Showing posts with label மொழி. Show all posts
Showing posts with label மொழி. Show all posts

Wednesday, March 19, 2025

மொழிப் பிரச்சினை – ஒரு பார்வை



ஆசை

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களின் வரலாறு?

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் கிட்டத்தட்ட தமிழகமே இந்திய அளவில் தனித்து நிற்கிறது. இதுவரை நடந்தவை ஆறு போராட்டங்கள். நடந்த ஆண்டுகள்: 1938, 1948, 1950, 1965, 1968, 1968. இவற்றில் மிகவும் உக்கிரமாகப் போராட்டங்கள் நடந்த ஆண்டுகள் 1938-ம் 1965-ம். நடராசன், தாளமுத்து என்ற இருவர் 1938 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்போது சிறைசென்றார்கள். 73 பெண்களும் இவர்களில் அடங்குவார்கள். இவர்களுடன் சிறைக்குச் சென்ற 32 கைக்குழந்தைகளும் உண்டு. 1965 போராட்டத்தின்போது சின்னசாமி என்ற இளைஞர் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தீக்குளித்து இறந்தார். அந்தப் போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை ஏறத்தாழ 70. எனினும் 500 பேருக்கும் மேல் உயிரிழந்திருக்கக்கூடும் என்று மொழிப்போர் வரலாற்றுப் புத்தகங்கள் கூறுகின்றன.   

போராட்டங்கள் ஏன்?

Thursday, March 13, 2025

மர்ரே ராஜமும் பொக்கிஷப் பதிப்புகளும்!

மர்ரே-ராஜம்


ஆசை

மர்ரே-ராஜம் என்றழைக்கப்பட்ட ராஜம் (பிறப்பு: 22-11-1904, இறப்பு: 13-03-1986) தன்னலம் கருதாமல் தமிழுக்காக உழைத்தவர்களுள் ஒருவர்! கூடவே, தமிழர்களின் மறதியால் விழுங்கப்பட்ட மாமனிதர்களுள் ஒருவர். பழந்தமிழ் இலக்கியங்களை சந்தி பிரித்து, மலிவு விலையில் அவர் பதிப்பித்த நூல்கள் தமிழின் சமீப வரலாற்றின் சாதனைகளுள் ஒன்று. 1986-ல் ராஜம் மறைவுக்குப் பிறகு அவர் உருவாக்கிய பதிப்பு வளங்கள் கிட்டத்தட்ட முடங்கிப் போன நிலை! இந்த நிலையில் பழந்தமிழ் இலக்கியத்தை வெளியிடுவதற்காக 60-களில் ராஜம் ஏற்படுத்திய சாந்தி சாதனா அறக்கட்டளைக்கு அவரது நண்பரின் மகனும் ராஜத்தின் பங்குதாரருமான ஸ்ரீவத்ஸா 2001-ல் புத்துயிர் கொடுக்கிறார். அதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே பணிகள் முடிக்கப்பட்டுக் கைப்பிரதியாக இருந்த நூல்களெல்லாம் ஒன்றொன்றாக வெளிவரத் தொடங்கின. ‘தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி’, ‘வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி’போன்ற அகராதிகளும் ‘பெருங்காதை’, ‘வார்த்தாமாலை’, ‘ஸ்ரீதேசிகப் பிரபந்தம்’ போன்ற நூல்களும் வெளியாகின.

Thursday, September 16, 2021

9-ம் ஆண்டில் ‘இந்து தமிழ் திசை’யுடன் நானும்...

ஆசை

'இந்து தமிழ் திசை’ நாளிதழில் இன்று 9-ம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. இந்த 8 ஆண்டுகால பயணத்தில் ’இந்து தமிழ் திசை’யின் முதல் நாளிலிருந்தே அதனுடன் நான் இருந்துவருகிறேன். இந்தப் பயணத்தைத் திரும்பிப்பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. அகராதி, பதிப்புத் துறை போன்றவற்றில் பணியாற்றிய எனக்குப் பத்திரிகை அனுபவம் ஏதும் கிடையாது. எனினும் என் மீது நம்பிக்கை கொண்டு ஆசிரியர் அசோகன் அவர்களும் நடுப்பக்கத்தின் முன்னாள் ஆசிரியர் சமஸும் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை விதவிதமான அனுபவங்களுடன் இந்தப் பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

மன்னார்குடிக்கு அருகில் உள்ள வடுவூர் புதுக்கோட்டை என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவனும் முதல் தலைமுறைப்  பட்டதாரியுமான எனக்கு ‘தி இந்து’ குழுமத்தில் பணிபுரிய கிடைத்த வாய்ப்பு என்பது உண்மையிலேயே பெரிய விஷயம். கனவு காண்பதற்கும் அதை நிறைவேற்றிக்கொள்வதற்கும் எனக்கும் உரிமை இருக்கிறது என்று நான் உணர்ந்துகொண்ட தருணம் இந்த வாய்ப்பு. எனது இந்த வாய்ப்பை நான் முடிந்தவரை ஒரு சமூகக்  கடமையாகவே பயன்படுத்தியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

அநேகமாக, தீவிர எழுத்தாளர்கள் பலரும் வேறெந்த வெகுஜன இதழைவிடவும் இதில் அதிகமாக எழுதியிருக்கிறார்கள் என்று கருதுகிறேன். இந்த விஷயத்தில் நடுப்பக்கத்தின் ஒரு அங்கமான எனக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும். இது எனது கடமை என்றே நினைக்கிறேன். நான் எனது ஊட்டச்சத்தை எங்கே பெற்றேனோ, பெற்றுக்கொண்டிருக்கின்றேனோ அந்த இலக்கிய உலகத்துக்கு நன்றிக் கடன் ஆற்றுவது முக்கியம் அல்லவா! இது தவிர, காந்தி, நேரு, பெரியார், அம்பேத்கர், அண்ணா, பாரதியார், வ.உ.சி., உள்ளிட்ட ஏராளமான தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களில் அவர்களை ஒரு பக்க அளவிலோ இரண்டு பக்கங்கள் அளவிலோ சிறப்பித்துவருகிறோம். அதே அளவுக்குத் தலைசிறந்த எழுத்தாளர்களின் பிறந்தநாள், நினைவுநாள், அல்லது அவர்களின் மரணத்தின்போது அவர்களைச் சிறப்பித்துவருகிறோம். தமிழ் எழுத்தாளர்களையும் தமிழையும் கொண்டாடும் ‘யாதும் தமிழே’, ‘இந்து தமிழ் லிட்ஃபெஸ்ட்’ உள்ளிட்ட விழாக்களை நடத்தி கி.ராஜநாராயணன், ஐராவதம் மகாதேவன், இந்திரா பார்த்தசாரதி, கோவை ஞானி, விக்ரமாதித்யன், இமையம், பா.வெங்கடேசன், சீனிவாச ராமாநுஜம், கீரனூர் ஜாகீர்ராஜா, தமயந்தி, சயந்தன் உள்ளிட்ட முக்கியமான எழுத்தாளர்கள், அறிஞர்களுக்கு ‘தமிழ் திரு’ விருதை ‘இந்து தமிழ் திசை’ வழங்கியிருக்கிறது. அதிலும் முக்கியப் பங்குவகித்தமை குறித்து எனக்குப் பெருமகிழ்ச்சி! 

‘தி கார்டியன்’, ‘தி நியூயார்க் டைம்ஸ்’, ‘தி இந்து’ (ஆங்கிலம்) உள்ளிட்ட நாளிதழ்களிலிருந்து மூத்த சகா சாரி அவர்களும் நானும் நூற்றுக் கணக்கான கட்டுரைகளை மொழிபெயர்த்திருப்பதில் எங்களுக்குப் பெரும் மனமகிழ்வு! இது ஒரு வகையில் உலகக் காற்று மேலதிகமாக என் சிந்தனையில் படுவதற்கான பயிற்சியாகவும் அமைந்தது. காந்தி, நேரு, அம்பேத்கர், அண்ணா போன்றோரின் எழுத்துகளையும் உரைகளையும் மொழிபெயர்த்தது மட்டுமல்லாமல் ஜார்ஜ் ஆர்வெல், ஆலிவர் சாக்ஸ், ஸ்டீவன் ஹாக்கிங், வில்லியம் டால்ரிம்பிள், பால் க்ரூக்மன், ஸ்லேவோஜ் ஜிஜெக், ராமச்சந்திர குஹா என்று பல உலக எழுத்தாளர்கள், அறிவியலர்கள், ஆய்வாளர்களின் கட்டுரைகள் தமிழில் முதன்முதலில் ஒரு வெகுஜனப் பத்திரிகையில் வந்தது என்றால் அது ‘இந்து தமிழ் திசை’யில்தான் இருக்கும். இந்த மொழிபெயர்ப்புகளைச் செய்ய எனக்குக் கிடைத்த வாய்ப்பு பெரும் பேறு! இதன் மூலம் நான் கற்றுக்கொண்டது ஏராளம். கூடவே, நிறைய அறிவியல் கட்டுரைகளை எழுதிப் பார்க்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழுக்காக ‘அறிவோம் நம் மொழியை’ என்ற ஒரு சிறு பத்தியையும் சில காலம் எழுதினேன். இந்தப் பத்தியில் வாசகர்களும் நானும் சேர்ந்து ஏராளமான புதுச் சொற்களை உருவாக்கினோம். ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்தில் 2017-ல் ஜனவரி 30 தொடங்கி தினமும் ஒரு அத்தியாயம் என்று ‘என்றும் காந்தி’ தொடரை எழுதும் வாய்ப்பை இணையதள ஆசிரியர் திரு பாரதி தமிழன் வழங்கினார். காந்தி 150-ம் ஆண்டை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’யின் நடுப்பக்கத்தில் ‘காந்தியைப் பேசுதல்’ என்ற தொடரை ஓராண்டு எழுதும் வாய்ப்பும் கிடைத்தது.  இறுதியில் இரண்டு தொடர்களும் ஒன்றிணைக்கப்பட்டு காந்தி 150-ம் ஆண்டிலேயே ‘என்றும் காந்தி’ என்ற நூலாக வெளியிடப்பட்டது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு. ‘பெண் இன்று’ இணைப்பிதழில் உலகப் பெண் கவிஞர்களின் கவிதைகள் மொழிபெயர்ப்போடு ’மொழியின் பெயர் பெண்’ என்று தொடரை எழுத அந்த இணைப்பிதழின் பொறுப்பாசிரியர் சகோதரி பிருந்தா ஒரு வாய்ப்பை வழங்கினார். 17 அத்தியாயங்கள் எழுதினேன். இடையில் சிறிது காலம் ‘இந்து’ குழுமத்திலிருந்து வெளியாகும் ‘காமதேனு’ வார இதழில் இடம்பெற்றிருந்தபோது ‘தாவோ தே ஜிங்’ பற்றி ‘தாவோ-பாதை புதிது’ என்ற தொடரும் காவிரிப் படுகை முழுவதும் பயணித்து ‘நீரோடிய காலம்’ என்ற தொடரும் எழுத வாய்ப்பு கிடைத்தது.

இந்தப் பயணத்தில் குறிப்பிட வேண்டிய விஷயங்களுள் முக்கியமானவை கலைஞர் பற்றி உருவாக்கிய ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூல், அறிஞர் அண்ணா பற்றி உருவாக்கிய ‘மாபெரும் தமிழ்க் கனவு’ பெருநூல் ஆகியவற்றில் நானும் இடம்பெற்றதுதான். அறிஞர் அண்ணாவின் ஆங்கில உரைகளைத் தமிழில் மொழிபெயர்த்தபோதுதான் அவரைப் பற்றி இளம் வயதிலிருந்து மேம்போக்காக நானும் பலரும் அறிந்துவைத்திருக்கிறோம் என்று தெரிந்தது. அண்ணா என்ற ஆளுமையை மறுகண்டுபிடிப்பு செய்துகொள்ள எனக்குக்  கிடைத்த மகத்தான வாய்ப்பு அது!

