Saturday, July 24, 2021

பொன்முகலி கவிதைகள்: கால நதிக் காதல்


ஆசை

‘மென்மையான ஒரு பெண்ணுடலுக்குச் சூரியனின் கதிர்கள் மட்டுமே உரிய மரியாதை செலுத்துகின்றன’ என்றார் ஸ்வீடிஷ் பெண் கவிஞர் எடித் சோடெர்கிரான். பொன்முகலியின் கவிதைகளைப் படிக்கும்போது ஒரு பெண்ணின் உடலுக்கு, காதலுக்கு நிலவொளியும் விண்மீன்களின் ஒளியும்தான் உரிய மரியாதை செலுத்துகின்றன என்று தோன்றும் அளவுக்கு அவை குளிர்ச்சியைக் கொண்டிருக்கின்றன. இரவில் எழுதப்பட்ட கவிதைகளோ என்று நினைக்கும் அளவுக்கு இருளும் இரவும் நிலவும் விண்மீன்களும் அதிகமாக இடம் பிடிக்கின்றன.
 ‘உன் இரவுகளுக்கென நிலா வளர்க்கும்
பிரத்யேகமான இரு கண்களைத்
தேடிக் கண்டடை’
என்கிறார் ஒரு கவிதையில்.

‘விண்மீன்கள் உன் கண்களாய் மாறி
என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிற
இவ்விரவில்,
நான் எப்படி அமைதியுறுவேன் சொல்?’
என்று ஆரம்பிக்கிறது இன்னொரு கவிதை. விண்மீன்கெளல்லாம் உண்மையில் தகிக்கும் சூரியன்கள் என்றாலும் கவிஞர்கள் அவற்றை எவ்வளவு குளிர்ச்சியானவையாக மாற்றிவிடுகிறார்கள்!

இதம்

இதம், கவித்துவம் போன்ற பண்புகள் கவிதையில் தடை செய்யப்பட்ட வஸ்துகளோ என்ற அளவுக்குச் சந்தேகம் ஏற்படும் இந்நாட்களில் பொன்முகலியின் பெரும்பாலான கவிதைகள் இதமாக இருக்கின்றன.

‘நிலவு ஒரு தும்பை பூவைப்போல
வானத்தில் மலர்கிறது’
என்பது போலெல்லாம் நவீனக் கவிதையில் யாரும் எழுதத் துணிய மாட்டார்கள். ஆனால், பொன்முகலி எழுதுகிறார். இவ்வரிகளின் எளிமை முதலில் இவ்வரிகளைச் சாதாரணமாகக் காட்டினாலும் நிறுத்தி இன்னொரு முறை வாசிக்கும்போது அழகில் பொலிகிறது.

‘என் மீது கவிகிற இரவுகளில்
பூக்கிற விண்மீன்
நீதானே?’
எனும்போது ஒரே நேரத்தில் ரொம்பவும் சாதாரணமாகவும் அதனாலேயே அழகாகவும் இருக்கிறது.

சில கவிதைகளில் காட்சியில் இருக்கும் நிசப்தத்தின் ஆழம் கடுமையாக நம்மைத் தாக்குகிறது:
‘பௌர்ணமி இரவுகளில்,
அவள் உடல்.
தாழம்பூ வாசனையேறிக் கிடக்கிறது.
அன்றைய இரவின் மீது பனி
நிசப்தமான கடுமையுடன் பொழிகிறது’
என்ற வரிகள் சப்தமின்மைக்கும் ஒரு பேரிரைச்சல் இருக்கிறது என்பதை உணர்த்துகின்றன.

’…நகரும் நொடிமுட்களின் சத்தம்
ஓர் அருவியின் பேரிரைச்சலாய் மாறி
செவிப்பறையில் விழுந்து
நினைவுகளைத் துரத்துகின்றன
என்ற கவிதை வரிகளில் ஒன்றைப் பிடித்து ஒன்று என சொற்கள் சேரும்போது காட்சிகள் உருவாகி, அந்தக் காட்சிகளின் ஓசைகள் உருவாகி, அவை உணர்வுகளாகின்றன.

காதலின் எரிபதம்

இந்தத் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளின் பிரதான பாடுபொருள் காதல்தான். அதுவும் எப்படிப்பட்ட காதல்? ‘அவன் என்னை அந்தரத்தில் ஒரு வானவில்லாக’ மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கும் காதல். இந்தக் காதல் கவிதைகள் பலவற்றையும் சங்கக் கவிதைகளின் தொடர்ச்சி என்றும் கூறலாம். குறிப்பாக,
‘இரவுகளில் நான் உறங்குவதில்லை
எனது உடலில்
மலர்ந்துதிர்கிற பூக்களைப்
பார்த்தபடியிருக்கிறேன்’
என்ற கவிதை அதன் கச்சிதத் தன்மையாலும் கவித்துவத்தாலும் பொருளாலும் குறுந்தொகையின் தொடர்ச்சியாகிறது.   

காதலின் முறுகுபதம் தாபம். இந்தக் கவிதையைப் பாருங்கள்:
‘பசிய குளங்களின் கரைகளில்
நிலவைச்  சிறு துண்டுகளாக வெட்டிப்  புதைத்துச் செல்பவளே.
உன் தடங்களின் மீது என் தாபம்
எப்படி தூண்டிவிடப்பட்ட தீபத்தைப்போல
பிரகாசமாய் எரிகிறது பார்.’
என்ற வரிகள் பிரமிளின்
‘கருகாத தவிப்புகள் கூடி
நாவின் திரி பிளந்து அணையாது எரியும் ஒருபெயர்
நீ’
என்ற வரிகளின் தாபத்தையும் அக சந்தத்தையும் தீவிரத்தையும் நினைவுபடுத்துகின்றன. மேலும், இந்தக் கவிதை ஒரு ஆணின் நோக்கிலிருந்து எழுதப்பட்டிருப்பது சிறப்பு. காதலின் முறுகுபதம் தாபமென்றால் எரிபதம் புணர்ச்சி:
‘எனக்கு அப்போது தேவைப்பட்டதெல்லாம்
பள்ளத்தாக்கில் வீசப்பட்ட உடலைப் போல
என் உயிரைச் சிதறடித்துவிடக் கூடிய
ஒரு புணர்ச்சி.’

உடலை அல்ல, உயிரைச் சிதறடித்துவிடக் கூடிய புணர்ச்சி என்பதைக் கவனிக்க வேண்டும்.

உடலே உன்னதம்

‘ஆன்மா என்பது உடலின் சிறை’ என்றார் மிஷெல் ஃபூக்கோ. உடலைக் கொண்டாடும் கவிதைகளும் இந்தத் தொகுப்பில் முக்கியமானவை. உடல் என்பது,
‘வெறுமனே
ஓர் ஆன்மா வசித்துச் செல்கிற
கூடு இல்லை.
வேட்கைகளின் நீர் கொந்தளிக்கிற
பசிய கடல்’
என்கிறார் பொன்முகலி ஒரு கவிதையில். ‘இந்த உலகம் உடல்களால் ஆனது’ என்கிறார் இன்னொரு கவிதையில். உடல்-ஆன்மா என்ற இருமையில் உடலைப் பழித்தும் இழித்தும் சாஸ்வதமற்றது என்றும் ஆன்மாவே நிலையானது என்றும் கூறுவது மரபு. உயிரைச் சிதறடித்துவிடும் புணர்ச்சியைக் கேட்பவளுக்கு சாஸ்வதமாவது மண்ணாவது. உடல் என்பது நிரந்தரமின்மையின் அழகு, நிரந்தரமின்மையின் கவிதை. அதைப் பாடுகிறார் பொன்முகலி.
‘மனதின் பாசாங்குகளற்ற
என் உடலை நான் நிச்சயமாய் நேசிக்கிறேன்’
என்கிறார்.

 (‘ஆன்மாவிலிருந்து
உடலை விடுவிக்கவே
நம்
ஒட்டுமொத்த இன்பத்தையும்
கொண்டு
தாக்குதல் செய்துகொள்கிறோம்’ என்ற என் வரிகளும் இங்கே நினைவுக்கு வருகின்றன.)

இன்னொரு கவிதையில்,
 ‘எனக்கு ஒரு மின்னலைக் கொடு
அடிவயிற்றில் மின்னி
நொடிப்பொழுதில்
உடலை பஸ்பமாக்கும்
ஒரே ஒரு மின்னல்’
என்று கவிஞர் கேட்கிறார். அவ்வளவுதான்! ஆன்மாவும் வேண்டாம் சாஸ்வதமும் வேண்டாம். கணப் பொழுதின் மின்னலுக்கு அவை ஈடாகுமா?  ஒரு கவிதையில் தாழம்பூக்களைச் சூடிக்கொள்கிறாள் கவிதையில் வரும் பெண்.
‘அவை எந்நேரமும்
அவளை ஒரு வெந்நீர் ஊற்றைப் போல வைத்திருந்தன’
என்கிறார் கவிஞர். வெந்நீர் ஊற்றின் தாபத்தை யாரால்தான் அணைக்க முடியும்? ஏன் அணைக்க வேண்டும்? அந்த தாபத்தில்  குளிக்கக்கூடிய ஒருவனைப் பார்த்து,
‘இரு முலைகளுக்கிடையில் மலரும்
எல்லா மலர்களும்
உனக்கே உனக்கே’ என்கிறார் கவிஞர்.

’ஊத்தைக் குழி’ என்று சித்தர்கள் காலந்தொட்டு அருவருத்தும் புறந்தள்ளியும் வந்த ஒன்றை நவீனப் பெண் கவிஞர்கள் வந்துதான் பிரகடனம்போல், பெருமிதம்போல் முன்வைத்தார்கள். அவர்களின் தொடர்ச்சியாக  பொன்முகலி வருகிறார்:
‘மீன்களற்ற அமைதியான கடலில்
அவள் யோனி
ஒரு வெண்சங்கைப் போல்
மிதக்கிறது’
என்ற வரிகளின் மூலமும்,

‘புறாக்களின் சிறகுகளைப் போல
உங்கள் யோனியின் இதழ்கள்
ஏன் படபடவென அடித்துக்கொள்கின்றன?’
என்ற வரிகளின் மூலமும் சித்தர்களுக்கு எதிரிடையான அழகியலை முன்வைக்கிறார். யோனியை ஓர் எதிர்நாகரிகமாகச் சித்தரிக்கிறார்.      

தோள் மீது ஒரு புரவி

விடுதலையை, அடிப்படையில் அகவிடுதலையை, குறித்து நாம் மிகைக் கற்பனைகள் கொண்டிருக்கிறோம். அது அவ்வளவு எளிதல்ல என்கிறார் கவிஞர்:
‘இறந்து போவதைப் போல
வேறொன்றாவதும்
கடினமானதொரு விடுதலை.’

விடுதலை என்பது உண்மையில் வெளியில் இல்லை; அதை நாம்தான் குதிரைபோல நம் தோளில் சுமந்துகொண்டிருக்கிறோம் என்கிறார்:
‘தோளில் சுமக்கிற புரவியை
கீழே விடு… அதன் மீதேறிப் பற, பற, பற… காற்றோடு கலந்துவிடு…’
எனும்போது ஒரு நெருக்கடியைக் கவிதை நம்முள் ஏற்படுத்திவிடுகிறது; நாம் சுமக்கும் புரவியை இறக்கிவிட வேண்டும் என்ற பதற்றத்தை ஏற்பட்டுவிடுகிறது; அப்படிச் செய்ய முடியாததன் குற்றவுணர்வையும் ஏற்படுத்துகிறது. இதைப் பெண்ணியக் கவிதையாக வாசிக்கச் சாத்தியம் இருக்கிறது என்றாலும் ஆண்-பெண் வேறுபாடின்றி எல்லோருடைய விடுதலைக்காகவும்தான் இந்த வரிகள் பேசுகின்றன.
‘எப்படி, எந்தப் புதிருமில்லாது
திருப்பங்களும் ரகசியங்களும் இல்லாது
வெளிப்படையாய் எளிமையாய்
சிலருக்கு வாழ்க்கை இருக்கிறது?
ஒருவேளை அவர்களுடைய ரத்தத்தில்
தீ இல்லாது இருக்கலாம்.
… எனக்கோ, நடனத்திற்காய் வளர்க்கப்படுகிற தீயைப்போல,
வாழ்வு சாகசமாய் ஒளிர்ந்தபடியே
எரிந்துகொண்டிருக்க வேண்டும்.’
என்கிறது ஒரு கவிதை. ரத்தத்தில் தீ இல்லாததால்தான் செத்த வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  இதுபோன்ற சில கவிதைகள் அழகான கவித்துவப் பிரகடனங்களாக இருக்கின்றன. அதேபோல் தனது முதல் தொகுப்புடன் வந்திருக்கும் கவிஞர் எப்போது கவிதை எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று பிறருக்கு அறிவுரை கூறுவதற்கு அசாத்தியத் துணிச்சல் வேண்டும்:
‘வாழ்தல் உனதொரு பழக்கமாக
முற்றிலுமாய் மாறிவிடுகிற அக்கணத்திலிருந்து
தயவுசெய்து நீயும் எழுதுவதை நிறுத்திவிடு.’
என்ற வரிகள் கவிதையோடும் பழக்கத்தோடும் போராடும் எனக்குத் தனிப்பட்ட முறையில் குற்றவுணர்வை ஏற்படுத்துகின்றன.    

காலநதி

காலத்தின் மேல் பொன்முகலிக்கு இருக்கும் ஈர்ப்பைப் பற்றியே தனியாக எழுத வேண்டும். காலம் அவரைத் தொந்தரவு செய்கிறது. அதனால்தான்,
‘காலம் ஓர் ஆறு என்று
வசீகரமாக எழுதிய ஒருவனை’
காதலிக்க ஆரம்பிக்கிறார். (உள்ளபடி, River of Time என்பதை ‘காலநதி’ என்றோ ‘காலம் என்றொரு நதி’ என்றோ, ‘காலமென்ற நதி’ என்றோ மொழிபெயர்த்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்). அந்தக் கவிதையின் இறுதிப் பகுதி அற்புதமானது:
‘கடலலைகளைப் போல
என் அறைக்குள் இரவு முழுவதிலும்
ஆர்ப்பரிக்கிற அவ்வரி
நள்ளிரவில் என் நெற்றியிலிடுகிற முத்தங்கள்
என் நினைவுகளை
உறக்கத்தின் பேராற்றுக்குள்
ஒரு புன்னகையோடு
நழுவவிட்டுக் கொண்டிருந்தன.’
ஆனால், ‘காலநதி’ என்ற கருத்தாக்கத்தின்படி காலமானது ஒரு நேர்க்கோட்டில் செல்வது. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற வரிசை அதற்குண்டு. கவிஞரோ தன் கவிதையில் காலத்தைக் குழம்பவிடுகிறார்; வரிசை மாற்றிவிடுகிறார். ‘உண்மைகளைத் தேடி அலைகிறவனைப் பற்றி சில குறிப்புகள்’ கவிதையில் ஒருவன் நடந்து நடந்து ஓராயிரம் ஆண்டுகள் பின்னே வந்துவிட்டதை உணர்கிறான்:
‘காலம் கடிகையைப் போலன்றி
பின் நோக்கியும் நகரக்கூடியது
என்கிற சிறு உண்மையைக் கண்டுபிடித்த களிப்பில்
வானத்தைப் பார்த்துக் கிடந்தான்.’ இவ்வரிகளில் இடம்பெற்றிருக்கும் ‘சிறு உண்மையை’ என்ற சொற்கள்தான் இந்த வரிகளை ஆழமானதாக மாற்றுகின்றன. காலம் காலம் என்று சொல்லி அதற்கு எல்லோரும் மண்டை பெருக்கச் செய்துவிட்டார்கள்; கவிஞர் அதைச் சிறு உண்மைக்குள் அடைத்து, ஓரத்தில் உட்காரவைக்கிறார். இன்னொரு கவிதையில் காலத்தின் பிறப்பைப் பேசுகிறார்:
‘கள்ளுண்டு
சொல் விண்டு
காலம் உரைத்திட்ட
வித்தையை நோக்கு.’
ஆக, காலத்துக்கும் சொல்லுக்கும், சொல் பிறப்பதற்குக் காரணமான கள்ளுக்கும் ஏதோ தொடர்புண்டு. காலம் இருப்பதல்ல சொல்லப்பட்டது, புனையப்பட்டது, அதுவும் யாரோ ஒருவனின் மது மயக்கத்தில் புனையப்பட்டது என்று கவிதையிலிருந்து விரித்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ‘’அடிபட்ட புறாவைப் போல வீஈஈஈஈழும் காலம்’ என்று போகிற போக்கில் கவிஞர் எழுதிச்செல்லும் வரியொன்று அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.
‘யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?’ என்று நகுலன் கேட்கிறார். பொன்முகலியோ யாருமற்ற வீட்டில் கடிகாரத்தைப் பொருத்துகிறார். அந்த வீட்டை,
‘உடைத்து உடைத்து
நகர்கிற நொடிமுள்’
அங்கே காலத்தை நிகழச் செய்கிறது.

’காலம் என்று சொல்லும்போது நிகழ்வது என்பதைத் தாண்டி நாம் வேறு எதையும் குறிக்கவில்லையென்றால் எல்லாமே காலம்தான்’ என்கிறார் இயற்பியலர் கார்லோ ரோவெல்லி.

‘நீ வந்தாய்
காலம் முன் போனது.
பின் போனது.
இருந்தும் இல்லாமலும் ஆனது.
நான்
உன் இதழ்களில் முத்தமிட்டேன்.
… நீ நிகழ்ந்தாய்’ என்று எழுதுகிறார் கவிஞர். காதல் நிகழ்கிறது. அதனாலேயே காலமாக ஆகிறது. ‘தாழம்பூ’ கவிதையைப் படிக்கும்போது, தாழம்பூவின் வாசத்துக்கென்று ஒரு காலம் இருந்தால் அதில் வாழ்கிறார் கவிஞர் என்று தோன்றுகிறது.

ஒரு கணம் என்பது பொன்முகலியைப் பொறுத்தவரை குறிப்பிட்ட ஒரு காலத்தைச் சேர்ந்ததல்ல. அதனால்தான்,
‘அவன் உடல்
சுக்குநூறாக வெடித்து
எல்லாக் காலங்களிலும் சிதறி விழுந்தது.’
என்கிற வரிகளில் ஒரு கணம் எல்லா காலத்தையும் போய்ச் சேர்கிறது. அதேபோல், இன்னொரு கவிதையில்
‘உடல் எல்லாத் திசைகளிலும்
எழும்பிப் பறக்கிறது.’

காலம், வெளி என்ற கருத்தாக்கங்களை (உண்மையில் இரண்டும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவைதான்) கவிஞர்  நெகிழ்வு கொள்ள வைக்கிறார்.

மூன்றாவது கண்

மெய்ம்மையின் பரிமாணங்களையும் சாத்தியங்களையும் கவிஞர் ஆழ்ந்தும் விரித்தும் பார்க்கிறார்.
‘மூன்றாவது கண்
எனக்  கனவுக்குப் பெயரிட்டேன்.’
என்ற வரிகளில் கனவை ‘மூன்றாவது கண்’ என்று அழைக்கும்போது சிவனின் ‘மூன்றாவது கண்’ என்ற மரபார்ந்த பயன்பாட்டைத் தாண்டிப் பார்க்க வேண்டும்; மெய்ம்மையின் வேறு உலகங்களைப் பார்ப்பதற்கான திறப்பு என்று அதைக் கருதும்போது அசாதாரணமான சாத்தியங்களை அது திறந்துவிடுகிறது.
‘உண்மையின் எந்தக் கரையில்
நின்றாலென்ன?
சாத்தியங்களின் எண்ணற்ற கதவுகளைத் திற’
எனும்போது உண்மை தட்டையானதோ ஒற்றையானதோ அல்ல என்று நமக்குக் கவிஞர் உணர்த்துகிறார். இன்னொரு கவிதையில்,
‘காண முடியாதவையெல்லாம்
இல்லாதவையா?’
என்ற வரிகள், குவாண்டம் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாமல் ‘நிலாவை நான் பார்க்காவிடில் அது இல்லை என்று அர்த்தமா? என்று குயுக்தியாகக் கேட்ட ஐன்ஸ்டைனின் கேள்வியை நினைவுபடுத்துகின்றன. கூடவே, பாரதியின் ‘நிற்பதுவே நடப்பதுவே’ கவிதையையும் இந்த வரிகளுடன் பொருத்திப்பார்க்கலாம். வேறோர் உலகம், இணை உலகம் பற்றிய விசாரங்களும் ஆங்காங்கே வருகின்றன. ‘இரு பாதைகளுக்கு இடையில் இருக்கும் அரூபமான’ பாதைகளில் செல்வதைப் பற்றி ஒரு கவிதை பேசுகிறது. 
’நீ பார்க்காத உலகத்தில்
நீ பார்க்காத சூரியன்கள்
தினம், தினம்
வெடித்துச் சிதறுகின்றன’
எனும் வரிகளும்,
‘எல்லாவற்றையும் மிதக்க வைக்கிற கடலொன்று
உன் கண்களுக்குப் புலப்படாமல்
உன் பக்கவாட்டில் பொங்கிக்கொண்டிருக்கிறது’
வரிகளும் முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் நின்று நம்மை அழைக்கின்றன.

காதல், தனிமை, மரணம், காலம் போன்ற ஒருசில கருப்பொருள்களுக்குள் பொன்முகலியின் கவிதைகள் அடங்கிவிடுகின்றன. அவற்றையே திரும்பத் திரும்ப ஆலாபனை செய்கிறார். எளிய சொற்களால்  ஆன ஆலாபனை. சொற்களிடமிருந்து சுமைகளை அகற்றுவதால் மேலும் மேலும் ஆழம் கூடுகிறது. அதுவும் காதல்வயப்பட்ட பெண் ஒருத்தியின் குரலாய் வந்து விழும் சொற்கள் நிலவொளியின் குளிர்ச்சியுடன் இருக்கின்றன. அதே நேரத்தில் குறைவான கருப்பொருள்கள், அதிக அளவிலான கவிதைகள், பெரும்பாலும் ஒரே மாதிரியான தொனி போன்றவை சலிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தப் புத்தகத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வாங்கிவிட்டேன். அப்போது படித்தபோது இரண்டு மூன்று கவிதைகள் மட்டுமே பிடித்திருந்தன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது எடுத்துப் படித்தபோது புத்தகம் திறந்துகொண்டது. சிறிதும் பெரிதுமாகக் கிட்டத்தட்ட முந்நூறு கவிதைகளைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் ஏறத்தாழ 50 கவிதைகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. (வெறும் 50 கவிதைகளுடன் தொகுப்புகள் வருவது வழக்கமென்பதால் ஒரு தொகுப்பில் ஒருவருக்கு 50 கவிதைகள் பிடித்திருப்பது நல்ல எண்ணிக்கையே). பிடிக்காத கவிதைகள் சிலவற்றிலும் பிடித்த கவிதைகள் இருக்கின்றன. அதிக அளவில் கவிதைகள் இருப்பது அயர்ச்சியூட்டுவது. 75 கவிதைகளையாவது பொன்முகலி நீக்கியிருக்கலாம்.

சில கவிதைகள் மனுஷ்ய புத்திரனின் பாணியை நினைவூட்டுகின்றன:
‘நாம் நேசிக்காத ஒருவரை
நாம் ஏன் மனம் பிறழ்ந்து போகிறபடி
நேசிக்கிறோம்’
என்ற வரிகளும்

‘ஒரு அன்பை மறுதலிக்க
நீ நடந்த தொலைவுகள் அதிகம்’
என்ற வரிகளும்

‘நான் புசிக்க நினைக்கிற மாமிசம்
நான் குடிக்க விழைகிற குருதி
நான் செய்ய விரும்புகிற துரோகம்’
என்ற வரிகளும் இதற்குச் சில எடுத்துக்காட்டுகள். மேலும், செந்நிற மது, கோப்பை, விஷம் போன்றவை திரும்பத் திரும்ப வருகின்றன. ‘துயரம்’ என்பதைக் கவிஞர் மிகைக் கற்பனைக்கு (romantisize) உள்ளாக்குகிறார். ‘ஒளிர்கின்ற தீபத்தைப் போல
பிரகாசமான
ஒரு துயரத்தை
நான் உனக்கு அளிப்பேன்’
என்பது போன்ற வரிகள் இதற்கு எடுத்துக்காட்டு. 

இது கவிதையை நீர்த்துப்போக வைக்கிறது. ஆங்காங்கே, ஒருமை – பன்மை மயக்கம் (சத்தம்… துரத்துகின்றன, உடல்கள்… உரசியபடியிருந்தது, சொற்கள்… வளைகிறது), எழுத்துப் பிழைகள் (நிர்வானமாக்கினர், சிரிக்கதவளாக, வன்புனறப்பட்டார்கள், கம்பளிப் பூச்சியைப் போல… ஊறத் தொடங்குகிறது, அமைதின்மயும்தான், எரியின்) போன்றவை உறுத்துகின்றன. 116-ம் பக்கத்தில் வரும் கவிதை 180-ம் பக்கத்திலும் வருகிறது.

இந்தத் தொகுப்பு பொன்முகலிக்கு ஓர் இனிய தொடக்கம். இனி அவர் எழுதப் போகும் கவிதைகளுக்கான சாத்தியங்களை, செல்திசைகளை இந்தத் தொகுப்பு கொண்டிருக்கிறது. இன்னும் விரிவான தளங்களை அவர் கவிதை சென்றடையட்டும். வாழ்த்துகள் பொன்முகலி!

நூல் விவரங்கள்:

தாழம்பூ 

பொன்முகலி 

தமிழினி வெளியீடு 

விலை: ரூ.160 

தொடர்புக்கு: 86672 55103

(இந்து தமிழ் நாளிதழில் வெளியான மதிப்புரையின் மிக விரிவான வடிவம் இது)

 

   

 

 

 


No comments:

Post a Comment