Tuesday, June 2, 2020

அமெரிக்கக் கறுப்பினத்தவர் போராட்டம் இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?



ஆசை

கரோனாவால் நிலைகுலைந்துபோயிருக்கும் அமெரிக்காவை ஜார்ஜ் ஃப்ளாய்டின் படுகொலை உலுக்கியெடுத்திருக்கிறது. உலக நாடுகள் பலவும் இந்தப் படுகொலையைப் பேசுகின்றன. சட்டரீதியாக அமெரிக்காவில் நிறப் பாகுபாடு ஒழிக்கப்பட்டாலும், நடைமுறையில் அது இன்னும் தொடர்ந்துகொண்டேயிருப்பதைத்தான் ஜார்ஜ் ஃப்ளாய்டுகளின் மரணங்கள் சொல்கின்றன. ஒரு ஜனநாயக நாடாக அமெரிக்கா தலைகுனிந்து நிற்கிறது.

வடக்கு கரோலினா மாகாணத்தின் ஃபேயட்வில் நகரத்தில் 1973-ல் பிறந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டு, வளர்ந்ததெல்லாம் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரத்தில். பள்ளிப் பருவத்தில் கால்பந்து, கூடைப்பந்து அணிகளில் விளையாடியிருக்கிறார். 2014-ல் மின்னிசோட்டா மாகாணத்தின் மினியாபொலிஸ் நகரத்துக்குப் புலம்பெயர்ந்த அவர், கடந்த 5 ஆண்டுகளாக ஒரு கிளப்பில் காவலாளியாகப் பணிபுரிந்துவந்தார். கரோனா நெருக்கடியால் வேலை இழந்த சில கோடி அமெரிக்கர்களில் அவரும் ஒருவர். ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு 22 வயதிலும், 6 வயதிலும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

கடைசி நிமிடங்கள்

மே 25 அன்று மாலை மினியாபொலிஸ் நகரத்தில் உள்ள ஒரு அங்காடிக்குச் சென்று, 20 டாலர் பணத்தைக் கொடுத்து சிகரெட் வாங்கியிருக்கிறார் ஜார்ஜ் ஃப்ளாய்டு. அவர் கொடுத்த பணம் கள்ளநோட்டாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், அந்த அங்காடியின் ஊழியர் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கிறார். சற்று நேரத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் அங்கே வருகிறார்கள். அந்த இடத்துக்கருகே ஒரு ஓரத்தில் நின்றுகொண்டிருந்த காரில் தன் நண்பர்கள் இருவருடன் இருந்த ஃப்ளாய்டைக் கைதுசெய்து போலீஸ் காரில் ஏற்ற முயல்கிறார்கள். தனக்கு ‘கிளாஸ்ட்ரோஃபோபியா’ (அடைத்திருக்கும் இடங்கள் உருவாக்கும் பீதி) இருக்கிறது என்கிறார் ஃப்ளாய்டு. எனினும், போலீஸ்காரர்களுக்கு அவர் எதிர்ப்பேதும் தெரிவிக்கவில்லை. காரில் ஏற்ற முயலும்போது ஃப்ளாய்டு கீழே விழுகிறார். அப்போது அங்கே இன்னொரு போலீஸ் கார் வருகிறது. அதிலிருந்து இறங்கிய டேவிட் சாவின், ஏற்கெனவே அங்கே இருந்த போலீஸாருடன் சேர்ந்து ஃப்ளாய்டை காரில் ஏற்ற முயலும்போது ஃப்ளாய்டு மறுபடியும் கீழே விழுகிறார். இரண்டு போலீஸ்காரர்கள் ஃப்ளாய்டின் கையையும் காலையும் பிடித்திருக்க, அவரது கழுத்தின் மீது முழங்காலை வைத்து டேவிட் சாவின் அழுத்துகிறார். ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என்று தொடர்ந்து கத்துகிறார் ஃப்ளாய்டு. எட்டு நிமிடங்களுக்கும் மேலாக ஃப்ளாய்டின் கழுத்தின் மீது காலை வைத்து அழுத்திக்கொண்டிருக்கிறார் டேவிட் சாவின். ஆறு நிமிடங்களிலேயே ஃப்ளாய்டு அசைவற்றுப்போகிறார். அவரது நாடித்துடிப்பைப் பரிசோதிக்கும்படி நடைபாதையில் இருக்கும் ஒருவர் கூறவே ஒரு போலீஸ்காரர் ஃப்ளாய்டின் நாடியைப் பரிசோதிக்கிறார். துடிப்பு இல்லை.

