Showing posts with label காளி. Show all posts
Showing posts with label காளி. Show all posts

Tuesday, June 24, 2025

தமிழால் ஆடுகின்றான் கண்ணதாசன்! - கண்ணதாசன் பிறந்தநாள் கவிதைப் பகிர்வு

மன்னார்குடியில் ஒரு இசையகத்தில் நாங்கள் அடிக்கடி பாடல்களைப் பதிவுசெய்து கொண்டுவந்து கேட்போம். ‘உங்களிடம் அதிகம் பதிவுசெய்யப்பட்ட பாடல் எது?’ என்று அவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறிய பாடல் ‘கண்ணே கலைமானே’. கண்ணதாசன், இளையராஜா, பாலுமகேந்திரா, ஸ்ரீதேவி, கமல் என்று எல்லோருக்குமான பெருமை அது. பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு வந்தவர்களில் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்களில் ஒருவர் கண்ணதாசன். ‘உனக்கே உயிரானேன்... எந்நாளும் எனை நீ மறவாதே’ என்பது அவரது மரண சாசனமாகவே அமைந்துவிட்டது. எப்படி மறப்போம் கண்ணதாசா?

எனது ‘அண்டங்காளி’ தொகுப்பின் இந்தக் கவிதை கண்ணதாசனுக்கு அர்ப்பணம்!
பார் சிவனே
மீனாளின் குங்குமத்தைத்
தானாள வேண்டுமென்று
ஏன் விரும்பினான் கண்ணதாசன்
தானும் சிவனாகும்
ஆசையினாலா
இடம்பெயர்ந்த
உன் நெற்றிக்கண்ணின்
குளிர்சிவப்பைப்
பார்த்து
அவனுக்கும்
ஆசை விடவில்லை
உன் நெற்றிக்கண்ணை
ஒரு பொய்கையாக்கி
அதில் குளித்து விளையாடிக்
கரைமீண்ட மீனாள்
தன் நெற்றியில் துளியாய்த் தங்கிவிட்ட
உன் தகிப்பை
எப்படித்
தன் குங்குமமாக மாற்றிவிட்டாள்
பார்
உன் நெற்றியிலிருந்து
அவள் நெற்றிக்குப்
பயணிக்கும் துடிப்பில்
குளிரைத் துரத்தும்
வெம்மையும்
வெம்மையில் குளிக்கும்
குளிரையும்
உள்ளடக்கிய
தீராத விளையாட்டு
திரைபோட்டு
நடக்கிறது
அதுதான்
நீயாடும் அம்பலம்
அவளாடும்
தன்பலம்
சிவனாகும் ஆசையில்
கண்ணதாசனும்
ஆட முயல்கின்றான்
மீனாளின்
குங்குமப் பரப்பென்ற
குளிர்சிவப்பு
மேடையில்
அம்மை தன்
மேடையெறிந்து
அதைச் சூரியனாக்கிவிடுவாள்
தாங்க மாட்டான்
கண்ணதாசன்
அவள் குங்குமமென்பது
நீ ஒட்டிக்கொண்ட
நெற்றிக்கண்ணோடு
ஆடும் பரப்பல்ல
உன்னைப் போல
வெம்மையை வீசிக்கொண்டு
யாரும் அணுக முடியாத
நெற்றிக்கண் வாசல்
கொண்டதுமல்ல
அவளுடையது
கண்ணதாசா
உற்றுப்பார் உள்ளே
அது அவள்
இதயத்துக்குப்
போகும் வழி
அவள் இதயத்துக்குப்
போகும் வழிக்கு
உன் இதழால்தான்
ஆட்டமிட வேண்டும்
ஆட்டம் தொடங்கியும்கூட
எத்தனையெத்தனை
இதழ்களை எரித்த
குளிர்சிவப்புக்
குங்குமம் அது
தமிழால் ஆடுகின்றான் சிவனே
கண்ணதாசன்
தாங்குவானா
நான் பார்க்க வேண்டும்
ஆடட்டும் அவன்
-ஆசை (‘அண்டங்காளி’, 2021, டிஸ்கவரி வெளியீடு)
நன்றி: ‘ஆகாயப் பந்தலிலே’ பாடலின் ‘மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா’ வரிகள்

Thursday, March 20, 2025

ஊழிமனக் காட்சி

 


காளியவள் களிநடனம்
காட்டி விட்டாள்
ஆழிதனை ஊஞ்சலென
ஆட்டி விட்டாள்
ஊழிமனக் காட்சிதனை
நாட்டி விட்டாள்
பாழிருளைப் படம்பிடித்து
மாட்டி விட்டாள்
-ஆசை, ‘அண்டங்காளி’ (2021) கவிதைத் தொகுப்பிலிருந்து...

Sunday, March 17, 2024

அபிராமிக்காக என் ‘அண்டங்காளி’ கவிதைகள்...



எனது ‘அண்டங்காளி’ (2021, டிஸ்கவரி வெளியீடு) கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் இங்கே. குணா திரைப்படத்தின் அபிராமி நினைவாக...

1.
அம்பாளுக்கு வயது
எப்போதுமே
பதினாறுதான்
அவளைக் காதலால்தான்
கும்பிட முடியும் 

2.
காளியவள் களிநடனம்
காட்டி விட்டாள்

ஆழிதனை ஊஞ்சலென
ஆட்டி விட்டாள்

ஊழிமனக் காட்சிதனை
நாட்டி விட்டாள்

பாழிருளைப் படம்பிடித்து
மாட்டி விட்டாள்

Wednesday, February 21, 2024

குங்கும அந்தாதி


1.

அன்னைக் குங்குமப் பிரகாசம்
ஒரு சன்னிதி

உடலை நிறைப்பது
ஒரு சான்னித்தியம்

மனதில் மலர்வது
ஒரு மகத்துவ யோனி
  
2.
மனதில் மலர்ந்த
மகத்துவ யோனி

உடலின் எல்லைகள்
விசும்பின்
எல்லையாய்
மாறிடக் கண்டேன்

உடலின் அவயவங்கள்
ஒவ்வொன்றும்
பறவையாய் மாறி
எங்கெங்கும் பறந்திடக் கண்டேன்

3.
பறந்திடக் கண்டேன்
பயிர்செய் வயலெல்லாம்
விசும்பின் வளியில்

விசும்புக்குச் சிலிர்த்தாற்போல்
ஒற்றைப் புல்லாய்
மாறியது விசும்பு

அப்பசும்புல் 
அசைப்பது எவ்வளி

4.
வளிசெய் துருத்தியின்
வழிகேட்டுப் பறக்கிறேன்

எதிர்வளி பறத்தல்
எளிதன்று

எனினும்
அதுவொன்றே தரும்
உயிர்வளி

5.
உயிர்வளி ஓசை
வெற்றிடம் செய்யும்

வெற்றிடத்துள்
பறத்தல் தேவையில்லை
இருத்தல் போதும்
இருப்பிடம் சேர்க்கும்

6.
இருப்பிடம் சேர்ந்தால்
என்ன வரும்
இருப்பிடம் தன்னில்
கண்கள் என்ன காணும்

இங்கிருந்தே காண
ஆவல் துடிக்கிறது
மனதை உதைத்துப் பறக்கிறது

இருக்கும் இடத்துக்கே
இருப்பிடம் வரும்
இடமதை அழி மனமே

7.
அழிந்த மனதில்
இடமிருக்காது
காலமிருக்காது என்று
அங்கிருந்தே இருப்பிடம்
சொல்வது இங்கெனக்குக்
கேட்கிறதென்றால்
இருந்த இடத்திலிருந்தே
பறக்கின்றேனா நான்
இருப்பிடத்துக்குள்

8.
இருப்பிடப் பறத்தலில்
அமர மரமிருக்காது
அருந்த நீரிருக்காது
சிறகு மறைய
உடல் கரைய
இருப்பிடம் தோன்றும்
கடைசி இணுக்கும்
மறைந்த பின்

9.
மறைந்த பின்
தோன்றும் இடத்தில்
நானிருக்க மாட்டேன் என்றால்
ஏனிந்தப் பறத்தல்
என்று கேட்க
இருப்பிடம் சொன்னது
மறைந்த இடத்தில்
தோன்றும் பறவையாய்
இருந்து பார் என்று

10.
பாரென்று சொன்னது பார்
பார் தோன்றி மறைந்தது பார்
யாரென்று தெரியவில்லை
நானென்பது புரியவில்லை
செஞ்சுடர் சோதியெழுந்தது
கண்கள் கண்டதை நோக்கிப் 
பறந்தது பறவை
அங்கே அப்படியொரு தகிதகிப்பு
அன்னைக் குங்குமப் பிரகாசம்
      -ஆசை, 21-02-24

தில்லைக் காளியின் குங்குமக் கொதிப்புக்கு
*

கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்:



Tuesday, February 20, 2024

தில்லைக் காளி பதிகம்! நவீனத் தமிழ் கவிதையில் பதிக முயற்சி!


கடந்த ஞாயிறு (18-02-24) தில்லைக் காளியைச் சென்று பார்த்தேன். அங்கே அரை மணிநேரத்தில் பதிகம் எழுதிவிட்டேன் (பத்துப் பாடல்கள்). தில்லைக் காளி பதிகம்! நாயன்மார்கள், ஆழ்வார்கள் வழியில் என்றாலும் அவர்களுக்கு தூரத்தில் கூட நாம் நிற்க முடியாது. ஆயினும் அவர்களுக்கும் நமக்கும் பொதுவாய்த் தமிழ் இருக்கிறாள். அவளின் தன்னம்பிக்கைதான் இம்முயற்சிக்கும் காரணம். அநேகமாக நவீனத் தமிழ் இலக்கியத்தில் திருத்தலம் சென்று பதிகம் இயற்றுவது இதுதான் முதன்முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இனி தொடர்ந்து எல்லா மதத் திருத்தலங்களிலும் பதிகம் பாடவிருக்கிறேன். சர்வமதப் பதிகங்கள் என்பதால் தமிழ் இலக்கிய வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாத ஒன்றாக இந்த முயற்சி இருக்கும்!

இந்தப் பதிகங்களில் எந்தத் திட்டமிடலும் இருக்காது. அங்கே போய் எழும் உணர்வுகளையே அப்போதே எழுதுவேன். பிறகு மிகச் சிறிய அளவில் திருத்தங்கள், சேர்த்தல்கள் மட்டும் உண்டு. அடிப்படையில் மாற்றம் இருக்காது.

கோயில் சார்ந்த நடைமுறைகள், சொல்வழக்குகள் ஏதும் அறியாதவன் என்பதால் பிழையேதும் இருந்தால் மன்னித்தருள்க!
*

தில்லைக் காளி பதிகம்
**
1.
அபிஷேகம் முடிந்து
அம்மைக்கு ஒப்பனை
கண்ணை மட்டும்
தொடவில்லை

ஒப்பனையெல்லாம்
அண்ட முடியாத
அண்டம் அது

அதன் முன்னே
நீண்ட வரிசை நிற்கிறது
கண்திறந்த அபிஷேகத்தில்
குளிக்கிறது

திரைபோட்டாலும்
நடை சாத்தினாலும்
நிற்காத அபிஷேகம்
*

2.
எனக்கோ கண்ணாடி இல்லாத
மங்கலான பார்வை கிடைத்தது
ஒரே ஒரு நிமிடப் பார்வை

அப்பார்வையில்
ஒப்பனை இல்லாத ஒரே இடமான அம்மையின் கண்ணோ கண்ணாடிபோல் காட்சியளிக்கிறது

தன் வெப்பம்
தான் தணித்து
அருளை முன்நீட்டும்
கண்ணாடியோ

முன்வெப்பம்
இருந்த இடத்திலேயே
அருளாக்கும் கண்ணாடியோ
*

3.
பதிகத்தின் முதல் கவிதை மேல்
வந்து விழுந்தது
ஒரு சாமந்திப் பூ
தரையில் ஓடும்
அம்மை அபிஷேகத் தாரையின்
நிறம்கொண்டு

அபிஷேகம்
தன்னைப் பற்றிய கவிதைக்கா
இல்லை
அபிஷேகம்
கவிதையின் முடிவா
இல்லை
அபிஷேகம்தான்
கவிதையை எழுதியதா
*

4.
வந்த நேரம்
வெகு தாமதம்

பிள்ளைகளைக் கிளப்பிக்கொண்டு
வந்ததால்
அப்படி

அபிஷேகம் இல்லாமலேயே
அவர்களும் வந்துவிட்டார்கள்

காத்திருந்ததும்
வெகு நேரம்

உச்சிக் கால பூஜையின்
கடைசி அபிஷேகம் முடிந்து
திரை திறந்து
அம்மை காட்சியளித்தது
சிறு நேரம்

பின் திரை போட
நடைசாத்த
கதவுசாத்த
துரத்தப்படுகிறோம்

கொஞ்ச நேரத்துக்கா அப்பா
இவ்வளவு தூரம்
இவ்வளவு நேரம்
என்றே சிணுங்கும்
பிள்ளைகள்

கொஞ்ச நேரம்தான்
அந்தக்
கொஞ்ச நேரத்தில்
எனக்குள் பாய்ந்தது எது

காலத்தைச் சுருக்கி விரித்துச்
சுருக்கும் இதயமல்லவா

இதயம் பெறுவது
கண நேரம்தான்
அதன் பின்
இதயத்துள் வாழ்வதென்பது
நித்தியம்
*

5.
அபிஷேகத்தின் போது
அம்மையின் வெற்றுடம்பில்
கரும் உடம்பில்
சலசலக்கிறது
ஒரு ஓடை

அம்மை உடம்பு
ஓடையின் அடித்தரையாய்
நெளிகிறது

அவள் உடலின்
இருளுக்குள்ளிருந்து
அருளைச் சுரந்தெடுக்க
எத்தனையெத்தனைதான்
அபிஷேகம்
*

6.
அம்மை சன்னிதிக்குள்
அம்மையும் ஒரு யாசகி
யாவரும் அங்கே யாசகரே
பெறும் சன்னிதியிலும்
அதிகம் பெறுபவள் அவளே
அருள் செய்யும் சிலிர்ப்பே
யாவினும் மிகப் பெரிது
*

7.
யாவரும் அருள் பாலிக்கின்றனர்
அம்மை சன்னிதிக்குள்

யாவருக்குமான
அருள்பாலிப்பு வளையம் இது

யாரோ இரு சகோதரிகள்
மாயி மகமாயி நீ சூலி
என்று பாடி அருள்பாலிக்கின்றனர்

பதின்சிறுமியொருத்தி
பச்சைப் பாவாடை யவ்வனத்தால்
அருள்பாலிக்கின்றாள்

ஒரு குடும்பம்
தேன்குழைத்த பொங்கலில்
முந்திரியை நீந்த விட்டுத்
தந்தருள்பாலிக்கின்றது

யாரோ ஒரு பெண்
செம்மதுரக் கொய்யா கொடுத்து
முருகா வாங்கிக்கொண்டாயே
என்று தொட்டு வணங்குகின்றாள்
என் குழந்தைகளின் காலை

ஒருவர் தன்னைக்
கீழே வைக்குமிடத்தில்
அருளின் கோபுரம் மேலே
எழக் கண்டேன்

அதை இச்சன்னிதிக்குள்
கண்டேன்
*

8.
உற்சவ அம்மை
முந்தியடைத்தாள்
மூலவர் அம்மை
பிந்தியடைத்தாள்
சாத்தப்பட்டது கதவு
திறக்கப்பட்டது திட்டிவாசல்
எப்போதும் உறங்காத
அம்மையின் கண்போல
*

9.
இறுதியில் என்ன செய்ய வேண்டும்

தரையில் விழுந்து கும்பிடு
என்றாள் உடலம்மை
நானொரு நாத்திகனென்று
அங்கே விளக்க நேரமில்லை
அம்மையைக் கும்பிட
நாத்திகனாயிருப்பது தடையுமில்லை

அப்படியே படுத்துவிட்டேன்
மூடிய அம்மைத் திருவுரு இதயம்
எனக்காகத் துடித்துக்கொண்டிருந்தது
தரையில்
குளிர்ந்து

அக்குளிருக்கே
இம்முழுவுடல்
நெடுவணக்கம்

அக்குளிரை உண்டு
குளிராய்
சன்னிதியிலிருந்து வெளிவருக
உடலே
*

10.
ஆறுமுகம்
அருளிடும்
அனுதினமும்
ஏறுமுகம்
என்றொரு மந்திரம்

கோயிலுக்கு வெளியே
கிடைத்தது

அம்மைக்கு
அதிலொன்றும்
பிரச்சினை இருக்காது

அதை அருளியவளே
அவள்தானே
செம்பிழம்பு பொட்டுவைத்து
பொட்டின் சுடராய்
உடல்கொண்ட யாரும்
அம்மைதானே
-ஆசை, 18-02-24


கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: