Friday, March 8, 2024

மகளிர் தினத்தில் காந்தியையும் ஏன் நினைவுகூர வேண்டும்?


ஆசை

பகுதி-1

இன்று 'உலக மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது. வரலாறு படைத்த பெண்கள், வரலாற்றால் மறைக்கப்பட்ட பெண்கள் போன்றோரை இன்று நினைவுகூர்வது வழக்கம். பெண்ணுரிமை வரலாற்றில் பெண்களின் பங்கை முதன்மையாகச் சொல்ல வேண்டியது முக்கியம். அதே நேரத்தில் பெண் முன்னேற்றத்துக்காக ஒரு வகையிலோ பல வகைகளிலோ போராடிய ஆண்களையும் நினைவுகூர்வது அவசியம். இந்திய வரலாற்றில் புத்தரில் தொடங்கி பிற்காலத்தில் ராஜாராம் மோகன்ராய், ஜோதிராவ் பூலே, காந்தி, அம்பேத்கர், பெரியார் முதலான பல ஆண் தலைவர்கள் பெண்களின் முன்னேற்றத்துக்குப் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். பெண்கள் முன்னேற்றத்துக்கு காந்தி ஆற்றிய பணிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

தன் தாயார் புத்தலிபாய், மனைவி கஸ்தூர்பாயில் தொடங்கி கடைசியில் காந்தி சுட்டுக்கொல்லப்படும்போது அவருடைய ஊன்றுகோல் போல் கூட நடந்துவந்த மனு, ஆபா போன்றோர் வரை காந்தி வாழ்வில் இடம்பெற்ற பெண்கள் ஏராளமானோர். காந்தியைப் போல் பெண்களை ஈர்த்த தலைவர்கள் இந்திய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் வெகு குறைவு. எனினும், இளமைப் பருவத்தில் காந்தி வழக்கமான இந்திய ஆண் போலவே பெண் குறித்த பார்வையைக் கொண்டிருந்தார். 13 வயதிலேயே காந்திக்குத் திருமணம் செய்யப்படுகிறது. தன் மனைவி கஸ்தூர்பாவை ஒரு போகப் பொருளாகவே காந்தி ஆரம்பத்தில் கருதி வந்திருக்கிறார். காமமும் சந்தேக உணர்ச்சியும் அவரை ஆரம்பத்தில் வாட்டிவதைத்தன.

ஆனால், அவரது தென்னாப்பிரிக்கக் காலங்களில் போகப் போகப் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. கஸ்தூர்பாவைத் தன் மனைவி என்ற நிலையிலிருந்து தனது சத்யாகிரகப் போராட்டத்தின் சக பயணி என்ற நிலையில் அடையாளம் காண்கிறார்.

பெண்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்துதல்

உலகிலேயே பெண்களை அதிக அளவில் திரட்டி நடத்தப்பட்ட போராட்டங்களில் மிகவும் பிரம்மாண்டமானது இந்திய சுதந்திரப் போராட்டம் என்றால் அதற்கு முன்னோடிப் போராட்டம் என்பது தென்னாப்பிரிக்காவில் நடந்த சத்தியாகிரகம்தான். இவை யாவுமே காந்தியால்தான் சாத்தியமானது.

காந்தி, தனது தென்னாப்பிரிக்கப் போராட்டங்களில் ஆரம்பத்தில் பெண்களை நேரடியாக ஈடுபடுத்தவில்லை. அவரது பண்ணைகளிலும் அலுவலகத்திலும் பெண்களுக்கு முக்கியமான பங்கு அளிக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு கருதி பெண்களை ஆரம்பத்தில் போராட்டத்தில் காந்தி ஈடுபடுத்தவில்லை. ஆனால், கிறிஸ்துவத் திருமணங்களைத் தவிர மற்ற திருமணங்கள் டிரான்ஸ்வாலில் செல்லாது என்று ஒரு சட்டத்தை அங்குள்ள அரசு இயறிய பிறகு பெண்களைப் போராட்டக் களத்துக்குக் கொண்டுவந்தே ஆக வேண்டும் என்று கருதுகிறார் காந்தி. கஸ்தூர்பாவும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் குழுவொன்று ட்ரான்ஸ்வாலிலிருந்து அணிவகுத்துச் சென்று நேட்டால் பகுதிக்குள் நுழைந்து கைதாவது என்று திட்டமிடப்பட்டது. இவர்கள் ‘ட்ரான்ஸ்வால் சகோதரிகள்’ என்று காந்தியால் அழைக்கப்பட்டார்கள். இந்தச் சகோதரிகள் கைதாகவில்லையென்றால் அங்கிருந்து நேராக நேட்டால் மாகாணத்தின் நியூகேஸில் பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்துக்குச் சென்று அங்குள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்படித் தூண்ட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால் காந்தியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ட்ரான்ஸ்வால் சகோதரிகள்’ பதினோரு பேரில் பத்துப் பேர் தமிழ்ப் பெண்கள். அதே போல் காந்தியால் ‘நேட்டால் சகோதரிகள்’ என்று அழைக்கப்பட்ட நேட்டால் பிரதேசப் பெண்களின் இன்னொரு குழு, அனுமதி இல்லாமல் ட்ரான்ஸ்வால் பகுதிக்குள் நுழைந்து கைதாக வேண்டும். இதுதான் திட்டம்.

