Thursday, December 14, 2017

சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’: முதல் மனப் பதிவுகள்


ஆசை

சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ (யாவரும் பதிப்பக வெளியீடு, 2017) சிறுகதைத் தொகுப்பைப் பற்றிய என் முதல் மனப்பதிவுகளை, அது வெளியான சூட்டுடன், எழுதுகிறேன்.

நிறைகள்:
  1. சுனிலுக்குத் தங்கு தடையில்லாமல் எழுத வருகிறது. அலுப்பூட்டவில்லை. முதல் தொகுப்பு எழுத்தாளர் போன்று தெரியவில்லை.
  2. தான் நினைத்ததைத் தெளிவாகச் சொல்லத் தெரிகிறது சுனிலுக்கு. அவருடைய துறை சார்ந்த அறிவும் பல்வேறு ஈடுபாடுகளும் கதைகளுக்குக் கைகொடுக்கின்றன.
  3. ஒரே மாதிரியான கதைகளை எழுதாமல் வகைமை ரீதியாகவும் பொருள்ரீதியாகவும் மாறுபடும் வகைகளில் எழுதியிருக்கிறார். காந்தி பற்றிய ஆரோகணம் கதை, தொன்மத்தைப் பற்றிய ‘குருதிச் சோறு’ கதை, பெரும்பாலும் உரையாடல் வடிவில் அமைந்த ஜார்ஜ் ஆர்வெலின் பாத்திரத்தைச் சந்திப்பது குறித்த ‘2016’ கதை, அறிவியல் புனைகதையான ‘திமிங்கிலம்’ கதை, அதிநவீனச் செயலிகளினதும் நுகர்வோரை வேட்டையாடுவதுமான நவீன உலகில் எளிய மனித மனம் சிக்கிக்கொள்வதைப் பற்றிய ‘பேசும் பூனை’ கதை, ராஜா காலத்து மாயயதார்த்த உருவக பாணி கதையான ‘கூண்டு’, யதார்த்த பாணியிலான ‘பொன் முகத்தை…’ கதை என்று தன் முதல் தொகுப்பின் 10 கதைகளுக்குள் சற்று வேறுவேறு மாதிரி எழுதிப் பார்த்திருக்கிறார்.
  4. ப்ளூவேல்விளையாட்டு போன்ற அபாயமான செயலிகள், வெறுமை ஊடுருவியிருக்கும் மனித மனதை எப்படி ஆக்கிரமித்திருக்கின்றன என்பதை மட்டுமல்லாமல்  நுகர்வு கலாச்சாரத்தின் வணிக உத்திகள் தொழில்நுட்பத்தின் மூலம் எப்படி நம்மை வேட்டையாடுகின்றன என்பதையும் உணர்த்தியிருப்பதன் மூலம் ‘பேசும் பூனை’ முக்கியத்துவம் பெறுகிறது. முடிவு சற்று சாதாரணமாக இருப்பது போல் தோன்றுகிறது.
  5. ‘பொன் முகத்தைப் பார்ப்பதற்கும்’ கதை சற்று நழுவினாலும் சுந்தர ராமசாமியின் ‘விகாசம்’ கதையைப் போன்று ஆகியிருந்திருக்கக் கூடும். நல்லவேளை, காவிய சோகமாக ஆக்காமல் பகடியாக முடித்திருக்கிறார் சுனில்.
  6. ‘அம்புப் படுக்கை’யில் கதையில் நாடியைப் பிடிக்கும்போது வரும் உணர்வுகள், படிமங்கள் அழகாக இருக்கின்றன. காலத்தில் இடத்தையும் இடத்தில் காலத்தையும் கட்டியெழுப்பும் புனைவு அந்த இடத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
  7. ‘குருதிச் சோறு’ கதை இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கதை. ஒரு நிகழ்காலம், அதற்கு வித்திட்ட கடந்த காலம், கடந்த காலமானது பிராமணியத் தொன்மமாக்கப்படுதல் என்று நீளும் சிறுகதை. ஒரு நாட்டார் தொன்மமாகியிருக்க வேண்டிய பாலாயி அவளால் பிராமணக் குடும்பம் காப்பாற்றப்பட்டதால் பல காலங்களுக்குப் பிறகு பிராமணப் பெண்ணாகக் கட்டமைக்கப்பட்டு பிராமணியத் தொன்மமாக ஆக்கப்படுகிறாள். இதை அவ்வளவு விரிவாகக் கொடுத்திருக்கத் தேவையில்லை. ஆங்காங்கே வரும் குறிப்புகளாலேயே உணர்ந்துகொள்ள முடிகிறது. கதையில் வரும் மருலாளியைச் சுற்றிலும் உள்ள மவுனமும் புதிரும்தான் கதையை மேலே உயர்த்துகின்றன. மருலாளி யார் என்பதை ஒருவாறு ஊகிக்க முடிவது வாசகருக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியது.


குறைகள்
  1. மிகவும் தெளிவாக இருக்கிறார் சுனில். அதனால் அவருடைய கதைகள் கச்சிதமான பாதையில் நடந்துசெல்கின்றன. வழிதவறலும், அதன் மூலம் நிகழச் சாத்தியமான அற்புதங்களும் இல்லாமல் போகின்றன. தனக்குச் சாத்தியமானதையே செய்துகொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. இது முதல் தொகுப்புதான் என்பதால் இது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அடுத்தடுத்த தொகுப்புகளில் சுனில் இன்னும் மேலெழுந்து பறக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஏனெனில், மொழி, கதைசொல்லல் எல்லாம் இயல்பாக வாய்த்திருப்பதால் அவற்றையெல்லாம் கொண்டு அடுத்த கட்டப் பாய்ச்சலை நிகழ்த்துவதற்கான சாத்தியமும் வெகு இயல்பாகக் காத்திருக்கிறது. அதை சுனில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக் கூடாது.   
  2. தூயனின் தொகுப்புக்கு நான் முன்வைத்த விமர்சனத்தை சுனிலுக்கும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. ஆங்காங்கே ஜெயமோகன் தெரிகிறார். ஆரம்ப கால எழுத்துகளில் பெரும்பாலான படைப்பாளிகளின் படைப்புகளில் அவரவர் முன்னோடிகளின் தாக்கம் இயல்பாகவே இருக்கும். ஆகவே, அதைப் பற்றிப் பெரிதும் கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் அடுத்தடுத்த படைப்புகளில் அதை உதற வேண்டியது முக்கியம். இந்த விஷயத்தை சுனில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
  3. கதைகள் சுவாரசியமாக இருந்தாலும் புதுமை உணர்வு சற்றே குறைபடுவதுபோல் தோன்றுகிறது. இது முதல் மனப் பதிவுதான், அடுத்தடுத்த வாசிப்புகளில் மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.


சுனில் மிகுந்த நம்பிக்கையை ஊட்டுகிறார். தன் சக இளம் எழுத்தாளர்களைக் குறித்தும் தொடர்ந்து எழுதுகிறார். (என் போன்ற வருங்கால எழுத்தாளர்களையும் பற்றி எழுதுவார்!). ஆகவே, சுனிலின் வருங்கால இலக்கியச் செயல்பாடு என்பது தன்னையும் புதுக்கிக்கொண்டு தன் சகாக்களுடன் சேர்ந்து வளர்வதாக இருக்கும் என்பதன் கீற்று இப்போதே வெளிப்படுகிறது. படைப்பில் மேலே மேலே சென்றுகொண்டிருக்க சுனிலுக்கு வாழ்த்துத்  தெரிவித்துக்கொள்கிறேன்.  

Monday, December 11, 2017

பாரதியும் சூரியனைச் சுட்டிக்காட்டிய மல்பெரியும்


ஆசை

(‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்கத்தில் பாரதி நினைவு வாரத்தையொட்டி 12.09-2015 அன்று வெளியான கட்டுரை)

பாரதியின் பாடல்களைப் புரட்டிக்கொண்டுவரும்போது ‘இந்த ஆள் எதையோ இடைவிடாது ஏக்கத்துடன் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்’ என்ற உணர்வு ஏற்படுகிறது. விநாயகர் அகவலில் ஆரம்பித்து ‘மனதில் உறுதி வேண்டும்’ வரை எத்தனையோ ‘வேண்டும்’ பாடல்கள். எத்தனை கனவுகள், எத்தனை தவிப்புகள்! ஆனால், இந்தச் சமூகம் அவரது ‘வேண்டும்’ வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கவே இல்லையே. அவரை ‘சீட்டுக்கவி’ எழுத வைக்கிறது. அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாட வைக்கிறது. அவரது வேண்டுகோளுக்கு அவர் வேண்டும் ‘பராசக்தி’யும் செவிசாய்க்கவில்லை. ஒருவேளை இவ்வளவு அழகான வேண்டுகோள்களைக் கேட்கும் வாய்ப்பை இழந்துவிடுவதைப் பற்றிய அச்சத்தில்தான் ‘பராசக்தி’ பாரதியின் ஆசைகளை நிறைவேற்றவில்லையோ?

