சுதந்திரம் பெற்றதற்குப் பிந்தைய இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்துக்கு மோசமான காலகட்டங்களாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று, நெருக்கடி நிலை காலகட்டம், இன்னொன்று தற்போதைய காலகட்டம். கடந்த 70 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், பாஜக உள்ளிட்ட வலதுசாரிக் கட்சிகள் என்று எதுவுமே கருத்து சுதந்திரப் பரிசோதனையில் மிஞ்சாது. சல்மான் ருஷ்தியின் ‘சாத்தானின் பாடல்கள்’ (The Satanic Verses) நாவலை காங்கிரஸ் அரசு தடைசெய்தது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ அரசு ஆண்டபோது தஸ்லிமா நஸ்ரினின் நாவலைத் தடைசெய்தது. ‘தி டாவின்சி கோட்’ திரைப்படத்தை திமுக அரசு தடைசெய்தது. பாஜக கட்சியும் சரி அரசுகளும் சரி அந்தக் கட்சி சார்பான அமைப்புகளும்சரி பல்வேறு புத்தகங்களுக்கும் பல்வேறு கலைஞர்களுக்கும் முட்டுக்கட்டை போட்டிருக்கின்றன. எம்.எஃப். ஹுசைன், சிவாஜியைப் பற்றிய ஜேம்ஸ் லைனின் புத்தகம் தொடங்கி பெருமாள் முருகன் வரை ஏராளமான உதாரணங்களைக் காட்டலாம்.
Thursday, October 9, 2025
Sunday, October 5, 2025
காவிரி தந்த மல்லாரி வேந்தர்! - நாதஸ்வரக் கலைஞர் ஆச்சாள்புரம் சின்னத்தம்பிக்கு அஞ்சலி!
பிரபல நாதஸ்வரக் கலைஞர் ஆச்சாள்புரம் சின்னத்தம்பி (பிறப்பு: 14-04-1930) இன்று காலமானார். அவருக்கு வயது 95. அவரைப் பற்றி எனது ‘நீரோடிய காலம்’ தொடரில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய அத்தியாயத்தை இங்கே பகிர்கிறேன்:
கொள்ளிடம் கடலுடன் கலக்கும் பழையாறில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்டதும் என் மனதில் ஓடிய ஊரின் பெயர் ‘ஆச்சாள்புரம்’தான்.
ஆச்சாள்புரம் சின்னத்தம்பியின் மல்லாரிகளை சி.டி. வடிவில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கேட்க ஆரம்பித்தேன். மல்லாரி என்பது சுவாமி புறப்பாட்டின்போது நாதஸ்வரத்தின் வாசிக்கப்படும் ஒரு இசைவடிவம். எனக்கு ஆச்சாள்புரம் சின்னத்தம்பியின் மல்லாரிகளை அறிமுகப்படுத்திய நண்பர் “பீத்தோவனின் ஐந்தாவது சிம்பனிக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை” என்று கூறியபோது மிகைப்படுத்திச் சொல்கிறாரோ என்றுதான் நினைத்தேன். ஆனால், கம்பீர நாட்டையில் அமைந்த கம்பீரமான சின்னத்தம்பியின் மல்லாரிகளைக் கேட்டு முடித்தபோது நண்பரின் கூற்றில் எந்த மிகையும் இல்லை என்பதை உணர்ந்தேன்.
Thursday, October 2, 2025
காந்தி பிறந்தநாள் சிறப்புக் கவிதைகள்!
காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு எனது ‘ஹே... ராவண்!’ (2025, எதிர் வெளியீடு) கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்:
Monday, September 22, 2025
காந்தியின் ஆடை அரசியல் - காந்தி அரையாடைக்கு மாறிய நாளின் சிறப்புப் பகிர்வு
(இன்று காந்தி அரையாடைக்கு மாறிய 104-ஆம் ஆண்டு)
ஆடை என்பது பெரும்பாலானோருக்கு உடலை மறைப்பதற்கும், குளிர், வெப்பம் போன்றவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்கும், தங்களை மேலும் அழகாகக் காட்டிக்கொள்வதற்குமான விஷயமாகத்தான் இருக்கிறது. ஆனால், ஆடையையே தங்கள் அடையாளமாக, தங்கள் அரசியலாக, தங்கள் போராட்டமாக மாற்றியவர்கள் வரலாற்றில் இருந்திருக்கிறார்கள். ஏழை எளியோர் இடுப்பில் அரையாடையுடன் இருக்கத் தனக்கு மட்டும் பாதத்திலிருந்து தலைப்பாகை வரை ஏன் இத்தனை ஆடம்பரம் என்று அரையாடைக்கு மாறியது காந்தியின் ஆடை அரசியல் என்றால் கௌரவமான ஆடை அணிய அனுமதிக்கப்படாத சமூகத்தைச் சேர்ந்த அம்பேத்கர் கோட்டும் சூட்டும் அணிந்தது ஒடுக்கப்பட்டோருக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கான ஆடை அரசியல். பெரியாரின் கறுப்புச் சட்டை சனாதனத்துக்கு எதிரான ஆடை அரசியல். ஆண்டைகளுக்கு முன்னால் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டிருந்த நிலையை மாற்றி எல்லோரும் தோளில் துண்டு போட்டுக்கொள்ளலாம் என்ற துணிவைத் தந்தது திராவிட இயக்கத்தின் ஆடை அரசியல். அதேபோல் சிவப்புத் துண்டு உழைக்கும் வர்க்கத்தின் ஆடை அரசியல்.
பொது வாழ்க்கையில் மிகவும் எளிமையாக இருப்பவர்களை மக்கள் தம்மில் ஒருவராக அடையாளம் காண்பது வழக்கம். காந்தியில் ஆரம்பித்து காமராஜர், அண்ணா, கக்கன் இன்று நல்லக்கண்ணு வரை பலரும் அதில் அடங்குவார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சாதாரண இருசக்கர வாகனங்களில் செல்வது பத்திரிகைச் செய்தியாகும் அளவுக்கு எளிமைக்கும் அரசியலுக்கும் தூரம் என்றாகிவிட்ட காலம் இது. இந்த உளவியலை எல்லோருக்கும் முன்பு நன்கு புரிந்துகொண்டவர் காந்தி. அன்றாட வாழ்க்கையில் தான் பார்த்த ஏழ்மையுடன் இயல்பாகவே சமண மதப் பற்றின் காரணமாக ஏற்பட்ட துறவு மனப்பான்மையும் காந்தியைத் தன் ஆடை விஷயத்திலும் ஒரு துறவி போன்ற முடிவை எடுக்கச் செய்தது. காந்தியை எதிர்த்துக்கொண்டிருந்த, எதிர்த்துக்கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் பலரிடமும் காந்தி ஆடை, வாழ்க்கை முறை போன்ற விஷயத்தில் பெரும் தாக்கத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படுத்தியிருக்கிறார் (காந்தியை விரும்பிய/ விரும்பும் கம்யூனிஸ்ட்டுகளிடமும்தான்). அவரைப் போல அரையாடைக்கு மாறவில்லை என்றாலும் எளிமையான ஆடையுடன்தான் கணிசமான மூத்த கம்யூனிஸ்ட்டுகள் காணப்படுவார்கள்.
காந்தியின் ஆடையானது அவரது உடலிலிருந்து வேறுபட்டதல்ல. தன் வாழ்க்கையைப் போல தன் உடலையும் ஒரு செய்தியாக காந்தி உலகத்தாருக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் காட்டியதில் அவரது ஆடைக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. ஆடை விஷயத்தில் காந்தி அடித்தது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள். நான் உங்களில் ஒருவன் என்ற செய்தியை மக்களுக்கு உணர்த்தி அதன் மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் பின்னால் மக்களைத் திரளச் செய்தது ஒன்று. இன்னொன்று, கதரை மக்களிடம் பிரபலப்படுத்தி ஒரே நேரத்தில் பொருளாதாரரீதியில் இந்திய மக்களைத் தற்சார்பு கொண்டவர்களாக ஆக்கி பிரிட்டிஷ்காரர்களின் சுரண்டல் பொருளாதாரத்தைத் தடுமாறச் செய்தது. காந்தியின் ஆடை அரசியல் காரணமாக இங்கிலாந்தில் உள்ள ஆலைகள் பலவும் மூடப்பட்டன. அதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். 1931-ல் வட்டமேஜை மாநாட்டுக்காக இங்கிலாந்து சென்ற காந்தி அங்குள்ள ஆலைத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் வேலை இழப்புக்குத் தான் காரணமாக இருந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்தியாவின் தரப்பு நியாயத்தை அவர்களிடம் எடுத்துக்கூறி அவர்களுக்குப் புரியவைத்தார். எதிரியின் நாட்டு மக்கள் வேலை இழந்தால் நமக்கென்ன என்று எண்ணாமல் தங்களை நாடி வந்த காந்தியை அவர்கள் அன்புடன் உபசரித்துச் சிரித்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
எதிலும் தீவிரத்துடன் செயல்பட்ட காந்தியைப் பின்பற்றுவது மிகவும் அரிது. ஆனாலும், அவரது செயல்பாடுகள் அவரைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கைமுறையில் குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தின. காந்தியின் தொண்டர்களாகவும் அன்பர்களாகவும் இருந்த நேரு, படேல் உள்ளிட்ட பலரும் எளிமையான கதர் ஆடைகளுக்கு மாறினார்கள். அவர்களைப் பின்பற்றிப் பெரும்பாலான இந்தியர்களும் கதர் ஆடைகளுக்கு மாறினார்கள். ஆடையில் சுதேசியம், எளிமையான ஆடை அணிதல் என்ற ஒரு மனிதரின் முடிவுகள் எப்படி ஒரு தேசத்தின் தலையெழுத்தை மாற்றி ஒரு ஏகாதிபத்தியத்தை அசைத்துப்போட்டன என்ற வரலாற்றை நாம் அறிவோம்.
காந்தியிடம் எப்போதும் ஒரு சுயவதை இருந்தது. எல்லா மாற்றங்களுக்கும் பரிசோதனைக் களனாக, இலக்காகத் தன் உடலையும் மனதையுமே ஆக்கினார். புதுப்புதுப் பரிசோதனைகளில் அவற்றைப் புடம்போட்டார். ஒரு பரிசோதனை முடிந்தவுடன் தான் இலக்கை அடைந்துவிட்டதாக அவர் நின்றுவிடுவதில்லை. மேலும் புதுப் புதுப் பரிசோதனைகளை அவர் கண்டடைந்துகொண்டே இருந்தார். அவற்றில் அவர் பெறும் வெற்றியோ தோல்வியோ நாட்டின் மீது ஏதாவது ஒரு விதத்தில் தாக்கம் செலுத்தியது. ஆடை குறித்து அவர் எடுத்த முடிவும் அப்படிப்பட்டதொரு பரிசோதனைதான். 1921-ல் எடுத்த முடிவின்படி அவர் 1948-ல் படுகொலை செய்யப்படும் தருணம்வரை அவர் இம்மியளவும் பிசகாமல் நடந்துகொண்டார். அவரின் மிகவும் வெற்றிகரமான பரிசோதனைகளுள் ஒன்று அவரது ஆடை அரசியல்.
ஆடை விஷயத்தில் காந்தி எடுத்த முடிவின் காரணமாக அவரது மார்பு திறந்தே இருந்தது. எல்லோரையும் அரவணைக்கும் மார்பு அது. எல்லோர் அன்புக்கும் இலக்கான மார்பு அது. கூடவே, தீய சித்தாந்தத்தின் பிரதிநிதி ஒருவனின் 3 தோட்டாக்களுக்கும் இலக்கானது. அந்தத் தோட்டாக்களை வெற்று மார்பில் தான் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அதன் மூலம் தன் மரணமும் ஒரு செய்தியாக ஆக வேண்டும் என்பதற்காகவும்தானோ அதற்கும் 27 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி இந்த முடிவு எடுத்தார்?
- ஆசை, நன்றி: ‘இந்து தமிழ் திசை’
Thursday, September 11, 2025
பாரதீ: எம் கவிஞன் நீ! - பாரதி நினைவுநாள் கட்டுரை
ஆசை
‘மேன்மேலும் புதியகாற்று எம்முள் வந்து/ மேன்மேலும் புதியஉயிர் விளைத்தல் கண்டீர்’ என்று எழுதித் தமிழ் மொழி மீதும் தமிழ் சமூகத்தின் மீதும் புதிய காற்றைப் படச் செய்தவர் பாரதி. வடிவத்தால் மரபுக் கவிஞராகவும் உள்ளடக்கத்தால் நவீனக் கவிஞராகவும் பாரதி காட்சியளிக்கிறார். மனிதர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இனம், மொழி, நாடு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகள், பிற நாட்டின் விடுதலைப் போராட்டங்கள், பிற நாட்டுத் தமிழர்களின் இன்னல்கள், வானியல் நிகழ்வுகள், இயற்கைச் சீற்றங்கள் போன்ற பல கருப்பொருள்கள் பாரதியிடம்தான் தமிழ்க் கவிதை வரலாற்றில் முதன்முதலில் எட்டிப்பார்த்தன.
Thursday, August 21, 2025
நகுலன்: தன்னைத் தானே எழுதிக் கலைக்கும் எழுத்து - நகுலன் பிறந்தநாள் பகிர்வு
ஆசை
நவீன தமிழ் இலக்கிய உலகம் எத்தனையோ சிறந்த எழுத்தாளர்களைக் கண்டிருந்தாலும் சிலருக்கே கல்ட் (cult) அந்தஸ்து கிடைக்கிறது. இந்த அந்தஸ்து அவர்களின் படைப்புலகுக்குள் நுழைவதற்கே தடையாகவும் ஆகிவிடக்கூடியது. அப்படிப்பட்ட கல்ட் அந்தஸ்தைப் பெற்ற சிலருள் நகுலனும் ஒருவர். நவீன கவிதைக்குள் நகுலனின் இடம் உறுதியானதொன்று என்றாலும் அந்த இடத்தை எப்படி வரையறுப்பதென்பது எப்போதும் சிக்கலாகவே இருக்கிறது. சிதறுண்ட 20-ம் நூற்றாண்டு நவீன மனம் என்று சில சமயம் நகுலன் (அவரது நாவல்கள், சிறுகதைகளையும் உள்ளடக்கி) வரையறுக்கப்பட்டாலும் அவரிடம் மரபின் தொடர்ச்சியும் இருக்கிறது. அந்த மரபும் எப்படிப்பட்டதென்றால் காலம்காலமாக மரபுக்குள்ளிருந்து கலகம் விளைவித்த போக்கைப் பின்தொடர்வதாக இருக்கிறது. சில விஷயங்களில் நகுலன் சித்தர் மரபுக்கு அருகில் இருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது. சில இடங்களில் இருத்தலியல் கவிஞராகவும் தென்படுகிறார்.
Tuesday, August 19, 2025
காந்தியும் 60 நாய்களும்!
ஆசை
‘திரு. காந்தி அவர்களே, நாங்கள் கேள்விப்பட்டது உண்மையா? திரு. அம்பாலால் சொன்னதற்கு ‘வேறென்ன செய்துவிட முடியும்?’ என்று தாங்கள் பதில் கூறியது உண்மைதானா? எந்தவொரு உயிரையும் எடுப்பதற்கு இந்து மதம் அனுமதிக்காததோடு, அதைப் பாவம் என்று கருதும்போது வெறிநாய்களைக் கொல்வது சரிதான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’ என்று அகமதாபாத் மனிதநேய சங்கத்திலிருந்து காந்திக்குக் காட்டமாக ஒரு கடிதம் வந்திருந்தது. படித்துவிட்டுத் தன் உதவியாளரைப் பார்த்து மெலிதாகப் புன்னகை புரிந்தார் காந்தி.
1926-ன் முற்பகுதி அது. தீவிர அரசியலிலிருந்து ஒரு ஆண்டு காலம் ஓய்வு எடுத்துக்கொள்ளப்போவதாக காந்தி அறிவித்திருந்தார். ஒரு வகையில் அது அமைதி ஆண்டு. அந்த ஆண்டில்தான் வாரந்தோறும் ஒரு நாளை அமைதி நாளாக அனுசரிக்கும் வழக்கத்தை காந்தி தொடங்கினார். அடுத்த 23 ஆண்டுகள் இந்த வழக்கத்தை அவர் கைவிடவே இல்லை. அந்த நாட்களில் அவர் மக்களைச் சந்திக்காமல் இருப்பதில்லை. அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொள்வார். அவருடைய பதில் அவசியமான இடங்களில் ஒரு தாளில் எழுதித் தருவார். அதிக அளவில் பயணம் செய்தது, நிறைய இடங்களில் பேசியது போன்றவற்றால் அதீதக் களைப்படைந்த காந்தி, சிறு இளைப்பாறுதலாகக் கண்டுபிடித்த உத்தி இந்த அமைதி தினம். அதுவே அவருக்கு மிகுந்த புத்துணர்ச்சியைக் கொடுப்பதாக மாறியது.
Wednesday, August 13, 2025
பா.வெங்கடேசனை நீங்கள் ஏன் படித்தாக வேண்டும்?
தமிழின் மகத்தான படைப்பாளிகளுள் ஒருவரான பா.வெங்கடேசன் இன்று தன் 63-வது வயதை நிறைவு செய்கிறார். இந்தக் கட்டுரை அவரது 60-வது பிறந்தநாளில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியானது. அதனை இப்போது மீள்பகிர்வு செய்கிறேன். கடந்த 8 ஆண்டுகளாக அவருடைய புனைவுப் படைப்புகள் முழுவதையும் பல தடவை படித்தவன் என்ற முறையில் அவற்றைப் பற்றி ஒரு சுருக்கமான பார்வையை இத்தருணத்தில் முன்வைக்க விரும்புகிறேன். இந்தக் கட்டுரை பிரதானமாக, பா.வெங்கடேசனைப் படித்திராத வாசகர்களையும் அவரைப் படிக்க முயன்று இயலாமலோ பிடிக்காமலோ விலகிச் சென்ற வாசகர்களையுமே இலக்காகக் கொள்கிறது.
பா.வெங்கடேசனை நான் படிக்க வேண்டிய அவசியம் என்ன? இப்படி ஒருவர் கேட்கலாம். தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் தன் வாழ்வின் மிக முக்கியமானவையாகக் கருதும் ஒருவர் எப்படி சங்க இலக்கியமும் சிலப்பதிகாரமும் வள்ளுவரும் ஆண்டாளும் கம்பரும் பாரதியும் புதுமைப்பித்தனும் படித்தாக வேண்டுமோ அப்படியே பா.வெங்கடேசனையும் படித்தாக வேண்டும் என்று நான் உளமார நம்புகிறேன்.
Saturday, July 26, 2025
கமல், ஸ்டேன்லி கூப்ரிக்கை என்ன செய்தீர்கள்? - ஸ்டேன்லி கூப்ரிக் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
ஆசை
(இப்படைப்பு முழுவதும் கற்பனையே. ஆனால் யாருடைய கற்பனை என்பது தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்தான் இந்தப் படைப்பு தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறது. இறுதியில் படைப்பும் அதன் பார்வையாளர்களும் சேர்ந்து இது யாருடைய கற்பனை என்று கண்டுபிடித்தால் மகிழ்ச்சியே. கமல், சத்யராஜ், வாகை சந்திரசேகர், நிக்கி கல்ரானி, ஜெய் மற்றும் ஸ்டேன்லி கூப்ரிக் ஆகியோரின் ரசிகர்கள் மனம் புண்படும் என்றால் அவர்களிடம் இந்தப் படைப்பு, மனமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.)
**
நடிப்பு: பத்மஸ்ரீ கமல்ஹாசன் (அப்போது உலக நாயகன் பட்டம் தரப்படவில்லை), சத்யராஜ், வாகை சந்திரசேகர், ஜெய், நிக்கி கல்ரானி இவர்களுடன் நானும் நீங்களும்.
கதை-திரைக்கதை-வசனம்: ஸ்டேன்லி கூப்ரிக், கமல்ஹாசன், நானும் நீங்களும்
இயக்கம் – முதல் அத்தியாயத்தின் முடிவில் தெரிந்துகொள்வீர்கள்
குறிப்பு: இத்திரைப்படம் மன்னார்குடி சத்யா திரையரங்கில் மட்டுமே தினமும் இரவு ஒரு மணிக்குத் திரையிடப்படும்
**
1.
சைக்கிளை விட்டு இறங்காமல் ஒற்றைக்காலை ஊன்றிக்கொண்டு “கோபாலகிருஷ்ணன்” என்றான் பிரகாஷ்.
நானும் “கோபாலகிருஷ்ணன்” என்றேன். சங்கேதம் ஒப்புக்கொள்ளப்பட்டது.
“ஆனா இன்னைக்கு ரொம்ப ரொம்ப வேற விஷயம் அப்படின்னாரு சண்முகம் அண்ணே” என்றான்.
அவ்வளவு தூரம் சைக்கிள் மிதித்து வந்ததில் இன்னும் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது அவனுக்கு.
“சரி நீ போ. நான் வந்துடுறேன்.”
Friday, July 25, 2025
மக்களிடம்தான் சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டும்! - இயக்குநர் மகேந்திரன் பிறந்தநாள் மீள்பகிர்வு
ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான இயக்குநர் மகேந்திரன் நேர்காணலின் முழு வடிவம் இது. இந்த நேர்காணலின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அச்சில் வெளியாகியிருக்கிறது. முழுமையான, விரிவான நேர்காணல் எனது வலைப்பதிவில் பிரத்யேகமாக இங்கே...)
ஐம்பது ஆண்டுகள் ஆகப்போகின்றன மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ இரண்டு படங்களும் வெளியாகி. ஆனாலும், சலிக்கவே சலிக்காமல் தமிழ்த் திரையுலகமும் ரசிகர்களும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் இன்னமும். இன்று அவரது 86-வது பிறந்தநாள். அதனை முன்னிட்டு அவரது நேர்காணலின் மீள்பகிர்வு இங்கே...
இன்று புதிதாக வரும் இயக்குநர்களும் உங்களை ஆதர்சமாகக்கொண்டிருக்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
எனக்கு எல்லாமே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. நான் வேண்டுமென்றே எந்த உத்தியையும் பின்பற்றி அந்தப் படத்தை எடுக்கவில்லை. எனக்குத் தெரிந்த சினிமாவை நான் எடுத்தேன். ஆனால், மக்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் நிறைய எழுதுகிறார்கள் அதைப் பற்றி. அதற்கு என்ன காரணம் என்பதை உங்களைப் போன்ற பத்திரிகைகாரர்கள்தான் ஆராய்ந்து சொல்ல வேண்டும்.
எனக்குப் பள்ளி நாட்களிலேயே தமிழ்த் திரைப்படங்கள் மீது ஒரு ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது. மேடை நாடகங்கள் போலவும் வானொலி நாடகங்கள் போலவும் தமிழ்த் திரைப்படங்கள் இருப்பதாக நான் உணர்ந்தேன். சினிமா ஒரு காட்சி ஊடகமாக இருக்க வேண்டும். காட்சிகளால் நகர வேண்டும் என்று நினைத்தேன். எனக்குத் தமிழ்த் திரைப்படங்கள் மீது என்னென்ன ஒவ்வாமைகளெல்லாம் இருந்தனவோ அதையெல்லாம் நீக்கிவிட்டு எடுத்த படம்தான் ‘உதிரிப்பூக்கள்’.
Saturday, July 12, 2025
பாப்லோ நெருதா கவிதைகள் - பிறந்தநாள் பகிர்வு
1. ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு ஒரு பாடல்
ஃபிடல், ஃபிடல்,
செயலாக மாறிய சொற்களுக்கும்
பாட்டாக ஒலிக்கும் செயல்களுக்கும்
நன்றிகாட்டுகிறார்கள் மக்கள்,
காணாத தூரத்தைக் கடந்து நானொரு கோப்பையில்
என் நாட்டின் மதுவோடு வந்திருப்பதும் அதனால்தான்:
நிலத்தடி மக்களின் உதிரம் அது
இருட்டிலிருந்து புறப்பட்டு உனது தொண்டையை
வந்தடைகிறது,
உறைந்துகிடந்த நிலத்திலிருந்து
நூற்றாண்டுகளாய்த் தீயைப் பிழிந்து
வாழ்ந்த சுரங்கத் தொழிலாளிகள் அவர்கள்.
கடலின் ஆழத்திலும்
நிலக்கரியைத் தேடும் அவர்கள்
பேயுருகொண்டு கரையேறுகிறார்கள்:
முடிவில்லா இரவுக்குப் பழகிக்கொண்டுவிட்டார்கள் அவர்கள்,
பகல் வேளையின் வெளிச்சம் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது,
ஆயினும், இதோ, இந்தக் கோப்பை.
சொல்லொணாத் துயரத்தினதும்,
கண்காணாத தூரத்தினதும் கோப்பை.
இருளும் பிரமைகளும்
பேயாய்ப் பற்றிக்கொண்ட,
சிறைப்பட்ட அந்த மனிதர்களின்
மகிழ்ச்சி அது.
சுரங்கங்களின் உள்ளே இருந்தாலும்
வசந்தத்தின் வரவையும்
அந்த வரவோடு வந்த சுகந்தங்களையும்
உணர்கிறார்கள் அவர்கள்.
தெளிவின் உச்சத்துக்காக மனிதன் போராடுகிறான்-
இதனை அறிந்தவர்களல்லவா அவர்கள்.
தெற்குப் பிரதேசத்தின் சுரங்கத் தொழிலாளிகளும்,
பரந்த புல்வெளிப் பிரதேசத்தில் தனியர்களாய் இருக்கும் மைந்தர்களும்,
படகோனியாவின் குளிரில் வாடும் மேய்ப்பர்களும்,
தகரத்துக்கும் வெள்ளிக்கும் பிறப்பளிக்கும் தகப்பன்களும்,
காதில்யெரா மலைத் தொடர்களுக்கு வாழ்க்கைப்பட்டு
சூகீக்கெமாதெ சுரங்கங்களிலிருந்து செம்புத் தாதுவை அகழ்பவர்களும்,
பேருந்துகளின் கூட்டமும்,
நேற்றைய நினைவிலேயே நிலைத்துவிட்ட நெரிசலும்,
வயல்கள் பட்டறைகளில் உழைக்கும் பெண்களும்,
குழந்தைப் பருவத்தை அழுதே கழித்த குழந்தைகளும்,
க்யூபாவைப் பார்க்கிறார்கள்:
இதுதான் அந்தக் கோப்பை, எடுத்துக்கொள் ஃபிடல்.
அவ்வளவு நம்பிக்கையால் நிறைந்திருக்கும் கோப்பை இது!
அருந்தும்போது நீயறிவாய்
ஒருவரால் அல்ல, பலராலும்
ஒரு திராட்சையால் அல்ல, பல தாவரங்களாலும் உருவான,
எனது தேசத்தின்
பழம் மதுவைப் போன்றது உனது வெற்றி என்பதை.
ஒரேயொரு துளியல்ல; பல நதிகள்:
ஒரேயொரு படைத்தலைவன் அல்ல, பற்பல போர்கள்.
நீண்ட, நெடிய போராட்டம் நம்முடையது,
அதன் ஒட்டுமொத்த மகத்துவத்தின் முழு உருவம் நீ.
அதனால்தான் அவர்களின் ஆதரவெல்லாம் உனக்கு.
க்யூபா வீழுமென்றால் நாங்களும் வீழ்வோம்,
அவளைக் கைதூக்கிவிட நாங்கள் வருவோம்,
அவள் பூத்துச் சொரிந்தால்
நாம் வென்றெடுத்த தேன்கொண்டு செழித்திடுவாள்.
உன் கைகளால் கட்டவிழ்ந்த
க்யூபாவின் நெற்றியை யாராவது தொடத் துணிவார்களென்றால்,
மக்களின் முஷ்டிதான் அவர்களுக்கு பதிலளிக்கும்,
புதைந்திருக்கும் நமது ஆயுதங்களைக் கைக்கொள்வோம்:
எங்கள் நேசத்துக்குரிய க்யூபாவைப் பாதுகாக்க
எங்களுக்குத் துணையாய் வரும்
உதிரமும் மாண்பும்!
2. தேனீக்களுக்கு ஒரு பாடல்
மொய்க்கும் தேனீக்கூட்டமே
உலகின் மென்மைக்கும் மென்மையான
சிவப்பு, நீலம், மஞ்சளின் உள்ளே
புகுந்தும் புறப்பட்டும்
தொழிலுக்காகப்
பூவிதழின் அடுக்கினுள்
கவிழ்ந்து விழுந்து, மீண்டு,
பொன்மயமான உடையும்,
கணக்கில்லா மஞ்சள் காலணிகளும்.
கச்சிதமான இடை, கரும்பட்டைக் கோடிட்ட கீழ்வயிறு
துருதுருக்கும் சின்னஞ்சிறிய தலை
புத்தம்புதிய நீராலான இறக்கைகள் ---
மணங்கமழும் ஜன்னல்கள் எல்லாம் நுழைந்து,
பட்டுக் கதவுகளைத் திறந்து,
இணையில்லா மணம் வீசும் காதலின் மணவறையில் நுழைந்து,
வைரப் பொட்டாகப் பனித்துளியைக் கண்டெடுக்கிறீர்கள்.
சென்றுவரும் வீடெல்லாம்
தேன் என்னும் புதிரை, வளத்தை, கட்டமுதை
அள்ளிச்செல்கிறீர்கள்
அது அடர் மணம், ஓடையாய் ஒளிரும் திரவம்.
கூடிவாழும் கூடத்துக்கு மீண்டுவந்து
அதன் கைப்பிடிச் சுவரில்
பூவின், விண்வெளிப் பாய்ச்சலின்
விளைச்சலான அந்த
கந்தர்வ ரசத்தை, மணநாளின் ரகசியச் சூரியனை,
தேனை, சேமித்து வைத்து
மொய்க்கும் தேனீக்களே,
ஒற்றுமையின் புனித முகடே,
ரீங்கரிக்கும் கல்விக்கூடமே.
ரீங்கார ஆரவாரத்தில்
பூவின் மதுவைப் பக்குவமாக்க
அமுதத் துளிகளைப் பரிமாறி
பசுமை படர்ந்த
ஒசர்னோ எரிமலையின் ஏகாந்த வெளியில்
வெய்யில்காலப் பிற்பகலின் கண்ணயர்வு--
உச்சி சூரியன்
ஈட்டிக் கிரணங்களைப் பனிமீது பாய்ச்ச,
எரிமலைகள் ஒளிர
கடலாக நிலம் விரிகிறது.
நீல வெளியின் ஏதோவொரு நடுக்கம்.
கனன்றுவரும் கோடையின் இதயம்,
தேனினிக்கும் இதயங்கள் பெருகின
ரீங்கரிக்கும் தேனீ
நொறுங்கிச் சடசடக்கும் தேன்கூடு
பொன்வண்ணம், சிறகின் படபடப்பு!
தேனீக்களே,
களங்கமில்லா உழைப்பாளிகளே, ஊன்பெருக்காத கூன் உடல்
தொழிலாளர்களே ஒளிவீசும் தொழிலாள வர்க்கமே!
தன்னையே மாய்த்துவிடும் கொடுக்கோடு கொட்டிச் சாடும்
குறையில்லா தீரப் போர்ப்படையே
இரைச்சலிடுங்கள், புவியின் கொடைகளின்மேல்
பொன்வண்ணக் குடும்பமே,
காற்றின் மந்தையே
பூக்களின் தீயை,
மகரந்தக் கேசரத்தின் தவிப்பை,
நாசியைத் துளைக்கும் நறுமண நூலை,
நாட்களை இணைத்துத் தைக்கும் நூலை,
அந்தத் தேனை விசிறித் தெளியுங்கள்
வெம்மையான கண்டங்களைக் கடந்து
மேலை வானின் தொலைதூரத் தீவுகளுக்கும்.
ஆம்,
பசுமைச் சிலைகளை
தேன் மெழுகு உருவாக்கட்டும்!
எண்ணில்லா நாவில் தேன் சிதறட்டும்,
தேன்கூடாய் ஆகட்டும் அந்தப் பெருங்கடல்
புவியே பூக்களாலான கோபுரமாய், அங்கியாய் மாறட்டும்!
உலகமே ஓர் அருவியாகட்டும்
எரிகல்லின் ஒளிரும் வாலாக
தேன்கூடுகளின் முடிவில்லாச் செல்வமாய் ஆகட்டுமே!
3.
உனது உடலின் வரைபடத்தை
நெருப்பின் குறியீடுகளால்
குறித்துக்கொண்டு செல்கிறேன்எனது இதழ்கள்
உன் உடல் முழுதும் செல்கிறது
ஒளிந்துகொள்ள முயலும் சிலந்தியாய்.
உனக்குள், உன் பின்னே, கோழையாய்,
தாகத்தால் விரட்டப்பட்டு.
மாலையின் கரையில்
உனக்குச் சொல்வதற்கு
கதைகளுண்டு நிறைய,
சோகவயப்பட்ட நளினமான பொம்மையே,
எனவே நீ துக்கமடைய மாட்டாய்.
ஒரு அன்னம், ஒரு மரம்,
தூரத்திலிருக்கும் மகிழ்ச்சியான ஏதோ ஒன்று.
திராட்சைகளின் பருவம், முதிர்ந்த, நிறைந்த பழங்களின் பருவம்.
எங்கு உன்னைக் காதலித்தேனோ
அந்த துறைமுகத்தில் வாழ்ந்த நான்.
கனவாலும், அமைதியாலும்
குறுக்கிடப்பட்ட அந்தத் தனிமை.
கடலுக்கும் துயரத்துக்கும் மத்தியில்
அடைக்கப்பட்டு.
நிசப்தமாக, பீடிக்கப்பட்டு,
அசைவற்ற இரு படகோட்டிகளுக்கு மத்தியில்.
உதடுகளுக்கும் குரலுக்கும் இடையே
மங்கிக்கொண்டு வருகிறது
ஏதோ ஒன்று.
பறவையின் சிறகுகளுடன் ஏதோ ஒன்று,
வலியுடன், சுயநினைவற்று,
ஏதோ ஒன்று.
வலையால் தண்ணீரைப்
பிடித்துவைத்திருக்க முடியாததைப் போல.
என் விளையாட்டுப் பொம்மையே,
ஓரிரு துளிகள் மட்டும்
தனித்து நடுங்கிக்கொண்டிருக்கின்றன.
அப்படியும், ஏதோ ஒன்று பாடுகிறது,
நிலையற்ற இந்த சொற்களால்.
ஏதோ ஒன்று பாடுகிறது,
எனது பசிகொண்ட வாயில்
பற்றி ஏறுகிறது.
ஓ! பரவசத்தின் அனைத்துச் சொற்களாலும்
கொண்டாட முடிகிறது
உன்னை.
பாடு, எரி, பற,
ஒரு பைத்தியக்காரனின் கையில்
அகப்பட்ட கோயில் மணியைப் போல.
என் சோகவயப்பட்ட கனிவே,
உன்னை சட்டென்று ஆட்கொள்வது எது?
மிகவும் கிளர்ந்திழுக்கும்
குளிர்ச் சிகரத்தை எட்டி முடித்ததும்
என் இதயம் மூடிக்கொள்கிறது
ஒரு இரவு நேர மலரைப்போல.
4.
உன் முலைகள்
என் இதயத்திற்குப் போதுமானவை
என் சிறகுகள்
உன் விடுதலைக்கு.
உனது இதயத்தின் மேல் உறங்கிக்கொண்டிருப்பது
என் உதடுகளின் வழியாக வானத்தை நோக்கி
உயரும்.
உனக்குள் ஒவ்வொரு நாளின்
மாயத்தோற்றம்.
விரிந்த மலர்களில் வீழும்
பனித்துளிகளைப் போல் வருகிறாய் நீ.
தொடுவானத்தை மங்கச் செய்கிறாய் நீ
உனது பிரிவால்.
அலைகளைப் போன்று
முடிவில்லாமல் பறந்துகொண்டிருக்கிறாய்.
ஊசியிலை மரங்களைப் போல
பாய்மரங்களைப் போல
நீ காற்றில் பாடுகிறாய் என்று
சொல்லியிருக்கிறேன் நான்.
அவற்றைப்போல நீயும் உயரமாக,
பேசாமடந்தையாக
மேலும் சட்டென்று சோகமாக,
ஒரு கடற்பயணத்தைப்போல.
பொருட்களை திரட்டிக்கொள்கிறாய் உன்னிடத்தில்
ஒரு பழைய சாலையைப்போல.
எதிரொலிகளாலும்
பழைய நினைவுகளின் குரல்களாலும்
நிறைந்திருக்கிறாய்.
நான் எழுகிறேன்
சில சமயங்களில்
பறந்துசெல்கின்றன, இடம்பெயர்கின்றன
உன் இதயத்தில் உறங்கிக்கொண்டிருந்த பறவைகள்.
5.
பெண்ணுடல், வெள்ளை மலைகள், வெண்ணிறத் தொடைகள்,
உனது சரணாகதித் தோற்றத்தில் இந்த உலகைப் போன்று தோன்றுகிறாய் நீ.
எனது கொடிய முரட்டுத்தனமான உடல் உன்னில் தோண்டி
துள்ளியெழச்செய்கிறது குழந்தையைப் புவியின் ஆழத்திலிருந்து.
நான் தனியாகச் சென்றேன் ஒரு வளையைப்போல. பறவைகள் பறந்துசென்றன என்னிடமிருந்து, மற்றும் இரவு தனது வலிமையால் ஊடுருவியது என்னில்.
நான் பிழைத்திருப்பதற்காக உன்னைத் தட்டிதட்டி செய்தேன் ஒரு ஆயுதமாக,
எனது வில்லில் அம்பாக, எனது கவணில் கல்லாக.
ஆனால் பழிவாங்கும் தருணம் வந்துவிட்டது, அதனால் உன்னை நான் நேசிக்கிறேன்.தோலின், பாசியின், விடாயின், நிதானமான பால்.
ஓ முலைகளின் கோப்பைகளே! பிரசன்னமின்மையின் விழிகளே!அடிவயிற்றின் ரோஜாக்களே! ஓ உனது மெல்லிய, துயரமான குரலே!
பெண்ணுடலே, நான் உனது மகிமையால் நிலைத்திருப்பேன்.
எனது விடாய், எனது கட்டற்ற ஏக்கம், எனது குழப்பமான பாதை!முடிவற்ற தாகங்கள் பாய்ந்துசெல்லும்,
களைப்பு பாய்ந்துசெல்லும், எல்லையற்ற சோகம் பாய்ந்துசெல்லும் கருநிற நதிப்படுகைகள்.
Tuesday, June 24, 2025
தமிழால் ஆடுகின்றான் கண்ணதாசன்! - கண்ணதாசன் பிறந்தநாள் கவிதைப் பகிர்வு
மன்னார்குடியில் ஒரு இசையகத்தில் நாங்கள் அடிக்கடி பாடல்களைப் பதிவுசெய்து கொண்டுவந்து கேட்போம். ‘உங்களிடம் அதிகம் பதிவுசெய்யப்பட்ட பாடல் எது?’ என்று அவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறிய பாடல் ‘கண்ணே கலைமானே’. கண்ணதாசன், இளையராஜா, பாலுமகேந்திரா, ஸ்ரீதேவி, கமல் என்று எல்லோருக்குமான பெருமை அது. பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு வந்தவர்களில் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்களில் ஒருவர் கண்ணதாசன். ‘உனக்கே உயிரானேன்... எந்நாளும் எனை நீ மறவாதே’ என்பது அவரது மரண சாசனமாகவே அமைந்துவிட்டது. எப்படி மறப்போம் கண்ணதாசா?




.jpeg)



.png)


