Wednesday, September 27, 2023

கடவுளர்களுக்கும் அனுமதிக்கப்படாத உண்டியல்



எனக்குக் கடவுள் நம்பிக்கை
இல்லை
ஆனால் கடவுள்களை
எனக்குப் பிடிக்கும்
அவர்களெல்லாம்
மனிதர்கள் விதவிதமாகச் செய்த
உண்டியல்கள்
கிராமத்து மரத்தடிகளில்
சின்ன உண்டியல்களில் ஆரம்பித்து
பெரியகோயில்களில்
கர்ப்பகிரகத்தின் உள்ளே இருக்கும்
பெரிய உண்டியல்கள் வரை
ஏராளமான உண்டியல்கள்
அந்த உண்டியல்களில்
புவியின் அத்தனை நம்பிக்கைகளும்
வேண்டுதல்களும்
பாவங்களும்
சாபங்களும்
ஆசைகளும்
தேர்வு எண்களும்
கொட்டப்படுகின்றன
அந்த நம்பிக்கைகள்
வேண்டுதல்கள்
பாவங்கள்
சாபங்கள்
ஆசைகள்
மிக அழகியவை
அவற்றுக்கான ஒரே உண்டியல்
என்பதால்
கடவுளர்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்
சிறுவர்களாய் இருக்கும்போது
சிறிய மாரியம்மன் கோயிலில்
மாரியம்மன் கண்முன்னே
வேப்பங்குச்சியில் தாரை ஒட்டி
உண்டியலில் விட்டுக்
காசு திருடினோம்
நானும் கூட்டாளிகளும்
பாவமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்
மாரியம்மன்
எப்போதோதான் அங்கே ஆட்கள் வருவார்கள்
எப்போதோதான் உண்டியலில் காசு விழும்
கடவுளர்களைப் படைத்துவிட்டு
அவர்களுக்குள் எல்லாவற்றையும் கொட்டும்வரை
பிரச்சினை இல்லை
அவர்களுக்குள் குச்சி விட்டு
நோண்டிக்கொண்டிருப்பதுதான் விபரீதம்
அப்படி நோண்டவும்
குழந்தைகளுக்கு மட்டுமே
அனுமதிக்கப்பட்டிருக்கிறது
குழந்தைகள் தங்கள்
பொம்மை உண்டியலை
எத்தனை முறை வேண்டுமானாலும்
தூக்கிப்போட்டு
உடைக்கட்டும்
மற்றவர்கள்
உண்டியலில் போட வேண்டியதைப்
போட்டுவிட்டுத்
திரும்பிப் பார்க்காமல்
போய்விட வேண்டியதுதான்
தங்களுக்குள் வந்து விழுவதைக்
கடவுளர்கள் கூட ஏறெடுத்துப் பார்ப்பதில்லை
-ஆசை

No comments:

Post a Comment