Tuesday, January 31, 2017

நீராலான கைகள்



முன்னே நிலம்
எதிரே சமுத்திரம்

நிலத்தின் கைகளில் லத்தியுண்டு
கற்களுண்டு
தீயுண்டு
தீயுண்டு தீயுண்டு
உமிழும் கண்களுண்டு

கண்களற்ற சமுத்திரத்திடம் இருப்பதோ
வெறும் கைகள்
உயர்த்திய வெறுங்கைகள்
நீராலான கைகள்

நிலம் கொண்டுபோய்க் கரைத்த
அகிம்சையெல்லாம் எழுந்து நிற்கிறது
உயர்த்திய கைகளாய்

ஓங்கி ஓங்கித் தரையை
ஓயாமல் இனியெப்போதும் அறையும் கைகளாய்

காலங்காலமாகக் கைகள் கரைக்கப்பட்ட சமுத்திரம்
காலங்காலமாகக் கைகள் கழுவப்பட்ட சமுத்திரம்
உயர்த்துகிறது கோடிக் கைகளை

மானுட சமுத்திரத்தின்
எல்லையெங்குமுள்ள கைகளை
ஒன்றுசேர்க்கும் சமுத்திரத்தின்முன்
உங்களால் ஒன்றும் செய்ய முடியாது

தீயின் கரங்களே
திரும்பிச் செல்லுங்கள்
 -ஆசை
 -24-01-2017

என்றும் காந்தி: 1- காந்தி என்றொரு எளிமையான கோட்டோவியம்!


ஆசை

காந்தியின் உருவத்தை என்றாவது வரைந்துபார்த்திருக்கிறீர்களா? உங்களுக்கு ஓவியம் வரையத் தெரியவில்லை என்றாலும் எளிமையான இந்தக் கோட்டோவியத்தை முயன்றுபாருங்கள்! ஒரு முட்டை, அதன் இரு பக்கங்களிலும் சற்றே ‘வி’ வடிவத்தில் விரிந்த காதுகள். சற்று விடைத்தது போன்ற மூக்கு, முக்கியமாக ஒரு மூக்குக்கண்ணாடி, அப்புறம் பொக்கை வாய்… என்ன மூச்சு முட்டுகிறதா? இதுவே சிரமமாக இருக்கிறதா? சரி விடுங்கள். உங்களுக்கு காந்தி படம் வரைய வேண்டும் அவ்வளவுதானே! அந்தக் கால பாணியில் ஒரு மூக்குக் கண்ணாடியை வரையுங்கள் போதும். உங்களுக்கு காந்தி கிடைத்துவிடுவார். ரூபாய் நோட்டுக்களிலும், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் விளம்பரங்களிலும் காந்தியை உருவகப்படுத்தும் கண்ணாடியைப் பார்த்திருக்கிறோம் அல்லவா! அதுபோல்.

எளிமையான ஒரு கண்ணாடி இங்கு காந்தியை உருவகப்படுத்துகிறது. வளைந்த ஒரு கைத்தடியை மட்டும் வரைந்தால் பெரியார் என்று கண்டுகொள்வோமல்லவா! காந்தியையும் பெரியாரையும் அறிந்திராதவர்களுக்கு அவை வெறும் கண்ணாடியும் கைத்தடியும் மட்டுமே. நமக்கு மட்டும் இந்தப் பொருட்கள் காந்தியாகவும் பெரியாராகவும் பொருள்படுகின்றனவே? ஏனென்றால் அந்தப் பொருட்களைப் பயன்படுத்திய மனிதர்களின் சித்தாந்தங்களை அந்தப் பொருட்களின் மீது நாம் ஏற்றிப்பார்க்கிறோம். இவ்வாறாக, அவை குறிப்பிட்ட அரசியல் செயல்பாடுகளின் சின்னங்களாக ஆகிவிடுகின்றன. அப்படித்தான் காந்தி தன் அரசியல் செயல்பாடுகளின் சின்னமாகத் தன் எளிமையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்.

மாறுவேடப் போட்டிகளுக்கு உதவுபவர்
காந்தியின் உடுத்தல் பாணி எவ்வளவு எளிது என்பதை யாருக்கும் சொல்லத் தேவையில்லை. இதற்கு ஓர் உதாரணம். சமீபத்தில், எல்.கே.ஜி. படிக்கும் எனது மகனின் பள்ளியில் குடியரசு தினத்தைக் கொண்டாடும் விதமாக, தலைவர்கள் வேடத்தில் குழந்தைகளை அழைத்துவரச் சொல்லியிருந்தார்கள். இந்தத் தகவலை, என் மகனைப் பள்ளிக்குக் கிளப்பும் நேரத்தில்தான் என் மனைவி என்னிடம் கூறினார். என்ன செய்வது? பாரதியார் வேடத்துக்கு கோட்டு, தலைப்பாகை வேண்டும், நேதாஜி வேடத்துக்கு ராணுவ உடை வேண்டும்! பேசாமல் காந்தி வேடத்தைப் போட்டுவிடலாமா என்று கேட்டார் என் மனைவி. வழக்கமாக எல்லோரும் தேர்ந்தெடுக்கும் வேடம் என்பதால் வேண்டாம் என்று முதலில் நினைத்தாலும் வேறு வழியில்லாமல் ஒரு வெள்ளைத் துண்டை அரையாடையாகக் கட்டிவிட்டு, மேலே சட்டையில்லாமல் ஒரு சிறிய துண்டை சால்வை போல் போர்த்திவிட்டோம். சிறுவர் விளையாட்டுக் கண்ணாடி காந்தியின் கண்ணாடி பாத்திரத்தை ஏற்றது. கிளப்பிக்கொண்டு புறப்பட்டுச் சென்றோம். போகும் வழியில்தான் காந்தியின் கைத்தடி நினைவுக்கு வந்தது. வழியிலேயே வண்டியை நிறுத்திவிட்டு சாலையோரத்தில் பட்டுக் கிடந்த சீமைக் காட்டமணக்குச் செடியின் குச்சியை உடைத்துக்கொண்டோம். இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்போல் இன்ஸ்டண்ட் காந்தி தயார்! பள்ளிக்குச் சென்று பார்த்தால் பாரதி, நேதாஜி, நேரு, எல்லாரும் இருக்கிறார்கள். அவர்களின் தலைவரை நாங்கள் கொண்டுவந்தோம். ஆக, மாறுவேடப் போட்டிக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பும் பெற்றோருக்குத்தான் தெரியும் காந்தியின் உடுத்தல் பாணி எவ்வளவு எளிமை என்று!

இதனால் மற்ற தலைவர்களின் ஆடைகளையோ தோற்றத்தையோ குறை சொல்லவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு தோற்றம்; அதன் பின்னே ஒரு அரசியல் நிலைப்பாடு இருக்கும். பெரும்பாலான ஏழைகள் கோவணம் கட்டிக்கொண்டிருக்கத் தனக்கேன் சீமான் உடை என்று அதைத் துறந்தது காந்தியின் அரசியல் நிலைப்பாடு. ஆனால், வசதிகளும் வாய்ப்பும் மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வந்து இந்தியாவின் பெரும் மேதைகளுள் ஒருவராகவும் புரட்சியாளராகவும் உருவான அம்பேத்கரோ கோட்டும் சூட்டும் அணிந்தது அரையாடை உடுத்தியிருக்கும் சக இந்தியர்களை மிடுக்கான, நவீனத் தோற்றத்துக்கு உயர்த்தும் ஒரு செயல்பாட்டின் அடையாளம். இரண்டு செயல்பாடுகளும் மாறுபட்டவை போலத் தோன்றினாலும், அவற்றின் நோக்கம் ஒன்றே! சக மனிதர்களின் நிலை மேல் உள்ள அக்கறை!

அரசியல், ஆன்மிகச் செயல்பாடு
காந்தியின் தோற்றத்திலுள்ள எளிமையே எல்லோரையும் ஈர்க்கும் முதல் காரணி. இந்தியர்களுக்குப் பொதுவாகத் துறவிகள் மேல் ஒரு ஈர்ப்பு உண்டு. துறவிகள், ஆன்மிகவாதிகள் என்பதனால் மட்டுமல்ல அந்த ஈர்ப்பு. எல்லாவற்றையும் துறந்துவிட்டு எளிமையாக வாழும் அவர்கள் வாழ்க்கை மீது ஏற்படும் ஈர்ப்பு என்றும் கூட அதைச் சொல்லலாம். அதைப் போல மிகவும் வசதி படைத்தவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் ரொம்பவும் எளிமையாகக் காட்சியளித்தால் மக்கள் மத்தியில் அவர்களுக்கு ஒரு மரியாதை ஏற்பட்டுவிடும். ‘எவ்வளவு பெரிய பணக்காரர், அவர் போய் பேருந்தில் வருகிறாரே?’, ‘ஒரு மாநிலத்தின் முதல்வர் இவர். அவர் டி.வி.எஸ். ஃபிஃப்டியில் வருகிறாரே?’ என்றெல்லாம் மக்கள் ஒருசிலரை வியந்ததுண்டு. அவர்கள் ஊழல் செய்பவர்களா, வரிகட்டாதவர்களா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். தோற்றத்தின் எளிமையே அவர்களுக்கு ஒரு செல்வாக்கை ஏற்படுத்திவிடுகிறது. ஆனால், தோற்றத்தின் எளிமை ஏற்படுத்தும் ஈர்ப்பைத் தக்க வைக்கும் வாழ்க்கையை எல்லோரும் வாழ்கிறார்களா என்று சொல்ல முடியாது. காந்தியோ உண்மையைக் கொண்டு அந்தத் எளிமையை வலுவாக்கினார். அதுவே அவரது நீடித்த செல்வாக்குக்குக் காரணம். காந்தியின் எளிமை மற்றவர்களுடையது போலல்ல, அது உள்ளும் புறமும் காணப்படும் எளிமை. தன்னை மிக மிக எளியவராகக் கருதிக்கொண்டதனால் ஏற்பட்ட எளிமை. ஒரே சமயத்தில் அரசியல் செயல்பாடாகவும் ஆன்மிகச் செயல்பாடாகவும் அமைந்த எளிமை அது.

