Tuesday, August 15, 2023

எல்லோருக்குமாம் ஒரு இன்னறுங் கனிமரம்


 

சிறுவயதில்
தெருவில் கொடியேற்றம்
அப்பாவிடம் கேட்டேன்
இது என்ன மரமென்று
கொடிமரம்டி என் தங்கம்
என்றார்
கொடிமரம் என்றால்
பூ பூக்குமா
காய் காய்க்குமா
பழம் பழுக்குமா
என்று கேட்டேன்
கண்டிப்பாய் என்றார்
நான் பறித்துக்கொள்ளலாமா
என்று கேட்டேன்
எல்லோரும் பறித்துக்கொள்ள வேண்டுமென்றுதான் ஊர்ப்பொதுவில் நட்ட மரம்
நான் பிறந்தபோது இல்லை
உனக்கு இருக்கிறது
எவ்வளவு தாத்தா
எவ்வளவு ஆத்தா
இதை நடுவதற்குப்
படாதபாடு பட்டிருக்கிறார்கள் தெரியுமா
என்றார்
ஒரு மரம் நடுவது என்ன
அவ்வளவு பெரிய சிரமமா அப்பா
என்று கேட்டதற்கு
ஆமாம்
மரநிழலில் இளைப்பாறக்கூட
முடியாது என்றபோது
நம் ஒவ்வொருவரும்
சொந்தமாய் நட்டுக்கொள்ள
ஒரு மரம் தந்தார்களே சும்மாவா
மரம் நடுவது சிரமம்தான்
அதைவிடச் சிரமம்
நட்டமரம்
பட்டுப்போகாமல் பார்த்துக்கொள்வது
அப்போதுதான்
மரம் உனக்குக் கனி தரும்
உனக்கான கனி
எல்லோருக்கும் இனிக்கும்
என்று சொல்லிவிட்டுக் கேட்டார்
உனக்கான கனியை
எல்லோருக்கும் இனிக்கச் செய்வாயா
அப்பா பேசியதும் புரியவில்லை
அதற்கு என்ன பதில் சொல்வதென்றும்
தெரியவில்லை
பேசியது மட்டும்
அழியாமல் நினைவில் இருக்கிறது
அதே மரத்திலிருந்து பறித்து
எல்லோருக்கும் கசப்பின் கனிகள்
வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் இன்று
என் வீட்டின் நடுவே
நட்டுவைத்திருக்கிறேன்
அப்பாவின் கேள்வியை
கசப்பிடம் தோற்ற
என் இனிப்பை
என் பிள்ளைகள்
வெல்லச் செய்வார்கள்
- ஆசை
15-08-23


1 comment: