Sunday, April 19, 2020

காலரா காலத்துக் காதல்: ஒரு கரோனா கால வாசிப்பு





ஆசை

கரோனா காலகட்டத்தில் இலக்கிய வாசகர்கள் பலருக்கும் புத்தகம் படிக்க கூடுதல் நேரம் கிடைத்திருக்கிறது. அவர்களில் பலரும் கொள்ளைநோய்கள் தொடர்பான நூல்கள், குறிப்பாக நாவல்கள் படிப்பதாகத் தெரிகிறது. இவற்றில் முன்னணி இடம் வகிப்பது ஆல்பெர் காம்யுவின் ‘கொள்ளைநோய்’ (த ப்ளேக்). இந்தக் கொள்ளைநோய் நாவல்கள் பெரும்பாலும் துயரகரமானவை. ஏற்கெனவே, கரோனாவின் கொடும்பிடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நமக்கு இத்தகைய நாவல்கள் மேலும் மன உளைச்சல் தரக்கூடும். கொள்ளைநோய் பின்னணியில் அமைந்த, ஆனால் வாசிப்பதற்கு சுகமான நாவல் என்றால் அது காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் ‘காலரா காலத்துக் காதல்’ (லவ் இன் த டைம் ஆஃப் காலரா) நாவலாகத்தான் இருக்கும்.

கதை 19 நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நிகழ்கிறது. தோராயமாக, 1880-களில் தொடங்கி 1930-கள் வரையிலான காலகட்டம். உலகெங்கும் கொள்ளைநோய்களும் போர்களும் மனித உயிர்களைச் சூறையாடிய காலகட்டம். காலராவுக்கும் போருக்கும் சற்றும் தீவிரத்தில் குறையாத காதல் நோய் வயப்பட்ட ஃப்ளோரண்டினோ அரிஸோவின் காதல் கதையை இந்த நாவல் சொல்கிறது. தந்தி அலுவலகத்தில் வேலை பார்க்கும் 18 வயது ஃப்ளோரண்டினோ ஒரு தந்தி கொடுக்கச் சென்ற வீட்டில் கண நேர அளவுக்குக் காட்சி தருகிறாள் அவ்வீட்டுப் பெண் ஃபெர்மினா டாஸா. அவளைக் கண்டதும் காதலில் விழுகிறான் ஃப்ளோரண்டினோ. 13 வயது ஃபெர்மினா டாஸா பள்ளிக்குப் போகும் வழியில் உள்ள பூங்காவில் தினமும் அவளைப் பார்ப்பதற்காகப் புத்தகமும் கையுமாக உட்கார்ந்திருக்கிறான். ஃபெர்மினாவுக்கும் அவன் மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது. அவர்களது காதல் அடுத்த கட்டமாக கடிதங்களில் தொடர்கிறது. இரண்டு ஆண்டுகள் இப்படிக் கடிதங்கள் மூலமாகவும் வெறும் பார்வை வழியாகவும் தொடரும் காதல் ஃபெர்மினா டாஸாவின் அப்பாவுக்குத் தெரிந்துவிடுகிறது. ஃபெர்மினாவை அவளது இறந்துபோன தாயின் ஊருக்குக் கொண்டுபோய்விடுகிறார் அவளது அப்பா. இரண்டு ஆண்டுகள் அங்கே இருந்தாலும் தந்தி வழியாக இருவரது காதல் தொடர்கிறது. முதிர்ச்சி பெற்ற பெண்ணாக ஊருக்குத் திரும்பி வரும் ஃபெர்மினா தனது வீட்டுப் பணிப்பெண்ணுடன் சந்தைக்குச் செல்கிறாள். அவளுக்குத் தெரியாமல் அவளைப் பின்தொடரும் ஃப்ளோரண்டினோ அவளுக்கு மிக அருகில் வந்து, ‘மகுடம் சூடிய இறைவிக்கான இடமல்லவே இது’ என்கிறான். ஃபெர்மினா டாஸாவுக்கு திடீரென்று ஒரு உணர்வு ஏற்பட்டு அந்தக் காதலை முற்றிலுமாக மறுக்கிறாள். அது வெறும் மாயையே என்று கருதுகிறாள்.