திட்டமிட்டதுபோல் ட்ரான்ஸ்வாலில் நுழைய முயன்ற ‘நேட்டால் சகோதரிகள்’ கைதுசெய்யப்பட்டார்கள். அதையடுத்து போராட்டம் உக்கிரம் பெறவே மேலும் பல பெண்கள் இணைந்துகொண்டு அந்தப் போராட்டத்தை ஒரு தொடரோட்டம் போல மாற்றினார்கள். நேட்டால் பகுதிக்குள் நுழைந்த ‘ட்ரான்ஸ்வால் சகோதரிகள்’ கைதுசெய்யப்படாததால் அவர்கள் நேராக நியூகேஸில் சுரங்கப் பகுதிகளுக்குச் சென்றார்கள். அங்குள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்படி வலியுறுத்தவே அவர்களும் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் விஸ்வரூபமெடுத்தது. ‘ட்ரான்ஸ்வால் சகோதரிகள்’ கைதுசெய்யப்பட்டு, மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இறுதிக் கட்டத்தில் இப்படிப் பெண்களை ஈடுபடுத்தி தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்தில் காந்தி வெற்றியைப் பெற்றார். இதன் தொடர்ச்சியே இந்தியப் போராட்டங்களில் காந்தி பெண்களை ஈடுபடுத்தியது.

இந்தியாவில் பெண்களின் நிலை

காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய காலத்தில் இந்தியப் பெண்களின் நிலையைத் தற்போதைய பெண்களின் நிலையுடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அரசியல், பொது வெளி, வேலைவாய்ப்பு, விளையாட்டு, கலை-இலக்கியம் போன்றவற்றில் முன்பு நினைத்தே பார்த்திருக்க முடியாத அளவில் பெண்களின் பங்களிப்பு தற்போது நிகழ்கிறது. வாக்குரிமை, தேவதாசி முறை ஒழிப்பு, இந்துமதச் சீர்திருத்தச் சட்டம் போன்ற முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆயினும், பெண்களுக்கெதிரான வன்முறை, சாதி ஆணவக் கொலை முதலான கொடுமைகள் ஒழிவது போல் தெரியவில்லை. எனினும், காந்தி இந்தியாவுக்குத் திரும்பிய காலத்துக்கும் தற்போதைய காலத்துக்கும் இடையே கணிசமான அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. இதில் காந்திக்கும் கணிசமான பங்கு இருக்கிறது என்பதையும் மறைக்க முடியாது.

இந்தியாவுக்குத் திரும்பிய காந்திக்கு இங்கே காணக்கிடைத்த காட்சிகள் அவரை மிகவும் வேதனைக்குள்ளாக்கின. இந்தியர்கள் தங்கள் பெண்களை அடிமையிலும் மோசமான நிலையிலேயே வைத்திருந்தனர் (இன்னமும் அப்படித்தான்). பழமையில் ஊறிப் போய் மிகவும் பிற்போக்கான சமூகமாக இந்தியா காட்சியளித்ததை அவர் கண்டுணர்ந்தார். தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை ஒழிக்காமல் தேச விடுதலை சாத்தியமில்லை என்றே காந்தி கருதினார்.

இந்தியச் சுதந்திரப் போராட்டக் களத்தில் காந்தி நுழைவதற்கு முன் படித்த, மேட்டுக்குடி ஆண்கள் மட்டுமே அதை ஆக்கிரமித்திருந்தனர். காந்தி வந்த சில ஆண்டுகளுக்குள்ளேயே காங்கிரஸ் கட்சியில் ஏராளமான ஏழை எளிய மக்கள் தங்களை இணைத்துக்கொண்டார்கள். அதைவிட முக்கியம், காந்தியின் கீழ் காங்கிரஸில் இணைந்து செயலாற்றிய பெண்களின் எண்ணிக்கைதான்.

போகும் இடங்களிலெல்லாம் எந்தக் கூட்டத்தில் பேசினாலும் தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் இவற்றுக்கு எதிராகத்தான் அதிகம் பேசுவார். கூட்டத்தின் ஓரத்திலோ, வீட்டுத் திண்ணைகளிலோ மறைந்து நின்றபடி காந்தியின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கும் பெண்களைக் கூட்டத்தை நோக்கி வரச் சொல்வார். ஆண்களும் பெண்களும் கலந்து உட்காரச் சொல்வார். பெண்களைப் போராட்டக் களத்துக்கு அனுப்பும்படி தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்துவார். போராட்டங்களில் பிரதான இடங்களைப் பெண்களுக்குத் தருவார். இப்படியாக, இந்திய வரலாற்றில் பெருந்திரள் பெண்களை முதன்முதலில் அரசியல்படுத்தியவரானார் காந்தி.

பொதுவாக, பல கூட்டங்களில் பேசும்போது காந்தி தன் கையை விரித்து ஐந்து விரல்களையும் காண்பிப்பார். அதைப் பற்றி விவரிப்பார். முதல் விரல் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமத்துவம் கிடைப்பதற்கான லட்சியம்; இரண்டாவது விரல், நூல் நூற்றல்; மூன்று, மது உள்ளிட்ட போதை வகைகளைத் தவிர்த்தல்; நான்கு, இந்து-முஸ்லிம் ஒற்றுமை. ஐந்து, ஆண்-பெண் சமத்துவம். சுதந்திரம் என்பது இந்த ஐந்து விரல்களில் ஒன்று கூட இல்லை என்பதை நாம் கவனிக்கலாம். இந்த ஐந்து விஷயங்களையும் சாதித்தாலே சுதந்திரம் என்பது தானாக வந்துவிடும் என்பது காந்தியின் நம்பிக்கை. அதுவரை ‘சுதந்திரம்’ என்பது மட்டுமே இந்தியச் சுதந்திரப் போரட்டத்தில் பிரதான பேசுபொருளாக இருந்தது. ஆனால், மேற்கண்ட ஐந்து விஷயங்களையும் அதில் இணைத்ததன் மூலம் காந்தி பெரும் புரட்சியையே நிகழ்த்தினார்.

சக பயணிகள்!

மாற்றத்தைத் தன்னிடமிருந்தே காந்தி ஏற்படுத்தினார். பெண்களையே தனது வழித்துணைகளாகவும் உறுதுணைகளாகவும் தேர்ந்தெடுத்துக்கொண்டார். அவரோடு விவாதிக்கும்படியும் மாறுபாடான கருத்தைக் கொண்டிருந்தால் தைரியமாக வெளிப்படுத்தும்படியும் பெண்களை அவர் ஊக்குவித்தார். முடிவுகளை எடுப்பதில் மனைவியருக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். தங்கள் கணவர்கள் அப்படி அனுமதிப்பதில்லை என்று சில பெண்கள் காந்தியிடம் முறையிட்டபோது, “எங்கள் வீட்டில் என் மனைவிக்குதான் முதல் இடம், நான் இரண்டாவது இடத்தில்தான்” என்று அவர்களுக்கு பதில் கூறினார். முதல் இடம், முன்னுரிமை என்பனவற்றை ஆண்கள் தர வேண்டும் என்பதைவிட பெண்கள் அந்த இடத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார்.

தீண்டாமை ஒழிப்பில் காந்தி பெண்களையே அதிகம் நம்பியிருந்தார். அவரது உண்ணாவிரதத்துக்குச் செவிமடுத்து ஜவாஹர்லால் நேருவின் தாயார் ஸ்வரூப் ராணி, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவரின் கைகளிலிருந்து உணவைப் பெற்று உண்டார். அவரது முன்னுதாரணத்தை இந்தியா முழுவதும் பல பெண்கள் பின்பற்றினார்கள்.

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் அவர் கைராட்டையைப் பிரதான போர் ஆயுதமாக முன்வைத்தபோது பல தலைவர்களாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காந்தியின் செயலைக் கிண்டலுடன் அணுகியவர்களும் இருந்தார்கள். ஆனால், பொருளாதாரத் தன்னிறைவுக்கு நெசவு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருந்த காந்தி கைராட்டை சுயராஜ்ஜியத்தைப் பெற்றுத் தரும் என்று நம்பினார். இந்த விஷயத்தில் பெண்களையே அவர் பெரிதும் நம்பினார். வீட்டில் ஆடை தொடர்பான தேர்வுகளில் பெண்களுக்குப் பெரும் பங்கு இருப்பதால் கைராட்டையை அவர்களிடத்தில் எடுத்துச் சென்றார். அந்நியத் துணி பகிஷ்கரிப்பில் பெண்களின் பங்கு எந்த அளவுக்கு இருந்தது என்று பல படங்களில் நாம் பார்த்திருக்கிறோம் (ஒரு வெகுஜன உதாரணம்: ஷங்கரின் ‘இந்தியன்’). கைராட்டையும் அந்நியத் துணி பகிஷ்கரிப்பும் பிரிட்டிஷ் பொருளாதாரத்தை அசைக்கவே செய்தன. அதன் விளைவாக இங்கிலாந்தின் துணி ஆலைகள் பல மூடப்பட்டன.

போராட்டங்களில் பெண்களைத் தலைமை தாங்கச் செய்தது

தென்னாப்பிரிக்காவைப் போலவே இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்கள் பலவற்றிலும் பெண்களைத் தலைமையேற்கச் செய்தார் காந்தி. உப்பு சத்தியாகிரகத்தின் ஒரு பகுதியை கவிக்குயில் சரோஜினி தலைமையேற்று நடத்தினார். காந்தியுடன் கஸ்தூர்பாவும் பல போராட்டங்களில் கலந்துகொண்டு கைதாகியிருக்கிறார். ‘வெள்ளையரே வெளியேறுக’ இயக்கத்தை காந்தி முன்னெடுத்தபோது அவர் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். காந்தி கலந்துகொள்வதாக இருந்த கூட்டத்தில் தான் கலந்துகொண்டு பேசப்போவதாக கஸ்தூர்பா அறிவித்தார் அதைத் தொடர்ந்து அவரும் சிறையில் அடைக்கப்பட்டார். ஆகா கான் மாளிகையில் சிறைவைக்கப்பட்டிருந்தபோதுதான் கஸ்தூர்பா காலமானார். மீராபென், மனு காந்தி என்று பலரும் காந்தியுடன் கைதாகியிருக்கிறார்கள்.

தனது போராட்டங்களில் பெண்களை அதிகம் காந்தி நம்பியதற்கு முக்கியமான காரணம் பெண்கள் இயல்பாகவே அகிம்சையைக் கடைப்பிடிப்பவர்கள் என்பதுதான். உடல் வலு இல்லாததால் பெண்கள் அகிம்சையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதல்ல அதன் அர்த்தம். காந்தியைப் பொறுத்தவரை அகிம்சைக்கே அதிக வீரம் வேண்டும். ஆகவே, ஆண்களைவிட பெண்களே வீரமும் துணிவும் கொண்டவர்கள் என்று காந்தி உறுதியாக நம்பினார். இந்த நம்பிக்கை பரஸ்பரம் பெண்களை காந்தி நோக்கியும் காந்தியைப் பெண்களை நோக்கியும் நகர்த்தியது. இவ்வளவு நாட்களாக நம்மை யாருமே பொருட்படுத்தாத நிலையில் நம்மை நோக்கி ஒருவர் பேசுகிறார்; நம்மைப் பிரதானப்படுத்திப் பேசுகிறார் என்ற எண்ணம் காந்தியை நோக்கிப் பெண்களைப் பெரும் படையாகத் திரண்டுவரச் செய்தது.