'அரையாடைப் பக்கிரி'யும் மாமன்னரும்
உலகெங்கும் பல நாடுகளில் மன்னராட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த காலம் அது. மக்களாட்சி தத்துவம் மிக மிக மெதுவாகவே அரும்புவிட்டுக்கொண்டிருந்தது. மன்னர்கள்தான் கடவுளர்களாகவும் மக்கள் அவர்களது அடிமைகளாகவும் நடத்தப்பட்டிருந்த நிலையிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியும் விடுபட்டிருக்கவில்லை. அந்தச் சூழலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு எளிய மனிதர், 'அரை நிர்வாணப் பக்கிரி' என்று அந்நாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்ட்டன் சர்ச்சிலால் இகழப்பட்ட ஒருவர், அதே அரை நிர்வாணக் கோலத்துடன் இங்கிலாந்தின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜை நேருக்கு நேராக அவரது அரண்மனையில் போய்ச் சந்தித்தது எளிமையின் ஒப்பற்ற அரசியல் செயல்பாடில்லாமல் வேறென்ன? வின்ஸ்ட்டன் சர்ச்சில் காந்தியைப் பற்றிச் சொன்னது, இந்தியாவில் காந்தி தலைமையிலான சுதந்திரப் போராட்டம் தனது அரசாண்மையைக் கேள்விகேட்டது போன்றவற்றால் காந்தியைச் சந்திப்பதைச் சற்றும் விரும்பாமல்தான் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இருந்தார். ஆனால், அரசியல் காரணங்களால் காந்தியை சந்தித்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு. அந்தச் சந்திப்பு குறித்துப் பத்திரிகையாளர்கள் காந்தியின் கேள்விகள் கேட்டனர். 'இப்படி அரையாடையுடன் மன்னரைப் போய்ச் சந்திப்பதில் உங்களுக்குத் தயக்கமில்லையா?' என்று ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு காந்தி சிரித்துக்கொண்டே, 'எனக்கும் சேர்த்துதான் மன்னரே உடையணிந்திருந்தாரே?' என்று கேட்டார்.

செலவு வைக்கும் எளிமையா?
தோற்றத்தில் மட்டுமல்ல, வாழ்க்கை முறையிலும் அவர் அதே எளிமையைக் கடைப்பிடித்தார். அவர் அறையில் அநேகமாக எந்த அறைக்கலனும் இருக்காது. சுவரில் ஒரு ஏசு படம் தொங்கிக்கொண்டிருக்கும் அவ்வளவுதான். உடைமையும் அதிகம் கிடையாது. தனக்கென்று ஏதும் சேர்த்துவைப்பது பாவம் என்று கருதினார். ரயில்களிலும் கப்பல்களிலும் மூன்றாம் வகுப்பிலேயே பயணித்தார். ரயில் பயணங்களின் போது காந்தியின் பாதுகாப்புக்காக அவருக்குத் தெரியாமல் ஒரு பெட்டி முழுவதிலும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து கட்சி அனுப்பும். இதனால்தான், ‘உங்கள் எளிமைக்கு நிறைய செலவாகிறது காந்திஜி’ என்று சரோஜினி நாயுடு போன்றவர்கள் காந்தியைக் கேலிசெய்வார்கள். ஆரம்பத்தில் நகைச்சுவைக்காகப் சொல்லப்பட்ட இந்த விஷயமே பிற்பாடு அவர் மீது அவதூறு செய்வதற்கான விஷயங்களுள் ஒன்றாக ஆகிப்போனது. காந்தியின் இயல்பே மூன்றாம் வகுப்பு எளிமைதான் என்றாலும் மூன்றாம் வகுப்பில் சென்றால்தான் ஏழை எளிய மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் வாழ்க்கைச் சிரமங்களை அறிந்துகொள்ள முடியும் என்பதும் கூட ஒரு நோக்கம்! கூடவே, தான் மூன்றாம் வகுப்பில் செல்வதன் மூலம் தனது செல்வந்தத் தொண்டர்கள் லட்சக் கணக்கானோரையும் அப்படிச் செல்ல வைத்தது, கூட்டிக் கழித்துப் பார்த்தால் அவரது எளிமைக்குக் கிடைத்த மகத்தான வெற்றி!

காந்தி காலத்திலும் சரி அதற்குப் பிறகும் சரி லட்சக் கணக்கான செல்வந்த காந்தியர்கள் தங்கள் சொத்துசுகங்களை உதறிவிட்டு காந்தியைப் போலவே எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டிருக்கின்றனர். காந்தியின் தொண்டர்களிடம் மட்டுமல்ல, அவரிடமிருந்து மாறுபட்ட கருத்தியல் கொண்டவர்களிடமும் அவரது எளிமை ஆதிக்கம் செலுத்தியிருப்பதற்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ஜீவா தொடங்கி இன்றைய நல்லகண்ணு வரை உதாரணம் காட்டலாம். வண்ணத்துப்பூச்சி விளைவுபோல இது காந்தி விளைவு!
(நாளை...)
 நன்றி: ‘தி இந்து’ (https://goo.gl/QOSqhq)

அலாவுதீனும் அற்புத சிகரெட்டின் காந்தியும்




இன்று மாலை 5.12-க்கு
அவன் பற்ற வைத்த
சிகரெட் புகையிலிருந்து
காந்தி வெளிப்பட்டார்

சற்றே தூக்கிவாரித்தான்
போட்டுவிட்டது அவனுக்கு
ராட்டையிலிருந்தோ
கைத்தடியிலிருந்தோ
மூக்குக் கண்ணாடியிலிருந்தோ
கழிப்பறையிலிருந்தோ
காந்தி வெளிப்பட்டிருந்தால்கூட
ஏற்றுக்கொண்டிருந்திருக்க முடியும் அவனால்
ஆனால்
சிகரெட் புகையிலிருந்தா?

ஷேக்ஸ்பியரின் ஹாம்லட்டைத் தட்டச்சிட
ஒரு குரங்குக்குள்ள
ஆயிரத்து ஐநூறு கோடி ஆண்டுகால
தற்செயல் வாய்ப்புகளுள் ஒன்றுபோல
இப்பிரபஞ்சத்தின்
சிகரெட் பிடிக்கும் கிரகங்களுள் ஒன்றில்
சிகரெட் பிடிக்கும் 20 கோடி சந்துகளில்
சிகரெட் பிடிக்கும் 200 கோடி பேர்கள்
இழுத்துவிட்ட 2000 கோடி புகை மண்டலங்களில்
ஒன்று இப்படி உருத்திரள
வாய்ப்புள்ளது என்றும் அவன் அறிவான்

தன்னை அவ்வுரு
இவ்வளவு சிந்திக்க வைத்தது
எரிச்சல் தரவே
கையால் புகைகாந்தியைக்
கலைக்க முயன்றான்

கலைந்து கலைந்து
ஒன்றுகூடினார் புகைகாந்தி

இப்போது நிச்சயமாயிற்று
2000 கோடியில் இது ஒன்றல்ல
ஒன்றில் ஒன்றுதான் இது

புன்னகை மாறாமல் இருந்த
அவ்வுருவை
வைத்த கண் வாங்காமல் பார்த்த அவனுக்குப்
புரிந்துபோயிற்று
அவர் ஏதோ பேசப் போகிறார் என்பதை

’புகைப்பிடித்தல் உடல் நலத்துக்குக் கேடு
புகைப்பிடித்தல் புற்றுநோயை ஏற்படுத்தும்’
என்றுதான் சொல்லப்போகிறார்
என்று நினைத்தால்
‘சிகரெட் கரைகிறது பார், வீணாக்காதே’
என்று மட்டும் சொல்லிவிட்டு
வாயை மூடிக்கொண்டார் புகைகாந்தி

’பாரேன், அவ்வளவு அக்கறை இருந்தால் 

கடைசி இழுப்புப் புகையில் 
வந்திருக்க வேண்டியதுதானே’
என்று கடுப்படித்துவிட்டுக் கிளம்பினான்
அவன் திரும்பிக்கூட பார்க்காமல்.

   - (30-01-2017)

Monday, January 30, 2017

ஆங்கிலேயர்களின் கையாளா காந்தி?


ஆசை
(‘காந்தி, ஆங்கிலேயரின் கையாள்’ என்று மார்க்கண்டேய கட்ஜு திரும்பத் திரும்பக் கூறிவரும் அவதூறுக்கு எதிராக ‘தி இந்து’ நாளிதழில் 14-03-2015 அன்று நான் எழுதிய கட்டுரை)

காந்தி, மதத்தை அரசியலில் கலந்தாரா? புரட்சியை மழுங்கடித்தாரா?
‘காந்தி ஏகாதிபத்தியக் கைக்கூலி’ என்ற வாசகம் ஒன்றும் நமக்குப் புதிதல்ல. இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்ததும் அதில் இன்றுவரை முன்னணியில் இருப்பதும் தீவிர இடதுசாரிகளே. காந்தியை அவதூறு செய்தல் என்ற ஒரு விஷயத்தில் மட்டும் இடதுசாரிகளும் வலது சாரிகளும் கைகோத்துக்கொள்வதுதான் விசித்திரம்.
இடதுசாரி அமைப்பொன்றில் ஒருவர் சேரும்போது பாலபாடமே காந்தி வெறுப்புதான் என்று மூத்த தோழர் ஒருவர் பகிர்ந்துகொண்டார். ‘இந்தியாவில் புரட்சி மலர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காகவும் ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்ட ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிதான் காந்தி’ என்பது அவர்களின் முதல் பாலபாடம். இந்த மூளைச்சலவையையெல்லாம் மீறிக் காலப்போக்கில் காந்தியைத் தான் அடையாளம் கண்டுகொண்டதாக அந்தத் தோழர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அது மட்டுமல்லாமல், “நாங்கல்லாம் அப்போ காந்தியை ஏகாதிபத்தியத்தோட கைக்கூலி அதுஇதுன்னு சொல்லிக்கிட்டுத் திரிஞ்சோம். காந்தி நம்ம ஆளுதாங்கிறது தாமதமாதான் தெரிஞ்சது. ஒருவகையில கம்யூனிஸ்ட் பழுத்தா காந்தியவாதி” என்று எண்பதுகளைத் தாண்டிய தோழர் ஒருவர் தன்னிடம் சொன்னதையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
இந்த வகையில் வயதில் பழுத்த நிலையில் ஒருவர் காந்தி எதிர்ப்பாளராக மாறியிருக்கிறார். உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியும் இந்தியப் பத்திரிகைகள் மன்றத்தின் முன்னாள் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜுதான் காந்திக்குக் கிடைத்த புதிய எதிர்ப்புவாதி/ அவதூறுவாதி.
கட்ஜுவின் குற்றச்சாட்டுக்களில் பிரதானமானவை இவை: 1. காந்தி எப்போதும் எல்லாவற்றிலும் மதத்தை நுழைத்தார். இந்து மதத்தையே முன்னிறுத்தினார். அரசியலில் இப்படி மதத்தைக் கொண்டுவந்ததால் ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு அவர் உடந்தையாக இருந்தார். ஆகவே, அவர் ஒரு ‘பிரிட்டிஷ் ஏஜென்ட்’.
2. புரட்சி இயக்கங்களையெல்லாம் மழுங்கடித்து, வன்முறையற்ற வழி என்று சொல்லிக்கொண்டு சத்தியாக் கிரகம் என்ற முட்டாள்தனமான பாதையை நோக்கி இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் திசைதிருப்பிவிட்டார் காந்தி. இதுவும் ஆங்கிலேயருக்கு உதவியது.
காந்தி இந்து மதத்தை முன்னிறுத்தினாரா?
இந்து மதத்தையும், இந்து மதத்தின் நூல்களையும் காந்தி புரிந்துகொண்ட விதம்போல் ஒரு சனாதனியால் புரிந்துகொள்ள முடியாது. காந்தி, மத நூல்களிலிருந்தும் மதங்களிலிருந்தும் தேவையான நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக்கொள்வார். அதனால்தான் கீதைக்கு காந்தி அளித்த விளக்கவுரை சனாதனிகளால் கடுமை யாக எதிர்க்கப்பட்டது.
அவர் இந்து மதத்தைத்தான் முன்னிறுத்தினார் என்பது உளறலின் உச்சம். காந்தியின் ஆசிரமத்தில் அவருடைய அறையின் சுவரில் தொங்கிய ஒரே ஒரு புகைப்படம் ஏசுவுடையது. ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தினாரேயொழிய எந்த ஆலயத்துக்குள்ளும் சென்று கடவுளை அவர் வழிபட்டதில்லை. ஒரு முறை காசியில் உள்ள கோயிலுக்குச் செல்ல நேரிட்ட போது, கோயில்களெல்லாம் அழுக்குகளின் கூடாரமாக இருப்பதாகச் சொன்னார். ஆனால், வாடிகனில் சிஸ்டீன் ஜெபக்கூடத்தில் ஏசுவின் சொரூபம் முன்பு நின்றபடி கண்ணீர் மல்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல, காந்தியவாதிகளாக இருந்த/ இருக்கும் கிறிஸ்தவப் பாதிரியார்களின் எண்ணிக்கை சொல்லி மாளாது. ஸ்டேன்லி ஜோன்ஸ் என்ற பாதிரியார் ‘ஏசு கிறிஸ்துவுக்குப் பின்னால் வந்தவர்களிலேயே கிறிஸ்துவின் குணாதிசயங்களை அதிகமாகக் கொண்ட ஒருவர் கிறிஸ்தவர் இல்லை என்பதுதான் விந்தை’ என்று காந்தியைக் குறிப்பிடுகிறார்.
அதேபோல் அவருடைய பிரார்த்தனைக் கூட்டங் களில் எல்லா மதங்களின் வேதங்களிலிருந்தும் வாசகங் கள் சொல்லப்படும் என்பது உலகறிந்த ஆனால், கட்ஜு அறியாத விஷயம். தன்னுடைய ‘ராமராஜ்யம்’ என்பது கிறிஸ்தவர்களுக்கு ‘கிறிஸ்தவ ராஜ்ய’மாகவும் முஸ்லிம்களுக்கு ‘கிலாஃபத்’தாகவும் ஒரே சமயத்தில் இருக்கும் என்றும், அது ஒரு சமத்துவ சமுதாயமாக இருக்கும் என்றும் சொன்னவர் அவர்.
‘காந்தி அரசியலில் மதத்தைக் கலந்தார்’ என்று அருந்ததி ராயில் ஆரம்பித்து கட்ஜு வரை ஒரே பாட்டாய்ப் பாடுகிறார்கள். மதம் என்பதைப் பிரார்த்தனைகளோடு நிறுத்திக்கொண்டவர் காந்தி. தான் சர்வாதிகாரியாக வந்தால் அரசியலிலிருந்து மதத்தை முற்றிலுமாக நீக்கிவிடுவேன் என்றார். எல்லா மதங்களுக்கும் பொது வானவர் என்பதால், நாத்திகர் நேருவைத் தனது அரசியல் வாரிசாகவும் இந்தியாவின் முதல் பிரதமராக வும் தேர்ந்தெடுத்தார் காந்தி.
கைக்கூலி இப்படித்தான் செய்வாரா?
காந்தி ஆங்கிலேயர்களின் கைக்கூலி என்றால், அந்நியத் துணிகள் உள்ளிட்டவற்றை அவர் ஏன் புறக்கணித்திருக்க வேண்டும்? வட்டமேசை மாநாட்டுக் காக காந்தி இங்கிலாந்து சென்றபோது, தனது ‘அந்நியத் துணி பகிஷ்கரிப்பு’இயக்கத்தால் வேலையை இழந்த ஆங்கிலேய மில் தொழிலாளர்களை அவர் சந்தித்ததற்கு வரலாற்று/ புகைப்பட ஆதாரங்களே இருக்கின்றன. காந்தியால் வேலை இழந்திருந்தாலும் அந்தத் தொழி லாளர்களுக்கு காந்தியின் மீது கோபம் இல்லை. ‘நாங்கள் இந்தியாவில் இருந்திருந்தால் உங்கள் பக்கம்தான் இருந்திருப்போம்’ என்று அவர்கள் காந்தியிடம் சொல்லியிருக்கிறார்கள். இப்படி, அந்நியத் துணி பகிஷ்கரிப்பு, உப்பு சத்யாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றால் பிரிட்டனின் பொருளாதாரமே கிட்டத்தட்ட முடங்கிப்போகவில்லையா? இதையெல்லாம் ஆங்கிலேயக் கைக்கூலிதான் செய்தார் என்று சொல்கிறீர்களா கட்ஜு?
1930-ல் ஒத்துழையாமை இயக்கம் தொடங்குவதற்கு முன்பு வைஸ்ராய் இர்வின் பிரபுவுக்கு ‘பிரிட்டிஷ் கைக்கூலி!’ எழுதிய கடிதத்திலிருந்து சிறு பகுதியைப் பாருங்கள்:
(உங்கள் அரசின்) நிர்வாகம் உலகத்திலேயே மிக அதிகமாகச் செலவாகும் ஒன்று என்று என்னால் நிரூபிக்க முடியும். உங்கள் சம்பளத்தையே பாருங்கள்: மாதம் ஒன்றுக்கு 21,000 ரூபாய்க்கு மேல் (சுமார் 1,750 பவுண்டுகள்) உங்கள் சம்பளம். இதைத் தவிர, மறைமுகமான வேறு பல தொகைகளும் சேர்கின்றன. தினம் ஒன்றுக்கு 700 ரூபாய்க்கு மேல் நீங்கள் பெறுகிறீர்கள். இந்தியாவில் ஒரு மனிதனின் சராசரி வருமானமோ இரண்டு அணாவுக்கும் கம்மி. எனவே, இந்தியனின் சராசரி வருமானத்தைப் போல் ஐயாயிரம் மடங்குக்கு மேல் நீங்கள் பெறுகிறீர்கள். பிரிட்டிஷ் பிரதம மந்திரியோ பிரிட்டிஷ்காரனின் சராசரி வருமானத்தைப் போல் தொண்ணூறு மடங்குதான் பெறுகிறார். நீங்கள் பெறுகிற சம்பளம் உங்களுக்குத் தேவையில்லை என்பதை நான் அறிவேன்… இப்படிப் பட்ட ஏற்பாட்டுக்கு இடம்தரும் ஒரு முறையை முன்பின் பாராமல் அழித்துவிடுவதே நியாயம்.”
(‘காந்தி வாழ்க்கை’; மொழிபெயர்ப்பு: தி.ஜ.ர.)
மவுண்ட்பேட்டனிடம் அவரது ஆடம்பர மாளிகையை விட்டு வெளியேறும்படியும், அந்த மாளிகையை அகதிகளுக்கான மருத்துவமனையாக மாற்றிவிடும் படியும் கேட்டுக்கொண்டதும் அதே ‘பிரிட்டிஷ் கைக்கூலி’தான்!
எந்தப் புரட்சியை மழுங்கடித்தார்?
ஆசாத், பகத்சிங் போன்றோரின் தியாகங்கள் மகத்தானவை. ஆனால், அவர்களின் வன்முறைப் பாதையை காந்தி அங்கீகரிக்கவில்லை. ஒரு செயலின் பலன் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அந்தச் செயல் செய்யப்படும் விதமும் முக்கியம் என்றவர் அவர். ஆயுதம் எடுத்துப் போராடியவர்களைக் கண்டல்ல, அகிம்சையைக் கண்டுதான் ஆங்கிலேயர்கள் நடுநடுங்கினார்கள்.
ஒரே ஒரு சம்பவம்: உப்பு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கிய பின் காந்தி கைதுசெய்யப்படுகிறார். ஆனால், அவருடைய தொண்டர்கள் போராட்டத்தைத் தொடரும் வகையில் உப்பெடுக்கச் செல்கிறார்கள். அவர்களுக்கு எதிரில், அவர்கள் உப்பெடுக்க முன்வந்தால், அவர்களை அடித்து நொறுக்கப் பெரும் படையொன்று தயாராக நிற்கிறது. தொண்டர்கள் அஞ்சாமல் முன்செல்கிறார்கள். முன்செல்பவர்கள் அடித்து நொறுக்கப்படுகிறார்கள். ஆனாலும், தொடர்ந்து தொண்டர்கள் முன்செல்கிறார்கள். அடித்து நொறுக்கப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் அடிப்பவர் களுக்குக் கை நடுங்க ஆரம்பிக்கிறது. ஆனால், காந்தியின் தொண்டர்கள் நடுங்கவில்லை. இதைவிட என்ன புரட்சி வேண்டும்?
எப்படிப்பட்டப் போராட்டத்தையும் வன்முறையையும் எதிர்கொள்ளும் துணிவு, நீண்ட காலப் போராட்ட வாழ்வின் விளைவாலும் அசாத்தியமான மனப்பக்கு வத்தாலும் காந்திக்கு இயல்பாகவே இருந்தது. ஆனால், அந்தத் தொண்டர்களுக்கு இவ்வளவு சக்தி, மன உறுதி எங்கிருந்து வந்தது? அதுதான் காந்தியின் சக்தி. எல்லோருக்குமான மன உறுதியைக் கதிர்வீச்சுபோல் பரப்பும் சக்தி அது. அந்த சக்தியைக் கண்டுதான் ஆங்கிலேயர் அதிகம் அஞ்சினார்களே தவிர, ஆயுதங்களையோ ஆயுதப் போராட்டங்களையோ கண்டு அல்ல.
உண்மையில், காந்தியின் காலத்துக்கு முன்னாலும், அவரது காலத்திலும் எத்தனையோ ஆயுதக் கிளர்ச்சிகளை நசுக்கியிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள். ஆகவே, ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ய’த்தைக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களை வன்முறைப் புரட்சி அடித்துத் துரத்தியிருக்கும் என்றும், அதை காந்திதான் மழுங்கடித்தார் என்றும், இதற்காகவே ஆங்கிலேயர்கள் காந்தியைக் கொண்டுவந்தார்கள் என்றும் சொல்வதைவிட அபத்தம் வேறெதுவும் இருக்க முடியுமா?