செல்பேசியில் பலரும் படம் பிடித்து இதை சமூக ஊடகங்களில் வெளியிட, மக்களின் கோபம் தீயாகப் பரவியது. அடுத்த நாள் அந்தக் காவலர்கள் நால்வரும் விடுப்பில் அனுப்பப்பட்டதாக மினியாபொலிஸ் காவல் துறை தெரிவித்தது. அன்று மாலையே அவர்கள் நால்வரும் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள் என்றாலும், நான்கு நாட்கள் கழித்துதான் டேவிட் சாவின் கைதுசெய்யப்பட்டார். இதற்குள் மினியாபொலிஸ் நகரத்திலும், தொடர்ந்து அமெரிக்கா முழுவதிலும் உள்ள ஏனைய நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. ஃப்ளாய்டின் இறுதி வாசகங்களான ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என்பது போராட்டக்காரர்களின் தாரக மந்திரமானது. இந்தப் போராட்டங்களை முன்னெடுத்துவருவதில் ‘கறுப்பினத்தவரின் வாழ்க்கை முக்கியம்’ (Black Lives Matter) இயக்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டங்களில் ஏராளமான வெள்ளையின மக்களும் கலந்துகொண்டு, தங்கள் சகோதரத்துவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுவது ஒரு சின்ன ஆசுவாசம்.

தொடரும் பாகுபாடு

போராட்டம் அமைதியான முறையில் ஆரம்பித்தாலும் மக்களின் கோபம் சில இடங்களில் கலவரமாக வெடித்தது. கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதுதான் தருணம் என்று போராட்டத்துடன் தொடர்பில்லாதவர்கள் கடைகளைச் சூறையாட ஆரம்பித்தனர். அதிபர் ட்ரம்ப் ‘லூட்டிங் (சூறையாடுதல்) ஆரம்பித்தால் ஷூட்டிங்கும் (துப்பாக்கியால் சுடுதல்) ஆரம்பித்துவிடும்’ என்று ட்வீட் போட இது வழிவகுத்தது. எல்லாவற்றையும் தாண்டியும் இந்த கரோனா காலத்திலும் ஒரு எளிய மனிதர் அநீதியாகக் கொல்லப்பட்டதற்காகப் பல்லாயிரம் மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுவருவது உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பூர்வகுடிகளான செவ்விந்தியர்களின் கல்லறை மேல்தான் நவீன அமெரிக்கா எழுப்பப்பட்டது. ஆப்பிரிக்காவிலிருந்து 18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு அடிமைகளாகக் கறுப்பினத்தவர்கள் கொண்டுவரப்பட்டார்கள். அவர்களை விலங்குகளைப் போலவே அமெரிக்கர்கள் நடத்தினார்கள். அடிமைகள் பொருட்களைப் போல் ஏலம் விடப்பட்டார்கள். ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்பது அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் தாரக மந்திரம் என்றாலும், அமெரிக்க அரசமைப்பும்கூட அடிமை முறைக்கு ஆதரவே அளித்தது. 1865-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் அடிமை முறையை ஒழிக்கும் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தார். தொடர்ந்து, கறுப்பினத்தவருக்கான வாக்குரிமையைப் பற்றி அவர் பேசிவந்ததால் தன் உயிரையும் அவர் பறிகொடுக்க வேண்டியிருந்தது. அங்கிருந்து கறுப்பினப் பின்னணி கொண்ட ஒபாமா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் காலம் வரை எவ்வளவோ மாற்றங்களை அமெரிக்கா கண்டுவிட்டாலும் இன்னும் அவர்கள் கீழே வைத்துப் பார்க்கப்படுவது தொடர்கிறது. அமெரிக்க மக்கள்தொகையில் 12% கறுப்பினத்தவர்கள்; 61% வெள்ளையினத்தவர். ஆனால், காவல் துறையால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையில் வெள்ளையினத்தவரைப் போல மூன்று மடங்கு கறுப்பினத்தவர்கள் கொல்லப்படுகிறார்கள். இது ஒரு பதம்தான்.

அமெரிக்காவின் நிறவெறி தொடர்பில் பேசுகையில், இந்தியாவில் சாதிவெறி தொடர்பில் சிந்தனை செல்கிறது. அமெரிக்காவில் ஒருபுறம் நிறவெறி இன்னும் நீடித்தாலும் மறுபுறம் அதற்கு எதிராக நடக்கும் ஜனநாயகப் போராட்டங்களும், அதற்கான ஊடகங்களின் ஆதரவும், பல்லாயிரக்கணக்கான வெள்ளை இனத்தவரும் அதில் தன்னெழுச்சியாகத் திரள்வதையும் நாம் பார்க்கிறோம். ஆனால், இங்கே சாதிவெறியால் நடத்தப்படும் கொலைகளுக்கான நம்முடைய எதிர்வினை என்ன என்று ஒரு கேள்வி எழுகையில் தலைகுனிவதைத் தவிர நமக்கு வழியில்லை. ஒவ்வொரு உயிருக்குமான முக்கியத்துவமே ஒரு சமூகம் சமத்துவத்தை நோக்கி நடத்தும்  பயணத்தில் முக்கியமான உந்துசக்தி. நாமும் அதைப் பெற வேண்டும்.
(02--06-20 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான கட்டுரை)

1 comment: