Friday, February 3, 2017

அங்காளப் பறவை



வரத்துப் பறவைகளின்
வழித்தடத்தின் கீழமைந்த
மொட்டை மாடியின்
அதிகாலை நடையை
இடறுகிறாள் தினமும்
அங்காளம்மா
எங்கள் அங்காளம்மா

புறக்கணிக்கப்பட்ட
உள்ளூர்ப் பறவையாய் மாறி
வரத்துப் பறவைகளை
வழிமறித்துக் கலைத்துத்
துரத்துகிறாள்

நள்ளிரவுக்குரியவள்
கோழித் தொண்டை கடித்துக்
குருதி குடிப்பவள்
சுடுகாட்டின் கபாலமெடுத்து
சாராயம் ஊற்றிக் குடிப்பவள்
போதையும்
வெறியும்
இன்னும் தணியாமலிப்படி
அலங்கமலங்க வைக்கிறாள்
அதிகாலையை

எல்லாக் கூத்தும்
முடித்துவிட்டு
மொட்டை மாடிச் சுவரில்
அமைதியாய் வந்தமர்ந்திருக்கிறாள் இன்று
காகத்தின் உருவெடுத்து
அங்காளம்மா
எங்கள் அங்காளம்மா

எலிக்குதத்தின் வழியாய்ப்
பிதுக்கி எடுத்து வந்த
எலிக்குடலைக் காலடியில்
அமுக்கிக்கொண்டு
அமர்ந்தபடி
எல்லையற்ற தரிசனம் காட்டினாள்
இன்றெனக்கு
அங்காளம்மா
எங்கள் அங்காளம்மா

கோபம் அகற்றி
அவளிடம் காட்ட வேண்டிய
கருணையை
அவளே தந்தருளினாள்

அதிகாலையைப் படைத்தவளே
அதில் மொட்டை மாடி அமைத்தவளே
அதன் மேல் வரத்துப் பறவைகளின்
வழித்தடம் அமைத்தவளே
அங்காளம்மா
எங்கள் அங்காளம்மா
எல்.ஆர். அங்காளம்மா
  

No comments:

Post a Comment