புதிய தொடர் - என்றும் காந்தி!


ஆசை

சமீபத்தில் நடந்து முடிந்த மெரினா போராட்டத்தில் சில தனிச்சிறப்பு மிக்க அம்சங்களை நாம் கண்டிருக்கிறோம். இந்தியாவில் தலைமை இல்லாமல் நிகழ்ந்திருக்கும் மாபெரும் போராட்டம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். ஏன் தலைமை இல்லாமல் இந்தப் போராட்டம் நிகழ்ந்தது? அரசியல் தலைவர்களையும் பிற அமைப்புகளின் தலைவர்களையும் இந்த மாணவர்கள் ஏன் தங்கள் பக்கத்திலேயே சேர்க்கவில்லை? என்ற கேள்விகளுக்கு விடை ஒன்றும் அவ்வளவு கடினமல்ல. எல்லாத் தலைவர்களுமே மக்களிடம், குறிப்பாக இளைய சமுதாயத்திடம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்கள். சுயநலமும் குடும்ப நலமும் பீடித்த, ஊழலால் அழுகிப்போன, மதவாதத்தையும் சாதியவாதத்தையும் அடிப்படையாகக் கொண்ட, தங்கள் வளர்ச்சிக்கு வன்முறையை ஆயுதமாகக் கொண்ட சந்தர்ப்பவாதத் தலைவர்களைக் கண்டு கண்டு சலித்துப் போய் வெடித்த இளைஞர்களின் கோபமே அரசியல் தலைவர்களைத் தங்கள் பக்கம் அண்ட விடாமல் துரத்தியடித்தது.
கூட்டங்களைத் திரட்டுவதொன்றும் கட்சிகளுக்குப் புதிதல்ல. கட்சிக் கொள்கையின் பேரிலோ அல்லது பணம் வாங்கிக்கொண்டோ வரும் தொண்டர்களைக் கொண்டு ஒரு கூட்டத்தை அரசியல் கட்சிகளால் கூட்டிவிட முடியும்தான். அப்போதும் மெரினா போராட்டத்தில் கூடிய கூட்டத்தின் முன் சிறு துளியாகத்தான் கட்சிகளின் கூட்டங்கள் இருக்கும். மெரினா போராட்டமோ உலகம் தழுவிய ஆதரவைப் பெற்ற போராட்டம். எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அமைப்புக்கும் பெருங்கனவு இதுபோன்ற ஒரு கூட்டத்தைத் திரட்டுவதே. ஒரு வகையில் பலருக்கும் பெரிய அரசியல் அறுவடை. ஆற்றில் கரைபுரண்டு ஓடிவரும் நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கோடு விவசாயி பார்ப்பார் என்றால் குளிர்பான நிறுவனங்களும் மினரல் வாட்டர் நிறுவனங்களும் கொள்ளை லாபக் கண்ணோடுதான் பார்ப்பார்களல்லவா! அந்தக் குளிர்பான நிறுவனங்களின் பார்வையில்தான் கட்சிகள் இதைப் போன்ற கூட்டங்களை பெரும் ஏக்கத்தோடு பார்க்கும். ஆனால், சந்தர்ப்பவாதிகளுக்கு இப்படியொரு கூட்டத்தால் பயனேதும் இல்லாமல் போனதற்கான காரணங்களை இன்றைய அரசியல் தலைமைகள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அறவழியில் மெரினா போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் கூட்டத்தினரில் அநேகமாக எவருமே காந்தியின் பதாகையை ஏந்தியிருக்கவில்லைதான். ஆனால், இந்தப் போராட்டத்தைப் பெருவியப்புடன் பார்த்துக்கொண்டிருந்த இந்தியாவின் பிற பகுதியினருக்கும் உலகத்துக்கும் காந்திதான் உடனடியாக நினைவுக்கு வந்தார். காந்தியின் பெயரும் உருவமும் நினைவும் ஒரு போராட்டத்துக்கு தார்மிக வலிமையையும் உலகினரின் பரிவையும் ஒருங்கே பெற்றுத்தருபவை என்பதற்கான அடையாளமே இது. காந்தியைப் பற்றிய தொடரை ‘ஜல்லிக்கட்டு’க்கான போராட்டத்தைக் குறிப்பிட்டு ஆரம்பிக்க வேண்டுமா என்று பலருக்கும் கேள்வி எழலாம். இந்தியாவில் அறவழியில் எந்தப் போராட்டம் நடந்தாலும் காந்தி அங்கே தொடர்புடுத்தப்படுகிறார். அதற்கான சமீபத்திய உதாரணத்துடன் தொடங்குவது பொருத்தமாக இருக்கும் அல்லவா?

நம்பகத்தன்மை
இன்றைய தலைவர்கள் மீது நாம் நம்பிக்கை இழக்கிறோம். ஆனால், 69 ஆண்டுகளுக்கு முன்பு தன் மூச்சை நிறுத்திக்கொண்ட ( நிறுத்தப்பட்ட என்பதுதான் இன்னும் பொருத்தமாக இருக்கும்) ஒரு தலைவரை நாம் இன்னும் ஏன் நம் தலைவராகக் கருதுகிறோம்? மதுவுக்கு எதிரான போராட்டம், பழங்குடிகளை அழிக்கும் அணைக் கட்டுமானங்களுக்கு எதிரான போராட்டங்கள், ஊழலுக்கு எதிரான போராட்டங்கள், எல்லாவற்றுக்கும் ஏன் காந்தியின் முகம் தேவைப்படுகிறது? இதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் மிக மிக எளிய காரணம் ஒன்றும் உண்டு. அதுதான் ‘நம்பகத்தன்மை’.
தற்போதைய தலைவர்களிடம் இல்லாததும் தலைமைக்குஅவசியமானதுமான முதன்மைப் பண்பு நம்பகத்தன்மை. ‘சீஸரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்’ என்று சொல்வார்கள். ஒரு தலைவரும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு நாட்டில் அல்ல, இரண்டு நாடுகளில் மாபெரும் போராட்டங்களை நடத்தியவர் காந்தி. இந்தியா, தென்னாப்பிரிக்கா இரண்டுமே பன்மைக் கலாச்சாரத்தைக் கொண்டவை. அப்படிப்பட்ட நாடுகளில் பெரும் மக்கள் திரளை காந்தியால் திரட்ட முடிந்ததற்கு அடிப்படைக் காரணமே அவரது நம்பகத்தன்மைதான். காந்தியிடம் இந்த நம்பகத்தன்மை ஒரே நாளில் உருவாகிவிடவில்லை. அதற்கான விதைகள் அவருடைய சிறுவயதிலேயே தூவப்பட்டுவிட்டன. முளைவிட்ட விதைகளை இளமைப் பருவத்தில் மிகுந்த அக்கறையுடன் பல்வேறு அக, புற போராட்டங்கள் மூலம் வளர்த்தெடுத்தார். தான் வளர்த்த செடிகளை, தனது முதுமைப் பருவத்தில் தேசத்துக்கே நிழலும் கனியும் தரும் பெருமரங்களாக மாற்றினார். அப்படி காந்தி வளர்த்து நம்மிடம் விட்டுச்சென்ற மரங்கள் இன்னும் நிழலும் கனிகளும் நமக்குத் தந்துகொண்டிருக்கின்றன என்றாலும் கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் அந்த மரங்களை நாம் வாட விட்டுக்கொண்டிருக்கிறோம். இப்படி, காந்தி கட்டியெழுப்பிய நம்பகத்தன்மையை உருவாக்கிய கூறுகள்தான் இந்தத் தொடரின் மையம்.

ஏன் காந்தி?
காந்தி வாழ்ந்த காலத்தில் கண்ணுக்குத் தெரிந்த எதிரி ஒருவர்தான் (அவர் மனிதர்கள் யாரையும் எதிரியாகக் கருதியதில்லை என்றாலும்). அது ஆங்கிலேயர்தான். அது தவிர நமக்குள்ளே இருக்கும் எதிரிகளும் உண்டு. தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மதப்பிரிவினைவாதம் ஆகியவைதான் அந்த எதிரிகள். எதிரிகள் தரப்பின் எண்ணிக்கை வேண்டுமானால் அப்போது குறைவாக இருந்திருக்கலாம். ஆனால், வலிமையும் தீமையும் நிறைந்த எதிரிகள் அவர்கள். இந்த எதிரிகளை எதிர்த்துதான் காந்தி தனது வாழ்நாள் முழுவதும் போராட்டம் நடத்தினார். ஆனால், இந்தியாவும் மனித குலமும் சந்திக்கும் எதிரிகள் தரப்புகளின் எண்ணிக்கை காந்தியின் காலத்துக்குப் பிறகுதான் பல மடங்காக அதிகரித்தன, அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இந்த எதிரிகளை எதிர்க்க நம்மிடையே ஆன்ம பலம் கொண்ட தலைவர்கள் அநேகமாக யாரும் இல்லை என்பதே உண்மை. காந்தியின் காலத்துக்குப் பிறகு முன்பைவிட பிரம்மாண்டமாக உருவெடுத்த எதிரிகளான முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், சுற்றுச்சூழல் அழிப்பு, போர்கள் முதலான சர்வதேச எதிரிகளையும் இந்தியர்களிடையே இன்னும் வலுகுறையாமல் இருந்துகொண்டிருக்கும் எதிரிகளான தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மதப்பிரிவினைவாதம் போன்றவற்றையும் எதிர்கொள்ள காந்தியின் வாழ்க்கை நமக்குப் பெரிதும் உதவக்கூடும். அதற்காகத்தான் காந்தி நமக்கும் உலகுக்கும் திரும்பத் திரும்பத் தேவைப்படுகிறார்.

வாழ்க்கை வரலாறு அல்ல, சுருக்கமான அறிமுகம்
காந்தியை இப்படியொரு மாபெரும் தலைவராக இந்தியாவும் உலகமும் கருதக் காரணம் யாவை, அதற்கு அடிப்படையாக அமைந்த அவரது பண்புகள், கோட்பாடுகள், செயல்பாடுகள் யாவை என்பதையெல்லாம் ஒவ்வொன்றாக இந்தத் தொடரில் நாம் பார்க்கப் போகிறோம். ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காந்தி அளவுக்கு இடைவிடாது செயல்பட்ட தலைவர்கள் உலக வரலாற்றில் மிகவும் குறைவு. அவ்வளவு செயல்பாடுகளுக்கு மத்தியிலும் அவர் எழுதிய நூல்கள், பத்திரிகைக் கட்டுரைகள், கடிதங்கள், உரைகள் போன்றவற்றின் தொகுப்பே நூறு பெரிய வடிவத் தொகுதிகளாக ‘Collected Works of Mahatma Gandhi’ என்று ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. தமிழிலும் ‘மகாத்மா காந்தியின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகள்’ 20 தொகுதிகளாக வெளியாகியிருக்கிறது. இயேசு கிறிஸ்து, முகம்மது நபி போன்றோருக்கு அடுத்தபடியாக காந்தியைப் பற்றிய நூல்கள்தான் அதிகம் வெளியாகியிருக்கிறது என்பார்கள். அப்படியும் தீராமல் ஆண்டுதோறும் ஏராளமான நூல்கள் காந்தியைப் பற்றி வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை வெளிநாட்டினர் எழுதுபவை. இவ்வளவு செயல்பாடுகளும் எழுத்துகளும் கொண்ட காந்தியை ஒரு சிறு தொடரில் அடக்குவது கடினம். ஆகவே, காந்தியை வரையறுக்கக்கூடிய முக்கியமான அம்சங்கள், அவரது கோட்பாடுகள், செயல்பாடுகள், அவர் செலுத்திய தாக்கம் போன்றவற்றிலிருந்து ஒருசிலவற்றைப் பற்றி இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோமே தவிர காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அல்ல. ஒரு வகையில் ‘தொடக்க நிலையினருக்கான காந்தி’ என்று கூட இந்தத் தொடரைச் சொல்லலாம். காந்தியின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்குத் தமிழிலேயே ஏராளமான நூல்கள் கிடைக்கின்றன. அவற்றில், காந்தியின் ‘சத்திய சோதனை’ (நவஜீவன் வெளியீடு), காந்தியின் ‘தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்’ (காந்திய இலக்கியச் சங்கம் வெளியீடு), லூயி ஃபிஷரின் ‘காந்தி வாழ்க்கை’ (தி.ஜ.ர-வின் மொழிபெயர்ப்பு, பழநியப்பா பிரதர்ஸ் வெளியீடு), வின்சென்ட் ஷீன் எழுதிய ‘மகாத்மா காந்தி: மகத்தான வாழ்வின் வரலாற்றுச் சுருக்கம்’ (கே. கணேசன் மொழிபெயர்ப்பு, பப்ளிகேஷன் டிவிஷன் வெளியீடு), ராமச்சந்திர குஹாவின் ’தென்னாப்பிரிக்காவில் காந்தி’ (சிவசக்தி சரவணன் மொழிபெயர்ப்பு, கிழக்கு பதிப்பகம்), ரொமெய்ன் ரோலந்தின் ‘வாழ்விக்க வந்த காந்தி’ (ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு, கவிதா வெளியீடு), போன்றவற்றைப் படித்துப் பார்க்கலாம்.

இனி, காந்தியத்துக்குள்ளே ஒரு சிறு சுற்றுலா செல்லலாமா?
(நாளை தொடரலாம்...)
 - நன்றி: ‘தி இந்து’ (https://goo.gl/6rmxZh)

துப்பாக்கித்தனத்தை வீழ்த்தும் உடல்


(காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று ‘தி இந்து’ இணையதளத்தில் வெளியாகியிருக்கும் எனது கவிதை)

அன்றொரு துப்பாக்கி நீண்டது
உலகின் மிகமிக எளிய
இலக்கொன்றை நோக்கி

துப்பாக்கித்தனத்தையும் தாண்டி
தன் இலக்குக்கு
முறையாக மரியாதைகள்செய்துவிட்டே
நீண்ட துப்பாக்கிதான் அது

எவ்வளவு நல்ல துப்பாக்கி அது
என்று இன்றும் சிலாகிக்கப்படுவதுண்டு

இலக்கின் உடல் மீது
 
தனிப்பட்ட கோபம் ஏதுமில்லை துப்பாக்கிக்கு
ஆனால் அவ்வுடலின்
 
விரிந்த கைகள்…
'உனக்கு விரிந்த கைகளில்லை’
என்றல்லவா
இடைவிடாமல் சொல்கின்றன
துப்பாக்கிக்கு

எந்த அளவுக்கு முடியுமோ
அந்த அளவுக்குச் சுருங்கி
எந்த அளவுக்கு முடியுமோ
 
அந்த அளவுக்கு இறுகிப்போய்த்
தன்னைப் பற்றியிருக்கும் கைகளையே
 
என்றும் விரும்பும் துப்பாக்கி

அதுமட்டுமா
‘துப்பாக்கியை என்றுமே நான் வெறுத்ததில்லை
துப்பாக்கித்தனத்தையே வெறுக்கிறேன்.
வா, துப்பாக்கியே உன்னை அணைத்துக்கொள்கிறேன்’
என்று சொல்லிக்கொண்டு
 
அணைக்க முயல்கின்றன அந்தக் கைகள்

துப்பாக்கிக்கும் கருணைசெய்வதான
கடவுள் பிம்பத்தை
 
அந்த எளிய இலக்கின் உடலுக்கு
அதன் விரிந்த கைகள்
 
எப்போதும் வழங்கிக்கொண்டிருப்பதை
எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்
ஒரு துப்பாக்கியால்?
 

இப்படியெல்லாம்
பிரபஞ்சம் அளாவும்
 
விரிந்த கைகளின் பாசாங்கு
துப்பாக்கிக்கு இல்லை
ஒரே புள்ளி
பிரபஞ்சத்தை இல்லாமலாக்கிவிடும்

இலக்கு நோக்கி நீள
இதற்கு மேலா காரணம் வேண்டும்?

ஒன்று
இரண்டு
 
மூன்று…

உலகின் துப்பாக்கித்தனத்தைக் குறிவைத்து
வீழ்ந்துகொண்டிருக்கின்றன அன்றிலிருந்து
உலகின் மிகமிக எளிய இலக்கின்
விரிந்த கரங்கள்

 - நன்றி: ‘தி இந்து’ (https://goo.gl/DvTBlK)

கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: 


Wednesday, January 25, 2017

புரட்சிக்கு நேரமில்லை


(‘தி இந்து’ தமிழ் நாளிதழில் 27-01-2017 அன்று வெளியான எனது கவிதை இது)


என் மனைவி
என் பிள்ளை
என் வீடு
என்றிருக்கும் சின்னதோர் கடுகுள்ளத்தான் நான்
புரட்சிக்கு நேரமில்லை எனக்கு

புரட்சிக்கு பஸ் பிடிக்க வேண்டும்
புரட்சிக்கு ரயில் பிடிக்க வேண்டும்
புரட்சிக்குக் குறைந்தபட்சம் ஆட்டோவாவது பிடிக்க வேண்டும்

புரட்சிக்கு இட்டுச் செல்லும் ஆட்டோக்காரர்கள்
கேட்கும் கட்டணமோ மிக அதிகம்
புரட்சிக்கு இலவசம் என்ற வாசகம் கொண்ட
ஆட்டோக்காரர்களைத் தேடவும் நேரமில்லை எனக்கு
ஏற்கெனவே அவற்றை
ஆக்கிரமித்திருப்பார்கள் புரட்சியாளர்கள்

புரட்சிக்கு கால்டாக்ஸிகள் வருவதில்லை
அதனால் லாபமேதுமில்லை அவர்களுக்கு
புரட்சிக்குச் சிறப்புப் பேருந்துகளும்
சிறப்பு ரயில்களும்
விடப்படுவதில்லை

கைதொடும் தூரத்தில் புரட்சி நடந்தால்
வசதியென்றாலும்
புரட்சிகள் இப்போதெல்லாம்
நேரலை ஒளிபரப்பாய் வருவது அதைவிட வசதி

புரட்சிக்குச் செல்லும் பாதைகளைப் போய்ச் சேர விடாமல்
வீட்டைச் சுற்றியே தடுப்புகளும்
முள்வேலிகளும் நடப்பட்டிருப்பதால்
புரட்சிக்குச் செல்வதொன்றும் அவ்வளவு எளிதில்லைதான்.

எல்லாவற்றுக்கும் மேலாக
புரட்சிக்கு எனக்கு நேரமில்லை.
என்
 மனைவி
என் பிள்ளை
என் வீடு
என்றிருக்கும் சின்னதோர் கடுகுள்ளத்தான் நான்.
 - நன்றி ‘தி இந்து’

Friday, January 6, 2017

ரஹ்மான்: தித்திக்கும் தீ! - ஏ.ஆர். ரஹ்மானின் 50-வது பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை



ஆசை
(ஏ.ஆர். ரஹ்மானின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு ‘தி இந்து’ நாளிதழின் ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது.)

தமிழ்த் திரையிசையின் தொடக்க காலம் என்பது கர்னாடக சங்கீதத்தின் நீட்சியாகவே இருந்தது. சற்று மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதமும் எட்டிப்பார்த்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தின் முக்கியமான பிரதிநிதிகள் எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமனாதன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு போன்றோர். 1930-களில் தொடங்கி 1950-களின் தொடக்கம் வரை இந்த மரபு தொடர்ந்தது. அதன் அடுத்த கட்டம் மெல்லிசை. கர்னாடக சங்கீதம், மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதம் ஆகியவற்றை எளிய வடிவில் இனிமையான மெட்டுக்களில் அளித்ததன் மூலம் திரையிசை அனைத்துத் தரப்பு மக்களிடமும் போய்ச் சேர்ந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணை, கே.வி. மகாதேவன் ஆகியோர் இந்தக் காலகட்டத்தின் பிரதான நாயகர்கள். எனினும் மக்களிடம் அதிகச் செல்வாக்கை எம்.எஸ்.விஸ்வநாதன் ஏற்படுத்தினார். இந்தப் பரிணாமத்தில் அடுத்த கட்டத்தில் பல நாயகர்கள் கிடையாது; ஒரே ஒருவர் மட்டுமே. அவர்தான் இளையராஜா. பரந்து விரிந்த ஆலமரத்தின் கீழே பிற தாவரங்கள் ஏதும் முளைக்காது என்பதுபோல இளையராஜாவின் கலைக்கு ஈடுகொடுக்க இன்னொரு போட்டியாளர் இல்லாத காலம். அப்போது வந்த மற்ற இசையமைப்பாளர்களின் ஒருசில நல்ல பாடல்கள் கூட ராஜாவின் இசை என்றே மக்கள் நினைக்கும் அளவுக்கு அவரது தாக்கம் இருந்தது. ‘கண்ணுக்குள் நூறு நிலவா’, ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு’, ‘ஒரு காதல் தேவதை’ போன்றவை உதாரணங்கள். மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதம், நாட்டுப்புற இசை, கர்னாடக சங்கீதம் ஆகியவற்றின் கூறுகள் முந்தைய மெல்லிசை காலகட்டத்தை விட அதிக அளவில் ராஜாவின் இசையில் இடம்பெற்றன.

இப்படிப்பட்ட தமிழ்த் திரையிசை மரபில் ஏ.ஆர். ரஹ்மானின் வரவு முற்றிலும் மாறுபட்டது. அவரது முன்னவர்கள் மேற்கத்திய, இந்திய சாஸ்திரிய மரபுகளையும் இந்திய நாட்டுப்புற மரபுகளையும் திரையிசையில் கலந்து கொடுத்தார்கள் என்றால் சர்வதேச வெகுஜன இசை, சர்வதேச நாட்டார் இசை, சூஃபி இசை போன்றவற்றால் பெற்ற உந்துதல்களையே ரஹ்மான் அதிகமாகத் தனது இசையில் வழங்கியிருப்பார். அதனால்தான், இந்திய இசையில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு முன்பு எவ்வளவோ மேதைகள் (இவர்களில் ஏ.ஆர். ரஹ்மானை விட மிகச் சிறந்தவர்களாகக் கருதப்படும் மேதைகள்) இருந்தாலும் ஏ.ஆர். ரஹ்மானே உலக அளவில் அதிகம் பிரபலமடைந்தார். சர்வதேசத்தவர்களுக்கும் சற்றே பரிச்சயமான இசை வடிவம் ஏதாவது அவரது இசையில் இருக்கும். இந்துஸ்தானி, கர்னாடக இசை போன்றவற்றை வெளிநாட்டினரால் மிகுந்த சிரமத்துடனேயே அணுக முடிவதற்குக் காரணம் அவை அவர்களுக்குப் பரிச்சயமான வடிவத்தில் இல்லை என்பதுதான்.      


தமிழ்த் திரையிசைக்கென்றே ஒரு கிளாஸிக்கல் அந்தஸ்தை ஆரம்ப காலத்திலிருந்து எல்லா இசையமைப்பாளர்களும் வழங்கிவந்தார்கள். அந்த அந்தஸ்தை இளையராஜா இன்னும் உயர்த்தினார். நாட்டுப்புற இசையும் கலந்த ஒரு கிளாஸிக்கல் அந்தஸ்து என்பது இளையராஜாவின் மகத்தான சாதனை. இந்த நேரத்தில் ஏ.ஆர். ரஹ்மான் வருகிறார். ‘ரோஜா’ பாடல்கள் தமிழ்நாடு முழுவதிலும் அல்லாமல் இந்திய அளவிலும் பெருவெற்றி அடைகின்றன. அந்தக் காலகட்டத்தில் ரஹ்மானை ஏற்றுக்கொண்டு பிரபலப்படுத்தியவர்கள் யார் என்று பார்த்தால் பதின்பருவத்தினரும், கல்லூரி மாணவர்களும்தான். மற்றவர்களின் உலகத்தில் எம்.எஸ்.வி., என்ற தெய்வத்தை அல்லது ராஜா என்ற தெய்வத்தைத் தவிர வேறு எந்த தெய்வத்துக்கும் இடம் கிடையாது. ஏ.ஆர். ரஹ்மானின் இசையைக் கேட்டு இளைய தலைமுறை சன்னதம் பிடித்து ஆடிக்கொண்டிருந்தபோது இந்தக் கட்டுரையாளர் உட்பட, பலரும் மெல்லிய புன்னகையுடனே கடந்தோம். ‘இதெல்லாம் ஆறு மாதம் வரைக்குமான இசை. இசை கூட இல்லை சத்தம்’ என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. இன்றும் அப்படி ஏ.ஆர். ரஹ்மானைப் பார்க்கும் பலரும் இருக்கிறார்கள். குரல், இசை, இனிமை என்று ஒருவித மென்மைத்தன்மையுடன் அல்லது உள்ளூர்த்தன்மையுடனே நம் காதுகளும் ரசனையும் பழக்கப்பட்டுவிட்டிருந்தது ஒரு காரணம்.

எம்.எஸ்.வியின் ராஜ்ஜியத்தில் ராஜா நுழைந்தபோது ராஜாவைப் பற்றி எம்.எஸ்.வியிடம் யாரோ விமர்சனம் செய்ததாக ஒரு பேச்சு உண்டு. அப்போது அந்த நபரிடம் எம்.எஸ்.வி., ‘இப்போதுதான் அந்தப் பையன் வந்திருக்கிறான். அவன் முதலில் வரட்டும். அவனை வேலைபார்க்க விடுங்கள்’ என்று கடிந்துகொண்டாராம். ஒவ்வொரு மரபும் மாறும்போது ஒவ்வொரு தலைமுறையும் மாறும்போது நேரிடக் கூடியதுதான் இது. ஆனால், ராஜாவை எம்.எஸ்.வி. எதிர்கொண்டதுபோல் புதியவர்களை மற்ற எல்லோரும் எதிர்கொள்வதில்லை. ஏன், ஏ.ஆர். ரஹ்மானை ஆரம்பத்தில் எம்.எஸ்.வி.யே ‘வெறும் சத்தம்தான்’ என்று விமர்சித்ததாகச் சொல்வார்கள். ஒரு புதுமை இன்னொரு புதுமையை எதிர்கொள்ளும் காலத்தில் மரபாக ஆகிவிட்டிருக்கும். மரபாக ஆகிவிட்ட முன்னாள் புதுமையே சமூகத்தின் இயல்பாகவும் மனநிலையாகவும் மாறிப்போகும்; அப்போது சமூகத்தின் மனநிலையின் கதவுகளை மோதித் திறக்கும் வலு எதற்கு இருக்கிறதோ அதுதான் புதுமைகளின் தொடர்ச்சியில் தன்னை இணைத்துக்கொள்ளும் இன்னொரு புதுமை. எம்.எஸ்.வி., இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் எல்லோரும் அப்படிப்பட்ட புதுமைகள்தான்.

ஏ.ஆர். ரஹ்மான் சத்தம்தான் என்ற எண்ணத்தில் நாம் இருப்போமென்றால் இசை குறித்து மிகவும் குறுகலான ஒரு எண்ணத்துடன் நாம் இருக்கிறோம் என்று அர்த்தம். வீணையும் இசைதான், பறையும் இசைதான். ரயில் செல்லும் சத்தத்தின் தாளகதியை உணர்ந்துகொண்டால் அதுவும் இசைதான். ஆயிரக் கணக்கான ரசிகர்கள் உன்மத்த வெறியில் இருக்கும்போது அந்த உன்மத்தத்தை மேலும் மேலும் கூட்டும் விதத்தில் அரக்கத்தனமாக கித்தார் மீட்டி உச்ச ஒலியில் பாடும் ராக் பாடல்களும் இசைதான். கைதட்டித் தட்டிப் பாடும் கவ்வாலியும் இசைதான். அவரவர் வாழ்க்கைச் சூழலையும் போல்தான் அவரவரின் இசையும் இருக்கும். இசையில் வகைகள்தான் உண்டே ஒழிய ஏற்றத்தாழ்வு கிடையாது. உயிரியலைப் போலச் சமூகத்தைப் போல பன்மைத்தன்மை என்பது இசைக்கும் வளம் சேர்க்கும். குறுகலான, இறுக்கமான வரையறைகள் இசையைப் புனிதமாக்கலாம்; ஆனால் ஜனநாயகப்படுத்தாது, வளம் கூட்டாது. இந்தக் கண்ணோட்டத்தில்தான் ஏ.ஆர். ரஹ்மானை இந்திய, தமிழ்த் திரையிசை மரபில் அணுக வேண்டும்.

ரஹ்மானிடம் மென்மையும் உண்டு. ‘காதல் ரோஜாவே’, ‘நேற்று இல்லாத மாற்றம்’, ‘என் வீட்டுத் தோட்டத்தில்’, ‘என் மேல் விழுந்த மழைத்துளியே’, ‘தொடத் தொட மலர்ந்ததென்ன?’, ‘பச்சைக் கிளிகள் தோளோடு’, ‘வெண்ணிலவே வெண்ணிலவே’, ‘பூங்காற்றிலே’, ‘முன்பே வா என் அன்பே வா’, ‘ நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன்’, ‘இன்னும் கொஞ்ச நேரம்’, ‘மலர்கள் கேட்டேன்’, ‘தீரா உலா’ என்று ஏராளமான உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். நரம்பை இறுக்கிக்கட்டும் வன்மையும் உண்டு. ‘சிக்குபுக்கு ரயிலு’, ‘முக்காபுலா’, ‘கொஞ்சம் நிலவு’ ‘அந்த அரபிக் கடலோரம்’, ‘ரோமியோ ஆட்டம் போட்டால்’, ‘ரங்கீலா’ படத்தின் பல பாடல்கள், ‘தைய தையா’, ‘மாரோ மாரோ’ (பாய்ஸ்), ‘ரங் தே பசந்தி’ என்று இன்னும் ஏராளமாகச் சொல்லிக்கொண்டே போகலாம். ரஹ்மானிடம் இன்னொரு விசித்திரமான வகைமை பாடல்கள் உண்டு. மென்மையும் வன்மையும் கலந்த பாடல்கள் ‘தீ தீ தித்திக்கும் தீ’ (திருடா திருடா), ‘முத்து முத்து முத்தாடுதே’ (மிஸ்டர் ரோமியோ), ‘சந்தோஷக் கண்ணீரே’ இவை போன்ற பாடல்கள் இந்தியத் திரையிசையில் ஏ.ஆர். ரஹ்மானைத் தவிர்த்துப் பிறரிடம் வெகு அரிதாகவே காண முடியும்.        