மதச்சார்பின்மை, மனிதநேயம், ஒருமைப்பாடு, சமூகநீதி, ஜனநாயகம், கூட்டாட்சி போன்ற அடிப்படையான விழுமியங்களை எனது இதழியல் அனுபவத்தில் நான் கூடுமானவரை கடைப்பிடித்துவந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். இதற்கு காந்தி, பெரியார், அம்பேத்கர், அண்ணா என்ற முன்னோடிகள் முக்கியக் காரணம். இந்த விழுமியங்களைக் கூட இருந்து கற்றுக்கொடுத்தவர் சமஸ். அவருக்குப் பெரும் நன்றி! 

‘இந்து தமிழ் திசை’யுடனான பயணம் இன்னும் எனக்கு நிறைய கற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் அதனுடன் இணைந்து சென்றுகொண்டிருக்கிறேன். எனக்கு இதுவரை ஆதரவு தந்திருக்கும் ஆசிரியர் அசோகன், சமஸ் இருவருக்கும் மனமார்ந்த நன்றி! எனது நடுப்பக்க சகாக்கள், இணைப்பிதழ், செய்திப்பிரிவு, இணையதளம், காமதேனு போன்ற அனைத்துப் பிரிவுகளிலும் பணிபுரியும் சகாக்களுக்கு நன்றியும் அன்பும்! 

எல்லோருக்குமான மந்திரத் தாயத்து ஒன்றை காந்தி அளித்திருக்கிறார்: "நான் உங்களுக்கெல்லாம் ஓர் மந்திரத் தாயத்து அளிக்கிறேன். முடிவெடுக்கையில் அது சரியா, தவறா என்கிற ஐயப்பாடு எழும்போதோ, அல்லது உமது அகந்தையோ சுயநலமோ தலைதூக்கும்போதோ இந்தச் சோதனையைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பார்த்துள்ள, ஏழ்மைமிக்க, மிக மிக நலிவுற்ற முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் காரியம், எடுக்கவிருக்கும் நடவடிக்கை, தீட்டவிருக்கும் திட்டம், அந்தப் பரம ஏழைக்கு எவ்விதத்திலாவது பயன்படுமா? அவன் தன் அன்றாட வாழ்க்கையையும், வருங்கால வாழ்வையும் வளமாக்கி அவனது கட்டுப்பாட்டில் இருத்திக்கொள்ள வகைசெய்யுமா? இதையே வேறுவிதமாகச் சொல்லப்போனால், பசிப்பிணியாலும் ஆன்மிக வறட்சியாலும் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கு உண்மையில் சுயராஜ்யம் (சுயதேவை பூர்த்தி) கிடைக்கச் செய்யுமா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அதன்பின் உங்களது ஐயங்களும் சுயநலமும் கரைந்து மறைந்து போவதைக் காண்பீர்கள்.''

இதழியலிலும் இதை நான் பின்பற்ற வேண்டும் என்று உளமார ஆசைப்படுகிறேன்.

Friday, June 19, 2020

க்ரியா ராமகிருஷ்ணன்-75 : 2


ஆசை

அப்போது நான் சினிமா கனவுகளில் இருந்தேன். சென்னைக்கு வந்து திரைப்படக் கல்லூரியில் படித்து சத்யஜித் ரே மாதிரி பெரிய இயக்குநராகும் கனவு. மன்னார்குடியில் இருக்கும்போது கூடப் படித்த நண்பர் ஸ்டாலினையும் அழைத்துக்கொண்டு சில முறை ராமகிருஷ்ணனை சந்திக்க வந்தேன். என் குடும்பத்தினர் சாதிக்காததை அவர் சாதித்தார். எனது சினிமா கனவுகளிலிருந்து உலுக்கி என்னை வெளியே கொண்டுவந்தார். எனக்கு இருந்தது கனவு மட்டுமே தவிர அதற்காக பாடுபடக் கூடிய தைரியம் இல்லை என்பது புரிந்தது. “ஒரு மாஸ்டர்ஸ் டிகிரி செய்யுங்கள்” என்றார். மன்னார்குடியில் அப்போது முதுகலை இல்லை என்பதால் 2001-ல் மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன். அண்ணனின் ஆதரவில் விக்டோரியா விடுதியில் தங்கிப் படித்தேன். அவ்வப்போது க்ரியாவுக்கோ அப்போது ராயப்பேட்டையில் இருந்த அவரது வீட்டுக்கோ சென்றுவருவேன். நல்ல இசை, நல்ல திரைப்படம், நல்ல இலக்கியம் என்று பலவற்றையும் அறிமுகப்படுத்தினார். சில முறை கடற்கரைக்கோ வேறுசில இடங்களுக்கோ சென்று பேசுவதுண்டு. அப்போது ஒருமுறை “சுந்தர ராமசாமி பிராமணர் என்று தெரிந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது” என்றேன். “அப்படியெல்லாம் பாகுபடுத்திப் பார்க்கக் கூடாது. செயல்களைத்தான் பார்க்க வேண்டும்” என்றார். அவரும் பிறப்பால் பிராமணர்தான் என்றாலும் சாதி சார்ந்த அடையாளங்களை இளம் வயதிலேயே துறந்தவர்.

என்னிடம் என்ன கண்டாரோ தெரியவில்லை, ஒவ்வொரு முறை சந்திக்கும்போது எனக்கென்று தாராளமாக நேரத்தை ஒதுக்கினார். நான் தத்துப்பித்து என்று உளறியதையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். அவருடைய நேரத்தை நாம் திருடுகிறோம் என்ற குற்றவுணர்ச்சி மட்டும் எனக்கு எப்போதும் இருக்கும். ஆனால், அவரோ என்னுடன் பேசியதை விரும்பியே செய்தார். அவர் வீட்டில்தான் முதல்முதலாக சைக்காவ்ஸ்கியின் இசையைக் கேட்டேன்; ராவெலின் போலரோவைக் கேட்டேன். அவர்தான் எனக்கு பிஸ்மில்லா கானை அறிமுகப்படுத்திவைத்தார். கேட்டதும் உடனே பிடித்துவிட்டது. “இவர்கள்தான் எனக்கு உண்மையில் கடவுள்கள்” என்றார், கடவுள் நம்பிக்கையற்ற ராமகிருஷ்ணன்.

விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த எனக்கு நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று ஆசை. திருவல்லிக்கேணியில் நிறைய சாலையோரப் புத்தகக் கடைகள் இருக்கும். எனக்குக் கொடுக்கப்பட்ட மாதாந்திரத் தொகையைச் சிக்கனப்படுத்தி பழைய புத்தகங்கள் நிறைய வாங்குவேன். அப்படியும் பணம் போதவில்லை என்று ஒருமுறை ராமகிருஷ்ணனிடம் குறிப்பிட்டேன். “நான் வேண்டுமானால் உங்களுக்கு மாதாமாதம் கொஞ்சம் பணம் தரட்டுமா?” என்றார். அதேபோல், சிறிது காலம் கொடுக்கவும் செய்தார். எனக்கு, சங்கோஜமாகவே இருந்தது.
(தொடரும்...)

