Monday, July 24, 2017

ஷிவ்குமார் பதல்வி: பஞ்சாபியின் முதல் நவீனக் கவிஞர்


ஆசை
(‘தி இந்து’ தமிழ் நாளிதழில் 23-072017 அன்று, ஷிவ்குமார் பதல்வியின் பிறந்த நாளன்று வெளியான என் கட்டுரை)

சர்ச்சைகளுக்கு நடுவே கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம்உட்தா பஞ்சாப்’. அமித் திரிவேதியின் அற்புதமான இசையமைப்பில் இந்தப் படத்தின் பாடல்களும் பெரு வெற்றி அடைந்தன. குறிப்பாக, ‘இக்கு குடிஎன்ற பாடலைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். பஞ்சாபி மொழியின் நவீனக் கவிதை முன்னோடிகளில் முக்கியமானவரான ஷிவ்குமார் பதல்வியின் (1936 –1973) பிரபலமான கவிதை இது. தற்போதுஉட்தா பஞ்சாப்திரைப்படம் மூலமாக அந்தப் பாடல் மேலும் புகழடைந்திருக்கிறது.

பிரிவினையின் குழந்தை

சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில், தற்போது பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் இருக்கும், சியால்கோட்டில் 1936-ல் பிறந்தவர் ஷிவ்குமார் பதல்வி. தேசப் பிரிவினையால் இந்தியப் பகுதியில் உள்ள பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் பட்டாலா நகரம் நோக்கி அவரது குடும்பம் நகர்ந்தது. இளம் வயதிலேயே பாடல்கள், நாடகம் போன்றவற்றில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. படிப்பை முடித்ததும் கணக்காளர் பணியில் சேர்ந்தாலும் அவரது மனம் கவிதையில்தான் தோய்ந்திருந்தது.

ஷிவ்குமார் பதல்வியின் முதல் தொகுப்பானபீதான் கா பராகா’ (மூடாக்கு நிறைய துயரங்கள்) 1960-ல் வெளியானது. என்றாலும், 1965-ல் வெளியானலூனாஎன்ற தொகுப்புதான் அவரைப் புகழின் உச்சத்துக்குக் கொண்டுசேர்த்தது. அந்தத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருதை 1967-ல் ஷிவ்குமார் பதல்வி பெறும்போது அவருக்கு வயது 31-தான். எனினும் அந்தப் புகழை நீண்ட நாட்கள் அவரால் அனுபவிக்க முடியவில்லை. கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த ஷிவ்குமார் பதல்வி 1973-ல் தனது 37-வது வயதில் மரணமடைந்தார். மருத்துவமனையில் மரணத்தைச் சந்திக்க மாட்டேன் என்று கூறி தன் உறவினர் வீட்டுக்குச் சென்று தங்கி, அங்கேயே உயிர்விட்டார் ஷிவ்குமார்.

இளம் வயதிலேயே மறைந்தாலும் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களால் நவீன பஞ்சாபி இலக்கியத்தில் முக்கியமான இடத்தில் ஷிவ்குமார் வைக்கப்பட்டிருக்கிறார். பஞ்சாபி மொழியின் முதல் நவீனக் கவிஞராக மதிக்கப்படுபவர் அவர். நவீன வாழ்க்கையின் இருத்தலியல் சிக்கல்களைப் பற்றி அவரது கவிதைகள் பலவும் பேசினாலும் அவரது பிரதான பேசுபொருள் காதல். எக்காலத்திலும் பிரதான பேசுபொருள்களில் ஒன்றல்லவா அது!

இக்கு குடிஎன்ற கவிதை நாட்டுப்புறப் பாடல், கஜல், பாப் இசை, சினிமா பாடல் என்று பல்வேறு வடிவங்களில் பாடப்பட்ட சிறப்பைப் பெற்றது. ‘உட்தா பஞ்சாப்படத்தில் அந்தக் கவிதையின் ஒரு பகுதி மட்டுமே பாடலாக்கப்பட்டது. ஷிவ்குமார் பதல்வியின் பிறந்த நாளான இன்று, அவரை நினைவுகூரும் விதத்தில்இக்கு குடிமுழுக் கவிதையின் மொழிபெயர்ப்பு இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது

பெண்ணொருத்தி

அவள் பேர் காதல்

அவளைக் காணவில்லை.

அலங்காரப் பூச்சற்ற அழகு

அழகென்றால் அழகு

அவளைக் காணவில்லை.


விண்ணுலக
அழகு,

மறுவில்லா மரியாள்,

அவள் சிரிப்பு, பூக்களின் உதிர்வு,

கஜல் பாடலே அவள் நடை.

நெகுநெகுவென்று ஊசியிலை மரமாக

இன்னும்

அனலாகாத இளந்தணலாகஆனாலும்

விழி பேசும் மொழி அறிவாள்.


என்றோ
தொலைந்துபோனாள்-

எனினும், நேற்று நடந்ததோ

இன்று நடந்ததோ

இப்போதுதான் நடக்கிறதோ

என்றல்லவா இருக்கிறது!

சற்று முன்தான் அவளிருந்தாள் என்னருகில்

பார்த்தால் காணவில்லை.

என்ன மாயம்? என்ன ஜாலம்?

குழம்பிப்போகிறேன்.


கடந்து
போகும் முகமெல்லாம்

என் கண்கள் துருவித் துருவி

அவளைத் தேடி அலைபாயும்.

மாலை வந்து வீதியில் கவிந்த நேரம்

ஒவ்வொரு மூலைமுடுக்கிலிருந்தும்

எழுந்துவரும் நறுமணம்,

அலைக்கழிப்பும் களைப்பும்

சோர்வும் சேர்ந்துகொள்ளும்;

ஓசையிடும் அந்தத் தனிமையில்

என்னை அரித்துத் தின்றது

அவள் இல்லை என்கிற வெறுமை.


காணாமல்
போனவளைக் காண்கிறேன்

கணமெல்லாம்

நாளெல்லாம்

இந்தக் கூட்டத்திலிருந்து

கதவுகளின் வெள்ளத்திலிருந்து

அவள் என்னைக் கூப்பிடுவாள்

நானும் அவளைக் காண்பேன்

அவளும் என்னைக் காண்பாள்

என்ற எதிர்பார்ப்பிலேயே உழல்கிறேன்.


இந்த
ஓசை வெள்ளத்திலிருந்து

யாரும் அழைக்கவில்லை என்னை,

யாரும் பார்க்கவில்லை என்னை.

பிறகு, ஏன்தானோ-

உள்மனதில், புகைவழியே பார்ப்பதுபோல்

ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு கூட்டத்திலும்

அவளது உருவம் என்னைக் கடந்து செல்வது

அவளோ என் கண்களுக்கு அகப்படவில்லை.


தொலைந்துபோய்
நிற்கிறேன் அவள் முகத்துக்குள்

தொலைந்துபோய் நிற்பேன்

என்றென்றும் அதற்குள்

கரைந்துகொண்டே இருப்பேன் இந்த சோகத்தில்.

உருகிக்கொண்டே இருப்பேன் இந்தத் துயரத்தில்.


இறைஞ்சுகிறேன்
அவளைஎன்மீது ஆணை

இறைஞ்சுகிறேன் அவளைஅவள்மீது ஆணை

இறைஞ்சுகிறேன் அவளை

பார்ப்பவர்மீதெல்லாம் ஆணை

இறைஞ்சுகிறேன் அவளை

இவ்வுலகின்மீது ஆணை

இறைஞ்சுகிறேன் அவளை

ஆண்டவன்மீது ஆணை

எங்கிருந்தாலும்

அவள் இதைப் படித்தாலோ,

அவள் காதில் இது விழுந்தாலோ

அவள் இருந்தாலும் இறந்துகொண்டிருந்தாலும்

வந்தென்னைச் சந்திக்க வேண்டுகிறேன்

உதறித்தள்ளிவிட வேண்டாம்

இந்த ஆத்மாவின் துடிப்பை.


இது
நடக்காதென்றால்

வாழ்வுமில்லை

கவிதையுமில்லை

எனக்கு!


பெண்ணொருத்தி

அவள் பேர் காதல்

அவளைக் காணவில்லை.

- (ஆங்கிலம் வழி மொழிபெயர்ப்பு)

பின்னிணைப்பு:
‘இக்கு குடி’ பாடலின் நான்கு இசை வடிவங்கள்...

‘உட்தா பஞ்சாப்’ திரைப்படத்தில்:
https://www.youtube.com/watch?v=ZbX_nlzv7uU


ஷிவ்குமார் பதல்வியின் குரலில்:
https://www.youtube.com/watch?v=orYbuEW21zQ


ஜக்ஜித் சிங் ஸிர்வியின் குரலில்...
https://www.youtube.com/watch?time_continue=3&v=hP21UFajuvo


ரபி ஷெர்கிலின் குரலில்...
https://www.youtube.com/watch?v=DAgGHe5fHWE

- ஆசைதொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in



Tuesday, July 18, 2017

இப்போது எங்கே போனீர்கள்?


ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் 17-07-2017 அன்று வெளியான எனது கட்டுரையின் சற்றே விரிவான வடிவம்)

ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு காலகட்டத்துக்கென்று பிரத்யேகமான சில நோய்கள் உண்டு. நம் இந்தியச் சமூகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமா! நம் சமூகம் மொழி, இனம், மதம், பிரதேசம், உயிரினங்கள் என்று பன்மைத்தன்மையின் வளம் கொண்டிருப்பதைப் போல சமூகத்தைப் பீடித்திருக்கும் பிரச்சினை நோய்களின் எண்ணிக்கையும் அதிகம். அவற்றில் மிகவும் வித்தியாசமான ஒரு நோய்தான் சமீபத்தில் பரவிவரும்வாட்டபவுட்ரீநோய் (whataboutery). இது உண்மையில் நோய் அல்ல. விசித்திரமான மனநிலையின் பொதுப்போக்கு. ‘ஒரு குற்றச்சாட்டோ கடினமான கேள்வியோ முன்வைக்கப்படும்போது அதற்குப் பதிலாக வேறொரு குற்றச்சாட்டை வைக்கும் அல்லது வேறொரு பிரச்சினையை எழுப்பும் உத்தி அல்லது பழக்கம்என்றுஇந்தச் சொல்லுக்குப் பொருள் வரையறை செய்கிறது ஆக்ஸ்ஃபோர்டு அகராதி. 70-களில் பிறந்த சொல் இது என்றும் அந்த அகராதி சொல்கிறது. ‘வாட்டபவுட்டிஸம்எனும் சொல்லுக்கும் இதே அர்த்தம்தான்

வாட்டபவுட்ரீஎன்ற சொல் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். இந்தச் சொல் உணர்த்தும் செயல் காலம் காலமாக நம்மிடையே இருப்பதுதான். “ஏன்டா தம்பியை அடிச்சே?” என்று உங்கள் மூத்த பையனிடம் கேட்டால், “அவன் மட்டும் அன்னைக்கு எனக்குக் கொடுக்காம ஐஸ்கிரீம் தின்னான். அவனைக் கேட்டீங்களா?” என்று அவன் பதில் சொல்வான் அல்லவா! அதுவும் ஒரு வகைவாட்டபவுட்ரீதான். இந்தப் பழக்கம் மனிதர்கள் அனைவருக்கும் ஆதியிலிருந்து இருந்திருக்க வேண்டும். அதற்கான சொல் ஆங்கிலத்தில் சமீபத்தில்தான் உருவாகியிருக்கிறது. உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழில் இந்தச் சொல்லுக்கு நிகரான பொருள் கொண்ட சொல் ஏதாவது இருக்க வேண்டும். தேடிப்பார்த்தால் கிடைக்கக்கூடும்