நிலைகுலைந்துபோகிறான் ஃப்ளோரண்டினோ. தந்தையற்ற அவனை அவனது தாய் தேற்றுவதற்கு எவ்வளவோ முயல்கிறாள். அந்த நிராகரிப்பிலிருந்து அவனால் வெளிவர முடியவில்லை. இதற்கிடையே ஊரிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த இளம் டாக்டர் யூவெனல் அர்பினோவுக்கும் ஃபெர்மினாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. ஃபெர்மினாவுக்குத் திருமணம் நடைபெற்றாலும் அவள் என்றாவது ஒரு நாள் தன்னுடையவளாவாள் என்று நம்பிக்கை கொள்கிறான் ஃப்ளோரண்டினோ. அதற்காக, டாக்டர் யூவெனலின் இறப்பு வரைக்கும் காத்திருக்க நேரிட்டாலும் சரி என்று உறுதிகொள்கிறான். அதே போல் காத்திருக்கிறான் ஃப்ளோரெண்டினோ. ஒன்றல்ல, இரண்டல்ல, 51 ஆண்டுகள், 9 மாதங்கள், 4 நாட்கள் காத்திருக்கிறான். 81 வயது டாக்டர் அர்பினோ மரத்தில் மேல் ஒளிந்துகொண்டிருந்த தனது செல்லக்கிளியை ஏணியின் மீது ஏறிப் பிடிக்க முயன்றபோது கீழே விழுந்து மரணமடைகிறார்.

அந்த துக்க நிகழ்வுக்கு 76 வயது முதியவரான ஃப்ளோரண்டினோ செல்கிறார். எல்லோரும் துக்கம் விசாரித்துவிட்டுச் சென்றபின் 71 வயது விதவையான ஃபெர்மினாவைப் பார்த்து, “ஃபெர்மினா, உன்னிடம் எனது மாறாத பிரமாணிக்கத்தின் உறுதிமொழியையும் என் நீடித்த காதலையும் சொல்வதற்கான இந்த வாய்ப்புக்காக நான் அரை நூற்றாண்டு காலம் காத்திருந்தேன்” என்கிறார். கணவனை இழந்து ஒரு நாள் கூட ஆகாத ஃபெர்மினா, “வீட்டை விட்டு வெளியே போ. இன்னும் மிச்சமுள்ள உனது ஆயுள் காலம் முழுக்க உன் முகத்தை இங்கு வந்து காட்டாதே” என்று திட்டி அனுப்பிவிடுகிறாள்.

அரை நூற்றாண்டுக்கும் மேலே பொறுமையுடன் கட்டிவைத்திருந்த மனக்கோட்டை ஃப்ளோரண்டினோவுக்குச் சிதைந்துவிட்டது. மறுபடியும் முதலிலிருந்து தொடங்க வேண்டிய நிலைக்கு அவரது காதல் தள்ளப்பட்டிருக்கிறது. சில நாட்கள் கழித்து ஃப்ளோரண்டினோவுக்கு ஃபெர்மினாவிடமிருந்து ஆவேசமாக ஒரு கடிதம் வருகிறது. இதையே காதலாக மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பாக ஃப்ளோரெண்டினோ சிக்கெனப் பற்றிக்கொள்கிறார். ஃபெர்மினாவுக்குக் கடிதம் எழுதுகிறார். இளம் வயதில் எழுதியதுபோது மிகை உணர்ச்சி ததும்பாமல் வாழ்க்கை, மரணம், முதுமை ஆகியவற்றைப் பற்றியதாக இருக்கிறது அந்தக் கடிதம். தொடர்ந்து இதுபோல் கடிதங்களை ஃப்ளோரெண்டினோ அனுப்புகிறார். கணவனை இழந்த ஃபெர்மினாவுக்கு இந்தக் கடிதங்கள் ஆறுதல் தருகின்றன. இருவருக்கிடையே மறுபடியும் நட்பு உருவாகிறது. இந்தத் தருணத்தில் ஒரு முறை ஃபெர்மினாவை சந்திக்க ஃப்ளோரண்டினோ அவரது இல்லத்துக்குச் செல்கிறார். அந்த நேரம் பார்த்து வயிற்றில் வாயு உருவாக அதை வெளியிடாமல் இருக்க மிகவும் சிரமப்படுகிறார் ஃப்ளோரண்டினோ. ஃபெர்மினா வருகிறார். மிகவும் தர்மசங்கடமாக இந்த நிலை ஆகிவிடக்கூடாது என்பதற்காக, வாயுவை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு மறுபடியும் சந்திக்க நாள் கேட்கிறார் ஃப்ளோரண்டினோ.

இப்படியாக அவர்களது சந்திப்பு தொடர்கிறது. இதை நட்பு என்ற தளத்திலேயே வைத்திருக்க ஃபெர்மினா விரும்பினாலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் காதல் நோக்கி எடுத்துச் செல்வதற்கே ஃப்ளோரண்டினோ முயல்கிறார். ஒவ்வொரு முறையும் அவருக்குத் தோல்வியே கிடைக்கிறது. இருவரது நட்பையும் ஃபெர்மினாவின் மகள் விரும்பவில்லை; ஆனால், மகனோ இதை ஆரோக்கியமானதாகவே பார்க்கிறார். ஃபெர்மினா தனது கணவனை இழந்து ஓராண்டுக்குப் பிறகு மகதலீனா நதியில் ஃப்ளோரண்டினோவுடன்  படகுப் பயணம் மேற்கொள்கிறார். அந்தப் பயணத்தில் ஃப்ளோரண்டினோவின் காதலை ஃபெர்மினா ஏற்றுக்கொள்கிறார். எழுபது வயதுக்கு மேற்பட்ட அந்த இருவரும் உறவுகொள்கின்றனர். அந்தப் படகுப் பயணம் முடிவற்றதாக மாறுகிறது.

காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸ்


ஸ்பானிய மொழியில் ‘காலரா’ என்பது ‘காலரா’ நோயையும் வேட்கையையும் குறிக்கக்கூடியது. இந்த நாவலில் காதல் ஒரு வேட்கை மிகுந்த நோயாக வெளிப்பட்டிருக்கிறது. அதுவும் ஃப்ளோரண்டினோவின் வேட்கை நீடித்து நிற்கக்கூடியதாக, கட்டற்றுப் பாயக்கூடிய நதியாக இந்த நாவலில் காட்டப்பட்டிருக்கிறது. தனது காதல் நிராகரிக்கப்பட்டதிலிருந்து முதிய வயதில் அது ஈடேற்றம் காண்பதுவரை ஃப்ளோரண்டினோ 622 பெண்களுடன் உறவு கொள்கிறான்.  13 வயது இளம் பெண்ணில் தொடங்கி முதிய பெண்மணிகள் வரை அவன் உறவு  கொண்ட பெண்கள் பல வகைப்பட்டவர்கள். உடலின் வேட்கையை இந்தப் பெண்களுக்காக ஃப்ளோரண்டினோ ஒதுக்கிவைத்தாலும் அவனது உளப்பூர்வமான வேட்கை ஃபெர்மினாவுக்கே உரியது. ஃபெர்மினா மீது ஃப்ளோரண்டினோ கொண்டிருப்பது ஆழமான காதல் என்றாலும் அவனது பெண் வேட்டையில் பலியாகும் சில பெண்கள் ஃப்ளோரண்டினோவின் காதல் எவ்வளவு சுயநலமிக்கது, கண்மூடித்தனமானது, பிறருடைய வலி குறித்து அக்கறை கொள்ளாதது என்பதை நமக்கு உணர்த்துகிறார்கள்.

டாக்டர் யூவெனல் அர்பினோ கதை நடக்கும் நகரத்தில் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்தியவராகக் காட்டப்படுகிறார். எனினும் அருகிலுள்ள மற்ற பிரதேசங்களில் கொள்ளைநோய் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை நாவலில் சில பகுதிகள் உணர்த்துகின்றன. கொள்ளைநோயால் இறந்தவர்கள் நதியில் ஊதிப்புடைத்து மிதந்துபோகும் காட்சி ஒரு முறை வருகிறது. கொள்ளைநோயால் சில ஊர்களே வெறிச்சோடிப் போய்க்கிடக்கின்றன. இத்தனைக்கும் இடையில் வாழ்வை வாழ்வதற்கான ஒன்றாக மாற்றுவது காதல்தான். அதனால்தான் ‘காலரா காலத்தில் காதல்’ என்று தலைப்பிட்டிருக்கிறார் மார்க்கேஸ்.  

 காதல் மட்டுமல்ல, மரணம், முதுமை போன்றவற்றைப் பற்றிய அற்புதமான தியானமாக இந்த நாவல் அமைந்துள்ளது. வயதாகிவிட்டால் ஒருவர் தனது கல்லீரலின் வடிவத்தைக் கூட அதைத் தொடாமல் உணர முடியும் என்கிறார் மார்க்கேஸ் ஒரு இடத்தில். முதுமை நம்மை உறுப்புகளின் தொகுப்பாக நமக்கு அறிமுகப்படுத்துகிறது. நாவலின் இறுதிப் பகுதியில் ஃப்ளோரண்டினோவும் ஃபெர்மினாவும் ஒருவருக்கொருவர் உதடுகளில் முத்தமிட்டுக்கொள்ளும்போது இருவரும் மற்றவரின் வாய் துர்நாற்றத்தை உணர்கிறார்கள். எனினும் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட ஏக்கம் ஒரு புது மணம் கொள்கிறது.

கொத்துக்கொத்தாகக் கொல்லும் கொள்ளைநோய் மரணம் போல நம் உடலிலேயே உறைந்திருக்கும் மரணம் காலத்தின் ரூபம் கொண்டிருக்கிறது. ஃப்ளோரண்டினோ 40 வயதிலேயே தன் முதுமையை உணர்கிறான். காலத்தின் மாற்றங்கள் பேரழகியான ஃபெர்மினா டாஸாவிடம் நிகழ்கின்றன. தி.ஜானகிராமனின் ‘மோக முள்’ நாவலை இது நினைவுபடுத்துகிறது. பாபுவுக்கு தெய்வீக அழகின் உருவாகக் காட்சியளித்த யமுனா 40 வயதில் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கிறாள்.  ‘யமுனாவுக்கு எப்படி வயதாகும்?’ என்று தி.ஜாவின் மீது கோபத்துடன் முதல் மூன்று முறை அந்த நாவலை வாசிப்பதை முக்கால்வாசியோடு நிறுத்தியது நினைவுக்கு வருகிறது. அப்படித்தான் ‘ஃபெர்மினா டாஸாவுக்கு எப்படி வயதாகலாம்?’ என்ற கேள்வி நமக்கு எழுகிறது. வாழ்க்கை மீதான காதலை இரண்டு முதியவர்களின் காதல் மூலம் இறுதியில் சித்தரித்து நம் கேள்வியைக் கடக்கிறார் மார்க்கேஸ். கரோனா காலத்திலும் வாழ்வின் மீது ஆழ்ந்த பிடிப்பு ஏற்படுத்த காதல் இருக்கிறது என்ற நம்பிக்கை இந்த நாவலின் மறுவாசிப்பில் ஏற்படுகிறது.

1985-ல் ஸ்பானிஷ் மொழியில் வெளியான இந்த நாவலின் அழகிய ஆங்கில மொழிபெயர்ப்பு எடித் கிராஸ்மன் என்ற அற்புதமான மொழிபெயர்ப்பாளரின் கைவண்ணத்தில் 1988-ல் ஆங்கிலத்தில் வெளியானது. இந்த நாவலின் திரைப்பட வடிவம் அதே தலைப்பில் 2007-ல் வெளியாகித் தோல்வியுற்றது. இங்கே, ‘மோக முள்’ நாவலுக்கு நிகழ்ந்த விபத்து அங்கே இந்த நாவலுக்கு நிகழ்ந்தது. எனினும், அந்தப் படத்தில் கதை நிகழும் இடங்களின் காட்சிப்படுத்தல், பேரழகுக் கதாநாயகி ஜோவன்னா மெஸ்ஸொஜோர்னா ஆகிய விஷயங்களுக்காக இந்தப் படத்தை அவசியம் பார்க்கலாம்.
- 19-04-2020 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான கட்டுரை. 

Wednesday, April 8, 2020

சமத்துவமற்ற இந்தியாவில் ஒரு கொள்ளைநோய்!


ஹர்ஷ் மந்தர்

(எனது மொழிபெயர்ப்பில் ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கத்தில் 03-04-20 அன்று வெளியான கட்டுரை)

இந்த ஊரடங்கு பற்றி பொதுச் சுகாதார வல்லுநர்களிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனால், ஒன்று மட்டும் தெளிவு: இந்த ஊரடங்கானது பணக்காரர்களிடையேயும் நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் மட்டுமே சாத்தியம். அவர்களுக்குத்தான் உத்தரவாதமான வருவாய், இடைவெளி விடுவதற்கு ஏற்ற வீடுகள், மருத்துவக் காப்பீடு, தண்ணீர் வசதி போன்றவையெல்லாம் இருக்கின்றன. மேற்கூறிய ஏதும் அற்றவர்களைப் பசி, தொற்று ஆகியவற்றுக்கு ஆளாகும்படி தூக்கியெறியும் ஒரு உத்தியைத் தேர்ந்தெடுத்ததை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்?

ஊரடங்குக்கு உத்தரவிடும்போது கோடிக்கணக்கான முறைசாராப் பணியாளர்களையும் நிராதரவான மக்களையும் அரசு நினைத்துப் பார்த்ததா? இவர்களில் பலர் பல்வேறு இடங்களுக்குச் சுற்றிச் சுற்றிப் புலம்பெயர்பவர்கள். இந்தியா முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் 10 கோடி இருக்கலாம். இவர்களில் பலருடைய ஒருநாள் வருமானம் அவர்களுடைய உணவுக்கே போதுமானதாக இருப்பதில்லை. நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக அவர்கள் தங்கள் குழந்தைகளோடு பட்டினி கிடந்து தாமாகவே சாக முன்வர வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறதா? ஒவ்வொரு நகரத்திலும் நடைபாதையையோ பாலங்களுக்கு அடியில் உள்ள அசுத்தமான இடங்களையோ மட்டுமே தங்கள் வீடாகக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கானவர்களை அரசு மறந்துவிட்டதுபோல் தெரிகிறது.

கைவிடப்பட்ட வறியவர்கள்

‘சமூக விலக’லையும் ‘சுயதனிமை’யையும் மேற்கொள்ளுமாறு நாம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம். சேரிகளில் குறுகலான ஒற்றை அறைகளில் கூட்டுக்குடும்பத்தில் வசிப்பவர்களுக்கும் உழைக்கும் வர்க்கத்தினர் வசிக்கும் குடியிருப்புகளிலும் இது எப்படி சாத்தியமாகும்? அல்லது அளவுக்கதிகமானோர் தங்கியிருக்கும் சுகாதாரமற்ற அரசுக் காப்பகங்களில் இருக்கும் வீடற்றவர்கள் என்ன செய்வார்கள்? பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லங்களில் இருக்கும் நிராதரவான மக்கள் என்ன செய்வார்கள்? நெரிசல் மிகுந்த சிறைகளில் உள்ள கைதிகளின் நிலை?

கொள்ளைநோய் இந்தியாவை மூழ்கடிக்கக்கூடிய சூழல் வருமானால் இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பு எவ்வளவு திறன் கொண்டதாக இருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள். பொதுச் சுகாதாரத்தில் இந்தியாவின் முதலீடு உலகத்திலேயே மிகவும் குறைவு. மேலும், பெரும்பாலான நகரங்களில் எந்த விதமான ஆரம்ப சுகாதார மையங்களும் இருப்பதில்லை. பல மாவட்ட மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகளோ ஊழியர்களோ பிற வசதிகளோ இருப்பதில்லை. மிகச் சில மருத்துவமனைகள் தலா ஒரு வென்டிலேட்டரைக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் பணக்காரர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் பொதுச் சுகாதார அமைப்பை நாடுவதையே விட்டுவிட்டார்கள். இருக்கும் மோசமான, குறைந்த அளவிலான சேவைகளை ஏழைகளுக்கு விட்டுவிட்டார்கள். இந்தக் கொள்ளைநோயானது விமானத்தில் பயணிக்கும் வசதி கொண்டோரால் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது என்பதுதான் இதில் உள்ள முரண்நகை.

ஒன்றிய அரசு அறிவித்திருக்கும் நிவாரணத் தொகுப்பைப் பாருங்கள். வெறும் இரண்டு நாள் சம்பளம், 5 கிலோ தானியத்தையும் கொண்டு வாழ வேண்டும் என்று உங்களுக்கும் எனக்கும் சொல்லப்பட்டால், நமக்கு எதிர்காலம் எப்படிக் காட்சியளிக்கும்? ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையும் உணவும் திடீரென்று இல்லாமல்போன நிலையில், நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் உள்ள தங்கள் வீடுகளுக்கு நடந்துசெல்லும் காட்சி இந்த ஊரடங்கு எந்த அளவுக்குத் திறனற்றது என்பதைத் தெளிவாக நமக்குக் காட்டிவிடுகிறது.

இந்தக் கொள்ளைநோய் இந்தியாவை அடைந்து பல்கிப் பெருகும்வரை மருத்துவக் கட்டமைப்பை விரிவுபடுத்துவது, அதன் மூலம் சோதனைகள் மேற்கொள்வது போன்ற எதையுமே இந்திய அரசு சில மாதங்கள் செய்யாமல் சும்மா இருந்தது. உணவு, வேலை போன்றவற்றுக்கு அரசு அப்போதே திட்டமிட்டிருக்க வேண்டும்; ஏழை மக்கள் பாதுகாப்பு, அவர்கள் பாதுகாப்பாகத் தங்கள் வீட்டுக்குச் செல்வது, முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகள், நிராதரவானவர்கள் ஆகியோருக்குச் சிறப்புப் பாதுகாப்பு போன்றவற்றையும் பற்றி யோசித்திருக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?
இரண்டு மாதங்களுக்கு நகரங்கள், கிராமங்களில் உள்ள முறைசார்ந்த பொருளாதாரத்துக்கு உட்படாத ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதமொன்றுக்கு 25 நாட்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் இரண்டு மடங்காக வழங்கப்பட வேண்டும். சேரிப் பகுதிகளுக்கு விலையில்லாத் தண்ணீர் வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை இரண்டு மடங்காக்க வேண்டும். கூடுதலாக, வீடில்லாத குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் புலம்பெயர்ந்த தனிநபர்களுக்கும் சமைத்த உணவை வழங்குவது அவசரத் தேவை. சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் மிகக் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்களைத் தவிர அனைத்து விசாரணைக் கைதிகளும், சின்னச் சின்னக் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றுவரும் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.

இந்தியா உடனடியாகத் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3%-ஐ மருத்துவக் கட்டமைப்புக்குச் செலவிடுவதற்குத் தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும். இந்தத் திட்டம் அனைவருக்கும் இலவசமாக ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலை மருத்துவ சேவையை வழங்குவதைத் தன் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். இந்தத் தேவை உடனடியானது என்பதால், ஸ்பெயினும் நியூசிலாந்தும் தங்கள் தனியார் மருத்துவக் கட்டமைப்பை நாட்டுடைமையாக்கியதை இந்திய அரசாங்கமும் பின்பற்ற வேண்டும். எந்த நோயாளியும் கரோனாவுக்கான பரிசோதனைக்காகவோ சிகிச்சைக்காகவோ தனியார் மருத்துவமனிகளிலிருந்து திருப்பியனுப்பப்படவும், அதற்காகக் கட்டணம் வசூலிக்கப்படவும் கூடாது என்பதற்காக அவசரச் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும்.

ஒரு தரப்பு மக்கள் பணிப் பாதுகாப்பும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பும் மருத்துவக் காப்பீடும் உலகத் தரமான வீட்டுச் சூழலும் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் பாதுகாப்பற்ற சூழலில், வேலைக்கு உத்தரவாதமற்ற நிலையில், அசுத்தமான வீட்டுச்சூழலில், தூய்மையான தண்ணீருக்கும் சுகாதார நிலைக்கும் மருத்துவ வசதிக்கும் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். கரோனா பாதிப்புக்குப் பிந்தைய இந்தியாவில் இந்த நிலையை அகற்ற நாம் பாடுபடுவோமா? நம் நாட்டை மேலும் கருணை கொண்டதாக, நியாயமானதாக, சமத்துவம் கொண்டதாக இப்போதாவது ஆக்குவோமா?