Showing posts with label தி இந்து. Show all posts
Showing posts with label தி இந்து. Show all posts

Tuesday, July 12, 2022

விடைபெறுகிறேன்… ‘இந்து தமிழ்’ நாளிதழிலிருந்து!

இறுதி நாள் பணி...

ஆம்! ‘இந்து தமிழ்’ நாளிதழிலிருந்து விடைபெறுகிறேன்! 9 ஆண்டுகள் இந்த நாளிதழுடன் நான் மேற்கொண்ட பயணம் சென்ற புதனுடன் (06-07-22) முடிவுக்கு வந்திருக்கிறது. நானாக விரும்பி எடுத்த முடிவு என்றாலும், ஏற்பட்டிருக்கும் வலி அதிகமானது. 9 ஆண்டுகளுக்கு முன்பும் இப்படி ஒரு வலி ஏற்பட்டது. ‘க்ரியா’ பதிப்பகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, அங்கிருந்து வெளியேறியபோது ஏற்பட்ட வலி அது.

கல்லூரிக் காலத்திலேயே ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணனை அடிக்கடி சந்திப்பேன். அப்போது அவர் ‘க்ரியா’ தமிழ் அகராதியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை உருவாக்கும் பணியை ஆரம்பித்திருந்தார். முதல் பதிப்பில் விடுபட்ட சொற்கள், செய்ய வேண்டிய மாற்றங்கள், திருத்தங்கள் போன்றவற்றை எழுதிக்கொண்டுவந்து அவரைச் சந்திக்கும்போதெல்லாம் கொடுப்பது வழக்கம். படிப்பு முடித்தபோது, “க்ரியாவில் இணைந்துகொள்ளுங்களேன்” என்று அழைத்தார். பெரிய வாய்ப்பு அது. அப்போது எனக்கு வயது 23. ஆர்வத்தோடு அகராதிப் பணியிலும் பதிப்புப் பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக்கொண்டாலும், அதன் முக்கியத்துவத்தை முழுமையாக அப்போது உணர்ந்திருந்தேன் என்று சொல்ல முடியாது.

ஒருநாள் பேராசிரியர் தங்க.ஜெயராமன் க்ரியா அலுவலகத்துக்கு வந்திருந்தார். மன்னார்குடியில் இளங்கலை படிக்கும்போது என்னுடைய துறைத் தலைவர் அவர். க்ரியா ராமகிருஷ்ணனுக்கும் நண்பர். மாலையில் புறப்படும்போது, நானும் அவரும் சேர்ந்து சென்றோம். தங்க.ஜெயராமன் சொன்னார், “ஆசைத்தம்பி, உங்களைப் பத்தி ராமகிருஷ்ணன் அவ்வளவு பெருமையா சொன்னார். உங்களுடைய ஆசிரியரா ரொம்பப் பெருமையா உணர்றேன்” என்றவர் ஒரு கணம் நின்றார். “ஒண்ணு சொல்லவா, உங்க வயசுல லெக்ஸிகோகிராஃபியில ஈடுபடுற ஆளுங்க அநேகமா இந்தியாவிலேயே இல்லை. நீங்க கோடியில ஒருத்தர்!”அந்தத் தருணம்தான் என்னை, எனது திறமையை, நான் ஈடுபட்டிருக்கும் பணியின் முக்கியத்துவத்தை வாழ்வில் நான் உணர்ந்த தருணம்.

அகராதியை விரிவாக்கித் திருத்தும் பணியில் பிரதான ஆசிரியர் குழுவாக ராமகிருஷ்ணன், ரகுநாதன், நான் மூவருமே பணியாற்றினோம் (ஏனையோர் வெளியிலிருந்து பங்களித்தார்கள்). எனது உழைப்பை அங்கீகரிக்கும் விதமாகவே  அகராதியின் ‘துணை ஆசிரியர்’(Deputy Editor) பொறுப்பில் என்னை ராமகிருஷ்ணன் நியமித்தார். ‘துணை ஆசிரியர்: தே.ஆசைத்தம்பி’ என்ற பெயர் அந்த அகராதியின் தலைப்புப் பக்கத்தில் இடம்பெற்றபோது எனக்கு வயது 28. 

அதோடு வெவ்வேறு அகராதிப் பணிகள், க்ரியா பதிப்பித்த புத்தகங்களின் செம்மையாக்கப் பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அகராதியில் பணிபுரிந்ததால் அத்தனை துறைகளிலும் அடிப்படை அறிவு வேண்டும். இதற்காக ஒவ்வொரு துறைசார்ந்த நிபுணர்களையும் தேடித்தேடி சந்தித்து, உரையாடியது, அகராதி விரிவாக்கத்துக்கும் எனது அறிவு விரிவாக்கத்துக்கும் பேருதவியாக இருந்தது. கூடவே, க்ரியாவில் இருந்த 10 ஆண்டுகளில் முக்கியமான மொழிபெயர்ப்புகள், ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’, காஃப்காவின் ‘விசாரணை’, எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’, லாவோ ட்சுவின் ‘தாவோ தே ஜிங்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்களின் திருத்திய பதிப்புகளில் மொழிபெயர்ப்பாளர்களுடன் பணிபுரிந்ததும் வளமான அனுபவம். இவையெல்லாம் பிற்பாடு நான் ஆற்றப்போகும் இதழியல் பணிக்குப் பெரும் பலமாக இருக்கும் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

திடீரென ஒருநாள் ‘தி இந்து’ அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது. “தி இந்து குழுமத்திலிருந்து தமிழில் ஒரு நாளிதழ்தொடங்கப்போகிறோம். அதன் ஆசிரியர் குழுவில் நீங்களும் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று கூறினார்கள். சந்தோஷமாக இருந்தது என்றாலும், அதை மறுக்க நான் யோசிக்கவே இல்லை. ஏனென்றால், என் வாழ்க்கை ‘க்ரியா’வுடனும், அகராதிப் பணியுடனுமானது என்பதில் அவ்வளவு உறுதியாக இருந்தேன். மறுநாள், ராமகிருஷ்ணன் என்னை அழைத்தார். சமஸ் அவருடன் பேசியதாகச் சொல்லி என்னிடம் பேசினார்.

சமஸ் எனக்கு மன்னார்குடி கல்லூரி கால நண்பர். அதற்குப் பிந்தைய பத்தாண்டுகளில் என் உலகமும் அவர் உலகமும் வெவ்வேறாகி இருந்தன. ஆனால், பரஸ்பர மதிப்பு இருந்தது. ஊருக்குப் போகும்போது எப்போதாவது சந்திப்பதும் உண்டு. ஆனால், ராமகிருஷ்ணனோடு அவர் நெருக்கமான உறவில் இருந்ந்தார். புதிதாக ஆரம்பிக்கவிருந்த ‘இந்து தமிழ்’ நாளிதழில் உருவாக்க அணியில் ஒருவராக, ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆளெடுப்புப் பணியை அவர் முன்னின்று மேற்கொண்டிருந்தார். “தமிழில் தரமான இதழியல் இல்லை என்று குற்றம்சாட்டும் நீங்கள், இப்போது அப்படி ஒன்று உருவாகும்போது அதற்குப் பங்களிக்க வேண்டாமா? ஆசை போன்றவர்கள் எங்களுக்கு வந்தால் நன்றாக இருக்கும்” என்று ராமகிருஷ்ணனிடம் அவர் பேசியிருக்கிறார்.

ராமகிருஷ்ணன் என்னிடம் சொன்னார், “தமிழில் தரமான நாளிதழைக் கொண்டுவர வேண்டும் என்று இந்து குழும இயக்குநர்கள் விரும்புகிறார்கள் – இதற்கான முழுச் சுதந்திரத்தையும் தந்திருக்கிறார்கள். ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அசோகனும் மிகுந்த சுதந்திரத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கக் கூடியவர். எல்லாவற்றுக்கும் மேல் எனக்குக் கீழ் உள்ள அணிக்குத்தான் அவரைத் திட்டமிடுகிறோம். அதனால் ஆசைத்தம்பிஅனுப்புங்கள் என்று சமஸ் சொல்கிறார். ஆசைத்தம்பி, நீங்கள் க்ரியாவை விட்டுப் போனால் எனக்கு அது பெரிய இழப்புதான். ஆனால், இது உங்கள் எதிர்காலத்தை யோசிக்கும்போது இதழியல் மேலும் விரிந்த தளமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.”

அடுத்த நாளே புதிய நாளிதழ் குறித்து ராமகிருஷ்ணனின் ஆலோசனைகளைப் பெறுவதற்காக ‘இந்து’வின் அன்றைய பதிப்பாளர் என்.ராம் சொல்லி, ஆசிரியர் அசோகனும், பிஸினஸ்லைன் முன்னாள் ஆசிரியர் சம்பத்தும் வந்திருந்தார்கள். மீண்டும் என்னிடம் பேசினார் ராமகிருஷ்ணன். நான் அரைமனதுடன் சம்மதித்தேன். நேர்காணலுக்குச் சென்றுவிட்டு வந்த பிறகு சமஸிடமிருந்து எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. ‘Now, We are standing on history. Yes, you are selected!’

ஆம், இந்த ஒன்பது ஆண்டுகளையும், அங்கு நான் பங்கெடுத்த நடுப்பக்கங்களில் நடந்த பணிகளைத் திரும்பிப் பார்க்கும்போது அது 100% உண்மை என்றே தோன்றுகிறது.

பத்திரிகைத் துறையில் அனுபவமே இல்லாதவனாகத்தான் உள்ளே நுழைந்தேன். என்னைப் போல மேலும் பலரையும் அவர்களுடைய வேறு துறை சார்ந்த அனுபவங்களின் அடிப்படையில் பணிக்கு எடுத்திருந்தார்கள் என்றாலும், அது முற்றிலும் ஒரு புதிய விஷயம். அதோடு நான் சார்ந்த நடுப்பக்க அணி கலவையான ஆளுமைகளைக் கொண்டிருந்தது. ‘தினமணி’யில் ஆசிரியருக்கு அடுத்த நிலையில், 30 ஆண்டு பணி அனுபவத்தோடு வந்திருந்த சாரி சார், ‘விகட’னில் 25 ஆண்டு அனுபவத்தோடு வந்திருந்த சிவசு சார் போன்றோரைக் கொண்ட அணி. பிந்தைய ஆண்டுகளில் நடுப் பக்க அணியில்  எங்களோடு வந்து சேர்ந்துகொண்ட சந்திரமோகன், நீதிராஜன், புவியரசன், சுசித்ரா, மகேஷ், ராஜன் எல்லோருமே ஒவ்வொரு வகையில் தனித்துவமானவர்கள். பத்திரிகைக்குள்ளேயே பலராலும் வித்தியாசமாகப் பார்க்கப்படும் அணியாக நாங்கள் இருந்தோம். அதன் தொடக்கக் கட்டத்தில் ஒரு அணியாக நாங்கள் சேர்ந்து 2 மாதங்களுக்குள் பத்திரிகை வெளிவர வேண்டி இருந்தது. மிகக் கடுமையாக உழைத்தோம். ஒரு பத்திரிகை உருவாவதை அங்குலம் அங்குலமாக நேரில் பார்ப்பதும், அதில் நாமும் ஒரு பங்காக இருப்பதும் திகைப்பூட்டும் அனுபவமாக எனக்கு  இருந்தது. 


மன்னார்குடிக்கு அருகில் உள்ள வடுவூர் புதுக்கோட்டை என்ற சின்ன கிராமத்தைச் சேர்ந்தவன் நான். முதல் தலைமுறைப்  பட்டதாரி. ஆங்கில இந்து நாளிதழே எங்கள் வீட்டுப் பக்கம் எல்லாம் வராது. இப்படிப்பட்டவர்களைத்தான் புதிதாக வரும் தமிழ்ப் பத்திரிகை பிரதான கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதில் எங்கள் நடுப்பக்க அணி மிகுந்த தெளிவோடு இருந்தது. அணியில் எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை முடிந்தவரை ஒரு சமூகக் கடமையாகவே பயன்படுத்தியிருக்கிறேன் என்றே நம்புகிறேன்.

***

நான் ‘இந்து தமிழ்’ குறித்துமகிழ்ச்சி அடைய பல காரணங்கள் இருக்கின்றன. அநேகமாக, தீவிர எழுத்தாளர்கள் பலரும் வேறெந்த வெகுஜன இதழைவிடவும் இதில் அதிகமாக எழுதியிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நடுப்பக்கத்தின் ஒரு அங்கமான எனக்கும் ஒரு பங்கிருக்கிறது. எங்கள் ஊட்டச்சத்தை எங்கிருந்து பெற்றோமோ, பெறுகிறோமோ அந்த இலக்கிய உலகத்துக்கு நன்றிக் கடன் ஆற்றுவது என்ற உணர்வு எங்களிடம் இருந்தது. அறிவுத் தளத்தில் கி.ரா., அசோகமித்திரன்,ஆ.சிவசுப்பிரமணியன், அ.மார்க்ஸ், இமையம், ஜெயமோகன், சாரு, எஸ்.ராமகிருஷ்ணன் முதல் பா.செயப்பிரகாசம்,பி.ஏ.கிருஷ்ணன், மாலன், சலபதி,டி.தர்மராஜ், ராஜன் குறை, ப்ரேமா ரேவதி, சுகிர்தராணி, ஸ்டாலின் ராஜாங்கம் வரை வெவ்வேறு சிந்தனைகளைக் கொண்ட பல நூறு எழுத்தாளர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் இடமாக ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கம் இருந்திருக்கிறது. கி.வீரமணியின் கட்டுரையும் வந்திருக்கிறது, கமல்ஹாசனின் கட்டுரையும் வந்திருக்கிறது.

எங்களுடைய ஐந்தாவது ஆண்டு இதழில், எழுத்தாளர் அழகிய பெரியவன் இப்படி எழுதியிருந்தார், “ஒருவேளை ‘தி இந்து’ தமிழ் நாளேடு வெளியாகாமல் இருந்திருந்தால், அயோத்திதாசப் பண்டிதரோ, இரட்டைமலை சீனிவாசனோ, ஞானக்கூத்தனோ, இன்குலாப்போ, அஃ பரந்தாமனோ, நா.காமராசனோ, ரோஹித் வெமுலாவோ, ஜிக்னேஷ் மேவானியோ கௌரி லங்கேஷோ எந்தத் தமிழ் நாளேட்டின் நடுப்பக்கத்தில் இப்படி இடம்பிடித்திருப்பார்கள்? குடிச் சீரழிவு, சூழல் சீர்கேடு, மதவாதம், ஊழல், கல்வி வணிகம், மணல் கொள்ளை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு போன்றவற்றுக்கு எதிராகக் கட்டுரைகள், செய்திகள் மூலம் மிகுந்த நெஞ்சுரத்தோடு ‘தி இந்து’ தமிழ் பணியாற்றியிருக்கிறது.”

காந்தி, நேரு, பெரியார், அம்பேத்கர் என்று தலைவர்கள் தொடங்கி ஞானக்கூத்தன், அசோகமித்திரன், இன்குலாப்,எஸ்.என்.நாகராஜன், பிரான்சிஸ் கிருபா என்று சமகால எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் வரை பிறந்த நாள் / நினைவு நாளில் ஒரு பக்க, இரு பக்கச் சிறப்பிதழை வெளிக்கொண்டுவந்திருக்கிறோம். தமிழ் எழுத்தாளர்களையும் தமிழையும் கொண்டாடும் ‘யாதும் தமிழே’, ‘இந்து தமிழ் லிட்ஃபெஸ்ட்’ உள்ளிட்ட விழாக்களை நடத்தியிருக்கிறோம். ஆங்கில ‘லிட் ஃபெஸ்ட்’ போல தமிழிலும் விருதாளர்களுக்குக் கண்ணியமான தொகை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, ரூ. 5 லட்சம் தொகையுடன் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டதெல்லாம் மிக மகிழ்ச்சியான தருணம். அதைக் காட்டிலும் முக்கியமானது, எந்தச் சர்ச்சையும் எழாத வகையில் எங்கள் விருதாளர்கள் தேர்வு அமைந்தது: கி.ராஜநாராயணன், ஐராவதம் மகாதேவன், இந்திரா பார்த்தசாரதி, கோவை ஞானி, விக்ரமாதித்யன், இமையம், பா.வெங்கடேசன், சீனிவாச ராமாநுஜம், தமயந்தி, கீரனூர் ஜாகீர் ராஜா… இப்படி நீளும் பட்டியலில் யாரைக் குறை கூறிட முடியும் அல்லது எந்தக் குழு அரசியல் நோக்கத்தை இதன் பின்னணியில் கற்பிக்க இயலும்? இதிலெல்லாம் நான் முக்கியப் பங்குவகித்தது குறித்து எனக்குப் பெருமகிழ்ச்சி உண்டு!

***

இந்து தமிழ் நடுப்பக்கங்கள் தமிழில் என்ன செய்திருக்கின்றன – குறிப்பாக ஆரம்ப காலங்களில் – என்பது பிற்பாடு இதழியல் ஆய்வுக்குரிய ஒரு பொருளாக அமையும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. மொழிபெயர்ப்புகளில் மட்டும் அது செய்திருக்கும் வேலைகளே ஒரு வெகுஜன இதழில் அதுவரை நிகழாத சாதனை. 

சமூகத்துக்கும் படைப்புலகத்துக்கும் முக்கியப் பங்களிப்பு செய்திருக்கும் பல்வேறு செயல்பாடுகளையும் இயக்கங்களையும் இந்து தமிழின் அங்கமாக நாங்கள், முக்கியமாக சமஸ் தலைமையிலான நடுப்பக்க அணியினர் முன்னெடுத்திருக்கிறோம். 2014 பொதுத்தேர்தலையொட்டி இந்தியா முழுவதும் சமஸ் பயணித்து எழுதிய ‘இந்தியாவின் வண்ணங்கள்’ தொடருக்கு முன்னும் சரி அதற்குப் பிறகும் சரி அப்படியொன்று தமிழ் இதழியலில் வந்ததில்லை. தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பயணித்து சமஸ் எழுதிய ‘கடல்’ தொடர் வெளியானபோதுதான் அப்படியொரு உலகம் இருக்கிறது என்ற பிரக்ஞையே சமவெளியில் உள்ள பலருக்கும் ஏற்பட்டது. மதுவுக்கு எதிராகவும், தமிழக நதிநீர் ஆதாரங்களை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், உள்ளாட்சிகளின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தியும் டி.எல்.சஞ்சீவிகுமார் எழுதிய மூன்று தொடர்களும் முக்கியமானவை. அரசுப் பள்ளிகள் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ‘நம் கல்வி நம் உரிமை’ இயக்கத்தை முன்னெடுத்தோம். அதேபோல் சென்னை புத்தகக்காட்சிகளின்போது நடுப்பக்கங்களில் அளிக்கப்பட்ட முக்கியத்துவமே ஏனைய எல்லா ஊடகங்களும் அது நோக்கி வர வழிவகுத்தன. சென்னைப் பெருவெள்ளத்தால் பதிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்த சூழலில் ‘புத்தாண்டில் புத்தக இரவு’ இயக்கத்தைப் பதிப்பாளர்களுடன் இணைந்து முன்னெடுத்தோம். எழுத்தாளர்களுக்கு நிதி திரட்டும்போதெல்லாம் ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கமும் அந்த முயற்சிகளோடு கைகோத்துக்கொண்டு அறிவிக்கப்படாத மீடியா பார்ட்னராக இருந்துவந்திருக்கிறது. இப்படி எவ்வளவோ விஷயங்கள்.

பிரிட்டனின் ‘த கார்டியன்’, அமெரிக்காவின் ‘த நியூயார்க் டைம்ஸ்’ என்று தொடங்கி ஆப்பிரிக்காவின், மத்திய கிழக்கு நாடுகளின், லத்தீன் அமெரிக்க நாடுகளின் பத்திரிகைகளை உள்ளடக்கி பாகிஸ்தானின் ‘டான்’, ‘தி இந்து’ ஆங்கிலம் வரை பல்வேறு உலக-இந்தியப் பத்திரிகைகளிலிருந்து கட்டுரைகள், பேட்டிகள், படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறோம். மூத்த சகா சாரி, நான், வெ.சந்திரமோகன், செல்வ புவியரசன் உள்ளிட்டோர் நடுப்பக்கத்துக்காக செய்திருக்கும் மொழிபெயர்ப்புகள் சில ஆயிரங்களைத் தாண்டும். நடுப்பக்கத்துக்காக காந்தி, நேரு, அம்பேத்கர் தொடங்கி சார்லி சாப்ளின், நெல்சன் மண்டேலா, வி.பி.சிங் வரையிலானவர்களின் உரைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். ஜார்ஜ் ஆர்வெல், ஆலிவர் சாக்ஸ், ஸ்டீவன் ஹாக்கிங், வில்லியம் டால்ரிம்பிள், பால் க்ரூக்மன், ஸ்லேவோய் ஜிஜெக், டேவிட் ஷுல்மன், வால்ட்டர் ஐஸக்ஸன், டேவிட் அட்டன்பரோ, தாமஸ் எல். ஃப்ரீட்மன், வரலாற்றறிஞர் சஞ்சய் சுப்பிரமணியம், கோபால்கிருஷ்ண காந்தி, யானிஸ் வருஃபாக்கீஸ், டேவிட் பொடனிஸ், ஈராக் போரில் அமெரிக்காவின் பங்கை அம்பலப்படுத்திய செல்சியா மேனிங், யுவால் நோவா ஹராரி, இர்ஃபான் ஹபீப், அய்ஜாஸ் அகமது, ராமச்சந்திர குஹா, ருட்கர் பிரெக்மென், அமர்த்தியா சென், ஜீன் த்ரஸே, ஷிவ் விஸ்வநாதன்  என்று பல உலக எழுத்தாளர்கள், இந்திய எழுத்தாளர்கள், அறிவியலர்கள், ஆய்வாளர்களின் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் தமிழில் முதன்முதலில் ஒரு வெகுஜனப் பத்திரிகையில் வந்தது என்றால் அது ‘இந்து தமிழ் திசை’யில்தான் இருக்கும். இந்த மொழிபெயர்ப்புகள் மூலம் நான் கற்றுக்கொண்டது ஏராளம். 

கூடவே, நிறைய அறிவியல் கட்டுரைகளை எழுதிப் பார்க்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழுக்காக ‘அறிவோம் நம் மொழியை’ என்ற ஒரு சிறு பத்தியையும் சில காலம் எழுதினேன். இந்தப் பத்தியில் வாசகர்களும் நானும் சேர்ந்து ஏராளமான புதுச் சொற்களை உருவாக்கினோம். எண்ணற்ற கட்டுரைகளை எழுதினேன் என்றாலும், ‘என்றும் காந்தி’ தொடரை எழுதியதும், காந்தியின் 150 ஆண்டில் அது நூலாக வெளிவந்ததும் என்றும் நெகிழ்ச்சி தரும் அனுபவங்கள். இணைப்பிதழில் ‘மொழியின் பெயர் பெண்’ என்று ஒரு தொடரை எழுதினேன். இடையில் ‘காமதேனு’ வார இதழில் இடம்பெற்றிருந்தபோது ‘தாவோ-பாதை புதிது’ தொடரையும், காவிரிப் படுகை முழுவதும் பயணித்து ‘நீரோடிய காலம்’ தொடரையும் எழுதினேன்.

**

பல்வேறு கருத்துகளுக்குக் களமாக ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கம் இருந்தாலும் நம்முடைய முதன்மை நோக்கம் மக்கள் நலன்தான். மக்களா, அதிகார வர்க்கமா என்ற கேள்வி எழும்போதெல்லாம் நடுப்பக்கம் மக்கள் பக்கமே நின்றிருக்கிறது. ஜல்லிக்கட்டு, பணமதிப்பு நீக்கம், பெருமாள் முருகன் பிரச்சினை உள்ளிட்ட கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதல்கள், மீத்தேன் பிரச்சினை, சிறுபான்மையினர் - பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள், ஆணவக் கொலைகள் இவற்றில் எல்லாம் பாதிக்கப்பட்டோர் பக்கம் நின்று உறுதிபடப் பேசியது.

பலருக்கும் பல விஷயங்கள் மறந்துவிடும் என்பதால் இதை நினைவூட்ட வேண்டியிருக்கிறது. 2017-ல் இஸ்லாமியச் சிறுவன் ஜுனைத் டெல்லி – மதுரா ரயிலில் அடித்துக் கொல்லப்பட்டான். அதற்குச் சொல்லப்பட்ட காரணம்: ‘அவன் மாட்டிறைச்சி சாப்பிட்டான்’ என்பது. மனசாட்சியும் ஈரமும் இந்தியப் பன்மைப் பண்பாட்டின் மீது பிடிப்பு உள்ளோரை உலுக்கிய சம்பவம் இது. அப்போது ‘இந்து தமிழ்’ நடுப்பக்க அணி ஒரு முடிவெடுத்தது. இந்தப் படுகொலைகளையும் தாக்குதல்களையும் நிகழ்த்துபவர்களை இனி ‘பசு குண்டர்கள்’ என்று குறிப்பிடுவது என்பதே அது (அப்போது எல்லா ஊடகங்களும் ‘பசுப் பாதுகாவலர்கள்’ என்று எழுதிக்கொண்டிருந்தன. இதைத் தலையங்கத்திலேயே காட்டமாக எழுதினோம். https://www.hindutamil.in/news/opinion/editorial/200206-.html இப்படிப் பல சொற்களை அது உறுதியாகக் கையாண்டது.

ஒரு வாசகனாகவும்கூட எனக்குத் தெரிய கூட்டாட்சிக்கும், சமூகநீதிக்கும் இவ்வளவு பெரிய முக்கியத்துவத்தைக் கொடுத்த வெகுஜன இதழ் ஒன்று கிடையாது. இளம் தலைமுறையினரை அரசியல்மயப்படுத்துவதை வெளிப்படையாகவே செய்தன நடுப்பக்கங்கள். நடுப்பக்கங்களின் பார்வைக்கு அடித்தளமாக இருந்தவர் காந்தி என்றால், அதற்கு மேலும் உரம்சேர்த்தவர்களாக பெரியார், நேரு, அம்பேத்கர், அண்ணா போன்றவர்கள் இருந்தார்கள்.

இந்தப் பயணத்தில் குறிப்பிட வேண்டிய விஷயங்களுள் முக்கியமானவை கலைஞரைப் பற்றிய நூலான ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, அண்ணா பற்றிய நூலான ‘மாபெரும் தமிழ்க் கனவு. திராவிட இயக்கத்துக்குச் செய்யப்பட்ட மிக முக்கியமான பங்களிப்புகளுள் ஒன்று இது; ஆனால், இந்த இரு நூல்களுமே திமுக ஆட்சியில் இல்லாத சமயத்தில் கொண்டுவரப்பட்டவை.

முந்தைய தலைமுறை நவீனத் தமிழ் இலக்கியத்தால் நான் வளர்ந்தேன் என்றாலும், கிட்டத்தட்ட அரசியல் நீக்கமும் செய்யப்பட்டிருந்தேன். என்னை அரசியல்மயப்படுத்தியது காந்தியும் ‘இந்து தமிழ்’ நாளிதழும் சமஸும்தான். எல்லாக் கருத்துகளுக்கும் இடம் அளிப்பார் என்றாலும், ஜனநாயகம், சமூகநீதி, கூட்டாட்சி போன்ற விஷயங்களில் துளியும் சமரசம் செய்துகொள்ள மாட்டார் சமஸ். என்றேனும் எங்களை அறியாமல் அத்தகு விஷயங்களில் பிசகு ஏற்பட்டுவிட்டாலும் சமஸ் கொதித்துப்போய்விடுவார். கடுமையாகத் திட்டுவார். கூட்டாட்சியை ஒரு கதையாடலாக மீண்டும் உருவாக்கியதில் மிகப் பெரிய பங்கு அவருக்கும் நடுப்பக்கங்களுக்கும் உண்டு.

அரசியல்மயப்படுவது என்பது ஒரு கட்சியில் சேருவதோ ஒரு கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதோ அல்ல. மக்களை, அவர்களின் பிரச்சினைகளை அவர்களின் தரப்பிலிருந்து புரிந்துகொள்ள முயல்வதுதான் அரசியல்மயப்படுவது என்று கருதுகிறேன். அந்த வகையில் ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கத்தில் கிடைத்தது வாழ்நாள் முழுவதற்குமான மகத்தான கல்வி. 

***

எனது நடுப்பக்க சகாக்கள் சாரி சார், சிவசு சார், சந்திரமோகன், செல்வ புவியரசன், கே.கே.மகேஷ், த.ராஜன், ச.கோபாலகிருஷ்ணன், சண்முகம் ஆகியோருடன் அருகருகே இருந்து பணிபுரிந்ததில் கிடைத்த இதமும் அன்பும் அறிவும் அதிகம். எங்களுக்கிடையே எவ்வளவோ நெகிழ்வான தருணங்கள் உண்டு. குடும்பத்தினர் போலவோ கல்லூரித் தோழர்கள் போலவோதான் பழகியிருக்கிறோம். அவர்களுக்கு நன்றியும் அன்பும்! 

முக்கியமாக, தன்னைவிட முப்பது வயது இளையவர்கள் எழுதிய கட்டுரைகளைப் படித்து நேராக அவர்கள் இருக்கைக்குச் சென்று பாராட்டும் சாரி என்ற வ.ரங்காச்சாரி அவர்களின் பணிவுக்கும் பெருந்தன்மைக்கும் முன் நாமெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தோன்றும். நாமெல்லாம் எத்தனை பேரை பாராட்டியிருக்கிறோம் என்ற குற்றவுணர்வு உண்டாகும். எவ்வளவு பெரிய சீனியர் அவர்! ஆனால், துளி ஈகோ இல்லாத மனிதர்! இடையில் கொஞ்ச காலம் இதழ் பிரிவில் இருந்தபோதும்கூட “ஆசை ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை அனுப்பியிருக்கிறேன். சரியாக இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்களேன்” எங்கள் அறையை எட்டிப்பார்த்து கூறுவார். இப்படி அவர் கூறும்போது சத்தமாகவே கூறுவார் என்பதால், அருகில் உள்ள அனைவரும் அவரை வியந்து பார்ப்பார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் அவர் பிரதியில் தவறுகள் எதுவும் இருக்காது; ஆனாலும் துல்லியத்துக்கான மெனக்கெடல்; வயது பாராத மரியாதை. தினமும் ரயிலை விட்டு இறங்கிவரும்போது மிக்சர், கடலை மிட்டாய் என்று வாங்கிக்கொண்டு எங்கள் அணியில் உள்ள தின்பண்ட டப்பாக்களை வழிய விட்டுக்கொண்டிருப்பார். எனக்கு என்னுடைய அப்பாவை தினமும் நினைவுபடுத்தியவர் அவர். நான் அவரிடமிருந்து கற்ற விஷயங்கள் ஏராளம்.

என்னுடைய படைப்பிலக்கியப் போக்கு, பார்வைகள் சார்ந்து முக்கியமான மாற்றங்கள் ஏற்படுவதற்கும் ‘இந்து தமிழ்’ நாளிதழ் காரணமாக இருந்தது. கவிஞரும் சகாவுமாக இருந்த ஷங்கரும் அதற்கு ஒரு காரணம். என் கவிதைகள் குறித்த சுயவிமர்சனத்தை நான் செய்துகொள்ளவும், ஒரு நெடிய தடையை உடைத்துக்கொண்டு மீண்டும் எழுத உத்வேகமாகவும் அவர் இருந்திருக்கிறார். நாங்கள் முட்டிக்கொண்ட தருணங்கள்தான் அதிகம். அவற்றையெல்லாம் தாண்டி என்னை செழுமைப்படுத்திக்கொள்வதற்கு ஷங்கரும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார். அவருக்கு என் நன்றியும் அன்பும். கூடவே, இலக்கியம் அரசியல் பேச வேண்டும் என்றும் ஒரு பத்திரிகையாளர் அவருக்குள் இருக்கும் படைப்பாளியின்மீது தாக்கம் செலுத்த வேண்டும் என்றும் எனக்கு உணர்த்தியவர் சமஸ்.

அலுவலகத்தில் பக்கத்துப் பக்கத்து இருக்கை, பிறகு ஒரே தளத்தில் வீடுகள் என்று நெருங்கியவர் நண்பர் டி.எல்.சஞ்சீவிகுமார். வாழ்க்கையின் பல தருணங்களில் அவ்வளவு ஆதரவாகவும் அன்பாகவும் இருந்திருப்பவர், இருந்துவருபவர். அவரிடம் சண்டை போட்டவர்களுக்குக்கூட உதவிக்கு முதல் ஆளாக ஓடிப்போய் நிற்பவர். என் மீது எப்போதும் வாஞ்சை கொண்டிருப்பவர் ‘இந்து தமிழ்’ இணையதளத்தின் ஆசிரியர் பாரதி தமிழன். பல சமயங்களில் ஆபத்பாந்தவனாக அலுவலகத்தில் பலருக்கும் ஓடிச் சென்று உதவுபவர். என் எழுத்துகள், பணி இவற்றையெல்லாம் தாண்டியும் எனக்கு உதவுபவர்கள் இவர்கள். இருவருக்கும் என் அன்பும் நன்றியும்.

நிறையப் பேரைச் சொல்ல வேண்டும் என்றாலும், பட்டியல் நீண்டுவிடும் என்பதால், வேகமாகக் கடக்கிறேன். இவர்களிடமெல்லாம் நிறைய கற்றுக்கொண்டும் இருக்கிறேன். பல தருணங்களில் பல வகைகளிலும் உதவியும் இருக்கிறார்கள். எல்லாவற்றையும்விட என் மேல் அன்பு செலுத்தியிருக்கிறார்கள். அரவிந்தன், கவிதா முரளிதரன், மானா பாஸ்கரன், நீதிராஜன், பிருந்தா, வள்ளியப்பன், களந்தை பீர்முகம்மது, ஜெயந்தன், ராம்குமார், செல்லப்பா, இசக்கிமுத்து, பாரதி ஆனந்த், சுசித்ரா, கே.கே.மகேஷ், சுவாமிநாதன்… என்று பத்திரிகையோடு தொடர்புடைய இணையதளப் பிரிவு தொடங்கி பதிப்பகம் வரையில் ஒவ்வொரு பிரிவிலும் பல சகாக்கள் நினைவில் வந்து செல்கிறார்கள். அனைவருக்கும் நன்றி.

***

வெகுஜனப் பத்திரிகையொன்றில் பணியாற்றுவது என்பது கண்ணுக்குப் புலப்படாத பல எல்லைகளுக்குள் இயங்குவது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அதன் அழுத்தங்கள் ஒருபோதும் புரியாது. விடுபடல்கள், போதாமைகள் இருந்தாலும், எங்களால் முயன்ற அளவுக்கு முயன்றிருக்கிறோம் என்றே எண்ணுகிறேன்.

இரண்டு நிகழ்வுகளைச் சொல்ல வேண்டும். 2015-ல் தோழர் நல்லகண்ணுவின் பிறந்த நாள் தருணத்தில் அவரை அலுவல் நிமித்தம் நானும் தோழர் நீதிராஜனும் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது, தோழர் தொல்.திருமாவளவனும் அங்கே இருந்தார். நல்லகண்ணு அவர்கள் எம்மை அறிமுகப்படுத்தியபோது திருமாவளவன் அவர்கள் சொன்னார், “நேற்றுகூட உங்களைப் பற்றி நல்லகண்ணு ஐயா சொன்னார்!” நான் ஆச்சரியத்தோடு பார்த்தபோது, நல்லக்கண்ணு அவர்கள் தொடர்ந்து என்னுடைய கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளைப் படித்துவருவதைச் சொன்னார். இன்னொரு நிகழ்வு. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் ஒரு ஆட்டோவில் நானும் நண்பர்களும் ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தபோது காந்தியைப் பற்றிப் பேச்சு வந்தது. நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை ஆட்டோக்காரர் கவனித்துவந்திருக்கிறார். “தமிழ் இந்துல ஆசைன்னு ஒருத்தர் காந்தி பத்தி நல்லா எழுதுறார் சார். நான் தொடர்ந்து படிக்கிறேன்” என்றார்.  

பத்திரிகை துறையின் வீச்சு என்ன என்பதை எனக்கு உணர்த்திய இரு தருணங்கள். நானும் சில பணிகளைச் செய்திருக்கிறேன் என்ற உணர்வைத் தந்த இரு தருணங்கள்.

என் இதழியல் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் பலரும் வழங்கியிருக்கிறார்கள். மறைந்த க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களுள் முதன்மையானவர். எஸ்.வி.ராஜதுரை, இரா.ஜவஹர் தொடங்கி ஜி.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜி.குப்புசாமி வரை எவ்வளவோ பேர் உத்வேகம் அளித்திருக்கிறார்கள். 

மனிதநேயம்,மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு, சமூகநீதி, ஜனநாயகம், கூட்டாட்சி போன்ற அடிப்படையான விழுமியங்களை எனது இதழியல் அனுபவத்தில் நான் கூடுமானவரை கடைப்பிடித்துவந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். இதற்கு காந்தி, பெரியார், அம்பேத்கர், நேரு, அண்ணா உள்ளிட்ட முன்னோடிகள் முக்கியக் காரணம். இந்த விழுமியங்களை உடன் இருந்து கற்றுக்கொடுத்தவர் சமஸ். எழுதுவதற்கான வாய்ப்பு, மிகப் பெரிய தளத்தில் மக்களைச் சென்றடையலாம், பல விஷயங்களையும் கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு வந்த எனக்கு இதழியல் என்பது மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய மாபெரும் சமூகக் கடமை என்பதையும் சேர்த்து சொல்லித்தந்தவர் அவர்… சமஸுக்கு நன்றி! 

நாங்கள் இவ்வளவையும் செய்வதற்கான சுதந்திரத்தையும் ஆதரவையும் தொடர்ந்து அளித்தவர் ஆசிரியர் அசோகன். என் வாழ்வின் பல இக்கட்டான தருணங்களில் அவர் அளித்த அனுசரணையை என்னால் மறக்கவே முடியாது. அவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

மூத்த பத்திரிகையாளர் என்.ராம், நிர்மலா லெட்சுமண் உள்ளிட்ட ‘தி இந்து’ குழுமத்தின் இயக்குநர்கள் பலரும் எங்களின் செயல்பாடுகளுக்குப் பல தருணங்களில் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றி!

என்னுடைய சகாக்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் மீண்டும் மிக்க நன்றியும் அன்பும். 

இப்போது விடைபெறுகிறேன். அடுத்தகட்ட பணிகளை விரைவில் அறிவிக்கிறேன்!

அன்புடன்

ஆசை






Thursday, September 16, 2021

9-ம் ஆண்டில் ‘இந்து தமிழ் திசை’யுடன் நானும்...

ஆசை

'இந்து தமிழ் திசை’ நாளிதழில் இன்று 9-ம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. இந்த 8 ஆண்டுகால பயணத்தில் ’இந்து தமிழ் திசை’யின் முதல் நாளிலிருந்தே அதனுடன் நான் இருந்துவருகிறேன். இந்தப் பயணத்தைத் திரும்பிப்பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. அகராதி, பதிப்புத் துறை போன்றவற்றில் பணியாற்றிய எனக்குப் பத்திரிகை அனுபவம் ஏதும் கிடையாது. எனினும் என் மீது நம்பிக்கை கொண்டு ஆசிரியர் அசோகன் அவர்களும் நடுப்பக்கத்தின் முன்னாள் ஆசிரியர் சமஸும் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை விதவிதமான அனுபவங்களுடன் இந்தப் பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

மன்னார்குடிக்கு அருகில் உள்ள வடுவூர் புதுக்கோட்டை என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவனும் முதல் தலைமுறைப்  பட்டதாரியுமான எனக்கு ‘தி இந்து’ குழுமத்தில் பணிபுரிய கிடைத்த வாய்ப்பு என்பது உண்மையிலேயே பெரிய விஷயம். கனவு காண்பதற்கும் அதை நிறைவேற்றிக்கொள்வதற்கும் எனக்கும் உரிமை இருக்கிறது என்று நான் உணர்ந்துகொண்ட தருணம் இந்த வாய்ப்பு. எனது இந்த வாய்ப்பை நான் முடிந்தவரை ஒரு சமூகக்  கடமையாகவே பயன்படுத்தியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

அநேகமாக, தீவிர எழுத்தாளர்கள் பலரும் வேறெந்த வெகுஜன இதழைவிடவும் இதில் அதிகமாக எழுதியிருக்கிறார்கள் என்று கருதுகிறேன். இந்த விஷயத்தில் நடுப்பக்கத்தின் ஒரு அங்கமான எனக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும். இது எனது கடமை என்றே நினைக்கிறேன். நான் எனது ஊட்டச்சத்தை எங்கே பெற்றேனோ, பெற்றுக்கொண்டிருக்கின்றேனோ அந்த இலக்கிய உலகத்துக்கு நன்றிக் கடன் ஆற்றுவது முக்கியம் அல்லவா! இது தவிர, காந்தி, நேரு, பெரியார், அம்பேத்கர், அண்ணா, பாரதியார், வ.உ.சி., உள்ளிட்ட ஏராளமான தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களில் அவர்களை ஒரு பக்க அளவிலோ இரண்டு பக்கங்கள் அளவிலோ சிறப்பித்துவருகிறோம். அதே அளவுக்குத் தலைசிறந்த எழுத்தாளர்களின் பிறந்தநாள், நினைவுநாள், அல்லது அவர்களின் மரணத்தின்போது அவர்களைச் சிறப்பித்துவருகிறோம். தமிழ் எழுத்தாளர்களையும் தமிழையும் கொண்டாடும் ‘யாதும் தமிழே’, ‘இந்து தமிழ் லிட்ஃபெஸ்ட்’ உள்ளிட்ட விழாக்களை நடத்தி கி.ராஜநாராயணன், ஐராவதம் மகாதேவன், இந்திரா பார்த்தசாரதி, கோவை ஞானி, விக்ரமாதித்யன், இமையம், பா.வெங்கடேசன், சீனிவாச ராமாநுஜம், கீரனூர் ஜாகீர்ராஜா, தமயந்தி, சயந்தன் உள்ளிட்ட முக்கியமான எழுத்தாளர்கள், அறிஞர்களுக்கு ‘தமிழ் திரு’ விருதை ‘இந்து தமிழ் திசை’ வழங்கியிருக்கிறது. அதிலும் முக்கியப் பங்குவகித்தமை குறித்து எனக்குப் பெருமகிழ்ச்சி! 

