Tuesday, January 31, 2017

அலாவுதீனும் அற்புத சிகரெட்டின் காந்தியும்




இன்று மாலை 5.12-க்கு
அவன் பற்ற வைத்த
சிகரெட் புகையிலிருந்து
காந்தி வெளிப்பட்டார்

சற்றே தூக்கிவாரித்தான்
போட்டுவிட்டது அவனுக்கு
ராட்டையிலிருந்தோ
கைத்தடியிலிருந்தோ
மூக்குக் கண்ணாடியிலிருந்தோ
கழிப்பறையிலிருந்தோ
காந்தி வெளிப்பட்டிருந்தால்கூட
ஏற்றுக்கொண்டிருந்திருக்க முடியும் அவனால்
ஆனால்
சிகரெட் புகையிலிருந்தா?

ஷேக்ஸ்பியரின் ஹாம்லட்டைத் தட்டச்சிட
ஒரு குரங்குக்குள்ள
ஆயிரத்து ஐநூறு கோடி ஆண்டுகால
தற்செயல் வாய்ப்புகளுள் ஒன்றுபோல
இப்பிரபஞ்சத்தின்
சிகரெட் பிடிக்கும் கிரகங்களுள் ஒன்றில்
சிகரெட் பிடிக்கும் 20 கோடி சந்துகளில்
சிகரெட் பிடிக்கும் 200 கோடி பேர்கள்
இழுத்துவிட்ட 2000 கோடி புகை மண்டலங்களில்
ஒன்று இப்படி உருத்திரள
வாய்ப்புள்ளது என்றும் அவன் அறிவான்

தன்னை அவ்வுரு
இவ்வளவு சிந்திக்க வைத்தது
எரிச்சல் தரவே
கையால் புகைகாந்தியைக்
கலைக்க முயன்றான்

கலைந்து கலைந்து
ஒன்றுகூடினார் புகைகாந்தி

இப்போது நிச்சயமாயிற்று
2000 கோடியில் இது ஒன்றல்ல
ஒன்றில் ஒன்றுதான் இது

புன்னகை மாறாமல் இருந்த
அவ்வுருவை
வைத்த கண் வாங்காமல் பார்த்த அவனுக்குப்
புரிந்துபோயிற்று
அவர் ஏதோ பேசப் போகிறார் என்பதை

’புகைப்பிடித்தல் உடல் நலத்துக்குக் கேடு
புகைப்பிடித்தல் புற்றுநோயை ஏற்படுத்தும்’
என்றுதான் சொல்லப்போகிறார்
என்று நினைத்தால்
‘சிகரெட் கரைகிறது பார், வீணாக்காதே’
என்று மட்டும் சொல்லிவிட்டு
வாயை மூடிக்கொண்டார் புகைகாந்தி

’பாரேன், அவ்வளவு அக்கறை இருந்தால் 

கடைசி இழுப்புப் புகையில் 
வந்திருக்க வேண்டியதுதானே’
என்று கடுப்படித்துவிட்டுக் கிளம்பினான்
அவன் திரும்பிக்கூட பார்க்காமல்.

   - (30-01-2017)

No comments:

Post a Comment