ஆயுதம் தாங்கிய போராட்டம் என்பது முழுமையாக ‘ஆண்மை’ என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது; அப்படியொரு போராட்டத்தை காந்தி முன்னெடுத்திருந்தால் ஒருபோதும் பெண்கள் இப்படியொரு ஆதரவை காந்திக்குக் கொடுத்திருக்க மாட்டார்கள். வன்முறைப் பாதையைப் பெண்கள் நாடாததற்கு உடல்ரீதியாக அவர்கள் பலவீனமானவர்கள் என்று வழக்கமாகச் சொல்லப்படும் காரணத்தை காந்தி நம்பவில்லை. வன்முறையின் பலனின்மையைப் பெண்கள் உணர்ந்திருந்ததாலும், அகிம்சை என்ற ஆயுதத்தைத் தனக்கும் முன்பே பல நூற்றாண்டுகளாக இந்தியப் பெண்கள் வெற்றிகரமான ஆயுதமாகப் பிரயோகித்துவந்திருந்ததாலும்தான் வன்முறைப் பாதையைத் தவிர்த்துப் பெண்கள் தன்னை நோக்கி வந்தார்கள் என்று காந்தி நம்பினார்.

நகங்களும் பற்களும்

அகிம்சையில் காந்தி சமரசமே செய்துகொள்ளவில்லை என்றாலும் பெண்களுக்கு அதில் விதிவிலக்கு அளிக்கவும் செய்தார். “ஒரு பெண் தாக்குதலுக்கு உள்ளாகும்போது இம்சையைப் பற்றியோ அகிம்சையைப் பற்றியோ யோசித்துக்கொண்டிருக்க மாட்டாள். அவளது முதன்மையான கடமை தற்காப்புதான். தனது கண்ணியத்தைக் காத்துக்கொள்வதற்கு அவளுக்கு எந்த வழிமுறை அப்போது தோன்றினாலும் அதைப் பிரயோகிப்பதற்கு அவளுக்கு முழு உரிமை உண்டு. கடவுள் அவளுக்கு நகங்களும் பற்களும் கொடுத்திருக்கிறார். தனது முழு பலத்துடன் அவற்றை அவள் பயன்படுத்த வேண்டும். தன் முயற்சியில் அவள் உயிரிழக்கும்படி ஆனாலும் அதற்கும் அவள் தயாராக இருக்க வேண்டும்” என்கிறார்.

எனினும் உடல் வலிமையை விட மனவலிமைக்கு முன்னுரிமை கொடுக்கிறார் காந்தி. பெண்களைச் சிறுவயதிலிருந்து மனத்துணிவுடன் வளர்க்க வேண்டும் என்று பெற்றோருக்கு அறிவுரை கூறுகிறார். பெண்களைப் பொத்திப் பொத்தி வளர்க்கும் பெற்றோர்களையும் திருமணத்துக்கான பொருள்போல பெண்களைப் பராமரிக்கும் பெற்றோர்களையும் காந்தி கடுமையாகச் சாடினார்.

பெண்களுக்கெதிரான தீமைகள் குறித்த காந்தியின் கருத்துக்களையும் செயல்பாடுகளையும் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்!


பகுதி-2

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களைப் போலவே பெண்களின் நிலையும் காணப்பட்டதை காந்தி கண்டார். இதில் பிராமணப் பெண்களும் விதிவிலக்கில்லை. ஆகவே, பெண்களுக்கெதிரான கொடுமைகளைப் பற்றித் தனது கூட்டங்களில் தொடர்ந்து பேசிவந்தார். பெண்களின் பிரச்சினைகள் குறித்துத் தொடர்ந்து எழுதியும் வந்தார். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் உயிர்நாடியாகப் பெண்விடுதலை, தீண்டாமை ஒழிப்பு, இந்து-முஸ்லீம் ஒற்றுமை ஆகியவற்றை ஒன்றாகக் கருதினார் காந்தி.

குழந்தைத் திருமணம்

13 வயதிலேயே 14 வயது கஸ்தூர்பாவுடன் திருமணம் செய்துவிக்கப்பட்டவர் காந்தி. கஸ்தூர்பாவை ஆரம்ப நாட்களில் தான் கொடுமைப்படுத்தியதை நினைத்துப் பின்னாட்களில் அவர் வருந்தினார். குழந்தைத் திருமணத்தின் தீவிர எதிர்ப்பாளராக காந்தி மாறினார். ”குழந்தைத் திருமணத்தின் பலிகடாக்கள் பெண் குழந்தைகள்தான். இதனால் 12 வயதுக்குள்ளேயே ஆயிரக் கணக்கான பெண் குழந்தைகள் நம் பார்வையிலிருந்து மறைந்துபோகிறார்கள். மனைவிகளாக மாற்றி வீட்டுக்குள்ளேயே அடைத்துவைக்கப்படுகிறார்கள்” என்றார் காந்தி. மேலும், “15 வயது பெண் என்பவள் குழந்தை பெற்றுக்கொள்ளத் தகுதியானவளே அல்ல. அப்படிப்பட்ட பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தை மிகவும் நோஞ்சானாக இருக்கும். அவர்களை வளர்ப்பதே பெரும் வேலையாகிவிடும். இதன் விளைவாகப் பிறந்த ஒரு ஆண்டுக்குள் பல குழந்தைகள் இறந்துவிடுகின்றன. இதுபோன்ற குழந்தை மரணங்களுக்குக் குழந்தைத் திருமணமும் பொருந்தாத் திருமணமும்தான் (குறைந்த வயதுடைய பெண்ணுக்கும் கிழவருக்கும் இடையில் நடக்கும் திருமணங்கள் போன்று) காரணம்” என்கிறார் காந்தி. இந்து மத சாஸ்திரங்களைக் காரணம் காட்டி இந்தப் பழக்கங்களைப் பின்பற்றுவதையும் கடுமையாக இப்படிச் சாடுகிறார்: ““சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் சமஸ்கிருத நூல்களை மேற்கோள் காட்டி இந்த அநீதியான வழக்கத்தைப் புனிதப்படுத்த முடியாது. சிறு வயதில் தாய்களான பல குழந்தைகளின் ஆரோக்கியம் கெட்டழிந்து போவதை நான் பார்த்திருக்கிறேன். இந்தக் குழந்தைப் பருவத் திருமணத்தின் கொடுமைகளோடு, குழந்தைப் பருவ விதவை நிலையும் சேரும்போது இந்தச் சோகம் முழுமையாகிறது.” (யங் இந்தியா பத்திரிகை).

