Monday, September 28, 2020

கையில் இருப்பது ஒரே ஒரு புவிக் கோள்


கடந்த இருபதாண்டுகளில் சூழலியலாளர்களிடையே அதிகம் உச்சரிக்கப்பட்ட சொற்கள் புவிவெப்பமாதல், பருவநிலை மாற்றம், பசுங்குடில் விளைவு, கரிம உமிழ்வு போன்றவையாகும். இந்தச் சொற்கள் நம் அன்றாடத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை என்றாலும் அவை குறிப்பிடும் விளைவுகள் நம் அன்றாடத்தை வெகுவாகப் பாதித்துவருகின்றன. எனினும், இதற்கெல்லாம் நான் காரணமில்லை என்பதுபோல்தான் நம் எதிர்வினைகள் இருக்கின்றன. உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வுக்கு நாம் ஒவ்வொருவரும் எந்த அளவுக்குப் பொறுப்பேற்புடனும் அக்கறையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதை கரோனா பெருந்தொற்று நமக்கு உணர்த்தியிருக்கிறது. இதே அக்கறையையும் பொறுப்பேற்பையும் சூழலியல் தொடர்பாகவும் நாம் வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஆக்ஸ்ஃபாம் அமைப்பும் ஸ்டாக்ஹோம் சூழலியல் நிறுவனமும் சேர்ந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையைப் பார்க்கும்போது தோன்றுகிறது.

1990-2015 வரையில் வெளியிடப்பட்ட கார்பன் டையாக்ஸைடு உமிழ்வு தொடர்பான தரவுகளை வைத்து இந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேற்கண்ட 25 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஒட்டுமொத்த கார்பன் டையாக்ஸைடு உமிழ்வுக்கு உலக மக்கள்தொகையின் 50% ஏழைகளைவிட 1% பணக்காரர்கள்தான் இரண்டு மடங்கு பொறுப்பு என்று இந்த அறிக்கை கூறுகிறது. 1990-க்கும் முந்தைய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கார்பன் டையாக்ஸைடைவிட கடந்த 25 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கார்பன் டையாக்ஸைடு 60% அதிகம் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. 50% ஏழைகளைவிட 1% பணக்காரர்கள் வெளியிட்ட கார்பன் டையாக்ஸைடு அதிகரிப்பின் விகிதம் மும்மடங்கு அதிகமாகும்.

நாம் வெகு வேகமாக ‘கரிம பட்ஜெட்’டைத் தீர்த்துக்கொண்டுவருகிறோம் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ‘கரிம பட்ஜெட்’ (கார்பன் பட்ஜெட்) என்பது ஒருவிதக் கணக்கு. இதன்படி, வளிமண்டலத்தில் குறிப்பிட்ட அளவு வரைதான் கார்பன் டையாக்ஸைடை வெளியிட முடியும். அந்த எல்லையைத் தொட்டால் பேரழிவுகள் ஏற்படும். உலகம் தொழில்மயமாவதற்கு முன்பிருந்த வெப்பநிலையைவிட 2 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அதிகமாகும்.

ஏற்கெனவே, உலகின் கணிசமான இடங்கள் 1.5 டிகிரி செல்ஸியஸைத் தாண்டிவிட்டிருக்கின்றன. இதனால், துருவப் பகுதிகளின் பனி உருகி கடல் மட்டம் அதிகரித்துவருகிறது. 1.5 டிகிரி செல்ஸியஸால் 0.1 மீட்டர் அளவுக்குக் கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது. 2 டிகிரி செல்ஸியஸைத் தொடும்போது 0.2 மீட்டர் அளவுக்குக் கடல் மட்டம் அதிகரிக்கும். அதைத் தொடர்ந்து மண் அரிப்பு, கடல் எல்லை அதிகரிப்பு, குடியிருப்புப் பகுதிகளில் கடல்நீர் புகுதல், குடிநீரெல்லாம் உவர்ப்பாதல் போன்ற விளைவுகள் ஏற்படும். நாஸாவின் கணக்குப்படி தற்போதைய விகிதத்தில் சென்றால் நூறிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்குள் கடல் மட்டம் 6 அடி அதிகரிக்கும்.

கார்பன் பட்ஜெட் 1870-ஐத் தொடக்க ஆண்டாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. அதைப் பொறுத்தவரை இதுவரை நாம் வளிமண்டலத்தில் நாம் 2,25,495,78,00,000 டன்கள் கார்பன் டையாக்ஸைடை வெளியிட்டிருக்கிறோம். ஒட்டுமொத்த கார்பன் பட்ஜெட்டில் இது 77.8%. இன்னமும் 64,503,00,00,000 டன்கள் மட்டுமே மீதமிருக்கிறது. அதாவது, 22.2%. தற்போதைய விகிதத்தில் சென்றால் இன்னும் 16 ஆண்டுகள், 97 நாட்களில் வளிமண்டலத்தில் அதிகபட்சம் எவ்வளவு கார்பன் டையாக்ஸைடு வெளியிட முடியுமோ அவ்வளவும் வெளியிடப்பட்டுவிடும். அப்போது உலக வெப்பநிலை அதிகரிப்பு 2 டிகிரி செல்ஸியஸைக் கடந்திருக்கும்.

இந்த பிப்ரவரியில் அண்டார்க்டிகாவின் வெப்பநிலை 20.75 டிகிரி செல்ஸியஸைத் தொட்டது; இதுதான் இதுவரையிலான உச்சம். கடந்த கோடையில் ஆர்க்டிக் கடலின் பனிப்பரப்பின் மட்டம் மிகக் குறைந்த இரண்டாவது அளவைத் தொட்டது. இப்படியே போனால் 2035-ல் ஆர்க்டிக் கடல் தனது பனிப்பாறைகள் முழுவதையும் இழந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆண்டின் கோடைக் காலத்தில் சைபீரியாவின் வெப்பநிலை 10 டிகிரி செல்ஸியஸை எட்டி உச்சம் தொட்டது. கடந்த ஆண்டுதான் ஐரோப்பாவின் மிகுந்த வெப்பமான ஆண்டாகப் பதிவாகியிருக்கிறது. இதுவரையிலான வெப்பம் மிகுந்த 12 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் கடந்த இருபதாண்டுகளுக்குள் பதிவானவையாகும்.

2 டிகிரி செல்ஸியஸைத் தொடுவதற்கு முன்பே நாம் ஏராளமான மோசமான விளைவுகளை அனுபவித்துவருகிறோம். கோடை காலம் முன்பைவிட அதிக வெப்பமாக இருக்கிறது; குளிர்காலம் முன்பைவிட அதிக காலம் நீடிக்கிறது. மழை பெய்ய வேண்டிய சமயங்களில் மழை பெய்வதில்லை; பருவமல்லாத சமயங்களில் அதிகமாகப் பெய்கிறது. தண்ணீர்ப் பஞ்சம், உணவுப் பஞ்சம் போன்றவை அதிகரித்துவருகின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் செல்வந்த நாடுகள்தான் அதிகக் காரணம் என்றாலும் இந்த விளைவுகளை அனுபவித்துவருவது மூன்றாம் உலக நாடுகள்தான்.

கார்பன் உமிழ்வுக்குப் போக்குவரத்தும் நுகர்வும் மிக முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. போக்குவரத்து எனும்போது விமானப் போக்குவரத்தைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் ஒரு பயணத்தில் வெளியாகும் கார்பன் உமிழ்வில் அவ்விமானத்தில் பயணிக்கும் ஒருவருக்கு உள்ள பங்கு, மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆண்டு முழுவதும் வெளியிடும் கார்பனுக்கு இணையானது என்று ஒரு கணக்கு கூறுகிறது.

இந்த நிலையில் வேறு ஒரு பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகிறது. கார்பன் உமிழ்வுக்கும் பருவநிலை மாற்றம், புவிவெப்பமாதல் போன்றவற்றுக்கும் மூன்றாம் உலக நாடுகளில் மக்கள்தொகை அதிகரிப்பதைக் காரணமாகக் கூறித் தங்கள் பொறுப்பைக் கைகழுவ செல்வந்த நாடுகள் முயல்கின்றன. ஒட்டுமொத்த நாட்டின் கார்பன் உமிழ்வு அளவு என்ற வகையில் சீனாவுக்கு முதலிடம், அமெரிக்காவுக்கு இரண்டாமிடம், இந்தியாவுக்கு மூன்றாம் இடம் என்றாலும் தனிநபர் கார்பன் டையாக்ஸைடு உமிழ்வைப் பொறுத்தவரை இந்தியா 13-வது இடத்தில் இருக்கிறது.

முதலாம் இடத்தில் இருப்பது அமெரிக்கா. அது மட்டுமல்லாமல் அடுத்த 11 இடங்களில் ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மன், சீனா உள்ளிட்ட பணக்கார நாடுகளே இருக்கின்றன. மக்கள்தொகை என்பது ஒரு பிரச்சினைதான் என்றாலும் பணக்கார நாடுகளின் நுகர்வு, சுரண்டல் போன்றவைதான் கார்பன் டையாக்ஸைடு உமிழ்வுக்குப் பிரதான காரணங்கள் என்று சூழலியலாளர் ஜார்ஜ் மோன்பியோ குற்றம் சாட்டுகிறார். படிம எரிபொருள் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்து, ஒருகட்டத்தில் முற்றிலுமாக நிறுத்தி, மாற்று வழிமுறைகளை நாம் தேடியாக வேண்டும் என்கிறார் ஜார்ஜ் மோன்பியோ.

கரிம பட்ஜெட்டில் ஊதாரித்தனம்

ஆக, விமானப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவோருக்கு அதிக வரி விதிக்க வேண்டும். கூடுமான வரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். எனினும், பொதுப் போக்குவரத்துக்கு ஆதரவான பிரச்சாரம் சமீப ஆண்டுகளில் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்த வேளையில் கரோனா பெருந்தொற்று அதற்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. மக்கள் பொதுப் போக்குவரத்தைக் கண்டு அஞ்சத் தொடங்கியிருப்பது நல்ல சமிக்ஞை அல்ல. ஆகவே, பொதுப் போக்குவரத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை அரசுகள் மீட்டெடுக்க வேண்டும்.

நம் கையில் இருப்பது இந்தப் புவிக் கோள் மட்டும்தான் எனும் நிலையில் நாம் மிகுந்த பொறுப்புணர்வோடு நடந்துகொண்டிருக்க வேண்டும். குறிப்பாக, உலகத்தின் மிகக் குறைந்த சதவீதமுள்ள பணக்காரர்கள் தங்கள் நுகர்வைக் குறைத்துக்கொண்டாலே அது நீடித்த நல்விளைவுகளை ஏற்படுத்தும். நமது கார்பன் பட்ஜெட்டை ஊதாரித்தனமாக நாம் செலவிட்டு வருவதைப் பார்க்கும்போது நமக்கு அடுத்த தலை முறையில் அல்ல; நம் தலைமுறையிலேயே அதன் தீமைகளை நாம் அனுபவிக்க நேரிடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. கூடுதல் பொறுப்புணர்வும், அக்கறையும் மட்டுமே நாமிருக்கும் இந்தக் கோளைக் காப்பாற்றும்.

(28-09-20 அன்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான கட்டுரை)

Sunday, September 27, 2020

அதுவா அதுவா அதுவா எஸ்பிபி?



ஆசை 

சுஜாதா ஒரு கட்டுரையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு உலகம் (குறிப்பாக, தமிழ்நாடு) வழக்கமான விதத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட சில விஷயங்களைப் பட்டியலிட்டிருப்பார். அதில் இதுவொன்று: ‘எஸ்பிபி வழக்கமாகப் பாடலுக்கிடையே சிரித்தார்’. அதைப் படித்தபோது ‘ஆமால்ல’ என்று தோன்றியது. சற்று கிளாஸிக் தொனி கொண்டிருந்த ஏசுதாஸின் குரலை சிறு வயதிலிருந்து அதிகம் ரசித்த மனதுக்கு சுஜாதாவின் வரியில் இருந்த விமர்சனம் பிடித்திருந்தது. எனினும் இளையராஜாவின் வழியாக எஸ்பிபி துரத்திக்கொண்டிருந்தார். ‘பருவமே புதிய பாட’லில் என்னுடன் ஓடினார்; ‘உறவெனும் புதிய வானில்’ என்னுடன் பறந்தார்; ‘ஸென்யோரீட்டா ஐ லவ் யூ’ என்று கூறவைத்தார்; சிறு வயதில் தெரு நிகழ்வில் ஆடுவதற்காகப் பின்னணியில் ‘மாங்குயிலே பூங்குயி’லாகக் கூவினார். இன்று சிறுவனான என் மகனைத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடல் தேடும்போது ‘தேனே தென்பாண்டி மீனாக’த் துள்ளிவருகிறார். விடாப்பிடியானவர்தான் எஸ்பிபி. 

நான் பல முறை யோசித்ததுண்டு எஸ்பிபி ஏன் பாடலுக்கிடையில் சிரிக்கிறார் என்று? நயமான ரசிகர்கள் இதை வெறும் ‘ஜிகினா வேலை’, ‘ஜிமிக்ஸ்’ என்று கடந்துவிடுவார்களல்லவா? சிறு வயதில் பார்த்த ஆர்க்கெஸ்ட்ரா ஒன்று நினைவுக்கு வருகிறது. மேடையில் இசை ஒலிக்க ஆரம்பித்துவிட்டது; ஆனால், பாடகரைக் காணோம். திடீரென்று மக்களுக்கிடையிலிருந்து ‘புதிய வானம் புதிய பூமி’ என்று ஒரு குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஒருவர் எழுந்து பாடிக்கொண்டே மேடை நோக்கி ஓடுகிறார். ஒருசில நொடிகள் அதிசயித்து வாயைப் பிளந்திருந்த மக்கள் அதன் பிறகு வெளிப்படுத்திய ஆரவாரம் விண்ணைப் பிளக்கிறது. இது ஒரு நிகழ்வோடு பார்வையாளர்களையும் ஒரு அங்கமாக்கும் முயற்சி என்பதை பின்னாளில் மனம் விளங்கிக்கொண்டது. தெருக்கூத்தில் இதுபோன்ற உத்திகள் சகஜம். கலைக்கு ஒரு திறந்த தன்மையை வழங்கும் உத்தி இது. மியூஸிக் அகாடமியில் சஞ்சய் சுப்பிரமணியன் இப்படிச் செய்தால் மறுநாள் அதை ‘மகத்தான கலைஞனின் மலிவான உத்தி’ என்று ஆங்கில நாளிதழ்கள் எழுதும். 

எஸ்பிபி சிரித்தது, அழுதது எல்லாம் பாடலை உறைநிலையிலிருந்து நெகிழ்த்துவதற்கான உத்தி. ஜானகியும் இதைப் பின்பற்றியிருக்கிறார். இது பாடலிலிருந்து கைகள் முளைத்து, அதைக் கேட்கும் ரசிகரின் கைகளுடன் கோக்கும் முயற்சி. தங்கள் கலை வாழ்க்கையின் உச்சத்தில் அவர்கள் இருந்தபோது தமிழ்நாட்டிலேயே அதிகம் கேட்கப்பட்ட குரல்கள் அவர்களுடையதுதான் என்பதை கவனம் கொள்ள வேண்டும். 

கவிஞர் இசை எஸ்.பி.பி.யின் பாடலொன்று தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ‘பரோட்டா மாஸ்டரின் கானம்’ என்ற கவிதையொன்று தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவிவருகிறது. அந்தக் கவிதை இதுதான்:  
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..
2014, டிசம்பர் 3, இரவு சுமார் எட்டு மணி இருக்கும்
"மூக்கின் மேலே
மூக்குத்தி போலே
மச்சம் உள்ளதே... "அதுவா?
என்று நீங்கள் கேட்க,
கோயமுத்தூர் முனியாண்டி விலாஸில்
அடுப்பில் கிடந்து கருகும்
திருமங்கலத்து பரோட்டா மாஸ்டரொருவன்
அதுவா.. ?
அதுவா... ?
அதுவா... ?
என்று திருப்பிக் கேட்டான்
அப்போது உங்களுக்கு சிலிர்த்துக்கொண்டதா எஸ்பிபி ஸார்? 

எஸ்.பி.பி. குறிப்பிட்ட தரப்பினருக்கானவர் மட்டும் இல்லை; எல்லோருக்குமானவர் என்பதை அவரது மரணத்துக்குப் பிறகு அவருக்குக் குவியும் புகழாஞ்சலிகள் உணர்த்துகின்றன. எனினும், அவர் எல்லோருக்குமானவர் என்பதைவிட கொஞ்சம் கூடுதலாக, ‘அடுப்பில் கிடந்து கருகும்’ பரோட்டா மாஸ்டருக்கானவர் என்பதுதான் உண்மை; அதுவே எஸ்.பி.பி.க்குப் பெருமை. இந்தக் கவிதை எஸ்.பி.பி.யின் பார்வையைச் சென்றடைந்ததா என்பது தெரியவில்லை. அப்படி இல்லையென்றால், தன்னைப் பற்றிய மிகச் சிறந்த புகழாஞ்சலி ஒன்று இப்போதேனும் அவரைச் சென்றடையட்டும். 

 இப்போது சுஜாதாவின் குறிப்பையும் இசையின் கவிதையையும் நேரெதிராக வைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. ‘அதுவா…? அதுவா…? அதுவா…?’ என்று எஸ்.பி.பி.போல் சிரித்துக்கொண்டே அந்த பரோட்டா மாஸ்டர் கேள்வி கேட்டபோது அந்த வழியாக சுஜாதா செல்கிறார் என்று கற்பனை செய்துகொள்வோம். ‘தமிழர்கள் பரோட்டா சுடும்போது ஒருவிதமாக ஆகிவிடுகிறார்கள்’ என்று கூட அவர் நகைச்சுவையாக எழுதியிருக்கலாம். 

சமீப ஆண்டுகளாக மனம் வெளிப்படையாக எஸ்.பி.பியுடன் சேர்ந்து சிரிக்கிறது. தான் பாடும்போது தன்னை எஸ்.பி.பியாக நினைத்துக்கொள்கிறது. எஸ்.பி.பியைவிட கூடுதலாக சிரிக்கிறது; அழுகிறது. எஸ்.பி.பி. சிரித்தார் என்பதற்காகத் தவறவிட்ட ‘பனி விழும் மலர் வனம்’, ‘விழியிலே மணி விழியில்’ போன்ற ரத்தினங்களை மனம் தன் கைகளில் உருட்டிவிளையாடுகிறது. 

எஸ்.பி.பி சார், இப்போது நீங்கள் ‘அதுவா அதுவா அதுவா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்கிறீர்கள்; உங்களுக்கு மறுகேள்வி கேட்கிறார் அந்த பரோட்டா மாஸ்டர்; எனக்கோ இரண்டையும் கேட்டுக்கொண்டே அந்த பரோட்டா மாஸ்டர் போட்ட பரோட்டாக்களை ஒரு கை பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுகிறது.

(‘இந்து தமிழ்’ நாளிதழில் 27-09-20 அன்று வெளியான, எஸ்பிபிக்கான அஞ்சலிக் கட்டுரையின் சற்று விரிவான வடிவம்)

Thursday, September 17, 2020

நினைவில் வாழ்வீர் கல்யாண்!

கேமராவிலிருந்து முதலாவதாக கல்யாண், அடுத்து தஞ்சாவூர் கவிராயர், என் மகன் மகிழ் ஆதன், நான், என் மனைவி, கீழே கவிராயர் பேரன்

ஆசை

காலையில் ஜீவசுந்தரி மேடத்தின் பதிவைப் பார்த்து அதிர்ச்சியுற்றேன். நண்பர் கல்யாண் (ஆர். கல்யாணசுந்தரம்) இன்று அதிகாலை மரணமடைந்திருக்கிறார். அவருக்கு வயது 38. ஃபேஸ்புக்கில் அசடன் பாலாஜி என்ற பெயரில் இயங்கிவந்தார். ஒரு வாசகராக எனக்கு அறிமுகமாகி உலகத் திரைப்படங்கள் பலவற்றையும் அறிமுகப்படுத்தியவர் அவர். ஸ்டேன்லி கூப்ரிக்கின் படங்கள் அவர் புண்ணியத்தால்தான் எனக்கு அறிமுகமாயின. முற்போக்குச் சிந்தனைகள் நிரம்பியவர். நாங்கள் இருவரும் புத்தகங்களும் திரைப்படங்களும் பரிமாறிக்கொள்வோம். எங்கள் வீட்டுக்கு அவரும் அவர் வீட்டுக்கு நானும் சென்றிருக்கிறோம். திருவான்மியூரில் நாங்கள் இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். இடியாப்பம் விரும்பிச் சாப்பிட்டார். இடையில் சில காலம் அவர் தொடர்பே இல்லாமல் இருந்தது. கைபேசி மாற்றியதால் அவர் எண் தொலைந்துபோய்விட்டிருந்தது. அப்புறம் எப்படியோ கண்டுபிடித்து அழைத்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துபோய்விட்டன. அதனால்  டயாலிஸிஸில்தான் தனது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது என்று துயரம் நிறைந்த குரலில் என்னிடம் பேசினார். நேரில் போய் பார்த்தபோது இன்னும் அதிர்ச்சி. பாதியாய் இளைத்து, குச்சி ஊன்றிக்கொண்டு நடந்தார். இத்தனைக்கும் மதுப் பழக்கம், புகைப்பழக்கம் என்று ஏதுமில்லாதவர். ஏதோ மரபுக் காரணம் போல. வாழ்க்கை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்குப் பிறகும் எங்கள் பகிர்தல் தொடர்ந்துகொண்டிருந்தது. சென்னைத் திரைப்பட விழாவில் சில படங்களைப்  பார்க்க வேண்டும் என்று விரும்பினார். என்னிடம் இருந்த நுழைவுச் சீட்டை அவருக்குத் தந்து ஒரு படத்துக்கும் அழைத்துச் சென்றேன். குச்சி ஊன்றியபடிதான் வந்தார். வாரத்தில் இரண்டு தடவையாவது டயாலிஸிஸ் செய்தாக வேண்டிய அவருக்கு சென்னை பெருமழை வெள்ளத்தின்போது மிகுந்த சிரமம் ஏற்பட்டுவிட்டது. எனினும் வாழ்வின் மீதான பிடிப்பில் அதையும் தாண்டி வந்தார். 

நாங்கள் கூடுவாஞ்சேரிக்கு இடம்பெயர்ந்தபோதும் அதே உடல்நிலையுடன் ஜனவரி 1, அன்று புத்தாண்டு மட்டுமல்லாமல் என் மனைவி பிறந்த நாள்கூட, எங்கள் வீட்டுக்கு வந்தார். நாங்கள் கேக் வெட்டி, உணவு சமைத்து, படங்கள் எடுத்து அந்நாளைக் கொண்டாடினோம். கல்யாண் ஒரு செல்ஃபி எடுத்தார். அதற்கு முன்னோ அதற்குப் பின்னோ கல்யாணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதில்லை, கல்யாண் இவ்வளவு விரைவில் நம்மை விட்டுப் போவார் என்று யார் நினைத்துப் பார்த்தது? ஒரு கட்டத்தில் அவருடைய தாயாரின் சிறுநீரகத்தைக் கொண்டு அவருக்கு சீறுநீர் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அதனால் மாதம்தோறும் சுமார் ரூ. 10 ஆயிரத்துக்கு மருந்து சாப்பிட வேண்டிய நிலை. நல்லவேளை அவருடைய திறமை காரணமாக அவருடைய நிறுவனம் (விப்ரோ) அவரைத் தொடர்ந்து வேலையில் நீடிக்க வைத்திருந்தது. வீட்டிலிருந்து வேலை பார்க்கவும் அனுமதித்தது. கரோனா பெருந்தொற்றால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபின் அவருக்கு மாத்திரை, சிகிச்சை எல்லாம் என்னவாகுமோ என்று கவலை கொண்டு அவரை அழைத்துப் பேசினேன். மாத்திரை அவ்வளவு பிரச்சினை இல்லை. மாதந்தோறும் செக்அப்புக்குச் சென்றாக வேண்டும். அதுதான் பிரச்சினை என்றார். அதன் பிறகு, கல்யாண் பற்றி நான் கேள்விப்பட்டது இன்று காலை ஜீவசுந்தரியின் பதிவில்தான். கல்யாண் எண் தவிர அவருடைய உறவினர்கள் எண் ஏதும் என்னிடம் இல்லை என்பதால் மிகவும் துடித்துப்போனேன். என் மனைவியும் மிகுந்த துயருற்றார். ‘அந்த அண்ணன் இடியாப்பத்தை ரசித்து சாப்பிட்டார்’ என்று குறிப்பிட்டார். ஜீவசுந்தரி மேடத்தைக் கைபேசியில் அழைத்துப் பேசியபோது கல்யாண் மீது தனக்கும் அப்பண்ணசாமிக்கும் இருக்கும் பந்தத்தையும் கல்யாண் இழப்பால் ஏற்பட்ட வலியையும் பகிர்ந்துகொண்டார். அவர் மிகுந்த துயரத்தில் இருந்தார். பேசிக்கொண்டிருக்கும்போதே பலமுறை அழுதார். இதையெல்லாம் பார்க்கும்போது கல்யாணுக்கு இறப்பில்லை, எங்கள் எண்ணங்களில் எப்போதும் வாழ்வார் என்றே தோன்றியது. பிறப்பால் பிராமணர் என்றாலும் பெரியார் மீதும் இடதுசாரி இயக்கங்கள் மீதும் மிகுந்த ஈர்ப்பு கொண்டவர். அப்படிப்பட்ட கல்யாண் பெரியாரின் பிறந்த நாள் அன்று காலமாகியிருக்கிறார்! என் பிறந்த நாளுக்கு முதல் நாள் இறந்திருக்கிறார்.  இனி நினைவில் வாழ்வீர் கல்யாண்!