உலகத்தையும் ரகசியமாக ஆதிக்கம் செலுத்துவதுடன் ஆரிய இனத்தை அழிப்பதற்கும் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறது. அவர்கள்தான் போல்ஷ்விக் புரட்சிக்குக் காரணம், மேற்கத்திய ஜனநாயக நாடுகளை இயக்கிக்கொண்டிருப்பவர்கள் அவர்களே, ஊடகங்களும் வங்கிகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஹிட்லரால் மட்டுமே அவர்களின் எல்லா தீய தந்திரங்களையும் கண்டுபிடிக்க முடிந்தது – அவரால் மட்டுமே அவற்றைத் தடுத்து நிறுத்தி மனித குலத்தைக் காப்பாற்ற முடியும்.” இதுதான் அந்தப் பொய். 

இதுபோன்ற உலகளாவிய ரகசிய அரசியல் குழுக்களினுடைய கோட்பாடுகளின் பொதுவான அமைப்பைப் புரிந்துகொள்வது என்பது அவற்றின் கவர்ச்சியையும் அவற்றில் அமைந்திருக்கும் பொய்மையையும் நமக்கு விளக்கும். 

கட்டமைப்பு 

இந்த உலகில் நடக்கும் ஏராளமான நிகழ்வுகளின் பின்னணியில் ஒரு தீய குழுவொன்று இருக்கிறது என்று உலகளாவிய ரகசிய அரசியல் குழுக்கள் தொடர்பான கோட்பாடுகள் வாதிடுகின்றன. இந்தக் குழுவின் அடையாளம் மாறலாம்: இந்த உலகம் ரகசியமாக ஃப்ரீமேஸன்களால், சூனியக்காரிகளால் அல்லது சாத்தானியர்களால் ஆளப்படுகிறது என்று சிலர் நம்புகிறார்கள்; பிறர், அது வேற்றுக்கிரகவாசிகளால், பல்லி மனிதர்களால் அல்லது பல்வேறு இறுக்கமான குழுக்களால் ஆளப்படுவதாக நம்புகிறார்கள். ஆனால், இதன் அடிப்படைக் கட்டமைப்பு ஒன்றுதான்: அந்தக் குழு கிட்டத்தட்ட அனைத்து நிகழ்வுகளையும் கட்டுப்படுத்துகிறது; அதே நேரத்தில், இப்படித் தான் கட்டுப்படுத்துவதை ரகசியமாகவும் வைத்திருக்கிறது. 

இதுபோன்ற உலகளாவிய சதிக் கோட்பாடுகள் எதிரெதிர் துருவமாகக் காட்சியளிப்பவற்றை ஒன்றிணைப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றன. கம்யூனிஸமும் முதலாளியமும் நேரெதிராக இருக்கும் எதிரிகள்போல் மேல் தோற்றத்துக்குத் தோன்றுகிறதல்லவா? தவறு, அப்படித்தான் யூத ரகசிய அரசியல் குழுக்கள் நம்மை நம்பவைக்கின்றன என்று நாஜி சதிக் கோட்பாடு கூறியது. புஷ் குடும்பமும் கிளிண்டன் குடும்பமும் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்று சூளுரைத்துக்கொண்டவை என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் நமக்கு முன்னால் நடிக்கிறார்கள் – மூடிய கதவுக்குப் பின்னால் அவர்கள் ஒரே விருந்து நிகழ்வுக்குத்தான் செல்வார்கள். இப்படியெல்லாம் இந்தச் சதிக் கோட்பாடுகள் எதிரெதிர் துருவங்களை இணைத்துக் கூறுகின்றன. 

மயக்கும் கண்ணி 

இதிலிருந்து இந்த உலகத்தைப் பற்றிய ஒரு கோட்பாடு வெளிப்படுகிறது. செய்திகளில் கூறப்படும் நிகழ்வுகளெல்லாம் நம்மை ஏமாற்றும் விதத்தில் தந்திரமாக வடிவமைக்கப்பட்ட வடிகட்டிகளே. நமது கவனத்தைத் திசைதிருப்பும் பிரபலத் தலைவர்களெல்லாம் உண்மையாக ஆள்பவர்களின் கைகளில் வெறும் பொம்மைகளே. 

உலகளாவிய சதிக் கோட்பாடுகளை நிறைய பேர் நம்பி, பின்பற்றுவதற்கு ஒரு காரணம் என்னவென்றால் எண்ணற்ற சிக்கலான நிகழ்வுகளுக்கு அவை நேரடியான, ஒற்றை விளக்கத்தைத் தருகின்றன. நமது வாழ்க்கை தொடர்ச்சியாகப் போர்கள், புரட்சிகள், பிரச்சினைகள், பெருந்தொற்றுக்களால் அலைக்கழிக்கப்படுகின்றன. ஆனால், சில வகையான சதிக் கோட்பாட்டை நான் நம்பினால் எனக்கு எல்லாம் புரிகிறது என்ற ஆசுவாச உணர்வு எனக்கு ஏற்படுகிறது. 

சிரியாவில் நடைபெறும் போர்? அங்கே என்ன நடைபெறுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு நான் மத்தியக் கிழக்கு வரலாற்றைப் படிக்கத் தேவையில்லை. அது பெரிய சதியின் ஒரு பகுதி. 5ஜி தொழில்நுட்பத்தின் முன்னேற்றம்? மின்காந்த அலைகள் பற்றி நான் எந்த ஆராய்ச்சியும் செய்யத் தேவையில்லை. அது ஒரு சதிக் கோட்பாடுதான். கரோனா பெருந்தொற்று? அதற்கும் உயிர்ச்சூழல்கள், வௌவால்கள், வைரஸ்களுக்கும் தொடர்பில்லை. இது தெளிவாக சதிக் கோட்பாடுதான். 

உலகளாவிய சதிக் கோட்பாடு கொண்டிருக்கும் எல்லாப் பூட்டுகளையும் திறக்கும் சாவியானது உலகின் எல்லாப் புதிர்களையும் திறந்துவிடுகிறது, பிரத்யேக வட்டம் ஒன்றுக்கான, அதாவது எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் மக்களின் வட்டம் ஒன்றுக்கான அனுமதியை எனக்குத் தருகிறது. அது என்னை வழக்கமான நபர்களை விட அதிக புத்திசாலியாக ஆக்குகிறது. பேராசிரியர்கள், இதழாளர்கள், அரசியலர்கள் போன்ற அறிவுஜீவி மேல்தட்டினர், ஆளும் வர்க்கத்தினரைவிடவும்கூட என்னை மேலுயர்த்துகிறது. அவர்கள் காணத் தவறியதை அல்லது அவர்கள் மறைக்க முயல்வதை நான் காண்கிறேன். 

பிழை 

உலகளாவிய சதிக் கோட்பாடுகள் எல்லாம் ஒரே அடிப்படைப் பிழையால் பீடிக்கப்பட்டிருக்கின்றன: வரலாற்றை அவை மிகவும் எளிமையானதாக நினைக்கின்றன. உலகளாவிய சதிக் கோட்பாடுகளின் மையக் கருதுகோள் என்னவென்றால் இந்த உலகத்தைத் தன் வசத்தில் கட்டுப்படுத்துவது ஓரளவுக்கு எளிது என்பதுதான். போர்கள், தொழில்நுட்பப் புரட்சிகள் தொடங்கி பெருந்தொற்றுகள் வரை சிறியதான சில குழுக்களால் புரிந்துகொள்ள முடியும், முன்கூட்டியே கணிக்க முடியும், எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்று சதிக் கோட்பாடுகளை நம்புபவர்கள் நினைக்கிறார்கள். 

குறிப்பாகக் குறிப்பிட வேண்டியது எதுவென்றால் உலகளாவிய சதுரங்கத்தில் பத்து நகர்வுகளை முன்கூட்டியே காணும் இந்தக் குழுவின் திறன்தான். அவர்கள் வைரஸை எங்காவது வெளியிடும்போது அது இந்த உலகம் முழுதும் எப்படிப் பரவும் என்பதைக் கணிப்பது மட்டுமல்லாமல் உலகப் பொருளாதாரத்தை ஒரு ஆண்டு கழித்து எப்படிப் பாதிக்கும் என்பதையும் அவர்கள் கணிக்கக் கூடியவர்கள். ஒரு போரை அவர்கள் தொடங்கினார்கள் என்றால், அது எப்படி முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள். 

இராக் எடுத்துக்காட்டு 

ஆனால், இந்த உலகம் அதைவிடவும் மிகவும் சிக்கலானது. எடுத்துக்காட்டாக, இராக்கில் அமெரிக்காவின் ஊடுருவலைப் பற்றி யோசித்துப் பாருங்கள். 2003-ல் இந்த உலகின் ஒரே ஒரு வல்லரசு, நடுத்தர அளவுள்ள மத்தியக் கிழக்கு நாட்டினுள் ஊடுருவியது. அந்த நாட்டிலுள்ள பேரழிவு ஆயுதங்களை அழிப்பதற்காகவும், சதாம் ஹுசைனின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவும் அந்த ஊடுருவலை நிகழ்த்தியதாக அமெரிக்கா கூறியது. அந்தப் பிரதேசத்தில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், இராக்கின் முக்கியமான எண்ணெய்க் கிணறுகளைத் தன்வசப்படுத்தவும் அமெரிக்கா இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்று சிலர் சந்தேகப்பட்டனர். தனது லட்சியத்துக்கான தேடலில் உலகின் மிகச் சிறந்த ராணுவத்தை அமெரிக்கா ஈடுபடுத்தியதோடு மட்டுமல்லாமல் டிரில்லியன் கணக்கான டாலர்களையும் அதற்காகச் செலவழித்தது.  

