Wednesday, September 16, 2015

பெரிய்ய்ய்ய பெரிய்ய்ய்ய வானம்…

                             ஓவியம்: ராஜே
ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர் இணைப்பிதழில் 16.09.2015 அன்று வெளியான கதை)

அய்யய்யோ இந்த ஆதியும் ஆனந்தியும் படுத்தும் பாடு இருக்கிறதே!
கம்ப்யூட்டரின் முன்னால் நான் உட்கார்ந்துகொண்டால் போதும் எங்கிருந்தாலும் ஓடிவந்துவிடுவார்கள். “சித்தப்பா, சித்தப்பா ஏதாவது நல்ல நல்ல ஃபோட்டோவா காட்டு” என்று அரித்தெடுப்பார்கள்.
இதில் பெரியவனும் சின்னவளும் வேறு வேறு மாதிரி.
பெரியவன் ஆதிக்குப் பெரிய பெரிய விஷயங்களாகக் காட்ட வேண்டும். சின்னவள் ஆனந்தியோ சின்ன விஷயங்களையே காட்டச் சொல்லி அடம்பிடிப்பாள்.
ஒரு நாள் கம்ப்யூட்டர் முன் உடகார்ந்திருந்த என்னிடம் ஆதி வந்தான். “பெரிய பெரிய விலங்கா காட்டு சித்தப்பா” என்றான் ஆதி.
முதலில் ஒட்டகத்தைக் காட்டினேன்.
“இன்னும் பெருசா காட்டு சித்தப்பா” என்றான்.
ஒட்டகச்சிவிங்கியைக் காட்டினேன்.
“இன்னும் பெரிசா” என்றான்.
யானையைக் காட்டினேன்.
“அட, இன்னும் பெரிசா” என்றான்.
டைனோசரைக் காட்டினேன்.
“இதுக்கும் மேல பெரிசா” என்றான்.
நீலத் திமிங்கிலத்தைக் காட்டினேன்.
“இதைவிட பெரிசா” என்றான்.
“இதுக்கும் மேலே பெருசா, எந்த விலங்கும் இல்லடா ஆதி” என்றேன்.
“போ சித்தப்பா, பொய் சொல்லாதே. கம்ப்யூட்டர் அளவுதான் இருக்குது; அதைப் போய் பெரிய விலங்குன்னு சொல்றே. இன்னும் ஏதாவது பெரிசா இருக்கும் பாரு” என்றான்.
“எவ்வளவு பெரிய விலங்கா இருந்தாலும், கம்ப்யூட்டர்ல சின்னதாத் தான் தெரியும் ஆதி. உன்னோட படத்தைக் கம்ப்யூட்டர்ல பார்த்தாலும், நீ சின்னதாதான் தெரிவே. ஆனா, நீ கம்ப்யூட்டரவிடப் பெருசாத்தானே இருக்கே” என்று கேட்டு, அவனை மடக்கிவிட்டதாக நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.
இந்தப் பதில் அல்ல, எந்தப் பதிலாலும் அவனைத் திருப்திப்படுத்த முடியாது என்றே தோன்றியது. நான் பொய் சொல்கிறேன் என்றுதான் நினைத்தான் அவன்.
பெரிய பெரிய மனிதன். பெரிய பெரிய பொக்லைன். பெரிய பெரிய சாலை. பெரிய பெரிய கடல். பெரிய பெரிய நாடு. பெரிய பெரிய பெரிய பெரிய…
இப்படி எவ்வளவு ‘பெரிய’தெரியுமா?
சலித்துப்போய் ஒரு தடவை என்னிடம், “பெருசெல்லாம் இவ்வளவு சின்னதாத்தான் இருக்குமா?” என்று கேட்டான்.
ஒருமுறை உயரமான ஈஃபில் கோபுரத்தை கம்ப்யூட்டரில் காட்டினேன். ‘இன்னும் பெரிசா’ என்றான். 102 மாடிகளைக் கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைக் காட்டினாலும் ‘இன்னும் பெரிசா’என்றான். 163 மாடிகளைக் கொண்ட துபாய் புர்ஜ் காலிஃபா கோபுரத்தைக் காட்டினாலும், அப்படியே கேட்டான். மனிதர்கள் கட்டியதில் இதைவிட உயரமானது வேறு ஏதும் இல்லை என்று சொன்னால், அவன் கேட்க மாட்டானே என்பதால் எவெரெஸ்ட் சிகரத்தைக் காட்டினேன்.
அப்போதும், ‘இன்னும் பெருசா’என்றே கேட்டான். கோபத்துடன் அவனை வெளியில் இழுத்துக்கொண்டு வந்தேன். இருட்டாக இருந்தது. வானத்தில் விண்மீன்களெல்லாம் கணக்கே இல்லாமல் கொட்டிக்கிடந்தன. ‘இன்னும் பெருசான்னா, இதுதான் எல்லாத்தையும் விடப் பெருசு”
என்று ஆதியிடம் வானத்தைக் காட்டினேன்.
அப்போதும் திருப்தி அடையவில்லை அவன்.
“வானத்தைவிட பெருசு எது சித்தப்பா?” என்று வெகு சாதாரணமாகக் கேட்டான். எனக்குக் கோபம் போன இடமே தெரியவில்லை. குப்பென்று சிரிப்பு வந்தது.
அவனைத் தூக்கி முத்தமிட்டுவிட்டுச் சொன்னேன்: “எல்லாத்தையும்விடப் பெருசு உன்னோட கண்ணுதான். எவ்வளவு பெரிய விஷயமா இருந்தாலும், அதை உன்னோட கண்ணு சின்னதா மாத்திடுது இல்லையா. எவ்வளவு பெரிய கட்டிடமா, மலையா, வானமா இருந்தாலும், உன்னோட கண்ணுக்குள்ள ஒரு புள்ளியாதானே மாறுது. எவ்வளவு பெரிய விஷயத்தைக் காட்டினாலும் உன்னோட கண்ணுக்கு அது பத்த மாட்டங்குதுல்ல. அதனால, இந்த உலகத்திலேயே பெருசு உன்னோட கண்ணுதான்.”
அப்போதுதான் ஆதி முகத்தில் பெரிய வியப்பு ஏற்பட்டது.
“அப்போ, என் கண்ணுதான் எல்லாத்தையும்விடப் பெரிசா சித்தப்பா?” என்று கேட்டான்.
“ஆமாண்டா என் கண்ணு. உன் கண்ணுக்கு முன்னாடி எல்லாம் சின்னதுதான்” என்றேன்.
ஆதி இப்படியென்றால், ஆனந்தி எப்படித் தெரியுமா? அடுத்த புதன்கிழமை வரை காத்திருங்கள் வாண்டுகளே!
 - நன்றி: ‘தி இந்து’
 ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கதையைப் படிக்க: 