‘ஒளியும் இருளும்’ என்ற கவிதை பாரதியின் மிகச் சிறந்த கவிதைகளுள் ஒன்று. காதல் தவிர்த்து அவர் எழுதிப் பிரபலமான கவிதைகளெல்லாம் எழுச்சி நிரம்பியவை. வேண்டுகோள் விடுத்தால்கூட அதில் ஒரு கம்பீரம், அதட்டல் இருக்கும், ‘இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ’ என்பதுபோல. ஆனால், இருள் நிரம்பிய நெஞ்சமொன்றின் குமுறலாக இந்தப் பாடல் வெளிப்பட்டிருக்கும்.
‘வான மெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலு மாங்கே
தரையின் மீதுந் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள்மீதும் பரிதியின் சோதி;
மான வன்ற னுளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!’

சூரியனின் வெளிச்சம் எங்கு பார்த்தாலும் வந்து விழுகிறது. தன் மனம் மட்டும் இருளில் புழுங்குவது ஏன் என்று கேட்கிறார். அமைதியான தொனியில் தன் வேதனையைச் சொல்ல ஆரம்பிக்கும் பாரதியை அவரது வழக்கமான வேகம் வந்து ஆட்கொண்டுவிடுகிறது. சோதியின் பாய்ச்சலை, அழகை சன்னத நிலையில் பாடுகிறார்.
'சோதி யென்னுங் கரையற்ற வெள்ளம்,
தோன்றி யெங்குந் திரைகொண்டு பாய,
சோதி யென்னும் பெருங்கடல், சோதிச்
சூறை, மாசறு சோதி யனந்தம்,
சோதி, யென்னு நிறைவிஃ துலகைச்
சூழ்ந்து நிற்ப, ஒருதனி நெஞ்சம்
சோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே!'

சோதியைக் கரையெற்ற வெள்ளம் என்று சொல்லும் பாங்கு என்ன! சோதிச்சூறை, சோதியனந்தம் என்று உளறும் கவிப்பித்துதான் என்ன! இந்தப் பகுதியின் முடிவில் தனது இருள் பற்றி அவருக்கு நினைவு வந்துவிட ஏக்கம் மறுபடியும் வந்து சேர்ந்துகொள்கிறது.

‘டேஸ்ட் ஆர் செர்ரி’ என்ற ஈரானியத் திரைப்படத்தில் ஒரு காட்சி இங்கு நினைவுக்கு வருகிறது. காரில் வரும் ஒருவன் தனது தற்கொலைக்கு உதவுமாறு ஒரு பெரியவரிடம் கேட்டுக்கொண்டு அவரை காரில் அழைத்துச்செல்கிறான். அந்தப் பெரியவர் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார். அவருக்குத் திருமணம் ஆன சில காலம் கழித்து வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்வதற்காகச் செல்கிறார். மல்பெரி மரமொன்றில் தூக்கு மாட்டிக்கொள்ள முயல்கிறார். அவர் எறியும் கயிறு கிளையில் மாட்டிக்கொள்ளாமல் கீழே விழுகிறது. மரத்தின் மீது ஏறி, கிளையில் இறுக்கமாக முடிச்சுப்போடும்போது அவரது கையில் மிருதுவான ஏதோ ஒன்று படுகிறது. என்னவென்று பார்த்தால் நன்றாகப் பழுத்த மல்பெரி பழம். சாறு நிறைந்ததாகவும் சுவையாகவும் இருக்கிறது. இன்னொன்று, இன்னொன்று என்று சாப்பிடுகிறார். சாப்பிட்டுவிட்டு நிமிர்ந்து பார்த்தால் மலைக்கு மேலிருந்து சூரியன் எழுந்துகொண்டிருக்கிறது. ‘என்ன அழகான சூரியன், என்ன அழகான காட்சி, என்ன பசுமையான நிலப்பரப்பு’ என்று பரவசத்துடன் விவரிக்கிறார். அப்புறம் மல்பெரிகளைப் பறித்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறார். அவர் மனைவி உறங்கிக்கொண்டிருக்கிறார். எழுந்த பிறகு அவரும் மல்பெரியை சந்தோஷமாகச் சாப்பிடுகிறார். அதற்குப் பிறகு அவருக்கு வாழ்க்கை முன்பைவிட லேசாக ஆகிறது.

