Friday, February 9, 2024

பாபாசாகேபின் தனிமொழி


உங்கள் கருணையைக்
கொஞ்சம் நிப்பாட்டுங்கள்
காந்திஜி
அது
எங்கள் துயரைவிட
பூதாகரமாக உருக்கொண்டு
நிற்கிறது
ஒரே ஒரு
பூதாகரம்தான் இருக்க முடியும்
அது எங்கள் துயரே
இருபதாம்
நூற்றாண்டின்
இணையற்ற பெருநிழல் நீங்கள்
அதற்குள் ஒரு சிறுநிழலாய்
இளைப்பாற
என்னால் முடியாது
அதனால்தான்
தனிச்சூரியனாய்
எரிகிறேன்
எங்கள் கதை
பெரும் நாடகமாய்
இருந்திருக்க வேண்டும்
ஆனால்
உங்கள் நாடகத்தின்
ஓரங்கமாகிவிட்டது
எங்கள் துரதிர்ஷ்டம்
உங்கள்
கருணை நிழலை
நீங்களே திரும்பிப் பாருங்கள்
அதன் கடைவாய்ப் பற்கள்
இரண்டு நீண்டு
எம் கழுத்தில் பதிகின்றன
அவை எங்களைக்
கருணைக்காகக்
காலமெல்லாம்
காத்திருக்க வேண்டிய
ரத்தக் காட்டேரி
ஆக்கிவிடுகின்றன
நீங்களோ
என்றென்றும்
மகாத்மாகவே எஞ்சிவிட்டீர்
இப்போதும் பாருங்கள்
இந்நூலின் நாயகர் நீங்களே
பன்மைக்குரலுக்காய்
ஒரு ஓரத்தில் நான்
இதைத்தான்
இதற்கெதிராய்த்தான்
தொடக்கம் முதல்
முழுமூச்சாய்
என் போராட்டம்
என்னிடம்
இருப்பது சிறு சுத்தியல்தான்
ஆயினும்
ஒரு பெருஞ்சிலையை
உடைத்து வீழ்த்த
இது போதுமானதே
அது வீழ்ந்தால்தான்
அதன் கீழ்
நிம்மதியாய்த்
தன்நிழலுடன்
தூங்க முடியும்
நிழலின்றிப் பிறந்துவிட்டோம்
நிழலின்றிப் போக மாட்டோம்
காந்திஜி
-ஆசை

கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: 




4. TENET











 

No comments:

Post a Comment