Thursday, May 28, 2015

நேரு என்ற மாபெரும் சாகசக்காரர்


ஆசை

(நேரு நினைவு தினத்தையொட்டி ‘தி இந்து’ நாளிதழில் 27-05-2015 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம்)

நேருவின் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்தை ராமச்சந்திர குஹா தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.

அது 1942-ம் ஆண்டு. காந்தி தனது ஆசிரமத்தில் காங்கிரஸ் கூட்டமொன்றை நடத்துகிறார். அந்தக் கூட்டம் முடிந்தவுடன் அலகாபாத் செல்வதற்காக ரயிலைப் பிடிக்க வேண்டிய அவசரத்தில் நேரு கிளம்புகிறார். ‘சீக்கிரமாகப் போய் ரயிலைப் பிடிப்பதற்குக் கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக’ என்று கஸ்தூர் பா, நேருவை ஆசிர்வதித்திருக்கிறார். அந்த அவசரத்திலும் நேருவுக்குக் கோபம் தலைக்கேறுகிறது. ‘காட்டுமிராண்டித்தனமான போர்களை அனுமதிப்பவர்தான் கடவுளா? விஷவாயு கொண்டு யூதர்கள் படுகொலை செய்யப்படுவதை அனுமதிப்பவர்தான் கடவுளா? ஏகாதிபத்தியமும் காலனியாதிக்கமும் வேட்டையாட அனுமதிப்பவர்தான் கடவுளா?’ என்ற ரீதியில் நேரு பொரிந்துதள்ளியிருக்கிறார். சுற்றிலும் அப்படியொரு அமைதி. கஸ்தூர் பாவை எதிர்த்துப் பேசும் தைரியம் காந்திக்குக்கூட கிடையாது. சங்கடமான இந்தச் சூழலில் காந்தி நுழைகிறார், “பா, ஜவாஹர்லால் என்ன சொல்லியிருந்தாலும் நம்மையெல்லாம் விட கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவர் அவர்தான்” என்கிறார்.

நிலைமையைச் சமாளிப்பதற்காகவோ, நேருவை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ காந்தி சொன்ன வார்த்தைகளில்லை இவை. அப்படியெல்லாம் ஒருபோதும் சொல்லக்கூடியவரல்ல காந்தி. பிறகு ஏன் இப்படிச் சொன்னார்? இங்கே ‘கடவுள்’ என்ற சொல்லையும் அதற்கு காந்தி தன் வாழ்க்கையில் கொடுத்திருக்கும் அர்த்தத்தையும் நாம் பார்க்க வேண்டும். சத்தியத்தை மட்டுமே காந்தி தன் வாழ்நாள் முழுவதும் கடவுளாகக் கருதியவர். மதங்கள் குறிப்பிடும் கடவுள் தரிசனம் தனக்குக் கிடைத்ததில்லை எனவும், ஆனால் சத்தியத்தின் தரிசனம் கிடைத்திருக்கிறது எனவும் சொல்லியவர் அவர். அந்த சத்தியத்துக்கு மிகவும் நெருக்கமானவர் நேரு என்று தான் கருதியதால் மேற்கண்ட சம்பவத்தின்போது காந்தி அப்படிச் சொல்லியிருக்கக் கூடும். நேருவைத் தன் அரசியல் வாரிசாகவும், இந்தியாவின் முதல் பிரதமராகவும் காந்தி தேர்ந்தெடுத்ததை மேற்கண்ட சொற்களின் பின்னணியிலும் வைத்துப்பார்க்கலாம்.

மோடி 365° - பிரச்சாரத்தின் வெற்றி


ஷிவ் விஸ்வநாதன்
(‘தி இந்து’ நாளிதழில் 28-05-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை. தமிழில்: ஆசை)

நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்தமான அவதாரம் ‘முப்பரிமாண பிம்பம்’ (ஹோலோகிராம்). அவரது ஆகிருதிக்கு அது கூடுதல் பரிமாணங்களைச் சேர்த்தது; உண்மையான ஆளுமைக்கும் நகலுக்கும் நடுவே அவரை வைத்தது. ஏனெனில், சமூகத்தின் பிம்பமாகத் தன்னை முன்வைக்கவே மோடி விரும்புகிறார். அவர் ஒரு சமூகக் கருதுகோள். மேலும் அவர் முடுக்கிவிட்ட, ஆதிக்கம் செலுத்திய, உருவாக்கிய சமூக மாற்றத்தைப் பற்றித்தான் நாம் விவாதிக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக முன்பு முதலமைச்சராக இருந்தபோதும் சரி, தற்போது பிரதமராக இருக்கும்போதும் சரி, தேசிய அரசு என்ற லட்சியத்தை மோடி உருவாக்கினார். அறுதி விசுவாசம் அதற்கே என்பதை நிறுவினார். பிறகு, தேசத்தின் வரலாற்றை திருத்தியமைக்க முயன்றார். முதன்முறையாக வரலாறு, நவீன காலம் ஆகிய இரண்டிலும் திருப்திப்பட்டுக்கொள்ளும் ஒரு பெரும்பான்மை - மைய அரசை உருவாக்கினார். வரலாற்றில் தங்கள் தருணம் வந்துவிட்டது என்று பெருமைகொள்ளும் நடுத்தரவர்க்க இந்துக் குடும்பங்களை ஒன்றுதிரட்டினார். நேரு இல்லா பாரதத்தை உருவாக்கினார். சோஷலிசம், மதச்சார்பின்மை போன்ற சொற்களையே ஒழித்துக்கட்டியது அவரது அரசு. அரசியல் சட்டத்திலிருந்து அந்தச் சொற்களை பாஜகவால் நீக்க முடியவில்லை என்றாலும், அந்தச் சொற்களைப் பாஜக செயலிழக்கவைத்துவிட்டது.
இப்படியாக மோடி ஆட்சியின் முதல் ஆண்டு என்பது திட்டங்களிலோ பொருளாதாரத்திலோ நிகழ்த்தப்பட்ட சாதனையாக அல்ல; ஒரு பிம்பத்தை நிறுவி, தேர்தல் உலகத்தில் அதைப் பிரதிபலிக்கச் செய்ததில் அடைந்த வெற்றிதான் அது. பிரச்சாரத்துக்குக் கிடைத்த வெற்றி அது. வளர்ச்சிக்காக ஏங்கிய நடுத்தர மக்கள் அதில் தங்களுக்கேயான பிரத்யேக உலகைக் கண்டுகொண்டார்கள். இந்த உலகத்தின் எண்ணங்கள், நம்பிக்கைகள் போன்றவை குறித்து இனியும் அவமானம் கொள்ளத் தேவையில்லை. இங்கே மதத்தையும் அறிவியலையும் ஒன்றுசேர்க்கலாம். நினைவுகளூடாகக் கடந்த காலத்தை மீட்டெடுக்கலாம். வரலாற்றைப் புராணமாக்கி, அறிவியல் அடிப்படையில் அதை நிறுவ முயலலாம். பன்மைக் கருத்துகளின் இந்தியாவை அல்ல, குறிப்பிட்ட ஒரு இந்தியாவைத்தான் மோடியும் அவரது பாஜக அரசும் உருவாக்கினார்கள்.

மோடி 365° - வளர்ச்சி புல்டோசரும் உயரும் கைகளும்!


ஆசிஷ் கோத்தாரி
('தி இந்து’ நாளிதழில் 28-05-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரையின் முழு வடிவம். தமிழில்: ஆசை)

சுற்றுச்சூழலுக்கும் சூழல்சார்ந்து வாழும் மக்களுக்கும் 1980-களுக்குப் பின்பு மிக மோசமான காலகட்டமாக பாஜகவின் ஐந்து ஆண்டுகளும் இருக்கப்போகிறது என்பதுதான் மோடி அரசின் ஓராண்டு நிறைவில் நமக்குத் தெரியும் அறிகுறி.

சுத்தமான காற்று, சுத்தமான நீர், வளமான மண், ஆரோக்கியமான வனங்கள், புல்வெளிகள் போன்றவற்றைப் பற்றி இதற்கு முந்தைய அரசுகள் எதுவுமே அக்கறை கொள்ளவில்லை என்பதை வைத்துப் பார்க்கும்போது நமக்கு மேற்கண்ட அறிகுறி சொல்வது நிறைய. நம் அனைவரையும் தொடர்ந்து உயிர்வாழ வைக்கும் இவற்றையெல்லாம் எவ்வளவு பணம் கொடுத்தும் வாங்கிவிட முடியாது என்ற உண்மையைப் பார்க்க முடியாத வகையில் வளர்ச்சி மந்திரம் என்பது ஒவ்வொரு அரசின் கண்களையும் மறைத்திருக்கிறது. இந்தக் ‘கண்மூடித்தனமான’ நம்பிக்கையை மோடி அரசோ மேலும் ஒரு படி மேலே எடுத்துச்செல்கிறது.

மோடி 365° - கோஷங்களை வைத்தே வண்டியை ஓட்டிவிட முடியாது!



சித்தார்த் பாட்டியா

(‘தி இந்து’ நாளிதழில் 28-05-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரையின் முழு வடிவம் இது. தமிழில்: ஆசை)


மோடியின் கடுமையான விமர்சகர்கள்கூட ஒப்புக்கொள்ளும் விஷயம் என்று ஒன்று இருக்குமானால் அரசியலில் அவருக்கு இருக்கும் திறமைதான். பழைய காலத்து அரசியல் பாணியின் அடியொற்றிச் செயல்படும் அரசியல் ஆகிருதி அவர். உணவு, உறக்கம், சுவாசம் எல்லாமே அரசியல்தான் அவருக்கு. அரசியலை அவர் மிகவும் நுணுக்கமாகக் கவனித்துவருகிறார், அதன் நுட்பங்களையும் கூர்ந்துநோக்கி அதன் அடிப்படையில் தன் முடிவுகளை அவர் எடுக்கிறார். தனது முடிவுகளின் அரசியல்ரீதியிலான விளைவுகளையும் அவர் புரிந்துகொள்கிறார்.
இந்தத் திறமைதான் அவருக்குத் தேர்தலில் வெற்றிபெற மட்டுமல்ல (தேர்தல்களெல்லாம் அரசியல் விளையாட்டின் ஒரு பகுதி மட்டும்தான்), உச்சத்துக்குப் போகவும் உதவியது. மோடியை இடறிவிட்டிருக்கக் கூடிய எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்தன. அவரது இடத்தில் மற்றவர்கள் இருந்திருந்தால் நிச்சயம் இடறிவீழ்ந்திருப்பார்கள். அவற்றையெல்லாம் வெற்றிகொண்டுதான் மோடி மேலே வந்திருக்கிறார். அவர் அப்போதுதான் குஜராத் முதல்வராகப் பதவியேற்றிருந்தார். அந்த நிலையில் 2002 கலவரத்தால் ஏற்பட்ட கறை அவரது அரசியல் வாழ்க்கைக்கே முடிவு கட்டியிருக்கக் கூடியது. அப்போது அப்படித்தான் தோன்றியது. ஆனால், அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெகுதூரம் வந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்தக் கலவரம் குறித்து யாருக்கும் எந்த விரிவான விளக்கமோ வருத்தமோ தெரிவிக்காமல் அவர் பாட்டுக்கும் இந்த இடத்தை நோக்கி நடைபோட்டிருந்திருக்கிறார். மிகவும் தீர்மானகரமானவராகவும் செயலூக்கம் மிக்கவராகவும்தான் மோடியை மக்கள் இப்போது கருதுகிறார்களே தவிர பலவீனமானவராகவோ விமர்சனத்தைக் கண்டு ஒதுங்கிச்செல்பவராகவோ அவரைக் கருதுவதில்லை.

Tuesday, May 26, 2015

மோடியும் அவரது சக்கர வியூகமும்




(‘தி இந்து’ நாளிதழில் 26-05-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை. தமிழில்: ஆசை)


சக்கர வியூகத்துக்குள் நுழைவது எப்படி என்பதை சுபத்ராவிடம் கிருஷ்ணர் சொல்லிக்கொண்டிருந்தபோது சுபத்ரையின் கருப்பையில் இருந்த அபிமன்யும் கேட்டுக்கொண்டிருந்தான். உள்ளே நுழைவது எப்படி என்பதை அறிந்துகொண்ட அபிமன்யு வெளியே வருவது எப்படி என்பதை அறிந்துகொள்ளவில்லை. குருச்சேத்திரத்தில் நடந்த உக்கிரமான போரில் அபிமன்யு மரணமடைவதற்கு அதுதான் காரணம். ஆனால், காந்தி அப்படி இல்லை. சக்கர வியூகத்தை வெகு சுலபமாக வெற்றி கொண்டவர் அவர். உள்ளே நுழைந்தது மட்டுமல்ல, வெளியே வந்ததிலும் அவ்வளவு லாவகம். அவரே தேர்ந்தெடுத்த நேரம், இடம் ஆகியவற்றில் அவர் இதைச் செய்தார். அகிம்சையைப் பிரயோகித்து சக்கர வியூகத்தை அவர் வெற்றிகொண்டார். இப்படியாக சுதந்திர இந்தியாவை அவர் உருவாக்கினார்.

உப்புக்கழுதைகள் எப்படித் தொலைந்தன?



தங்க. ஜெயராமன்  

(‘தி இந்து’ தமிழ் நாளிதழில் 26-05-2015 அன்று வெளியான எனது பேராசிரியர் கட்டுரையின் முழு வடிவம் இங்கே)

                          
 அப்போது கழுதைகள்தான் உப்பைச் சுமந்துகொண்டு தெருத் தெருவாக வரும். உப்பு வாங்க கடைக்குப் போகவேண்டாம். உப்புக்கழுதைகளை இப்போது காணமுடிவதில்லை.   கன்னாரத் தெருக்களையே காண முடியாது. கொல்லுப்பட்டறை தேடிப்போனாலும் தென்படாது. வண்டியில்லை. எனவே மாடும் இல்லை. நெல் குத்துவதில்லை. எனவே உரல் இல்லை, உலக்கையும் இல்லை.  வளர்ச்சியின் வேகம் இவற்றை அடித்துச்செல்வது வழக்கம்தானே! ஆனால், உப்புக்கழுதைகளின் கதையே வேறு!

உப்புத்தொழிலும் நசிந்துபோய் இப்போதோ, அப்போதோ என்றுதான் இருந்தது. கருணைக்கொலையாக 2006ல் ஒரு சட்டம் செய்தார்கள். பிறகு 2011ல் சில விதிகளை வகுத்தார்கள். விளைந்துவரும் உப்பை அப்படியே மனிதர்கள் உண்பதற்கு விற்கக்கூடாது என்று தடை.  கடைத்தெருவில் இருந்த உப்பை ஒரு மாவட்ட அதிகாரி பறிமுதல் செய்ததாகச் சில ஆண்டுகளுக்கு முன் செய்தி வந்தது. உற்பத்தி செய்யக்கூடாது, விற்கக்கூடாது, விற்பனைக்கு வைத்திருக்கக்கூடாது, வாகனங்களில் ஏற்றிச் செல்லக்கூடாது என்று ஆங்கிலேயர்கள் ஆட்சியில் உப்புக்குத் தடை இருந்தது நினைவுக்கு வந்தது. எளியவர்களையும் விடுதலை இயக்கத்துக்கு ஈர்த்த முதல் போராட்டம் இந்தத் தடையை உடைப்பதற்கான உப்புச் சத்தியாக்கிரகம்தான்.   சாதாரண உப்பு நாட்டின் சுயமரியாதைப் பிரச்சினையானது. பிரச்சார உத்தியாக அந்தப் போரை மீண்டும் நிகழ்த்திக் காட்டுபவர்கள்தான் தற்போதைய தடைச் சட்டத்தையும் உருவாக்கினார்கள். காரணம் வேறாக இருப்பதால் நீங்கள் இதற்கு ஒரு முரண்பாடு கற்பிக்க முடியாது.

பசுமை வல்லரசாகிறது ஜெர்மனி




தாமஸ் எல். ஃப்ரீட்மேன்

('தி இந்து’ தமிழ் நாளிதழில் 26-05-2015 அன்று வெளியான வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை, தமிழில்: ஆசை)


பெர்லினில் உள்ள அமெரிக்க அகாதமியில் நான் கழித்த ஒரு வாரம் எனக்கு இரண்டு நேரெதிரான உணர்வுகளை ஏற்படுத்தியது: முதலாவது, இன்றைய ஜெர்மனிக்கு சமாதானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட வேண்டும். இரண்டாவது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சமாதான நிலைப்பாட்டிலிருந்து ஜெர்மனி மீண்டுவந்து, இன்னும் தீவிரமாக செயல்படக்கூடிய உலக சக்தியாக மாற வேண்டும். இரண்டையுமே நான் பாராட்டாகத்தான் சொல்கிறேன்.

Monday, May 18, 2015

அமெரிக்காவை வெல்லுமா சீனா?






- இன்றைய சூழலில் வெளிப்பார்வைக்குப் புலப்படாமல் ஏராளமான விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ‘ஒரே நாடு, இரண்டு அமைப்புகள்என்ற கோட்பாடு ஹாங்காங்குக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவைச் சித்தரிப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், உண்மை என்ன தெரியுமா? அமெரிக்க-சீனப் பொருளாதாரங்களின் எதிர்காலம் இன்று ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கிறது. எந்த அளவுக்கு என்றால் அவைதான் நாம் உற்றுநோக்க வேண்டியஒரே நாடு: இரண்டு அமைப்புகள்என்கிற அளவுக்கு.

அறிவோம் நம் மொழியை: மழையின் பாடல் கேட்கிறதா?


ஆசை

மழையால் உருவான சொற்கள், வழக்குகள்தான் எத்தனையெத்தனை!

