மேஸ்திரி அழைத்தாரென்று
திண்டிவனத்திலிருந்தோ
விழுப்புரத்திலிருந்தோ
இந்நகரம் வந்து
முகவரி தொலைத்ததாகவும்
திரும்பிப் போகப்
பணம் வேண்டுமென்றும்
குடும்பத்துடன்
தயங்கித் தயங்கிக் கேட்பவர்கள்
இன்னும் இருக்கிறார்கள்
இந்நகரத்தில்
அவர்கள் விரும்புவதெல்லாம்
திண்டிவனத்துக்கோ
விழுப்புரத்துக்கோ
திருவண்ணாமலைக்கோ
திரும்பிச் செல்வதையல்ல
தங்கள் குரலுக்குப்
பிச்சைக்கும் சற்று மேலான
கௌரவத்தைக்
கொடுப்பதுதான்
அதை
ஒரு ஈதலோ
ஒரு மறுத்தலோ
இழுத்துப்
பிச்சைக்கும் கீழே
போட்டுவிடுமோவென்ற
அச்சத்துடனே
ஆரம்பிக்கிறார்கள் ஒவ்வொருவரிடமும்
‘சார் ஒரு நிமிஷம்
மேஸ்திரி அழைத்தாரென்று நாங்கள்…’
என்று
இதைக் கேட்கும் ஒவ்வொருவரும்
சகலவல்லமையும்
சகலமறதியும்
உள்ள ஒரு மேஸ்திரியைக்
கற்பனை செய்துகொள்ளவே
தடுமாறிப் போகிறார்கள்
ஒரு நொடி
-ஆசை
No comments:
Post a Comment