முதல் பகுதி: http://writerasai.blogspot.com/2020/06/75.html

Thursday, June 18, 2020

க்ரியா ராமகிருஷ்ணன்-75


ஆசை

நுழைவாயில்

நவீனத் தமிழுக்குப் பெரும் பங்காற்றியவர்களுள் ஒருவரான க்ரியா ராமகிருஷ்ணனுக்கு இன்று 75-வது பிறந்த நாள். அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து தமிழுக்குப் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அவரைப் போல ஒருவர் மேலைச் சமூகத்தில் இருந்திருந்தால் அவரை அந்தச் சமூகம் கொண்டாடியிருக்கக்கூடிய விதமே வேறு. அவரைப் போல பல சாதனையாளர்களுக்கும் வாழும் காலத்தில் புறக்கணிப்பையே தந்துவந்திருக்கிறோம். க்ரியா ராமகிருஷ்ணனைப் பொறுத்தவரை அதிகார பீடங்களிலிருந்து விலகி இருப்பதாலும், தன்னை முன்னிறுத்துவதில் அவருக்குச் சிறிதும் ஆர்வம் இருப்பதில்லை என்பதாலும் இந்தப் புறக்கணிப்பில் அவருக்கும் ஒரு பங்குண்டு.   க்ரியா பதிப்பகத்தின் மூலம் சி.மணி, ந.முத்துசாமி, அசோகமித்திரன், மௌனி, ஜி. நாகராஜன், எஸ்.வி. ராஜதுரை, சுந்தர ராமசாமி, பூமணி, திலீப் குமார், இமையம்  முக்கியமான பல படைப்பாளிகளின் எழுத்துக்களை ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கிறார். காஃப்கா, காம்யு, அந்த்வான் து எக்சுபரி உள்ளிட்ட உலகப் படைப்பாளிகள் பலரின் புத்தகங்களின் நேரடி மொழிபெயர்ப்புகளை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்ட ‘டாக்டர் இல்லாத இடத்தில்…’ நூல் மிகவும் பிரபலமானது. தமிழின் தொன்மையை நிறுவும் ஐராவதம் மகாதேவனின் ‘Early Tamil Epigraphy’ என்ற நூலும் (ஹார்வார்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து வெளியிடப்பட்டது) க்ரியாவின் மைல்கற்களுள் ஒன்று. கூத்துப்பட்டறை, மொழி ட்ரஸ்ட், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் போன்றவற்றை உருவாக்கியதில் அவருக்கும் பெரும் பங்கு உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ (முதல் பதிப்பு 1992, விரிவாக்கப்பட்ட பதிப்பு 2008) தமிழுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் செய்த மிகப் பெரிய பங்களிப்பு. க்ரியா ராமகிருஷ்ணன் தனது 75-வது வயதை நிறைவு செய்திருக்கும் இத்தருணத்தில் அவருடன் 20 ஆண்டுகாலம் பழகியவன் என்ற முறையில் எனக்கென்று சொல்வதற்குச் சில அனுபவங்களும் விஷயங்களும் உள்ளன. அவற்றைக் குறுந்தொடர் வடிவில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். அவருடன் பழகியவர்களும் அவர் மீது மதிப்பு கொண்ட பிறரும் கூட இத்தருணத்தில் அவரைப் பற்றி எழுதலாம். 'பெரியோரை வியத்தலும் இலமே’ என்பது மிகச் சரியானதுதான் என்றாலும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது முக்கியம் என்று நான் கருதியதால் இந்தக் குறுந்தொடர்.

1.

க்ரியா ராமகிருஷ்ணனை நான் சந்தித்து இருபது ஆண்டுகள் நிறைவடைகின்றன. அப்போது, மன்னார்குடியில் பி.ஏ. ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். சென்னையில் காலச்சுவடு பதிப்பகம் ‘தமிழினி-2000’ என்ற நிகழ்வை நடத்தினார்கள். அதுவரை இலக்கிய இதழ்களிலும் புத்தகங்களிலும் மட்டுமே நான் சந்தித்திருந்த எனது அபிமான எழுத்தாளர்களை சந்திக்க வேண்டும் என்று அந்த நிகழ்வை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். என் சித்தி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த 500 ரூபாயை எனக்குக் கொடுத்து அந்த நிகழ்வுக்கு அனுப்பிவைத்தார். சென்னையில் சைதாப்பேட்டையில் சித்தப்பா வீட்டில் தங்கியபடி ‘தமிழினி’ நிகழ்ச்சிக்கு தினமும் போய்வந்தேன். அங்கே, பிரம்மராஜன், அம்பை, பெருமாள் முருகன், சாரு நிவேதிதா என்று பலரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார்கள். நான் முக்கியமாக அந்த நிகழ்வுக்கு வந்தது என்னுடைய அப்போதைய ஹீரோ சுந்தர ராமசாமியைப் பார்த்துப் பேசத்தான். ஆனால், அவர் அந்த நிகழ்வில் இருந்தாலும் அவரைப் பார்க்க முடியாமல் ஏதோ ஒரு மனத்தடை என்னைத் தடுத்துவிட்டது. மனுஷ்யபுத்திரன் ஒருவருடன் மட்டும்தான் பேசினேன். அங்கே நிகழ்ச்சி நடந்த அரங்குக்கு வெளியில் என் பட்ஜெட்டுக்கு உட்பட்டு ஒருசில புத்தகங்களை வாங்கினேன். அதில் ஒன்றிரண்டு க்ரியா புத்தகங்களும் அடக்கம்.

க்ரியா பதிப்பகத்துக்கே சென்று சில புத்தகங்களை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு, அந்தப் பதிப்பகத்தின் தொலைபேசி எண்ணை அழைத்தேன். எடுத்தவர் க்ரியா ராமகிருஷ்ணன். எனக்கு அப்போது தொலைபேசியில் அதிகம் பேசிப் பழக்கமில்லை. மேலும், புதிய மனிதர்களுடன் பெரிய ஆட்களுடன் பேசுவதில் ஒருவகை பீதியும் (phobia) உண்டு. ஆகவே, அவருடன் பேச ஆரம்பித்தபோது எனக்கு ‘திக் திக்’ என்றது. சைதாப்பேட்டையில் நான் எந்த பேருந்தில் ஏற வேண்டும் என்பதில் தொடங்கி, திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இறங்கி எப்படி வர வேண்டும் என்பதுவரை கையில் தெளிவான  வரைபடத்தைக் கொடுப்பதுபோல் அவர் நான் வர வேண்டிய வழியை விவரித்தார். என்னுடைய பிரச்சினை என்னவென்றால் யாருக்கும் என்னால் ஒழுங்காக வழி சொல்லத் தெரியாது, யாரும் சொல்லும் வழியையும் மனதில் சித்திரமாக மாற்றிக்கொள்ளவும் தெரியாது. ஆனாலும் என்ன ஆச்சரியம்! திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இறங்கி யாரையும் விசாரிக்காமலேயே அவர் சொன்ன வழியைப் பின்பற்றி க்ரியா அலுவலகத்துக்கு வந்துவிட்டேன்.

அலுவலகத்தில் அவரே என்னை வரவேற்றார். மிகக் குறைவானவர்களே அங்கு இருந்தார்கள். எங்கிருந்து வருகிறீர்கள், என்ன (படிப்பு) படிக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டார். மன்னார்குடி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கிறேன் என்று சொன்னதும் “ ஓ தங்க.ஜெயராமன் மாணவரா? ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் அவர் நிறைய பங்களிப்பு செய்திருக்கிறார் தெரியுமா?” என்று கேட்டார். “அதில் வேலை பார்த்திருக்கிறார் என்பதை அறிவேன்?” என்றேன். க்ரியாவின் புத்தகங்கள் ஒவ்வொன்றையும் பற்றி எனக்கு விளக்க ஆரம்பித்தார். நான் வைத்துள்ள சொற்ப பணத்தில் எல்லாவற்றையும் வாங்க முடியாது என்பதால் ’அந்நியன்’, ‘விசாரணை’ உள்ளிட்ட சில புத்தகங்களை வாங்கிக்கொண்டேன். “ஏன் இது வேண்டாமா?” என்று ‘குட்டி இளவரசன்’ புத்தகத்தை எடுத்து நீட்டினார். தயக்கத்துடன் “பணம் குறைவாகத்தான் இருக்கிறது” என்றேன். இத்தனைக்கும் அப்போது அதன் விலை 40 ரூபாய் மட்டும்தான். “பரவாயில்லை, எடுத்துக்கொள்ளுங்கள். ஊருக்குப் போய்ப் படித்துவிட்டுப் பிடித்திருந்தால் பணத்தை மணியார்டர் செய்யுங்கள். ஆனால், தவற விடக்கூடாத புத்தகம்” என்றார். எடுத்துக்கொண்டேன். ஊர் திரும்பிய பிறகு ‘குட்டி இளவரசன்’ படித்தேன். அது எவ்வளவு அழகான பரிசு என்பதை உணர்ந்தேன். க்ரியாவுக்கு 36 ரூபாயை மணியார்டர் செய்தேன். ஒரு சிறுநகரத்திலிருந்து சென்னைக்கு வந்த, வெளியுலகமே ஏதும் தெரியாத ஒரு இளைஞனுக்கு அவருடைய இந்த எளிய செய்கைகள் எவ்வளவு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.
(தொடரும்)

Monday, April 11, 2016

நம்முடைய மொழி ஆண்களின் மொழியா?


ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் 10-04-2016 அன்று வெளியான கட்டுரை)
  
‘கவிஞன் என்பவன்’, ‘எழுத்தாளன் என்பவன்’, ‘நடிகன் என்பவன்’, ‘உழைப்பாளி என்பவன்’, ‘புரட்சியாளன் என்பவன்’ என்றெல்லாம் தொடங்கும் ஏராளமான வாக்கியங்களை நமது அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் தினசரி நாம் எதிர்கொண்டுவருகிறோம். இந்த வாக்கியங்களை ஒரு பெண் படிக்கும்போது அவருக்கு என்ன தோன்றும்? ‘ஓஹோ, கவிதை, எழுத்து, நடிப்பு, உழைப்பு, புரட்சி என்று அனைத்தும் ஆண்களால்தான் செய்யப்படுகின்றனவோ?’ என்ற கேள்விதானே எழும். இதெல்லாம் பரவாயில்லை. இந்த வாக்கியங்களைவிட அதிகமாக நாம் தினசரி எதிர்கொள்வது, ‘மனிதன் என்பவன்’, ‘மனிதன் இருக்கின்றானே’ ரீதியிலான வாக்கியங்கள்தான். அப்படியென்றால் பெண்கள் மனித குலத்தில் சேர்த்தி இல்லையோ? மனித குலம் என்றாலே அதை ஆண்களுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதுதான் இயல்பாக நடந்துவரும் விஷயம் அல்லவா? இதை யாரிடம் சென்று முறையிடுவது? ‘படைத்தவனிடமா?’ அங்கும் ஆண்தானே உருவகிக்கப்பட்டிருக்கிறார்? ‘அவனிடம்’ போனால் என்ன நியாயம் கிடைக்கும்?
இந்தக் கேள்விகளெல்லாம் தமிழில் சிறுபத்திரிகைகளில் பெண்ணுரிமையைப் பற்றி எழுதுபவர்களின் வட்டத்தைத் தாண்டி நாம் அதிகம் எதிர்கொள்ளாதவை. மேலைநாடுகளிலோ 
இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே இந்தக் கேள்விகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு, அவற்றை அந்தச் சமூகங்களும் எதிர்கொண்டு, அவற்றுக்குத் தீர்வு காணவும் முயன்றுவருகின்றன.

Wednesday, March 30, 2016

பேருக்கு எவ்வளவு அக்கப்போர்?!



ஆசை

(‘தி இந்துநாளிதழின்இளமை புதுமைநாளிதழில் 25-03-2016 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது)

அடியக்கமங்கலம் என்ற ஊருக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா? அடியக்கமங்கலத்துக்கு ஆரம்பத்தில் வேறு பெயர்தான் இருந்ததாம். அந்த ஊருக்கு வந்த ஒரு ஆங்கிலேயர் அங்கே தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பெண்களிடம் அந்த ஊரின் பெயர் என்ன என்று ஆங்கிலத்தில் கேட்டாராம். அவர் கேட்டது புரியாமல் அங்கே இருந்த ஒரு பெண் மங்கலம் என்ற பேருடைய ஒரு பெண்ணைஅடியக்கா மங்கலம்என்று உதவிக்கு அழைத்திருக்கிறாராம். ‘, அடியக்கமங்கலம், நைஸ் நேம்என்று சொல்லிக்கொண்டு, அதுதான் ஊரின் பெயர் என்று நினைத்துக்கொண்டு அந்த ஆங்கிலேயர் போய்விட்டாராம். இது உண்மைச் சம்பவமல்ல. என்றாலும் ஒரு ஊரின் பெயரை அறிந்துகொள்வதில் இருவேறு மொழிகளைச் சேர்ந்தவர்களிடையே எழும் பிரச்சினையை உணர்த்தும் விதமாக உள்ளது.