Monday, October 2, 2023

இரண்டு ராமராஜ்யங்கள்

 


இரண்டு ராமராஜ்யங்கள்
உள்ளன

ஒன்று
சீதையின் கற்பைத் 
தலைநகராகக் கொண்டது

இன்னொன்று 
சீதையின் துயரைத்
தலைநகராகக் கொண்டது

ஒன்றில் 
சீதைக்கென்று
எப்போதும் அக்னி
எரிந்துகொண்டிருக்கும்

இன்னொன்றில்
சீதைக்காக ராமனே
எப்போதும் அக்னியில் இறங்குவான்

ஒன்றில்
ஒரே ஒரு ராமன்தான்
மீதமுள்ள எல்லோரும்
அனுமன்கள்
நிமிடந்தோறும்
நெஞ்சைப் பிளந்து
அதன் உள்ளே சீதையற்ற ராமன்
படத்தைக் காட்ட வேண்டியவர்கள்
காட்ட மறுப்போரெல்லாம்
வாலிகள் ராவணன்கள்
கும்பகர்ணன்கள் தாடகைகள்
சூர்ப்பநகைகள்
வதம் செய்ய வேண்டியவர்கள்

இன்னொன்றில்
எல்லோருமே ராமர்கள்
அவர்களாகவே தம் நெஞ்சைப் பிளந்து காட்ட
அதில் அனுமன்கள் சீதைகள் 
வாலிகள் இராவணன்கள்
கும்பகர்ணன்கள் தாடகைகள்
சூர்ப்பநகைகள்
தெரிவார்கள்

ஒன்றில்
ஒரே ஒரு சிம்மாசனம் மட்டும் 
இருக்க
அதில் வீற்றிருந்து 
ஆட்சி செய்யும்
ராமனின் பாதுகைகள்

இன்னொன்றில்
சிம்மாசனமே இருக்காது

இரண்டு ராமராஜ்யங்களும்
சந்தித்துக்கொண்டன

ஒன்று
‘ஜெய்ஸ்ரீராம்’ என்று சொல்லிக்
கையில் வில்லெடுத்து
அம்பெய்தது

இன்னொன்று
‘ஹே ராம்’ என்று சொல்லி
மார்பில் அந்த அம்பை வாங்கி
மண்ணில் வீழ்ந்தது
         - ஆசை

கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: 








 

4 comments:

  1. ஆஹா.... ஆஹா .... அருமை நண்பரே.

    காலத்திற்கேற்ற சரியான கவிதைச் சூடு!

    பேரா. மகாதேவன்.

    ReplyDelete