சூஃபி இசையை முக்கியமாக, கவ்வாலியை இந்தியத் திரையிசையால் மிகவும் பிரபலப்படுத்தியவர் ரஹ்மான். இதனால் திரையிசை மட்டுமல்ல, ஏ.ஆர். ரஹ்மானின் கலையும் உச்சம் பெற்றது. எல்லையற்ற அன்பைப் பேசும் சூஃபி ஞானம் ஏ.ஆர். ரஹ்மானின் இசையை அன்பின் வடிவாக வெளிப்பட வைத்தது. தமிழிலேயே இந்த வகையான பாடல்களை அங்கங்கே ஏ.ஆர். ரஹ்மான் வைத்திருந்தாலும் இந்திக்குச் சென்ற பிறகே அவருக்குள் சூஃபி இசை பிரம்மாண்டம் அடைகிறது. அவரது இருபத்தைந்தாண்டு திரையிசையில் அவரது உச்சபட்ச சாதனைகள் என்று கருதத்தக்க பாடல்களில் பலவும் இதுபோன்ற பாடல்களாக இருக்கும். ‘ஜோதா அக்பர்’ படத்தில் இடம்பெற்ற ‘க்வாஜா மேரே க்வாஜா’, ’ஜேஷன் இ-பஹாரா’ ஆகிய பாடல்களும், ‘மௌலா மௌலா’ (டெல்லி-6), ‘கல்பலி’  (ரங் தே பசந்தி), ‘நூருன்னலா’ (மீனாக்‌ஷி), ‘குன் ஃபயா’ (ராக் ஸ்டார்) ‘ஆருயிரே மன்னிப்பாயா?’ ‘மாண்புமிகு மன்னவரே’ (குரு) உயிரை உருக்குபவை. இவையெல்லாம் முழு முற்றான அன்பை நோக்கி நம்மை எய்பவை என்றால் இன்னொரு வகையான பாடல்கள் எல்லாவற்றிலிருந்து விடுதலை தேடுபவை, கட்டுப்பாடுகளை தகர்ப்பவை, ‘கடமை’ என்ற தலைப்பில் பாரதியின் புகழ்பெற்ற கவிதை ஒன்று உண்டு. அதில் ‘கட்டென்பதனை வெட்டென்போம்’ என்று ஒரு வரி வரும். ரஹ்மானின் இசையில் பல பாடல்கள் அப்படித்தான். ‘ரங் தே பசந்தி’ படத்தின் ‘பாத்சாலா – லூஸ் கண்ட்ரோல்’ என்ற பாடலைப் புரிந்துகொள்ள மொழி ஒரு தடையே இல்லை. முழுக்க முழுக்க ‘கட்டென்பதனை வெட்’டச் சொல்லும் பாடல். நம்மை மூச்சு முட்டச் செய்யும்படி இறுக்கும் வாழ்க்கையை, மரபை, வரலாற்றை உதறித் தள்ளிவிட்டு தர்காவிலிருந்து படபடத்துச் செல்லும் புறாக்கூட்டம் போலப் பறந்துசெல்ல வைப்பவை. அர்த்தம், மேன்மை, மென்மை, அறம், தர்மம், பேரின்பம், இனிமை, நித்தியத்துவம் என்ற பெரிய வார்த்தைகளெல்லாம் வரலாற்றில் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு அலங்கார வார்த்தைகளாக ஆகிவிட்டன. இன்னும் சொல்லப்போனால் பேரழிவுகளெல்லாம் இந்தச் சொற்களைக் காரணம் காட்டியேதான் நிகழ்த்தப்பட்டன. ஆகவே, இந்தப் பெரிய வார்த்தைகளுக்கெல்லாம் எதிராக ஏ.ஆர். ரஹ்மான் போர் தொடுக்கிறார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாகிய ‘ஹிப்பி’ கலாச்சாரத்தினரின் போக்கை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். அர்த்தமற்ற வரிகள், இனிமையில்லாத சத்தங்கள், தொடர்ச்சியின்மை, தற்காலிக சந்தோஷம் இவற்றைக் கொண்டு பாடல்களை உருவாக்குகிறார் ஏ.ஆர். ரஹ்மான். ‘டெல்லி-6’ படத்தின் ‘மசக்கலி மடாக்கலி’ பாடலும் அப்படித்தான். கஜல் பாடகர் ஜக்ஜித் போன்றோரை ‘அர்த்தமே இல்லை. எனக்கு எதுவும் புரியவேயில்லை’ என்று புலம்ப வைத்த பாடல். ஆனால், அது வெளிவந்த ஆண்டில் மிகவும் பிரபலமான பாடல் அதுதான். ‘புர புர்ர புர்ர புர்ர’ என்பதெல்லாம் இசையா என்று கேட்டவர்களைப் பரிகசித்தபடி இன்னும் நம்மைக் குதூகலப்படுத்திக்கொண்டிருக்கிறது அந்தப் பாடல். ‘மசக்கலி’ என்பது ‘டெல்லி-6’ படத்தில் இடம்பெற்ற ஒரு புறாவின் பெயர். எந்த முன்தீர்மானமும் இல்லாமல் அந்தப் பாடலைக் கேட்கும்போது நாம் ‘மசக்கலி’யாகி பழைய டெல்லியின் நெரிசல் மிகுந்த சந்துகளின் மேலாக அல்லது சென்னையில் ரங்கநாதன் தெருவின் மேலாகப் பறந்துசெல்வது போல் இருக்கும். ஒருவரின் காதுகளும் இதயமும் ஏ.ஆர். ரஹ்மானின் இசைக்குத் திறந்துகொண்டனவென்றால் அவை ஏற்படுத்தும் விடுதலை உணர்வும் குதூகலமும் பெரும் போதையைத் தருபவை. ‘பேட்டை ராப்’, ‘முஸ்தஃபா முஸ்தஃபா’, ‘ஊர்வசி ஊர்வசி’, ‘தைய தையா’, ‘‘மன மன மெண்டல் மனதில்’, ‘மடர்கஷ்தி’ (தமாஷா) போன்ற பாடல்களும் இந்த வரிசையில் வருபவையே. எந்தக் கட்டுப்பாடும் இல்லாத தனிப்பாதையை இசையமைப்பாளர்கள் வகுத்துக்கொள்ள முடியும் என்பதை இந்த வகைப் பாடல்களில் ஏ.ஆர். ரஹ்மான் நமக்குக் காண்பித்திருக்கிறார். இந்தத் தனிப்பாதையில்தான் தற்போது இந்தியில் அமித் திரிவேதி போன்றவர்களும் தமிழில் சந்தோஷ் நாராயணன் போன்றவர்களும் ஊர்வலம் போகிறார்கள்.

தமிழ்த் திரையிசையின் தொடக்க காலத்திலிருந்து ராஜா, ஏ.ஆர். ரஹ்மான் வரையிலான காலத்தைப் பார்க்கும்போது தமிழ்த் திரையிசை எவ்வளவு வகைமையும் வளமையும் கொண்டதாகவும் தனித்துவமானதாகவும் கொண்டதாக இருக்கிறது என்பது நமக்குப் புரியும். அதிலும் ஏ.ஆர். ரஹ்மான் என்று வரும்போது தமிழ், இந்தியா என்ற வரையறையைத் தாண்டி உலக அளவிலான ஒரு வீச்சு தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் கிடைத்திருக்கிறது என்பது புரிபடும். தமிழில் பெரும்பாலும் திரையிசை என்ற விவாதம் வரும்போது எம்.எஸ்.வியா இளையராஜாவா? இளையராஜாவா ஏ.ஆர். ரஹ்மானா என்று பெரும் போர்க்களமே உருவாகிவிடுகிறது. இசை மிகவும் பரந்தது அதில் இவர்கள் எல்லோருக்குமே தனியிடம் இருக்கிறது. இன்னொருவருடைய இடத்தைப் பறித்துக்கொண்டு உட்காரும்படி யாரும் யாருக்குமே சளைத்தவர்கள் இல்லை. இவர்கள் எல்லோருமே நம்மை சந்தோஷப்படுத்தியவர்கள், சந்தோஷப்படுத்திக்கொண்டிருப்பவர்கள். இன்பத்தில் ஏது பேரின்பம், சிற்றின்பம்? எல்லாமே இன்பம்தான். கடந்த 25 ஆண்டுகளாக நம்மை சந்தோஷப்படுத்திக்கொண்டிருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 50-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவர் நமக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் ‘சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடலே’.


ஏ.ஆர். ரஹ்மானின் சிறந்த ஆல்பங்கள்-10 (கால வரிசையில்)

தமிழ்

1. ரோஜா

2. திருடா திருடா

3. டூயட்

4. காதலன்

5. மின்சாரக் கனவு

6. ரிதம்

7. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

8. விண்ணைத் தாண்டி வருவாயா

9. மரியான்

10. ஓ காதல் கண்மணி

இந்தி

1. ரங்கீலா

2. வந்தே மாதரம்

3. தில் ஸே (உயிரே)

4. தால் (தாளம்)

5. லகான்

6. சுபைதா

7. ரங் தே பசந்தி

8. ஜோதா அக்பர்

9. டெல்லி-6

10. ராக் ஸ்டார்

இந்தப் பட்டியல் கட்டுரையாளரின் தேர்வு

  நன்றி: ‘தி இந்து’. ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: https://goo.gl/cESuYi


Monday, January 2, 2017

வரலாற்றை மதிப்பு நீக்கம் செய்த ஒன்றுக்கு




வரலாற்றுச் சிறப்பு மிக்க
உரையைக் கேட்டுமுடித்ததும்
முட்டிக்கொண்டு வந்ததே பார் ஒன்றுக்கு

வரலாற்றுச் சிறப்பு மிக்க சுவர்
ஒன்று அருகில் இருந்தது
‘தூய்மை இந்தியா’ பிரகடனத்துடன்

வரலாற்றுச் சிறப்பில்லாத என்
ஒன்றுக்கை அந்தச் சுவரின் மீது அடிக்க ஆரம்பித்தேன்

வரலாற்றுச் சிறப்பு மிக்க உரைகளை ஆற்றும்போது
வரலாற்றுச் சிறப்பு மிக்க மனிதர்களுக்கு
ஒன்றுக்கு முட்டுமா?
இல்லை
வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையே
வாயால் அடித்துவிடப்படும்
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றுக்குதானா?

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றுக்கால்
எதையும் மதிப்பு நீக்கம் செய்ய முடியும்போல
என்று நினைத்துக்கொண்டபோது
ஒன்றுக்கால் வரலாறு எழுதி
அதையே மதிப்பு நீக்கம் செய்ய வேண்டும்
என்ற வெறி எழுந்தது என்னுள்

வாகாகச் சுவரில்
எழுதத் தொடங்கினேன்
‘வ… ர… லா…’

நின்றுவிட்டது ஒன்றுக்கு

‘று’வுக்குக் கூட காத்திராத ஒன்றுக்கு
என்ன ஒன்றுக்கு?