Monday, December 11, 2023

மக்கள் கவி பாரதியின் மகத்துவம்! அறிஞர் அண்ணாவின் கட்டுரை


அறிஞர் அண்ணா
(தமிழில்: ஆசை)

‘மக்களின் கவி’ என்னும் பதமே கவர்ச்சியானதாகவும் முக்கியத்துவம் கொண்டதாகவும் இருக்கிறது. எனினும் இது அந்தக் கவிஞருக்கு மட்டுமே புகழ் சேர்க்கும் பட்டம் அல்ல. ஏனெனில், மக்களெல்லோரும் மன்னாதி மன்னர்களையும் மந்திரிமார்களையும் தானைத் தளபதிகளையும் ஆபத்பாந்தவன்களையும் முக்காலமும் உணர்ந்த முனிவர்களையும் புனிதர்களையும் மாயமந்திரவித்தைக்காரர்களையும் புரோகிதர்களையும் கண்டிருக்கிறார்கள். ஆனால், தங்களுக்கான கவிஞர்களை அவர்கள் கண்டதே இல்லை. காலம்காலமாக மாபெரும் கவிஞர்களெல்லாம் இருந்திருக்கிறார்கள்தான். ஆனால், அவர்களெல்லாம் வேதங்களுக்கும் பக்தி இலக்கியங்களுக்கும் வளம் சேர்ந்தவர்கள், அரண்மனைகளைத் தங்கள் கவித்திறமையால் அலங்கரித்தவர்கள். ஆனால், மக்களுக்காக மக்களின் மொழியில் கவிபாடியவர்கள் மிக மிக அரிது. 

கோயில் மணி செய்யும் வேலையையோ அரசவை முரசு செய்யும் வேலையையோதான் கவிஞர்களின் குரல் செய்துவந்திருக்கிறது. வெகு அரிதாகத்தான் மக்களின் மனதில் கிடப்பவற்றைக் கவிஞர்களின் குரல் பேசியிருக்கிறது. அப்போதும்கூட, மக்களெல்லாம் எவ்வளவு பேராசைக்காரர்களாகவும் சிற்றின்ப நாட்டமுடையவர்களாகவும் ஆகிவிட்டார்கள் என்றும் வெள்ளி என்பது எவ்வளவு பாவப்பொருள் தங்கம் என்பது கடவுளுக்கு எதிரான பொருள் என்பதுபோலெல்லாம் மக்களை இடித்துரைப்பதாகத்தான் இருக்கும். இந்தப் பிரசங்கங்களுக்கு அரச செங்கோலின் ஆசிர்வாதம் தாராளமாகக் கிடைத்தது. இப்படி கவிபாடியவர்களுக்கு தர்பாரிலும் அரசரின் பரிவாரத்திலும் உரிய காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு இடம் கிடைத்தது. தாங்கள் எங்கிருந்து கிளம்பிவந்தார்களோ அந்த மக்கள் கூட்டத்தை அவர்கள் வெறுத்ததோடு மட்டுமல்லாமல் அரசவையில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான கருவியாகத் தங்கள் கவித்திறனைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அங்கு அனுமதி கிடைத்ததும் வார்த்தைகளால் விதவிதமான மாலைகள்செய்து அரசர்களுக்கும் ஜமீன்தார்களுக்கும் சூடினார்கள். அவர்களுக்குச் சன்மானமாகக் கிடைக்கும் தங்கம் சொக்கத்தங்கமாக இருக்க வேண்டுமென்பது இதில் முக்கியம். சங்ககாலக் கவிஞர்கள் இந்த வருந்தத்தக்க நிலைக்கு விதிவிலக்கானவர்கள், ஆனால் இன்றைய நம் மக்களால் அவ்வளவாக அறியப்படாத கவிஞர்கள் அவர்களே.

கவிஞர்கள் அறம், தர்மம் போன்றவற்றின் விற்பனையாளர்களாக தங்களின் கவிதைகளில் மாறினார்கள். அல்லது இன்ப உணர்ச்சியின் வணிகர்களாக மாறினார்கள். மக்களின் கவிஞர்களாக இருப்பதென்பது அவ்வளவாக லாபகரமானது அல்ல என்பதை அறிந்திருந்தார்கள். சங்ககாலத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் பிரமாதமான மக்கள் கவிஞர் எவரையும் நாம் காணவில்லை என்பதற்கு அதுதான் காரணம்.

அறம், தர்மம் போன்றவையெல்லாம் அவ்வுலகு வாழ்வின்பத்துக்கான முதலீடாகப் பார்க்கப்பட்டன. அதனால்தான் இந்தப் பொய்யான, தீங்கான வேதாந்தத்தைப் பிரச்சாரம் செய்தவர்களுக்குப் பிறகு வந்தவர்களும் அதைப் பின்பற்றி, அதற்குத் தங்களைத் தாங்களே முகவர்களாக நியமித்துக்கொண்டார்கள். இப்படி வந்தவர்களின் கவிதைகளெல்லாம் மிகவும் தரமானவையாகவும் சிறப்பானவையாகவும் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. எதுகை, மோனை, சொல்வீச்சு எல்லாம் அபாரம்தான். பகுத்தறிவுதான் அடிபட்டுப் போனது. மக்களைவிட தங்களை உயர்ந்தவர்களாகக் கவிஞர்கள் கருதிக்கொண்ட நிலை அது. இந்தச் சூழலில்தான் பாரதியின் வருகை நிகழ்கிறது.


இரண்டு யுகங்களுக்கு நடுஎல்லையில் பாரதி பிறக்கிறார். தனது சொந்தப் பிராந்தியத்தில் நிலவுடைமை முழுவீச்சில் இருக்கிறது. குடிசைகள் சூழப்பட்டதாக இருக்கிறது எட்டயபுர சமஸ்தானத்தின் அரண்மனை. காலங்காலமாகத் தொடர்ந்துவரும் சாதியச் சமூகமும் முழு அதிகாரத்தில் இருக்கிறது. இந்தப் பக்கம் நிலவுடைமை அந்தப் பக்கம் சனாதனம் என்ற சூழலில் ஒரு பிராமணக் குடும்பத்தில்தான் பிறக்கிறார் பாரதி. இத்துடன், நவீனத்துவமும் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும் வேளை, தொழில்புரட்சியின் அதிகாலைப் பொழுதும்கூட. புதிய யுகத்தைப் பழைய யுகம் துயர் நிரம்பிய கண்களுடன் எதிர்கொள்கிறது. புதுயுகத்தின் தோற்றமே பழைய யுகத்துக்குச் சவால் விடுக்கிறது. அப்படிப்பட்ட யுகத்தில் பிறந்த பாரதி பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான போர்க்களத்தின் மாபெரும் போராளியாக உருவெடுப்பார் என்று யாராலும் அப்போது கற்பனை செய்திருக்க முடியாது. ஏனெனில், பழைய சமூகத்தின் கட்டமைப்புக்குப் பொருத்தமான ஒரு இடத்திலேயே அவரது பிறப்பு நிகழ்ந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பாரதி பிறந்தேவிட்டார், இப்படிப்பட்ட ஒரு நாட்டில், வரலாறு மிக மெதுவாக நகரும் ஒரு நாட்டில், அதற்கு விசையுடனான ஒரு உந்தித்தள்ளல் கிடைத்தால் வேகமாக நகரும் என்ற நிலை கொண்ட ஒரு நாட்டில். மக்களின் கவிஞராக இப்படிப்பட்ட வேகமான ஒரு உந்தித்தள்ளலை அவர் நம் நாட்டின் வரலாற்றுக்குக் கொடுத்தார் என்பதில்தான் அவரது மகத்துவம் பெரும்பாலும் அடங்குகிறது.

பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல. அவர் மக்கள் கவிஞர் என்பதால் அவர் நிச்சயமாக மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும் கூட. அந்நியரின் ஆதிக்கத்தைக் கண்டு கொதித்துப்போனார், அவர்களை நம் நாட்டிலிருந்து விரட்ட நினைத்தார் என்பதெல்லாம் சரிதான். ஆனால், அவருடைய லட்சியம் அதுவல்ல. உலகத்தின் கண் முன்னால் நம் நாட்டின் மதிப்பை உயர்த்துவதும், ஆணும் பெண்ணும் அனைவருமான ஒரு புதுவகை மனிதர்களால் ஆன ஒரு நாட்டை அவர் கட்டியெழுப்ப நினைத்தார். மக்களெல்லாம் அச்சத்தில் உறைந்திருக்கக் கண்டார். ஒவ்வொருவரின் முகத்திலும் அச்சமானது அச்சிடப்பட்டிருந்தது. ‘அவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே’. துப்பாக்கி வைத்திருக்கும் அந்நியர்களைப் பார்த்து மட்டுமே அவர்கள் அஞ்சவில்லை. சுலோகங்களைச் சொல்லிக்கொண்டிருக்கும் தங்கள் நாட்டின் சகோதரர்களைக் கண்டும் அஞ்சினார்கள். பேய்களையும் ஆவிகளையும் கண்டு அஞ்சினார்கள்.

இப்படிப்பட்ட மக்களால் தங்கள் நாட்டுக்கான விடுதலைப் போராட்ட வீரர்களாக ஆக முடியாது. ஆகவே, தன் நாட்டு மக்களை அச்சத்திலிருந்தும் தாழ்வு மனப்பான்மையிலிருந்தும் விடுவிக்க முனைந்தார் பாரதி. அவர்கள் மனதில் நம்பிக்கையையும் துணிவையும் விதைத்தார், அவர்களுக்கும் மறைந்துகிடந்த ஆற்றல்களையெல்லாம் வெளியில் எடுத்துவந்து அவர்கள் முன்னே வைத்துக்காட்டினார். இப்படிப்பட்ட உள்ளார்ந்த ஆற்றலானது மக்கள் கூட்டத்தின் உறக்கத்தாலும் அப்பட்டமான அறியாமையாலும் மூடநம்பிக்கையாலும் அவர்களின் தாழ்வு மனப்பான்மையாலும் எப்படியெல்லாம் வீணடிக்கப்பட்டுவந்திருக்கிறது! இதையெல்லாம் மிகத் தெளிவாகக் கண்டுகொண்ட பாரதி இந்தத் தீமைகளின் ஆணிவேர்களைப் பிடுங்கியெறிய துணிவுகொண்டார். மக்கள் கவிஞர் ஒருவரால் மட்டுமே மக்களின் இப்படிப்பட்ட பிரச்சினைகளின்மேல் இவ்வளவு ஆழ்ந்த அக்கறை கொள்ள முடியும்.

பாரதிக்கு நன்றாகத் தெரியும், இது எளிய மனிதர்களின் யுகம் என்பதும் ஜனநாயகத்தின் யுகம் என்பதும். ஆகவே, விடுதலைக்காக மக்கள்தான் போராட வேண்டும் என்று விரும்பினார். அவர் வெறுமனே கடவுளர்களை நோக்கிப் பக்தி பாமாலைகளாக வீசிக்கொண்டிருக்கவில்லை; சமஸ்தானங்களை நோக்கி சீட்டுக்கவி மட்டுமே எழுதிக்கொண்டிருக்கவில்லை. ஏருழும் உழவனை நோக்கிப் பாடினார், தொட்டிலை ஆட்டிக்கொண்டிருந்த தாயை நோக்கிப் பாடினார், மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளையை நோக்கிக்கூட பாடினார். தாயகத்தின் விடுதலைக்காக வேதங்களிலிருந்தோ பழங்கால இலக்கியங்களிலிருந்தோ –பழங்காலக் கவிஞர்களைப் போல- மேற்கோள் காட்டிப் பேசவில்லை. முக்கியத்துவம் வாய்ந்த உலக நிகழ்வுகள், தொலைதூர நாடுகளின் சுதந்திரப் போராட்டங்கள் போன்றவற்றை சாதாரண மக்கள் முன்னே எடுத்துவைத்துப் பேசினார். பெருமக்கள் திரட்சியின் எழுச்சியினூடாக, மாஜினியின் பெருமுயற்சியின் பேரில், இத்தாலியில் சுதந்திரப் போராட்டத்தில் விடிவெளிச்சம் எப்படி விழுந்தது என்பதை பாரதி தன் மக்களுக்கு எடுத்துக்கூறினார். 

புரட்சிக்குப் பிந்தையை பிரான்ஸைக் குறித்து வண்ண வண்ணச் சொற்சித்திரம் தீட்டினார். ஜார்களின் கொடுங்கோன்மையிலிருந்து தளையறுத்துவிட்டுப் புத்தம் புதியதாக மினுக்கிய ரஷ்யாவின் புதுச் சித்திரத்தை முன்வைத்தார். இப்படியே சுதந்திர பெல்ஜியம், சுதந்திர பிரான்ஸ், செங்கொடி பறக்கும் ரஷ்யா என்பவைதான் பாரதி முன்வைத்த சித்திரங்களே தவிர இந்திரன் அல்லது பிரம்மனின் ஆன்மிக நாட்டின் சித்திரத்தையல்ல. மேலும் தன்நாட்டு மக்கள் ஃபிஜி தீவுகளில் படும் துயரத்தைக் கண்டும் ஒரு எழுத்துச் சித்திரம் தீட்டி, ஷேக்ஸ்பியரைப் போலவே கேள்வி எழுப்பினார், ‘கரும்புத் தோட்டத்திலே - ஆ! கரும்புத் தோட்டத்திலே/ அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி வருந்துகின்றனரே!’ என்று. 

அவன்தான் மக்கள் கவிஞன். தன் நாட்டு மக்களின் தவறுகளையும் தீயகுணங்களையும் சுட்டிக்காட்டுவதற்கும் துளியளவு கூட அச்சம் கொள்ளாதவன், மற்ற நாடுகளில் உள்ளவர்கள் எவ்வளவு வேகமாக மேன்மையான ஒரு எதிர்காலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்க நாமெல்லாம் சிந்தனையிலும் செயலிலும் எவ்வளவு மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டத் தயங்காதவன். சமூக அடுக்கில் மேல்நிலையில் இருப்பவர்களைக் கண்டு அவர் அஞ்சவில்லை. மக்களுக்கு முன்னால் எல்லா உண்மைகளையும் எடுத்துவைப்பதிலும் தடுமாறவில்லை.

மக்களின் கவிஞராக அவரது கடமையென்பது எப்போதெல்லாம் கபடமும் வஞ்சகமும் கண்ணில் படுகிறதோ அப்போதெல்லாம் அவற்றைத் தோலுரித்துக் காட்டுவது, அதை பாரதி மிகுந்த துணிவுடனும் உற்சாகத்துடனும் செய்தார்.

உள்நோக்கம் கொண்ட சிலர் பாரதியின் சித்திரத்தை விரிவானதாக, அதாவது தேசிய கவியாக, விரிக்க நினைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்தச் சித்திரத்தை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதால் அல்ல, மக்களின் கவிஞர் என்ற பாரதியின் இன்னொரு சித்திரத்தை தேசிய கவி என்ற பிரம்மாண்டமான சித்திரம் மறைக்க உதவும் என்பதற்காகத்தான் இம்முயற்சி.  

பாரதியின் கவிதைகள் கொட்டும் குளவிகள் மட்டுமல்ல. இந்த மக்கள் கவியானவர் தனது நாட்டின் பழைமைவாத மரபுகள், சிந்தனைகள் போன்றவற்றைத் தோலுரித்துக் காட்டத் தயங்கியதே இல்லை. பழமையில் ஊறியவர்களை ‘அறிவீலிகாள்’ என்று கடுமையான சொற்களைக் கொண்டே வசைபாடுகிறார். மாயாவாதத்தையும் கடுமையாக எதிர்த்து மரபுவாதிகளின் கோபத்துக்கு ஆளாகிறார். மாயாவாதம் நம்மைச் செயலற்றுப் போகச் செய்துவிடும் என்கிறார்.