பெண்களின் திருமண வயது

காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தபோது, பெண்கள், ஆண்கள் இருவரின் திருமண வயதை உயர்த்துவது குறித்த மசோதாவைக் கொண்டுவருவதற்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பாடுபட்டுக்கொண்டிருந்ததை அறிந்தார். காந்தியும் வெகு நாட்களாகக் குழந்தைத் திருமணத்தை எதிர்த்துப் பேசிவந்தவராதலால் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் முயற்சிகளுக்கு முழு ஆதரவை அளித்தார். மூன்று வயதிலேயே பல குழந்தைகளுக்குத் திருமணம் ஆகிவிடுவதால் பெண்ணின் திருமண வயதை 14-ஆக உயர்த்திச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று காந்தி வலியுறுத்திவந்தார். ஆனால், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி இந்த வயதை 16-ஆக உயர்த்துவதற்காகப் போராடிக்கொண்டிருந்தார். தான் நிர்ணயித்த வயதைவிட இதுதான் சரியானது என்று காந்தி உணர்ந்தார். டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் முயற்சியில் கொண்டுவரப்பட்ட மசோதாவைப் பற்றி காந்தி பேசும்போது, “மசோதாவைப் பற்றிய என்னுடைய அறியாமையைப் பற்றி நான் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் சம்மதம் அளிக்கும் வயதை உயர்த்துவதை நான் பலமாக ஆதரிக்கிறேன். 14 வயது என்று மட்டுமல்லாது 16 வயதென்று உயர்த்தட்டும். மசோதாவின் உள்ளடக்கத்தைப் பற்றி என்னால் எதுவும் கூற இயலாது. ஆனால் ஒன்றுமறியாத, வயதுவராத குழந்தைகளை மனிதனின் பேராசையிலிருந்து காப்பாற்றும் நோக்கம் கொண்ட எந்த இயக்கத்தையும் மனதார வரவேற்கிறேன்… ஆனால் பொதுமக்களின் இசைவு இல்லாததால் ஏற்கெனவே இருக்கும் சட்டம்கூடத் தடையாக இருப்பதை நான் துக்கத்துடன் அறிவேன். எனவே, ஒரு சீர்திருத்தவாதியின் செயல்பாடு மற்ற தொழில்களைப் போல மிகவும் கடினமானது. விடாமல் தொடர்ந்து போராடுவது மூலம்தான் இந்து மதத்தைச் சார்ந்த பொதுமக்களிடம் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இந்தியப் பெண்கள் உரிய காலத்திற்கு முன்பாகவே மூப்படைந்து, இறக்கும் இந்த நிலையிலிருந்து காப்பாற்ற உயரிய வேலையில் முனைந்து செயல்படுபவர்களுக்கு வெற்றி கிட்ட வாழ்த்துகிறேன். இதனால் இந்து மதம் கேடு கெட்ட நலிந்தவர்களை உண்டாக்கும் பொறுப்பிலிருந்தும் விடுபடும்” (யங் இந்தியா பத்திரிகை) என்றார்.

விதவை மறுமணம்

அப்போதல்லாம் வீட்டுக்கு நான்கைந்து விதவைப் பெண்களைக் காண்பது வெகு எளிது. இதில் கொடுமை எதுவென்றால் இவர்களில் பலரும் குழந்தைகள். இந்த நிலைக்கு எதிராக காந்தி தொடர்ந்து குரல் கொடுத்தது மட்டுமல்லாமல் மாற்றங்களை ஏற்படுத்தும் விதத்திலும் செயல்பட்டிருக்கிறார். “மதத்தின் பெயராலும் மரபின் பெயராலும் பெண்கள் மீது விதவை நிலையானது பெண்கள் மீது திணிக்கப்படுகிறது. இதனால் குடும்பம் மட்டுமல்லாமல் மதமும்தான் சீர்கேடு அடைகிறது. இந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் இப்படித் திணிக்கப்பட்ட விதவை நிலையானது ஒழிக்கப்பட வேண்டும். குழந்தை விதவையர்களுக்கு அவர்கள் வளர்ந்த பிறகு முறையாகவும் நல்ல விதத்திலும் திருமணம் செய்ய வேண்டுமே தவிர மறுமணம் செய்யக்கூடாது. ஏனெனில், அவர்கள் அதற்கு முன்பு உண்மையில் திருமணம் செய்துவிக்கப்படவேயில்லை” என்று கைம்மை நிலையைக் குறித்துக் கடுமையாகச் சாடியிருக்கிறார். மறுமணம் என்பதை கணவரை இழந்த பெண்ணுக்கே அவர் பரிந்துரைத்தார் தவிர மனைவியை இழந்த கணவருக்கு அவர் அவ்வளவாகப் பரிந்துரைக்கவில்லை. காந்தியின் மூத்த மகன் ஹரிலாலின் மனைவி இறந்தபிறகு ஹரிலால் மறுமணம் செய்துகொள்ள விரும்புகிறார். காந்தி முதலில் அதற்கு அனுமதிக்கவில்லை. பிறகு, விதவைப் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். ஆனால், அதற்குள் ஹரிலால் மீட்க முடியாத அளவுக்குச் சீரழிவை அடைகிறார்.

தேவதாசி ஒழிப்பு

தேவதாசி முறைக்கு எதிராகத் தமிழகத்தில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பெரும் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது அதற்கு காந்தி முழு ஆதரவு தந்தார். காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தபோது முத்துலெட்சுமி ரெட்டி அவரைச் சந்தித்து ஆதரவு கோரினார். அதன் விளைவாக அந்தச் சுற்றுப்பயணத்தில் எல்லா இடங்களிலும் தேவதாசி முறைக்கு எதிராகத் தீவிரமாக உரையாற்றினார் காந்தி. “தேவதாசி வழக்கம் ஒரு பெருங்குற்றம். இந்தக் குறையை நீக்கப் பெண்கள் வேலை செய்தாலே தவிர, என்னைப் போன்ற ஆண்கள் அதை ஒழிக்க முயல்வதுகூட வீண்தான். நாம் நமது சகோதரிகளைக் கொடிய வேட்கைக்குப் பயன்படுத்திவிட்டு அதற்குக் கடவுள் பெயரை வைப்பது நாம் இழைக்கும் இரட்டைக் குற்றம். சமூகத்தின் வேரையே இதைப் போன்ற கொடுமைகள் அரித்துவிடும்”என்று காந்தி மயிலாடுதுறையில் உரையாற்றினார். (’டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை’, வெளியீடு: அவ்வை இல்லம் - ராஜலட்சுமி அறக்கட்டளை, சென்னை).

அப்போது மதறாஸ் சட்டமன்ற உறுப்பினராக முத்துலெட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி நடத்திக்கொண்டிருந்தார். அதனால் பலரும் அரசாங்கப் பொறுப்புகளை உதறித் தள்ளிவிட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றனர். எனினும், தேவதாசி பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்காக முத்துலெட்சுமி அவசியம் சட்டசபைக்குப் போக வேண்டும் என்று காந்தி அனுமதி கொடுத்தார்.

வரதட்சிணை, பெண் சிசுக் கொலை, சாஸ்திரங்கள், பர்தா, பெண்கல்வி போன்றவை குறித்து அடுத்த பகுதியில்.


பகுதி-3

சாதிதான் வரதட்சிணைக்குக் காரணம்

வரதட்சிணை கொடுத்தும் வாங்கியும் நடத்தப்படும் திருமணத்தை ‘திருமண வியாபாரம்’ (Marriage of Purchase) என்று அழைக்கிறார் காந்தி. வரதட்சிணைக்கு மூல காரணம் சாதியமைப்புதான் என்பதை உணர்ந்த காந்தி இந்த மூடப்பழக்கம் அடியோடு ஒழிய வேண்டுமென்கிறார். “பெற்றோர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் விவகாரமாகத் திருமணம் இருப்பது நிறுத்தப்பட்டாக வேண்டும். இந்த வழக்கம் சாதியோடு பின்னிப் பிணைந்தது. ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த சில நூறு இளைஞர்கள் அல்லது இளம்பெண்களுக்குள்ளேதான் இல்லற வாழ்வின் துணை தேர்ந்தெடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் வரை வரதட்சிணைக்கு எதிராக என்னதான்பேசினாலும் அது ஒழியாது. இந்தக் கொடுமையை ஒழிக்க வேண்டுமெனில் அந்தப் பெண்களோ இளைஞர்களோ பெற்றோர்களோ சாதியின் தளைகளை அறுத்தெறிந்து வேறு சாதிகளில் துணையைத் தேடிக்கொள்ள வேண்டும்” (ஹரிஜன் பத்திரிகை, 23-5-1936) என்கிறார். அதுமட்டுமில்லை, இன்னும் புரட்சிகரமாக “தகுந்த துணை கிடைக்கவில்லையெனில் ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருக்கத் துணியவேண்டும்” (ஹரிஜன் பத்திரிகை, 23-5-1936)

பெண் சிசுக் கொலை

தேசத்தைப் பெண்ணாகவும் நதிகளைப் பெண்களாகவும் வழிபடும், அப்படி வழிபடுவதில் பெருமை கொள்ளும் இந்த தேசத்தில்தான் பெண்சிசுக்கொலை முன்னுதாரணமில்லாத அளவில் நடைபெறுகிறது. பெண்கல்வி, தொழில்நுட்பம், சட்டப் பாதுகாப்பு போன்றவை அதிகரித்திருக்கும் இந்தக் காலத்திலும் பெண்சிசுக்கொலை நூதன வடிவங்களில் நடந்துகொண்டுதானிருக்கிறது. 2011-ல் வெளியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 2001-ல் இருந்ததைவிட 30 லட்சம் பெண் குழந்தைகள் குறைவாகவே இருந்தார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் நமக்குத் தெரியவருகிறது. விழிப்புணர்வு மிகுந்திருக்கும் காலத்திலேயே இப்படி என்றால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எப்படி இருந்திருக்கும்?

சுதந்திரப் போராட்டத்தின் நெடிய பயணத்தில் காந்தி எந்த விஷயத்தையும் விட்டுவைக்கவில்லை. பெண்சிசுக்கொலையைப் பற்றிக் கடுமையாகப் பேசியும் எழுதியும் வந்தார். பெண்சிசுக்கொலைக்கு எதிராக ராஜஸ்தானில் செயல்பட்டுவரும் அமைப்பொன்று காந்தியின் ‘ஹரிஜன்’ பத்திரிகைக்கு கடிதமொன்று எழுதியது. அதைப் பற்றி காந்தி இப்படி விவரிக்கிறார்: “இந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த நாட்டில் பெண்சிசுக்கொலை போன்ற கொடிய நடைமுறை இன்றும் நிலவுவதை நம்புவதற்குக் கடினமாகவே உள்ளது. ஆனால், என் முன்னே கிடக்கும் இந்தக் கடிதம் என்னை நம்பச் செய்யும்படி வலியுறுத்துகிறது… இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான வழக்கமொன்றைத் தொடர்வதற்குச் சொல்லப்படும் எந்தவித சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கொடிய வழக்கத்தை ஒழிக்கும் செயலுக்குப் பொதுமக்களிடையே ஆதரவைத் திரட்ட வேண்டும்…. ஆனால் மிக முக்கியமான விஷயம் என்பது ஆதாரங்களைத் திரட்டுவதுதான். கடந்த ஆண்டு எந்த இடங்களிலெல்லாம் பெண்சிசுக்கொலை நடைபெற்றது என்பதையும் எத்தனை பெண்சிசுக்கள் கொல்லப்பட்டனர் என்பதையும் தெளிவாக உணர்த்தும் வகையிலான வரைபடமொன்றை உருவாக்க வேண்டும்.” (ஹரிஜன் சேவக், 4-7-1936). காந்தி இப்படி எழுதி 80 ஆண்டுகளுக்கு மேலாகிறது. நாம் இன்னமும் ஆண்டுதோறும் வரைபடங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்பது எத்தனை அவமானகரமான நிலை!

