Sunday, April 9, 2023

புனித கல்லறையர் சொன்ன சுவிசேஷம்



தேவனே
நீர் உம்மை
உயிருள்ள அப்பமும்
திராட்சை ரசமும் என்றீர்

நானோ
உயிருள்ள கல்லறையாக
இருக்கிறேன்

யாரேனும் திறந்து பார்த்தால்
இப்படி
வெட்டவெளியைப்
புதைத்துவைத்திருக்கிறார்களே
என்ன மடத்தனம்
என்று காறியுமிழ்வார்கள்

மேலும்
வாழ்வது கல்லறை சுமப்பதற்கான
கூலி
என்று நான் எழுதிக்கொண்ட
கல்லறை வாசகத்தைப் பார்த்து
உம் வாக்காக 
எடுத்துக்கொண்டு
எல்லோரும்
அஞ்சி அகன்றுவிடுகிறார்கள்

சிலுவை சுமத்தலுக்குக்
கிடைத்த வெளிச்சம்
கல்லறை சுமத்தலுக்குக்
கிடைப்பதில்லையே
என்ற கடுப்பில்
உமக்கே நான் செய்த
இடைச்செருகல் அது

சிலுவையில் மரித்தபின்
உம்மையும்
ஒரு கல்லறையில்
கொண்டுபோய்
வைத்தார்கள்
மூன்று நாட்கள் கூட
தாக்குப்பிடிக்க
முடியவில்லை

இப்போதாவது
ஒப்புக்கொள்ளுங்கள்
கல்லறை சுமத்தலில்
நான்
எவ்வளவு பெரிய
வீரன் என்று

-ஆசை 

No comments:

Post a Comment