Friday, June 19, 2020

க்ரியா ராமகிருஷ்ணன்-75 : 2


ஆசை

அப்போது நான் சினிமா கனவுகளில் இருந்தேன். சென்னைக்கு வந்து திரைப்படக் கல்லூரியில் படித்து சத்யஜித் ரே மாதிரி பெரிய இயக்குநராகும் கனவு. மன்னார்குடியில் இருக்கும்போது கூடப் படித்த நண்பர் ஸ்டாலினையும் அழைத்துக்கொண்டு சில முறை ராமகிருஷ்ணனை சந்திக்க வந்தேன். என் குடும்பத்தினர் சாதிக்காததை அவர் சாதித்தார். எனது சினிமா கனவுகளிலிருந்து உலுக்கி என்னை வெளியே கொண்டுவந்தார். எனக்கு இருந்தது கனவு மட்டுமே தவிர அதற்காக பாடுபடக் கூடிய தைரியம் இல்லை என்பது புரிந்தது. “ஒரு மாஸ்டர்ஸ் டிகிரி செய்யுங்கள்” என்றார். மன்னார்குடியில் அப்போது முதுகலை இல்லை என்பதால் 2001-ல் மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன். அண்ணனின் ஆதரவில் விக்டோரியா விடுதியில் தங்கிப் படித்தேன். அவ்வப்போது க்ரியாவுக்கோ அப்போது ராயப்பேட்டையில் இருந்த அவரது வீட்டுக்கோ சென்றுவருவேன். நல்ல இசை, நல்ல திரைப்படம், நல்ல இலக்கியம் என்று பலவற்றையும் அறிமுகப்படுத்தினார். சில முறை கடற்கரைக்கோ வேறுசில இடங்களுக்கோ சென்று பேசுவதுண்டு. அப்போது ஒருமுறை “சுந்தர ராமசாமி பிராமணர் என்று தெரிந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது” என்றேன். “அப்படியெல்லாம் பாகுபடுத்திப் பார்க்கக் கூடாது. செயல்களைத்தான் பார்க்க வேண்டும்” என்றார். அவரும் பிறப்பால் பிராமணர்தான் என்றாலும் சாதி சார்ந்த அடையாளங்களை இளம் வயதிலேயே துறந்தவர்.

என்னிடம் என்ன கண்டாரோ தெரியவில்லை, ஒவ்வொரு முறை சந்திக்கும்போது எனக்கென்று தாராளமாக நேரத்தை ஒதுக்கினார். நான் தத்துப்பித்து என்று உளறியதையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். அவருடைய நேரத்தை நாம் திருடுகிறோம் என்ற குற்றவுணர்ச்சி மட்டும் எனக்கு எப்போதும் இருக்கும். ஆனால், அவரோ என்னுடன் பேசியதை விரும்பியே செய்தார். அவர் வீட்டில்தான் முதல்முதலாக சைக்காவ்ஸ்கியின் இசையைக் கேட்டேன்; ராவெலின் போலரோவைக் கேட்டேன். அவர்தான் எனக்கு பிஸ்மில்லா கானை அறிமுகப்படுத்திவைத்தார். கேட்டதும் உடனே பிடித்துவிட்டது. “இவர்கள்தான் எனக்கு உண்மையில் கடவுள்கள்” என்றார், கடவுள் நம்பிக்கையற்ற ராமகிருஷ்ணன்.

விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த எனக்கு நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று ஆசை. திருவல்லிக்கேணியில் நிறைய சாலையோரப் புத்தகக் கடைகள் இருக்கும். எனக்குக் கொடுக்கப்பட்ட மாதாந்திரத் தொகையைச் சிக்கனப்படுத்தி பழைய புத்தகங்கள் நிறைய வாங்குவேன். அப்படியும் பணம் போதவில்லை என்று ஒருமுறை ராமகிருஷ்ணனிடம் குறிப்பிட்டேன். “நான் வேண்டுமானால் உங்களுக்கு மாதாமாதம் கொஞ்சம் பணம் தரட்டுமா?” என்றார். அதேபோல், சிறிது காலம் கொடுக்கவும் செய்தார். எனக்கு, சங்கோஜமாகவே இருந்தது.
(தொடரும்...)

முதல் பகுதி: http://writerasai.blogspot.com/2020/06/75.html

2 comments:

  1. நான் வேண்டுமானால் உங்களுக்கு மாதாமாதம் கொஞ்சம் பணம் தரட்டுமா...? இதுபோன்ற பரந்த மனது அனைவருக்கும் இருப்பதில்லை.

    ReplyDelete
  2. ஆசை! என்ன ஆச்சு? க்ரியா ராமகிருஷ்ணன் பற்றிய தொடரில் இரண்டு பகுதிகளுக்கு மேல் நீங்கள் எழுதவில்லையே. ஏன்?

    ReplyDelete