சாஸ்திரங்கள்

பெண்களின் தற்போதைய நிலைக்கு சாஸ்திரங்கள்தான் மிக முக்கியமான காரணம் என்று காந்தி நம்பினார். காலப்போக்கில் சாஸ்திரங்களில் ஏற்பட்ட இடைச்செருகல் காரணமாக பெண்ணடிமைத்தனம், தீண்டாமை போன்றவை இந்திய சமூகத்தில் ஆழமாக வேரூன்றிவிட்டன என்று கருதினார். மனசாட்சிக்கும் நியாயத்துக்கும் பொருந்தும் விதத்தில் சாஸ்திரங்களில் இருப்பவற்றையே காந்தி ஏற்றுக்கொள்வார். சாஸ்திரம் என்பதற்காக அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை காந்தி ஒப்புக்கொள்ளவில்லை. பெண்கள் ஆண்களைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்று மனுஸ்மிருதி கூறியதை ஒருவர் காந்தியிடம் சுட்டிக்காட்டுகிறார். அப்படி மனுஸ்மிருதி கூறியதை “நான் புனிதம் என்று ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று காந்தி பதிலளிக்கிறார்.

பர்தா என்றொரு சிறை

இஸ்லாமியச் சமூகத்தில் மட்டுமல்லாமல் வட இந்தியச் சமூகங்கள் பலவற்றிலும் பர்தா என்றொரு பழக்கம் இருப்பதைக் கண்ட காந்தி அதற்கெதிராகத் தொடர்ந்து பேசிவந்தார். பெண்களை ஒடுக்குவதன் மூலம் பர்தாவும் சுயராஜ்ஜியத்தின் வழியில் தடைக்கல்லாக இருந்ததை காந்தி சுட்டிக்காட்டினார். “பர்தா என்ற சுவரை எழுப்பிக் கற்பு என்ற விஷயத்தைக் காக்க முடியாது” என்றார். “பெண்ணின் கற்பு பற்றி ஏன் இவ்வளவு பதற்றம் ஏற்படுகிறது? ஆண்களின் கற்பு என்ற விஷயத்தில் பெண்கள் தலையிட முடியுமா? பெண்ணின் தூய்மையே ஆணின் தூய்மையே வெளியிலிருந்து திணிக்க முடியாது. ஒருவரின் சுய முயற்சியினால் உள்ளுக்குள்ளிருந்து வருவதுதான் ஒழுக்கத் தூய்மை” என்று காந்தி பேசினார். அது அட்டுமல்லாமல் கடவுள் அளித்த கொடைகளுள் ஒன்றான காற்றோட்டத்தைப் பெண்கள் அனுபவிக்க முடியாமல் பர்தா தடுத்துவிடுகிறது என்று காந்தி கருதினார். ஒருமுறை காந்தியைச் சந்திக்க இஸ்லாமியப் பெண்மணி ஒருவர் பர்தா அணிந்தபடி வந்தார். “உங்கள் சகோதரனைச் சந்திக்க வரும்போது எதற்கு முகத்திரை” என்று அவரிடம் அன்புடன் கடிந்துகொண்டார் காந்தி. இந்து பர்தாவோ முஸ்லிம் பர்தாவோ ஒரு பெண்ணின் தூய்மையைப் பாதுகாத்துவிட முடியாது. சுயகட்டுப்பாடும், தூய்மையான மனமும்தான் ஒரு பெண்ணுக்கு உண்மையான காவல் என்று காந்தி கருதினார்.

பெண்கல்வி

பெண்கள் கல்வி கற்பது அவர்களின் விடுதலைக்கு மிகவும் அவசியம் என்று கருதிய காந்தி பள்ளி, கல்லூரிகளின் பெண்கள் சேர்வதைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். சம்பாரணில் அவர் தொடங்கிய பள்ளிகளில் பெண் குழந்தைகள் நிறைய பேரைச் சேர்த்தார். தனது ஆசிரமங்களில் இருந்த பெண்களும் முறையான கல்வியைப் பெற வழிசெய்தார். வெறும் கல்வி மட்டும் ஒரு பெண்ணுக்குத் துணிவைத் தந்துவிடாது என்பதால் துணிவு, அறம் போன்றவற்றை ஊட்டும்விதத்தில் கல்வி முறை இருக்க வேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார். காந்தி தொடங்கிய பள்ளிக்கூடங்கள் மட்டுமல்லாமல் காந்தியவாதிகள் பலரும் தொடங்கி, இன்னமும் நடந்துகொண்டிருக்கும் பள்ளிக்கூடங்கள் பல பெண் கல்வியில் காந்தியின் பங்களிப்பைப் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன. 

காந்தியை மறப்பது ஏன்?

