Monday, June 12, 2023

இடிப்பாரை இல்லாத ஏமரா ஜெயமோகன்!


ஆசை

ஜெயமோகனுக்கு பி.கே. சிவகுமார் நீளமான, ஆதாரங்களுடன் கூடிய ஒரு மறுப்பு (https://tinyurl.com/ycxxf3jw) எழுதியிருக்கிறார். அதனை அவசியம் எல்லோரும் படிக்க வேண்டும். குறிப்பாக,  வி.பு. வாசகர் வட்டம்தான் உலகம், ஜெ.மோதான் ஒரே சூரியன் என்று இருக்கும் வா.வட்டத்தினர் படிக்க வேண்டும். நான் ஜெயமோகனைப் பற்றி அறிவேன், பி.கே.சிவகுமார் பற்றி தெரியாது. ஆயினும் இந்த மறுப்புக் கட்டுரையின் மூலம் ஜெயமோகனைப் பற்றிய நம் கருத்து மேலும் உறுதியாகிறது. 'பொருட்டுப்படுத்தும் ஒரு வரியாக எழுதியிருக்கிறாரா' 'பிறரின் சிறுமையை என் அகங்காரத்தால் கடந்துசெல்கிறேன்' போன்ற வரிகள் பலவும் ஜெயமோகனிடமிருந்து நான் விலகக் காரணம். பிறர் மீது எவ்வளவு கீழ்மையை, இளக்காரத்தை இறக்குகிறார்! பிறர்மை என்பதன் மீது எவ்வளவு வெறுப்பு!.ஒருவர் பொருட்படுத்தும் வரி எழுதியிருக்கத்தான் வேண்டுமா? எல்லாவற்றையும் இலக்கியத்தை வைத்து அளவிட முடியுமா? சமீபத்திய செங்கோல் கட்டுரை ஒன்றில் 'அதிகாரத்திடம் புனிதத்தை ஒப்படைக்கக் கூடாது' என்று ஜெயமோகன் எழுதியிருந்தார். முக்கியமான கருத்து. அதைப் போல இன்னொன்றும் சொல்ல வேண்டும்: எழுத்தாளரிடமும் புனிதத்தை ஒப்படைக்கக் கூடாது. இதை வி.பு.வா.வட்டத்தினரும் உணர வேண்டும். எழுத்தாளர்கள் முக்கியமானவர்கள்; ஆனால் அவர்கள் சன்னிதானங்கள் அல்ல!

ஜெயமோகன் எத்தனையோ பேரைப் பற்றியும் விஷயங்களையும் பற்றி அளந்துவிட்டிருக்கிறார். அவர் பொய் சொல்கிறார் என்று நான் நினைக்கவில்லை. தனக்கேயான ஒரு உண்மையை உருவாக்கிக்கொண்டு அதை உண்மையென்று ஆத்மார்த்தமாக  நம்பிக்கொண்டு அதையே எழுதுகிறார் என்று நினைக்கிறேன். சமீபத்தில் படித்த அறிவியல் கட்டுரையொன்றில் ஒரு விஷயம் படித்தேன். இடது மூளை உருவாக்கும் கதையை வலது மூளை எந்தக் கேள்வியும் இல்லாமல் உண்மையென்று ஏற்றுக்கொள்கிறது என்று அந்தக் கட்டுரை கூறுகிறது. அதுபோல் ஜெயமோகனின் இடது மூளை அபாரமான கற்பனை வளம் கொண்டதாகவும் வலது மூளை அப்பிராணியாகவும் இருக்கலாம். வெண்முரசு நாவல் தொடரை அவர் எழுத ஆரம்பித்தபோது உலகின் நீண்ட நாவலாக இது அமையுமென்றும், ஜெயமோகனை மரியாதை செய்வது அவசியம் என்றும் இந்து தமிழ் அணியினர் முடிவுசெய்தது. நண்பரும் கவிஞருமான ஷங்கர், ஜெயமோகனை அவர் ஊருக்கே சென்று பேட்டி எடுத்து வந்தார். எங்கள் குழுவில் உள்ளவர்கள் பலருடன் ஜெயமோகனுக்கு உரசலும் முரண்களும் உண்டு. ஆனால் நாங்களோ விருப்புவெறுப்புக்கு இடம் கொடுக்காமல் அவரைப் பேட்டி எடுப்பது என்று முடிவு செய்தோம். இந்து தமிழ் நாளிதழில் முக்கால் பக்கத்துக்கு அந்தப் பேட்டி வந்தது. ஓரிரு மாத இடைவெளியில் அதே வெண்முரசு தொடர்பாக அவர் பேட்டியை இந்து தமிழ் தீபாவளி மலரில் வெளியிட்டோம். ஆனால் ஜெயமோகன் என்ன சொல்லிவருகிறார் தெரியுமா? 'வெண்முரசு எவ்வளவு பெரிய சாதனை. இது தொடர்பாக மலையாள பத்திரிகைகளில் அட்டையில் என் படத்தை வெளியிட்டார்கள். தமிழ் பத்திரிகைகள் எதுவுமே கண்டுகொள்ளவில்லை. இந்து தமிழில் வந்த ஒரே ஒரு பேட்டியும் விஷ்ணுபுர நண்பர்கள் முயற்சியால் வெளிவந்தது' என்றரீதியில் தொடர்ந்து பலமுறை சொல்லிவருகிறார். தன் பேட்டியை எடுத்த மலையாளப் பத்திரிகைகளுக்கு விசுவாசத்தையும் எங்களுக்கு துரோகத்தையுமே இதன் மூலம் அவர் காட்டியிருக்கிறார். இரண்டு மாத இடைவெளியில் இரண்டு பேட்டிகள் வெளியிட்ட பத்திரிகையை பற்றியே மறந்துவிட்ட ஒருவருக்குத் தன்னை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று மற்றவர்களைக் குறைசொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது? அந்தப் பேட்டிக்காக எங்களிடம் விஷ்ணுபுரத்தினர் அணுகியது உண்மை என்றால் அந்த நண்பர்கள் வெளிப்படையாக அதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பேட்டி மட்டுமல்லாமல் வெண்முரசின் நிறை குறைகளை அலசி நடுநிலையான விமர்சனம் ஒன்றை வெளியிட வேண்டும் என்று வி.பு.வா.வட்ட நண்பர் ஒருவரை அணுகினேன்.  தொடர்ந்த ஜெயமோகனின் அணுகுமுறை காரணமாக மனம் கசந்து அந்த முயற்சியைக் கைவிட்டேன். இந்த விஷயத்தை ஜெயமோகன் கவனத்துக்கு அந்த நண்பர் கொண்டுசெல்வார் என்று நம்புகிறேன்.

க்ரியா ராமகிருஷ்ணன் இறந்தபோது ஜெயமோகன் எழுதிய  வன்மாஞ்சலியைப் படித்துவிட்டு நண்பர் ஒருவர் என்னைக் கைபேசியில் அழைத்துத் தெரிவித்தார். 'தயவுசெய்து படித்துவிடாதீர்கள்' என்று கேட்டுக்கொண்டு, ஜெயமோகன் கக்கிய வன்மத்தின் சாரத்தை என்னிடம் கூறினார். அவருடன் பக்கத்தில் பணிபுரிந்த பத்து ஆண்டுகள் உட்பட இருபது ஆண்டுகள் நெருங்கிய நட்பில் இருந்த நமக்கே தெரியாத கதையையெல்லாம் எழுதிய ஜெயமோகனுக்கு எவ்வளவு பெரிய கற்பனை இருக்கும் என்று தோன்றியது. க்ரியா ராமகிருஷ்ணன் செய்த சில பணிகள் கடந்த நூறு ஆண்டுகளில் தமிழுக்கு செய்திருக்கும் மிகப் பெரும் பங்களிபபுகளுள் அடங்கும். அவரைப் பற்றி தொடர்ந்து அவதூறு செய்துவருகிறார் ஜெயமோகன். க்ரியா ராமகிருஷ்ணன் உயிரோடு இருந்தபோது அவர் என்னிடம்  ஒரு தகவல் பகிர்ந்துகொண்டார். இடம்மாறுதல் தொடர்பாக ராமகிருஷ்ணனின் நண்பரிடம் சிபாரிசு செய்யும்படி ஜெயமோகன் ஒருநாள் ராமகிருஷ்ணனைத் தொலைபேசியில் அழைத்துக் கேட்டாராம், ராமகிருஷ்ணன் பொதுவாக சிபாரிசு போன்ற விஷயங்கள் செய்ய மாட்டார். அதனால் மறுத்துவிட்டாராம். (இந்த விவகாரத்தில் ஜெயமோகன் தரப்பு குறித்து தெரியாமல் இதை எழுதுவது குறித்து சற்று தயக்கமாகத்தான் இருக்கிறது). அந்த உதவியை ராமகிருஷ்ணன் செய்திருந்தால் அவர் மறைவுக்கு எழுதப்பட்ட மிகச் சிறந்த புகழாஞ்சலி ஜெயமோகனுடையதாகத்தான் இருந்திருக்கும். 


நிற்க. பி.கே. சிவகுமார் - ஜெயமோகன் விவகாரத்தை கவனித்தால் ஜெயமோகனின் பொய்கள் வெகு அப்பட்டமாக வெளிப்படுவது புலனாகிறது. அது மட்டுமல்லாமல் தான் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் திக்விஜயம் செய்தால் அங்குள்ளவர்கள் ஆரத்தி எடுத்து தங்கள் வேலையையெல்லாம் விட்டுவிட்டுத் தங்களை அங்கே முழு நேரமும் வழிபட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்ற மனநிலையும் தெரிகிறது. அதே நேரத்தில் அங்குள்ளவர்கள் தங்களின் குடும்ப, பொருளாதார, அலுவலக நெருக்கடிகளை வெளிக்காட்டிக்கொள்ளாமலேயே தங்கள் விருப்பத்துக்குரிய எழுத்தாளர்களுக்கு அவர்கள் மனம்கோணாமல் பணிவிடை செய்துவருகிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. இந்த யதார்த்தம்தான் பி.கே சிவகுமார் எதிர்வினையில் நம் நெஞ்சைத் தொடும் விஷயம். இதற்கு அவர் நிறைய ஆதாரங்களைக் கொடுத்திருக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் இத்தனைக்கும் மத்தியில் ஜெயமோகன் மீதான தன் மதிப்பையும் அவர் தன்னுடைய ஆசிரியர்களுள் ஒருவர் என்பதையும் உரிய மரியாதையுடன் பல இடங்களில் குறிப்பிட்டே தன் எதிர்வினையை சிவகுமார் எழுதுகிறார். அவர் பற்றி நமக்குத் தெரியவில்லை என்றாலும் இந்த எதிர்வினையின் மொழியில் அவர் உயர்கிறார்; தன் எதிர்வினையின் மொழியிலும் அகந்தையிலும் ஜெயமோகன் தாழ்கிறார். இந்த விஷயத்தில் சிவகுமாரைப் பின்பற்றி, நான் மதிக்கும் சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவர் ஜெயமோகன் என்ற என் மரியாதையை நான் இங்கே முதன்மையாகப் பதிவுசெய்ய விரும்புகிறேன். பி.கே. சிவகுமாரின் இந்த வரிகளை சமகால இலக்கிய உலகினர், வி.பு. வா.வட்டத்தினர் அனைவரும் தங்கள் மனதில் கொண்டு தீவிர பரிசீலனை செய்ய வேண்டும்: 

“ஜெயமோகன் இப்போது உட்கார்ந்திருக்கிற பீடத்தில் அவரைப் பொதுவில் விமர்சனம் செய்ய / திருத்த அவருடன் பழகும் மூத்த /  சக எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள், இளைய எழுத்தாளர்கள், நண்பர்கள் என நிறைய பேர் தயங்குகிறார்கள். இந்த நிலை மாறாத வரை இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் போல அவர் எழுதிக் கோண்டிருக்கிறார். இது எங்கே போய் முடியும் எனக் கவலையாக இருக்கிறது.”


தொடர்புடைய பதிவு: ஆசை: ஜெயமோகன், ஏன் இந்த ஒன்றரை டன் வெயிட்? (writerasai.blogspot.com)


3 comments:

  1. "தனக்கேயான ஒரு உண்மையை உருவாக்கிக்கொண்டு அதை உண்மையென்று ஆத்மார்த்தமாக நம்பிக்கொண்டு அதையே எழுதுகிறார்" -

    உண்மை, இதுபோன்ற பிரச்சனை தனக்கு இருப்பதாக ஜெயமோகனே அவரது தளத்தில் எழுதியிருக்கிறார். ஆனால் இதுவும் ஓரளவுக்கு தான் உண்மை. தனக்கேயான "உண்மையை" இவர் யார் யாரைப்பற்றியெல்லாம் இதுவரை உருவாக்கியிருக்கிறார், அவற்றை எந்த சந்தர்பத்தில் தனது தளத்திலோ அல்லது பொது விவாதங்களிலோ முன்வைத்திருக்கிறார் எனப் பாருங்கள். கமல் சார் குறித்தோ, மணி சார் பற்றியோ, முருகநோலர் குறித்தோ இப்படி தனக்கேயான "உண்மையை" எங்காவது முன்வைத்திருக்கிறாரா? எந்தவித அதிகாரபலமோ, பணமோ, சினிமா தொடர்புகளோ அற்றவர்களிடமே ஜெமோ இத்தகு "உண்மைகளை" உருவாக்கி அவதூறுகளாக உலவ விடுகிறார். இதில் பெரும்பாலானோர் அவரது முன்னாள் நண்பர்கள், வாசகர்கள், ஏழைப் பதிப்பாளர்கள், மற்றும் ஒருசில அடிப்பொடிகள். இதன் மூலம் அவர்களின் நம்பகத்தன்மையை குலைத்து, அவர்களது குரல் பொதுவெளிக்கு வராமல் பார்த்துக் கொள்வதே அவரின் நோக்கம். சர்வாதிகாரிகளின் உத்தி.

    ஆகவே நீங்கள் நினைப்பது போன் ஜெமோ அத்தனை ஒன்றும் அப்பாவி கிடையாது. தனது படைப்பாற்றலால் பிறழ்வின் விளிம்புக்குத் தள்ளப்பட்டு அதனால் ஏற்படும் தோற்றப்பிழைகளும், உண்மை/பொய் சார்ந்த மயக்கங்களும் தான் இவை என சில காலம் குறித்து நம்மையெல்லாம் நம்ப வைக்க முயல்வார், எச்சரிக்கை. அவருடைய வன்மங்கள் எல்லையற்றவை. எப்போதோ ஒருவர் தன்னைப் பற்றியோ அல்லது தனது படைப்பு அல்லது இலக்கிய குழுமச் செயல்பாடுகளை பற்றி சொன்னதை யானை போல் ஞாபகம் வைத்து, பிறகு சமயம் பார்த்து அவர்களை ஏறி மிதித்து மகிழ்வார். இதற்கு நடுவே அவர்களையெல்லாம் தன் பெருந்தன்மையால் மன்னித்துவிட்டதாக கதைகட்டுவார்.

    அவரை எல்லாரும் சைக்கோ என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் அதுவும் அவர் உருக்காக நினைக்கும் புனைவாளுமையே. உண்மையில் அவர் ஒரு சாதரண careerist மட்டுமே. யார் தனக்கு உபயோகமாக இருபார்கள், யார் விசுவாசமாக, யார் தமது இலக்கிய அதிகாரத்தை பலப்படுத்துவார்கள்/குலைப்பார்கள் என்பதே யாரை உயர்த்திப்பிடிக்க வேண்டும், யார்யாரை உதாசீனப்படுத்தவேண்டும், யாரை சமயம் பார்த்து ஓங்கி ஒன்றரை டன் வைட்டில் மிதிக்க வேண்டும் போன்ற முடிவுகளின் ஆணிவேர்.

    ஆகவே ஜெமோவொன்றும் அவரது பிறழ்வு மனநிலையினாலும், தன்னித்த மனக்கிளர்ச்சியாலும் இத்தகைய முடிவுகளை எழுப்பதில்லை. பல லௌகீக கணக்குகள் இவற்றின் அடியில் உள்ளது என்பதை தமிழிலக்கிய சம்மூகம் ஒருநாள் உணரக்கூடும்.

    எல்லோரும் தன்னுடைய நிகரற்ற படைப்பாற்றலின் மீதுள்ள பொறாமையால் தன்னை உள்ளூர வெறுக்கிறார்கள், தனக்கெதிராக சதிசெய்கிறார்கள் - சக எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், நண்பர்கள் உட்பட - எனவும், அதை அவரே தனது உள்ளுணர்வு மூலம் கண்டுபிடித்துவிட்டதாகவும், ஜெமோ நம்புகிறார். அதுவே அவரது எல்லா சரிவுகளுக்கும் காரணம், அவரது முடிவற்ற வன்மங்களின் ஊற்றுக்கால்.

    ReplyDelete
  2. வெளி நாட்டில் வாழும் தமிழர்கள் அனைவரும் முட்டாள்கள் அல்ல . ஜெயமோகன் தன்னுடைய நிறைவேறாத ஆசைகளை நடந்தது போல சொல்லி அவரை அம்மாதிரி உபசரிக்க வெளிநாட்டு வாசகர்களை தூண்ட முயற்சிக்கிறார் . பணத்திற்காக வெளி நாட்டில் வசிக்கும் என் போன்ற வெளி நாட்டு தமிழர்கள் ஜெயமோகன் போன்றவர்களை உபசரித்து ஊர் சுற்றி காண்பிக்கும் அளவுக்கு அப்பாவிகள் இல்லை . இந்தியாவை போல இங்கே தனி மனித துதி இல்லை . ஜெயமோகனும் அதற்கு தகுதியானவர் இல்லை . ஜெயமோகனை போலவே சாருவுக்கும் இதே மனநிலைதான் இருக்கிறது

    ReplyDelete
  3. ஜெயமோகன் எல்லாம் தெரிந்தவர் போல பேசும் பார்ப்பன சனாதனவாதி. படங்களுக்கு கதை எழுதி பிழைக்கும் அவர் தன்னை நோபல் பரிசு வாங்க தகுதியானவர் என நினைத்து கொண்டிருக்கிறார்

    ReplyDelete