Friday, September 8, 2023

தெய்வங்களின் தேர்




1.
நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே
என் வண்டியின் 
முன்சக்கரத்தை 
மோந்துபார்த்து
நிதானமாக
ஒன்றுக்கு அடிக்கிறது ஒரு நாய்

எனக்கு அதன் மேல் கோபம்
வரவில்லை

எனக்கே தெரியாமல்
எத்தனை தெய்வங்கள்
என் மீது மோந்துகூட பார்க்காமல்
ஒன்றுக்கு அடித்துக்கொண்டிருக்கின்றனவோ 

அந்த நாய்கள் மீதான கோபத்தால்
இந்த நாயின் மீதா
கல்லெறிவது

2.
என்றாவது ஒரு நாள்
தெய்வங்களின் தேர்
என் மேல் ஏறிச் செல்ல
வரும்

அதன் சக்கரம்
என் மேல் ஏறும்போது
உயிர்போகும் வலியிலும்
மந்தகாசத்துடன்
அதன் மேல் நிச்சயம்
நான் ஒன்றுக்கு அடிப்பேன்

என் வாழ்நாளில்
நான் சேர்த்து வைத்த சிறுநீரெல்லாம்
எவ்வளவு ஆனந்தத்துடன்
அந்தச் சக்கரத்தின் மீது
பீறிட்டு நனைக்கிறது
என்பதை விழி பிதுங்கிக் காண்பதுதான்
என் கடைசிக் காட்சியாக
இருக்க வேண்டும்

தேரில் அடிபட்டுச் செத்தாலும்
தெருநாய்க்குத் திமிர் எவ்வளவு என்று
தெரிந்துகொள்ளட்டும்
இறங்கிப் பார்க்கும்
தெய்வங்கள்

3.
என் கார் முன்சக்கரத்தின் அடியில்
இழுத்துக்கொண்டு கிடக்கும் நாயை
இறங்கிவந்து பார்த்தேன்

நீரும் உயிரும் 
பிரிந்துகொண்டிருந்தன

நீர் 
சக்கரத்தை நனைத்துக்கொண்டிருந்தது

உயிர் 
எதை நனைத்துக்கொண்டிருக்கும்
என்று தெரியவில்லை

அப்போது தீனமான குரலில்
பேச ஆரம்பித்தது
அந்த நாய்
‘ஒரு தத்துவம் சொல்லட்டுமா சார்
வாழ்க்கை என்பது சிறுகச் சிறுக
நாம் சேர்க்கும் சிறுநீர்
மரணம் என்பது
அதை முழுமுற்றாக 
ஒரு சொட்டு விடாமல் 
அடிப்பதற்கான
தருணம்’

நாயின் மேல் ஏற்றிவிட்டோமே
என்ற குற்றவுணர்வு இருந்தது

ஏற்றியது தத்துவவாதி நாய் மீதுதான்
என்பது தெரிந்ததும்
குற்றவுணர்வு போய்விட்டது

4.
தெருநாயோ
தெருத்தெய்வமோ
அவற்றின் மேல் எப்போதும் 
எனக்குப் பொறாமை உண்டு

போர்ஷ்
லம்போர்கினி
பிஎம்டபிள்யு
ஆடி
பென்ஸ்
என்று 
எந்த கார் சக்கரத்திலும்
அவற்றால்
ஒன்றுக்கு அடிக்க முடியும்

என்னால் 
என்னுடைய கார் சக்கரத்தில் கூட 
ஒன்றுக்கு அடிக்க முடியாது

அப்படி 
ஒருமுறை கூட 
எனக்குத் தோன்றாதது குறித்து
வியப்பு கொள்கிறேன்

உன் கார் மேல்
நீ ஒன்றுக்கு அடிக்காமல்
வேறு எந்த நாய் அடிப்பது
என்று என்னையே
காறியுமிழ்ந்துகொள்கிறேன்

ஆனாலும்
என் கார் சக்கரத்தின் மேல் அடிக்க 
ஏதோ ஒன்று
என்னைத் தடுக்கிறது

அப்படி ஒரு எண்ணம் வர
தெருநாயாய் ஆக
பரிணாம வளர்ச்சியின்
பரிவார தெய்வங்களை
வேண்டிக்கொள்கிறேன்

சக்கரம் கண்டால்
தானாய்க் கால்தூக்கும் காலம்
கனியட்டும்

     - ஆசை 

No comments:

Post a Comment