‘தி கார்டியன்’, ‘தி நியூயார்க் டைம்ஸ்’, ‘தி இந்து’ (ஆங்கிலம்) உள்ளிட்ட நாளிதழ்களிலிருந்து மூத்த சகா சாரி அவர்களும் நானும் நூற்றுக் கணக்கான கட்டுரைகளை மொழிபெயர்த்திருப்பதில் எங்களுக்குப் பெரும் மனமகிழ்வு! இது ஒரு வகையில் உலகக் காற்று மேலதிகமாக என் சிந்தனையில் படுவதற்கான பயிற்சியாகவும் அமைந்தது. காந்தி, நேரு, அம்பேத்கர், அண்ணா போன்றோரின் எழுத்துகளையும் உரைகளையும் மொழிபெயர்த்தது மட்டுமல்லாமல் ஜார்ஜ் ஆர்வெல், ஆலிவர் சாக்ஸ், ஸ்டீவன் ஹாக்கிங், வில்லியம் டால்ரிம்பிள், பால் க்ரூக்மன், ஸ்லேவோஜ் ஜிஜெக், ராமச்சந்திர குஹா என்று பல உலக எழுத்தாளர்கள், அறிவியலர்கள், ஆய்வாளர்களின் கட்டுரைகள் தமிழில் முதன்முதலில் ஒரு வெகுஜனப் பத்திரிகையில் வந்தது என்றால் அது ‘இந்து தமிழ் திசை’யில்தான் இருக்கும். இந்த மொழிபெயர்ப்புகளைச் செய்ய எனக்குக் கிடைத்த வாய்ப்பு பெரும் பேறு! இதன் மூலம் நான் கற்றுக்கொண்டது ஏராளம். கூடவே, நிறைய அறிவியல் கட்டுரைகளை எழுதிப் பார்க்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழுக்காக ‘அறிவோம் நம் மொழியை’ என்ற ஒரு சிறு பத்தியையும் சில காலம் எழுதினேன். இந்தப் பத்தியில் வாசகர்களும் நானும் சேர்ந்து ஏராளமான புதுச் சொற்களை உருவாக்கினோம். ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்தில் 2017-ல் ஜனவரி 30 தொடங்கி தினமும் ஒரு அத்தியாயம் என்று ‘என்றும் காந்தி’ தொடரை எழுதும் வாய்ப்பை இணையதள ஆசிரியர் திரு பாரதி தமிழன் வழங்கினார். காந்தி 150-ம் ஆண்டை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’யின் நடுப்பக்கத்தில் ‘காந்தியைப் பேசுதல்’ என்ற தொடரை ஓராண்டு எழுதும் வாய்ப்பும் கிடைத்தது.  இறுதியில் இரண்டு தொடர்களும் ஒன்றிணைக்கப்பட்டு காந்தி 150-ம் ஆண்டிலேயே ‘என்றும் காந்தி’ என்ற நூலாக வெளியிடப்பட்டது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு. ‘பெண் இன்று’ இணைப்பிதழில் உலகப் பெண் கவிஞர்களின் கவிதைகள் மொழிபெயர்ப்போடு ’மொழியின் பெயர் பெண்’ என்று தொடரை எழுத அந்த இணைப்பிதழின் பொறுப்பாசிரியர் சகோதரி பிருந்தா ஒரு வாய்ப்பை வழங்கினார். 17 அத்தியாயங்கள் எழுதினேன். இடையில் சிறிது காலம் ‘இந்து’ குழுமத்திலிருந்து வெளியாகும் ‘காமதேனு’ வார இதழில் இடம்பெற்றிருந்தபோது ‘தாவோ தே ஜிங்’ பற்றி ‘தாவோ-பாதை புதிது’ என்ற தொடரும் காவிரிப் படுகை முழுவதும் பயணித்து ‘நீரோடிய காலம்’ என்ற தொடரும் எழுத வாய்ப்பு கிடைத்தது.

இந்தப் பயணத்தில் குறிப்பிட வேண்டிய விஷயங்களுள் முக்கியமானவை கலைஞர் பற்றி உருவாக்கிய ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூல், அறிஞர் அண்ணா பற்றி உருவாக்கிய ‘மாபெரும் தமிழ்க் கனவு’ பெருநூல் ஆகியவற்றில் நானும் இடம்பெற்றதுதான். அறிஞர் அண்ணாவின் ஆங்கில உரைகளைத் தமிழில் மொழிபெயர்த்தபோதுதான் அவரைப் பற்றி இளம் வயதிலிருந்து மேம்போக்காக நானும் பலரும் அறிந்துவைத்திருக்கிறோம் என்று தெரிந்தது. அண்ணா என்ற ஆளுமையை மறுகண்டுபிடிப்பு செய்துகொள்ள எனக்குக்  கிடைத்த மகத்தான வாய்ப்பு அது!

மதச்சார்பின்மை, மனிதநேயம், ஒருமைப்பாடு, சமூகநீதி, ஜனநாயகம், கூட்டாட்சி போன்ற அடிப்படையான விழுமியங்களை எனது இதழியல் அனுபவத்தில் நான் கூடுமானவரை கடைப்பிடித்துவந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். இதற்கு காந்தி, பெரியார், அம்பேத்கர், அண்ணா என்ற முன்னோடிகள் முக்கியக் காரணம். இந்த விழுமியங்களைக் கூட இருந்து கற்றுக்கொடுத்தவர் சமஸ். அவருக்குப் பெரும் நன்றி! 

‘இந்து தமிழ் திசை’யுடனான பயணம் இன்னும் எனக்கு நிறைய கற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் அதனுடன் இணைந்து சென்றுகொண்டிருக்கிறேன். எனக்கு இதுவரை ஆதரவு தந்திருக்கும் ஆசிரியர் அசோகன், சமஸ் இருவருக்கும் மனமார்ந்த நன்றி! எனது நடுப்பக்க சகாக்கள், இணைப்பிதழ், செய்திப்பிரிவு, இணையதளம், காமதேனு போன்ற அனைத்துப் பிரிவுகளிலும் பணிபுரியும் சகாக்களுக்கு நன்றியும் அன்பும்! 

எல்லோருக்குமான மந்திரத் தாயத்து ஒன்றை காந்தி அளித்திருக்கிறார்: "நான் உங்களுக்கெல்லாம் ஓர் மந்திரத் தாயத்து அளிக்கிறேன். முடிவெடுக்கையில் அது சரியா, தவறா என்கிற ஐயப்பாடு எழும்போதோ, அல்லது உமது அகந்தையோ சுயநலமோ தலைதூக்கும்போதோ இந்தச் சோதனையைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பார்த்துள்ள, ஏழ்மைமிக்க, மிக மிக நலிவுற்ற முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் காரியம், எடுக்கவிருக்கும் நடவடிக்கை, தீட்டவிருக்கும் திட்டம், அந்தப் பரம ஏழைக்கு எவ்விதத்திலாவது பயன்படுமா? அவன் தன் அன்றாட வாழ்க்கையையும், வருங்கால வாழ்வையும் வளமாக்கி அவனது கட்டுப்பாட்டில் இருத்திக்கொள்ள வகைசெய்யுமா? இதையே வேறுவிதமாகச் சொல்லப்போனால், பசிப்பிணியாலும் ஆன்மிக வறட்சியாலும் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கு உண்மையில் சுயராஜ்யம் (சுயதேவை பூர்த்தி) கிடைக்கச் செய்யுமா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அதன்பின் உங்களது ஐயங்களும் சுயநலமும் கரைந்து மறைந்து போவதைக் காண்பீர்கள்.''

இதழியலிலும் இதை நான் பின்பற்ற வேண்டும் என்று உளமார ஆசைப்படுகிறேன்.

Friday, January 8, 2021

சபரிநாதன்: நூறு புலன்கள் முளைத்த கவிஞர்



வெயில் காலத்தில் எல்லாமே திறந்திருக்கிறது, அப்பட்டமாக இருக்கிறது என்ற உணர்வே நம்முள் ஏற்படும். ஆயினும் வெயில் எல்லா அப்பட்டங்களுக்கும் உள்ளே ரகசிய மூடலைக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. தார்ச்சாலையில் சற்றுத் தொலைவில் தோன்றும் கானல்நீர் அப்படிப்பட்ட ரகசிய மூடல்தானே. ஒரு வெயிற்காலத்தில் சபரியின் கவிதைகளைப் படிக்கும்போது இவ்வளவு அப்பட்டமான கவிதைகள் எவ்வளவு ரகசிய மூடல்களைக் கொண்டிருக்கின்றன என்றே தோன்றுகிறது.

கதவில்லாத, மறைவிடம் இல்லாத எதுவும் இல்லை. அதையெல்லாம் சபரி திறக்க முயல்கிறார். ‘தாத்தா இந்த முறுக்கைத் திறந்து தா’ என்று தன்னிடம் ஒரு குழந்தை கேட்டதாக மறைந்த கலை-இலக்கிய விமர்சகர் தேனுகா ஒரு முறை என்னிடம் பகிர்ந்துகொண்டார். அந்தக் குழந்தையைப் பொறுத்தவரை முறுக்கு ஒரு உலகம்; அதைத் திறந்துதான் அடைய வேண்டும். கவிஞர்கள் அந்தக் குழந்தையைப் போல்தான் இருக்க வேண்டும். கீழ்க்காணும் வரிகளில் சபரி அந்தக் குழந்தையாகவே தெரிகிறார்.

‘அப்படி ஒரு கணம் இது

ஒவ்வொரு பொருளிலும் ஒரு கதவு திறக்கிறது

காண முடியாதது எதுவுமில்லை கேட்க முடியாதது எதுவுமில்லை

நூறுநூறு புலன்கள் முளைத்த புத்துயிரி நான்.’

ஒரு மொழியின் அசாதாரணக் கவிஞர் நூறு நூறு புலன்கள் முளைத்த புத்துயிரியாக இருக்கும்போது அவரால் எல்லாப் பொருட்களிலும் கதவு இருப்பதைக் காண இயலும்; அதே நேரத்தில் அவரால் திறக்க முடியாத கதவேதும் இருப்பதில்லை. ஆரஞ்சுப் பழம் வழியாக அவரால் இந்த உலகத்தைப் பார்க்க முடியும். அப்படிப் பார்க்கும்போது அவரையும் இந்த உலகம் ஆரஞ்சு வழியாக முறைக்கவும் செய்யும்.  

தயாரான மனது

யதார்த்த வாழ்வில் நாம் பார்க்கும் பல விஷயங்களை எந்தக் கேள்வியும் கேட்காமல் கடந்துவிடுகிறோம். அல்லது எந்தச் சலனமும் இல்லாமல் நம் ஆழ்மனதில் பதிய அனுமதித்து அப்படியே இருந்துவிடுகிறோம். அதேபோல் காலப்போக்கில் மறக்கப்பட்ட விஷயங்களையும் ஆழ்மனதின் ஓரத்துக்கே தள்ளிவிடுகிறோம். உதாரணத்துக்கு, ஒரு கவிதையில் சம்பந்தாமே இல்லாதது போன்ற இடத்தில் ‘இப்போதெல்லாம் யாரும் யாரையும் குட்டி பூர்ஷ்வா என்று திட்டுவதில்லை’ என்று ஒரு வரி வரும். இதற்கு நம்மிடமிருந்து ‘ஆமாம்தானே’ என்று பதில் வருகிறது. ஒரு காலத்தில் இடதுசாரி விவாதங்களில், இலக்கிய இதழ்களில் நிறைய கேட்ட சொல் ‘குட்டி பூர்ஷ்வா’. இன்று அந்தச் சொல்லுக்கு என்ன ஆகிவிட்டது. ‘குட்டி பூர்ஷ்வா’ இல்லாமலா போய்விட்டார்? இது சாதாரண விஷயம்தான் என்று நாம் போய்விடுகிறோம். ஆனால், எவ்வளவு சாதாரண விஷயங்களை நம் ஆழ்மனதுக்குள் கொட்டிவைப்பது? அவையெல்லாம் தங்களுக்குள் கலைந்து கலைந்து விளையாட்டு நடத்தும் கோலம்தான் சபரியின் பல கவிதைகள்.

இதுபோன்று சம்பந்தமே இல்லாதது போன்ற வரிகள் சபரியின் கவிதைகளில் ஏராளமாகத் தலைகாட்டும். நம் நினைவு அப்படித்தானே! எந்த சம்பந்தமும் இல்லாமல் திடீரென்று ஒரு படத் தலைப்பு நினைவுக்கு வரும், இரண்டாம் வகுப்பு ஆசிரியர் நினைவுக்கு வருவார். அப்படி இருக்க கவிதைகள் மட்டும் ஏன் தொடர்ச்சியாக நூல் பிடித்ததுபோல் போய்க்கொண்டிருக்கின்றன? கவிதையாக மாறும் விஷயங்களைக் கவிதைக்குள் கொண்டுவர மிகவும் தயாரான ஒரு மனது வேண்டும். தன் மேல் பதியப்படும் இசைக்கீறலுக்காகத் தயாராக இருக்கும் பதிவுசெய்யப்படாத இசைத்தட்டு போன்ற மனது வேண்டும். அதனால்தான் அடுக்கடுக்காக சபரியின் எல்லாக் கவிதைகளிலும் இந்த மாயம் நிகழ்கிறது. இதற்கேற்ப சபரியின் கண் இழுவலையாக மாறி சம்பவங்களின் சொற்களை இழுத்துவருகிறது. ‘தள்ளுவண்டியில் சென்னா கொதிக்கும் மாலையில் திரும்பும் எனக்கு’ எனும்போது அந்த வரியில் சொல்லப்படாத, மாலைக்கு உரிய எல்லா விஷயங்களையும் அந்த வரி சேர்த்து இழுத்துக்கொண்டே தன் வீட்டுக்குத் திரும்புகிறது.

அப்பா நம்மிடம் ஒப்படைக்கும் வாள்

சிறுவயதிலிருந்து எனக்கு அப்பாவுடன் சைக்கிளில் செல்வது ரொம்பவும் பிடிக்கும். ஆரம்பத்தில் முன்னாலும் இன்னும் கொஞ்சம் வயது கூடிய பின் பின்னாலும் அமர்ந்து போவேன். அப்பாவுக்கு வயதாகி நான் இளைஞனாக மாறிய பிறகும் கொஞ்சநாள் அது தொடர்ந்துகொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் சைக்கிளை என்னிடம் கொடுத்து ‘ஓட்டு’ என்று சொல்லிவிட்டு சைக்கிளின் பின்னால் உட்கார்ந்துகொள்ள அவர் தயாரானபோது என் உலகமே இடிந்து தலைமேல் விழுந்ததுபோல் இருந்தது. சபரியின் ‘அப்பாவுக்கு டை அடித்த நான்கு நிமிடங்கள்’ கவிதையைப் படித்தபோது அதேமாதிரியான உணர்வு மேலிட்டது. மருத்துவமனையில் இருக்கும் அப்பாவுக்கு மகன் டை அடிப்பது பற்றிய கவிதை இது. அதன் இறுதி வரிகள் இவை: ‘… நான் குழைக்கிறேன் மயிர்ச்சாந்தை/ நரைக்கூச்சலுக்கு எதிராக கரும்மௌனத்தை/ இக்கூர்ச்சகை தான் எனது வாள்/ இனி அவர் சார்பாக/ நான் போரிடுவேன்.’ அப்பாக்கள் நம்மிடம் சைக்கிளையும் சாயம் பூசும் புருசையும் தந்துவிடும் கணம்தான் நம் பிராயத்துடனான எல்லாத் தொடர்புகளையும் ரத்தம் சிந்தச் சிந்த அறுக்கும் கத்தியாக உருவெடுத்துவிடுகிறது. அதே நேரத்தில், நம் அப்பாக்கள் சார்பாகப் போரிடுவதற்கான வாளாகவும் அந்தக் கணம் நம் கையில் வந்து உட்கார்ந்துகொள்கிறது.

பரிசோதித்திராத பிரக்ஞை

‘அன்பைப் பரிசோதித்திராத/ பால்கன்னி ஆடுகளின் காலம் அது’ என்று ஒரு கவிதையில் எழுதுகிறார் சபரி. இது வழக்கமான அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் இடையிலான ஒப்பீட்டைத் தாண்டியும் ஒவ்வொரு காலமும் தனது வெகுளித்தனத்தைத் தொலைத்துக்கொண்டே வருவதை நமக்கு உணர்த்துகிறது. வனவிலங்கு ஆர்வலர்கள் அதிகரித்துவருவதையும் வனவிலங்குகள் குறைந்துவருவதையும் நாம் நினைத்துப்பார்க்க வேண்டும். வனவாழ் பழங்குடியினருக்கு அவர்களைச் சுற்றிலும் இருக்கும் உயிரினங்களைப் பற்றிய பட்டறிவு அதிகம். ஆனால், அவற்றின் உடலில் இன்ன வகையான திசுக்கள், இத்தனை எலும்புகள், உயிரின வகைப்பாட்டியலில் அந்த விலங்கை எப்படிக் குறிப்பிடுவது என்ற விவரமெல்லாம் வனவிலங்கு ஆர்வலருக்கே தெரியும். வெகுளித்தனம் என்பது இயல்பறிவைக் குறித்த பிரக்ஞையற்று அதைக் கொண்டிருத்தல். அதைத் தொலைக்கும்போது சபரி சொல்வது போல் அன்பைப் பரிசோதித்துப்பார்க்க வேண்டியிருக்கிறது.

ஈயின் பாதை…

ஒரு காட்சியை எந்தக் கோணத்தில் பார்த்து அல்லது உள்வாங்கி, அதை எப்படிப்பட்ட வார்த்தைகளில் வெளிப்படுத்துவது என்பதில் அடங்கியிருக்கிறது ஒரு கவிஞரின் வீச்சு. ஜெபமாலையை உருட்டிக்கொண்டே முணுமுணுக்கும் ஜெபா சித்தியின் உதடுகள் பற்றி சபரி இப்படி எழுதுகிறார்.

‘…வா போ வா போ வா போ… இப்படித் தொடர்ந்து தட்டச்சு செய்கிறது

புலனாகாத துணிச்சரிகையொன்றைத் தைக்கிறது, அதை

ஈரமான கத்தரியால் வெட்டுகிறது மீண்டும்

தைக்கிறது மீண்டும்

வெட்டுகிறது’

ஒரு ஈயின் பாதையைப் பின்தொடர்ந்தால் என்னென்ன கோட்டோவியங்கள் கிடைக்குமோ அதைப் போலவே சித்தியின் ஜெபம் கூறும் உதடுகளைப் பின்தொடர்ந்து சொற்கோலங்களை உருவாக்குகிறார் சபரி.