பெரிய்ய்ய்ய பெரிய்ய்ய்ய வானம்…

Tuesday, September 15, 2015

புலப்படாத பறவையின் உடலைத் தேடி...


ஆசை

('தி இந்து’ தமிழ் நாளிதழில் ‘பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி’யின் நிறுவன நாளை முன்னிட்டு 15-09-2015 அன்று வெளியான என் கட்டுரையின் சற்றே விரிவான வடிவம்)

முகப்பில் இருவாச்சிப் பறவையின் சின்னத்துடன் உயர்ந்தெழுந்து நிற்கிறது மும்பை சாலிம் அலி சவுக்கில் உள்ள ‘பாம்பே இயற்கை வரலாற்றுக் கழகம் (பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி). சுருக்கமாக, பி.என்.எச்.எஸ் (BNHS). மும்பையின் முக்கியமான இடங்களுள், நெரிசல் மிகுந்த இடங்களுள் ஒன்றாக இருந்தாலும் அந்தப் பிரதேசத்தில் சமீபத்திய தொன்மையின் வாசனை வீசியது. பி.என்.எச்.எஸ் கட்டிடத்துக்கு எதிரே லயன் கேட் இருக்கிறது. அருகில் விக்டோரியா மியூசியம், ஜஹாங்கிர் ஆர்ட் கேலரி, ஏசியாட்டிக்  நூலகம் போன்ற முக்கியமான கட்டிடங்கள். பெரும்பாலானவை, ஆங்கிலேயர் காலக் கட்டிடங்கள். அங்கிருந்து ஐந்து நிமிட நடையில் தாஜ் ஹோட்டலும் (அஜ்மல் கசாபால் இப்போது மேலும் பிரபலம்), அரபிக் கடலுக்கு வணக்கம் தெரிவிக்கும் இந்தியா கேட்டும்.

பி.என்.எச்.எஸ்-ஸுக்குச் செல்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள். 1, ஜெர்டான்ஸ் கோர்ஸர் என்னும் பறவை. 2, இந்தியாவின் பறவைத் தாத்தா என்று அறியப்படும் சாலிம் அலி (1896-1987) தன் வாழ்நாளின் கணிசமான பகுதியைக் கழித்த இடம் அது.

Monday, September 14, 2015

பாரதியும் சூரியனைச் சுட்டிக்காட்டிய மல்பெரியும்


ஆசை

(‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்கத்தில் பாரதி நினைவு வாரத்தையொட்டி 12.09-2015 அன்று வெளியான கட்டுரை)

பாரதியின் பாடல்களைப் புரட்டிக்கொண்டுவரும்போது ‘இந்த ஆள் எதையோ இடைவிடாது ஏக்கத்துடன் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்’ என்ற உணர்வு ஏற்படுகிறது. விநாயகர் அகவலில் ஆரம்பித்து ‘மனதில் உறுதி வேண்டும்’ வரை எத்தனையோ ‘வேண்டும்’ பாடல்கள். எத்தனை கனவுகள், எத்தனை தவிப்புகள்! ஆனால், இந்தச் சமூகம் அவரது ‘வேண்டும்’ வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கவே இல்லையே. அவரை ‘சீட்டுக்கவி’ எழுத வைக்கிறது. அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாட வைக்கிறது. அவரது வேண்டுகோளுக்கு அவர் வேண்டும் ‘பராசக்தி’யும் செவிசாய்க்கவில்லை. ஒருவேளை இவ்வளவு அழகான வேண்டுகோள்களைக் கேட்கும் வாய்ப்பை இழந்துவிடுவதைப் பற்றிய அச்சத்தில்தான் ‘பராசக்தி’ பாரதியின் ஆசைகளை நிறைவேற்றவில்லையோ?

‘ஒளியும் இருளும்’ என்ற கவிதை பாரதியின் மிகச் சிறந்த கவிதைகளுள் ஒன்று. காதல் தவிர்த்து அவர் எழுதிப் பிரபலமான கவிதைகளெல்லாம் எழுச்சி நிரம்பியவை. வேண்டுகோள் விடுத்தால்கூட அதில் ஒரு கம்பீரம், அதட்டல் இருக்கும், ‘இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ’ என்பதுபோல. ஆனால், இருள் நிரம்பிய நெஞ்சமொன்றின் குமுறலாக இந்தப் பாடல் வெளிப்பட்டிருக்கும்.
‘வான மெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலு மாங்கே
தரையின் மீதுந் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள்மீதும் பரிதியின் சோதி;
மான வன்ற னுளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!’