இந்தியப் பெண்களின் முன்னேற்றத்துக்கு காந்தி பெரும் பங்காற்றியிருந்தாலும் பெண் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட ஆண்களைப் பற்றி நினைவுகூரும் பலரும் காந்தியை மறந்துவிடுவது விந்தையே. பெண்கள் குறித்த காந்தியின் சிந்தனைகளில் சில, புராண உதாரணங்களை ஒட்டியதாகவும், முற்போக்கானவை இல்லை என்றும் கருதப்பட்டாலும்கூட இந்தியப் பெண்களின் விடுதலைக்கு அவர் ஆற்றியிருக்கும் பங்களிப்பு யாருக்கும் குறைந்ததில்லை. இந்தியப் பெண்களைப் பெருந்திரளாக அரசியல்படுத்தியதிலிருந்து தேவதாசி முறை ஒழிப்பு, குழந்தைத் திருமண ஒழிப்பு, இந்துமதச் சீர்திருத்தச் சட்டம் என்று பல முன்னேற்றங்களிலும் அவரது முன்னெடுப்போ, பங்களிப்போ, ஆதரவோ, முன்னோடித்தன்மையோ இருந்தது என்பது புதுக் கண்டுபிடிப்பு அல்ல. அசைக்க முடியாத ஆதாரங்கள் பல அவரது எழுத்துக்களாகவும் பிறரின் வரலாற்று நூல்களாகவும் சட்டங்களாகவும் இருக்கின்றன. மறுக்க விரும்புபவர்கள் இவற்றை முழுக்கப் படித்துவிட்டு மறுக்கலாம்.

காந்தியப் பெண்கள்:

பெண்களுக்காக காந்தி ஆற்றிய பணிகள் குறித்து மகளிர் தினத்திலிருந்து இந்தத் தொடரில் (‘என்றும் காந்தி’ தொடரில்) விவாதித்துவருகிறோம். ‘என்ன, காந்தி பெண்கள் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டிருக்கிறாரா?’ என்ற தொனியில் பலரும் கிண்டல் செய்வதை உணர முடிகிறது. திரும்பவும் சொல்கிறேன். உலக வரலாற்றிலேயே பெருந்திரளாய்ப் பெண்களை அரசியல்படுத்தியதில் காந்திக்கு இணையாக ஒருவரைக் காட்ட முடியாது. பிற நாடுகளிலும் பல தலைவர்கள் பெண்களை அரசியல்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவின் மக்கள்தொகையைக் கணக்கிலெடுத்துக்கொண்டு இந்த ஒப்பீட்டைச் செய்துபார்த்தால் என் கூற்றின் உண்மை புரியும். இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்தும் காந்தி குறித்தும் ஆயிரக் கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் ஒருசில நூல்களைப் படித்தாலே போதும். கூகுளில் காந்தி படங்களைத் தேடிப்பார்த்தால் அவரது கூட்டங்களில் திரண்டு வந்த பெண்களின் எண்ணிக்கை நமக்கு உறுதியான ஆதாரமாக நம் கண் முன்னால் நிற்கும். ஆனால், இதையெல்லாம் விட வலுவான ஆதாரங்கள் காந்தியால் ஈர்க்கப்பட்டு சேவையாற்றிய பெண்களும் சாதனையாளர்களும்தான். காந்தியின் வாழ்க்கை முழுவதுமே உடன் பயணித்த, பல்வேறு காலகட்டங்களில் உடன் இருந்த பெண்கள் பலர். கஸ்தூர்பா, மிலி போலக், மீரா பென், மனு காந்தி, சுசிலா நய்யார், பிரபாவதி நாராயண் என்று இந்த பட்டியல் நீண்டது. இவர்கள் தவிர காந்தியால் தூண்டுதல் பெற்றுப் பல போராட்டங்களிலும் இயக்கங்களிலும் பங்கெடுத்த பெண்களும், தங்கள் போராட்டங்களிலும் சாதனைகளிலும் சேவைகளிலும் காந்தியத்தைத் துணைகொண்ட பெண்களும் எண்ணிலடங்காது. அந்தப் பெண்களின் சிறு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களைப் பற்றிய நூல்களையும் இணையப் பதிவுகளையும் படித்துப் பார்த்தாலே புரியும், பெண்கள் முன்னேற்றத்தில் காந்தியின் பங்களிப்பு என்ன என்பது!

காந்தியப் பெண்மணிகள், காந்தியால் ஈர்க்கப்பட்டுப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், சேவையாற்றியவர்களின் பட்டியல்:

1. தில்லையாடி வள்ளியம்மை (1898-1914).

2. அனசூயா சாராபாய் (1885 -1972).

3. ராஜ்குமாரி அம்ரித் கவுர் (Rajkumari Amrit Kaur, 1889–1964).

4. அம்புஜம்மாள் (1899-?)

5. ஆஷா தேவி அரியநாயகம் (Asha Devi Aryanayakam, 1901-1972)

6. கமலாதேவி சட்டோபாத்யாய (Kamaladevi Chattopadhyay, 1903–1988)

7. மணிபென் படேல் (Maniben Patel, 1903-1990)

8. சுசீதா கிருபளானி (Sucheta Kriplani, 1908 – 1974)

9. மிருதுளா சாராபாய் (Mridula Sarabhai, 1911 – 1974)

10. அருணா ஆஸஃப் அலி (Aruna Asaf Ali, 1909–1996)

11. உஷா மேத்தா (Usha Mehta, 1920–2000)

12. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் (1926-)

13. இலா பட் (Ela Bhatt, 1933-2022)

14. ஜர்ண தாரா சௌத்ரி (Jharna Dhara Chowdhury, 1936-2019)

15. மேதா பட்கர் (1954-)

16. இரோம் ஷர்மிளா (Irom Sharmila, 1972-)

              - நான் எழுதிய ‘என்றும் காந்தி’ தொடரிலிருந்து, நன்றி: இந்து தமிழ் திசை 


No comments:

Post a Comment