Saturday, February 10, 2024

மகாத்மாவின் மறுமொழி


நமஸ்தே பாபாசாகேப்
நலம்மிக விரும்புகிறேன்
சவிதாபென் நலமும்

நான்தான்  எத்தகையதோர் துரதிர்ஷ்டசாலி 
நான் சித்தரித்த பூரண திருமணத்தின்
உன்னத நிகழ்வை 
தரிசிக்காமலேயே போய்விட்டேனே

இருந்திருந்தாலும்
நீங்கள் அழைத்திருக்க மாட்டீர்தான்
ஆனாலும் அகமகிழ்ந்து
தொலைவிலிருந்தே 
அட்சதை தூவியிருப்பேன்
அதை என் கருணையென்று 
தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள்
என்று நம்புகிறேன்

கருணை
ஐயோ இச்சொல்
என் காதைக் குடைந்து
நெஞ்சையொரு
வண்டாக உண்கிறதே

கடைச்சிறியேன் நான்
எனக்கே கருணை வேண்டி
இறைவனை மட்டுமல்ல
இறைவனின் குழந்தைகளையும்
இறைஞ்சுகிறேன்

அவர்தம் கருணை வேண்டிதான்
நடையாய் நடக்கிறேன்
துடியாய்த் துடிக்கிறேன்
அடுத்த பிறவியிலாவது
தீண்டப்படாதோரில்
ஒருவனாய்ப் பிறக்க 
வேண்டுமென்று
ஜெபிக்கிறேன்

உள்ளத்திலே நானொரு
தீண்டப்படாதவன்
என்றே நினைப்பது
சொகுசுக் கற்பனையல்ல
அவரிடத்தில் என்னை
இடம்பெயர்த்துவைத்து
முழுவலியுணரும்
முயற்சியே

அந்தோ பரிதாபம்
அம்முயற்சியில் தோல்வியுற்றேன்
என்றே எனை நீங்கள்
எத்தனைதான் ஏசினாலும் 
மறுபேச்சின்றி ஏற்பேன்
பாபாசாகேப்
மறுபேச்சின்றி ஏற்பேன்

கருணையால் நசுக்க அல்ல
அவர்கள் கருணை
எனக்குக் கிட்டுமொரு வாழ்வை
அவர்கள் அடையவே
துடிக்கிறேன்

அந்தோ பரிதாபம்
அம்முயற்சியில் தோல்வியுற்றேன்
என்று நானே சொல்கிறேன்
எனை நீங்கள்
எத்தனைதான் காறியுமிழ்ந்திடினும்
எதிர்ப்பின்றி ஏற்பேன்

ஆனால்
என் விஷப்பற்களை
உங்கள் கழுத்தில் பதித்திட்டதாய்
நேர்காணல் அளித்தீர்கள்
நெஞ்சு துடிக்கிறது
பாபாசாகேப்
நெஞ்சு துடிக்கிறது

என் விஷப்பற்களை 
நீங்கள் கண்டறிந்தது
எனக்குப் பெரும் மகிழ்ச்சியே
ஆயினும் அவற்றை
யார் கழுத்திலும் பதித்ததில்லை
என் கழுத்து தவிர

மேலென்றும் கீழென்றும்
சொல்லிப் பிறப்பெடுத்தால்
மேலெல்லாம் விஷம்தானே
என் விஷம் முறிப்பதற்காய்
என் கழுத்தில் நானே
கணந்தோறும் பற்கள் பதிக்கின்றேன்

அந்தோ பரிதாபம்
அம்முயற்சியில் நானடைந்த தோல்வியின்
வழிதவறிய பிம்பமொன்று
உங்கள் சிந்தைக்குள்
குடிகொண்டுவிட்டதே
உங்கள் கழுத்தில் பதித்ததாய்
எண்ணம் விதைத்ததே

மன்னியுங்கள்
பாபாசாகேப்
தோல்விகளே என் பிழை
அவற்றுக்காய் எனை
மன்னியுங்கள்

என் பெருஞ்சிலையையும்
பேரிலுள்ள மகாத்மாவையும்
நானே முன்னின்று உடைப்பேன்
அதையும் நீங்கள்
கருணையென்று எண்ணினால்
கைமட்டும் தட்டுகிறேன் தூரநின்று

உண்மையில் சொல்கிறேன்
பாபாசாகேப்
ஒருவர் தன் சிலுவையைத்
தானே சுமக்கலாம்
தன் சிலையைத்
தானே சுமப்பது பெருஞ்சுமை
உடைத்தெறியுங்கள்
என் பெருஞ்சிலையை

காலியாகும் இடத்தில்
நீங்கள் அனுமதித்தால்
ஓரமாய் நானும்
ஒருக்களித்துக் கொள்கிறேன்
        -ஆசை

கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: 

1. பாபாசாகேபின் தனிமொழி



4. TENET











 

No comments:

Post a Comment