எனக்குக் கொடுக்காம அவன் ஐஸ்கிரீம் சாப்பிட்டதை நீங்க கேட்டீங்களா?” என்று சிறு வயதில் கேட்ட பழக்கத்தை பெரியவனாகும்போதும் உங்கள் பையன் கேட்பான் என்றால் சமீபத்தியவாட்டபவுட்ரீசங்கத்தில் அவன் சேர்ந்துவிட்டான் என்று அர்த்தம். குறிப்பிட்ட மதத்தினரோ இனத்தினரோ என்றில்லாமல் அனைத்துத் தரப்பினரையும் இந்தவாட்டபவுட்ரீஆக்கிரமித்திருக்கிறது. அதிலும், ஆக்கிரமிப்பாளர்கள், அடக்குமுறையாளர்கள் என்று கருதப்படும் தரப்புகள் இந்தவாட்டபவுட்ரீயை ஒரு ஆயுதமாகவே தூக்கிச் சுமக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மாட்டுக் கறி தின்பவனேஎன்று சிறுவன் ஜுனைத் ஓடும் ரயிலில் குத்திக் கொல்லப்பட்ட அதே நாளில் காஷ்மீரில் ஒரு மசூதியில் காவலுக்கு வந்த முகம்மது அயூப் பண்டித் என்ற போலீஸ்காரர் அடித்துக் கொல்லப்பட்டார். ஜுனைத் படுகொலையானது இடது சாரிகள், சிறுபான்மையினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதற்குள் முகம்மது அயூப் பண்டித் படுகொலைச் சம்பவம் குறித்த செய்திகள் வெளியாக இந்துத்துவத் தரப்பைச் சேர்ந்தவர்கள் சமூக ஊடகங்களில் கொதித்தெழுந்தார்கள். “இப்போது எங்கே போனீர்கள்?  ‘ப்ரெஸ்ட்டிட்யூட்ஸ் (ஊடகவேசைகள்), சிக்குலர்ஸ் (மதச்சார்பின்மை நோயாளிகள்)” என்றெல்லாம் இடதுசாரிகள்மீதும், சிறுபான்மையினருக்காகக் குரல்கொடுக்கும் ஏனையோர்மீதும் வசைபாடினார்கள். அதாவது முகம்மது அயூப் பண்டித் அடித்துக் கொல்லப்பட்டதைவிட அந்தப் படுகொலைக்கு அவர்களின் எதிர் தரப்பு கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது மட்டுமே முக்கியமாகப் பட்டிருக்கிறது. கோத்ரா ரயில் எரிப்பு, அதைத் தொடர்ந்த குஜராத் இன அழிப்பு ஆகியவற்றுக்குப் பிறகும் இதுபோன்ற இரு துருவ எதிர்வினைகள் ஏராளம்.

இப்படிவாட்டபவுட்என்ற கேள்வியைக் கேட்பவர்களிடம் ஒரு பொதுவான அம்சம் காணப்படுவதுண்டு. அவர்களிடம் தர்க்கரீதியாக விவாதிக்க முடியாது. நீங்கள் ஒரு கேள்வியை முன்வைக்கும்போது அவர்கள் அதற்கு பதிலாக வேறொரு கேள்வியை முன்வைத்துவிடுவார்கள். “இந்தக் கொலையைத் தட்டிக்கேட்காததால் அந்தக் கொலை நியாயமாகிவிட முடியாதுஎன்று சொன்னாலும் அவர்கள் வேறொரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டி அப்போது எங்கே போனார்கள் போலி மதச்சார்பின்மைவாதிகள் என்று கேட்பார்கள். ஜுனைத் படுகொலையைப் பற்றிப் பேசினால் முகம்மது அயூப் பண்டித்தின் படுகொலையை முன்வைப்பார்கள். குஜராத் இன அழிப்பைப் பற்றிப் பேசினால் கோத்ரா ரயில் எரிப்பை எடுத்து முன்வைப்பார்கள். இப்படியே அவுரங்கசீப், பாபர், கோரி முகம்மது என்று நீண்டுகொண்டே போகும். ஆக, ‘வாட்டபவுட்ரீஎன்பது தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல, உணர்வை அடிப்படையாகக் கொண்டது. பாதிப்புக்கு உள்ளாக்குபவர் என்ற பிம்பத்திலிருந்து பாதிக்கப்பட்டவர் என்ற பிம்பத்தைத் தன் மீது சுமத்திக்கொள்வதற்கான கருவிதான் இது. பாதிப்புக்குள்ளானவர் என்ற பிம்பம் ஒருவருக்கு வரலாற்றையும் அரசியலையும் கைப்பற்றுவதற்கு உதவும் முக்கியமான வழிமுறைகளுள் ஒன்று என்பதை மறந்துவிட வேணடம்.

தனிமனிதர்களிடமிருந்து ஊடகங்களுக்கும் அரசுகளுக்கும் இந்தவாட்டபவுட்ரீநோய் பரவுவது பெரும் ஆபத்து. சமீபத்திய மேற்கு வங்கக் கலவரத்தில் ஒரு இந்து கொல்லப்பட்டார். அதையொட்டி ஒரு ஆங்கில ஊடகம் தனது பிரதான நேரத்தில் மிகவும் பரபரப்பாக ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அந்த நிகழ்ச்சியின் மையம்இந்துக்களை முஸ்லிம்கள் தாக்குகிறார்கள், கொல்கிறார்கள். இப்போது எங்கே போனார்கள் (போலி) மதச்சார்பின்மைவாதிகள்?’ என்பதுதான். இதுபோன்ற செயல்களால் கலவரங்கள் பெரிதாக வெடித்து இரு தரப்பிலும் பெருத்த உயிர்ச் சேதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதைக் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. ஜுனைத் கொலைகள் முதலான பசுகுண்டர்களின் கொடூரங்களுக்கு எதிராக சோனியா காந்தி ஏன் வாயைத் திறக்கவில்லை என்று அதே ஊடகம் நிகழ்ச்சி நடத்தியது.

அப்போது அதைக் கண்டித்தீர்கள், இப்போது இதைக் கண்டிக்கவில்லையேஎன்று கேள்வி கேட்பவர்களிடமும் அதே கேள்வியைக் கேட்க முடியும். கொலைகள், படுகொலைகள் எதுவாக இருந்தாலும் எல்லாத் தரப்பினரும் அவற்றைத் தட்டிக்கேட்க வேண்டும்; கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பதில் எந்த விதச் சந்தேகமும் இல்லை. ஆனால், எப்போது யார் கேட்டார்கள், கேட்கவில்லை என்பதைக் கேட்கக்கூடிய தகுதியானது, பாரபட்சமில்லாமல் எல்லாக் கொடுமைகளையும் ஒன்றுவிடாமல் தட்டிக்கேட்பவருக்குத்தான் இருக்கிறதுஅப்படி ஒன்றுவிடாமல் தட்டிக்கேட்பவர், கண்டனம் தெரிவிப்பவர் என்று ஒருவர்கூடக் கிடையாது. ஆகவே, ‘அப்போது அதைக் கண்டித்தீர்கள், இப்போது இதைக் கண்டிக்கவில்லையேஎன்று கேட்க அநேகமாக யாருக்கும் தகுதி இல்லைஏனெனில் நடக்கும் கொடுமைகள், கொலைகள் அளவிட முடியாதவை. ஆனால், தனிப்பட்ட சம்பவங்கள் ஒரு போக்காக ஆகி ஒட்டுமொத்தச் சமூகத்தைப் பாதிக்கும்போது தங்கள் இன, மொழி, சாதி, பிரதேச உணர்வுகளைத் தாண்டி, பாரபட்சமில்லாமல் அரசியல் உணர்வுள்ளவர்கள், சமூக உணர்வுள்ளவர்கள் கண்டித்தே ஆக வேண்டும்.

வாட்டபவுட்ரீசந்தாதாரர்களின் கவனத்துக்கு ஒரு விஷயத்தைக் கொண்டுவர வேண்டும். அமர்நாத்துக்குச் சென்ற  யாத்ரீகர்கள் பயங்கரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் அல்லவா! அதையொட்டி காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், முற்போக்காளர்கள் என்று எல்லோரும் இந்தப் படுகொலைகளைக் கண்டித்திருக்கிறார்கள். இது ஃபேஸ்புக், ட்விட்டரிலும் டிரெண்ட் ஆகியிருக்கிறது. கூடவே, இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், Notinmyname பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் முற்போக்காளர்கள் என்று பலரும் அமர்நாத் படுகொலையைக் கண்டித்து ஊர்வலம், பேரணி போன்றவற்றை நடத்தியிருக்கிறார்கள். காஷ்மீரைப் பொறுத்தவரை இஸ்லாமியர்கள் பெரும்பான்மை, இந்துக்கள் சிறுபான்மையினர். சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவது, சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பது என்பது பெரும்பான்மையினரின் தலையாய கடமைகள். பண்டிட்களை விரட்டியதன் மூலம் பெரும் கறையை காஷ்மீரிகள் சுமந்துகொண்டிருந்தாலும் தற்போது அமர்நாத் படுகொலை நிகழ்வுக்குக் காட்டிய எதிர்ப்பால் ஒரு பெரும்பான்மைச் சமூகம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஏனைய இந்தியாவுக்கு அவர்கள் காட்டியிருக்கிறார்கள். அவர்கள்வாட்டபவுட்என்று கேட்கவில்லை. ஆனால், நம் மனசாட்சி நம்மைப் பார்த்து  ‘வாட்டபவுட்...’ என்று கேட்க வேண்டும்.  
 -நன்றி ‘தி இந்து’