வானம் மழைக்கு ஆயத்தமாகியிருக்கிறது என்பதையே ‘வானம் இருட்டிக்கொண்டுவருகிறது’, ‘வானம் மூடியிருக்கிறது’, ‘வானம் கம்மியிருக்கிறது’, ‘வானம் கம்மலாக இருக்கிறது’ என்றெல்லாம் விதவிதமாகச் சொல்வோமல்லவா! இவற்றில், ‘இருட்டிக்கொண்டுவருகிறது’ என்று சொன்னால் உடனே மழை வரும் என்று பொருள்.

‘வானம் வெளிவாங்கியிருக்கிறது’ என்றால் மேகங்கள் மூடி, மழை பெய்துகொண்டிருந்த வானத்தில் ஆங்காங்கே மேகங்கள் விலகி நீல வானம் தெரிகிறது என்றும், மழை விட்டிருக்கிறது என்றும் பொருள். வெளிவாங்கிய வானத்தில், அந்த இடைவெளியில் இரவில் ஆங்காங்கே விண்மீன்கள் தெரியும் அழகைத்தான்,

பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல்வயிரம்
நட்டநடு நிசியில் – தெரியும்
நக்ஷத்திரங்களடீ’
என்று பாரதி பாடினாரோ?

‘வானம் வெக்காளித்திருக்கிறது’ என்றால் மேகங்கள் நகர்ந்து மழை விட்டிருக்கிறது என்றும், ‘வானம் கீழ்மாறுகிறது’ என்றால் வானத்தின் அடியில் மேகங்கள் திரண்டு இடியும் மின்னலுமாக வருகின்றன, மழை பெய்யக்கூடும் என்றும் பொருள்.

மழை விட்ட பிறகு வானத்தில் காற்றடித்த மணல் பரப்பை போலவோ, சிறுசிறு அலைகளாகவோ மேகப் பரப்பு தெரியுமே அதை ‘வானம் மணல் கொழித்திருக்கிறது’ என்று சொல்வதுண்டு.

மேகங்கள் அடுக்கடுக்காக கோபுரம்போல் திரண்டிருப்பதைப் பார்த்திருப்போம். தொடுவானத்துக்குச் சற்று மேலே தொடங்கி வான முகடுவரை உயர்ந்திருக்கும். இதை, ‘வானத்தில் கோபுரம் கட்டியிருக்கிறது’ என்பார்கள்.
(மழைத் தமிழ் தொடரும்)


வட்டாரச் சொல் அறிவோம்!

‘அட்டணக்கால்’ என்ற சொல் தொடர்பாக வாசகர் அரிஸ்டார்கஸ் நம்முடன் பகிர்ந்துகொண்டதிலிருந்து சிறு பகுதி:

ஒரு காலை 'ட' போல் மடித்து மறுகாலின் முட்டியில் தாங்குமாறு வைத்து அமரும் நிலையை 'அட்டணக்கால்' என்கிறோம். கரிசல் வட்டாரத்தில், 'அட்ணங்கால்', 'ரெட்ணங்கால்', 'அட்டளங்கால்' என்றும், நாஞ்சில் வட்டாரத்தில் 'நட்டணக்கால்' என்றும் இதற்கு பல பெயர்கள் உண்டு. 'சம்மணம்' (சப்பணம்) போன்று ஓர் அமரும் நிலையாக மட்டும் அட்டணக்காலை நாம் பார்ப்பதில்லை. நம் சமூகத்தில், சில சூழல்களில் ஒருவரின் மதிப்பு, கவுரவம், பணபலம், அதிகாரம், செருக்கு, கம்பீரம் முதலியவற்றின் அடையாளமாகவும் 'அட்டணக்கால்' இருக்கிறது. ஊர்க்கூட்டங்களில் தலைவர்களும் நாட்டாமைகளும் 'அட்டணக்கால்' போட்டுத்தான் அமர்ந்திருப்பார்கள். ஜெயமோகன் எழுதிய 'நிலம்' சிறுகதையில், 'அட்டணக்கால்' கவுரவத்தின் அடையாளமாகப் பின்வருமாறு வரும்:
‘காட்டுவேலை ஏன் செய்றே? நீ மகாராணியாக்கும்… நாக்காலியிலே அட்டணக்கால் போட்டுட்டு ஒக்காரு…’

அவள் சிரித்து ‘ஆமா… அட்டணக்கால் போடுறாங்க… மானம்பாத்த பூமியிலே அது ஒண்ணுதான் கொற.’
சிறுவர்கள் தரையில் 'அட்டணக்கால்' போட்டு வரிசையாக உட்கார்ந்திருக்க, ஒவ்வொரு காலாக எண்ணி ‘அட்டணக்கா புட்டணக்கா அடுக்கி வச்ச மாதுளங்கா…’ (சிறுவர் கிராமியப் பாடல்) எனப் பாடிக்கொண்டே ஆட்டத்துக்கு ஆள்பிரிக்கும் சிறுவர் விளையாட்டொன்றை கி. ராஜநாராயணன் குறிப்பிடுகிறார். 'அட்ணங்கால்', 'ரெட்ணங்கால்', 'அட்டளங்கால்' 'நட்டணக்கால்' என்று வட்டார வழக்கிலும் 'அட்டணக்கால்' என்று பொது வழக்கிலும் வழங்கப்படும் இச்சொல் இன்று அருவழக்காகிவிட்டது. இன்றைய தலைமுறை இதனை 'கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கான்' என்கிறது.

வாசகர்கள் உங்கள் வட்டாரத்தின் தனிச்சிறப்பு மிக்க சொற்களையும் வழக்குகளையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே!




  - நன்றி: ‘தி இந்து’

- ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தப் பத்தியைப் படிக்க: மழையின் பாடல் கேட்கிறதா?

Saturday, May 16, 2015

இது இளைந்தலைமுறைக்கான பாரதி! பழ. அதியமான் நேர்காணல்




ஆசை
 (16-05-2015 அன்று ‘தி இந்து’ நாளிதழில் வெளியான நேர்காணலின் முழு வடிவம் இது)

பாரதியை சந்தி பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்போது,
ஏன் தோன்றியது?

என் மகளிடம் (அப்போது அவள் 5-ம் வகுப்பு) பாரதியின் ஒரு கவிதையைக் கொடுத்துப் படிக்கச் சொன்னேன்; அவள் திணறினாள். எனக்குத் ‘திடுக்’கென்றது. பிறகு, முதுகலை தமிழ் படித்தவர், ஊடகவியலாளர், பொறியாளர் என்று சிலரிடமும் கொடுத்துப் படிக்கச் சொன்னால் அவர்களும் திணறினார்கள். இவர்கள் அனைவரும் தமிழ்வழியில் படித்தவர்களே. இந்தத் தலைமுறையினரால் படிக்க முடியவில்லை என்பதால் ஒரு நல்ல கவிதையை விட்டுவிடுவது சரியா? பாரதியை எவரும் எளிதில் படிக்கும் வகையில் கடினமான சந்திகளைப் பிரித்துப் படிக்க வசதி செய்துதர வேண்டும் என்ற எண்ணம் இப்படித்தான் தோன்றியது.

சந்தி பிரிப்பது என்பது ‘அலக் அலக்காக’ பிரிப்பதல்ல. கடின சந்தியை மட்டும் பிரிப்பது (காண்க: பெட்டி). இலக்கணத்தையும் பாரதியையும் நன்கறிந்த அன்பர்களின் உதவி எனது பணியை மேலும் செம்மையாக்கியது.
      
சந்தி பிரிக்காதது:
கன்னாணுந் திண்டோட் களவீரன் பார்த்தனொரு
வின்னா ணொலி கேட்ட மேன்மைத் திருநாடு.

சந்தி பிரித்தது:
கல்நாணும் திண் தோள் களவீரன் பார்த்தன் ஒரு
வில்நாண் ஒலி கேட்ட மேன்மைத்திருநாடு


சந்தி பிரிப்பு மட்டுமல்ல, பாரதியின் சொற்களுக்குப் பொருள் தர வேண்டிய தேவையும் ஏற்பட்டுவிட்டது.

நின்னையே ரதிஎன்று நினைக்கிறேனடி! செல்லம்மா
தன்னையே சசி என்று சரணம் எய்தினேன்

இந்தப் பாடலில் ‘சசி’ என்பதற்கு என்ன பொருள்? சசி என்றால் இந்திராணி, நிலவு என்றெல்லாம் பொருள் உண்டு. இந்தப் பொருளெல்லாம் புலப்பட்டால் கவிதை மேலும் பளிச்சென்று நம் முன்னால் பிரகாசிக்குமல்லவா! ஆகவே, இதுபோன்ற எண்ணற்ற சொற்களுக்கு எனது பதிப்பில் பொருள் தந்திருக்கிறேன்.


எத்தனை ஆண்டு உழைப்பு இது? என்ன மாதிரி சிரமங்கள், சிக்கல்களை எதிர்கொண்டீர்கள்?

10 ஆண்டுகள் உழைப்பு இது. அலுவலக நேரம் போக கிடைக்கும் நேரங்களிலெல்லாம் இதற்காக உழைத்திருக்கிறேன். சிக்கல்கள் என்று பார்த்தால் பாடபேதங்கள்தான் முதல் சிக்கல். நல்லவேளை, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்பு, சீனி. விசுவநாதன் பதிப்பு, அரசுப் பதிப்பு போன்றவற்றின் உதவியால் பெரும்பாலான சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள முடிந்தது.

அடுத்தது, அருஞ்சொற்பொருள் தருவதில் ஏற்பட்ட சிக்கல். ‘கதலி’ என்றொரு சொல் பாஞ்சாலி சபதத்தில் இடம்பெற்றுள்ளது. வாழைப்பழம், காற்றாடி போன்ற பொருள்கள் அங்கே பொருந்திவரவில்லை. பல அகராதிகள், நிகண்டுகள், அறிஞர்கள் பலர் என்று தேடி அலைந்தும் பலன் இல்லை. பாரதியே ‘கதலி’ என்பது ஒருவகை மான் என்று பொருள் குறித்துவைத்திருப்பது அறிந்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனினும், ‘சங்கரனைத் தாங்கும் நந்தி பத சதுரம்’ என்ற தொடரின் பொருள் திருப்திகரமாக இன்னும் கிடைக்கவில்லை. இப்படி எஞ்சியிருக்கும் ஐயங்களின் பட்டியல் இரண்டு பக்க அளவில் உள்ளது.

    
சந்தி பிரிக்கும்போது ஓசைநயம் பலியாகிவிடுமல்லவாஓசைநயம் குறைபட்ட பாரதி இன்றைய தலைமுறையைக்கவராமல் போய்விடும் அபாயம் இருக்கிறதல்லவா?

பாரதியின் கவித்துவத்தில் சொல்லின்பம் ஒரு முக்கியமான பகுதி. எனினும், ஊடாடும் உணர்ச்சியும் பொருளும்தான் மிகவும் முக்கியம். ‘அமுதூற்றினையொத்த இதழ்களும் நிலவூறித் ததும்பும் விழிகளும்’ என்பதில் கிடைக்கும் சுகானுபவம் ‘அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும் நிலவு ஊறித் ததும்பும் விழிகளும்’ என்று சந்தி பிரிக்கும்போது சற்று குறைகிறதுதான். ஆனால், ஒருமுறைக்கு இருமுறை அதைப் படித்துப் புரிந்து சேர்த்து வாசித்து, பொருள் மனத்துக்குப் போகும்போது இயல்பாகவே சந்தி சேர்ந்து ஓசை இன்பம் கிடைத்துவிடும்.

பொருள் உணர்ந்து படிக்க விரும்பும் இன்றைய இளைஞர்களுக்குத் தீயைப் போல ஒளிவீசும் பாரதி, ஓசையைத் தாண்டியும் கவர்வான். ஏனெனில், தனது உணர்ச்சியை நம்மிடம் கடத்திவிடுவதில் வல்லவன் அவன்.   


இந்தப் பணியைத் தொடங்கிய பிறகு பாரதியில் நீங்கள் கண்டடைந்த ஆச்சர்யங்கள் பற்றி சொல்லுங்கள்.