பசி, வறுமை, அறியாமை இவை மூன்றையும் தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்கிறார். பணம்படைத்தோரின் கொடுமைகளுக்கு எதிராகத் தனது ஆற்றல்மிகுந்த குரலை எழுப்புகிறார், ‘தனியொரு மனிதனுக்கு உணவில்லை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்கிறார். தனது நாட்டு மக்கள் நிறைவாழ்வு வாழ்ந்து, தங்கள் அறிவுப் புலன்களை மேம்படுத்திக்கொண்டு, வணிகத்தில் சிறந்து விளங்கி, தங்கள் மண்ணைத் தொழில்மயமாக்கி, புதுயுகத்தின் எல்லாப் பலன்களையும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவரது மதம் என்பது அர்ச்சகர்கள், சுலோகங்கள் பாடுதல் போன்றவற்றைச் சார்ந்ததன்று, மானுடத்துக்கும் சகோதரத்துவத்துக்கும் சேவை செய்வதே அதன் விரிவான பொருளில் அவருக்கு மதமாகப் பொருள்படும்.

மக்கள் கவிஞனுக்கு முன்னுள்ள பணி, மிகவும் பெரியது. புது உண்மையை மக்கள் உணரும்படிச் செய்வது, புதுப் பாதையைத் தேர்ந்தெடுக்கச் செய்வது, எல்லாவற்றையும் மதிப்பிடுவதற்குப் புதுவழிமுறையைத் தேர்ந்தெடுக்கச் செய்வது ஆகியவைதான் ஒட்டுமொத்தமாக அவனது பணிகள். ஜோசியர் கையிலிருந்து விடுவித்து வானியல் அறிஞர் முன்பு மக்களை நிறுத்துவதுதான் அவருடைய வேலை. மக்களின் மனதிலிருந்து ரசவாதியை விரட்டிவிட்டு ரசாயன அறிவியல் அறிஞரை அங்கு குடிபுகச் செய்வதுதான் அவருடைய வேலை. புரோகிதர்களைப் புறக்கணித்துவிட்டு அந்த இடத்தில் ஆசிரியர் வந்தமர்ந்துகொள்ள வழிவகை செய்வதுதான் அவருடைய வேலை. சித்துவேலைக்காரர்களை விரட்டிவிட்டு அந்த இடத்துக்கு உண்மையான மருத்துவர்களை வரச் செய்வதுதான் அவருடைய மாபெரும் வேலை. மூடநம்பிக்கையை எதிர்த்துப் போராடினால்தான் அறிவியல் தழைத்தோங்கும். சுருங்கச் சொல்வதெனில், மக்களின் கவிஞருக்கு ஒரு புரட்சியாளரின் பணி முன்னிற்கிறது, இன்னும் சொல்லப்போனால் புரட்சியாளரைவிட கடினமான பணி அது. ஏனெனில், மக்கள் பொதுவாகக் கொடுங்கோலர்களையே தங்களின் ரட்சகர்களோ என்று தவறாக நினைத்துவிடக்கூடியவர்கள். இந்தப் போரில் மிகுந்த தீரத்துடன் பாரதி போரிட்டார். 

போர் இன்னும் முடிந்துவிடவில்லை என்றாலும் அவர் தற்போது உயிரோடு இல்லையெனினும் அவர் நமக்குச் சிந்தனையின் ஆயுதசாலையைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார், இந்தப் போரை முடித்துவிடக்கூடிய கையளிப்பு அது. மக்களின் கவிஞருக்கு ஒருவர் செய்யக்கூடிய மிகச் சிறந்த புகழாஞ்சலி எதுவாக இருக்குமென்றால் இந்தப் போரைத் தொடர்வதில்தான், மக்கள் விடுதலைக்காகப் போரிடுவதில்தான், அதன் மேன்மையான, முழுமையான அர்த்தத்தில். இதைச் செய்துமுடிக்கும் திறன் படைத்தோர் நம்மிடையே இருக்கிறார்கள், போர் முடிக்கப்படும் உறுதியாக!  


பாரதி குறித்த ஆசையின் கட்டுரைகள்:

1. பாரதியும் சூரியனைச் சுட்டிக்காட்டிய மல்பெரியும் 

2. பாரதி: பிரபஞ்சத்தின் பாடகன்

3. பாரதீ: எம் கவிஞன் நீ!

 


No comments:

Post a Comment