பாரதியின் இந்தக் கவிதையைப் பார்க்கும்போதும் அப்படி ஒரு தற்கொலை மனநிலையில் மரத்தின் மேல் ஏறியவர் போல்தான் தோன்றுகிறார். மரத்தின் மீது ஏறியிருக்கும் கணத்தில்கூட பாரதியின் கண் முன்னே திரைகொண்டு பாயும் சோதி விரிகிறது. அதைப் பார்த்ததும் ஏக்கமும் கரைமீறுகிறது. அதற்கு இடையிலும் சூரிய ஒளியின் வெள்ளத்தை அள்ளிக் குடித்து அதைப் பற்றிப் பாடாமல் இருக்க அவரால் முடியவில்லை. அவருடைய மல்பெரி ‘ஒளி’தான். அந்த ஒளியை அவர் கண் முன்னே கண்டுவிட்டார். ஆனால், தன் அகத்தில் அது வந்துசேரவில்லையே என்கிறார்.
இந்தப் பாடலின் தொடர்ச்சியாக ‘ஞாயிறு-ஸூர்ய ஸ்துதி’ என்ற கவிதையை நாம் நமது வசதிக்காக ஒட்டிவைத்துப் புரிந்துகொள்ளலாம். சூரியனை நோக்கி இப்படிப் பாடுகிறார்:
‘… … …
உடல் பரந்த கடலும்தன் உள்ளே
ஒவ்வோர் நுண்துளியும் விழியாகச்
சுடரும், நின்தன் வடிவை உள்கொண்டே
சுருதி பாடிப் புகழ்கின்றது இங்கே.
என்தன் உள்ளம் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்அடிக் கீழே
நின்று தன்அகத்து ஒவ்வோர் அணுவும்
நிந்தன் ஜோதி நிறைந்தது ஆகி
நன்று வாழ்ந்திடச் செய்குவை ஐயா!’
(எளிமை கருதி சந்தி பிரிக்கப்பட்டிருக்கிறது)

கடல் தனது ஒவ்வோர் அணுவிலும் சூரியனை உள்வாங்கிச் சுடர்வதுபோலே தனது ஒவ்வோர் அணுவும் சூரியனின் ஜோதியை உள்வாங்கிச் சுடர்விட வேண்டும் என்கிறார். முதல் கவிதையின் விரக்தி மனப்பான்மை இந்தக் கவிதையில் மட்டுப்பட்டுத் தெரிகிறது.

இப்படியாகத் தன்னுள்ளே நிலைபெறும் சுடர் ஒன்றை பாரதி தவிப்புடன் தேடிக்கொண்டிருந்திருக்கிறார். பாரதிக்கு மல்பெரி கிடைத்ததா இல்லையா என்பது பற்றி நமக்குத் தெரியாது. ஆனால், நம்மில் பலருக்குப் பல்வேறு தருணங்களில் சூரியனைச் சுட்டிய மல்பெரியாக பாரதியின் கவிதைகள் அமைந்திருப்பது நம் பெரும் பேறு!
 - நன்றி: ‘தி இந்து’
 -‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: 

பாரதியும் சூரியனைச் சுட்டிக்காட்டிய மல்பெரியும்

Monday, December 4, 2017

ஒமர் கய்யாம்: சுதந்திரச் சிந்தனையின் குரல்



ஆசை

(‘தி இந்து’ தமிழ் நாளிதழில் மூன்று ஆண்டுகளுக்கு முன், ஒமர் கய்யாம் நினைவு நாளின்போது வெளியான என் கட்டுரை)

ஒமர் கய்யாமை நம்முடைய காலத்தவராக ஆக்குவது எது? இரண்டு உலகப் போர்களின் பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை நாம். உலகப் போர்களை விட பேராபத்துக்களை வெவ்வேறு வடிவில் தினமும் எதிர்கொள்ளும் நமக்கு, இறுதியில் இந்த வாழ்க்கை என்பதுதான் என்ன என்று பெரும் கேள்வி எழுகிறது. இதே போன்ற ஒரு கேள்விதான் முதல் உலகப் போரின்போதும் பலருக்கும் எழுந்தது. படித்த அமெரிக்கப் போர்வீரர்கள் பலரும், தவிர்க்கவே முடியாமல் போன அந்தப் போரில், மேற்குப் பிராந்தியம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தபோது அடிக்கடி உச்சரித்த வரிகள் இவை:

ஒன்றாக இணைத்துச் செய்யப்பட்ட கோப்பையின் பாகங்கள் அதை உடைப்பது குற்றம், குடிகாரனைப் பொறுத்தவரை; எத்தனையோ நுட்பமான தலைகள், கால்கள், கைகள்,
யாருடைய அன்பால் இணைக்கப் பட்டன, யாருடைய வெறுப்பால்
                  சிதைக்கப்பட்டன அவை?

போர் முனையில் மனித உயிர் துச்சமான நிலையில், மனித உடல்கள் சிதறிப்போய், உறுப்புகளெல்லாம் ஆங்காங்கே கிடக்கும் சூழலில், வாழ்க்கையின் பொருள் கேள்விக்குள்ளான நிலையில், கய்யாமின் வரிகள் அவர்களுக்குத் துணை வந்ததில் என்ன வியப்பு?

ஒமர் கய்யாமின் வாழ்க்கை

1941 வரை ஒமர் கய்யாம் பிறந்த தேதி உறுதிப் படுத்தப்படாமலே இருந்தது. சுவாமி கோவிந்த தீர்த்தர் தனது ‘தி நெக்டார் ஆஃப் கிரேஸ்: ஒமர் கய்யாம்’ஸ் லைஃப் அண்டு வொர்க்ஸ்’ என்ற நூலில் கய்யாம் பிறந்த தேதியாக கி.பி. 1048-ம் ஆண்டின் மே மாதத்தின் 18-ம் நாளைக் குறிப்பிடுகிறார். இந்தக் கணிப்பு ஒமர் கய்யாமின் ஜாதகத்தை வைத்துச் செய்யப்பட்டது. பிற்பாடு, அறிவியல் துறைகளுக்கான சோவியத் மன்றத்தின் வானியல் துறை இந்தக் கணிப்பு சரியானதே என்று உறுதிசெய்தது. அதேபோல், ஒமர் கய்யாம் இறந்த தேதியும் கி.பி. 1131, டிசம்பர்-4, என்று வரையறை செய்யப்பட்டிருக்கிறது.

முந்தைய பாரசீகத்தின் வடகிழக்குப் பகுதியான குராசானின் தலைநகராக விளங்கிய நிஷாபூரில் ஒமர் கய்யாம் பிறந்தார். கய்யாம் தனது காலத்தில் மிகுந்த புகழ் பெற்ற வராக இருந்தார். ஆனால், கவிதைகளுக்காக அல்ல. தத்துவம், வானவியல், கணிதம் அதிலும் குறிப்பாக, இயற்கணிதம் போன்ற துறைகளுக்காக. கணிதத்தில் அவருடைய பங்களிப்பின் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது. செல்ஜுக் மன்னனுக்காக வடிவமைக்கப்பட்ட நாட்காட்டியின் உருவாக்கத்தில் பங்குபெற்ற வானியலாளர்களுள் கய்யாமும் ஒருவர். மொத்தத்தில், கய்யாம் தன் காலத்தில் ஒரு ‘தனிமனிதப் பல்கலைக்கழகமாக’ இருந்தார் என்று தெரிகிறது. ஆனால், ஒரு கவிஞராக கய்யாமின் புகழ் தெரியவருவதற்கு ஃபிட்ஜெரால்டு (1809 -1883) என்ற ஆங்கில மொழிபெயர்ப்பாளர் வர வேண்டி யிருந்ததுதான் விசித்திரம்.

