Wednesday, April 26, 2023

மன்சூர் அலிகான் என்ன பாவம் செய்தார்? - பெயரிலி துயர்க்கவி


(வேட்டையாடத் தெரியாத, கள்ளு எங்கே கிடைக்கும் என்று அறியாத, ஆதிகுடியின் வெறியாடலை ஆடவும் தெரியாத, தாழ்வு மனப்பான்மை கொண்ட இளம் கவிஞர் ஒருவர் எழுதிய கவிதை இது. போன ஆண்டு எனக்கு அனுப்பியிருந்தார். யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று. அவர் துயரத்தை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இங்கே பகிர்ந்துகொள்கிறேன்)


நான் மன்சூர் அலிகானைப் பற்றி

ஒரு கவிதை எழுதுவேன்

அவருடைய வாழ்க்கை சந்திரபாபுவுடையதுபோல

சாவித்திரியைப் போல

அவ்வளவு துயரமானது இல்லை எனினும்

என் கவிதையில் இடம்பெறுவதைவிடவும்

மன்சூர் அலிகானுக்குத் துயரம்

ஏதும் ஏற்பட்டுவிடாது என்ற ஆசுவாசத்தை

அவர் பெறலாம்


நிச்சயம்

‘சக்கு சக்கு வத்திக்குச்சி

சட்டுன்னுதான் பத்திக்கிச்சி’ பாடலும் 

என் கவிதையில் இடம்பெறும்

ஆனால் அதற்கு இசையமைத்த

ஆதித்தியன் இடம்பெற மாட்டார்

அவருக்கு என் அன்பும் வணக்கங்களும் 

இருந்தாலும்


அகால மரணமடைந்தவர்களுக்கு

அஞ்சலி பாடியே ஒட்டடை அடைந்துபோன 

நவீனக் கவிதையில் நான் மேலுமொரு

ஒட்டடை இழையை சேர்க்க மாட்டேன்


மன்சூர் அலிகான் காலைத் தூக்கிச்

சுழற்றி ஆடும் ஆடலில் 

ஆதிகுடியின் 

கள்ளுகுடி ஆடலை நான் நிச்சயம் காண மாட்டேன்


அந்த நேர சந்தோஷத்துக்கு

என் கவிதைக்கு

ஆதி வரை செல்லத் தெரியாது


எனக்குப் பன்றிக்கறி சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது

ஆனால்

எனக்குள்

இருந்த வேட்டையாடியை 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு

சரணாலயம் ஆகாத காடொன்றுக்குள் 

விட்டுவிட்டு வந்துவிட்டேன்

கவிதைக்குள் வந்து புகுந்துவிடுவானென்ற அச்சத்தில்


அவன் அப்படியே வந்தால் பிரச்சினை இல்லை

வரும் வழியில் உருவான சாமி, மதம், சாதி

என்று இழுத்துக்கொண்டு வந்துவிடுவான்

அவன் அங்கேயே வேட்டையாடிக்கொண்டிருக்கட்டும்


ஆனால்

ஆதியில் தின்ற பன்றிக்கறியின் சுவையை

என் உதிரத்தின் பல்லிடுக்குகளிலிருந்து

எந்தத் துடியிசையின் பல்குச்சி கொண்டும்

என்னால் குத்தி அகற்ற முடியவில்லை


வேட்டையாடத் தெரியாத,

குறைந்தபட்சம்

கவிதையில் வேட்டையாடத் தெரியாத

ஒரு 21-ம் நூற்றாண்டு தமிழ்க் கவிஞன்,

(கவனிக்க ‘கவிஞன்’,

பெண் கவிஞர்கள் ஒருபோதும் 

வேட்டைக் கவிதைகள் எழுத முடியாது

என்ற அளவில் நிம்மதி)

இன்பாக்ஸ்களைத் தாண்டிவரும்

தகுதி இழந்துவிடுகிறான்


எனக்கும்

எனது வேட்டையாடிக்கும் இடையிலோ

மூவாயிரம் ஆண்டுகள் காலத்தொலைவு


கைபேசியின் கூகுள் மேப்ஸால்

முடிந்ததெல்லாம்

பக்கத்தில் உள்ள 

நல்லதொரு பன்றிக்கறி உணவகத்துக்கு

டைரக்‌ஷன் காட்டுவதே


அதுவே பேருதவி

மூவாயிரம் ஆண்டுகளுக்கும் சேர்த்து

டைரக்‌ஷன் காட்டினால்

தாங்க முடியாது என்னால்

ஏற்கெனவே

இந்தியனாகவும் தமிழனாகவும்

தலைக்கு மேல் வந்து உட்கார்ந்திருக்கும்

பல்லாயிரமாண்டுகளை 

கம்ப்யூட்டர் வைரஸ் வந்து அழித்திடாதா

என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன் நான்


சாப்பிட்டு முடித்துவிட்டு

ஒரு தம்மைப் போடுவதற்காக

வாயில் சிகரெட்டை வைத்து

வத்திக்குச்சியைத் தீப்பெட்டியில் 

உரசினால்

சக்கு சக்கு வத்திக்குச்சி

சட்டுன்னுதான் பத்திக்கிச்சு மயிலே மயிலே


நவீன செவ்வியல் கவிதையின்மீது

மன்சூர் அலிகான் ஆடுகிறார்

துயரழியதியுயர்மீப்பெரும்

டிக்டாக் நடனம்

- பெயரிலி துயர்க்கவி



No comments:

Post a Comment