ஆச்சரியமூட்டும் சொற்பிரயோகம், உணர்ச்சிக் குமுறல் போன்றவற்றைத் தாண்டி வேறு பலவும் பாரதியிடம் ஆராயவும் அனுபவிக்கவும் உள்ளன. அர்ஜுனன் பாரதிக்குப் பிடித்த மகாபுருஷனாகக் காட்சியளிப்பது ஏன் எனத் தெரியவில்லை. எடுத்ததற்கெல்லாம் பார்த்தனே (அர்ஜுனன்) பாரதி முன் வந்து நிற்கிறான். கடந்த பிறவிகளைப் பேசும் ஒரு கற்பனையில் தான், அர்ஜுனனின் மனைவி என்கிறான் பாரதி. இப்படி பார்த்தன் வரும் இடங்கள் ஏராளம். இதுபோல், என்னளவில் புதிய விஷயங்கள் பல கிடைத்துள்ளன.
  
பாரதியை வருங்காலத் தலைமுறையிடம் கொண்டுசேர்க்க வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

காலத்துக்கேற்ப பாரதியைக் கொண்டுசேர்க்க சந்தி பிரித்த இந்தப் பதிப்பும், சமீபத்தில் வெளிவந்த உரைப் பதிப்பும் தொடக்கப் புள்ளிகள். பாரதிக்குச் சொல்லடைவு தயாரித்துத் தரலாம். பாரதி கவிதைகளில் இடம்பெறும் வரலாற்று, இதிகாச மாந்தர்கள், சம்பவங்களைத் தொகுத்து மேலும் விவரம் சேர்த்துக் களஞ்சியம் தயாரித்துத் தரலாம. வகைவாரியாகத் தேர்ந்தெடுத்த பாரதியின் கவிதைப் பதிப்புகளும் அவசியம். காலத்துக்கேற்ப, பாரதியைப் பொருளோடு கணினியிலும் இணையத்திலும் ஏற்றி வைக்கலாம். இன்னும் யோசித்தால் வேறு பலவும் சொல்ல முடியும்.
- நன்றி ‘தி இந்து’. 
 ‘தி இந்து’ இணையதளத்தில் படிக்க: 

இது இளந்தலைமுறைக்கான பாரதி!- பழ. அதியமான் நேர்காணல்



பாரதி கவிதைகள்
பதிப்பாசிரியர்: பழ. அதியமான்

விலை: ரூ. 750

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில்-629001

Thursday, May 7, 2015

பேறுகால வழிகாட்டி, தந்தையர்க்கும் சேர்த்து…



மகி (ஆசை)
(‘தி இந்து’ நாளிதழில் 02.05.2015 அன்று வெளியான மதிப்புரையின் சுருக்கப்படாத வடிவம் இது)

புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதுவதற்கு அந்தப் புத்தகத்தைப் படிப்பதுதான் அடிப்படை. ஆனால், வெகுசில புத்தகங்களைப் படிப்பது மட்டுமல்லாமல் பயன்படுத்தியிருந்தால் மட்டுமே அதைப் பற்றிய விமர்சனத்தை எழுதமுடியும். அப்படிப்பட்ட ஒரு புத்தகம்தான் டாக்டர் கீதா அர்ஜூனின் ‘ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி’ புத்தகம். வாசகராக மட்டுமல்லாமல் ஒரு பயனாளியாகவும் இருந்த இந்தக் கட்டுரையாளரின் அனுபவங்கள் வழியே இந்தப் புத்தகத்தைப் பார்ப்பது கூடுதல் மதிப்பைச் சேர்க்கும்.   

டாக்டர் கீதா அர்ஜூன், சென்னையின் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர்களில் ஒருவர். மருத்துவத் துறையில் அறத்தின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் கீதா அர்ஜூனின் மூன்று தசாப்தங்களுக்கும் மேற்பட்ட அனுபவங்களின் விளைவாகவும் தொடர்ச்சியாகவும் வெளியான ஆங்கிலப் புத்தகம்தான் ‘பாஸ்போர்ட் டூ எ ஹெல்தி பிரெக்னென்சி’. இந்தப் புத்தகம் கடந்த ஆண்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு திருமகள் புத்தக நிலையத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

பேறுகாலம் என்னும் போராட்டம்
பேறுகாலம் என்பது மன உளைச்சல், உடல் உபாதைகள், எண்ணற்ற சந்தேகங்கள் போன்றவை மட்டுமல்ல சந்தோஷங்களும் அரிய தருணங்களும் நிரம்பியதுகூட. இப்படிப்பட்ட முக்கியமான காலத்தில் கர்ப்பிணிப் பெண்ணை அவருடைய தாய்வீட்டுக்கு அனுப்பிவிட்டு ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா…’ என்கிறரீதியில் இருக்கும் ஆண்கள் ஏராளம். பிரசவ நாள் நெருங்கிய பிறகோ, பிரசவம் முடிந்த பிறகோ, தூரத்து உறவினரின் திருமணத்தில் தலைகாட்டிவிட்டுச் செல்வதுபோலத்தான் ஆண்களில் பலரும் செய்வது வழக்கம். பேறுகாலம் என்பது ஏதோ கர்ப்பிணிப் பெண்களும் அவர்கள் வீட்டாருக்கும் மட்டுமேயான பொறுப்பு என்பதுபோல் இருக்கும் பழமைவாத மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் கீதா அர்ஜூன். பேறுகாலத்துக்கு முழுக்க முழுக்க கணவர்தான் பொறுப்பு என்கிறார். குழந்தை பிறந்ததற்குப் பிறகல்ல, குழந்தை உருவாகும் தருணத்திலேதான் தந்தை என்ற ஸ்தானம் ஒருவருக்குக் கிடைக்கிறது. எனவே, அவருடைய பொறுப்பும் அங்கிருந்தே ஆரம்பிக்கிறது.

கருத்தரித்த ஒருசில வாரங்களுக்குள் பெண்களின் உடலிலும் மனத்திலும் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் விசித்திரமானவை. கர்ப்பிணியை மட்டுமல்ல அவரது கணவரையும் பல சமயங்களில் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கிவிடக் கூடியவை. அந்தத் தருணங்களில் சரியான வழிகாட்டுதல் இல்லாவிட்டால் பேறுகாலம் முழுவதுமே மனைவி- கணவன் இருவருக்கும் பெரும் போராட்டமாகப் போய்விடும். மருத்துவர் எப்போதும் நம் கூடவே இருக்க முடியாதல்லவா? ஆகவே, அது போன்ற தருணங்களில் மருத்துவரின் மிகச் சிறந்த பிரதிநிதியாக இந்தப் புத்தகம் விளங்குகிறது.

சில பெண்களுக்குப் பேறுகாலத் தொடக்கத்தில் வாந்தி என்பது அவ்வளவாகப் பிரச்சினை ஏற்படுத்தாது. ஆனால், சில பெண்களுக்கு கதையே வேறு, வாட்டி வதைத்துவிடும். பிரசவ அறைக்கு வெளியே காத்திருக்கும்போது ஏற்படும் தவிப்பைப் போன்ற உணர்வு அந்தப் பருவத்தில் கணவன்மார்களுக்கு ஏற்படும். ஒரு நாளைக்குப் பத்துக்கும் மேற்பட்ட முறை வாந்தி, சாப்பாட்டைக் கண்டாளே எரிந்துவிழும் மனைவி, தொடர்ந்து சாப்பிடாமல் இருப்பதால் ஏற்படும் மோசமான உடல் எடை குறைவு எல்லாம் சேர்ந்து தீராத மன உளைச்சலைக் கணவன்மார்களுக்கு ஏற்படுத்திவிடும். மனைவி சாப்பிடாவிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை என்னவாகும் என்பதுதான் எல்லாவற்றையும் விடப் பெரிய தவிப்பாக இருக்கும். அப்படியெல்லாம் பயப்படவே தேவையில்லை, வயிற்றில் உள்ள சிசுவுக்குத் தேவையான சத்துகளும் தடையில்லாமல் சென்று சேரும் என்பது போன்ற விஷயங்களை மருத்துவர் எப்படித் தெளிவுபடுத்துவாரோ அதே அளவில் இந்தப் புத்தகமும் தெளிவுபடுத்துகிறது.

முதல் உதை தரும் பரவசம்
பேறுகாலம் ஏற்படுத்தும் எல்லாப் பிரச்சினைகளையும் மறக்கடிக்கக் கூடியது வயிற்றுக்குள் அந்த சிசு கொடுக்கும் முதல் உதை. அதிலிருந்து வயிற்றுக்குள் நடக்கும் கால்பந்தாட்டம் பெரும் அதகளமாக இருக்கும். தாயால் மட்டுமல்ல தந்தையாலும் அந்த ஆட்டத்தையெல்லாம் நன்றாக உணர முடியும். தாயின் வயிற்றில் ஒரு பக்கத்திலிருந்து மேடு ஒன்று அந்தப் பக்கத்துக்கு நகரும். பேறுகாலம் தரும் பரவசங்களில் இதுவும் ஒன்று. சிசுவின் அசைவுகள் அது ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கு அடையாளம். ஒரு நாளுக்குக் குறைந்தபட்சம் 20 முறையாவது அசைவுகள் இருக்க வேண்டும். அப்படி அசைவுகள் இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும் என்று இந்த நூலில் குறிப்பிட்டிருப்பது மிகவும் இந்தக் கட்டுரையாளருக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.

கட்டுரையாளரின் மனைவிக்குப் பிரச்சினைக்குரிய பிரசவமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆகவே, சிசுவின் அசைவுகள் தினமும் கவனிக்கப்பட்டன. அசைவே அற்ற ஒரு நாளில் கட்டுரையாளருக்கும் அவரது மனைவிக்கும் சொல்லவே முடியாத அளவு பதற்றம் ஏற்பட்டது. அப்போது இந்தப் புத்தகமே உதவிக்கு வந்தது. குழந்தை மீண்டும் அசைய ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட மகிழ்ச்சி அளவிட முடியாதது. துள்ளலான இசை, குழந்தையின் அசைவைத் தூண்டும் என்று மருத்துவர் குறிப்பிட்டதற்கிணங்க அந்தக் கட்டத்தில் கென்னி-ஜியின் இசையும் பாடல்களும் உதவிக்கு வந்தன. இசை கேட்டு சிசு உதைத்தது அந்த சிசுவின் பிறப்புக்கு ஒப்பான பரவசத்தைத் தந்தது.

கரு வளர்ச்சியின் நிலை, அப்போது பெண்களுக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை வார அடிப்படையில் இந்தப் புத்தகம் பதிவுசெய்கிறது. மருத்துவர் நம் அருகில் எப்போதும் இருக்கிறார் என்ற உணர்வை அதிகமாகக் கொடுப்பது இந்தப் பகுதி.

பேறுகாலம் குறித்து நிலவும் மூடநம்பிக்கைகளைத் தகர்ப்பதுபேறுகாலத்தில் பின்பற்ற வேண்டிய ணவுப்பழக்கம் முதலானவற்றைப் பற்றிய தகவல்களைக் கொடுப்பது போன்றவையும் இந்தப் புத்தகத்தின் சிறப்பானஅம்சங்கள்இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஒரு பொறுப்பான தந்தைமை உணர்வை ஆண்களுக்குஏற்படுத்துவது இந்த ூலின் சாதனை எனலாம்.


ஆரோக்கியமான கர்ப்பத்துக்கு ஒரு வழிகாட்டி
டாக்டர் கீதா அர்ஜூன்
தமிழில்: ஹேமா நரசிம்மன்
விலை: ரூ. 350
வெளியீடு: திருமகள் நிலையம்,
புதிய எண்: 13, சுகான்ஸ் அப்பார்ட்மெண்ட்ஸ்,
சிவப்பிரகாசம் சாலை, தி.நகர், சென்னை – 600 017
தொலைபேசி: 044-24342899

 -நன்றி ‘தி இந்து’
‘தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்த மதிப்புரையைப் படிக்க: பேறுகால வழிகாட்டி, தந்தையர்க்கும் சேர்த்து…
 
    


Wednesday, May 6, 2015

போகும் வழியும் ஒரு பள்ளிக்கூடம்தான்


ஆசை  

(‘தி இந்து’ நாளிதழின் நம் கல்வி நம் உரிமை தொடரில் 05-05-2015 அன்று வெளியான கட்டுரை)

முப்பதைத் தாண்டியவர்களா நீங்கள்? அப்படியென்றால் உங்களில் பெரும்பாலானோருக்கும் இப்படிப்பட்ட பள்ளிப் பருவம் வாய்த்திருக்கும்.

காலை 8.30. இட்லியைப் பிட்டு சாப்பிட்டுக்கொண்டிருப்பீர்கள். வாசலிலிருந்து குரல் கேட்கும், “ஏய், மணிமாறா வாடா. பள்ளியோடத்துக்கு லேட்டாவுது”. உங்களோடு மூன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் குமாரின் குரல்தான் அது. “தோ வந்துட்டேன்டா” என்று எழுந்துபோய், கையைக் கழுவிவிட்டு வீட்டுச் சுவரில் மாட்டியிருக்கும் மஞ்சப் பையை எடுத்துக்கொண்டு அம்மாவிடம் சொல்லியதும் சொல்லாததுமாக ஓட்டம் பிடிப்பீர்கள். குமாரும் நீங்களும் சேர்ந்து அடுத்த தெருவில் இருக்கும் பீட்டரையும் கூட்டிக்கொண்டு நடைபோடுவீர்கள். இப்படியாக ஒரு சிறு கூட்டம் சேர்ந்துவிடும். பள்ளி போய் சேர்வதற்குள் பேச்சு, பாட்டு, ஓட்டம், சண்டை என்று உங்களுக்குள் பெரும் கச்சேரியே நடந்து முடிந்திருக்கும். பள்ளி முடிந்த பிறகும் இப்படித்தான். வீர சாகசங்களையெல்லாம் முடித்த பிறகுதான் வீடு திரும்பல். வீடு திரும்பியதும் அம்மா தரும் டீ, காபி, நொறுக்குத் தீனியையெல்லாம் முடித்துவிட்டு விளையாட்டுக்குக் கிளம்பிவிட வேண்டியது. கிரிக்கெட், ஃபுட்பால் போன்ற விளையாட்டுகளெல்லாம் சற்று தாமதமாகத்தான் நம் பள்ளிப் பருவத்தில் நுழைந்திருக்கும். விளையாட்டென்றால், திருடன் - போலீஸ், நாடு பிடித்தல், பூப்பறிக்க வருகிறோம், கிச்சுக்கிச்சுத் தாம்பலம், கூட்டாஞ்சோறு முதலானவைதான். சிறுவர்-சிறுமியர் எல்லோரும் கலந்துகட்டி ஆடும் விளையாட்டுகள் இவை. தவிர, அந்தந்த நேரத்துக்கு அந்தந்த இடத்துக்கு ஏற்றார்போல் நீங்களே கண்டுபிடித்து விளையாடும் விளையாட்டுகளும் உண்டு. இருட்ட ஆரம்பித்த பிறகு வீட்டுக்கு வந்ததும் அம்மா, அப்பா சொல்லாமலேயே பாடப் புத்தகத்தை எடுத்துப் புரட்ட ஆரம்பிப்பீர்கள். இதுதான் அன்றாட நிகழ்வுச் சுழற்சி.

நியூட்டன் அறிவியலின் வெற்றி


ரெபெக்கா ஹிக்கிட்
(தமிழில் சுருக்கமாக: ஆசை, ‘தி இந்து’ நாளிதழில் 06-05-2015 அன்று வெளியான கட்டுரை)

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1715-ல், இதே வாரத்தில் மே 3-ம் தேதி நிகழ்ந்த முழு சூரிய கிரகணம், அறிவியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான நிகழ்வு. நியூட்டனின் பிரபஞ்ச ஈர்ப்பியல் விதியை அடிப்படையாகக் கொண்டு முதன்முதலில் கணிக்கப்பட்ட நிகழ்வு அது. அப்போது, அந்த சூரிய கிரகணத்தின் பாதையை சித்தரிக்கும் வரைபடம் முன்கூட்டியே பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டது. அந்தச் சூரிய கிரகணம் லண்டன், கேம்பிரிட்ஜ் முதலான இடங்களில் தெரிந்தது. வானியலாளர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் அந்த நிகழ்வைப் பார்த்ததுடன் புதிய வானவியலின் கணிப்புத் திறனையும் கண்டு வியந்துபோனார்கள்.
அந்தக் கிரகணத்தின் பெயர் ‘ஹாலியின் கிரகணம்’ என்று விக்கிபீடியா நமக்குக் கூறும். வானியலாளர் எட்மண்டு ஹாலியின் நினைவாக அந்தப் பெயர் வைக்கப்பட்டது. அவர்தான் அந்தக் கிரகணத்தின் நேரத்தைப் பற்றித் துல்லியமாக கணித்தார். மேலும், எளிமையாகப் புரியும் விதத்தில் அந்தக் கிரகணப் பாதையின் வரைபடத்தையும் அவர் உருவாக்கியிருந்தார். ஹாலியின் மற்றொரு கணிப்பு, ஹாலி வால் நட்சத்திரம் 1759-ல் மீண்டும் வரும் என்பது. நியூட்டானிய அறிவியலுக்குக் கிடைத்த வெற்றிதான் அந்தக் கணிப்பும். அந்தக் கணிப்பு நிரூபணமாவதைப் பார்ப்பதற்கு அவர் உயிரோடு இல்லை. ஆனால், கிரகணம் குறித்த கணிப்பின் வெற்றியை அவர் தன் வாழ்நாளிலேயே அனுபவித்தார். ‘கிரேன் கோர்ட்’டில் இருந்த ராயல் சொசைட்டியின் கட்டிடத்திலிருந்து தனது வானியல் அவதானத்தை அவர் மேற்கொண்டார். அந்தக் காலைப் பொழுதின் வானம், ‘பளிச்சென்ற நீலத்துடன் மிகவும் துலக்கமாகக் காட்சியளித்தது’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.