ஒமர் கய்யாம் மரபு

சில அறிஞர்கள் ஒமர் கய்யாமுடையது என்று 1200-லிருந்து 1400 ருபாயிகள்வரை (ருபாயி - ஒரு வகை நான்கு வரிக் கவிதை) அடையாளமிட்டுக் கூறுகிறார்கள். வேறு சில அறிஞர்கள் ஒன்றிரண்டு கவிதைகளையும், இன்னும் சிலர் நூற்றுச் சொச்சம் கவிதைகளையும் மட்டும் கய்யாமுடையதாகக் கருதுகிறார்கள். நிறைய இடைச்செருகல்கள் இருப்பதால் தெளிவான முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இந்தப் பாடல்களை கய்யாம் எழுதவில்லை என்றே கொண்டாலும் கய்யாமின் மரபைப் பின்பற்றிப் பலர் எழுதியதாகவும் கொள்ளலாம். கய்யாமின் மரபு என்பதால், அதற்கு அவருடைய முகத்தைக் கொடுப்பது ஒன்றும் தவறில்லை.

ஒமர் கய்யாமின் மரபு உண்மையிலேயே ஒரு புகலிடம் தான். தன் காலத்தின் அடிப்படைவாதம், போர்கள், சம்பிரதாயம், கபடம் எல்லாவற்றுக்கும் எதிராகக் குரல்கொடுக்க நினைத்தவர்களுக்கு, புகழ்பெற்ற கய்யாமின் பேரில் ஒளிந்துகொள்வது பாதுகாப்பைக் கொடுத்திருக்கலாம் என்று ஒமர் கய்யாம் ஆய்வாளர் மெஹ்தி அமின்ரஜாவி கருதுகிறார். இன்றைய வாசகர் ஒருவர், கய்யாமின் கவிதைகளைப் படிக்கும்போது இஸ்லாம் இதையெல்லாம் எப்படி அனுமதித்தது என்ற கேள்வி எழக்கூடும். இஸ்லாமுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரங்களின் காரணமாக எழும் கேள்வி அது. இஸ்லாம் எல்லாப் போக்குகளையும் சகிப்புத்தன்மையுடன் அணுகக்கூடியது என்பதற்கு ஓர் உதாரணம்தான் ஒமர் கய்யாம் என்ற சுதந்திரச் சிந்தனையாளர்.

ஒமர் கய்யாமுக்கும் முந்தைய நூற்றாண்டிலிருந்து 15-ம் நூற்றாண்டு வரை பாரசீகமும் அதை ஒட்டிய பிற பகுதிகளும் உலகின் தலைசிறந்த அறிவுக் கலாச்சாரத்தை, பண்பாட்டு வளத்தைக் கொண்டிருந்தன. சகிப்புத்தன்மை இல்லாத ஒரு சமூகத்தில், இவ்வளவு கலாச்சார மேம்பாடு நடந்திருக்குமா? அடிப்படைவாதிகள் எல்லாக் காலத்திலும் எல்லா நாடுகளிலும் எல்லா மதங்களிலும் இருக்கத்தான் செய்வார்கள். அதேபோல், அவர்களுக்கு எதிரான போக்கும் எங்கும் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட ஒரு போக்குதான் கய்யாம்.

ஒமர் கய்யாமின் மதம்

எல்லாப் போக்குகளிலும் உள்ள அடிப்படைவாதிகள் ஒமர் கய்யாமை வெறுத்ததற்கு, வெறுப்பதற்குக் காரணம், அவர் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குவதே. வாழ்க்கை என்பது எல்லாக் கோட்பாடுகளையும் பிரதி களையும் மீறி நிகழக்கூடியது என்பதை அறிந்தவர் கய்யாம். ‘நிலவைச் சுட்டிக்காட்டும் விரலையே நிலவாகக் கருதிவிடக் கூடாது’ என்று சொல்லும் ஜென் பழமொழிக்கு மிகவும் நெருக்கமானவை கய்யாமின் இந்த வரிகள்:

குடிப்பதும் களித்திருப்பதும்தான் வாழ்க்கைக்கான எனது
                இலக்கணம்,
மதநம்பிக்கை, நம்பிக்கையின்மை இரண்டிலிருந்தும்
                விடுபட்டிருப்பதுதான் எனது மதம்.
விதியென்ற மணப்பெண்ணிடம் கேட்டேன் அவளின் பரிசப் பணம்
                 என்னவென்று
‘மகிழ்ச்சியான உன் இதயம்தான்’, என்றாள் அவள்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, ‘மதநம்பிக்கை, நம்பிக்கையின்மை இரண்டிலிருந்தும் விடுபட்டிருப்பது’ என்ற வரி, முரண்களை வைத்துச் செய்யப்பட்ட வார்த்தை விளையாட்டு போன்று தோன்றும். உண்மையில் அப்படியல்ல. ஒரு நம்பிக்கையின் மீது தீவிரப் பற்றுள்ளவர் தனது நம்பிக்கையைத் தவிர, வேறு எதையும் காணத் தவறுகிறார்; நம்பிக்கையின்மையில் தீவிரப் பற்றுள்ளவரும் தனது நம்பிக்கையின்மையைத் தவிர வேறு எதையும் காணத் தவறுகிறார். இந்த இரண்டுமே நம் கண்களை மறைப்பவை. இந்த இரண்டிலிருந்தும் விடுபட்ட ஒருவர்தான் கய்யாம்.