கோழியின் வீரமரணம்

பெரும்பாலான கவிதைகளை உதிரிஉதிரியாக சபரி கோர்த்துக்கொண்டே செல்கிறார். அது அலங்கோலமான கவிதைக் கட்டமைப்பாக இல்லாமல் தொடர்ச்சியான அர்த்தத்துக்கு எதிரான கட்டமைப்பாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, ‘பின்காட்சி ஆடியில் அஸ்தமனம்’ என்ற கவிதையில் இந்தப் பகுதி:

‘வண்டியை நிறுத்துகிறோம் சிகரெட்டுக்காக

தூரப்புஞ்சையில் மங்கலாக ஒளிரும் அது ஒரு கோழிப்பண்ணை

-விபத்து நடக்க வாய்ப்பே இல்லாத இடம்-

உபயத்தில் இரண்டு காரைச்சுவர்கள், அர்த்தமின்மைக்கு எதிராக ஒரு மஞ்சள் விளக்கு

மேலே சாய்வோடுகள் மீது குந்தியிருக்கும் உடுக்கள் பொரித்த பேரந்தகாரம்: முட்டையை அடைகாக்கும் காட்டெருமை

உள்ளிருந்து ஒரு கோழியாவது வெளியேறி வந்து

இதை எல்லாம் அண்ணாந்து பார்த்தால்

மாரடைப்பில் சரிந்து விழக் கூடும்.

ஒருவருக்காவது அப்படியொரு வீரமரணம் வாய்க்கெட்டும்’

‘விபத்து நடக்க வாய்ப்பே இல்லாத இடம்’ ஏன் இந்தக் கவிதையில் இடம்பெற்றிருக்கிறது என்று யோசித்துத் தீரவில்லை. அவ்வளவு ஈர்ப்பையும் புதிரையும் கொண்டிருக்கிறது. சபரி சங்ககாலத்துக் கவிஞராக இருந்திருந்தால் ‘மீனெறி தூண்டிலார்’, ‘விட்ட குதிரையார்’, ‘செம்புலப் பெயல்நீரார்’ போல மேற்கண்ட கவிதையால் ‘முட்டையை அடைகாக்கும் காட்டெருமையார்’ என்று பெயர் பெற்றிருக்கக் கூடும். ‘விபத்து நடக்க வாய்ப்பே இல்லாத இடம்’ என்ற ஒரு வரி சொல்லும் அந்தகாரத்தின் மேலே இருக்கும் ‘உடுக்கள் பொரித்த அந்தகாரம்’ ஒரு கோழிக்கு மட்டுமல்ல நமக்கும் வீரமரணத்தை ஏற்படுத்தும் அர்த்தமின்மையைச் சுமந்துகொண்டிருக்கிறது. அதற்கு எதிராக ஒரு மஞ்சள் விளக்கு எப்போதும் எரிந்துகொண்டிருக்கும். இந்தக் கவிதையில் மட்டுமல்ல, சபரியின் பெரும்பாலான கவிதைகளிலும்.    

29 வயது ஆகும் சபரிநாதன் ஏற்கெனவே ‘களம்+காலம்= ஆட்டம்’ (2011, புது எழுத்து வெளியீடு) தொகுப்பின் மூலம் பரவலாக அறியப்பட்டவர்; இளம் கவிஞர். இவரது ‘வால்’ (2016, மணல் வீடு வெளியீடு) தொகுப்பு அவரை சமகாலத்தின் தனிப்பெருங்கவிஞராக ஆக்குகிறது. இவரது கவிதைகளில் வட்டார வழக்கு, சங்கக் கவிதைகளின் தாக்கம், விவிலியத் தமிழ் என்று மொழிப் பயன்பாட்டில் ஒரு வீச்சு தெரிகிறது. புதிதாக உருவாக்கும் சொற்கள், சொல்லடுக்குகள் போன்றவை இவரது மொழி வளத்தை நமக்கு உணர்த்துகின்றன.  

சம காலத்தின் முக்கியமான இளம் கவிஞரான சபரிநாதனுக்கு கடந்த வாரம் யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சபரி போன்ற எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும்போதுதான் விருதுகளின் தரநிர்ணயம் உயர்கிறது. யுவபுரஸ்கார் விருது பெற்றிருக்கும் சபரிநாதனுக்கு வாழ்த்துக்கள்!


Tuesday, October 6, 2020

காந்தி: காலத்தை முந்திய கனவு


ஓவியம்: அஹ்மது இமாது

ரமின் ஜஹான்பிக்லூ 

(மொழிபெயர்ப்பு: ஆசை)

காந்தியின் லட்சியமான அகிம்சை என்பது உயர்ந்த சிந்தனை, ஆனால் நடைமுறை சாத்தியமற்றது என்று கூறும் போக்கு இன்றைய உலகில் காணப்படுகிறது. இந்த நம்பிக்கையில் காணப்படும் முரண்பாடு என்னவென்றால், காந்தியின் கொள்கைகளைப் புறக்கணித்துவிட்டு, அவருக்குப் புனிதத்துவத்தை இது வழங்குகிறது. எனினும், காந்தி ஒரு துறவி அல்ல; அவர் மதத் தலைவரும் அல்ல. அவர் மிக மிக முக்கியமாக ஓர் அசல் சிந்தனையாளர், மிகக் கூர்மையான அரசியல் ராஜதந்திரி, மனித குலத்துக்கு அகிம்சை என்ற கோட்பாட்டை அறிமுகப்படுத்தும் சாத்தியம் குறித்து ஆழமாக நம்பிக்கை கொண்டிருந்தவர் அவர். 

அகிம்சை பற்றிய காந்தியின் கருத்தாக்கம் ஒரு கனவு அல்ல; அது யதார்த்தமான நம்பிக்கை, நடைமுறை லட்சியவாதத்தின் சிறு கூறை அது தரித்துக்கொண்டிருந்தது; அதாவது, அன்பின் விதியை உலக அளவில் வரவேற்கும் லட்சியவாதம் அது. இவ்வாறாக, தன்னை இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்களால் தாக்கம் பெற்ற ஆசியராகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டார்; அதே நேரத்தில் இயேசு கிறிஸ்து, சாக்ரடீஸ், டால்ஸ்டாய், ரஸ்கின், தொரோ ஆகியோரால் பெரிதும் தாக்கம் பெற்றவராகவும் இருந்தார். காந்தி ‘ஓர் அந்நியப்பட்ட ஆசியர்’ என்று தாமஸ் மெர்ட்டன் ஒருமுறை எழுதினார். அப்படியும் இருக்கலாம்; ஆனால், காந்தி தன் கலாச்சாரத்துக்கும் கிழக்கின் மரபுகளுக்கும் அந்நியரானது மேற்கிலிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டதால் அல்ல. மாறாக கிழக்கு, மேற்கு இரண்டுடனான அவரது நெருக்கம் மிகவும் பலனுள்ளதாக ஆக்கியதுடன் அவரை ‘பன்மைக் கலாச்சார இந்திய’ராக ஆக்கியது. காந்திக்கு அறிவுபூர்வமான திறந்த மனது இருந்தது. பிறரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், அதன் விளைவாக அவரது லட்சியங்களுக்கு ஏற்ப வாழ்வதற்கும் அது உதவியது. இப்படியாக, அவர் இந்திய அரசியல், தார்மீகத் தலைவர் மட்டுமல்ல; கடந்த நூறு ஆண்டுகளாக உலக அளவில் பின்பற்றப்படும் நவீன அகிம்சையின் தந்தையாகவும் அவர் இருக்கிறார். 

இப்படியாக, காந்தியிடம் அகிம்சைத் தத்துவமானது பொது மக்களின் எதிர்ப்புக்கான கருவியாகவும், அதிகாரம் மிக்கவர்களுக்கு எதிராக அதிகாரமற்றவர்கள் செயல்படுவதற்கான நடைமுறை ஆயுதமாகவும் ஆனது. எனினும், காந்தியைப் பொறுத்தவரை அகிம்சையானது அடிப்படையில் ஒரு தார்மீகச் செயல்பாடும்கூட. ‘ஆத்ம சக்தி’ என்று காந்தி குறிப்பிடுவது, உண்மையில் அறவியல் சார்ந்த நடத்தை நெறிமுறையாகும். சொல்லப்போனால், அவர் அகிம்சையை அடிப்படையில் அறம் சார்ந்த ஓர் அக்கறையாகவும் ஆக்கபூர்வமான அரசியல் நடவடிக்கையாகவும் பார்த்தார். காந்திக்கு அறவியல் செயல்பாடுகளும் அரசியல் செயல்பாடுகளும் ஒன்றே. ஆகவே, அவரைப் பொறுத்தவரை வன்முறைக்கும் வெறித்தனத்துக்கும் எதிரான போராட்டம் என்பது நியாயமற்ற சட்டங்களுக்கு அடிபணியாத செயல்பாட்டின் தளத்திலேயே வைத்துப் பார்க்க வேண்டியது: அது ஆத்ம சக்தியாலும் பிறருக்கு ஏற்றம் தருவதற்காக உண்மையைத் தேடுவதாலும் வெளிப்படுத்தப்படுகிறது. 

வாழ்க்கையைப் பொறுத்தவரை காந்தி ஆழமான அறவியல் பார்வை கொண்டிருந்தார்: புனிதப் பிரதிகளின் இறுக்கமான அதிகாரத்தையோ மத மரபுகளின் புனிதத்தையோ அவர் அங்கீகரிக்கவில்லை. ஆனால், நவீன அரசியல், அதன் எதேச்சாதிகாரப் போக்கு ஆகியவற்றின் முதன்மையான விமர்சகராக அவர் இருந்தார். ஆகவேதான், காந்தியை இன்று படிப்பதென்பது நவீன அரசியலை அதிகாரத்துக்கும் வன்முறைக்கும் இடையிலான புதிய உறவாகவும், குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான மரபான வேறுபாட்டைக் கடக்கும் வழியாகவும் தவிர்க்க முடியாத வகையில் மறுஆய்வுக்கு உட்படுத்துவதாகும். அது கலாச்சாரங்களுக்கு இடையிலான ஜனநாயகத்தை நோக்கிய நகர்வுமாகும். அங்கே வேற்றுமைகளில் ஒருமைப்பாடு என்பதில் வெறும் தேசியவாதம் காரணமாகச் சமரசம் ஏதும் செய்யப்படுவதில்லை, அங்கே ஜனநாயகச் செயல்பாடு என்பது வெறுமனே அரசமைப்புச் சட்டத்துடனும் பிரதிநிதித்துவத்துடனும் நின்றுவிடுவதில்லை. இந்தக் கண்ணோட்டத்தில், அகிம்சை பற்றிய காந்தியத் தத்துவமானது அரசியலின் மரபான அர்த்தத்தை முழுமையற்றதாகக் காண்கிறது. அதே நேரத்தில், அரசின் அதிகாரம் செய்யும் அத்துமீறல்களுக்கு எதிராக விழிப்புணர்வுடன் இருக்கவும், நமது தற்காலச் சமூகங்களில் அரசியல் அதிகாரம் சுல்தான்மயமாவதற்கு எதிராகப் போராடுவதற்கும் குடிமக்களைக் கடப்பாடு உடையவர்களாக ஆக்குகிறது. 

சமூக அளவில், ஒரு லட்சியச் சமூகத்தை காந்தி கனவு கண்டார். அந்தச் சமூகத்தில் கடையருக்கும் சமூக நீதி வழங்கப்படும் என்பது அவரது கனவு. தனிநபரிடமிருந்து எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அவர்களுடைய திறமைகளைக் கறக்கும் உலகு இது. குடிமைத்துவம், ஜனநாயகம் போன்ற தளங்களில் காந்தியச் சிந்தனை முழுவதுமே ஒரு நியாயமான சமூகத்தைக் கட்டமைக்கும் நோக்கத்தைச் சுற்றிச் சுழல்கிறது. இப்படியாக, ஜனநாயகம் தொடர்பிலான காந்தியின் கருத்தாக்கம் முழுவதுமாக மனித குல தார்மீகத்தின் வளர்ச்சியைச் சார்ந்து இருக்கிறது. அதில் பண்படாததும் வரன்முறையற்றதுமான தனிநபர்வாதமானது பரிவுகொண்ட மனிதத்துவத்துக்கு வழிவிடுகிறது. மேலும் அகிம்சை, ஜனநாயகம் குறித்துப் பேசும்போது அச்சமின்மை, பொருள் மீது பற்றின்மை, பணிவு போன்ற குணங்களை மனித குலம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று காந்தி நம்பினார். முதன்மையான நோக்கம் எதுவென்றால் பல்வேறு கலாச்சாரங்களையும் பல்வேறு பரிமாணங்களையும் கொண்ட சமூகத்துக்குப் பொருந்தும்படி மனிதர்களை மறுகட்டமைப்பு செய்வதுதான். எல்லா சிந்தனை மரபுகளைச் சேர்ந்த மனிதர்களுக்கும் சேவை செய்வதைத் தொடர்ந்து வலியுறுத்தியதே அவரது அகிம்சை ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படைப் பண்பு. 

கலாச்சாரங்கள், நம்பிக்கைகளுடனான உரையாடலில் மேற்கொள்ளும் இந்தப் பன்மைத்துவ அணுகுமுறையில் காந்தி தனது காலத்தை வெகுவாக முந்தியவராக இருந்தார். உண்மையில், கலாச்சாரங்களுக்கு இடையிலான உரையாடலின் தத்துவமாக அவரது அகிம்சை ஜனநாயகக் கோட்பாட்டை அவரது மரணத்துக்குப் பல தலைமுறைகளைத் தாண்டி தற்போது பார்க்கும்போது தெரிகிறது. காந்தி வறட்டுத்தனமான தேசியராக இல்லை; வேறுபட்ட கலாச்சாரங்கள், பல்வேறு மனப்போக்குகள் போன்றவற்றுக்குப் பொதுவான ஒரு தளத்தைக் கண்டுபிடிக்கும் புதிய பாதை வகுப்பவராக இருந்தார். ஜனநாயகம் தொடர்பிலான அவரது கோட்பாடு ஒற்றைக் கலாச்சாரம் அடிப்படையிலானதாகவோ கருத்துமுதல்வாத அடிப்படையிலானதாகவோ இல்லை. அது முதன்மையாகப் பன்மைத்துவம் கொண்டதாகவும் பரிவு கொண்டதாகவும் இருக்கிறது. இதன் விளைவாக, மதத்தை அவர் இறையியல் அடிப்படையில் அணுகாமல், அறத்தின் அடிப்படையில் அணுகுகிறார். ஆகவே, ஜனநாயகம் பற்றிய அவரது கோட்பாடும், சத்தியாகிரகம், சுயராஜ்ஜியம் உள்ளிட்ட அதை அடைவதற்கான வழிமுறைகளும் இறையியல் கோட்பாடுகள் அல்ல. இறையியல் சாராத உண்மையை நோக்கியே மனித விதி தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று காந்தி நம்பினார். ஆன்மிகத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் உண்மையைத் தேடியவர் அவர். இந்தத் தேடலில் இணைந்துகொள்ளும்படி பிறருக்கும் ஊக்கமளித்தார். 

மனித நாகரிகம் அறரீதியிலான பாதையில் செல்வதில் ஜனநாயகமானது துடிப்பு மிக்க ஓர் அம்சம் என்று காந்தி கருதினார். வாழ்க்கை பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களுக்கு இடையில் அவர் பாலம் அமைக்க முயன்றதை உண்மையின் பல பரிமாணங்களை அவர் அணுக முயன்றதோடு பல வகையிலும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதனால்தான், சமூக வாழ்வின் பல்வேறு மரபுகளை அவர் நிராகரிக்கவில்லை; அவற்றில் உண்மையானது எது என்று அவர் நம்புகிறாரோ அதை உறுதியாக ஏற்றுக்கொண்டார்; அறம் சார்ந்த பொதுவான ஒரு தளத்தை உருவாக்குவதற்காக அவற்றை ஒன்றுசேர்ப்பதைப் பற்றி அவர் சிந்தித்தார். காந்தி இவ்வாறாக, ஜனநாயகத்தையும் அகிம்சையையும் ஒரே உண்மையின் இரண்டு பக்கங்களாகக் கருதிப் பேசினார். 

வெறுப்பு, ஒதுக்கிவைத்தல், சந்தேகம், போர் போன்றவற்றின் எல்லா அரசியல், தத்துவ ஆதாரங்களுக்கும் அப்பால் அகிம்சையையும் ஜனநாயகத்தையும் இந்தியாவில் மேம்படுத்துவதே தனது திட்டமாக அவர் வரையறுத்துக்கொண்டார். அரசியல் என்பது பலவீனமான கருத்தாக்கம் என்பதையும் தேசியவாத அடிப்படையில் ஏற்படும் வன்முறை, போர் போன்றவற்றுக்கு இலக்காகக் கூடியது என்பதையும் அவர் நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான், அவர் இந்தியாவை இனம் சார்ந்த தூய்மை அல்லது மொழி ஒற்றுமை அல்லது ஒன்றிணைக்கக் கூடிய மதம் சார்ந்த பிற அம்சங்கள் போன்றவற்றைக் கொண்டு வரையறுக்கவில்லை. காந்தியின் ஜனநாயகத் தத்துவமானது பல்வேறுபட்ட ‘பிறருக்கு’ எதிராகப் போரிடுமாறு இந்தியர்களுக்கு அறைகூவல் விடுக்கவில்லை; தன் நிலப்பரப்பு சார்ந்த பிடிமானம் கொண்டிருக்கும் இந்தியத்துவத்துக்கு துவைதத்தையும் பன்மைத்துவ பரிமாணத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்த அர்த்தத்தில், காந்தியைப் பொறுத்தவரை பிறரின் கலாச்சாரத்தை நேசிக்காமல் தன் நாட்டை (அதாவது, இந்தியாவை) நேசிப்பதில் அர்த்தம் இல்லை. உலகளாவிய சகோதரத்துவம் நோக்கி காந்தி விடுத்த அறைகூவலானது தேசிய, மதரீதியிலான எல்லா சுயநலத்தையும் ஒதுக்கித்தள்ளிய, எல்லோரும் ஒன்றுசேர்ந்து வாழ்தல் எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் அமைந்தது. அவர் கூறியதுபோல், “உலகத்தினருடன் நட்புறவோடு இருப்பதென்பதும் ஒட்டுமொத்த மனிதக் குடும்பத்தையும் ஒன்றாகக் கருதுவதென்பதும்தான் மகத்தான வழிமுறையாகும். தனது மதத்தைப் பின்பற்றுபவர்களையும் பிற மதங்களைப் பின்பற்றுபவர்களையும் பாகுபடுத்திப் பார்ப்பவர்கள் தமது மதத்தினருக்குத் தவறான வழியைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், பேதத்துக்கும் மத வெறுப்புக்கும் கதவைத் திறந்துவிடுகிறார்கள்.” 

- ரமின் ஜஹான்பிக்லூ, இயக்குநர், அகிம்சைக்கும் அமைதி குறித்த ஆய்வுகளுக்குமான மகாத்மா காந்தி மையம், ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம், சோனிப்பட், ஹரியாணா. 


 

Friday, October 2, 2020

எல்லோரும் இணைவதற்கு காந்திதான் மையப்புள்ளியாக இருக்க முடியும் - அண்ணாமலை பேட்டி



ஆசை  

புதுடெல்லியில் உள்ள தேசிய காந்திய அருங்காட்சியகத்தின் இயக்குநர் என்கிற அடையாளத்தைத் தாண்டிய, சமகாலத்தின் குறிப்பிடத்தக்க காந்தியச் சிந்தனையாளர்களில் ஒருவர் எனும் அடையாளத்தையும் கொண்டவர் அ.அண்ணாமலை. சென்ற ஆண்டு நாடெங்கும் காந்தியின் 150-வது பிறந்த நாள் நிகழ்வுகளையும் கொண்டாட்டங்களையும் நடத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவரான அண்ணாமலையுடன், சமகாலச் சூழலில் காந்தியையும் அவருடைய வழிமுறைகளையும் எப்படிப் பொருத்திப் பார்ப்பது என்று பேசினேன்…  

காந்தியம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?  
ராணுவத்தில் சேர்ந்து அதிகாரியாகப் பணியாற்ற வேண்டும் என்ற மிகப் பெரிய கனவுடன் கல்லூரிக் காலத்தில் வாழ்ந்தவன் நான். அதில் ஏற்பட்ட சில மாற்றங்கள், அனுபவங்கள் என்னை வேறு வழிக்குத் திருப்பிக் கொண்டுவந்துவிட்டன. எம்எஸ்சி அமைதியாக்கம் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதுகலைப் பட்டத்தில் சேர்ந்தேன். களப்பணியில் காந்தி தேவைப்படுகிறார் என்பதற்காகப் படிக்க ஆரம்பித்தேன். அதுவே காந்தியப் பணியை நோக்கித் திருப்பியதோடு வாழ்க்கைப் பணியாகவும் அமைந்துவிட்டது தற்செயலான விஷயம்தான்.  

தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநராக உங்களால் மறக்க முடியாத விஷயங்கள் எவையெவை?  
தேசிய காந்தி அருங்காட்சியகத்தைக் காந்தியக் கருவூலம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் பயன்படுத்திய பொருட்கள், அவர் எழுதிய கடிதங்கள் என்று ஏராளமான விஷயங்களை உள்ளடக்கியது. தேசிய காந்தி அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு நாளும் புதுப் புது விஷயங்களைப் பார்ப்பது போன்ற ஒரு அனுபவம்தான் எனக்கு ஏற்பட்டது. உதாரணத்துக்கு, என்னுடைய நண்பர் ஒருவர் காந்தியுடைய வளர்ப்பு மகளும், அவருடைய ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பார் என்று கருதப்பட்டவர்களின் குழந்தையுமான லட்சுமியைப் பற்றிய தகவல் கேட்டிருந்தார். அதற்காக நான் தேடிக்கொண்டிருந்தபோது எங்களுடைய அந்தப் புகைப்படப் பிரிவில் தற்செயலாக ஒரு சின்ன நோட்டீஸ் கிடைத்தது. அதில் காந்தியுடன் அவருடைய வளர்ப்பு மகள் லட்சுமி என்று ஒரு படம் போட்டு இருந்தது. அந்தப் படம் 1935-களில் எடுக்கப்பட்டுள்ளது என்று எனக்குத் தெரிந்தது. அதை எடுத்து வைத்துக்கொண்டேன். இதைத் தொடர்ந்து பழைய புத்தகங்கள் எல்லாம் வைத்திருக்கக்கூடிய அந்த அறையைத் திறந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு கடிதத் தொகுப்பைப் பார்த்தேன். காந்தி கைப்பட எழுதிய அஞ்சல் அட்டை. அந்தக் கடிதத்தில் ‘உங்களுடைய மகன் இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்துதான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறுகிறார். அதற்குப் பின்னால் இந்தத் திருமணத்தைப் பற்றிப் பேசுவோம்’ என்று திருமணம் பற்றிய ஒரு பதிவு இருந்தது. அவர் ஆந்திரத்தைச் சேர்ந்த சர்மா என்பவருக்கு எழுதிய கடிதம். சர்மாவின் மகன் மாருளியா. அவரை மாருதி என்றே அழைப்பார்கள்; அவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அவருக்கும் காந்தியின் ஆசிரமத்தில் இருந்த அவருடைய வளர்ப்பு மகளும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருமான லட்சுமிக்கும் இடையிலானதுதான் இந்த திருமணப் பேச்சுவார்த்தை. இதுவரை இந்தக் கடிதம் எங்கும் வெளியிடப்படவில்லை. ஆனால், இதுபோன்ற நடவடிக்கையில் காந்தி ஈடுபட்டிருந்தார் என்பது தெரியும். ஆகவே, எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பிறகு, நூலகத்துக்குச் சென்று பழைய செய்தித்தாள்கள் பிரிவில் இருக்கும் கோப்புகளை எல்லாம் பார்க்கலாம் என்று எடுத்தேன். ஒரு கோப்பை நான் திருப்பியவுடன் என் கண்ணில் பட்டது ஒரு பெண்ணின் பேட்டி. தன்னுடைய வாழ்க்கையில் காந்தி எப்படியெல்லாம் மாற்றங்களைக் கொண்டுவந்தார், எப்படித் திருமணம் நடந்தது என்பதைப் பற்றியெல்லாம் விளக்கமாகப் பேசியிருந்தார். அந்தப் பெண் வேறு யாரும் அல்ல; லட்சுமிதான். அடுத்தடுத்து புகைப்படம் கிடைக்கிறது, காந்தி எழுதிய கடிதம் கிடைக்கிறது, லட்சுமியின் பேட்டி கிடைக்கிறது எனும்போது ஆச்சரியமாக இருக்கிறது; அதுவரை ஒரு கதையாகச் சொல்லப்பட்டது அங்கே ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டது. இப்படியான பல விஷயங்கள் நடந்துகொண்டேயிருக்கும் இடம் அது.  

சிறுவர்களிடம் காந்தியை எடுத்துச்செல்வதைப் பணியாகக் கொண்டிருக்கிறீர்கள். சிறுவர்கள் காந்தியை எப்படி எதிர்கொள்கிறார்கள்?  
மாணவர்களுக்கு காந்தியை சொல்வது மிக எளிதாகத்தான் இருக்கிறது. பெரியவர்களுக்கு சொல்லும்போதுதான் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஏனென்றால், மாணவர்கள் காந்தியை காந்தியின் வழியாக அணுகுகிறார்கள்; நல்லதோ கெட்டதோ நேரடியாகத் தங்கள் அனுபவத்தின் வழி காந்தியை மதிப்பிடுகிறார்கள். பெரியவர்களோ பெரும்பாலும் காந்தியை வேறு மனிதர்களின் பார்வைகளின் வழி வந்தடைகிறார்கள். காந்தியை வாசிக்காமலே, அவரைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ளாமலேயே அவருக்கான தீர்ப்பை எழுதிவிடுகிறார்கள். 

காந்தியும் அந்நாளைய காந்தியர்களும் அதிகாரத்திடம் உண்மையைப் பேசினார்கள்; இந்நாளைய காந்தியர்கள் மௌனமாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்? 
காந்தியர்கள் எப்போதும் ஒரே மாதிரியாகவே செயலாற்றுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் வேறு பல அமைப்புகளுடனும் ஒப்பிட முடியாத அளவுக்குப் பல்வேறு தளங்களில் தங்கள் காரியங்களை அவர்கள் விரித்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அன்றைக்கு காந்தியர்களுக்கும் அவர்களுடைய காரியங்களுக்கும் கொடுக்கப்பட்ட நியாயமான கவனம் இன்றைக்கு ஊடகங்களால் கொடுக்கப்படுவதில்லை என்பதே இப்படியான பார்வைக்கான காரணம். இந்தத் தலைமுறை ஊடகங்களை முழுக்கவுமே வியாபார நோக்கங்கள் ஆக்கிரமித்துவிட்டன; விளைவாக, ஆட்சியதிகாரத்துக்கு அப்பாற்பட்டு சந்தை நோக்கத்தின் அடிப்படையில் பரபரப்பையே நாடுகின்றன. சமூகம் இரண்டாகப் பிளந்துகொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் இந்தப் பக்கம் அல்லது அந்தப் பக்கம் என்று முடிவெடுத்துப் பேசுபவர்களின் செயல்பாடுகளே கவனிக்கப்படுகின்றன. காந்தியர்கள் அப்படியான இயல்பைக் கொண்டவர்கள் அல்ல. பிளேக் காலகட்டத்திலும், போயர் போர் காலகட்டத்திலும் பிரிட்டிஷ் அரசுடனும் இணைந்து செயலாற்றியவர் காந்தி. பிரிட்டிஷார் ஆட்சியை வேரறுக்கச் செயல்பட்ட காந்தியின் இந்த அணுகுமுறையை ஒரு காந்தியர் பின்பற்றுவதை இன்றைய ஊடகங்கள் எப்படி அணுகும் என்று நினைக்கிறீர்கள்? ஜனநாயகத்துக்காக, மதச்சார்பின்மைக்காக, சுற்றுச்சூழலுக்காக என்று ஒவ்வொரு தளத்திலும் அதிகாரத்தை நோக்கி உரக்கப் பேசுவதில் மட்டும் அல்ல; சிதைவுகளுக்கு மாற்றாக ஒன்றை உருவாக்கும் பணியிலும் காந்தியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் உரிய கவனம் இன்று பெறாததால், அவர்கள் செயல்படவே இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.  

காந்தியோடு முரண்பாடு கொண்டிருந்த சித்தாந்தங்கள் பலவும் தற்போது காந்தியத்தோடு நெருங்கிவருவதுபோல் தெரிகிறது. இந்த மாற்றத்தின் காரணம் என்ன? 
எதிரி மிகவும் பலசாலியாக இருப்பதால் எதிராளிகள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பது எல்லோருக்கும் புரிகிறது. அதற்கு ஒரு மையப்புள்ளி தேவை இல்லையா? சமூகத்தின் எல்லாத் தரப்புகளோடும், எதிரில் இருப்பவரையும் ஒரு தரப்பாக அணுகிய காந்தியே அந்த மையப்புள்ளியாக இருக்க முடியும் என்றும் புலப்படத் தொடங்கியிருக்கிறது. அதன் விளைவாகவே காந்தி என்ற மையப் புள்ளியை நோக்கி எல்லோரும் வந்துகொண்டிருக்கிறார்கள்.  

தனிப்பட்ட வாழ்க்கையில் பின்பற்ற இயலாத அளவு கடினமானதா காந்தியம்?  
சைக்கிள் ஓட்டுவதுபோலத்தான் வாழ்க்கை. சைக்கிள் பழகும்போது நமக்கு எல்லோருக்கும் தெரியும், எவ்வளவு கடினமான ஒரு செயல். எத்தனை முறை தடுக்கித் தடுக்கி விழுந்திருப்போம். எத்தனை முறை அடிபட்டிருப்போம். ஆனால், அந்த சைக்கிள் ஓட்டிப் பழகியவுடன் எவ்வளவு எளிதாக இருக்கிறது. அது, பழக்கத்தில்தான் வருகிறது, உங்களுடைய அர்ப்பணிப்பில்தான் உள்ளது. நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் காந்தியத்தைவிட எளிமையானது வேறு எதுவுமே கிடையாது. நம்முடைய வாழ்க்கையை நாம் சிக்கலாக்கிக்கொண்டதால் வந்த வினைதானே ஒழிய அவருடைய சிந்தனையைப் பொறுத்த அளவில் எளிமையானதுதான்.  

காந்தி தற்காலத்துக்கு எந்த அளவுக்குப் பொருத்தப்பாடு உடையவராக இருக்கிறார் என்று நினைக்கிறீர்கள்?
காந்தி தற்காலத்துக்கு ஏற்புடையவரா என்ற கேள்வியைக் காட்டிலும், நாமும் நம்முடைய வாழ்க்கை முறையும் தற்காலத்துக்கு ஏற்புடையவையா என்று கேள்வியை மாற்றிக்கொண்டால், காந்தி எல்லாக் காலத்துக்கும் எவ்வளவுக்குப் பொருத்தம் உடையவர் என்பது விளங்கிவிடும் என்று நினைக்கிறேன். நம்முடைய வாழ்க்கை முறை, நம்முடைய பொருளாதார அணுகுமுறை, நம்முடைய வளர்ச்சி தொடர்பிலான பார்வை அத்தனையிலும் ஓட்டை விழுந்துகொண்டிருப்பதை எல்லோருமே உணர்ந்திருக்கிறோம்தானே! இதற்கு என்ன மாற்று, யாருடைய வழிமுறை பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சமூகத்தளத்திலேயே ஒரு முஸ்லிம் அல்லது ஒரு தலித் பக்கத்திலிருந்து இன்றைய காலகட்டத்தைப் பாருங்கள். அவர்களுக்கு இவ்வளவு நெருக்கமான, பக்கபலமான ஒரு தார்மீக உறவுக்குரல் காந்திபோல வேறு எது ஒன்று இருக்கிறது? 

காந்தியம் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?  
பொதுவாக, நாம் ஏதோ புதுமையானவர்கள்போலவும், காந்தியம் மிகவும் பழமையானவர்போலவும் ஒரு பார்வையை வைத்துக்கொண்டு காந்தியை அணுகுகிறோம். இது தவறு. ‘காந்தியம் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள வேண்டுமா அல்லது நம்மை நாமே புதுப்பித்துக்கொள்ள வேண்டுமா?’ என்று கேள்வியை மாற்றி யோசிக்குமாறு உங்களை வேண்டுகிறேன். 

-(2020 காந்தி ஜெயந்தி அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான பேட்டி)

Sunday, September 27, 2020

அதுவா அதுவா அதுவா எஸ்பிபி?



ஆசை 

சுஜாதா ஒரு கட்டுரையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு உலகம் (குறிப்பாக, தமிழ்நாடு) வழக்கமான விதத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட சில விஷயங்களைப் பட்டியலிட்டிருப்பார். அதில் இதுவொன்று: ‘எஸ்பிபி வழக்கமாகப் பாடலுக்கிடையே சிரித்தார்’. அதைப் படித்தபோது ‘ஆமால்ல’ என்று தோன்றியது. சற்று கிளாஸிக் தொனி கொண்டிருந்த ஏசுதாஸின் குரலை சிறு வயதிலிருந்து அதிகம் ரசித்த மனதுக்கு சுஜாதாவின் வரியில் இருந்த விமர்சனம் பிடித்திருந்தது. எனினும் இளையராஜாவின் வழியாக எஸ்பிபி துரத்திக்கொண்டிருந்தார். ‘பருவமே புதிய பாட’லில் என்னுடன் ஓடினார்; ‘உறவெனும் புதிய வானில்’ என்னுடன் பறந்தார்; ‘ஸென்யோரீட்டா ஐ லவ் யூ’ என்று கூறவைத்தார்; சிறு வயதில் தெரு நிகழ்வில் ஆடுவதற்காகப் பின்னணியில் ‘மாங்குயிலே பூங்குயி’லாகக் கூவினார். இன்று சிறுவனான என் மகனைத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடல் தேடும்போது ‘தேனே தென்பாண்டி மீனாக’த் துள்ளிவருகிறார். விடாப்பிடியானவர்தான் எஸ்பிபி. 

நான் பல முறை யோசித்ததுண்டு எஸ்பிபி ஏன் பாடலுக்கிடையில் சிரிக்கிறார் என்று? நயமான ரசிகர்கள் இதை வெறும் ‘ஜிகினா வேலை’, ‘ஜிமிக்ஸ்’ என்று கடந்துவிடுவார்களல்லவா? சிறு வயதில் பார்த்த ஆர்க்கெஸ்ட்ரா ஒன்று நினைவுக்கு வருகிறது. மேடையில் இசை ஒலிக்க ஆரம்பித்துவிட்டது; ஆனால், பாடகரைக் காணோம். திடீரென்று மக்களுக்கிடையிலிருந்து ‘புதிய வானம் புதிய பூமி’ என்று ஒரு குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஒருவர் எழுந்து பாடிக்கொண்டே மேடை நோக்கி ஓடுகிறார். ஒருசில நொடிகள் அதிசயித்து வாயைப் பிளந்திருந்த மக்கள் அதன் பிறகு வெளிப்படுத்திய ஆரவாரம் விண்ணைப் பிளக்கிறது. இது ஒரு நிகழ்வோடு பார்வையாளர்களையும் ஒரு அங்கமாக்கும் முயற்சி என்பதை பின்னாளில் மனம் விளங்கிக்கொண்டது. தெருக்கூத்தில் இதுபோன்ற உத்திகள் சகஜம். கலைக்கு ஒரு திறந்த தன்மையை வழங்கும் உத்தி இது. மியூஸிக் அகாடமியில் சஞ்சய் சுப்பிரமணியன் இப்படிச் செய்தால் மறுநாள் அதை ‘மகத்தான கலைஞனின் மலிவான உத்தி’ என்று ஆங்கில நாளிதழ்கள் எழுதும். 

எஸ்பிபி சிரித்தது, அழுதது எல்லாம் பாடலை உறைநிலையிலிருந்து நெகிழ்த்துவதற்கான உத்தி. ஜானகியும் இதைப் பின்பற்றியிருக்கிறார். இது பாடலிலிருந்து கைகள் முளைத்து, அதைக் கேட்கும் ரசிகரின் கைகளுடன் கோக்கும் முயற்சி. தங்கள் கலை வாழ்க்கையின் உச்சத்தில் அவர்கள் இருந்தபோது தமிழ்நாட்டிலேயே அதிகம் கேட்கப்பட்ட குரல்கள் அவர்களுடையதுதான் என்பதை கவனம் கொள்ள வேண்டும். 

கவிஞர் இசை எஸ்.பி.பி.யின் பாடலொன்று தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ‘பரோட்டா மாஸ்டரின் கானம்’ என்ற கவிதையொன்று தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவிவருகிறது. அந்தக் கவிதை இதுதான்:  
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..
2014, டிசம்பர் 3, இரவு சுமார் எட்டு மணி இருக்கும்
"மூக்கின் மேலே
மூக்குத்தி போலே
மச்சம் உள்ளதே... "அதுவா?
என்று நீங்கள் கேட்க,
கோயமுத்தூர் முனியாண்டி விலாஸில்
அடுப்பில் கிடந்து கருகும்
திருமங்கலத்து பரோட்டா மாஸ்டரொருவன்
அதுவா.. ?
அதுவா... ?
அதுவா... ?
என்று திருப்பிக் கேட்டான்
அப்போது உங்களுக்கு சிலிர்த்துக்கொண்டதா எஸ்பிபி ஸார்? 

எஸ்.பி.பி. குறிப்பிட்ட தரப்பினருக்கானவர் மட்டும் இல்லை; எல்லோருக்குமானவர் என்பதை அவரது மரணத்துக்குப் பிறகு அவருக்குக் குவியும் புகழாஞ்சலிகள் உணர்த்துகின்றன. எனினும், அவர் எல்லோருக்குமானவர் என்பதைவிட கொஞ்சம் கூடுதலாக, ‘அடுப்பில் கிடந்து கருகும்’ பரோட்டா மாஸ்டருக்கானவர் என்பதுதான் உண்மை; அதுவே எஸ்.பி.பி.க்குப் பெருமை. இந்தக் கவிதை எஸ்.பி.பி.யின் பார்வையைச் சென்றடைந்ததா என்பது தெரியவில்லை. அப்படி இல்லையென்றால், தன்னைப் பற்றிய மிகச் சிறந்த புகழாஞ்சலி ஒன்று இப்போதேனும் அவரைச் சென்றடையட்டும். 

 இப்போது சுஜாதாவின் குறிப்பையும் இசையின் கவிதையையும் நேரெதிராக வைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. ‘அதுவா…? அதுவா…? அதுவா…?’ என்று எஸ்.பி.பி.போல் சிரித்துக்கொண்டே அந்த பரோட்டா மாஸ்டர் கேள்வி கேட்டபோது அந்த வழியாக சுஜாதா செல்கிறார் என்று கற்பனை செய்துகொள்வோம். ‘தமிழர்கள் பரோட்டா சுடும்போது ஒருவிதமாக ஆகிவிடுகிறார்கள்’ என்று கூட அவர் நகைச்சுவையாக எழுதியிருக்கலாம். 

சமீப ஆண்டுகளாக மனம் வெளிப்படையாக எஸ்.பி.பியுடன் சேர்ந்து சிரிக்கிறது. தான் பாடும்போது தன்னை எஸ்.பி.பியாக நினைத்துக்கொள்கிறது. எஸ்.பி.பியைவிட கூடுதலாக சிரிக்கிறது; அழுகிறது. எஸ்.பி.பி. சிரித்தார் என்பதற்காகத் தவறவிட்ட ‘பனி விழும் மலர் வனம்’, ‘விழியிலே மணி விழியில்’ போன்ற ரத்தினங்களை மனம் தன் கைகளில் உருட்டிவிளையாடுகிறது. 

எஸ்.பி.பி சார், இப்போது நீங்கள் ‘அதுவா அதுவா அதுவா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்கிறீர்கள்; உங்களுக்கு மறுகேள்வி கேட்கிறார் அந்த பரோட்டா மாஸ்டர்; எனக்கோ இரண்டையும் கேட்டுக்கொண்டே அந்த பரோட்டா மாஸ்டர் போட்ட பரோட்டாக்களை ஒரு கை பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுகிறது.

(‘இந்து தமிழ்’ நாளிதழில் 27-09-20 அன்று வெளியான, எஸ்பிபிக்கான அஞ்சலிக் கட்டுரையின் சற்று விரிவான வடிவம்)

Monday, August 17, 2020

அமெரிக்கப் பன்மைத்தன்மையின் வெற்றி!

 

ஆசை

இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் வெளிநாடுகளில் சாதனைகளை நிகழ்த்தும்போதோ, உயர்ந்த அந்தஸ்துக்கு அவர்கள் வரும்போதோ இயல்பாகவே பெருமிதம் அடைகிறோம். இந்திரா நூயி, சுந்தர் பிச்சை போன்றோரை எடுத்துக்காட்டலாம். கடந்த 11-ம் தேதி அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய-ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை அறிவித்த பிறகு தமிழகத்திலும் இந்தியாவிலும் உலகெங்கும் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர்களுள் ஒன்றாக கமலா ஹாரிஸ் ஆகிப்போனது. 

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஓக்லாந்து நகரில் 1964-ல் அக்டோபர் 20 அன்று பிறந்த கமலா ஹாரிஸின் தாய்வழி பூர்வீகம் சென்னை என்றுதான் பெரும்பாலான உலகப் பத்திரிகைகள் எழுதிவருகின்றன. இன்னும் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து மன்னார்குடிக்கு அருகில் உள்ள பைங்காநாடு கிராமம்தான் அவரது பூர்வீகம் என்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியானது. இந்த நுணுக்கம் மிகவும் அவசியமானது. ஏனென்றால், சென்னை-அமெரிக்கா என்பதைவிட பைங்காநாடு-அமெரிக்கா என்பதன் நுட்பங்களும் நீளமும் அதிகம். 

அரசியல் வாழ்க்கைக்கான வித்து 

கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தா பி.வி.கோபாலன் வெளியுறவுத் துறை அதிகாரியாக இருந்தவர். அவரின் பெண் ஷியாமளா மேற்படிப்புக்காக 19 வயதில் அமெரிக்கா சென்றார். அவரை அந்நாடு வரவேற்கவில்லை. இந்தியாவில் ஷியாமளா மேல்வகுப்பினராகப் பார்க்கப்பட்டாலும் நிறவெறி அமெரிக்காவைப் பொறுத்தவரை அவர் ஒரு கறுப்பினத்தவரே! அந்தச் சூழல் ஷியாமளாவைப் புலம்பெயர்ந்தவர்கள், கறுப்பினத்தோருக்கான செயல்பாட்டாளராக மாற்றியது. கறுப்பின உரிமைச் செயல்பாட்டாளரும் ஜமைக்காவைச் சேர்ந்தவருமான டொனால்டு ஹாரிஸை அவர் மணந்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்: கமலா தேவி ஹாரிஸ், மாயா லட்சுமி ஹாரிஸ். நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள், அணிவகுப்புகள் போன்றவற்றின்போது ஷியாமளாவும் டொனால்டு ஹாரிஸும் தங்கள் குழந்தைகளைக் குழந்தைகளுக்கான தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளியபடி கலந்துகொண்டார்கள் என்று கமலா பின்னாளில் நினைவுகூர்கிறார். அவரது அரசியல் வாழ்க்கைக்கான வித்து அவர் தவழும் காலத்திலேயே இடப்பட்டிருக்கிறது. கமலாவுக்கு 7 வயது இருக்கும்போது பெற்றோர் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். 

கமலா ஹாரிஸின் குழந்தைப் பருவம் கலப்பினச் சூழலில் கழிந்தது. இந்திய, ஆப்பிரிக்க, அமெரிக்கக் கலாச்சாரம் மூன்றையும் பின்பற்றியே ஷியாமளா தன் குழந்தைகளை வளர்த்தார். வெள்ளையினக் குழந்தைகளும் கறுப்பினக் குழந்தைகளும் கலந்து வளரும், படிக்கும் சூழல் உருவாக வேண்டுமென்ற முன்னெடுப்புகள் நிகழ்ந்த 60-களின் பிற்பகுதி அது. மேற்கு பெர்க்லியிலிருந்து வடக்கு பெர்க்லியில் உள்ள பள்ளிக்கு கமலா ஹாரிஸ் அனுப்பப்பட்டார். நிறப் பாகுபாடு களைவதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பு 95% வெள்ளையினக் குழந்தைகள் மட்டுமே படித்துவந்த பள்ளி அது. கமலா ஹாரிஸின் இந்தப் பின்புலம் தற்போதைய வரலாற்றுக்கு மிகவும் முக்கியமானது. 

பள்ளிப்படிப்பை முடித்ததும் ஹோவர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலும் பொருளாதாரமும் படித்தார். அதை அடுத்து 1989-ல் ஹேஸ்டிங் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். 1990-1998 வரை ஓக்லாந்தில் மாவட்ட இணை அட்டர்னியாகப் பணியாற்றினார். தனது பணிக் காலத்தில் பாலியல் வன்முறை, கும்பல் வன்முறை, போதைமருந்து கடத்தல் போன்ற குற்றங்களின் மீது மிகவும் கடுமை காட்டினார். அவர் சான் ஃப்ரான்ஸிஸ்கோவின் அட்டர்னி ஜெனரலாக இருந்தபோது போதை மருந்து குற்றங்களில் ஈடுபட்ட இளைஞர்கள், சிறுவர்கள் போன்றோர் சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்குப் பதிலாக அவர்கள் படிப்பைத் தொடரவோ, நல்ல வேலையில் சேரவோ வழிவகுத்தார். 2004-ல் மாவட்ட அட்டர்னி ஆனார். 2010-ல் கலிஃபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாகப் போட்டியிட்டு வென்றார். அப்படி அந்தப் பதவிக்கு வந்த முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர், முதல் இந்திய-அமெரிக்கர் அவர்தான். 

1990-களின் மத்தியில் அரசியலர் வில்லி பிரௌனுடன் கமலா ஹாரிஸ் உறவில் இருந்தார். ஆனால், அது திருமணத்தில் முடியவில்லை. 2014-ல் யூதரான டக்ளஸ் எம்ஹாஃபும் கமலா ஹாரிஸும் மணந்துகொண்டனர். ஏற்கெனவே, தாயின் இந்து மதம், தந்தையின் கறுப்பின பாப்டிஸ்ட் கிறித்தவம் என்ற பன்மைத்தன்மை பின்னணியில் இருந்த கமலாவுக்கு டக்ளஸ் மூலம் யூத மதமும் வந்துசேர்ந்துகொண்டது. கமலாவே தான் இந்து கோயிலுக்கும் கறுப்பின பாப்டிஸ்ட் திருச்சபைக்கும் செல்வதாகச் சொல்லிக்கொள்பவர். 

கமலா ஹாரிஸின் அரசியல் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை 2015-ல் வந்தது. ஜனநாயகக் கட்சியின் பார்பரா பாக்ஸர் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்ததும் அவர் இடத்தில் அடுத்தது தான் நிற்கப்போவதாக கமலா ஹாரிஸ் அறிவித்தார். 2016-ல் நடந்த தேர்தலில் அவர் வெற்றிபெற்று செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017-ல் பொறுப்பேற்றார். அட்டர்னி ஜெனரலாக அவர் பெற்ற அனுபவம் நாடாளுமன்றத்தில் அவருக்கு மிகவும் உதவியது. எதிர்த் தரப்பை அவர் துருவித் துருவிக் கேள்விகள் கேட்டார். இது எல்லாமே கமலா ஹாரிஸை அடுத்த நிலையை நோக்கித் தள்ளியது.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் அடுத்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக கமலா ஹாரிஸ் 2019-ல் அறிவித்தார். ஆரம்பத்தில் அவருக்கு ஓரளவு செல்வாக்கு இருந்தது. தற்போது கமலா ஹாரிஸைத் துணை அதிபர் வேட்பாளராக யார் அறிவித்தாரோ அதே ஜோ பிடனைக் கடந்த ஆண்டு கமலா ஹாரிஸ் எதிர்த்துக் களம் கண்டார். ஒரு நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஜோ பிடனின் இனவாத நிலைப்பாடுகளை வைத்து அவரைக் கேள்விகேட்டது பலராலும் திரும்பிப் பார்க்கப்பட்டது. எனினும், 2019-ன் இறுதியில் கமலா ஹாரிஸின் செல்வாக்கு குறையவே அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து அவர் விலகிக்கொண்டார். 

ஆனால், 2020 அவருக்கு வேறு பல செய்திகளை வைத்திருந்தது. கரோனா பெருந்தொற்றை ட்ரம்ப் எதிர்கொள்ளும் விதத்தை கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சித்தார். கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல் துறையினரால் கொல்லப்பட்டது கமலா ஹாரிஸுக்குக் கூடுதல் விசையை அளித்தது. சற்றே இனவாதக் கருத்துகள் கொண்ட ஜோ பிடன் கறுப்பினத்தோர், புலம்பெயர்ந்தோர்களைத் தனது வாக்கு வட்டத்துக்குள் ஈர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஜோ பிடனின் அரசியல் கணக்குகளுக்கு கமலா ஹாரிஸ் பொருந்திவந்தார். அமெரிக்கச் சரித்திரத்தில் ஒரு பெருங்கட்சியின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க, முதல் இந்திய-அமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளர் என்று பல முதல்களுக்கு கமலா ஹாரிஸ் சொந்தமாகியிருக்கிறார். இந்த இணை வெற்றிபெற்றால் இன்னும் பல முதன்மைகளுக்கு கமலா ஹாரிஸ் சொந்தக்காரர் ஆவார். 

கமலா ஹாரிஸின் துணை அதிபர் தேர்வு என்பது அமெரிக்கா தன் உயிர்நாடியாகக் கொண்டுள்ள பன்மைத்தன்மையின் பிரதிபலிப்பு. கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பூரித்துப்போயிருக்கும் இந்தியர்கள் பலரும் சோனியா காந்தி குறித்து என்ன கருத்து கொண்டிருந்தனர் என்றும், அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருந்தபோது எத்தகைய எதிர்வினைகளை ஆற்றினார்கள் என்பதையும் யோசித்துப்பார்க்க வேண்டும். கமலா ஹாரிஸை ‘வந்தேறி’ அடையாளம் சூட்டி விலக்கிவைக்காமல் தனது இனவெறி வரலாற்றின் பாவக் கறையைக் கழுவக் கிடைத்த மற்றொரு வாய்ப்பாக (முதல் வாய்ப்பு ஒபாமா) அமெரிக்கா கருதுகிறது. உலகின் மூத்த ஜனநாயகம் இவ்வாறாக உலகுக்கே வழிகாட்டுகிறது. ஜனநாயக வேட்பாளரான ஜோ பிடனுக்குத் தற்போது 77 வயது ஆகிறது. ஆகவே, அடுத்த அதிபராகும் வாய்ப்புகூட கமலா ஹாரிஸுக்கு இருக்கிறது. அப்படி நடக்கும்போது அது அமெரிக்காவின் பன்மைத்தன்மைக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும். 

(‘இந்து தமிழ்’ நாளிதழில் 17-08-20 அன்று வெளியான கட்டுரை.)

Saturday, August 15, 2020

பொம்மை அறை: நாவலும் மொழிபெயர்ப்பும்


ஆசை


பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஸ்பெயினின் மல்லோர்க்காவில் உள்ள பியர்ன் என்ற மலைக்கிராமத்து பிரபுத்துவக் குடும்பத்தின் கதையைச் சொல்லும் நாவல் இது. பியர்னில் உள்ள பிரபுத்துவக் குடும்பத்தின் தலைவர் டான் டோனியும் அவரது மனைவி டோனா மரியா அந்தோனியாவும் ஒரே நாளில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்துபோவதிலிருந்து கதை தொடங்குகிறது. அவர்கள் இறந்த பின் அவர்களுடைய வாழ்க்கையை அவர்களின் குடும்பப் பாதிரியாரும் நடுத்தர வயதினருமான டான் ஜோன் தனது நண்பர் ஒருவருக்குக் கடிதத்தின் வழியாகச் சொல்வதுபோல் அதை அமைக்கப்பட்டிருக்கிறது. டான் டோனியுடன் தனக்கிருந்த இருபதாண்டுகளுக்கும் மேற்பட்ட உறவில் தான் கண்டவற்றையும் டான் டோனி எழுதிய ‘நினைவுகள்’ என்ற நூலின் கைப்பிரதியில் தெரிந்துகொண்டவற்றையும் கொண்டு டான் ஜோன் அவர்களின் கதையைச் சொல்கிறார். மரபில் மூழ்கியிருக்கும் பியர்ன் கிராமத்தில் புதுமை விரும்பியான டான் டோனி ஒரு சூனியக்காரராகப் பார்க்கப்பட்டுவருகிறார். தானே ஒரு பிரபுவாக இருந்தாலும் அடுத்து வரும் காலம் சோஷலிஸத்தின் காலமாகத்தான் இருக்கும் என்று டான் டோனி உணர்கிறார். டான் டோனி இறந்த பின் வரும் சொர்க்கத்தின்மேல் கவனம் செலுத்தாமல் மண்ணுலகின் சொர்க்கத்தின்மீதுதான் கவனம் செலுத்துகிறார். அதற்கான அடையாளங்களுள் ஒன்றுதான் தன்னுடைய உறவினரான 18 வயது க்ஸிமாவுடன் அவர் பாரீஸுக்குச் சென்று இவ்வுலக இன்பங்களில் திளைத்தது, மறுபடியும் ஒருமுறை பாரீஸுக்கு வந்து பலூனில் பறந்தது போன்ற சாகசங்கள் எல்லாம். கதைசொல்லியும் பாதிரியாருமான டான் ஜோனின் கருத்துப்படி டான் டோனி மிகவும் நல்லவராக இருந்தாலும் சில பாவங்களைச் செய்திருக்கிறார். எனினும், இறக்கும் தறுவாயில்கூட டான் டோனி பாவ மன்னிப்பு கோரவில்லை. அவருக்கான பாவ மன்னிப்பு அவர் எழுதிய ‘நினைவுகள்’ நூல்தான்.

மொழிபெயர்ப்பாளர் கூறியிருப்பதுபோல் இந்த நாவல் தமிழில் மொழிபெயர்ப்பதற்கு சவாலானதுதான் என்றாலும் அவ்வளவு சவால் இல்லாத இடங்களிலும் கூட அவர் சறுக்கியிருக்கிறார். Pagan, paganism என்ற வார்த்தைகளை ‘சமயச்சார்புக்குப் பெரிதும் அப்பாற்பட்ட’, ‘சமயத்துக்குப் புறம்பான’, ‘சமயவுணர்வுக்கு எதிரான’, ‘சமய வெறுப்பு’, ‘அஞ்ஞானம்’ என்றரீதியிலேயே பல இடங்களில் மொழிபெயர்த்திருக்கிறார். விவிலிய மொழியில் ‘புறவினத்தார்’, புறமதத்தார்’ (அதாவது கிறித்தவம் உள்ளிட்ட பெரு மதங்களுக்கு வெளியில் உள்ள மதத்தினர்) என்று மொழிபெயர்த்திருக்கலாம். ஓரிரு இடங்களில் ‘Palaces’ என்ற சொல்லை ‘அரண்மனைகள்’ என்பதற்குப் பதிலாக ‘இடங்கள்’ என்றே மொழிபெயர்த்திருக்கிறார். ‘Intelligible’ என்ற சொல் ‘புரியக்கூடிய’ என்பதற்குப் பதிலாக நேரெதிராக ‘பூடகமான’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ‘For Don Toni art was a little like children, who cannot be conceived following a method, but only in the careless joy and intimacy of the night’ என்ற வரியானது ‘டான் டோனிக்கு, கலை என்பது குழந்தைகள் போலச் சிறியது. அவர்கள் ஒரு பாணியைப் பின்பற்ற இயலாதவர்கள். இரவின் அந்தரங்கத்துக்கும், பொறுப்பற்ற ஆனந்தத்துக்கும் மட்டுமே விழைகிறவர்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மேற்கண்ட ஆங்கில வரியின் அர்த்தம் இதுதான்: ‘டான் டோனியைப் பொறுத்தவரை கலையானது கொஞ்சம் குழந்தைகளைப் போன்றது, குறிப்பிட்ட வழிமுறையென்று எதையும் பின்பற்றி குழந்தைகளை உருவாக்க முடியாது, கவலையற்ற ஆனந்தத்திலும் இரவு தரும் நெருக்கத்தாலும் மட்டுமே அவர்களை உருவாக்க முடியும்.’

ஒரு எழுத்தாளரைப் பற்றிச் சொல்லும்போது ‘எந்நேரமும் பிறருக்காகவே வாழ்ந்தார்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இது ‘…always lived off’ என்று இருக்கிறது; இது ’…எப்போதும் பிறரை அண்டி வாழ்ந்தார்’ என்றல்லவா இருக்க வேண்டும். அடுத்ததாக, ‘அவர் எப்போதுமே ஒரு புரவலராக இருந்தார்’ என்று வருகிறது; ஆங்கிலத்தில் ‘He always had a benefactor’ என்று இருக்கிறது; சரியாகச் சொல்ல வேண்டுமானால், ‘அவருக்கு எப்போதுமே ஒரு புரவலர் இருந்தார்’. ‘Dog-cart’ என்பது ‘நாய்கள் இழுக்கும் சிறிய வண்டி’ என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அது ஒருவகையான குதிரை வண்டிதான். அதேபோல் ‘Ark of the Covenant’ என்றால் கவனென்ட் பெட்டகம்தான், ‘கவனென்ட் கப்பல்’ அல்ல. ’Will never amount to much’ என்றால் ‘இவ்வளவு வேண்டியிருக்காது அவர்களுக்கு’ என்பது அர்த்தமல்ல; ‘அவர்கள் தேற மாட்டார்கள்’ என்பதுதான் அர்த்தம். ‘Thrush’ என்பது ‘அறுக்கப்பட்ட கதிர்த்தாள்கள்’ அல்ல ஒரு பறவைதான். ஆங்கில மூலத்தில் ‘டைஃபஸ்’ ஆக இருந்தது தமிழில் ‘டைஃபாய்’டாக மாறியிருக்கிறது. ’Immoral’ (ஒழுக்கக்கேடான) என்பது ‘அழிவற்ற’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது (immortal என்ற சொல்லுடன் இதைப் போட்டுக் குழப்பிக்கொண்டதால் இருக்கலாம்). ‘Heresy’ என்ற சொல் பல இடங்களில் செவிவழிச் செய்தியாகவும், புரளியாகவும், கேட்பார் சொல்லாகவும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது; இதற்கு ‘மதநிந்தனை’ என்று பொருள் (hearsay என்ற சொல்லைப்போல் இருந்ததால் இந்தக் குழப்பம் ஏற்படிருக்கலாம்.) ‘Habit’ என்ற சொல் ஒரு இடத்தில் (பக்கம்-89) ‘பழக்கம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது; இந்த இடத்தில் அது துறவிகள் அங்கியைக் குறிக்கிறது.  ’Unwholesome’ என்றால் ‘முழுமையற்ற’ என்று பொருள் அல்ல; ‘ஆரோக்கியமற்ற’ என்றே பொருள். Patron-saint என்பது சுவீகாரப் புனிதர், புரவலப் புனிதர், காவற்புனிதர் என்று பலவகைகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. Such a distortion of history என்ற வரி மொழிபெயர்க்கப்படவில்லை. சில இடங்களில் வாக்கியம் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்குச் சென்றிருக்கிறது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.      

எந்த ஒரு மொழிபெயர்ப்பும் முழுமையானதல்ல என்பது உண்மைதான். இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் தன்னை மீறியும் பிழைகள் நுழைந்திருக்கலாமோ என்ற கவலையை நேர்மையாக வெளிப்படுத்தவே செய்திருக்கிறார். நம் கேள்வியெல்லாம் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பாளரின் பங்கு என்ன என்பதுதான். ஆர்வத்தால் மொழிபெயர்ப்புகளை வெளியிடும் சிறிய பதிப்பாளர்கள் என்றால் நாம் கண்டுகொள்ளத் தேவையில்லைதான். ஆனால், மொழிபெயர்ப்புக்கென்று நிதியுதவி பெறும் பெரிய பதிப்பகம் தான் வெளியிடும் நூலின் மீது மேலதிக அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்று பிறர் எதிர்பார்ப்பது  தவறல்ல. அதுவும் இலக்கிய நூல்களை வெற்றிகரமான வணிகமாக ஆக்கலாம் என்று நிரூபித்திருக்கும் ஒரு பதிப்பகத்தில் ‘எடிட்டர்’ யாரும் இல்லையா என்பது ஆச்சரியமளிக்கிறது. இனியாவது தம் மொழிபெயர்ப்புகள் மீது பதிப்பகங்கள் கூடுதல் அக்கறை செலுத்துவார்கள் என்று நம்புவோம்.

பொம்மை அறை
லோரன்ஸ் வில்லலோங்கா
(ஆங்கிலம் வழி தமிழில்: யுவன் சந்திரசேகர்)
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில்.
விலை: ரூ. 295

(‘இந்து தமிழ்’ நாளிதழில் 15-08-2020 அன்று வெளியான நூல் விமர்சனம்)

Friday, August 7, 2020

என்னைத் தூக்கில் போடுங்கள்: வி.பி.சிங்


அடிப்படையில் விஸ்வநாத் பிரதாப் சிங் ஓர் அரசக் குடும்ப வாரிசு. 1931-ல் தையா அரண்மனையில் பிறந்த வி.பி.சிங்கை மண்டாவின் ராஜா தத்தெடுத்துக்கொள்வதற்கு முன்னரும் ‘ராஜா’ என்றுதான் அழைத்தார்கள். ஆனால், ஆச்சார்ய வினோபா பாவே சொன்னதுபோல, அடித்தட்டு மக்களைச் சந்தித்து, ‘நவீன சித்தார்த்தர்’ ஆக அவர் உருவெடுப்பதை அவரைச் சுற்றியிருந்த எந்த அரண்மனைச் சுவரும் தடுக்கவில்லை. 1990-ல் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை அமலாக்க வி.பி.சிங் எடுத்த முடிவானது இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு முன்னெடுப்பு. வெறும் 11 மாதக் காலத்திலேயே அவர் ஆட்சியை இழக்க அதுவும் முக்கியமான காரணம். ஆனால், தான் செய்யும் காரியத்தின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருந்தார். இந்திய நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட நெகிழ்ச்சியான உரைகளில் ஒன்று தன்னுடைய ஆட்சி பறிபோகும் என்பதை உணர்ந்து, தன்னுடைய செயல்பாட்டுக்கு அவர் துணிந்த தருணம். சில சமயங்களில் வாழ்வதைக் காட்டிலும் மரணத்தைத் தேர்ந்தெடுப்பது நல்ல வாய்ப்பு என்று சொன்னார் அவர். தன்னுடைய லட்சியத்துக்காக உயிர்த் தியாகம் செய்யும் ஒருவர் தன் மரணத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை என்றார். பல நூற்றாண்டு பழைய அமைப்புடன் மோதும்போது எத்தகைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது தாங்கள் அறியாதது அல்ல என்றார். சமூக வாழ்க்கையில் மரியாதைக்காகப் போராடும் எளிய மக்களுக்கு அதிகாரத்தில் எப்போது பங்களிக்கப்போகிறோம் என்பதே நம் முன் உள்ள பெரிய கேள்வி என்றார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இவ்வளவு பேசியவர் அடிப்படையில் தன்னை ஆதிக்கச் சாதியரில் ஒருவராக உணர்ந்து இந்தக் காரியங்களை தார்மீக எழுச்சியில் செய்தார் என்பது இங்கே முக்கியமானது. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வி.பி.சிங் என்னவாகப் பார்த்தார் என்பதைக் கொஞ்ச காலத்துக்குப் பின்னர் எடுக்கப்பட்ட இந்தப் பேட்டி உணர்த்துகிறது

உங்களுடைய பாதைக்கு மக்களிடம் செல்வாக்கு இருப்பதுபோல் தெரியவில்லையே? 

அது உண்மையல்ல. 1989-ல் எங்கள் தேர்தல் அறிக்கையை நாங்கள் வெளியிட்டபோது “தேசியச் செயல்திட்டத்தில் நீதியை மறுபடியும் இடம்பெறச் செய்வோம்” என்று தெளிவாகக் கூறியிருந்தோம். அரசியல் அறம், அதிகாரப்பரவலாக்கல், தேர்தல் சீர்திருத்தங்கள், பத்திரிகைச் சுதந்திரம் போன்ற அம்சங்களையெல்லாம் உள்ளடக்கிய விரிவான கோட்பாடுதான் நீதி. அது பொருளாதார நீதியையும் சமூக நீதியையும் உள்ளடக்கியது. ‘இதிலிருந்து நாங்கள் என்ன பெற்றோம்?’ என்பதல்ல நாம் கேட்க வேண்டிய கேள்வி; மாறாக, ‘ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் எங்களால் என்ன செய்ய முடிந்தது?’ என்பதைத்தான் கேட்க வேண்டும். எந்தக் கட்சியும் இதை அலட்சியப்படுத்த முடியாது. நாங்கள் அரசியல் சூழலையே மாற்றியமைத்திருக்கிறோம்.  

உங்கள் கூட்டணியில் உள்ள நிறையக் கட்சிகள் காலத்துக்கு ஒவ்வாததாகவும் சிதைந்தும் போகுமா?  

கூட்டணிகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் இரண்டு மூன்று ஆண்டுகளில் நிலைபெற்றுவிடும். மதச்சார்பற்ற சமூக சக்திகளை அடையாளம் காண வேண்டுமே ஒழிய, மதச்சார்பற்ற கட்சிகளை அல்ல. எடுத்துக்காட்டாக, தலித் மக்கள் ஒரு சக்தி வாய்ந்த மதச்சார்பற்ற சக்தியாக இருக்கிறார்கள். அடுத்ததாக, பிற்படுத்தப்பட்ட மக்கள் எனும் சக்தியானது சிறுபான்மையினருடன் சேர்ந்து வகுப்புவாதத்துக்கு எதிரான வலுவான தூணாக இருக்க முடியும். 

ஆனால், நம் நாடு மதச்சார்பற்ற நாடுதானே?  

அது வெறும் மேல்பூச்சுதான்.  

அப்படியென்றால், காந்தி, நேரு கற்பனை செய்த மாதிரிகள் தோல்வியடைந்துவிட்டனவா?  

இல்லை. காந்தி, நேரு எல்லோரும் சூழலை மேம்படுத்தவே முயன்றார்கள். ஏராளமான பொருளாதார, சமூக அடுக்குகளைத் தகர்த்தெறிய அவர்கள் முயன்றார்கள். ஆனால், மதமும் இந்த அமைப்புமே மேலோங்கின. ஒரு அநீதியான சமூகக் கட்டமைப்பானது ஒரு அநீதியான அதிகாரக் கட்டமைப்பையே உற்பத்தி செய்திருக்கிறது. தனிப்பட்ட நபர்களையும் கட்சிகளையும் இதற்காகக் குற்றஞ்சாட்டிவிட முடியாது. அரசியல், சமூக, பொருளாதார ஏகபோகங்கள் முடிவுகள் எடுப்பதிலிருந்து பெரும் அளவிலான மக்கள்திரளை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். அதனால், அவை ஜனநாயகமற்றவையாக இருக்கின்றன. இதுவரை ஆளும் மேல்தட்டினர்தான் விளையாடிவந்தனர், ஏனையோரோ பார்த்துக் கைதட்ட மட்டுமே அழைக்கப்பட்டனர். இப்போது பார்வையாளர்களோ, ‘நாங்களும் பந்தை உதைத்து கோல் வலைக்குள் தள்ள வேண்டும், எங்களுக்கென்று தனி அணி இருக்கிறது’ என்று கூறுகிறார்கள்.  

நீங்கள் ஒரு சீர்திருத்தவாதியா?  

இல்லை, இல்லை. நான் வெறும் ஆய்வாளன்தான்.  

அமைப்புடனும் ஊடகங்களுடனும் உங்கள் உறவு மோசமடைந்தது ஏன்?  

இதற்கான பதிலை ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலித் மாணவர்களின் குழு எனக்கு அளித்தது. ‘ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளாலும், எங்களை ஆயிரம் ஆண்டுகளாக வசை பாடியவர்களாலும் நீங்கள் வசை பாடப்படுகிறீர்கள். நீங்கள் எங்கள் பக்கத்தில் நின்றால் வசையில் உங்களுக்கும் பங்கு கிடைக்கும்’ என்று அவர்கள் கூறினார்கள். அதுவே எனக்கு வெளிச்சத்தையும் தெம்பையும் கொடுத்தது. இன்னும் இரண்டு அனுபவங்கள் எனது வைராக்கியத்தை உறுதிப்படுத்தின. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சில மாணவர்கள், “நாங்கள் இந்த நாட்டின் இளைஞர்கள் இல்லையா? பட்டியலினத்தோரும் பிற்படுத்தப்பட்டவர்களும்தான் இந்த நாட்டின் நான்கில் மூன்று பங்கு என்ற அளவில் இருக்கிறோம். மண்டல் மூலமாக நீங்கள் எங்களுக்கு ஒரு விஷயம் கொடுத்தீர்கள், ஒட்டுமொத்த நாடும் எங்கள் மீது பாய்ந்தது” என்று என்னிடம் கூறினார்கள். இது 27% அல்லது 10% என்பது பற்றிய கேள்வியல்ல; மாறாக, ‘ஆளும் மேல்தட்டினரின் இதயங்களில் எங்களுக்கு 1%-கூட இடம் இல்லையா?’ என்ற கேள்வி. நாட்டின் நான்கில் மூன்று பங்கு இளைஞர்கள் இப்படி உணர ஆரம்பித்தார்கள் என்றால் நாடு என்னவாகும்? இன்னொரு முறை ஒரு பத்திரிகைக்காரர் வயதான ஒரு தலித் பெண்மணியிடம், “நீங்கள் வி.பி.சிங்கை ஏன் ஆதரிக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி, “ஏனென்றால் அவர் எனது சாதியைச் சேர்ந்தவர்” என்று பதில் கூறியிருக்கிறார். “வி.பி.சிங் தலித் என்றா சொல்கிறீர்கள்” என்று அந்தப் பத்திரிகையாளர் திரும்பக் கேட்டார். “ஆமாம், ஏனெனில் அவர் எங்களுக்காகப் போராடுகிறார்” என்று அந்தப் பெண்மணி பதில் கூறியிருக்கிறார். ஆக, கொஞ்சம் நம்பிக்கையாவது இருக்கிறது. அதை விட்டுவிடக் கூடாது. வாக்குகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் அந்த நம்பிக்கைக்கு ஈடாக மாட்டார்கள்.  

ஆளும் மேல்தட்டு வர்க்கத்தின் சதிதான் உங்களைக் கவிழ்த்துவிட்டதா?  

நான் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை. அது இயல்பான எதிர்வினைதான். ஆளும் மேல்தட்டினர் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், நம் சமூகத்தின் நசுக்கப்பட்ட பிரிவினரைத் துரத்திச் சென்று ஒரு முட்டுச்சந்தில் நிறுத்துவோம் என்றால், நமது நாட்டில் மேலும் மேலும் அமைதியின்மையே ஏற்படும். வி.பி.சிங்கைத் தூக்கில் தொங்கவிடுங்கள்; ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்கான நீதியைக் கொடுங்கள். இல்லையென்றால் இந்த நாடு யாராலும் நிர்வகிக்க முடியாத நிலையை நோக்கிச் சென்றுவிடும்!

- மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் அமலாக்கப்படும் என்று வி.பி.சிங் அறிவித்த 30-வது ஆண்டு நிறைவையொட்டி ‘இந்து தமிழ்’ நாளிதழில் என் மொழிபெயர்ப்பில் வெளியான நேர்காணல்.


 

Sunday, July 26, 2020

அரை நூற்றாண்டைக் கொண்டாடும் ஸ்டேன்லி குப்ரிக்கின் ‘2001: ஒரு விண்வெளிப் பயணம்’


ஆசை

ஸ்டேன்லி குப்ரிக்கின் ‘2001: ஒரு விண்வெளிப் பயணம்’ (2001: A Space Odyssey) படத்தை முதல் தடவை பார்த்து முடித்தவுடன் இந்தப் படத்தை ஏன் இப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது புரியாமல் விழித்தேன். ஆனால், அடுத்த சில நாட்கள் அந்தப் படம் என் ஆழ்மனதில் ஏதோ ரசவாதம் செய்துகொண்டிருப்பதை உணர முடிந்தது. அதனால் அந்தப் படம் எனக்குப் புரிந்துவிட்டது என்று அர்த்தமல்ல. அதன் வசியத்துக்கு நான் ஆட்பட்டுவிட்டேன் என்பதுதான் உண்மை. எதையுமே விளக்காமல் ஒரு அறிவியல் புனைகதை படத்தை எப்படி ஸ்டேன்லி குப்ரிக் எடுத்தார் என்பதும் பெரும் ஆச்சரியம். அந்தப் படத்தின் வசியத்துக்கு ஆட்பட்டாலும் படத்தின் முக்கியமான விஷயங்கள் பலவும் பிடிபடாத நிலைதான் எனக்கு.

 நான் மட்டுமல்ல, 1968-ல் முதன்முறையாக இந்தப் படம் வெளியானபோது பெரும்பாலானோரின் நிலையும் இதுதான். கணிசமானோர் திரையரங்கை விட்டுப் பாதியிலேயே வெளியேறிய சம்பவங்களும் நடந்தன. அது மட்டுமல்ல, படம் வெளியாவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பு திரையிடப்பட்ட சிறப்புக் காட்சியின்போது அந்தப் படத்தைத் தயாரித்த எம்.ஜி.எம். நிறுவனத்தின் அதிகாரிகளே பாதியிலேயே வெளியேறினார்கள். அரங்கில் நிறைய கேலி சத்தங்களும் எழுந்தன. திரையிடலின் தொடக்கத்திலிருந்தே ஸ்டேன்லி குப்ரிக் ஒருவிதப் பதற்றத்துடன் இருந்தார். நான்கு ஆண்டுகள் கண்ட கனவின் பலன் இறுதியில் ஒன்றுமில்லை என்று ஆனால் பதற்றம் ஏற்படாதா, என்ன?

 தொடக்கத்தில் படத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துக்கள் அதிகம் பரவின. ‘ரொம்பவும் கொட்டாவி விட வைக்கும் படம்’ என்றெல்லாம் பத்திரிகைகள் எழுதின. ஒருசில நாட்களில் இந்த நிலையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. படம் யாருக்கும் புரியவில்லை என்றாலும் மக்கள் கூட்டம் திரையரங்குக்குப் படையெடுத்தது. இதற்கு ஹிப்பிக்களும் முக்கியக் காரணம். போதை மருந்து உட்கொள்ளும்போது அனுபவிப்பது போன்ற உணர்வுகளை இந்தப் படத்தில் அவர்கள் கண்டுகொண்டார்கள். திரையில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே ‘இதோ கடவுள், இதோ கடவுள்’ என்று கத்தியபடி ஒருவர் ஓடியிருக்கிறார். விளைவு, படம் ‘கல்ட் ஹிட்’!



படத்தைப் பார்ப்பதைவிட கதைச் சுருக்கத்தைச் சொல்லிவிடுவது மிகவும் எளிது. நாற்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் மனிதக் குரங்குகள் கூட்டத்திலிருந்து கதை தொடங்குகிறது. ஒரு சிறிய தண்ணீர்க் குட்டையை யார் உரிமை கொள்வது என்று குரங்குக் கூட்டங்கள் இரண்டுக்கும் இடையிலான போராட்டம். இதற்கிடையே அந்த இடத்தில் கறுப்பாக ஒரு செவ்வகக் கல் ஒன்று நிற்கிறது. (இயற்கையில் சதுரம், செவ்வகம் போன்ற வடிவங்கள் கிடையாது). அந்தச் செவ்வகக் கல்லைச் சுற்றி என்ன செய்வதென்று தெரியாமல் இங்கும் அங்கும் குரங்குகள் சத்தம் போட்டபடி ஓடுகின்றன. அந்தக் கல் ஏதோ ஒரு வகையில் அங்குள்ள குரங்கொன்றிடம் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இறந்து கிடந்த விலங்கொன்றின் எலும்பை ஆயுதமாகப் பயன்படுத்தி எதிரிக் கூட்டத்துக் குரங்கொன்றைக் கொன்று தண்ணீர்க் குட்டையின் உரிமையைக் கைப்பற்றுகிறது குரங்கு. ஆயுதத்தைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டது மனித இனத் தோற்றத்துக்கான பெரும் உந்துதலாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு நாற்பது லட்சம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கி 2001-க்குக் கதை செல்கிறது. அதே போன்றதொரு கல் நிலவில் புதைக்கப்பட்டிருக்கிறது. அதை ஆய்வு செய்வதற்காக விண்கலத்தில் வீரர்கள் பயணம் செய்கிறார்கள். 18 மாதங்கள் கழித்து இன்னொரு விண்கலத்தில் இரண்டு வீரர்களும் உறக்க நிலையில் (hibernation) மூன்று வீரர்களும், ஒட்டுமொத்த விண்கலத்தையும் கட்டுப்படுத்தும் செயற்கையறிவுத் தொழில்நுட்பமான ஹால் கணினியும் வியாழன் கோளுக்கருகில் தென்பட்ட இன்னொரு செவ்வகக் கல்லை ஆய்வு செய்யப் போகிறார்கள். அந்த விண்கலத்தில் உறக்கநிலையில் வைக்கப்பட்டிருக்கும் வீரர்கள் மூன்று பேரைக் கணினி கொன்றுவிடுகிறது. விண்கலத்தை இயக்கிக்கொண்டிருந்த இருவரில் ஒருவரை விண்கலத்துக்கு வெளியே அனுப்பிக் கொன்றுவிடுகிறது. அந்தக் கணினியின் ஆபத்தை உணர்ந்தவரும் இந்தப் படத்தின் பிரதான பாத்திரமான டேவிட் போமேன் (Keir Dullea) அந்தக் கணினியின் மன்றாடலுக்கு இடையே அதனைச் செயலிழக்க வைக்கிறார். பிறகு, அந்தச் செவ்வகக் கல்லை ஆராய்வதற்காக ஒரு கோள வடிவ வாகனத்தில் புறப்பட்டுச் செல்லும்போது மிகவும் விசித்திரமான அனுபவங்கள் ஏற்படுகின்றன. காலம், இடம் போன்றவற்றையெல்லாம் கடந்துசெல்கிறார். விநோதமான ஒரு அறையில் தனது முதிய வயது உருவத்தை அவர் காண்கிறார். அங்கேயும் அந்தச் செவ்வகக் கல் தோன்றுகிறது. அதன் பிறகு கருப்பையில் இருக்கும் குழந்தையாக மாற்றப்பட்டு விண்வெளியில் மிதக்க அனுப்பப்படுகிறார். கருவில் இருக்கும் குழந்தையின் கண்கள் பூமியையே பார்த்துக்கொண்டிருக்கிறது. குரங்காய் இருக்கும்போது மனித இனத்தை நோக்கி நகர்த்திய செவ்வகக் கல் அந்தச் சிசுவை வேறொரு பரிணாமம் அடையப் போகும் உயிரைப் போல நகர்த்தப் போகிறதான் என்ற நம் எதிர்பார்ப்புடனே படம் முடிந்துபோகிறது.

உலகின் புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளர்  ஆர்த்தர் சி.கிளார்க்கின் ‘த சென்ட்டினெல்’ என்ற சிறுகதைதான் ‘2001: ஒரு விண்வெளிப் பயணம்’ படத்துக்குத் தொடக்கப்புள்ளி. அந்தக் கதையைப் படித்துவிட்டு இயக்குநர் ஸ்டேன்லி குப்ரிக் இலங்கையில் வசித்த கிளார்க்குக்கு  1964-ல் ஒரு கடிதம் எழுதினார். ‘மகத்தான அறிவியல் புனைகதை திரைப்படம் ஒன்றைத் தான் எடுக்க விரும்புவதாக’ குப்ரிக் தனது கடிதத்தில் எழுதியிருந்தார். குப்ரிக்கின் அழைப்பின்பேரில் அமெரிக்கா சென்றார் கிளார்க். ‘தி சென்ட்டினெல்’ சிறுகதையை எடுத்துக்கொண்டு இருவரும் சேர்ந்து விரிவாக்க ஆரம்பித்தார்கள். எடுக்கவிருக்கும் படத்துக்கான கதையை ஒரு நாவலாக எழுதினால் நன்றாக இருக்கும் என்று குப்ரிக் விருப்பம் தெரிவிக்க இருவருடைய உழைப்பில் படத்தின் தலைப்பிலேயே நாவலும் உருவானது. படம் வெளியான பிறகுதான் நாவலை வெளியிட வேண்டும் என்று குப்ரிக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

கதையை உருவாக்கிக்கொண்டிருக்கும்போதே இந்தப் படத்தை முழுக்கவும் காட்சிரீதியிலான படமாக உருவாக்குவது என்ற முடிவில் இருந்தார் குப்ரிக். இந்தப் படத்தைத் தன்னுடைய படமாக மட்டுமல்லாமல் காண்பவர் ஒவ்வொருவருடைய படமாகவும் எடுக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால்தான் புரிந்துகொள்ள மிகவும் கடினமாக இருந்தாலும் இந்தப் படத்தில் விளக்கங்கள் ஏதும் அளிக்கவில்லை குப்ரிக். மாறாக, பார்வையாளர்களை அவர்களுக்கு விருப்பமான விளக்கங்களைக் கொடுத்துக்கொள்ளத் தூண்டினார். ஒரு வகையில் அந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டபோது ‘உருவாக்கப்படவில்லை’; பார்க்கப்பட்டபோதுதான் ‘உருவாக்கப்பட்டது’ என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் இன்றுவரை உலகின் தலைசிறந்த படங்களின் பட்டியலில் முதல் வரிசையில் இந்தப் படம் இருந்துகொண்டிருந்தது.

