Monday, August 4, 2014

காலங்களில் அவன் வசந்தம்!




ஆசை


அது என்ன பருவம் என்று அப்போது தெரியவில்லை. சென்னையில் ஒருநாள் காலையில் பெட்டிக்கடையில் செய்தித்தாள் வாங்கிக்கொண்டு நிமிர்ந்தேன். எதிர்ப்புறச் சாலையோரத்தில் மஞ்சள் கொன்றையொன்று தகதகக்கும் மலர்களோடு நின்றுகொண்டிருந்தது. எட்டு மணி வாக்கில் சூடில்லாத வெயிலில் மஞ்சள் வண்ணம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. சட்டென்று என் மனதில் ஒரு பாடலின் வரிகள் சம்பந்தமில்லாமல் வந்து விழுந்தன: ‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்'

எல்லாம் E=mc2 மயம்



டேவிட் பொடானிஸ்

E=mc2 என்ற சூத்திரத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், 1904-ம் ஆண்டுக்கு நாம் போக வேண்டும். ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனுக்கு அப்போது 25 வயது. அவர் இன்னும் பிரபலமாக ஆகியிருக்கவில்லை. பல்கலைக்கழகத்தில் தனது பேராசிரியர்களுக்கு மதிப்புக் கொடுக்காமல் அவர்களைக் கோபமுறச் செய்தவர் அவர்.

அரசால் முடியாது என்று நாமே நம்புவதுதான் பிரச்சினை! - அமர்தியா சென் நேர்காணல்

(‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: ஆசை)

அடிப்படையில் தன்மதிப்பு உள்ள எந்த நாடும் மருத்துவப் பராமரிப்பு என்பது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு என்று கருதிவந்திருக்கிறது என்கிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்திய சென். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த நேர்காணலிலிருந்து…
வேலை செய்வதற்கான உரிமை, உணவு பெறுவதற்கான உரிமை ஆகியவற்றுக்குப் பிறகு, இந்தியாவில் மருத்துவப் பராமரிப்பு பெறுவதற்கான உரிமைக்காகச் சட்டம் இயற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கருதுகிறீர்களா?
நிச்சயமாக! நாம் இந்த நிலைக்கு உள்ளாகியிருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

புலம்பெயர்வு பெரும் நெருக்கடியாக மாறும் - சஞ்சய் சுப்பிரமண்யம் நேர்காணல்


வைஜு நரவாணே

(தமிழில்: ஆசை)


வரலாற்றாசிரியர், பேராசிரியர் சஞ்சய் சுப்பிரமண்யம் சமீபத்தில் ‘கலெஜ் தெ பிரான்ஸ்’-ல் ‘தொடக்கக் கால நவீன உலக வரலாற்றுத் துறை’க்கான இருக்கைப் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது நேர்காணலிலிருந்து…
நவீனத்துவத்தின் வரலாற்றாசிரியர் நீங்கள். எந்த மாதிரியான மாறுதல்களையும் தலைகீழ் மாற்றங்களையும் நாம் தற்போது காண்கிறோம்?
அரசியலைப் பொறுத்தவரை நிறைய மாறுதல்களும் தலைகீழ் மாற்றங்களும் ஏற்பட்டிருக்கின்றன. எனது ஆய்வுக்கு நான் உட்படுத்தியிருக்கும் 17-வது நூற்றாண்டின் உலகம் என்பது இன்னமும் முடியாட்சிகளில் ஒன்றாகத்தான் இருக்கிறது.

மாபெரும் ஜனநாயகத்தின் மகத்தான நிகழ்வு




ஜவாஹர்லால் நேரு

(தமிழில்: ஆசை)


உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா. அரசியல் கட்சிகளும் வாக்காளர்களும் தயாராகிக்கொண்டிருக்கும் சூழலில், நாமும் தயாராக வேண்டும் அல்லவா? இதோ, தொடங்கிவிட்டது 16-வது மக்களவைத் தேர்தலுக்கான ‘தி இந்து’வின் சிறப்புப் பக்கம்.
நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரத்துக்காக நம் முன்னோர்கள் பட்ட பாட்டை ‘தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா, நம் கண்ணீரால் காத்தோம்’ என்ற வரிகளின் மூலம் நினைவுகூர்கிறோம் அல்லவா, சுதந்திரத்துக்கு மட்டும் அல்ல; ஜனநாயகத்துக்கும் அந்த வரிகள் அப்படியே பொருந்தும். இன்றைக்கு 18 வயதான ஒவ்வொரு குடிமகனுக்கும் கையில் சர்வசாதாரணமாகக் கிடைக்கும் வாக்குச்சீட்டுக்குப் பின் உள்ள சரித்திரம் சாதாரணமானதல்ல.
நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்த்தால்தானே இன்றைய நாளின் சுகம் புரியும்? நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு நாட்டின் முதல் தேர்தல்பற்றியும் ஜனநாயகத்தின் உயரிய விழுமியங்களைப் பற்றியும் 22.11.1951 அன்று ஆற்றிய இந்த உரையுடன் ஜனநாயகத் திருவிழாவைத் தொடங்குகிறோம். இனி, தேர்தல் முடியும் வரை திங்கள் முதல் வெள்ளி வரை நடுப்பக்கங்களின் ஒரு பக்கம் திருவிழாவை உங்களோடு கொண்டாடும்!

இருவேறு இந்தியா சொல்லும் சேதி

ஜான் பில்ஜர்

(தி கார்டியன், தமிழில்: ஆசை)

மும்பையின் கடற்கரையை ஒட்டியிருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பணக்காரக் குழந்தைகள் ‘ஆ… ஊ…’ என்று சத்தமிட்டபடி ஒளிந்து பிடித்து விளையாடுகின்றன. இந்த இடத்துக்கு அருகில் இருக்கும், நிகழ்த்துக்கலைகளுக்கான தேசிய மையத்தில் நடக்கவிருக்கும் மும்பை இலக்கிய விழாவுக்காக எல்லாரும் வந்துகொண்டிருந்தனர். பிரபலமான எழுத்தாளர்களும் இந்தியாவின் செல்வாக்கு மிக்க வர்க்கத்தின் பிரபலங்களும்தான் அவர்கள். நடைபாதையின் குறுக்கே படுத்திருக்கும் ஒரு பெண்ணை மிதித்துவிடாமல் லாவகமாகத் தாண்டிச் செல்கிறார்கள். விற்பனைக்காக அந்தப் பெண் வைத்திருக்கும் துடைப்பங்கள் நடைபாதையில் கிடக்கின்றன. அந்தப் பெண்ணின் இரண்டு பிள்ளைகளின் உருவங்கள், அவர்களுக்கு வீடாக மாறியிருக்கும் ஆலமரத்துக்குக் கீழே தெரிகின்றன.

கண்காணிப்பின் அரசியல்

(‘தி இந்து’ தலையங்கம்)

அமெரிக்காவின் தகவல் சேகரிப்பு வேட்டையைப் பற்றி மேலும் ஒரு முக்கியமான விஷயம் இப்போது அம்பலமாகியிருக்கிறது:
‘கூகுள்’, ‘மைக்ரோசாஃப்ட்’, ‘யாஹூ’, ‘ஃபேஸ்புக்’, ‘லிங்க்டுஇன்’, ‘டம்ப்ளர்’ ஆகிய நிறுவனங்களிடம் அவர்களுடைய வாடிக்கை யாளர்கள்/ பயனர்கள் குறித்த விவரங்களை அமெரிக்க அரசிடம் அளிக்க வேண்டும் என்று அரசாங்கத் தரப்பிலிருந்து எத்தனை முறை ஆணை அனுப்பப்பட்டது என்கிற தகவல்.

இதுதான் நமக்கான தருணம்!





டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

(தமிழில்: ஆசை)

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலின்போது பஞ்சாப் மாநிலத்தில் 28.10.1951 அன்று ஆற்றிய உரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்:


நீண்ட காலப் போராட்டத்துக்குப் பிறகு நமக்கென்று சில அரசியல் அதிகாரங்கள் கிடைத்திருக்கின்றன. இப்போது, பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகள் மூலமாகச் சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் நமக்கேயான பிரதிநிதிகளை நாம் அனுப்ப முடியும். ஆனால், இந்த உரிமையை எல்லாம் கொத்திச்செல்ல நிறைய கட்சிகள் கழுகுபோல் காத்திருக்கின்றன. நம்முடைய வாக்குகளைப் பெற்றுக்கொண்டு தங்களுடைய கைக்கூலிகளை நம் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிடச் செய்வதற்கு அவர்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய நோக்கங்களை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

மனிதநேயத்துக்கும் போருக்கும் எந்த வேறுபாடும் இல்லை: அனிலா தௌலத்ஸாய் நேர்காணல்


மீனா மேனன்

(தமிழில்: ஆசை)


‘காபூலில் விதவைகள் நிலை, பராமரிப்பு ஆகியவற்றின் மானுடவரைவியல்’ இதுதான் மானுடவியலாளர் அனிலா தௌலத்ஸாயின் முனைவர் பட்ட ஆய்வின் ஒரு பகுதி. தனது முனைவர் பட்ட ஆய்வேட்டை அடிப்படையாகக் கொண்டு ஒரு புத்தகத்தையும் அவர் எழுதிக்கொண்டிருக்கிறார்.
தன்னுடைய பணிகள், காபுல் வாழ்க்கை, தொடர் போர்களால் சீரழிந்துபோன ஆப்கன் மக்களின் வாழ்க்கை, அந்நிய நிதியுதவியோடு நடக்கும் உள்நோக்கமுள்ள உதவித்திட்டங்கள் போன்றவற்றைப் பற்றி ‘தி இந்து’விடம் பகிர்ந்துகொள்கிறார்.
ஆப்கானிஸ்தானை உங்களுடைய ஆய்வுக்களமாகத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்?
தொடர்ச்சியான போர்கள் ஆப்கன் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டு கவனத்துடன் ஆவணப்படுத்த விரும்பினேன். மானுடவியல்தான் இதற்கு மிகவும் பொருத்தமான துறை என்பதை நான் உணர்ந்தேன்.

பாலு மகேந்திரா ஒரு நினைவுகூரல்



ஆசை

(‘மூன்றாம் பிறை’யின் இறுதிக்காட்சியில் நிராதரவாகக் கமல் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும்போது ‘சுப்பிரமணிக்குட்டி’ நாய்க்குட்டியின் நினைவு ஏனோ வந்தது. 

அந்த இறுதிக் காட்சியின் தாக்கத்தில் 2005-ல் எழுதிய கவிதைஇது. எனது முதல் கவிதைத் தொகுப்பான ‘சித்து’ (2006) புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

பாலு மகேந்திராவுக்குச் சமர்ப்பணம் செய்யும் அளவுக்கெல்லாம் தகுதியில்லை என்றாலும் ஒரு நினைவுகூரல்.)

காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம்


ஆசை

வெயிலடிக்கும்போது மழை பெய்தால் காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம் நடக்கிறது என்று கிராமங்களில் சொல்வதுண்டு. அப்படி நடக்கும் கல்யாணத்தில் யார் யாரெல்லாம் கலந்துகொள்கிறார்கள் என்று பார்ப்போமா?

இந்த தினத்தின் பெயர்

ஆசை

எருக்கஞ்செடியில்
தேன்சிட்டு
பார்த்துக்கொண்டிருந்த
உன்னிடம் கேட்டேன்

கூகுளில் வேலை வேண்டுமா?

பால் க்ரூக்மன்

(தமிழில்: ஆசை)

போன ஆண்டு ஜூன் மாதம் லாஸ்லோ பாக், டைம்ஸ் இதழுக்காக ஒரு பேட்டியை அளித்திருந்தார். பாக் சாதாரண ஆளில்லை. உலகின் வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் மனிதவளத் துறையில் மூத்த அதிகாரி. அந்தப் பேட்டியில் அவர் முக்கியமான விஷயம் ஒன்றைக் கூறினார், “வேலைக்கு ஆள் எடுக்கும்போது ஜி.பி.ஏ-வும் (தரத்தின் அடிப்படையிலான மதிப்பெண் சராசரி) தேர்வு மதிப்பெண்களும் எந்த விதத்திலும் பயனளிப்பதில்லை. அவை நமக்கு எதையும் சொல்வதில்லை” என்கிறார் அவர்.

ஐன்ஸ்டைன்: ஒளியின் கடவுள்

ஐன்ஸ்டைன் பிறந்த நாள் அன்று (14.03.2014) ‘தி இந்து’ நாளிதழில் வெளியான தலையங்கம்


ஒளிக்கு இணையாகப் பயணித்தோம் என்றால், அப்போது ஒளி எப்படித் தோற்றமளிக்கும்?’ என்ற சந்தேகம் 16 வயது ஐன்ஸ்டைனுக்கு ஏற்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தச் சந்தேகம் அவர் மனதைப் போட்டு அரித்துக்கொண்டிருந்தது.

போர்களின் இலக்கு குழந்தைகள்தானா?



ஸ்டீவன் ஹாக்கிங்

(தமிழில்: ஆசை)


இந்தப் பிரபஞ்சம் அனாதி காலமாக இருந்துவருகிறது என்று கிரேக்கத் தத்துவவாதி அரிஸ்டாட்டில் நம்பினார். ‘‘மனித இனம் மேலும் வளர்ச்சி பெற்ற நிலையில் இல்லாததற்குக் காரணம், வெள்ளங்களும் மற்ற இயற்கைப் பேரழிவுகளும்தான்’’ என்றார் அவர். ஏனெனில், அவையெல்லாம் மனித நாகரிகத்தை மறுபடியும் மறுபடியும் ஆரம்ப நிலைக்கே கொண்டுசெல்கின்றன.

Sunday, December 15, 2013

விடுதலையை நோக்கி நீண்ட பயணம்

நெல்சன் மண்டேலா 

(சுருக்கமான மொழிபெயர்ப்பு: ஆசை, 'தி இந்து' தமிழ் நாளிதழில் 08.12.13 அன்று வெளியானது)

நெல்சன் மண்டேலா


(நாசவேலைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு 1964, ஏப்ரல் 20-ம் தேதி தென்னாப்பிரிக்க உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது நெல்சன் மண்டேலா ஆற்றிய உரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு)


இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் நான்தான். கலையியலில் இளங்கலை பட்டதாரியான நான் ஜோஹன்னஸ்பர்கில் ஆலிவர் டேம்போவுடன் இணைந்து பல ஆண்டுகள் சட்ட ஆலோசகராக இருந்திருக்கிறேன். அனுமதி இல்லாமல் நாட்டை விட்டுச் சென்றது, 1961-ம் ஆண்டு மே மாதம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்படி மக்களைத் தூண்டியது ஆகிய காரணங்களுக்காகக் குற்றவாளியென்று அறிவிக்கப்பட்டுக் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சிறைத்தண்டனையை அனுபவித்துவருகிறேன்.

ஆரம்பத்திலேயே ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்: தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் போராட்டங்களின் பின்னணியில் அயல்நாட்டவர்களும் கம்யூனிஸ்டுகளும் இருக்கிறார்கள் என்று அரசு சொல்வதை முற்றிலும் நான் மறுக்கவில்லை. அதே நேரத்தில், ஒரு தனிநபராகவும் எனது மக்களின் தலைவனாகவும் நான் எது செய்திருந்தாலும் தென்னாப்பிரிக்காவில் எனக்கு நேர்ந்த அனுபவங்களாலும் ஆப்பிரிக்கன் என்ற எனது உணர்வின் அடிப்படையிலுமேயன்றி ஏதோ அந்நியர்களின் தூண்டுதலால் அல்ல.

மூதாதையரின் வழியில்…

டிரான்ஸ்கேயில் எனது இளம் பருவத்தில் எங்கள் இனக்குழுவின் மூத்தோர், பழம்காலத்தின் பெருமைகளையெல்லாம் கதைகளாகச் சொல்லக் கேட்டு வளர்ந்தவன் நான். எங்கள் மூதாதையர் எங்கள் தந்தையரின் நிலத்தைக் காப்பதற்காக ஈடுபட்ட போர்களைப் பற்றியும் அந்தக் கதைகளுக்கிடையே அவர்கள் சொல்வார்கள். இதையெல்லாம் கேட்ட பிறகு, எனது மக்களுக்காகப் பணியாற்றவும் அவர்களின் விடுதலைக்காகப் பாடுபடவும் வாழ்க்கை எனக்கு வாய்ப்பு வழங்குமென்று நம்பினேன். இதுதான் எனக்கு உந்தசக்தியாக இருந்து என்னைச் செலுத்தியது; நான் செய்ததாக இந்த வழக்கில் சாட்டப்படும் குற்றங்களுக்கெல்லாம் காரணம் இதுதான்.

ஏன் வன்முறை?

இதையெல்லாம் சொன்ன பிறகு, வன்முறை என்ற விஷயத்தைப் பற்றியும் நான் பேசியாக வேண்டும். இந்த நீதிமன்றத்தில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளில் சிலவற்றில் உண்மை இருக்கிறது, சிலவற்றில் உண்மை இல்லை. நாசவேலைகளுக்குத் திட்டம்தீட்டியது நான்தான் என்பதை நான் மறுக்கப்போவதில்லை. கண்மூடித்தனமாகவோ வன்முறையின் மீதுள்ள விருப்பத்தாலோ நான் இந்தத் திட்டத்தைத் தீட்டவில்லை. வெள்ளையர்களால் என் மக்கள் நெடுங்காலமாக அனுபவித்துவந்த கொடுங்கோன்மை, சுரண்டல், அடக்குமுறை ஆகியவற்றின் விளைவாக ஏற்பட்டிருந்த அரசியல் சூழ்நிலையை நிதானமாகவும் ஆழ்ந்தும் மதிப்பிட்ட பிறகே நான் இந்தத் திட்டத்தைத் தீட்டினேன்.

உம்கோண்டோவை (உம்கோண்டோ- ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ஆயுதப் படை) தோற்றுவித்தவர்களில் நானும் ஒருவன். அந்த அமைப்பை நாங்கள் தோற்றுவித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது, அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக ஆப்பிரிக்க மக்கள் ஒருகட்டத்தில் வன்முறைப் போக்கைக் கைக்கொள்வது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது; மக்களின் உணர்வுகளுக்குச் சரியான பாதை வகுத்துக்கொடுக்கும் வகையிலான தலைமை இல்லையென்றால் வன்முறை வெடித்து நாடெங்கும் உள்ள வெவ்வேறு இனங்களுக்கிடையில் பெரும் பிளவும் விரோதப் போக்கும் ஏற்பட்டுவிடும் சூழல் வேறு. இரண்டாவதாக, வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டு வெற்றிபெற வன்முறையைத் தவிர வேறெந்த வழியும் ஆப்பிரிக்க மக்களுக்கு இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

வெள்ளை ஆதிக்கத்துக்கு எதிரான, சட்டபூர்வமான எதிர்ப்புகள் அனைத்துக்கும் வழியே இல்லாத வகையில் சட்டம் கதவடைத்துவிட்டது. எங்களின் இழிநிலையை நிரந்தரமாக ஏற்றுக்கொள்வது அல்லது அரசுக்கு எதிராகச் செயல்படுவது என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். இந்நிலையில் சட்டத்தை மீறுவது என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.வன்முறைக்கு வழிவகுத்துவிடாதபடி சட்டத்தை நாங்கள் மீறினோம். இந்த வழிமுறையும் சட்டத்தால் ஒடுக்கப்பட்ட பின்னர், அரசு தன் எதிர்ப்பாளர்களை நசுக்குவதில் ஈடுபட்டபோதுதான் வன்முறைக்கு வன்முறையால் பதிலடி கொடுப்பதென்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.

ஆனால், நாங்கள் தேர்ந்தெடுத்த வன்முறையைத் தீவிரவாதம் என்று சொல்லிவிட முடியாது. உம்கோண்டோவைத் தோற்றுவித்த நாங்கள் அனைவரும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் (ஆ.தே.கா) உறுப்பினர்களாக இருந்தவர்கள்தான். அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அகிம்சையையும் சமரசத்தையும் வழிமுறையாகக் கொண்டிருந்த ஆ.தே.கா-வின் பின்னணியிலிருந்து வந்தவர்கள்தான் நாங்கள். தென்னாப்பிரிக்கா ஒரு குழுவுக்கு மட்டும் உரியதல்ல என்றும் அதில் வாழும் அனைவருக்கும், அவர்கள் கருப்பினத்தவரோ வெள்ளையரோ, அது சொந்தம் என்றும் நாங்கள் நம்புகிறோம். இனங்களுக்கிடையில் போர் மூள்வதை நாங்கள் விரும்பவில்லை, எப்பாடுபட்டாவது அதைத் தவிர்க்கவே நாங்கள் முயன்றோம்.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்

ஆ.தே.கா-வைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். ‘தென்னாப்பிரிக்க சட்ட’த்தாலும் ‘உள்ளூர் நிலச் சட்ட’த்தாலும் ஒடுக்கப்பட்டிருந்த ஆப்பிரிக்க மக்களின் உரிமைகளைக் காப்பதற்காக 1912-ம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. 1949வரை, அதாவது முப்பத்தேழு ஆண்டுகளாக, சட்டபூர்வமான போராட்டத்திலேயே அது ஈடுபட்டுவந்தது. தனது கோரிக்கைகளையும் தீர்மானங்களையும் அது முன்வைத்தது. ஆப்பிரிக்கர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு அமைதியான முறையில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் முழுமையான அரசியல் உரிமைகளை நோக்கி ஆப்பிரிக்கர்கள் சீராக நடைபோட முடியும் என்ற நம்பிக்கையிலும் அரசாங்கத்துக்கு அது தனது பிரதிநிதிகளை அனுப்பிவைத்தது. ஆனால் வெள்ளையரின் அரசாங்கங்கள் கொஞ்சம்கூட அசைவதாகவே இல்லை. ஆப்பிரிக்கர்களின் உரிமைகள் அதிகமாவதற்குப் பதிலாகக் குறைந்துகொண்டே வந்தன. எனது தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான லுட்டுலி இப்படிச் சொன்னார்: “திறக்கவே திறக்காத வகையில் இறுக்கமாக மூடப்பட்டிருந்த கதவை, பொறுமையுடனும் மிதமான முறையிலும் கண்ணியத்துடனும் தட்டுவதில் என் ஆயுளில் முப்பதாண்டுகளை நான் வீணடித்திருக்கிறேன் என்பதை யாரால் மறுக்க முடியும். மிதவாதத்தின் பலன்கள்தான் என்ன? நமது உரிமைகளையும் முன்னேற்றத்தையும் நசுக்கும் வித்த்திலான சட்டங்களைத்தான் கடந்த முப்பதாண்டுகளாக நாம் பார்த்துவந்திருக்கிறோம். கடைசியில் நமக்கென்று எந்த உரிமையும் இல்லாத நிலைக்கு இப்போது வந்தடைந்திருக்கிறோம்.”

தொடர்ந்து போராடியாக வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. போராட்டத்துக்கு மாற்று, முழுமையான அடிபணிதல்தான். போரிடுவதா வேண்டாமா என்பதல்ல எங்கள் பிரச்சினை, எங்கள் போராட்டத்தை எப்படித் தொடர்வது என்பதுதான் எங்கள் பிரச்சினை. ஆ.தே.கா-வைச் சேர்ந்த நாங்கள் நிறப்பிரிவினையற்ற ஜனநாயகத்தையே எப்போதும் முன்மொழிந்துவந்திருக்கிறோம். நாட்டில் இருக்கும் வெவ்வேறு இன மக்களை மேலும் பிளவுபடுத்தும் எந்த நடவடிக்கையிலிருந்தும் நாங்கள் ஒதுங்கியே இருந்தோம். ஆனால், ஐம்பது ஆண்டுகளின் அகிம்சைப் போராட்டம் மேலும் மேலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் சட்ட அமைப்பையும் கிட்டத்தட்ட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்ட நிலையையும் நோக்கி எங்களைத் தள்ளியது. வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றியும் வெள்ளையருக்கு எதிராகப் போரிட்டு தங்கள் நாட்டை மீட்கும் நாளைப் பற்றியும் மக்கள் நெடுங்காலமாகப் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். ஆ.தே.கா-வின் தலைவர்களாகிய நாங்கள் வன்முறையைத் தவிர்த்துவிட்டு அமைதியான முறையில் போராடும்படி மக்களுக்கு அறிவுறுத்தினோம். எனினும், அகிம்சைக் கொள்கையில் எங்கள் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க ஆரம்பித்து தீவிரவாதப் போக்கைக் கடைப்பிடிப்பதைப் பற்றிய எண்ணங்களை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தனர்.


வன்முறையின் முதல் வடிவம்

உள்நாட்டுப் போரைத் தவிர்ப்பது என்ற எண்ணமே எங்கள் அனைவருடைய சிந்தனைகளையும் வெகு காலமாக ஆக்கிரமித்திருந்தது. ஆனால், வன்முறைப் பாதையைக் கடைப்பிடிப்பது என்ற முடிவை எடுத்தபோது அது போன்ற ஒரு போரை நாங்கள் எதிர்கொள்ளும் நாள் வரலாம் என்பதை நாங்கள் உணர்ந்தோம். உள்நாட்டுப் போர் என்பதைக் கடைசிப் புகலிடமாகவே மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதைத் தவிர்க்க முடியாத நிலை வருமெனில் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் முடிவெடுத்தோம்.

வன்முறையின் நான்கு வடிவங்கள் அப்போது எங்கள் முன்னால் இருந்தன. நாசவேலைகள், கெரில்லா போர்முறை, தீவிரவாதம், வெளிப்படையான கிளர்ச்சி. இவற்றுள் முதல் வகையைத் தேர்ந்தெடுப்பது என்றும் வேறுவிதமான முடிவுக்குப் போகும்வரை இந்த வகைப் போராட்டத்தின் எல்லாவிதமான சாத்தியங்களையும் பார்த்துவிடுவது என்றும் முடிவெடுத்தோம்.

நான் கம்யூனிஸ்டு அல்ல

ஆப்பிரிக்க தேசியவாதம்தான் ஆ.தே.கா-வின் எப்போதுக்குமான சித்தாந்தம். ‘வெள்ளையர்களைக் கடலில் தள்ளுங்கள்’ என்ற முழக்கம் வெளிப்படுத்தும் கோட்பாடும் ஆப்பிரிக்க தேசியவாதமும் ஒன்றல்ல. ஆப்பிரிக்க மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கப்பெறுவதும், அவர்களுடைய சொந்த மண்ணின் மீதான உரிமை நிலைநாட்டப்படுவதும்தான் ஆப்பிரிக்க தேசியவாதம். ஆ.தே.கா-வால் உருவாக்கப்பட்ட அரசியல் ஆவணங்களில் மிக முக்கியமானது, அது உருவாக்கிய ‘விடுதலைப் பிரகடனம்’தான். அது எந்த வகையிலும் ஒரு சோஷலிச நாட்டுக்கான வரைபடம் அல்ல. நிலங்களை மறுபகிர்மானம் செய்யவே அது கூக்குரல் கொடுக்கிறதே தவிர அவற்றை நாட்டுடைமையாக்குவதற்காக அல்ல; சுரங்கங்கள், வங்கிகள், ஏகபோகம் நிலவும் தொழில்துறைகள் போன்றவை நாட்டுடைமையாக்கப்படுவதற்கு அது வகைசெய்கிறது. இது போன்ற நாட்டுடைமையாக்கம் இல்லையென்றால், அதிகாரப் பரவலாக்கத்தை மீறியும் குறிப்பிட்ட ஒரு இனத்தின் ஆதிக்கம் நீடிப்பதைத் தடுக்க முடியாமல் போய்விடும்.

வர்க்கபேதத்தை கோடிட்டுக்காட்டுவது கம்யூனிஸ்டு கட்சி, ஆ.தே.கா-வோ வர்க்கங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முயல்வது. இதுதான் இரண்டு கட்சிகளுக்குமிடையேயுள்ள முக்கியமான வேறுபாடு. ஆ.தே.கா-வுக்கும் கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே அவ்வப்போது ஒத்துழைப்பு இருந்துவந்தது என்பது உண்மைதான். இந்த ஒத்துழைப்பு எங்களின் பொது நோக்கத்தை, அதாவது வெள்ளையர் ஆதிக்கத்தை அகற்றுவது என்ற நோக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறதே தவிர, இருவரின் சித்தாந்தமும் ஒன்றுதான் என்று சுட்டிக்காட்டவில்லை.

வரலாறு முழுக்க இதுபோன்ற உதாரணங்களைக் காட்ட முடியும். ஹிட்லருக்கு எதிராக பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன் ஒருங்கிணைந்து போரிட்டதைவிடவா ஒரு நல்ல உதாரணத்தைக் காட்டிவிட முடியும்? இந்த ஒத்துழைப்பை வைத்து, சர்ச்சிலும் ரூஸ்வெல்ட்டும் கம்யூனிஸ்டுகளாக ஆகிவிட்டார்கள் என்றும் பிரிட்டனும் அமெரிக்காவும் கம்யூனிச உலகத்தைப் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன என்றும் ஹிட்லர் மட்டும்தான் சொல்லியிருக்கக் கூடும்.

ஆப்பிரிக்க தேசப்பற்றாளன் என்றே என்னை நான் எப்போதும் கருதிவந்திருக்கிறேன். வர்க்கபேதமற்ற சமுதாயம் என்னும் சிந்தனையால் இன்று நான் கவரப்பட்டிருக்கிறேன். மார்க்ஸிச வாசிப்பும், முந்தைய ஆப்பிரிக்கச் சமூக அமைப்புகள் மேல் எனக்கு இருந்த வியப்பும்தான் இந்த ஈர்ப்புக்குக் காரணம். உற்பத்தியின் முக்கியமான சாதனமாக இருந்த நிலம் என்பது அதன் மக்களுக்குத்தான் அப்போது சொந்தம். அப்போது ஏழைகளுமில்லை, பணக்காரர்களுமில்லை எந்த விதமான சுரண்டலுமில்லை.

ஏற்கெனவே, நான் குறிப்பிட்டிருப்பதுபோல் மார்க்ஸிசம் என்மேல் தாக்கம் ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். எனக்கு மட்டுமல்ல, உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கும் இந்தத் தாக்கம் இருந்திருகிறது. காந்தி, நேரு, ங்க்ரூமா (கானா நாடு), நாசர் (எகிப்து) போன்ற தலைவர்களெல்லாம் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். முன்னேறிய நாடுகளை எங்கள் மக்கள் எட்டிப்பிடிப்பதற்கும் அவர்களின் கடுமையான வறுமையைப் போக்கவும் வகைசெய்யும் சோஷலிசத்தின் ஒரு வடிவத்தை நாங்கள் எல்லாரும் ஏற்றுக்கொள்கிறோம். இதனாலெல்லாம் நாங்கள் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிவிட முடியாது.


ஆப்பிரிக்கர்களின் இழிநிலை

அடிப்படையில், ஆப்பிரிக்க வாழ்க்கையின் அடையாளங்கள் என்று ஆகிவிட்ட இரண்டு அம்சங்களை எதிர்த்துதான் நாங்கள் போரிடுகிறோம், சட்டத்தால் நன்றாக நிலைபெற்றுவிட்ட அவை விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. ஏழ்மையும் மனித உரிமையின்மையும்தான் அந்த அம்சங்கள். இதை எங்களுக்குப் போதிப்பதற்கு கம்யூனிஸ்டுகள்தான் வர வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கில்லை.

ஆப்பிரிக்காவிலேயே பணக்கார நாடு தென்னாப்பிரிக்காதான். முற்றிலும் எதிரெதிர் துருவங்களும் அசாதாரணமான வேறுபாடுகளும் காணப்படும் நாடும் இதுதான். உலகிலேயே மிகவும் சொகுசான வாழ்க்கை முறையை இங்குள்ள வெள்ளையர்கள் அனுபவிக்கும் அதே வேளையில் ஆப்பிரிக்கர்கள் ஏழ்மையிலும் துயரத்திலும் உழல்கின்றனர். தாங்கள் ஏழைகளாக இருக்கும் அதே நேரத்தில் வெள்ளையர்கள் மட்டும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல ஆப்பிரிக்கர்களின் முறையீடு, வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் யாவும் இந்த நிலையைத் தொடர்ந்து நீடிக்கச் செய்பவையாகவே இருக்கின்றன என்பதும்தான்.

வெள்ளை ஆதிக்கத்தின் நேரடி விளைவுதான் ஆப்பிரிக்கர்கள் அனுபவிக்கும் இழிநிலை. வெள்ளை ஆதிக்கம் என்பது கருப்பர்கள் தாழ்வானவர்கள் என்பதையே குறிக்கிறது. தென்னாப்பிரிக்காவில் ஒழிசலான வேலைகள் என்பவை ஆப்பிரிக்கர்களால் மட்டுமே செய்யப்படுகின்றன. எதையாவது தூக்கிச் செல்ல வேண்டுமென்றாலோ எதையாவது சுத்தம் செய்ய வேண்டுமென்றாலோ ஒரு வெள்ளையர் சுற்றும்முற்றும் யாராவது கருப்பினத்தவர் தென்படுகிறாரா என்றுதான் பார்ப்பார், அவர் தனது வேலையாளாக இல்லாவிட்டாலும் கூட. இது போன்ற அணுகுமுறையால்தான் வெள்ளையர்கள் ஆப்பிரிக்கர்களை ஏதோ தனிவகை ஜந்து என்ற விதத்தில் பார்க்கிறார்கள். கருப்பர்களுக்கும் குடும்பம் இருக்கும் என்றோ அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கும் என்றோ, வெள்ளையர்களைப் போலவே அவர்களுக்கும் காதல் ஏற்படும் என்றோ வெள்ளையர்கள் உணர்வதில்லை. வெள்ளையர்கள் தங்கள் மனைவியருடனும் குழந்தைகளுடனும் இருக்க விரும்புவதைப் போலவே கருப்பர்களும் விரும்புவார்கள் என்று அவர்கள் உணர்வதில்லை; தங்கள் குடுமபத்தை நல்லபடி நடத்தவும், உணவு துணிமணிகள் போன்ற தேவைகளை நிறைவேற்றவும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் தேவையான அளவுக்கு சம்பாதிக்கக் கருப்பர்கள் விரும்புவார்கள் என்று வெள்ளையர்கள் உணர்வதில்லை.


கோரிக்கைகள்

ஆப்பிரிக்கர்கள் நல்ல முறையில் வாழ்க்கை நடத்தத் தேவையான அளவு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். அரசாங்கம் சொல்லும் வேலைகளைத்தான் ஆப்பிரிக்கர்கள் செய்ய வேண்டும் என்ற நிலை இல்லாமல் ஆப்ப்ரிக்கர்கள் எந்த வேலைகளைச் செய்ய விரும்புகிறார்களோ அந்த வேலைகளைச் செய்வதற்குத்தான் அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். ஆப்பிரிக்கர்களுக்கு எங்கே வேலை கிடைக்கிறதோ அங்கே அவர்கள் வாழ அனுமதிக்கப்பட வேண்டும். தாங்கள் வேலைபார்க்கும் பிரதேசங்களில் இடங்கள் வாங்க அனுமதிக்கப்பட வேண்டுமே தவிர வாடகை வீடுகளில்தான் குடியிருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படக் கூடாது. பொதுச் சமூகத்தின் ஒரு பங்காகவே ஆப்பிரிக்கர்கள் இருக்க வேண்டுமே தவிர சேரிகளுக்குள் அவர்களை ஒதுக்கிவிடக் கூடாது. ஆப்பிரிக்கப் பெண்கள் தங்கள் கணவர்களுடன் வாழ அனுமதிக்கப்பட வேண்டுமே ஒழிய காலமெல்லாம் அவர்கள் அபலைகளாகவே ஆக்கப்படக் கூடாது. ஆப்பிரிக்கர்கள் தங்கள் நாட்டுக்குள் எங்கு வேண்டுமானாலும் பயணிக்க அனுமதிக்கப்பட வேண்டும். மொத்தத் தென்னாப்பிரிக்காவிலும் ஆப்பிரிக்கர்களுக்கு உரிய பங்கு கிடைக்க வேண்டும். சமூகப் பாதுகாப்பும், சமூகப் பங்கேற்பும் அவர்களுக்குத் தரப்பட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சரிசமமான அரசியல் உரிமைகள் எங்களுக்கு வேண்டும், ஏனெனில் அவையில்லாவிட்டால் எங்கள் ஊனங்களெல்லாம் நிரந்தரமாகிவிடும். இந்த நாட்டிலுள்ள வெள்ளையர்களுக்கு இது ஏதோ கலகச் சிந்தனைபோல் தோன்றக்கூடும். இதனால்தான் ஜனநாயகத்தைக் கண்டு வெள்ளையர்களுக்கு அச்சம்.

ஆனால், இன ஒற்றுமைக்கும் எல்லாருக்குமான சுதந்திரத்துக்கும் உத்தரவாதம் அளிக்கக் கூடிய ஒரே பாதையின் குறுக்கே அந்த அச்சம் தடையாக நின்றுவிடக் கூடாது. எல்லாருக்குமான வாக்குரிமை என்பது இன ஆதிக்கத்துக்கு வழிவகுத்துவிடும் என்பது உண்மையல்ல. நிறங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் பிளவு என்பது முழுக்க முழுக்க செயற்கையானதே. இது மறைந்துபோகும்போது ஒரு நிறத்தின் மீது இன்னொரு நிறம் செலுத்தும் ஆதிக்கமும் மறைந்துபோய்விடும். அரை நூற்றாண்டாக நிறவெறியை எதிர்த்தே ஆ.தே.கா. போராடியிருக்கிறது. அது வெல்லும்போது தனது கொள்கையை மாற்றிக்கொள்ளாது.

ஆ.தே.காவின் போராட்டம் என்பது இதுதான். அவர்களின் போராட்டம் என்பது உண்மையில் தேசம் முழுமைக்குமானது. இது ஆப்பிரிக்க மக்கள் தங்கள் துன்பங்கள், அனுபவங்கள் அடிப்படையில் முன்னெடுத்த போராட்டம். வாழ்வதற்கான உரிமை வேண்டிய போராட்டம்.

என் வாழ்நாள் முழுவதும் ஆப்பிரிக்க மக்களின் இந்தப் போராட்டத்துக்காகவே என்னை அர்ப்பணித்திருக்கிறேன். வெள்ளை ஆதிக்கத்துக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன், கருப்பர் ஆதிக்கத்துக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன். எல்லாரும் ஒற்றுமையாக வாழக்கூடிய, எல்லாருக்கும் சமமாக வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய, ஜனநாயகபூர்வமான, சுதந்திரமான சமூகம் என்ற லட்சியத்தையே நான் போற்றிவந்திருக்கிறேன். நான் அடைய நினைப்பது இந்த லட்சியத்தைதான்; நான் வாழ நினைப்பது இந்த லட்சியத்துக்காகத்தான். தேவை என்றால் என் உயிரையும் துறக்க நினைப்பதும் இந்த லட்சியத்துக்காகத்தான்.


                                  நன்றி: 'தி இந்து' தமிழ் நாளிதழ்,
                                  'தி இந்து' தமிழ் நாளிதழின் இணையதளத்தில் இந்த உரையைப் படிக்க:

பாரதி: வெடித்து அணைந்த விண்மீன்

'தி இந்து'தமிழ் நாளிதழில் 11.12.13 அன்று வெளியான தலையங்கம்


சரியாக, 38 ஆண்டுகள், 9 மாதங்களே வாழ்ந்த பாரதி தன் மொழிக்கும் சமூகத்துக்கும் விட்டுச்சென்றது ஏராளம். தனது குறுகிய வாழ்நாளுக்குள் எவ்வளவு செய்திருக்கிறார் பாரதி. கவிதைகள் மட்டும்தான் அவரது சாதனை என்று இன்றைய தலைமுறையினர் பலர் நினைக்கக்கூடும். கிட்டத்தட்ட, கவிதைகளுக்கு நிகரான சாதனையை பாரதி உரைநடையிலும் செய்திருக்கிறார்.

Wednesday, November 20, 2013

பழங்குடிகளின் ஒலிம்பிக்ஸ்


(‘தி இந்து’, தலையங்கம், 19.11.13)

அடுத்த உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டி 2014-ம் ஆண்டும், ஒலிம்பிக் போட்டிகள் 2016-ம் ஆண்டும் பிரேசிலில் நடக்க இருக்கின்றன. ஆனால், அந்தப் போட்டிகளுக்கு முன்னதாக, அவற்றைவிட முக்கியமான விளையாட்டுப் போட்டிகள் பிரேசிலில் நடந்துமுடிந்திருக்கின்றன - பழங்குடிகளின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள். பிரேசிலின் 48 பழங்குடியினங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டோர்; கூடவே, பிற நாடுகளின் பழங்குடி இன மக்களும்; இவர்கள்தான் பங்கேற்பாளர்கள்.

Friday, November 15, 2013

நேரு என்ற ஆக்க சக்தி

'தி இந்து' (தமிழ்) தலையங்கம் (14.11.13)

சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவை ஒன்றுசேர்த்துப் போராட வைப்பதற்கான, ஒன்றிணைக்கும் சக்தி தேவைப்பட்டது. மிகச் சரியாக அந்த இடத்தில் காந்தி வந்து அமர்ந்தார். சுதந்திரத்துக்குப் பிறகும் அதேபோல் ஒன்றிணைக்கும் சக்தி தேவைப்பட்டது. சுதந்திரமடைந்த சில மாதங்களில் காந்தி கொல்லப்படவே, அவருடைய இடத்தில் இயல்பாகவே நேரு வந்து அமர்ந்தார். ஒருங்கிணைக்கும் சக்தியாக ஆற்ற வேண்டிய பணிகள் நேருவுக்கு முன் குவிந்துகிடந்தன, காந்திக்கு இருந்த கடமைகளைவிட அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் எல்லாருக்கும் இடம் இருக்கிறது

ஜவாஹர்லால் நேரு

(தமிழில்: ஆசை. 'தி இந்து' தமிழ் நாளிதழில் நேரு பிறந்த நாள் அன்று வெளியானது)


அலிகாருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்துக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறேன். காலத்தால் மட்டுமல்ல, உத்வேகத்தாலும்  கண்ணோட்டத்தாலும் நமக்கிடையே இடைவெளி இருக்கிறது. நீங்கள் இன்று எங்கே நிற்கிறீர்கள், நம்மில் பெரும்பாலானோரும் எங்கே நிற்கிறார்கள் என்பதுபற்றி எனக்கு உறுதியாகத் தெரிய வில்லை. ஏனென்றால், ஏராளமான கொந்தளிப்பு களையும் பெரும் துயரங்களையும் நாம் கடந்து வந்திருக்கிறோம். அதனால், நிகழ்காலம் குழப்பம் நிரம்பியதாகவும், அதைவிட எதிர்காலம் மூட்டமானதாகவும் ஊடுருவிப் பார்க்க முடியாததாகவும் காட்சியளிக்கிறது. இருந்தாலும், நாம் நமது இந்த நிகழ்காலத்தை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்; அப்படி எதிர்கொள்வதன்மூலம் எதிர்காலத்தை உருவாக்க முயன்றுதான் ஆக வேண்டும்.

ஒபாமாகேர்: மாபெரும் அலங்கோலம்

பால் க்ருக்மன்

(தமிழில்: ஆசை. நியூயார்க் டைம்ஸ் ஆங்கில இதழில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு தி இந்து நாளிதழில் 30.10.13 அன்று வெளியானது) 
 
 
  
‘ஒபாமாகேர்’- நுழைவுதளமான (போர்ட்டல்) ‘ஹெல்த்கேர்.கவ்’ குறித்த நல்ல செய்தி என்னவென்றால், அதன் நிர்வாகம் தன் பிரச்சினைகளைச் சாதாரணமானவையாகக் கருதவில்லை. பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கான முதல் படி அதுதான், நிச்சயம் சரிசெய்யப்பட்டுவிடும். என்ன, ‘சீரான நிர்வாகம்’என்ற புதிய நம்பிக்கை நவம்பர் இறுதிக்குள் சாத்தியப்படுமா என்பதுதான் கேள்வி.

இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள் ஒரு கொடூர நகைச்சுவை - குணால் சாஹா பிரத்தியேகப் பேட்டி

சமஸ்
 
(தமிழில்: ஆசை. தி இந்து நாளிதழில் 05.11.2013 அன்று வெளியான நேர்காணல்)

  • குணால் சாஹா
    குணால் சாஹா
  • அனுராதா சாஹா
    அனுராதா சாஹா
  • குணால் சாஹாவுடன் அவரது மனைவி அனுராதா சாஹா
    குணால் சாஹாவுடன் அவரது மனைவி அனுராதா சாஹா
இந்திய மருத்துவத் துறையையே உறைய வைத்திருக்கிறார் குணால் சாஹா. தன்னுடைய மனைவி அனுராதாவின் மரணத்துக்கு மருத்துவர்களின் அலட்சியமான சிகிச்சைக்கு இழப்பீடாக ரூ. 11 கோடியை உச்ச நீதிமன்றத்திடமிருந்து தீர்ப்பாகப் பெற்றிருக்கிறார் சாஹா. இந்திய வரலாற்றில் மருத்துவத் துறை தவறுகளுக்காக விதிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச அபராதத் தொகை இது. “இந்திய மருத்துவத் துறைக்கு இது ஒரு கருப்பு நாள்” என்று சொல்லும் அளவுக்கு இந்திய மருத்துவத் துறையை குறிப்பாக, தனியார் மருத்துவத் துறையைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது சாஹா பெற்றிருக்கும் தீர்ப்பு. ஆனால், சாமானியர்களோ கொண்டாடுகிறார்கள். சாஹாவிடம் பேசினால், ஒரு பெரிய கதை விரிகிறது. ஒரு தனிப்பட்ட மனிதனின் காதலில் தொடங்கும் அந்தக் கதை இந்திய நோயாளிகளின் அவலங்களை அம்பலப்படுத்துகிறது; கூடவே இந்திய மருத்துவத்தைச் சூறையாடும் பண வெறியையும்.

ஆசாத் எனும் மகா அக்பர்


 முஷிருல் ஹசன்
(தமிழில்: ஆசை, ஆசாதின் 125-வது பிறந்த தினத்தில் (11.11.13) தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரை)

உயரம் ஐந்து அடி ஐந்து அங்குலம்; மிகவும் ஒடிசலான உடல்வாகு; வெளுப்பான நிறம்; சுமார் 33வயது; சவரம் செய்யவதில்லை என்றாலும் முகத்தில் அநேகமாக ரோமம் ஏதும் இல்லை; நீண்ட, தீர்க்கமான முகம், எடுப்பான மூக்கு. இந்திய சுதந்திரப் போரின் மகத்தான இளைஞனாக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாதைப் பற்றி முறையாகச் சொல்ல வேண்டும் என்றால் இதுதான் சரியான வர்ணனை. தனது தன்னம்பிக்கை, வசீகரம், அர்ப்பணிப்பு ஆகிய குணங்களாலும் அறிவுக் கூர்மை, சிந்தனை வேகம் ஆகியவற்றாலும் ஆசாத் பெரிதும் ஈர்த்தார்.
ஆனால், பிற்காலத்தில் அவர் வரித்துக்கொண்ட தோற்றம் வேறு: அவருடைய ஆழ்ந்த கல்வியறிவுக்கும் வயதுக்கு உரிய மரியாதையைத் தரும் தோற்றம்.

ஆசாத், கித்வாய்: இரு ஆளுமைகள்!

ஹசன் சுரூர்
(தமிழில்: ஆசை. தி இந்து நாளிதழில் 10.11.13 அன்று வெளியான கட்டுரை. )
 

நரேந்திர மோடி பேசிய பேச்சு, நேருவையும் படேலையும் ஒப்பிட்டுப் பரபரப்பாக விவாதம் நடக்கத் தூண்டியிருப்பதோடு மட்டுமல்லாமல், நவீனமும் ஒன்றுபட்டதும் மதச்சார்பற்றதுமான இந்தியாவை உருவாக்கப் பாடுபட்டு, இப்போது மக்கள் நினைவிலிருந்தே மறைந்துபோன இருவரைப் பற்றிப் பேசுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
மௌலானா அபுல் கலாம் ஆசாத், ரஃபி அகமது கித்வாய். தேசியத்தைக் கண்போல் மதித்த இஸ்லாமியத் தலைவர்களின் மகத்தான, கடைசித் தலைமுறையினர்.

பைத்தியக்காரர்களிடம் செல்லுபடியாவாரா காந்தி?

ஜார்ஜ் ஆர்வெல்

(ஆர்வெல் 1949-ல் எழுதிய கட்டுரையின் சுருக்கமான மொழிபெயப்பு: ஆசை. தி இந்து நாளிதழில் 02.10.2013 அன்று வெளிவந்தது.)
 
காந்தியின் சுயசரிதை முதன்முதலில் வெளியானபோது அதன் ஆரம்ப அத்தியாயங்களை மட்ட ரகக் காகிதத்தில் அச்சான ஓர் இந்திய நாளிதழில் படித்தேன். அவை எனக்குள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தின, அப்படிப்பட்ட தாக்கத்தை காந்தி என்னுள் அப்போது ஏற்படுத்தியிருக்காவிட்டாலும்கூட.
காந்தி என்றால் ஒருவருக்கு என்ன தோன்றும்? சுதேசி கதர் துணி, ஆன்ம பலம், சைவ உணவு - இவை எதுவும் அப்போது என்னைக் கவரவில்லை. பின்தங்கிய, பசியோடு இருக்கும், அதிக அளவு மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டுக்குச் சரிப்பட்டு வராதவையாகத்தான் காட்சியளித்தன, மத்திய காலத்துக்குரியவையான அவரது திட்டங்கள்.

அந்தக் காலத்திலும் ஒரு மலாலா இருந்தார்

வில்லியம் டால்ரிம்பிள்
(தமிழில்: ஆசை , தி இந்து நாளிதழில் 15.10.2013 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை, இதன் மூல வடிவம் 'நியூயார்க் டைம்ஸ்' ஆங்கில இதழில் வெளிவந்தது ) 
 
துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் பிழைத்ததற்குப் பிறகு, மலாலா வுக்குக் கிடைக்காத கௌரவங்களே இல்லை; அமைதிக்கான நோபல் பரிந்துரையில் ஆரம்பித்து அன்னை தெரசா விருது, ‘டைம்’பத்திரிகையின் ‘செல்வாக்கு மிக்க 100 பேர்’பட்டியலில் கிடைத்த இடம் என்று நீண்டுகொண்டே போகின்றன. மலாலாவின் அசாத்தியமான துணிச்சலும் பெண் கல்வி, சமாதானம் ஆகியவற்றில் அவரின் ஈடுபாடும் உண்மையிலேயே உத்வேகமளிக்கக் கூடியவை. ஆனாலும், அவர் மீது தொடர்ச்சியாகச் சூட்டப்படும் புகழ் மாலைகள் ஒருவித அசௌகர்ய உணர்வை ஏற்படுத்துகின்றன. தீவிரப் பழமைவாத சமூகமாகவும் தந்தைவழி சமூகமாகவும் பொதுவாகக் கருதப்படும் பஷ்டூன் சமூகத்தைச் சேர்ந்தவர் மலாலா. ஆஃப்கன், பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இந்தச் சமூகம் பரந்திருக்கிறது. மலாலாவின் குரல்தான் இந்தச் சமூகத்திலேயே தனித்த குரல் என்றும் மலாலா கிட்டத்தட்ட முன்னுதாரணமற்ற நிகழ்வு என்றும் கருதுவதும்தான் அந்த அசௌகர்ய உணர்வுக்குக் காரணம்.

காகமாதல்

ஆசை 
('தி இந்து' நாளிதழில் 24.09.13 அன்று 'காகமும் நாமும்' என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது )
                                                     படம்: விக்கிபீடியா




ஒரு நாள் அலுவலகத்துக்கு வந்தபோது நான் பார்த்த காட்சி என்னை வியப்பிலும் பொறாமையிலும் ஆழ்த்தியது. அலுவலகத்தின் பால்கனியில் என் அலுவலக சகா ஒருவர் வெளியில் பார்த்து நின்றுகொண்டிருக்க அவர் முகத்துக்கு அருகே உள்ள இரும்பு கிராதியில் ஒரு காகம் அவரைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது. அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பிஸ்கட்டை காகத்துக்குப் பிட்டுக்கொடுக்க அதுவும் அலகால் அதைக் கொத்திக்கொண்டு போய்விட்டது. அவரிடம் மட்டும் வரும் காகம் நம்மிடம் வராதா என்று எனக்குப் பொறாமை ஏற்பட்டது.

42 நட்சத்திரங்களும் 55 ஆண்டுகளும்

ஆசை

(தி இந்து நாளிதழில் 24.09.2013 அன்று வெளியான கட்டுரை)
 


 

பெருநட்சத்திர வெடிப்பின் மிச்சம் படம்: ஏ.பி.பி.
 

ராபர்ட் ஓவன் இவான்ஸின் தலை எப்போதும் அண்ணாந்தபடிதான் இருக்கும்போல. இவரைப் பற்றி சில வருடங்களுக்கு பில் பிரைசனின் ‘எ ஷார்ட் ஹிஸ்டரி ஆஃப் நியர்லி எவரிதிங்’ (A Short History of Nearly Everything) புத்தகத்தில் படித்தேன். அடிப்படையில் இவான்ஸ் ஒரு பாதிரியார். ஆனால் அவரது வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருக்கும் விஷயம் என்ன தெரியுமா? இரவு நேரத்தில் பெருநட்சத்திர வெடிப்பை (supernova) தேடி நடத்தும் வேட்டைதான்.

இந்த நாளின் பெயர் தேன்சிட்டு

ஆசை

(தி இந்து, 28.10.2013) 
  • ஆண் தேன் சிட்டு
    ஆண் தேன் சிட்டு
  • பெண் தேன் சிட்டு
    பெண் தேன் சிட்டு        படம்: கே. ஞானஸ்கந்தன்  

காலையில் நாம் கண்விழிக்கும்போது அற்புதமான பாடல் ஒன்றைக் கேட்டால் எப்படி இருக்கும்?
கல்லூரி நாட்களில் இளையராஜாவின் ஏதாவதொரு பாடலைக் காலையில் கேட்டுவிட்டுக் கல்லூரிக்குச் செல்வது வழக்கம். அந்த நாள் முழுவதும் காதுக்குள்ளே அந்தப் பாடலின் நாதம் ஓடிக்கொண்டேயிருக்கும். அப்படித்தான் ஏதோ ஒரு நாளில் கண் விழிக்கும்போது பறவைகளின் குரலுக்குப் பழகினேன். ஏதாவது ஒரு பறவையின் குரல் என்னை எழுப்பும். முதல் தடவை நான் எழுந்தது அக்காக்குயிலின் கூவலுக்கு.

Friday, September 20, 2013

தையல்சிட்டும் வானமும்


ஓவியம்: ராஜே
ஓவியம்: ராஜே
ஆசை
 
ஒரு நாள் காலையில் தையல்சிட்டு வானத்தை அண்ணாந்து பார்த்தது.  பளிச்சென்ற வானத்தில் ஏதோ கோடுபோல் தெரிந்தது. அது என்ன? 
தையல்சிட்டு உற்றுப் பார்த்தது. அது ஒரு கிழிசல். துணியில் கிழிசல் இருப்பது போல வானத்தில் கிழிசல்.
தையல்சிட்டு பதறிவிட்டது. அய்யய்யோ ஆபத்து வந்துவிட்டதே. வானம் கிழிய ஆரம்பித்திருக்கிறதே. என்ன செய்வது?
தையல்சிட்டுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எல்லாரிடமும் சொல்லி எச்சரிக்க வேண்டும் என்று அதற்குத் தோன்றியது.
அவரசமாகப் போய்க்கொண்டிருந்த தேன்சிட்டு ஒன்று, அதன் கண்ணில் பட்டது.