Tuesday, January 31, 2017

நீராலான கைகள்



முன்னே நிலம்
எதிரே சமுத்திரம்

நிலத்தின் கைகளில் லத்தியுண்டு
கற்களுண்டு
தீயுண்டு
தீயுண்டு தீயுண்டு
உமிழும் கண்களுண்டு

கண்களற்ற சமுத்திரத்திடம் இருப்பதோ
வெறும் கைகள்
உயர்த்திய வெறுங்கைகள்
நீராலான கைகள்

நிலம் கொண்டுபோய்க் கரைத்த
அகிம்சையெல்லாம் எழுந்து நிற்கிறது
உயர்த்திய கைகளாய்

ஓங்கி ஓங்கித் தரையை
ஓயாமல் இனியெப்போதும் அறையும் கைகளாய்

காலங்காலமாகக் கைகள் கரைக்கப்பட்ட சமுத்திரம்
காலங்காலமாகக் கைகள் கழுவப்பட்ட சமுத்திரம்
உயர்த்துகிறது கோடிக் கைகளை

மானுட சமுத்திரத்தின்
எல்லையெங்குமுள்ள கைகளை
ஒன்றுசேர்க்கும் சமுத்திரத்தின்முன்
உங்களால் ஒன்றும் செய்ய முடியாது

தீயின் கரங்களே
திரும்பிச் செல்லுங்கள்
 -ஆசை
 -24-01-2017

No comments:

Post a Comment