இந்தப் படத்தின் பிரதானப் புதிர், செவ்வகக் கல்தான். மனித இனமே தோன்றியிராத காலத்தில் அவ்வளவு பளபளப்பாக உருவாக்கப்பட்ட அந்தக் கல்லைக் குரங்குகளிடையே யார் வைத்தது? நிலாவில் யார் வைத்தது? வியாழனுக்கருகே யார் திரிய வைத்தது? இந்தக் கேள்விகளுக்கு இன்றுவரை முழுமையான விடையேதும் இல்லை. படத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட நாவலில் வேற்றுகிரகவாசிகளால் வைக்கப்பட்ட கல் என்ற குறிப்பு வருகிறது. இந்தக் குறிப்பைப் படத்தில் கொடுத்தால் ஒற்றை அர்த்தத்துடன் படம் முடிந்துவிடும் என்று எண்ணிய குப்ரிக், கல்லை வைத்தது யார், எதற்காக வைத்தார்கள் என்பதற்கான குறிப்புகளையும் விடைகளையும் படத்தில் வைக்கவில்லை. ஆகவே, நாவலைக் கொண்டு படத்தை அணுகவே கூடாது.

பரிணாமத்தை உந்தித் தள்ளும் விதத்தில் இந்தப் படத்தில் வரும் செவ்வகக் கல்லைப் போல மற்றுமொரு முக்கியமான விஷயம் மனித உணர்வுள்ள ஹால் கணினி. இன்றும் அந்த அளவுக்கு ஒரு கணினி கண்டுபிடிக்கப்படவில்லையென்றாலும் செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றங்களை நாம் ஏற்கெனவே கண்டிருக்கிறோம். ஆனால், செயற்கை அறிவுத் தொழில்நுட்பம் எனும் துறை துளிர்விடவே ஆரம்பிக்காத காலத்தில் அதனால் மனித குலத்துக்கு ஏற்படவிருக்கும் ஆபத்துக்களைப் பற்றி தீர்க்கமான எச்சரிக்கை விடுத்திருப்பார் குப்ரிக். 

விடுவிக்க முடியாத புதிர் போலவே தன் படத்தை எடுக்க வேண்டும் என்று குப்ரிக் விரும்பினார். தொடக்கத்தில் வேற்றுலகவாசிகளைக் காட்டுவது என்ற யோசனை அவருக்கு இருந்தது. வழக்கமான வேற்றுலகவாசிப் படங்களைப் போல் காட்டுவதில் அவருக்கு ஈடுபாடு இல்லை. இந்தப் படம் மனித அச்சத்தையும் வியப்பையும் பற்றியது என்றால் அதையெல்லாம் பார்வையாளர்களும் உணர என்று முடிவெடுத்து, வேற்றுலகவாசிகளுக்குப் பதிலாகச் செவ்வகக் கற்களை குப்ரிக் தேர்ந்தெடுத்தார். அதனால்தான், படத்தில் அந்தக் கல்லைப் பார்க்கும்போது குரங்குகளுக்கு ஏற்படும் உணர்வு நமக்கும் ஏற்படுகிறது. இங்கேதான் குப்ரிக் என்ற மகாகலைஞர் வெற்றிபெறுகிறார்.

“கடவுளைப் பற்றிய கருத்தாக்கம் இந்தப் படத்தின் மையமாக இருக்கிறது. ஆனால், வழக்கமாகச் சொல்லப்படுவதும் மனித உருவிலானதுமான கடவுள் அல்ல அது” என்கிறார் குப்ரிக். காலத்தைத் தாண்டி, இடத்தைத் தாண்டி நிகழும் எந்த ஒரு பயணமும் இறுதியில் வந்தடையும் இடம்தான் குப்ரிக் காட்ட நினைக்கும் கடவுள், அதாவது காட்டாமல் காட்ட நினைக்கும் கடவுள். அந்தக் கடவுளை நோக்கிய மாபெரும் புதிர்களின் தொகுப்புதான் இந்தப் படம். புதிர்களை அவிழ்ப்பதன் மூலம் அல்ல, புதிர்களின் வழியே பயணிப்பதன் மூலம்தான் அந்தக் கடவுளை நெருங்க முடியும் என்று குப்ரிக் நம்பியிருக்கிறார்.

வழக்கமான அறிவியல் புனைகதை படங்கள் காலத்தை மீறிய தொழில்நுட்பங்களை முன்வைப்பதுண்டு. உரிய காலம் வரும்போது அந்தப் படங்களில் முன்வைக்கப்பட்ட தொழில்நுட்பம் பொய்த்துப்போவதும், காலாவதியாவதும் உண்டு. ஆனால், ஸ்டேன்லி குப்ரிக்  உண்மையில் காலத்தைத் தாண்டி கனவு கண்ட படைப்பாளி. 1968-ல் வெளியான இந்தப் படத்தின் பெரும்பாலான கதைக்களன் 2001-ல் நடப்பதால், உண்மையில் 2001-ம் ஆண்டில் இந்தப் படத்தைப் பார்க்கக்கூடியவர்கள் தன்னைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கக் கூடாது என்பதில் குப்ரிக் உறுதியாக இருந்தார். அதனால், திரைப்பட சிறப்பு வடிவமைப்பாளர்களை விடுத்து, உண்மையான அறிவியலாளர்களையும் நாசாவின் தொழில்நுட்பப் பணியாளர்களையும் வேலைக்கு அமர்த்தினார் குப்ரிக். விண்கலம், அதன் உள்ளே இருக்கும் தொழில்நுட்பம், விண்வெளி வீரரின் உடைகள், கணினி என்று எல்லாவற்றிலும் தன் காலத்தை முந்திய சித்தரிப்பைத் தருவதற்காக  நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்துத்தான் இந்தப் படத்தை குப்ரிக் எடுத்தார். படம் வெளியான 50 ஆண்டுகள் கழித்துத் திரும்பிப் பார்க்கும்போது நாசாவே குப்ரிக்கிடம் பின் தங்கியிருப்பதை உணர முடிகிறது.

இந்தப் படத்தின் தொழில்நுட்பத் துல்லியம் பற்றி நாசாவே தன் இணையதளத்தில் ஒரு பட்டியல் வெளியிட்டிருக்கிறது. அதன்படி:

பூமியைச் சுற்றிவருவதாகப் படத்தில் காட்டப்படும் விண்வெளி நிலையம் அன்று கற்பனை; இன்று நிஜமாகிவிட்டது. வடிவம் வேறு விதத்தில் இருந்தாலும் அங்கே வீரர்கள் தங்கிப் பணிபுரிவது போன்று காட்டப்பட்டிருப்பது இன்று நிஜமாகிவிட்டது.

2. 1968-ல் தட்டையான திரை கொண்ட கணினிகளைக் கற்பனை செய்தே பார்க்க முடியாது. இன்று அதுவும் நிஜமாகிவிட்டது.

3. விண்கலத்தின் உள்ளே இந்தப் படத்தில் காட்டப்படும் பொழுதுபோக்கு அம்சங்கள் இன்றுள்ள விண்கலங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன.

4. படத்தில், கலத்தின் உள்ளே விண்வெளி வீரர் மித ஓட்டப்பயிற்சியில் (Jogging) ஈடுபட்டிருப்பார். அதைப் போல, 2007-ம் ஆண்டில் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் விண்கலத்தில் இருந்தபடி பூமியில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார்.

5. இந்தப் படத்தில் காட்டப்பட்ட பல்வேறு அம்சங்கள் இன்னும் நிதர்சனமாகவில்லையென்றாலும் கூடிய சீக்கிரம் அவையும் சாத்தியமாகும். எடுத்துக்காட்டாக, நிலவைத் தாண்டி அமையும் மனிதர்கள் பயணிக்கும் விண்வெளிப் பயணம், விண்வெளி நிலையத்தில் இருக்கும் உணவகங்கள் போன்றவற்றைக் கூறலாம்.

ஆக, ‘2001: ஒரு விண்வெளிப் பயணம்’ படம் தன் அரைநூற்றாண்டு பயணத்தை நிறைவுசெய்திருக்கும் தருணத்தில் அது வெறும் படமாக மட்டும் இல்லாமல் ஒரு கலாச்சார, அறிவியல் நிகழ்வாக உருவெடுத்திருப்பதைத் தெளிவாக உணர முடிகிறது.  ‘ஸ்டார் வார்ஸ்’ எடுத்த ஜார்ஜ் லூக்காஸ், ஸ்பீல்பெர்க், கிறிஸ்டோபர் நோலன் போன்ற திரையாளுமைகள் மட்டுமல்லாமல் அறிவியல் அறிஞர்கள், ஹிப்பிகள் போன்று பலருக்கும் பிடித்தமான படம்; அவர்களில் பலரது வாழ்க்கையையும் மாற்றியமைத்த படம்.

இந்தப் படத்தின் தொடக்கப் பகுதியில் ஒரு காட்சி வரும். எலும்பை ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றிகண்ட குரங்கு வெறியாட்டத்தில் எலும்பை வான் நோக்கித் தூக்கியெறியும். மேலே சென்று கீழ்நோக்கி வரும்போது அது 40 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக் கலமாக உருவெடுக்கும். மனித இனத்தை உந்தித்தள்ளும் எறிதல் அது. அதுபோன்று திரையுலகத்தை மேல்நோக்கி உந்தித்தள்ளிய மாபெரும் எறிதல் என்றே ‘2001: ஒரு விண்வெளிப் பயணம்’ திரைப்படத்தைச் சொல்லத் தோன்றுகிறது.
(2001 எ ஸ்பேஸ் ஒடிசி திரைப்படத்தின் 50-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘காமதேனு’ இதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது.)

Wednesday, February 5, 2020

அம்பேத்கரின் ‘குரலற்றவர்களின் தலைவருக்கு’ நூற்றாண்டு


ஆசை

(டாக்டர் அம்பேத்கரின் ‘மூக் நாயக்’ இதழின் நூற்றாண்டையொட்டி 05-02-2020 அன்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான எனது கட்டுரை)

சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து எந்த ஒரு இயக்கமும் தனக்கான ஒரு ஊடகத்தைக் கொண்டிருப்பதை முக்கியமென்று கருதிவந்திருக்கிறது. அந்த நிலை தற்போதும் தொடர்கிறது. இதில் விளிம்பு நிலையில் இருந்தவர்கள்/ இருப்பவர்கள் தலித் மக்களே! அம்மக்களின் குரல் ஒலிப்பதற்கான அச்சு ஊடகமோ, காட்சி ஊடகமோ இன்றுவரை குறைவாகத்தான் இருக்கின்றன. ஊடகங்களில் பலவும் முற்பட்ட சமூகத்தினரால் நடத்தப்படுவதால், தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அவை பெரிதும் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு வெகு காலமாகவே இருந்துவருகிறது. இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது, 100 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் மேற்கொண்ட முன்னோடி இதழியல் முயற்சிகள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது நமக்குப் புலப்படுகிறது.

அது 1920, ஜனவரி 31. டாக்டர் அம்பேத்கர் தொடங்கிய மாதமிருமுறை மராத்தி இதழான ‘மூக் நாயக்’கின் முதல் இதழ் வெளியான நாள். ‘மூக் நாயக்’ என்றால், மராத்தி மொழியில் ‘குரலற்றவர்களின் தலைவர்’ என்று பொருள். இந்தப் பெயரை 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மராத்திய பக்திக் கவிஞர் துக்காராமின் பாடல் ஒன்றிலிருந்து டாக்டர் அம்பேத்கர் தழுவிப் பயன்படுத்தினார். ‘மூக் நாயக்’ என்ற பெயருக்குக் கீழாக, அந்தப் பாடலும் இடம்பெற்றிருந்தது.

மூக் நாயக்கின் பின்னணி
முன்னதாக அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்றிருந்த அம்பேத்கர், லண்டனில் உள்ள பொருளாதாரக் கல்லூரியில் பொருளாதாரத்தில் முனைவர் ஆய்வை மேற்கொண்டிருந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட பரோடா மாகாண கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதால், அந்த ஆய்வைப் பாதியிலேயே விட்டுவிட்டு, இந்தியாவுக்கு 1917-ல் வந்தார். மீண்டும் தனது ஆய்வைத் தொடரும் கனவோடு அதற்கு ஆகக்கூடிய செலவுக்குத் தொகையைச் சேமிப்பதற்காக ஒரு அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட சில அனுபவங்கள்தான் அவரை சொந்தமாகப் பத்திரிகை நடத்தத் தூண்டின.

1918-19 ஆண்டுகளில் சவுத்பரோ கமிட்டி இந்தியாவுக்கு வந்தது. அது தாழ்த்தப்பட்டவர்கள் சார்பில், டாக்டர் அம்பேத்கரையும் முற்பட்ட பிரிவினர் சார்பில் சமூக சேவகர் வித்தல் ராம்ஜி ஷிண்டேவையும் தங்கள் தரப்புகளின் வாதங்களை எடுத்துவைக்க அழைத்தது. இந்த விஷயத்தில் வித்தல் ராம்ஜியின் தரப்பு வாதங்களுக்குப் பத்திரிகைகள் கொடுத்த முக்கியத்துவத்தைத் தனக்குக் கொடுக்கவில்லை என்று அம்பேத்கரின் மனம் வாடியது. கூடவே, ஒரு முன்னணி ஆங்கில நாளிதழுக்குத் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை எடுத்துக்கூறி ஒரு கடிதத்தை அனுப்பினார். அந்தக் கடிதம் பிரசுரிக்கப்படவேயில்லை. இதெல்லாம்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனி பத்திரிகை வேண்டும் என்ற திசையை நோக்கி அம்பேத்கரை நகர்த்தின.

நிதி வசதி ஏதும் இல்லை என்றாலும் ஒரு லட்சிய உத்வேகத்துடன்தான் அம்பேத்கர் ‘மூக் நாயக்’ பத்திரிகையைத் தொடங்கினார். அவர் பத்திரிகை தொடங்கும் செய்தியை அறிந்த கோலாப்பூரின் சத்திரபதி ஷாஹு மகாராஜா அம்பேத்கரின் இல்லத்துக்கு வந்து ரூ.2,500 நன்கொடையைத் தந்தார். பத்திரிகையின் தொடக்க நிலையில் இந்தத் தொகை பெரும் ஊக்கமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ‘மூக் நாயக்’ பத்திரிகையை அம்பேத்கர் தொடங்கினாலும் அதன் ஆசிரியர் பொறுப்பில் அவர் எப்போதும் இருந்ததில்லை. அரசுப் பணியில் இருந்ததுவும் இதற்கு ஒரு காரணம். மாதம் இருமுறை இதழாக ஒரு சனிக்கிழமை விட்டு அடுத்த சனிக்கிழமையில் அந்த இதழ் வெளியானது. ஆரம்பத்தில் பாண்டுரங் நந்தராம் பட்கர் அந்த இதழின் அதிகாரபூர்வ, பெயரளவிலான ஆசிரியராக இருந்தார். பிறகு, தின்யந்தேவ் கோலப் ஆசிரியர் பொறுப்பேற்றார். சில காலம் கழித்து அம்பேத்கருக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கோலப் பதவி விலகினார்.

மூக் நாயக் இதழின் முகப்பு

படிகளற்ற கோபுரம்
‘மூக் நாயக்’கின் முதல் இதழில்தான் தற்போது அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் அம்பேத்கரின் வரிகள் இடம்பெற்றன. “இந்து சமூகம் என்பது ஒரு கோபுரம் போன்றது. அதன் ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு சாதிக்கென்று ஒதுக்கப்பட்டது. இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், இந்தக் கோபுரத்துக்குப் படிக்கட்டுகள் கிடையாது. ஆகவே, ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு ஏறவோ இறங்கவோ முடியாது. ஒருவர் எந்தத் தளத்தில் பிறந்தாரோ அந்தத் தளத்திலேயே மடிகிறார். கீழே உள்ள தளத்தைச் சேர்ந்தவருக்கு எவ்வளவு திறமையும் தகுதியும் இருந்தாலும் அவர் மேலே உள்ள தளத்துக்குச் செல்வதற்கு எந்த வழியும் இல்லை. அதேபோல், மேலே உள்ள தளத்தைச் சேர்ந்தவர் எந்தத் தகுதியும் திறமையும் இல்லையென்றாலும் அவரைக் கீழே உள்ள தளத்துக்கு இறக்குவதற்கு எந்த வழிவகையும் இல்லை.” ‘

மூக் நாயக்’ அதன் பெயருக்கு ஏற்ப குரலற்றவர்களின் துயரத்தை வெளிப்படுத்தும் ஊடகமாக விளங்கியது. தாழ்த்தப்பட்ட மக்கள் தாங்கள் எதிர்கொண்ட சாதிக் கொடுமைகளைப் பற்றி அந்த இதழுக்குக் கடிதம் எழுதினார்கள். அது சுதந்திரப் போராட்டம் சூடுபிடித்துக்கொண்டிருந்த காலம். ‘மூக் நாயக்’ பத்திரிகை இந்திய தேசியவாதத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. இதனால் அம்பேத்கரோ ‘மூக் நாயக்’ பத்திரிகையோ இந்திய சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் என்று அர்த்தம் இல்லை. அந்நியரின் கொடுமைகளை, ஆக்கிரமிப்பை எதிர்க்கும் இந்திய தேசியவாதம் நமக்குள்ளே நிகழ்த்தப்படும் கொடுமைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்பதால்தான் அது அம்பேத்கரால் தாக்குதலுக்கு உள்ளானது. இன்னொரு இதழில் அம்பேத்கர் இப்படி எழுதுகிறார்: “இந்தியா ஒரு சுதந்திர நாடாக மட்டும் இருந்துவிட்டால் போதாது. ஒரு நல்ல அரசாகவும் உருவாக வேண்டும். அதில் எல்லா வகுப்பு மக்களுக்கும் மதம், சமூகம், பொருளாதாரம், அரசியல் தொடர்பானவற்றில் சம உரிமை என்பது உறுதிசெய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வாழ்வின் படிகளில் உயர்வதற்கான வாய்ப்பும், இவ்வாறு முன்னேறுவதற்கு ஏற்ற நல்ல சூழ்நிலையும் அளிக்கப்பட வேண்டும். பிரிட்டிஷ் அரசின் அநீதியான அதிகாரத்தை எதிர்ப்பது சரி என்று பிராமணர்கள் சொல்வதில் எந்த அளவுக்கு நியாயம் இருக்கிறதோ, அதைவிட நூறு மடங்கு நியாயம், ஆட்சி அதிகாரம் ஆங்கிலேயரிடமிருந்து பிராமணர் கைகளுக்கு மட்டும் மாற்றப்படக் கூடாது என்று ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் எதிர்ப்பதில் அடங்கியிருக்கிறது.”

புறக்கணிப்பு
‘மூக் நாயக்’ இதழ் தொடங்கப்பட்டபோது, பால கங்காதர திலகரின் ‘கேசரி’ பத்திரிகைக்கு மூன்று ரூபாய் பணத்துடன் விளம்பரம் அனுப்பப்பட்டது. விளம்பரம் செய்ய மறுத்துவிட்டு பணத்தைத் திருப்பி அனுப்பியது அந்தப் பத்திரிகை. இப்படியாக, தொடக்கத்திலேயே அம்பேத்கரின் ‘மூக் நாயக்’ புறக்கணிப்பை எதிர்கொண்டது. 1920-ல் 700 சந்தாதாரர்களைக் கொண்டிருந்த அந்தப் பத்திரிகை, 1922-ல் ஆயிரத்தைத் தொட்டது. இதற்கிடையில் பாதியிலேயே நின்றுபோன தனது பொருளாதார முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்வதற்காக அம்பேத்கர் லண்டன் சென்றுவிட ‘மூக் நாயக்’ பத்திரிகை தள்ளாடியது. அதற்கு முன்னதாக ஆறு மாதங்களில் 12 இதழ்களின் பெயர் குறிப்பிடப்படாத ஆசிரியராக இருந்து அம்பேத்கரே எல்லா வேலைகளையும் கவனித்துக்கொண்டார்.
சில ஆண்டுகளில் ‘மூக் நாயக்’ நின்றுபோனது. ஆனாலும், பின்னாளில் பஹிஷ்க்ரிட் பாரத், ஈக்குவாலிட்டி ஜன்ட்டா ஆகிய இதழ்களை டாக்டர் அம்பேத்கர் தொடங்கி நடத்தினார். அம்பேத்கரின் ‘மூக் நாயக்’ தொடங்கி நூறு ஆண்டுகள் முடிவுக்கு வந்தாலும் அந்தக் காலத்தைப் போலவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கென்று வலுவான ஊடகம் இல்லாதது இன்றும் தொடர்கிறது. அப்படிப்பட்ட ஊடகம் அமையும்போது அது ‘மூக் நாயக்’ இட்ட அடித்தளத்தின்மீதுதான் அமையும் என்பது டாக்டர் அம்பேத்கரின் தியாகத்துக்கும் துணிவுக்கும் சான்று!