சில ஆண்டுகளை வேகமாக முன்னோக்கி ஓட்டிப் பாருங்கள், இந்த பிரம்மாண்டமான முயற்சியின் விளைவுகள் என்ன? பரிபூரணப் பேரழிவுதான். பேரழிவு ஆயுதங்கள் ஏதும் இராக்கில் இல்லை, அந்த நாடு அதலபாதாளத்துள் வீழ்ந்தது. இந்தப் போரில் பெரிய வெற்றியாளர் யாரென்றால் ஈரான்தான். அதுதான் இந்தப் போரின் விளைவாக அந்தப் பிராந்தியத்தில் பெரும் ஆதிக்கச் சக்தியாக உருவானது.  

ஆக, ஜார்ஜ் டபிள்யு. புஷ்ஷும் டொனால்டு ரம்ஸ்ஃபெல்டும் உண்மையில் ஈரானியக் கையாள்கள் என்றும் தீயதும், சாமர்த்தியமானதுமான ஈரானிய சதியை அவர்கள் நிறைவேற்றினார்கள் என்றும் நாம் முடிவுக்கு வரலாமா? வரவே முடியாது. மாறாக, மனித விவகாரங்களைக் கணிப்பதும் கட்டுப்படுத்துவதும் மிக மிகக் கடினம் என்ற முடிவுக்கே நம்மால் வர முடியும்.  

இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வதற்காக மத்தியக் கிழக்கு நாடொன்றை ஊடுருவத் தேவையில்லை. ஒரு பள்ளிக்கூட வாரியத்திலோ உள்ளூர் பஞ்சாயத்திலோ நீங்கள் பணியாற்றியிருந்தாலும் அல்லது உங்கள் அம்மாவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியூட்டும் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ய முயன்றாலும் உங்களுக்குத் தெரியும் மனிதர்களைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினம் என்று. ஒரு திட்டத்தைத் தீட்டுவீர்கள், அது நேரெதிர் விளைவையே ஏற்படுத்தும். நம்பிக்கைக்குரிய நண்பர் ஒருவரோடு நீங்கள் ஒரு சதித் திட்டம் தீட்டுவீர்கள், ஒரு முக்கியமான கட்டத்தில் அவர் உங்கள் முதுகில் குத்திவிடுவார்.  

1,000 அல்லது 100 மனிதர்களையே நம்மால் கணிக்கவும் கட்டுப்படுத்தவும் மிகவும் சிரமமாக இருக்கும் சூழலில் கிட்டத்தட்ட 800 கோடி மக்களை ஆட்டுவிப்பது எளிது என்று சதிக் கோட்பாட்டாளர்கள் நம்மை நம்பச் சொல்கிறார்கள். 

நிதர்சனம் 

நிச்சயமாக, உலகில் உண்மையான சதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. தனிநபர்கள், பெருநிறுவனங்கள், அமைப்புகள், திருச்சபைகள், கட்சிகளின் பிரிவுகள், அரசுகள் போன்றவையெல்லாம் தொடர்ந்து வெவ்வேறு சதிகளைத் தீட்டி அவற்றை நிறைவேற்றுகின்றன. அதனால், அவை ஒட்டுமொத்த உலகத்தையும் கணித்து அதைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறது என்று சொல்லிவிடுவது எளிதல்ல. 

1930-களில் உலகெங்கும் கம்யூனிஸப் புரட்சிகளைத் தூண்டிவிட சோவியத் ஒன்றியம் உண்மையில் சதித் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது; முதலாளிய வங்கிகளெல்லாம் நேர்மையற்ற எல்லாவித உத்திகளையும் பின்பற்றின; ரூஸ்வெல்ட்டின் நிர்வாகம் ‘நியூ டீல்’ மூலம் அமெரிக்காவை மறு கட்டமைப்பு செய்யத் திட்டமிட்டது; யூதர்களின் ஸையனிஸ்ட் இயக்கம் பாலஸ்தீனில் தங்கள் தாய்நாட்டை நிறுவும் திட்டத்தை இடைவிடாமல் பேணியது. ஆனால், இவையும் எண்ணற்ற பிற திட்டங்களும் அடிக்கடி ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. ஒட்டுமொத்த ஆட்டத்தையும் இயக்குபவர்களாக ஒற்றைக் குழு ஏதும் இருந்திருக்கவில்லை. 

இன்றும்கூட நீங்கள் நிறைய சதிகளுக்கு இலக்காகலாம். உங்கள் சக ஊழியர்கள் உங்கள் முதலாளியை உங்களுக்கு எதிராகச் செயல்படும்படி சூழ்ச்சி செய்யலாம். தீங்கு விளைவிக்கும் ஓபியாய்டுகளை உங்களுக்குக் கொடுக்கும்படி உங்கள் மருத்துவருக்கு ஒரு பெரிய மருந்து நிறுவனம் லஞ்சம் கொடுக்கலாம். மற்றுமொரு பெருநிறுவனம் அரசியலர்களுக்கு அழுத்தம் கொடுத்து, சுற்றுச்சூழல் விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு நீங்கள் சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்த முயன்றுகொண்டிருக்கலாம். ஒரு அரசியல் கட்சி தங்களுக்கு செல்வாக்கு மிக்க மாவட்டங்களின் எல்லையைத் தேர்தல் வெற்றிக்கு ஏற்றவாறு மறுவரையறுக்கலாம். வெளிநாட்டு அரசு ஒன்று உங்கள் நாட்டில் தீவிரவாதத்தைத் தூண்டிவிடலாம். இவையெல்லாம் உண்மையான சதிகளாக இருக்கலாம். ஆனால், அவையெல்லாம் உலகளாவிய ஒற்றைச் சதியின் பங்காக இருப்பவையல்ல. 

அதிகாரமும் பிரபல்யமும் 

சில சமயம், ஒரு பெருநிறுவனம், ஒரு அரசியல் கட்சி, அல்லது ஒரு சர்வாதிகாரி தம் கைகளில் இந்த உலகின் ஒட்டுமொத்த அதிகாரத்தில் கணிசமான பகுதியைக் கொண்டிருக்க முயன்று வெற்றி காண்பதும் உண்டு. அப்படி ஒரு விஷயம் நிகழும்போது, அதை ரகசியமாக வைத்திருப்பது கிட்டத்தட்ட இயலாத காரியம். பெரும் அதிகாரம் வரும்போது பெரும் பிரபல்யம் வரும்.  

உண்மையில், பெரும் அதிகாரத்தைக் கைக்கொள்வதற்கான அத்தியாவசியத் தேவையாகப் பெரும் புகழ் என்பது பல விஷயங்களிலும் இருந்துள்ளது. பொது மக்களின் பார்வையை லெனின் தவிர்த்திருந்தால் ரஷ்யாவில் அவர் அதிகாரத்தை வென்றிருக்க முடியாது. ஸ்டாலின் ஆரம்பத்தில் ரகசியமாகவே திட்டம் தீட்ட விருப்பம் கொண்டிருந்தார். ஆனால், சோவியத் ஒன்றியத்தில் எல்லா அதிகாரங்களையும் தன் கையில் அவர் குவித்துவிட்டிருந்தபோது பால்டிக் பிரதேசத்திலிருந்து பசிபிக் வரை ஒவ்வொரு அலுவலகம், பள்ளி, வீடு ஆகியவற்றில் ஸ்டாலினின் படம் தொங்கிக்கொண்டிருந்தது. ஸ்டாலினின் அதிகாரம் என்பது அவரது ஆளுமை மீதான் வழிபாடுடன் தொடர்புகொண்டது. லெனினும் ஸ்டாலினும் திரைக்குப் பின்னால் உள்ள ஆட்சியாளர்களின் முகமூடி மட்டுமே என்ற கருத்து எல்லா வரலாற்று ஆதாரங்களுக்கும் முரணானது. 

எந்த ஒரு தனி ரகசியக் குழுவும் இந்த ஒட்டுமொத்த உலகையும் ரகசியமாகக் கட்டுப்படுத்தவில்லை என்பது துல்லியமானது மட்டுமல்ல, அது நமக்கு சக்தியையும் அளிக்கிறது. அப்படிப் புரிந்துகொண்டால், நம் உலகில் ஒன்றுக்கொன்று போட்டியிடும் குழுக்களை நம்மால் அடையாளம் காண முடியும் என்றும், சில குழுக்களுக்கு எதிராக சில குழுக்களுடன் உங்களை இனம் கண்டுகொள்ள முடியும் என்றும் அர்த்தமாகிறது. உண்மையான அரசியல் என்பதெல்லாம் இதைப் பற்றியதுதான். 

- யுவால் நோவா ஹராரி, வரலாற்றாசிரியர், ‘சேப்பியன்ஸ்’ நூலாசிரியர். 

© ‘நியூயார்க் டைம்ஸ்’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை, நன்றி: ‘இந்து தமிழ்’ நாளிதழ்

Friday, November 27, 2020

ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அமைப்புடன் போரிடப் போகிறோம்! - வி.பி. சிங்கின் உரை



மண்டல் குழு அறிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கசப்புணர்வை ஏற்படுத்தின. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அமைப்புடன் போரிடப் போகிறோம் என்பதும் அப்படிச் செய்வதன் மூலம் எங்களை நாங்களே நெருக்கடிக்குள் தள்ளப்போகிறோம் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஒருவேளை அதுதான் எனது விதியாக இருக்கலாம்.  

நான்  நிதியமைச்சராக இருந்தபோது பொருளாதார அமைப்புடன் என் பார்வைகள் முரண்பட்டன; ஆக, அந்தப் பதவியிலிருந்து நான் விலக நேரிட்டது. பாதுகாப்பு அமைச்சராக நான் இருந்தபோது எனது பார்வைகள் அரசியல் கட்டமைப்புடன் முரண்பட்டன. ஆகவே, அந்தப் பதவியிலிருந்தும் விலக நேரிட்டது. தற்போது நான் பிரதமராக இருக்கிறேன், சமூக அமைப்பைப் பற்றிய எனது கொள்கையும் தற்போதைய கொள்கையும் முரண்படுகின்றன; ஆகவே, நான் வெகு விரைவில் இந்தப் பதவியை விட்டும் போக வேண்டியிருக்கும். ஆயினும், நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. எங்களுடைய ஐந்தாண்டு கால ஆட்சியை நிறைவுசெய்வதற்காகவே இந்த அமைப்புகளுக்கு நாங்கள் தலைவணங்க வேண்டிய அவசியம் இல்லை. அதிகாரத்திலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம், அதே நேரத்தில் அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து போரிடுவோம். நூற்றுக் கணக்கான தேர்தல்களில் போட்டியிட வேண்டியிருந்தாலும் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை; ஆனால் நீதியின் பாதையிலிருந்து நாங்கள் விலகிச்செல்ல மாட்டோம்.  

இந்த ஆண்டு பாபா சாஹேப் பீம் ராவ் அம்பேத்கரின் நூற்றாண்டு, சமூகநீதியின் ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக நாங்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும் சில வகுப்பினரின் வெறுப்புக்கு உள்ளாகத்தான் நேரிடும். ஏழைகள் எப்படி அதிகாரத்தின் பங்குதாரர்களாக ஆவது என்பதுதான் நம் முன் தற்போது உள்ள கேள்வி. நீதிக்கான போராட்டத்தில் ஏழை எளியோர் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காகப் போராடவில்லை, மாறாக சமூக வாழ்க்கையில் கண்ணியமும் மதிப்பும் கிடைப்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இந்த அதிகாரக் கட்டமைப்பில்- அது இந்த அவையிலாகட்டும் அல்லது அதிகாரத் தரப்பிலாகட்டும்- அவர்கள் பங்கெடுக்காவிட்டால் அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கவே முடியாது என்பது என்னுடைய கருத்தாக இருந்துவந்திருக்கிறது. ஆகவே, நாட்டின் நிர்வாகத்தில் தங்கள் பங்கை அவர்கள் பெறுவதற்கு வழிவகை செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதிகாரத்தில் அவர்கள் பங்கு பெற்றாலொழிய வெறுமனே விவாதங்கள் நடத்துவது வீணாகப் போவதுடன் அவர்கள் புறக்கணிப்புக்குள்ளாவது தொடரவே செய்யும்.     

ஐயா (அவைத்தலைவர்), மிகுந்த போராட்டத்துக்குப் பிறகே இந்தக் கட்டத்தை எட்டியிருக்கிறோம், அரசு அமைப்பது என்பது தற்காலிக நிறுத்தம் மட்டுமே. ஆட்சியில் இருந்தபோதும் எங்களது போராட்டத்தைத் தொடர்ந்தோம், அதிகாரத்தில் இல்லாதபோதும் தொடரவே செய்வோம். விடாமல் போராடுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். முக்கியமான நிகழ்வுகளின் ஒருசில கணங்கள் கூட வரலாற்றில் கணிசமான முக்கியத்துவத்தைப் பெறும்.  

கடவுளின் படைப்பான, நமது சக மனிதர்கள் மீது நாம் நமது கவனத்தைத் திருப்புவோமாக. எண்ணற்ற மனிதர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு துயர்மிகுந்த வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். அந்த மக்களுக்கு உதவிசெய்வது நம் கடமையாகிறது, நாங்கள் செய்ததும் சரியாக அதைத்தான். அரசுக்கு அதிகாரம் இருக்கிறது; அந்த அதிகாரம் ஏழைகளுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உதவவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுதான் சில பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மண்டல் குழுவானது சாதியம் என்ற பிரச்சினையை எழுப்புகிறது என்று எதிர்க் கட்சித் தலைவர் கூறினார். இந்த அம்சத்தை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சமூக அமைப்பும் அரசியல் கட்டமைப்பும் பல வழிகளில் ஒன்றையொன்றைச் சார்ந்தவையாகும். சமூக, பொருளாதார அமைப்புகளில் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் கீழ்மட்ட அளவில் பெருமளவிலான கூட்டுறவு காணப்படுகிறது. இந்தக் கீழ்மட்டமானது பெரிதும் தலித் மக்களாலும் சிறு விவசாயிகளாலும் ஆனது. அவர்களில் 99% ஏழைகள். மேலும் அவர்களில் 90% பேர் சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகள். உயர்சாதி மக்கள் பணக்காரர்கள் என்பதும் உண்மை. சமூக அமைப்புக்கும் பொருளாதார அமைப்புக்கும் வேறுபாடுகள் இருக்கும் என்றால் சமூக அமைப்புக்கும் அரசியல் கட்டமைப்புக்கும் இடையே ஒற்றுமைகளும் இருக்கவே செய்கின்றன. அரசியல் கட்டமைப்பை மாற்றாமல் சாதியத்தை ஒழிக்கவோ சமூக அமைப்பை மாற்றவோ நம்மால் முடியாது. சாதியத்தை வேரோடு அழிக்க அரசியல் கட்டமைப்பில் நாம் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். மண்டல் குழு தொடர்பாக நாங்கள் எடுத்த முடிவு தீவிரமான பரிசீலனைக்குப் பிறகு மனவுறுதியுடன் எடுக்கப்பட்டது. நாம் எல்லோரும் கிராமங்களிலிருந்து வந்திருக்கிறோம், ஆகவே கிராமத்தினரின் நலன்களுக்கு உதவுவதற்காக எங்களின் அதீத சக்தியைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் தயார் 

ஐயா, இந்தக் கணத்தில் எங்கள் தரப்பைப் பொறுத்தவரை அதீதத் திமிரோ கடுமையான  வேதனையோ எதுவும் எங்களுக்கு இல்லை. மாறாக, நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் கூடவே நாங்கள் அவமானகரமான முறையில் செல்லவில்லை என்று பெருமிதமும் அடைகிறோம். சிலநேரம் மரணம் என்பது வாழ்க்கையை விட உயர்வானது. ஐயா, ஒரு நபர் தனக்கு மிக மிக முக்கியமான ஒரு லட்சியத்தை அடைவதற்காகத் தன் வாழ்க்கையையே இழக்கத் துணிவார் என்றால், அவர் அதற்காக வருத்தப்பட மாட்டார். இது ஒரு நல்ல நோக்கத்துக்கான போராட்டம், நாங்கள் அதிகாரத்தில் இருந்தபோது இந்த நோக்கத்துக்காக தொடர்ந்து போராடினோம், அதிகாரத்தை விட்டு விலகினாலும் இந்தப் போராட்டத்தைத் தொடரவே செய்வோம்.      

-தமிழில்: ஆசை

Tuesday, October 6, 2020

காந்தி: காலத்தை முந்திய கனவு


ஓவியம்: அஹ்மது இமாது

ரமின் ஜஹான்பிக்லூ 

(மொழிபெயர்ப்பு: ஆசை)

காந்தியின் லட்சியமான அகிம்சை என்பது உயர்ந்த சிந்தனை, ஆனால் நடைமுறை சாத்தியமற்றது என்று கூறும் போக்கு இன்றைய உலகில் காணப்படுகிறது. இந்த நம்பிக்கையில் காணப்படும் முரண்பாடு என்னவென்றால், காந்தியின் கொள்கைகளைப் புறக்கணித்துவிட்டு, அவருக்குப் புனிதத்துவத்தை இது வழங்குகிறது. எனினும், காந்தி ஒரு துறவி அல்ல; அவர் மதத் தலைவரும் அல்ல. அவர் மிக மிக முக்கியமாக ஓர் அசல் சிந்தனையாளர், மிகக் கூர்மையான அரசியல் ராஜதந்திரி, மனித குலத்துக்கு அகிம்சை என்ற கோட்பாட்டை அறிமுகப்படுத்தும் சாத்தியம் குறித்து ஆழமாக நம்பிக்கை கொண்டிருந்தவர் அவர். 

அகிம்சை பற்றிய காந்தியின் கருத்தாக்கம் ஒரு கனவு அல்ல; அது யதார்த்தமான நம்பிக்கை, நடைமுறை லட்சியவாதத்தின் சிறு கூறை அது தரித்துக்கொண்டிருந்தது; அதாவது, அன்பின் விதியை உலக அளவில் வரவேற்கும் லட்சியவாதம் அது. இவ்வாறாக, தன்னை இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்களால் தாக்கம் பெற்ற ஆசியராகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டார்; அதே நேரத்தில் இயேசு கிறிஸ்து, சாக்ரடீஸ், டால்ஸ்டாய், ரஸ்கின், தொரோ ஆகியோரால் பெரிதும் தாக்கம் பெற்றவராகவும் இருந்தார். காந்தி ‘ஓர் அந்நியப்பட்ட ஆசியர்’ என்று தாமஸ் மெர்ட்டன் ஒருமுறை எழுதினார். அப்படியும் இருக்கலாம்; ஆனால், காந்தி தன் கலாச்சாரத்துக்கும் கிழக்கின் மரபுகளுக்கும் அந்நியரானது மேற்கிலிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டதால் அல்ல. மாறாக கிழக்கு, மேற்கு இரண்டுடனான அவரது நெருக்கம் மிகவும் பலனுள்ளதாக ஆக்கியதுடன் அவரை ‘பன்மைக் கலாச்சார இந்திய’ராக ஆக்கியது. காந்திக்கு அறிவுபூர்வமான திறந்த மனது இருந்தது. பிறரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், அதன் விளைவாக அவரது லட்சியங்களுக்கு ஏற்ப வாழ்வதற்கும் அது உதவியது. இப்படியாக, அவர் இந்திய அரசியல், தார்மீகத் தலைவர் மட்டுமல்ல; கடந்த நூறு ஆண்டுகளாக உலக அளவில் பின்பற்றப்படும் நவீன அகிம்சையின் தந்தையாகவும் அவர் இருக்கிறார். 

இப்படியாக, காந்தியிடம் அகிம்சைத் தத்துவமானது பொது மக்களின் எதிர்ப்புக்கான கருவியாகவும், அதிகாரம் மிக்கவர்களுக்கு எதிராக அதிகாரமற்றவர்கள் செயல்படுவதற்கான நடைமுறை ஆயுதமாகவும் ஆனது. எனினும், காந்தியைப் பொறுத்தவரை அகிம்சையானது அடிப்படையில் ஒரு தார்மீகச் செயல்பாடும்கூட. ‘ஆத்ம சக்தி’ என்று காந்தி குறிப்பிடுவது, உண்மையில் அறவியல் சார்ந்த நடத்தை நெறிமுறையாகும். சொல்லப்போனால், அவர் அகிம்சையை அடிப்படையில் அறம் சார்ந்த ஓர் அக்கறையாகவும் ஆக்கபூர்வமான அரசியல் நடவடிக்கையாகவும் பார்த்தார். காந்திக்கு அறவியல் செயல்பாடுகளும் அரசியல் செயல்பாடுகளும் ஒன்றே. ஆகவே, அவரைப் பொறுத்தவரை வன்முறைக்கும் வெறித்தனத்துக்கும் எதிரான போராட்டம் என்பது நியாயமற்ற சட்டங்களுக்கு அடிபணியாத செயல்பாட்டின் தளத்திலேயே வைத்துப் பார்க்க வேண்டியது: அது ஆத்ம சக்தியாலும் பிறருக்கு ஏற்றம் தருவதற்காக உண்மையைத் தேடுவதாலும் வெளிப்படுத்தப்படுகிறது. 

வாழ்க்கையைப் பொறுத்தவரை காந்தி ஆழமான அறவியல் பார்வை கொண்டிருந்தார்: புனிதப் பிரதிகளின் இறுக்கமான அதிகாரத்தையோ மத மரபுகளின் புனிதத்தையோ அவர் அங்கீகரிக்கவில்லை. ஆனால், நவீன அரசியல், அதன் எதேச்சாதிகாரப் போக்கு ஆகியவற்றின் முதன்மையான விமர்சகராக அவர் இருந்தார். ஆகவேதான், காந்தியை இன்று படிப்பதென்பது நவீன அரசியலை அதிகாரத்துக்கும் வன்முறைக்கும் இடையிலான புதிய உறவாகவும், குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான மரபான வேறுபாட்டைக் கடக்கும் வழியாகவும் தவிர்க்க முடியாத வகையில் மறுஆய்வுக்கு உட்படுத்துவதாகும். அது கலாச்சாரங்களுக்கு இடையிலான ஜனநாயகத்தை நோக்கிய நகர்வுமாகும். அங்கே வேற்றுமைகளில் ஒருமைப்பாடு என்பதில் வெறும் தேசியவாதம் காரணமாகச் சமரசம் ஏதும் செய்யப்படுவதில்லை, அங்கே ஜனநாயகச் செயல்பாடு என்பது வெறுமனே அரசமைப்புச் சட்டத்துடனும் பிரதிநிதித்துவத்துடனும் நின்றுவிடுவதில்லை. இந்தக் கண்ணோட்டத்தில், அகிம்சை பற்றிய காந்தியத் தத்துவமானது அரசியலின் மரபான அர்த்தத்தை முழுமையற்றதாகக் காண்கிறது. அதே நேரத்தில், அரசின் அதிகாரம் செய்யும் அத்துமீறல்களுக்கு எதிராக விழிப்புணர்வுடன் இருக்கவும், நமது தற்காலச் சமூகங்களில் அரசியல் அதிகாரம் சுல்தான்மயமாவதற்கு எதிராகப் போராடுவதற்கும் குடிமக்களைக் கடப்பாடு உடையவர்களாக ஆக்குகிறது. 

சமூக அளவில், ஒரு லட்சியச் சமூகத்தை காந்தி கனவு கண்டார். அந்தச் சமூகத்தில் கடையருக்கும் சமூக நீதி வழங்கப்படும் என்பது அவரது கனவு. தனிநபரிடமிருந்து எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அவர்களுடைய திறமைகளைக் கறக்கும் உலகு இது. குடிமைத்துவம், ஜனநாயகம் போன்ற தளங்களில் காந்தியச் சிந்தனை முழுவதுமே ஒரு நியாயமான சமூகத்தைக் கட்டமைக்கும் நோக்கத்தைச் சுற்றிச் சுழல்கிறது. இப்படியாக, ஜனநாயகம் தொடர்பிலான காந்தியின் கருத்தாக்கம் முழுவதுமாக மனித குல தார்மீகத்தின் வளர்ச்சியைச் சார்ந்து இருக்கிறது. அதில் பண்படாததும் வரன்முறையற்றதுமான தனிநபர்வாதமானது பரிவுகொண்ட மனிதத்துவத்துக்கு வழிவிடுகிறது. மேலும் அகிம்சை, ஜனநாயகம் குறித்துப் பேசும்போது அச்சமின்மை, பொருள் மீது பற்றின்மை, பணிவு போன்ற குணங்களை மனித குலம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று காந்தி நம்பினார். முதன்மையான நோக்கம் எதுவென்றால் பல்வேறு கலாச்சாரங்களையும் பல்வேறு பரிமாணங்களையும் கொண்ட சமூகத்துக்குப் பொருந்தும்படி மனிதர்களை மறுகட்டமைப்பு செய்வதுதான். எல்லா சிந்தனை மரபுகளைச் சேர்ந்த மனிதர்களுக்கும் சேவை செய்வதைத் தொடர்ந்து வலியுறுத்தியதே அவரது அகிம்சை ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படைப் பண்பு. 

கலாச்சாரங்கள், நம்பிக்கைகளுடனான உரையாடலில் மேற்கொள்ளும் இந்தப் பன்மைத்துவ அணுகுமுறையில் காந்தி தனது காலத்தை வெகுவாக முந்தியவராக இருந்தார். உண்மையில், கலாச்சாரங்களுக்கு இடையிலான உரையாடலின் தத்துவமாக அவரது அகிம்சை ஜனநாயகக் கோட்பாட்டை அவரது மரணத்துக்குப் பல தலைமுறைகளைத் தாண்டி தற்போது பார்க்கும்போது தெரிகிறது. காந்தி வறட்டுத்தனமான தேசியராக இல்லை; வேறுபட்ட கலாச்சாரங்கள், பல்வேறு மனப்போக்குகள் போன்றவற்றுக்குப் பொதுவான ஒரு தளத்தைக் கண்டுபிடிக்கும் புதிய பாதை வகுப்பவராக இருந்தார். ஜனநாயகம் தொடர்பிலான அவரது கோட்பாடு ஒற்றைக் கலாச்சாரம் அடிப்படையிலானதாகவோ கருத்துமுதல்வாத அடிப்படையிலானதாகவோ இல்லை. அது முதன்மையாகப் பன்மைத்துவம் கொண்டதாகவும் பரிவு கொண்டதாகவும் இருக்கிறது. இதன் விளைவாக, மதத்தை அவர் இறையியல் அடிப்படையில் அணுகாமல், அறத்தின் அடிப்படையில் அணுகுகிறார். ஆகவே, ஜனநாயகம் பற்றிய அவரது கோட்பாடும், சத்தியாகிரகம், சுயராஜ்ஜியம் உள்ளிட்ட அதை அடைவதற்கான வழிமுறைகளும் இறையியல் கோட்பாடுகள் அல்ல. இறையியல் சாராத உண்மையை நோக்கியே மனித விதி தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று காந்தி நம்பினார். ஆன்மிகத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் உண்மையைத் தேடியவர் அவர். இந்தத் தேடலில் இணைந்துகொள்ளும்படி பிறருக்கும் ஊக்கமளித்தார். 

மனித நாகரிகம் அறரீதியிலான பாதையில் செல்வதில் ஜனநாயகமானது துடிப்பு மிக்க ஓர் அம்சம் என்று காந்தி கருதினார். வாழ்க்கை பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களுக்கு இடையில் அவர் பாலம் அமைக்க முயன்றதை உண்மையின் பல பரிமாணங்களை அவர் அணுக முயன்றதோடு பல வகையிலும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதனால்தான், சமூக வாழ்வின் பல்வேறு மரபுகளை அவர் நிராகரிக்கவில்லை; அவற்றில் உண்மையானது எது என்று அவர் நம்புகிறாரோ அதை உறுதியாக ஏற்றுக்கொண்டார்; அறம் சார்ந்த பொதுவான ஒரு தளத்தை உருவாக்குவதற்காக அவற்றை ஒன்றுசேர்ப்பதைப் பற்றி அவர் சிந்தித்தார். காந்தி இவ்வாறாக, ஜனநாயகத்தையும் அகிம்சையையும் ஒரே உண்மையின் இரண்டு பக்கங்களாகக் கருதிப் பேசினார். 

வெறுப்பு, ஒதுக்கிவைத்தல், சந்தேகம், போர் போன்றவற்றின் எல்லா அரசியல், தத்துவ ஆதாரங்களுக்கும் அப்பால் அகிம்சையையும் ஜனநாயகத்தையும் இந்தியாவில் மேம்படுத்துவதே தனது திட்டமாக அவர் வரையறுத்துக்கொண்டார். அரசியல் என்பது பலவீனமான கருத்தாக்கம் என்பதையும் தேசியவாத அடிப்படையில் ஏற்படும் வன்முறை, போர் போன்றவற்றுக்கு இலக்காகக் கூடியது என்பதையும் அவர் நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான், அவர் இந்தியாவை இனம் சார்ந்த தூய்மை அல்லது மொழி ஒற்றுமை அல்லது ஒன்றிணைக்கக் கூடிய மதம் சார்ந்த பிற அம்சங்கள் போன்றவற்றைக் கொண்டு வரையறுக்கவில்லை. காந்தியின் ஜனநாயகத் தத்துவமானது பல்வேறுபட்ட ‘பிறருக்கு’ எதிராகப் போரிடுமாறு இந்தியர்களுக்கு அறைகூவல் விடுக்கவில்லை; தன் நிலப்பரப்பு சார்ந்த பிடிமானம் கொண்டிருக்கும் இந்தியத்துவத்துக்கு துவைதத்தையும் பன்மைத்துவ பரிமாணத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்த அர்த்தத்தில், காந்தியைப் பொறுத்தவரை பிறரின் கலாச்சாரத்தை நேசிக்காமல் தன் நாட்டை (அதாவது, இந்தியாவை) நேசிப்பதில் அர்த்தம் இல்லை. உலகளாவிய சகோதரத்துவம் நோக்கி காந்தி விடுத்த அறைகூவலானது தேசிய, மதரீதியிலான எல்லா சுயநலத்தையும் ஒதுக்கித்தள்ளிய, எல்லோரும் ஒன்றுசேர்ந்து வாழ்தல் எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் அமைந்தது. அவர் கூறியதுபோல், “உலகத்தினருடன் நட்புறவோடு இருப்பதென்பதும் ஒட்டுமொத்த மனிதக் குடும்பத்தையும் ஒன்றாகக் கருதுவதென்பதும்தான் மகத்தான வழிமுறையாகும். தனது மதத்தைப் பின்பற்றுபவர்களையும் பிற மதங்களைப் பின்பற்றுபவர்களையும் பாகுபடுத்திப் பார்ப்பவர்கள் தமது மதத்தினருக்குத் தவறான வழியைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், பேதத்துக்கும் மத வெறுப்புக்கும் கதவைத் திறந்துவிடுகிறார்கள்.” 

- ரமின் ஜஹான்பிக்லூ, இயக்குநர், அகிம்சைக்கும் அமைதி குறித்த ஆய்வுகளுக்குமான மகாத்மா காந்தி மையம், ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம், சோனிப்பட், ஹரியாணா. 


 

Friday, August 7, 2020

என்னைத் தூக்கில் போடுங்கள்: வி.பி.சிங்


அடிப்படையில் விஸ்வநாத் பிரதாப் சிங் ஓர் அரசக் குடும்ப வாரிசு. 1931-ல் தையா அரண்மனையில் பிறந்த வி.பி.சிங்கை மண்டாவின் ராஜா தத்தெடுத்துக்கொள்வதற்கு முன்னரும் ‘ராஜா’ என்றுதான் அழைத்தார்கள். ஆனால், ஆச்சார்ய வினோபா பாவே சொன்னதுபோல, அடித்தட்டு மக்களைச் சந்தித்து, ‘நவீன சித்தார்த்தர்’ ஆக அவர் உருவெடுப்பதை அவரைச் சுற்றியிருந்த எந்த அரண்மனைச் சுவரும் தடுக்கவில்லை. 1990-ல் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை அமலாக்க வி.பி.சிங் எடுத்த முடிவானது இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு முன்னெடுப்பு. வெறும் 11 மாதக் காலத்திலேயே அவர் ஆட்சியை இழக்க அதுவும் முக்கியமான காரணம். ஆனால், தான் செய்யும் காரியத்தின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருந்தார். இந்திய நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட நெகிழ்ச்சியான உரைகளில் ஒன்று தன்னுடைய ஆட்சி பறிபோகும் என்பதை உணர்ந்து, தன்னுடைய செயல்பாட்டுக்கு அவர் துணிந்த தருணம். சில சமயங்களில் வாழ்வதைக் காட்டிலும் மரணத்தைத் தேர்ந்தெடுப்பது நல்ல வாய்ப்பு என்று சொன்னார் அவர். தன்னுடைய லட்சியத்துக்காக உயிர்த் தியாகம் செய்யும் ஒருவர் தன் மரணத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை என்றார். பல நூற்றாண்டு பழைய அமைப்புடன் மோதும்போது எத்தகைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது தாங்கள் அறியாதது அல்ல என்றார். சமூக வாழ்க்கையில் மரியாதைக்காகப் போராடும் எளிய மக்களுக்கு அதிகாரத்தில் எப்போது பங்களிக்கப்போகிறோம் என்பதே நம் முன் உள்ள பெரிய கேள்வி என்றார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இவ்வளவு பேசியவர் அடிப்படையில் தன்னை ஆதிக்கச் சாதியரில் ஒருவராக உணர்ந்து இந்தக் காரியங்களை தார்மீக எழுச்சியில் செய்தார் என்பது இங்கே முக்கியமானது. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வி.பி.சிங் என்னவாகப் பார்த்தார் என்பதைக் கொஞ்ச காலத்துக்குப் பின்னர் எடுக்கப்பட்ட இந்தப் பேட்டி உணர்த்துகிறது

உங்களுடைய பாதைக்கு மக்களிடம் செல்வாக்கு இருப்பதுபோல் தெரியவில்லையே? 

அது உண்மையல்ல. 1989-ல் எங்கள் தேர்தல் அறிக்கையை நாங்கள் வெளியிட்டபோது “தேசியச் செயல்திட்டத்தில் நீதியை மறுபடியும் இடம்பெறச் செய்வோம்” என்று தெளிவாகக் கூறியிருந்தோம். அரசியல் அறம், அதிகாரப்பரவலாக்கல், தேர்தல் சீர்திருத்தங்கள், பத்திரிகைச் சுதந்திரம் போன்ற அம்சங்களையெல்லாம் உள்ளடக்கிய விரிவான கோட்பாடுதான் நீதி. அது பொருளாதார நீதியையும் சமூக நீதியையும் உள்ளடக்கியது. ‘இதிலிருந்து நாங்கள் என்ன பெற்றோம்?’ என்பதல்ல நாம் கேட்க வேண்டிய கேள்வி; மாறாக, ‘ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் எங்களால் என்ன செய்ய முடிந்தது?’ என்பதைத்தான் கேட்க வேண்டும். எந்தக் கட்சியும் இதை அலட்சியப்படுத்த முடியாது. நாங்கள் அரசியல் சூழலையே மாற்றியமைத்திருக்கிறோம்.  

உங்கள் கூட்டணியில் உள்ள நிறையக் கட்சிகள் காலத்துக்கு ஒவ்வாததாகவும் சிதைந்தும் போகுமா?  

கூட்டணிகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் இரண்டு மூன்று ஆண்டுகளில் நிலைபெற்றுவிடும். மதச்சார்பற்ற சமூக சக்திகளை அடையாளம் காண வேண்டுமே ஒழிய, மதச்சார்பற்ற கட்சிகளை அல்ல. எடுத்துக்காட்டாக, தலித் மக்கள் ஒரு சக்தி வாய்ந்த மதச்சார்பற்ற சக்தியாக இருக்கிறார்கள். அடுத்ததாக, பிற்படுத்தப்பட்ட மக்கள் எனும் சக்தியானது சிறுபான்மையினருடன் சேர்ந்து வகுப்புவாதத்துக்கு எதிரான வலுவான தூணாக இருக்க முடியும். 

ஆனால், நம் நாடு மதச்சார்பற்ற நாடுதானே?  

அது வெறும் மேல்பூச்சுதான்.  

அப்படியென்றால், காந்தி, நேரு கற்பனை செய்த மாதிரிகள் தோல்வியடைந்துவிட்டனவா?  

இல்லை. காந்தி, நேரு எல்லோரும் சூழலை மேம்படுத்தவே முயன்றார்கள். ஏராளமான பொருளாதார, சமூக அடுக்குகளைத் தகர்த்தெறிய அவர்கள் முயன்றார்கள். ஆனால், மதமும் இந்த அமைப்புமே மேலோங்கின. ஒரு அநீதியான சமூகக் கட்டமைப்பானது ஒரு அநீதியான அதிகாரக் கட்டமைப்பையே உற்பத்தி செய்திருக்கிறது. தனிப்பட்ட நபர்களையும் கட்சிகளையும் இதற்காகக் குற்றஞ்சாட்டிவிட முடியாது. அரசியல், சமூக, பொருளாதார ஏகபோகங்கள் முடிவுகள் எடுப்பதிலிருந்து பெரும் அளவிலான மக்கள்திரளை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். அதனால், அவை ஜனநாயகமற்றவையாக இருக்கின்றன. இதுவரை ஆளும் மேல்தட்டினர்தான் விளையாடிவந்தனர், ஏனையோரோ பார்த்துக் கைதட்ட மட்டுமே அழைக்கப்பட்டனர். இப்போது பார்வையாளர்களோ, ‘நாங்களும் பந்தை உதைத்து கோல் வலைக்குள் தள்ள வேண்டும், எங்களுக்கென்று தனி அணி இருக்கிறது’ என்று கூறுகிறார்கள்.  

நீங்கள் ஒரு சீர்திருத்தவாதியா?  

இல்லை, இல்லை. நான் வெறும் ஆய்வாளன்தான்.  

அமைப்புடனும் ஊடகங்களுடனும் உங்கள் உறவு மோசமடைந்தது ஏன்?  

இதற்கான பதிலை ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலித் மாணவர்களின் குழு எனக்கு அளித்தது. ‘ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளாலும், எங்களை ஆயிரம் ஆண்டுகளாக வசை பாடியவர்களாலும் நீங்கள் வசை பாடப்படுகிறீர்கள். நீங்கள் எங்கள் பக்கத்தில் நின்றால் வசையில் உங்களுக்கும் பங்கு கிடைக்கும்’ என்று அவர்கள் கூறினார்கள். அதுவே எனக்கு வெளிச்சத்தையும் தெம்பையும் கொடுத்தது. இன்னும் இரண்டு அனுபவங்கள் எனது வைராக்கியத்தை உறுதிப்படுத்தின. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சில மாணவர்கள், “நாங்கள் இந்த நாட்டின் இளைஞர்கள் இல்லையா? பட்டியலினத்தோரும் பிற்படுத்தப்பட்டவர்களும்தான் இந்த நாட்டின் நான்கில் மூன்று பங்கு என்ற அளவில் இருக்கிறோம். மண்டல் மூலமாக நீங்கள் எங்களுக்கு ஒரு விஷயம் கொடுத்தீர்கள், ஒட்டுமொத்த நாடும் எங்கள் மீது பாய்ந்தது” என்று என்னிடம் கூறினார்கள். இது 27% அல்லது 10% என்பது பற்றிய கேள்வியல்ல; மாறாக, ‘ஆளும் மேல்தட்டினரின் இதயங்களில் எங்களுக்கு 1%-கூட இடம் இல்லையா?’ என்ற கேள்வி. நாட்டின் நான்கில் மூன்று பங்கு இளைஞர்கள் இப்படி உணர ஆரம்பித்தார்கள் என்றால் நாடு என்னவாகும்? இன்னொரு முறை ஒரு பத்திரிகைக்காரர் வயதான ஒரு தலித் பெண்மணியிடம், “நீங்கள் வி.பி.சிங்கை ஏன் ஆதரிக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி, “ஏனென்றால் அவர் எனது சாதியைச் சேர்ந்தவர்” என்று பதில் கூறியிருக்கிறார். “வி.பி.சிங் தலித் என்றா சொல்கிறீர்கள்” என்று அந்தப் பத்திரிகையாளர் திரும்பக் கேட்டார். “ஆமாம், ஏனெனில் அவர் எங்களுக்காகப் போராடுகிறார்” என்று அந்தப் பெண்மணி பதில் கூறியிருக்கிறார். ஆக, கொஞ்சம் நம்பிக்கையாவது இருக்கிறது. அதை விட்டுவிடக் கூடாது. வாக்குகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் அந்த நம்பிக்கைக்கு ஈடாக மாட்டார்கள்.  

ஆளும் மேல்தட்டு வர்க்கத்தின் சதிதான் உங்களைக் கவிழ்த்துவிட்டதா?  

நான் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை. அது இயல்பான எதிர்வினைதான். ஆளும் மேல்தட்டினர் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், நம் சமூகத்தின் நசுக்கப்பட்ட பிரிவினரைத் துரத்திச் சென்று ஒரு முட்டுச்சந்தில் நிறுத்துவோம் என்றால், நமது நாட்டில் மேலும் மேலும் அமைதியின்மையே ஏற்படும். வி.பி.சிங்கைத் தூக்கில் தொங்கவிடுங்கள்; ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்கான நீதியைக் கொடுங்கள். இல்லையென்றால் இந்த நாடு யாராலும் நிர்வகிக்க முடியாத நிலையை நோக்கிச் சென்றுவிடும்!

- மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் அமலாக்கப்படும் என்று வி.பி.சிங் அறிவித்த 30-வது ஆண்டு நிறைவையொட்டி ‘இந்து தமிழ்’ நாளிதழில் என் மொழிபெயர்ப்பில் வெளியான நேர்காணல்.


 

Friday, February 14, 2020

மறைந்துகிடக்கும் யாழ்



ரூமி

இவ்வுலகின் யாழையெல்லாம்
நீ உடைத்தாலுமென்ன மௌலா?
வேறுவேறு யாழுண்டு
ஆயிரமாயிரமாய் இங்கே.

காதல் யாழின் பிடிக்குள் விழுந்த நமக்கு
என்ன கவலை, நமது யாழும் குழலும் தொலைந்தால்.

இவ்வுலகின் யாழும் துந்தனாவும் எரிந்துபோனாலும்
மறைந்துகிடக்கும் யாழுண்டு பல, நண்பா.

செவிடுகளின் காதை எட்டவில்லையென்றாலும்
மீட்டொலியும் டங்காரமும் விண்ணைத் தொடும்.
இவ்வுலகின் விளக்குகளும் மெழுகுவர்த்திகளும்
அணைந்துபோகட்டுமே,
சிக்கிமுக்கிக் கல்லும் இரும்பும்
இங்கே இருக்கும் வரை என்ன கவலை?

கீதங்கள் யாவும் கடலின் சருமத்தில் நுரைத்துளிகளே
முத்துக்கள் மிதப்பதில்லை கடலின் சருமத்தில்.
ஆயினுமறிவாய் நுரைத்துளிகளின் வனப்பு
முத்துக்களிடமிருந்து வந்ததென்பதை,

அவனது ஜொலிப்பின் பிரதிபிம்பத்தின் பிரதிபிம்பம் நம் மீது.
கூடல் ஏக்கத்தின் கிளைகளே பாடல்கள் யாவும்
எனினும் வேருக்குக் கிளை என்றும் நிகராகுமோ?

உதடுகள் மூடி இதயத்தின் ஜன்னல் திற
ஆன்மாக்களுடன் பேச அதுதான் வழி.
(தமிழில்: ஆசை)

Friday, April 12, 2019

ஜாலியன்வாலா பாக் சுவடுகள்!

 அட்டன்பரோவின் ‘காந்தி’ படத்தில் இடம்பெற்ற ஜாலியன்வாலா பாக் படுகொலை காட்சி


ராமசந்திர குஹா

(ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நூற்றாண்டையொட்டி 12-04-19 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)  

ஜாலியன்வாலா பாக். அந்த இடம் அமிர்தசரஸ் பொற்கோயிலிலிருந்து அதிகத் தொலைவில் இல்லை. அங்கே, கூடியிருந்த கூட்டத்தைச் சுடும்படி ரெஜினல் டையர் என்ற பெயருடைய பிரிட்டிஷ் பிரிகேடியர்-ஜெனரல் ஒருவர் தனது துருப்புகளுக்கு 1919 ஏப்ரல் 13 அன்றுசரியாக இப்போதிலிருந்து நூறாவது ஆண்டுஆணையிட்டார். கிட்டத்தட்ட ஐநூறு பேர் அந்தத் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்கள். அங்குள்ளவர்களோ ஆயிரம் பேர் அல்லது இன்னும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக நம்புகின்றனர். இது ஒரு கொடூரமான கொலை. ஏனெனில், சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அனைவரும் நிராயுதபாணிகள் என்பதோடு முழுக்க முழுக்க அமைதிவழியிலானவர்கள். டையரின் வெறித்தனத்துக்கு வழிவகுத்ததோடு மட்டுமல்லாமல் அந்த வெறித்தனத்தை அதிகப்படுத்தியது பஞ்சாபின் சர்வாதிகார லெஃப்டினென்ட் கவர்னரான மைக்கேல் ட்வையரின் நடவடிக்கைகள்தான்.

ஜாலியன்வாலா பாகில் நடைபெற்ற படுகொலைக்கு பிரிட்டிஷ் வரலாற்றிலும் சரி, இந்திய தேசியத்தின் வரலாற்றிலும் சரி முக்கியமான இடம் உண்டு. இதுகுறித்து எண்ணிலடங்காத புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. சில புத்தகங்கள் தீவிரத்தன்மையும் ஆய்வுத்தன்மையும் கொண்டவை, மற்றவை உணர்ச்சிகரமாகவும் இலக்கியரீதியிலும் இருப்பவை. இந்த இரண்டு வகையிலும் வரக்கூடிய புத்தகத் தொகுப்பொன்று வெளியாகியிருக்கிறது. ‘விடுதலைக்குச் செய்யப்பட்ட தியாகம்: ஜாலியன்வாலா பாகின் 100 ஆண்டுகள்’ (Martyrdom to Freedom: 100 Years of Jallianwala Bagh) என்பது அத்தொகுப்பின் பெயர். பஞ்சாபின் மிகவும் பழமையானதும் மிகவும் மதிப்புக்குரியதுமானதி ட்ரிப்யூன்பத்திரிகையின் தற்போதைய ஆசிரியர் ராஜேஷ் ராமச்சந்திரன்தான் இப்புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார்.

டையரின் நடவடிக்கைகளின் பின்னணி

புத்தகத்தின் முதல் பகுதி இத்தொகுப்புக்கென்றே (இந்தக் கட்டுரையாசிரியர் உட்பட) ஆய்வறிஞர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கியது. அதில் நடுநாயகமாக விளங்குவது மூத்த வரலாற்றாசிரியரான வி.என்.தத்தாவின் நேர்காணல். நேர்காணல் கண்டவர் அவரது மகளும் நன்கு அறியப்பட்ட அறிஞருமான நோனிகா தத்தா. அமிர்தரசரஸில் படுகொலைக்குச் சில ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர் வி.என்.தத்தா. ஜாலியன்வாலா பாகிலிருந்து பத்து நிமிடத்தில் சென்றுவிடக்கூடிய தொலைவில்தான் அவர் தன் இளமைப் பருவத்தைக் கழித்தார். ஜாலியன்வாலா பாக் என்பது 1919 ஏப்ரல் வாக்கில் உண்மையில் தோட்டமாக (பாக்) அல்ல, குப்பை கொட்டும் இடமாகத்தான் இருந்தது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

உரிய காலத்தில் தத்தா அந்தப் படுகொலையின் மிக முக்கியமான வரலாற்றாசிரியராக உருவெடுத்தார். அந்த நேர்காணலில் அவர் இப்படிச் சொல்கிறார், “டையரின் நடவடிக்கைகளின் பின்னணியை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். முதலாம் உலகப் போரில் பெற்ற வெற்றிக்குப் பிறகு பிரிட்டிஷாரின் தன்னம்பிக்கை உச்சத்துக்கே சென்றது. தங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்ற அளவுக்குத் துணிவுபெற்றிருந்தனர். நினைவில் கொள்ளுங்கள், டெல்லியில் ஒரு கலவரத்தை டையர் ஏற்கெனவே கலைத்திருக்கிறார், வடகிழக்குப் பிராந்தியத்தில் அவர் பெற்றிருந்த பயிற்சியும் அவர் வசமிருந்தது… [ஜாலியன்வாலா பாகில்] டையர் அந்தத் துருப்புகளைக் குறுக்கும் நெடுக்குமாக, நேராக, வலமும் இடமுமாக, கிணற்றுக்கு அருகாக என்றெல்லாம் உத்தரவிட்டுச் செலுத்தினார். தான் என்ன செய்கிறோம் என்பது குறித்த முழுமையான புரிதல் அவருக்கு இருந்தது.”

ஒரு எரிமலையின் வெடிப்பைத் தூண்டிவிட்ட நிகழ்வாகவே இந்தப் படுகொலைச் சம்பவத்தைப் பற்றி ஒருவகையில் சொல்லலாம் என்கிறார் வி.என்.தத்தா. ஏனெனில், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரின் ஆட்சியை இனிமேலும் சட்டபூர்வமானதாகக் கருத முடியாது என்ற எண்ணத்தை ஜாலியன்வாலா பாக் படுகொலை ஏற்படுத்தியது. அந்தப் படுகொலைக்குப் பிறகுதான், ‘இனவெறியைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதையும் டையர்தனமும் ட்வையர்தனமும் எவ்வகையிலாவது போய்த்தொலைந்தாக வேண்டும் என்றும் இந்தியர்கள் உணர்ந்தார்கள். நாகரிகச் சமூகத்தில் அந்த இருவருக்கும் எந்த இடமும் இல்லை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இறுதி வீழ்ச்சிக்கு இப்படுகொலைதான் வித்திட்டது. மாறாக, தேசிய அளவில் காந்தி புதிய தலைவராக உருவெடுத்தார்.” அல்லது, கவிஞராகிய வி.என்.தத்தாவின் தந்தையின் சொற்களில் சொல்வதானால் அந்தப் படுகொலைக்குப் பிறகு இந்தியர்களுக்கு எது நல்லது என்றும் எது கெட்டது என்றும் தெரிந்தது, கூடவே அவர்கள் அதற்கு மேலும் ஆமாம்சாமிகளாக இருக்க மாட்டார்கள்.

இந்நூலின் இரண்டாவது பகுதிதி ட்ரிப்யூன்இதழின் பக்கங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்நாட்களில் அந்த இதழின் ஆசிரியராக இருந்தவர் காளிநாத் ராய் என்ற வங்காளி. அவரைப் பற்றி அவரது சமகாலத்தவர் ஒருவர் சொல்லும்போது, “கம்பளிக் குல்லாய் அணிந்த குள்ளமான மனிதர். அவர் அணிந்திருந்த கம்பளி ஆடையின் பெரும்பாலான கம்பளி நூல் பல ஆண்டுகளுக்கு முன்பே உதிர்ந்துபோய்விட்டது. மீன் குழம்பு, பால் டம்ளர்கள், ரசகுல்லா, பருப்பு போன்றவற்றை மறதியுடன் கையாளும்போது அவரிடம் காணப்பட்ட தடுமாற்றங்களை அப்படியே அந்தக் கம்பளி ஆடை சுமந்திருக்கும். கண்ணாடியின் தடிமனான லென்ஸுக்குப் பின்னால் அவரது கண்கள் ஒளிந்திருக்கும். கண்ணாடியானது இரும்பு வளையத்தைக் கொண்டதாக, அது குறைந்தபட்சம் மூன்று இடங்களில் நூலால் தாங்கிப்பிடிக்கப்பட்டிருப்பதாக இருக்கும். அவர் பேசுவதோ வெகு அரிது.”

உண்மையை வெளிக்கொண்டுவந்ததி ட்ரிபியூன்இதழ்

கூச்ச சுபாவமும் கவர்ந்திழுக்காத தோற்றமும் கொண்டிருந்தாலும்கூடத் துணிவும் நெஞ்சுரமும் மிக்கவராக இருந்தார் காளிநாத் ராய். மிகவும் சிரமமான அந்நாட்களில் அவரது இந்தப் பண்புகளெல்லாம்தி ட்ரிபியூன்இதழை அவர் எப்படியெல்லாம் வழிநடத்தினார் என்பதிலேயே நமக்குத் தெரிகிறது.

அந்த இதழிலிருந்து இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் தலையங்கங்கள், கட்டுரைகள் போன்றவற்றை வாசிக்கும்போது அந்தச் சம்பவங்கள் நம் கண் முன் அப்படியே விரிகின்றன, பல இடங்களில் மிகவும் நெகிழவும் வைக்கின்றன. பஞ்சாபில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் வித்திட்ட ரௌலட் சட்டத்தைப் பற்றிதி ட்ரிப்யூன்இப்படிச் சொல்கிறது: “ஏற்கெனவே கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்த மக்களுடைய உரிமைகளெல்லாம் இச்சட்டத்தின் அமலாக்கத்தால் முற்றிலும் பொருளற்றுப்போகின்றன. கூடவே, ஆள்வோரின் எதேச்சாதிகாரமும் பூரணமாகிறது.” ரௌலட் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை வழிநடத்திய சுதந்திர வேட்கை கொண்ட தேசப்பற்றாளரைப் பற்றி அந்த இதழ் இப்படி எழுதியது: “காந்தியைப் பற்றி கோகலே ஒருமுறை இப்படிச் சொன்னார்: காந்தியிடத்தில் இந்தியர்களின் மனிதநேயம் அதன் பூரணத்தன்மையை அடைந்திருக்கிறது. அப்படிப்பட்ட காந்தி தன் மக்களைப் பற்றி மிகவும் ஆழமாக அறிந்துவைத்திருக்கிறார், இந்தியத் தலைவர்களிலேயே மிகவும் புனிதத்தன்மை கொண்டிருப்பதுடன் மிகவும் பிரபலமான தலைவரும் அவரே…”.

காந்தியைப் பற்றிய மேற்கண்ட குறிப்பு வெளியானது 1919, ஏப்ரல் 6, ஞாயிறு அன்று. அடுத்த ஞாயிற்றுக்கிழமைதான் படுகொலை நிகழ்த்தப்பட்ட தினம். ராணுவச் சட்டம் அமலில் இருந்ததால் அந்தப் படுகொலையைப் பற்றிய செய்திகளும் வெளியாகவில்லை. பத்திரிகைகள் மீதிருந்த தணிக்கை விலக்கப்பட்ட பிறகே, இந்த ஒட்டுமொத்த அநியாயத்தைப் பற்றியும் விசாரிப்பதற்கு ஆங்கிலேய அரசால் அமைக்கப்பட்ட ஹன்ட்டர் கமிஷனின் விசாரணைகளைதி ட்ரிப்யூன்கூர்ந்து கவனித்து தினமும் எழுதியது.

நியாயமான கேள்விகளைக் கேட்கத் தவறியது ஏன்?

கமிஷனின் முன்பு ஜெனரல் டையர் ஆஜரானபோது, அந்த இதழ் தங்கள் பக்கங்களில் நேரடியாக ஐந்து கேள்விகளை டையரிடம் முன்வைத்தது.

1. கூட்டம் கூடுவதைத் தடுப்பதற்கு டையர் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?

2. எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் சுட்டதற்கு என்ன நியாயம் கூறுவார்?

3. துப்பாக்கிச்சூடு தொடங்கியவுடனே கூட்டம் கலைந்தோட ஆரம்பித்தும்கூடத் துப்பாக்கிச்சூட்டை நிறுத்தாததன் காரணம் என்ன?

4. தோட்டாக்கள் தீரும் நிலையிலும் ஏற்கெனவே ஐநூறு பேர் கொல்லப்பட்ட நிலையிலும்கூட நிறுத்தாதது ஏன்?

5. காயப்பட்டவர்களை நிர்க்கதியாக விட்டுச்சென்றது ஏன்?

ஆனால், இதுபோன்ற நேரடியான தொனியில் இதுபோன்ற கேள்விகளை டையரிடம் ஹன்ட்டர் கமிஷன் முன்வைக்காமல் போனதுதான் துயரம்.

இறுதியில், ‘அமிர்தசரஸின் கசாப்புக்காரர்வெறுமனே பணிநீக்கம் செய்யப்படுகிறார். இதைப் பற்றிச் சொல்லும்போது தண்டனைபோதாதென்று அப்பட்டமாகத் தெரிகிறதுஎன்றுதி ட்ரிப்யூன்எழுதியது. இதற்கிடையே, டையரின் கொடூரமான மேலதிகாரியான மைக்கேல் ட்வையர் சிறு தண்டனைகூட இன்றித் தப்புகிறார். ஆகவே, ‘கண்துடைப்பு ஆவணம்என்று ஹன்ட்டர் அறிக்கை குறித்து காளிநாத் ராய் குறிப்பிட்டதில் வியப்பொன்றும் இல்லை.

இப்புத்தகத்தில் ஜாலியன்வாலா பாக் நினைவிடம் பற்றிய வேறு சில முக்கியமான தகவல்களும் கிடைக்கின்றன. தியாகிகளின் ரத்தம் சிந்தப்பட்டதால் புனிதத்துவம் பெற்ற மண்ணைத் தாங்கிய நிலத்தை இந்திய தேசிய காங்கிரஸ் வாங்கி, அப்போதுதான் உருவாகிக்கொண்டிருக்கும் புதிய தேசத்தின் சொத்தாக மாற்றியது. இந்த நினைவிடத்துக்காக நிதி திரட்டியவர்களில் முக்கியப் பங்கு வகித்தவர்கள்: காந்தி, டாக்டர் சைஃபுதீன் கிச்லூ, பண்டிட் மதன்மோகன் மாளவியா, சுவாமி ஷ்ரத்தானந்தா.

ஒற்றுமையின் தேசியச் சின்னம்

இன்று விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வைக்கப்படும் நினைவிடங்கள் எண்ணிலடங்காது; தேர்தல் நெருங்கும் சமயத்திலெல்லாம் பேராசை கொண்ட அரசியல்வாதிகளால் அப்படிப்பட்ட நினைவிடங்கள் திறந்துவைக்கப்படுகின்றன; அவற்றுக்கான நிதியும் தனியார் நிறுவனங்களிடமிருந்தோ பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்தோ வலுக்கட்டாயமாகப் பெறப்படுகிறது. ஆனால், ஜாலியன்வாலா பாக் நினைவிடம்தான் இந்திய வரலாற்றில் மிகவும் ஜனநாயகபூர்வமாக நிதி திரட்டப்பட்டு முதன்முதலில் கட்டப்பட்ட நினைவிடம். அந்த நினைவிடத்துக்கான நிதியானது பஞ்சாபிலும் இந்தியா முழுவதிலும் உள்ள மக்களிடமிருந்தும் திரட்டப்பட்டது. லூதியானாவைச் சேர்ந்த மக்கள் ரூ.7,000; வார்தா மக்கள் ரூ. 7,500; பம்பாய் மக்கள் ரூ 20,000; கல்கத்தா மக்கள் ரூ.26,000 என்று அள்ளியள்ளிக் கொடுத்தார்கள். (இந்தத் தொகையெல்லாம் அன்று மிகவும் அதிகம். மேலும், இன்றைய பணமதிப்பைவிட அன்றைய பணமதிப்பு மிகவும் அதிகம் என்பதையும் கணக்கில் கொண்டு பார்க்க வேண்டும்).

தனதுயங் இந்தியாஇதழில் இந்த நிதித்திரட்டலைப் பற்றி எழுதும்போது காந்தி இப்படிக் கூறுகிறார், ‘இறந்துபோன அப்பாவிகளைப் பற்றிய நினைவுதான் புனிதமான அறக்கட்டளையாகக் கருதப்பட வேண்டியது. மேலும், உயிர் பிழைத்த உறவினர்கள் தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காகத் தேசத்திடம் கேட்கும் உரிமையும் பெற வேண்டும். இந்த நினைவிடத்தின் முக்கியமான அர்த்தம் இதுதான்.’

மேலும், அவர் எழுதினார்: ‘முஸ்லிமின் ரத்தம் இந்துவின் ரத்தத்தோடு கலந்துவிடவில்லையா? சீக்கியரின் ரத்தம் சனாதனியின் ரத்தத்துடனும் சமாஜத்தினரின் ரத்தத்துடனும் கலக்கவில்லையா? இந்த நினைவிடமானது இந்து-முஸ்லிம் ஒற்றுமையை அடைவதற்கான நேர்மையான, நீடித்த முயற்சியின் தேசியச் சின்னமாக இருக்கட்டும்.’

இப்படி எல்லோரையும் ஒருங்கிணைக்கக்கூடிய, பன்மைத்துவம்கொண்டதாக காந்தி எதிர்நோக்கிய பேருணர்ச்சியானது தேசப் பிரிவினையின்போது பஞ்சாபில் சுக்குநூறாக உடைத்து நொறுக்கப்பட்டது. அப்படி உடைத்து நொறுக்கப்பட்டதை, ‘தி ட்ரிப்யூன்இதழின் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் மீட்டுருவாக்க முயன்றுகொண்டிருக்கிறோம்போல!
-தமிழில் : ஆசை, நன்றி: ‘இந்து தமிழ்’