Tuesday, January 23, 2024

ஹே ராவண்


முந்நூறு
மூவாயிரம் ராமாயணங்களில்
இதுவுமொன்று
மாற்று அண்டத்தில்
மாற்றுக் காலத்தில் 
நிகழ்ந்தது

லங்காபுரி ராசாவின்
தர்மபத்தினியை
அயோத்தி ராசாவின்
படையணிகள்
தூக்கிச்சென்று
சிறைவைக்க
ஆங்கே
வெகுண்டெழுந்தாராம்
ராசா

பத்து சிரசுகளின்
இருபது விழிகள்
சினந்துபார்த்த
திசையெலாம்
பற்றியெரிகின்றன
விண்மீனாதிகள்
பதறியொளிகிறார்கள்
தேவாதிதேவ அசுர
கின்னர கிங்கரகணங்கள்

ஆங்கிருந்தே
பிடுங்கியெறிகிறார்
தன்னொவ்வொரு
சிரசாய்

மோதி
பெருநாசம்
ஒளிநாசம்

இமயம் பிடுங்கியதுபோல்
இறுதிச் சிரசைப்
பிய்த்தெறிந்தபோது
மோதி வெடித்துச் சிதறின
முந்நூறு
மூவாயிரம்
ராமாயணங்களின்
அண்டசராசரங்கள்

மிஞ்சியது
ஒற்றைப் பேரோலம்
'ஹே ராவண்'

அவ்வோலம்
இன்னுமொரு 
அண்டத்தைப்
பிசைந்தெழுப்பப்
போதுமானதாக
இருந்தது

ராமாயணங்கள் ஏதும்
நிகழாத அண்டம்

திரும்பத் திரும்ப ராமாயணம்
அலுத்துப் போய்விட்டது
லங்காபுரி ராசாவுக்கு
        -ஆசை


கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: 








 

No comments:

Post a Comment