Tuesday, September 8, 2015

ஒற்றைக் கால் மைனாவும் கரை ஒதுங்கிய குழந்தையும்

                                                              
ஆசை

(‘தி இந்து’ நாளிதழில் 08-09-2015 அன்று வெளியான கட்டுரை)

கரை ஒதுங்கிய பொம்மையைப் போலக் கிடந்த சிரியா குழந்தை அய்லானின் புகைப்படத்தைப் பார்த்தபோது ஒற்றைக் கால் மைனாவின் நினைவு வந்தது.
தெருவொன்றின் திருப்பத்தில் கண்ணில் பட்டது அந்த மைனா. அது தத்தியபோது ஏதோ ஒன்று வித்தியாசமாகத் தெரிந்தது. அதற்கு ஒரே ஒரு கால்தான்! கடந்துசெல்லும்போது இது கண்ணில் பட்டாலும் மனதில் ஓரிரு நொடிகளுக்குப் பிறகுதான் உறைத்தது. அதிர்ந்துபோய், சைக்கிளை நிறுத்திவிட்டுப் பார்த்தால், அந்த மைனா பறந்துபோய்விட்டது. அது நின்ற கோலமும், தத்திய கோலமும் நான்கைந்து நொடிகளுக்கு மேல் பார்வையில் விழுந்திருக்காது எனினும், அசைவுச் சித்திரம்போல் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. ஒரு படச்சுருளைக் கையிலெடுத்துப் பார்ப்பதுபோல் ஒற்றைக்கால் மைனாவின் அந்த நான்கைந்து நொடிகளையும் மனம் எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தது.
வாலில்லாத நாய், காலில்லாத நாய் போன்றவற்றை யெல்லாம் பார்த்ததுண்டு. ஆனால், சுதந்திரமாகச் சுற்றித்திரியும் பறவையொன்று ஒற்றைக் காலுடன் இருப்பதைப் பார்த்தது அதுவே முதல்முறை.
இயற்கையின் மீது தன்னுடைய சோகம் உள்ளிட்ட உணர்வுகளை ஏற்றிச்சொல்லும் அணி ஒன்று யாப்பிலக்கணத்தில் இருக்கிறது. அதுபோன்று, அந்த மைனாவுக்கு இருப்பதாக ஒரு சோகத்தைக் கற்பனை செய்துகொண்ட மனம், அந்த சோகத்தை மைனா மீது ஏற்றிப்பார்த்து வருத்தப்பட ஆரம்பித்தது. உண்மையில் மைனாவுக்குச் சோகம் இருக்குமா இருக்காதா என்று தெரியாவிட்டாலும், அப்படியே மைனா சோகமாக இருந்தால் அதை அறிந்துகொள்ள வழியேதும் இல்லாவிட்டாலும் மைனாவின் நிலையை நினைத்து வருத்தம் மேலிட்டது.
அதற்குப் பிறகு சென்னையில் ஏராளமான ஒற்றைக் கால் காகங்கள் கண்ணில் பட ஆரம்பித்தன.

Wednesday, August 19, 2015

அணைக்குத் தடை போடுமா பறவை?


நேஹா சின்ஹா

(‘தி இந்து’ நாளிதழின் உயிர்மூச்சு இணைப்பிதழில் 15.08.2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை. சுருக்கமாகத் தமிழில்: ஆசை)

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் இந்தியாவின் அதானி தொழிற்குழுமம் நிலக்கரி தோண்டியெடுப்பதற்கு சுற்றுச்சூழல் தடையில்லா அனுமதியை வழங்குவதற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்று மறுத்திருக்கிறது. அதற்கான காரணத்தை நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது: இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அந்தப் பகுதியில் உள்ள அரிய வகை அரணை இனம் ஒன்றுக்கும் பாம்பு இனம் ஒன்றுக்கும் ஆபத்து ஏற்படக்கூடும்.
கூச்ச சுபாவமுள்ள, சரசரவென்று ஊர்ந்துசெல்லக்கூடிய உயிரினம் ஒன்றினால் பெரிய திட்டப்பணி ஒன்றைத் தடுத்து நிறுத்த முடியும் என்பது நம்பவே முடியாத ஒரு விஷயமாகப் பலருக்கும் தோன்றலாம்; குறிப்பாக, விரைவான தொழில் வளர்ச்சியில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அப்படித் தோன்றலாம். ஆனால், ஒரு நாடு தனது உயிரினங்கள் மீது அக்கறை காட்டுவது அவசியம் என்ற செய்தியை அந்த நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது. உயிரினங்களின் அழகு, தோற்றம், சிறப்புத்தன்மை போன்றவற்றைக் காட்டிலும் உயிரினங்கள் உயிர்த்திருக்க வேண்டியதன் அவசியத்துக்குத்தான் ஆஸ்திரேலிய நீதிமன்றம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.

Monday, August 17, 2015

யானைகளிடமும் அகிம்சை வழிதான் சரிப்படும்!-ஆராய்ச்சியாளர் ஆனந்தகுமார் நேர்காணல்




ஆசை

(இந்த நேர்காணலின் மூன்றில் ஒரு பங்கு ‘தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 08-08-2015 அன்று வெளியானது)

வால்பாறையில் ‘என்.சி.எஃப்’ என்ற இயற்கைப் பாதுகாப்பு அமைப்புக்காகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஆனந்தகுமாருக்கு, ‘பசுமை ஆஸ்கர்’ என்றழைக்கப்படும் ‘வைட்லி விருது’ சமீபத்தில் வழங்கப்பட்டது. யானை-மனிதர் எதிர்கொள்ளல் தொடர்பான அவரது கடந்த காலப் பணிகளுக்காகவும் எதிர்காலப் பணிகளுக்காகவும் சேர்த்து இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. வால்பாறையில் ஆனந்தகுமாருடன் உரையாடியதிலிருந்து…




பசுமை ஆஸ்கர் என்று அழைக்கப்படும் ‘வைட்லி விருது’ சமீபத்தில் உங்களுக்கு வழங்கப்பட்டது அல்லவா. இந்த விருதுக்காக எப்படி உங்களை அடையாளம் கண்டார்கள்?



‘வைட்லி விருது’ கடந்த 20 வருடங்களாகக் கொடுக்கப்பட்டுவருகிறது. இந்த விருது என்பது அவர்களாகவே அடையாளம் கண்டு வழங்குவதில்லை. ஆண்டுதோறும் இந்த விருதுக்கான விண்ணப்பம் வழங்கப்படும். இயற்கை பாதுகாப்பில் ஈடுபட்டுவருபவர்கள் இதற்கென்று விண்ணப்பிக்கலாம். இயற்கை பாதுகாப்பில் புதிதாக நுழைபவர்களுக்கு இது வழங்கப்படுவதில்லை. ஏற்கெனவே குறிப்பிட்ட அளவில் செயல்பட்டு, ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள் மேலும் தங்கள் பணியை விரிவுபடுத்திக்கொள்ள உதவும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. ஆகவே, இது விருது மட்டுமல்ல, ஒரு வகை நிதிநல்கை (ஃபெல்லோஷிப்) என்றும் சொல்லலாம். வழக்கமாக, கடந்த காலச் செயல்பாடுகளுக்குத்தான் விருதுகள் வழங்கப்படும். எதிர்காலச் செயல்பாடுகளுக்கும் சேர்த்து வழங்கப்படும் விருது இது.


வெறுமனே விண்ணப்பத்தைப் பார்த்துவிட்டு இது வழங்கப்படுவதில்லை. சரியான சான்றுகள், மதிப்பு வாய்ந்த அறிவியலாளர்களின் ஒப்புகை போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். நான்கு அடுக்கு மதிப்பாய்வுகள் செய்யப்பட்டு, அறிவியலாளர்கள் குழுவால் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் முடிவுகள் எடுக்கப்படும். உலகெங்கிலுமிருந்து 200 விண்ணப்பங்கள் இந்த விருதுக்காகப் பெறப்பட்டன. அதில் முப்பது பேரை பரிசீலனைப் பட்டியலுக்காகத் தேர்ந்தெடுத்து லண்டனுக்கு நேர்காணலுக்கு வரச்செய்தார்கள். அந்த 30 பேரிலிருந்து 8 பேரை விருதுக்காகத் தேர்ந்தெடுத்தார்கள். இந்த எட்டுப் பேரில் ஒருவர் ஏற்கெனவே ‘வைட்லி விருது’ பெற்றவர். ஏற்கெனவே ‘வைட்லி விருது’ பெற்றவர்களுக்கு இப்படிச் சிறப்பு விருதுகள் வழங்கப்படும்.



இயற்கை பாதுகாப்பு என்ற உலகத்தில் எப்படி நுழைந்தீர்கள்?

ரக்‌ஷா பந்தன்: கீழ்ப்படிதலின் சின்னமா?


டி.எம். கிருஷ்ணா

('தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் 16-08-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை. தமிழில்: ஆசை)

உணர்வுரீதியில் இந்த தேசத்தை ஒரு இந்து தேசமாக நமது அரசு நகர்த்திச் சென்றுகொண்டிருக்கிறது என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. உதிரிக் குழுக்கள் என்று சொல்லப்படுபவர்கள் காதைத் துளைக்கும் விதத்தில் கூச்சலை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதை நாம் தவிர்த்துவிட்டாலும் அரசின் உறுதியான நகர்வுகளைப் பார்க்கும்போது இந்த நோக்கம் மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. தேசிய அளவிலான ஆராய்ச்சி, கல்வி, கலாச்சார நிறுவனங்கள் போன்றவற்றுக்குச் செய்யப்படும் நியமனங்கள், யோகாவை முன்னிறுத்திய மாபெரும் கொண்டாட்டம், வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் சம்ஸ்கிருதத்துக்கான இணைச் செயலர் என்ற பதவியை உருவாக்கிய அபத்தம் எல்லாம் இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.
யோகாவும் சம்ஸ்கிருதமும் கலாச்சார அடையாளங்கள்தானே தவிர மதரீதியான கருத்தாக்கங்கள் அல்ல என்று வாதிடலாம்; அப்படி வாதிட்டால் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடச் செய்யலாம். ஆனால், இந்த இந்தியத் தன்மையின் தொன்மையான அடையாளங்களை மையப்படுத்தி நடந்துகொண்டிருக்கும் விவாதங்கள், திணிப்புகள், தேச வெறி போன்றவையெல்லாம் இந்தியா குறித்தல்ல, நிச்சயமாக ‘இந்து இந்தியா’ குறித்துதான் என்பதைக் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு நமக்குக் கண் தெரியாமலில்லை.

Monday, August 10, 2015

புத்ர: சாபத்தில் பிறந்த கவிதை


ஆசை

(லா.ச. ராமாம்ருதத்தின் ‘புத்ர’ நாவல் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவுகூரும் வகையில் ’தி இந்து’ நாளிதழில் 09-08-2015 அன்று வெளியான கட்டுரை)

தத்துவ நிலை, கவித்துவ நிலை ஆகியவை ஒருபுறம். அன்றாட வாழ்க்கைப்பாடு, அதன் சிறுசிறு தருணங்கள் இன்னொரு புறம். முதல் வகையில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் அதே தளத்தில் நின்று எழுதிக்கொண்டிருப்பார்கள். அன்றாட வாழ்க்கை சார்ந்த சித்தரிப்புகள் அந்தத் தளத்தில் விரிவாக இடம்பெறாது. அப்படியே இடம்பெற்றாலும் தத்துவச் சாயை பூசப்பட்டு, கவித்துவப் பிரயோகங்களுடன் இருக்கும். இதற்கு தமிழில் சிறந்த எடுத்துக்காட்டு மௌனி. கட்டை வண்டி, நாய்க்குரைப்பு, திறந்து கிடக்கும் வீடு, மழைக்கு ஒதுங்குதல் எல்லாம் அவருக்கு வேறு ஏதோ சொல்வன. இதற்கு நேரெதிர் அன்றாடச் சித்தரிப்புக் கலைஞர் அசோகமித்திரன். ஆனால், இந்த இரண்டு வகைக்கும் நடுவே நிற்பவர் லா.ச.ராமாமிர்தம். அன்றாட வாழ்க்கையின் ஓட்டமும் ஆன்மிக, தத்துவ, கவித்துவ வீச்சும் ஒன்றுக்கொன்று குறையாமல் பின்னிக்கொண்டு ஓடும். தத்துவத்துக்காகவும் கவித்துவத்துக்காகவும் அன்றாட வாழ்க்கையை இவர் ஒரு சாக்காகப் பயன்படுத்திக்கொள்வதில்லை. இப்படி அருகருகே இரண்டும் இருப்பதால் நமக்கு ரசக்குறைவோ அசௌகரியமோ ஏற்படுவதில்லை. மாறாக, வியப்புதான் தோன்றும். ஏனெனில் அன்றாடத்தை உச்சாடனம் செய்து செய்து தத்துவமாகவும் கவிதையாகவும் ஆக்குபவர் அவர்.

Thursday, July 30, 2015

டைகர்களின் உலகில் யாகூப்கள்தான் எப்போதும் பலிகடாக்கள்!







எஸ். ஹுஸைன் ஜைதி

(‘தி இந்து’ நாளிதழில் 30-07-2015 அன்று, அதாவது யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட தினத்தன்று, வெளியான கட்டுரையின் முழுவடிவம். மொழிபெயர்ப்பு: ஆசை)

அந்தப் பெண்ணின் பெயர் ஜுபைதா.

அவளுடைய அப்பா அவளுடைய அம்மாவை ஒரு அந்நியமான, விரோதமான தேசத்தில் அவள் பிறப்பதற்குச் சில நாட்கள் முன்னதாக விட்டுவிட்டு, முக்கியமான காரியத்தை நிறைவேற்றுவதற்காகச் சென்றுவிட்டார். சில மாதங்களுக்குள் அந்தக் குழந்தையையும் அதன் அம்மாவையும் வந்து பார்ப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டுச் சென்றார்.  


யாகூப் மேமன் தனது மனைவி ராஹினை கராச்சியில் விட்டுவிட்டு காத்மாண்டுவில் இருக்கும் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 1994-ல் சரணடைந்தார். ராஹினுக்கு துபாயில் குழந்தை பிறந்தது. தானும் குழந்தையும் யாகூபுடன் மறுபடியும் சேர்ந்து புதுடெல்லியில் புதுவாழ்க்கை தொடங்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார் அவர்.

பாகிஸ்தானிலிருந்து திரும்புவதற்கு மேலும் தாமதமானால் இந்தியாவுக்கு வந்து, இந்த வழக்கிலிருந்து எனது பெயரை நீக்குவதற்கு மேலும் தடங்கல்கள் ஏற்படும் என்று அஞ்சினேன். நான் மனசாட்சி உள்ள மனிதன். டைகரின் தவறான செயல்களிலிருந்து என்னைத் துண்டித்துக்கொள்ள விரும்பினேன்,” என்றார் யாகூப் மேமன். பாகிஸ்தானிலிருந்து அவர் தப்பியது குறித்து விரிவாகச் சொல்லும்படி நான் வற்புறுத்திக் கேட்டபோது அவர் என்னிடம் சொன்ன வார்த்தைகள்தான் அவை.

Monday, July 27, 2015

இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்?

                                             
         


                                        உலக இயற்கை பாதுகாப்பு நாள்: ஜூலை: 28

ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 25-07-2015 அன்று வெளியான கட்டுரை)


உக்கிரமாக அடிக்கிற காற்று
காலை முழுவதும் நீடிக்க முடியாது;
பயங்கரமாக அடிக்கிற மழை
நாள் முழுவதும் நீடிக்க முடியாது;
வானகமும் வையகமும் தவிர
இவற்றை யார் உருவாக்கியிருக்கிறார்கள்?
வானகமும் வையகமும்
நிரந்தரமாக நீடிக்க முடியாதபோது
மனிதன் எப்படி நீடிக்க முடியும்?
- லாவோ ட்சு

இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டடையத் தேனீ போன்ற ஒரு சிற்றுயிர் நமக்கு உதவக்கூடும். பதிலைக் காண்பதற்கு முன்பு தேனீக்களைப் பற்றிய சில விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

தேனீக்கள் அளிக்கும் உயிர்ப்பு
உலகம் முழுவதும் தாவரங்களில் நிகழும் மகரந்தச் சேர்க்கையில் 80 சதவீதத்துக்குப் பொறுப்பு காட்டுத் தேனீக்களும் வளர்ப்புத் தேனீக்களும்தான். தேனீக்களின் ஒரு சமூகம், ஒரு நாளில் 30 கோடி பூக்களில் மகரந்தச் சேர்க்கை நிகழ உதவுகிறது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மனிதர்களுக்கு உணவு தரும் பயிர்களில் நூற்றுக்கு 70 பயிர்களில் தேனீக்களால்தான் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. இந்தப் பயிர்கள்தான் உலகின் ஊட்டச்சத்து தேவையில் 90 சதவீதத்தைப் பூர்த்திசெய்கின்றன. இதற்கெல்லாம் காரணம் தேனீக்கள்தான்.
ஆனால், எதையும் பண மதிப்பில் சொன்னால்தானே நமக்குப் புரியும்! ஒவ்வோர் ஆண்டும் உலகமெங்கும் தேனீக்களின் அயராத மகரந்தச் சேர்க்கைப் பணியின் விளைவால் கிடைக்கும் பொருளாதாரத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ. 20 லட்சம் கோடி! இது உணவு விளைபொருளின் மதிப்புதான். இந்த உணவுகளெல்லாம் புவியின் பெரும்பாலான உயிர்களுக்குக் கொடுக்கும் ஆற்றலையும் அதனால் காக்கப்படும் இயற்கைச் சமநிலையையும் மதிப்பிடவே முடியாது.

கூடு திரும்பாத தேனீ
ஆனால், தேனீக்களின் இன்றைய நிலை என்ன தெரியுமா? 1990-களிலிருந்து தேனீக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைய ஆரம்பித்திருக்கிறது. தேனீக்கள் கூட்டம் கூட்டமாகக் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. 2006-ல் டேவ் ஹேக்கன்பெர்க் என்ற தேனீ வளர்ப்பாளருக்கு என்ன நடந்தது என்பதைப் பாருங்கள்.

தேனீக்களுக்கு ஒரு பாடல்


பாப்லோ நெருதா

(‘தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 25.07-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கவிதை. தமிழில்: தங்க. ஜெயராமன்)

மொய்க்கும் தேனீக்கூட்டமே
உலகின் மென்மைக்கும் மென்மையான
சிவப்பு, நீலம் மஞ்சளின் உள்ளே
புகுந்தும் புறப்பட்டும்
தொழிலுக்காகப்
பூவிதழின் அடுக்கினுள்
கவிழ்ந்து விழுந்து, மீண்டு,
பொன்மயமான உடையும்,
கணக்கில்லா மஞ்சள் காலணிகளும்.

கச்சிதமான இடை, கரும்பட்டைக் கோடிட்ட கீழ்வயிறு
துருதுருக்கும் சின்னஞ்சிறிய தலை
புத்தம்புதிய நீராலான இறக்கைகள் ---
மணங்கமழும் ஜன்னல்கள் எல்லாம் நுழைந்து,
பட்டுக் கதவுகளைத் திறந்து,
இணையில்லா மணம் வீசும் காதலின் மணவறையில் நுழைந்து,
வைரப் பொட்டாகப் பனித்துளியைக் கண்டெடுக்கிறீர்கள்.
சென்றுவரும் வீடெல்லாம்
தேன் என்னும் புதிரை, வளத்தை, கட்டமுதை
அள்ளிச்செல்கிறீர்கள்
அது அடர் மணம், ஓடையாய் ஒளிரும் திரவம்.
கூடிவாழும் கூடத்துக்கு மீண்டுவந்து
அதன் கைப்பிடிச் சுவரில்
பூவின், விண்வெளிப் பாய்ச்சலின்
விளைச்சலான அந்த
கந்தர்வ ரசத்தை, மணநாளின் ரகசியச் சூரியனை,
தேனை, சேமித்து வைத்து
மொய்க்கும் தேனீக்களே,
ஒற்றுமையின் புனித முகடே,
ரீங்கரிக்கும் கல்விக்கூடமே.

ரீங்கார ஆரவாரத்தில்
பூவின் மதுவைப் பக்குவமாக்க
அமுதத் துளிகளைப் பரிமாறி
பசுமை படர்ந்த
ஒசர்னோ எரிமலையின் ஏகாந்த வெளியில்
வெய்யில்கால பிற்பகலின் கண்ணயர்வு--
உச்சி சூரியன்
ஈட்டிக் கிரணங்களைப் பனிமீது பாய்ச்ச,
எரிமலைகள் ஒளிர
கடலாக நிலம் விரிகிறது.
நீல வெளியின் ஏதோவொரு நடுக்கம்.
கனன்றுவரும் கோடையின் இதயம்,
தேனினிக்கும் இதயங்கள் பெருகின
ரீங்கரிக்கும் தேனீ
நொறுங்கிச் சடசடக்கும் தேன்கூடு
பொன்வண்ணம், சிறகின் படபடப்பு!

தேனீக்களே,
களங்கமில்லா உழைப்பாளிகளே, ஊன்பெருக்காத கூன் உடல்
தொழிலாளர்களே ஒளிவீசும் தொழிலாள வர்க்கமே!
தன்னையே மாய்த்துவிடும் கொடுக்கோடு கொட்டிச் சாடும்
குறையில்லா தீரப் போர்ப்படையே
இரைச்சலிடுங்கள், புவியின் கொடைகளின்மேல்.
பொன்வண்ணக் குடும்பமே,
காற்றின் மந்தையே
பூக்களின் தீயை,
மகரந்தக் கேசரத்தின் தவிப்பை,
நாசியைத் துளைக்கும் நறுமண நூலை,
நாட்களை இணைத்துத் தைக்கும் நூலை,
அந்தத் தேனை விசிறித் தெளியுங்கள்
வெம்மையான கண்டங்களைக் கடந்து
மேலை வானின் தொலைதூரத் தீவுகளுக்கும்.

ஆம்,
பசுமைச் சிலைகளை
தேன் மெழுகு உருவாக்கட்டும்!
எண்ணில்லா நாவில் தேன் சிதறட்டும்,
தேன்கூடாய் ஆகட்டும் அந்தப் பெருங்கடல்
பூமியே பூக்களாலான கோபுரமாய், அங்கியாய் மாறட்டும்!
உலகமே ஓர் அருவியாகட்டும்
எரிகல்லின் ஒளிரும் வாலாக
தேன்கூடுகளின் முடிவில்லாச் செல்வமாய் ஆகட்டுமே!

- பாப்லோ நெருதா (1904 1973), சிலே நாட்டைச் சேர்ந்த பெருங்கவிஞர்,
இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1971-ல் பெற்றவர்.
- நன்றி: ‘தி இந்து’
 ‘தி இந்து’ இணையதளத்தில் படிக்க: தேனீக்களுக்கு ஒரு பாடல்


Monday, July 20, 2015

இந்தியாவின் கவுரவம் மகன்களும்தான்!


ஆசை

('தி இந்து’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் 19-07-2015 அன்று வெளியான கட்டுரை)
      
பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து ‘இந்தியாவின் மகள்கள்’ குறித்துப் பேசிவந்திருக்கிறார் மோடி. இதன் சமீபத்தியத் தொடர்ச்சியாக ‘மகள்களுடன் செல்ஃபி’ என்ற புதுமையான யோசனையை அவர் முன்வைத்திருக்கிறார். இது நிச்சயம் பாராட்டுக்குரிய விஷயம்தான். ஆனால், மோடி உட்படப் பலரும் பெண்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்துவது தந்தைவழிச் சமூகத்தின் ஆதிக்கப் பார்வையை வெளிப்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது.
கடந்த சுதந்திர தினத்தின்போது பிரதமர் மோடி ஆற்றிய உரையில், “சகோதர சகோதரிகளே, நாமெல்லாம் 21-ம் நூற்றாண்டில் வாழ்கிறோம். நமது தாய்மார்களும் சகோதரிகளும் திறந்த வெளியில் மலம்கழிப்பது குறித்து நமக்கு எப்போதாவது வருத்தம் ஏற்பட்டிருக்கிறதா? நமது தாய்மார்கள், சகோதரிகளின் கண்ணியம் காப்பதற்கு நமது வீட்டிலே கழிப்பறைகள் கட்டுவதற்கு நம்மால் ஏற்பாடுகள் செய்துகொள்ள முடியாதா?” என்று கேட்டது நம் நெஞ்சை உலுக்குவதாகத்தான் இருக்கிறது. ஆனால், இதற்கிடையில் இன்னொரு கேள்வி நம் மனதில் எழுகிறது. நமது கண்ணியம், கவுரவம் எல்லாம் நமது தாய்மார்களும் சகோதரிகளும் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் போகிறது என்றால், நம் சகோதரர்களும் தந்தையர்களும் திறந்த வெளியில் மலம் கழிப்பதாலும் சிறுநீர் கழிப்பதாலும் போகாதா?

Friday, July 17, 2015

எம்.எஸ்விக்கு எப்படி இரங்கல் தெரிவிப்பது?


ஆசை

('தி இந்து’ நாளிதழின் ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில் 17-07-2015 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம்.)


மனதில் தோன்றியதை அப்படியே பேசிவிடும் வெகுசிலரில் விஜயகாந்தும் ஒருவர். அதனாலேயே கிண்டலுக்கும் உள்ளாகுபவர் அவர். எம்.எஸ்.வி.யின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ஊடகங்களுக்குப் பேட்டியளித்த விஜயகாந்த்‘எனக்கு இரங்கல் தெரிவிக்க மனம் வரவில்லை’ என்றார். பெரும்பாலானோரின் உணர்வும் அதுதான். நம்முடன் எப்போதும் இருப்பவர் இவர் என்ற உணர்வு ஒருசிலரிடம் மட்டும்தான் ஏற்படும்; அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் எம்.எஸ்.வி. அவருடைய இறப்பைப் பற்றிச் சொல்லப்போனால் நம் கிராமத்து வழக்கில்தான் சொல்ல வேண்டும்: ‘கல்யாணச் சாவு’. ஆம். அது ஒரு ‘கல்யாணச் சாவு’தான். இப்படிப்பட்ட மரணங்களின்போது ஒரு பெருவாழ்வு நினைவுகூரப்பட்டு ‘ஆகா, எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்’ என்ற பெருமகிழ்ச்சிதான் நம்மிடம் வெளிப்படும். எம்.எஸ்.வி காலமானதைக் கேள்விப்பட்டுப் பலரும் துயரத்தில் ஆழ்ந்துபோய் அவருடைய பாடல்களைக் கேட்க ஆரம்பித்துக் கடைசியில் சந்தோஷ உணர்வை, பரவச உணர்வை அடைந்ததுதான் நிஜம். தன் வாழ்வால் எல்லோருடைய வாழ்வையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியவர் எம்.எஸ்.வி. அப்படிப்பட்டவரின் மரணம் உண்மையில் கல்யாணச் சாவாகத்தானே இருக்க முடியும்!

Saturday, July 11, 2015

இதயத்தால் பார்ப்பது எப்படி?


ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 11-07-2015 அன்று வெளியான வெளியான கட்டுரை)

பறவைகளைப் பார்ப்பது என்பது பொழுதுபோக்காக, தொழிலாக, கலையாக இன்றைக்கு உருவாகி யிருக்கிறது. எல்லாவற்றையும் மீறிபறவை பார்த்தல்’ (Bird watching) என்பது அடிப்படையில் இயற்கையோடு நமக்கு இருக்கும் தொடர்பின் பொறியைத் தூண்டிவிடுவதுதான்; இயற்கை வேறு, நாம் வேறு அல்ல என்ற பேருணர்வு நமக்குள் இயல்பாகவே தோன்ற அனுமதிப்பதுதான். ‘பறவை பார்த்தல்மூலமாக அப்படிப்பட்ட உணர்வைப் பெற்றிருப்பவர்தான் உருகுவேயைச் சேர்ந்த ஹுவான் பாப்லோ குலாஸோ. அவர் பார்வையற்றவர் என்பதுதான் இதில் விசேஷம்.

பார்வையற்றவர் எப்படிப் பறவை பார்த்தலில் ஈடுபடுகிறார், முரணாக இருக்கிறதே என்ற கேள்விகள் நம்முள் எழலாம். பார்ப்பதற்கு ஒவ்வொருவரும் எந்தப் புலனைப் பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து இருக்கிறது இந்தக் கேள்விகளுக்கான தெளிவு. ஹுவான் காதுகளால் பார்க்கிறார்!

இன்னும் சொல்லப்போனால் இதயத்தால் பார்க்கிறார். காதுகளும் இதயமும் மிகத் தெளிவாகப் பார்க்கக்கூடியவை, தேவையானவற்றை மட்டும் பார்க்கக்கூடியவை. அதனால், பார்வையுள்ளவர்களைவிட பறவை பார்த்தலில் வல்லவர் ஹுவான் என்றுகூட சொல்லலாம். ஹுவானின் பறவை பார்த்தல் சாகசத்தைப் பின்தொடர்ந்து, அற்புதமான வீடியோ பதிவொன்றை பி.பி.சி. உருவாக்கியிருக்கிறது.

Monday, July 6, 2015

சினேகலதா ரெட்டி: ஒரு மகளின் நினைவுகூரல்

                                          சம்ஸ்காரா திரைப்படத்தில் சினேகலதா

நந்தனா ரெட்டி

(நெருக்கடி நிலை காலத்தில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் சித்திரவதைக்கு ஆளாகி உயிரிழந்த சினேகலதா ரெட்டியின் மகள் நந்தனா ரெட்டி, தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். ‘தி இந்து’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் 05.07.2015 அன்று வெளியான இந்தக் கட்டுரையின் முழு வடிவம் இங்கே. தமிழில்: ஆசை)


சூழலின் அமைதியைக் கிழித்தபடி, திடீரென்று ஒலிக்க ஆரம்பித்தது தொலைபேசி அழைப்பொலி. நான் போய் எடுப்பதற்குள் அது நின்றுவிடக் கூடாது என்று நினைத்துக்கொண்டே மாடிப்படி வழியாகக் கீழே ஓடினேன். உடைந்த குரலில் என் அம்மாவின் குரல் கேட்டது. “என்னை மறுபடியும் இங்கே அழைத்துக்கொண்டுவந்துவிட்டார்கள். என்னைப் பார்க்க வருகிறாயா?” என்று கேட்டார். நான் போய்ச்சேர்வதற்குள் அவரை மறுபடியும் அங்கிருந்து அவர்கள் கொண்டுசென்றுவிடக் கூடாது என்று வேண்டிக்கொண்டே நான் விக்டோரியா மருத்துவமனைக்கு விரைந்தோடினேன்.


இந்தக் காட்சிகள்தான் 40 ஆண்டுகளுக்குப் பிறகும் என்னைத் துரத்துகின்றன. அந்தத் தொலைபேசி ஒலியின் அழைப்பைக் கேட்டு நான் இன்றுவரையிலும் திடுக்கிட்டு, வேர்க்க விறுவிறுக்க விழித்துப்பார்க்கிறேன். நெருக்கடி நிலையின் மடத்தனத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள இன்னும் முயன்றுகொண்டிருக்கிறேன். என் அம்மாவை அவ்வளவு சீக்கிரம் இழந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவ்வளவும் இளம் வயதில், அர்த்தமேயில்லாமல். ‘ஏன், ஏன்’ என்று இன்னும்கூட எனக்குள் கேள்விகள் எழுந்துகொண்டிருக்கின்றன. எனக்குள் எழும் கோபத்தை ஆக்கபூர்வமான செயல்களைச் செய்வதன் மூலம் தணித்துக்கொள்ள முயல்கிறேன். அப்படிச் செய்வதன் மூலம் அவருக்கு நான் உயிர் கொடுக்கவோ அவரது கனவுகளை நிறைவேற்றவோ என்னால் முடியும். ஆனால், இந்தப் பணியில் எவ்வளவு மோசமாக நான் தோல்வியடைகிறேன் என்பதை ஒவ்வொரு நாளும் நான் உணர்கிறேன். ‘ஆராதனை நாயக’ பிரதமர் ஒருவர் இருக்கும் இந்த நேரத்தில் பழைய அச்சங்களெல்லாம் மீண்டும் தலைகாட்டுகின்றன.