Thursday, March 31, 2016

நம் கைகளில் குழந்தைகளின் ரத்தம்!


ஆசை

(‘தி இந்து’ நாளிதழில் 31-03-2016 அன்று வெளியான கட்டுரை)

எந்த மதத்தையும் சித்தாந்தத்தையும்விட புனிதமானது குழந்தையின் உயிர்!
குயில் குஞ்சின் பசிக் குரலுக்கும் பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த ஒரு சிறுமி பிரதமர் நவாஸ் செரீபிடம் கேட்ட கேள்விக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
அந்த மரக்கிளையில் இரண்டு காகங்கள். நடுவே ஒரு குயில் குஞ்சு. அலகை அகலத் திறந்துகொண்டு இரண்டு காகங்களுக்கும் நடுவில் கத்திக்கொண்டிருக்கிறது அந்த குஞ்சு. காகங்கள் கண்டும் காணாததுபோல் இருக்க முயல்கின்றன. இடது பக்கக் காகத்தை நோக்கிக் கத்தியபடியே குயில் குஞ்சு செல்கிறது. அந்தக் காகமோ சற்று நகர்ந்துசெல்கிறது. இப்போது வலது பக்கக் காகத்தை நோக்கிக் கத்திக்கொண்டே நகர்ந்துசெல்கிறது குயில் குஞ்சு. அந்தக் காகமும் சற்று நகர்ந்துசெல்கிறது. இடப் பக்கமும் வலப் பக்கமுமாக மன்றாடுகிறது குயில் குஞ்சு. காகங்களும் இப்படியும் அப்படியுமாக நகர்கின்றன. குயில் குஞ்சை அப்படியே விட்டுவிட்டுப் பறந்து சென்றிருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யவில்லை காகங்கள். அதே நேரத்தில் குயில் குஞ்சின் குரலுக்குச் செவிசாய்க்கவுமில்லை காகங்கள். இப்படியே பத்து நிமிடம் சென்ற பிறகு அந்தக் காகங்களில் ஒன்று சட்டென்று தன் வாயில் இருந்த இரையைக் குயில் குஞ்சுக்கு ஊட்டிவிட்டது. தீனி கிடைத்த பின் சாந்தமானது குயில் குஞ்சு.
இன்னொரு குரல்!
பாகிஸ்தானின் லாகூரில் ஒரு பூங்காவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 72 பேர் உயிரிழந்தார்கள். முன்னூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். இன்னும் பலர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கொல்லப்பட்டவர்களில் 29 பேர் குழந்தைகள். ஈஸ்டர் அன்று நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதல் கிறிஸ்தவர்களை மையமாக வைத்து நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Wednesday, March 30, 2016

ஷெல்டன் போலக்கும் மோடியின் அறிஞர்களும்


ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் ‘கலை ஞாயிறு’ பகுதியில் 06-03-2016 அன்று வெளியான கட்டுரை)

ஷெல்டன் போலக், மேலை நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சம்ஸ்கிருத அறிஞர். இந்தியாவின் இலக்கிய வரலாறு தொடர்பாகக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் செய்திருக்கிறார். தற்போது கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் துறையில் பேராசிரியராக இருக்கிறார். கூடவே, இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி தொடங்கிய ‘மூர்த்தி கிளாஸிக்கல் லைப்ரரி ஆஃப் இந்தியா’ (Murti Classical Library of India) என்ற அமைப்பின் பதிப்பாசிரியராகவும் இருக்கிறார். கடைசியாகக் குறிப்பிடப்பட்ட பதவியால்தான் தற்போது ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது.

தரம்பால் சிந்தனைகளும் மாற்றுக் கருத்துகளும்

                    கீதா தரம்பால், ஏ.வி. பாலசுப்ரமணியன், ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன் 

ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் ‘கலை ஞாயிறு’ பகுதியில் கடந்த 27-03-2016 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது)

இந்தியாவின் முக்கியமான வரலாற்று ஆய்வாளர்களிலும் காந்தியச் சிந்தனையாளர்களிலும் தரம்பாலும் (1922-2006) ஒருவர். அவர் எழுத்துக்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பான, ‘எஸென்ஷியல் ரைட்டிங்ஸ் ஆஃப் தரமபால்’ (Essential Writings of Dharampal) சமீபத்தில் இந்திய அரசின் பப்ளிகேஷன் பிரிவால் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தைப் பற்றியும் தரம்பாலைப் பற்றியும் கடந்த 23-ம் தேதி மாலை நேரத்தில் நந்தனம் ஸ்ரீபாலாஜி மகாலில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. பேரா. ஜி. சிவராமகிருஷ்ணன் (ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன்), பேரா. எம்.டி. ஸ்ரீனிவாஸ், எழுத்தாளரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான டி. ரவிக்குமார், எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன், பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

என்னை நோக்கிப் பாயும் தோட்டா


ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் ‘இளமை புதுமை’ இணைப்பிதழில் 18-03-2016 அன்று வெளியான கட்டுரை)

இது கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தைப் பற்றிய கட்டுரை அல்ல. ஜேமி கில்ட் என்ற அமெரிக்கப் பெண்ணைப் பற்றியது. ஜேமி கில்ட்டைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு ஈழத் தமிழ்க் கவிஞர் சிவசேகரம் எழுதிய இந்தக் கவிதையை ஒருமுறை படித்துவிடுங்கள்:
துரோகி எனத் தீர்த்து
முன் ஒரு நாள் சுட்ட வெடி
சுட்டவனைச் சுட்டது
சுடக் கண்டவனைச் சுட்டது
சுடுமாறு ஆணை
இட்டவனைச் சுட்டது
குற்றம் சாட்டியவனை
வழக்குரைத்தவனை
சாட்சி சொன்னவனை
தீர்ப்பு வழங்கியவனை சுட்டது
தீர்ப்பை ஏற்றவனை சுட்டது
எதிர்த்தவனை சுட்டது
சும்மா இருந்தவனையும்
சுட்டது.
31 வயது ஜேமி கில்ட், துப்பாக்கி உரிமைச் செயல்பாட்டாளர்! என்னது துப்பாக்கி உரிமையா? துப்பாக்கிக்கு ஏது உரிமை, அதற்கு உயிரை எடுக்கத்தானே தெரியும் என்று நீங்கள் கேட்கலாம். சற்று விளக்கமாகச் சொன்னால் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமைக்காகப் போராடும் போராளி ஜேமி கில்ட்.

பேருக்கு எவ்வளவு அக்கப்போர்?!



ஆசை

(‘தி இந்துநாளிதழின்இளமை புதுமைநாளிதழில் 25-03-2016 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது)

அடியக்கமங்கலம் என்ற ஊருக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா? அடியக்கமங்கலத்துக்கு ஆரம்பத்தில் வேறு பெயர்தான் இருந்ததாம். அந்த ஊருக்கு வந்த ஒரு ஆங்கிலேயர் அங்கே தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பெண்களிடம் அந்த ஊரின் பெயர் என்ன என்று ஆங்கிலத்தில் கேட்டாராம். அவர் கேட்டது புரியாமல் அங்கே இருந்த ஒரு பெண் மங்கலம் என்ற பேருடைய ஒரு பெண்ணைஅடியக்கா மங்கலம்என்று உதவிக்கு அழைத்திருக்கிறாராம். ‘, அடியக்கமங்கலம், நைஸ் நேம்என்று சொல்லிக்கொண்டு, அதுதான் ஊரின் பெயர் என்று நினைத்துக்கொண்டு அந்த ஆங்கிலேயர் போய்விட்டாராம். இது உண்மைச் சம்பவமல்ல. என்றாலும் ஒரு ஊரின் பெயரை அறிந்துகொள்வதில் இருவேறு மொழிகளைச் சேர்ந்தவர்களிடையே எழும் பிரச்சினையை உணர்த்தும் விதமாக உள்ளது.

ஒரு கொலையாளியின் இறுதிச் சடங்கு


ஆதீஷ் தஸீர்

(‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் 28-03-2016 அன்று என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது) 

என் தந்தை சல்மான் தஸீர், 2008-லிருந்து 2011-ல் படுகொலை செய்யப்படும்வரை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஆளுநராக இருந்தார். அந்த சமயத்தில் பாகிஸ்தானின் மதநிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவப் பெண் ஒருவருக்கு ஆதரவாக என் தந்தை இருந்தார். மதச் சிறுபான்மையினர் மீது வன்முறையை ஏவுவதற்கு இது போன்ற மதநிந்தனைச் சட்டங்களைத்தான்  பாகிஸ்தானின் பெரும்பான்மை சன்னி இனத்தவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். என் தந்தை இந்தச் சட்டங்களுக்கு எதிராகப் பேசியதால் தொலைக்காட்சி நெறியாளர்களின் தீர்ப்புகளுக்கு இலக்காகவும், முல்லாக்களின் கடுங்கோபத்துக்கு இலக்காகவும் ஆளானார். பலருடைய பார்வையில் அவரும் ஒரு மதநிந்தனையாளராக ஆனார். ஜனவரி மாதத்தின் பிற்பகலொன்றில் தனது மெய்காவலர் மாலிக் மும்தாஜ் ஹுசைன் காத்ரியாலேயே என் தந்தை சுட்டுக்கொல்லப்பட்டார்