பாரசீகச் சித்தர்

ஒரு வகையில், நம் தமிழ்நாட்டுச் சித்தர்கள் மரபுக்கு நெருங்கியவர் கய்யாம். இந்தப் பாடலைப் பாருங்கள்:

கனிவோடு விளிம்பில் அழுத்தி நூறுநூறு முத்தங்கள் கொடுத்து,
படைப்பு-ஞானம் வனையும் பாண்டம் இது;
இப்படியொரு அருமையான பாண்டத்தை உருவாக்கி,
பிறகு மண்ணில் வீசுகிறான் பிரபஞ்சக் குயவன் மீண்டும் அதனை.

‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ பாடல் நினைவுக்கு வருகிறதா? ஒரே ஒரு வித்தியாசம், சித்தர் பாடலில் ஆண்டி பாண்டத்தை உடைக்கிறார். கய்யாமின் பாடலில் உடைப்பது குயவன் (அதாவது படைத்தவன்).

மனிதர்கள் மட்டுமல்ல, இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும், உண்மையில் இந்தப் பிரபஞ்சம்கூட ஸ்திரமானது அல்ல என்கிறார் கய்யாம்:

மனிதனின் இதயத்திலுள்ள நன்மையும் தீமையும்,
நமது அதிர்ஷ்டமும் விதியுமான மகிழ்ச்சியும் துக்கமும்,
வானகச் சக்கரத்தைப் பொறுப்பாக்காதே அவற்றுக்கு,
               பார்க்கப்போனால்,
உன்னைவிட ஆயிரம் மடங்கு சக்தியற்றது அந்தச் சக்கரம்.

இதுபோன்ற பாடல்கள் மூலமாகக் கடவுளின் இருப்பை கய்யாம் மறுப்பதில்லை. மாறாக, மனிதர்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தாங்களே பொறுப்பாக வேண்டும் என்று சொல்கிறார். கய்யாமை மேலோட்டமாகப் படிக்கும் பலரும், அவர் ஒரு அவநம்பிக்கைவாதி என்ற முடிவுக்கு வரக்கூடும். அது உண்மையல்ல. வாழ்க்கையின் நிலையாமையைச் சொல்லி, இந்தக் கணத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்றவர் அவர். இந்தக் கணத்தை வாழாமல் எந்தக் கணத்தை நீங்கள் வாழ முடியும் என்று கேள்வி கேட்டவர் அவர். கடவுளையும் வாழ்க்கையின் பொருளையும் இங்கேதான் தேட வேண்டுமே தவிர, நிச்சயமற்ற மறு உலகில் அல்ல என்று வலியுறுத்துகிறார்:

வாழ்வின் பொருள் இதயத்துக்கு எட்டுமெனில்,
இறப்பின்போது கடவுள் என்ற ரகசியமும் அறியக்கூடும் அது;
இன்று உன்வசம் நீ இருக்கும்போது நீ அறிந்திருப்பது ஏதுமில்லை,
நாளை உன்னை நீ விட்டுச் செல்லும்போது எதைத்தான்
          அறிந்துகொள்ளப்போகிறாய்?


(இங்கே மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பாடல்களை ஆங்கிலம் வழியாக பேரா. தங்க. ஜெயராமனும் நானும் சேர்ந்து மொழிபெயர்த்திருக்கிறோம்)


தொடர்புடையவை:
ருபாயியத் நூல் குறித்து வெங்கட் சாமிநாதனின் விமர்சனம்: http://writerasai.blogspot.in/2015/10/blog-post_21.html

ருபாயியத் தமிழ் மொழிபெயர்ப்பை வாங்க: http://www.crea.in/publicationsdetails.php?id=18&customer=inr&page=0&category=7

ருபாயியத் தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து சில பக்கங்கள்: http://crea.in/pdf/Rubaiyat.pdf