Friday, January 8, 2016

1944: ‘கொன்றது நீயல்ல, இந்தப் போர்தான்’ - சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் ஒரு உலா!

ஆசை
(சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை முன்னிட்டு ‘ தி இந்து’ இணையதளத்தில் வெளியான கட்டுரை)

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் புதன் அன்று (06-01-2016) கேசினோ திரையரங்கில் திரையிடப்பட்ட ‘1944’ என்ற எஸ்தோனியத் திரைப்படத்தைப் பார்த்தபோது ஈழத் தமிழ்க் கவிஞர் சிவசேகரம் எழுதிய இந்தக் கவிதைதான் நினைவுக்கு வந்தது:
 
துரோகி எனத் தீர்த்து 
முன் ஒரு நாள் சுட்ட வெடி
சுட்டவனைச் சுட்டது
சுடக் கண்டவனைச் சுட்டது 
சுடுமாறு ஆணை 
இட்டவனைச் சுட்டது
குற்றம் சாட்டியவனை 
வழக்குரைத்தவனை 
சாட்சி சொன்னவனை 
தீர்ப்பு வழங்கியவனை சுட்டது 
தீர்ப்பை ஏற்றவனை சுட்டது 
எதிர்த்தவனை சுட்டது 
சும்மா இருந்தவனையும்
சுட்டது.
 
துப்பாக்கி, பீரங்கி, குண்டு போன்றவற்றுக்கெல்லாம் நாடு, இனம், மொழி, அன்பு, நட்பு, கருணை, புத்தி என்று ஏதும் கிடையாது என்பதைச் சொல்லும் திரைப்படம்தான் ‘1944’. அமோ ங்கானன் (Elmo Nüganen) இயக்கி, வெளிநாட்டுத் திரைப்பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட படம்.
 
இரண்டாம் உலகப் போரைப் பற்றி எடுக்கப்பட்ட ஆயிரக் கணக்கான திரைப்படங்களின் வரிசையில் மேலும் ஒரு தரமான படம். ஆனால், இந்தப் படம் காட்டும் கோணம் ஐரோப்பியரல்லாத நாட்டினருக்கு அவ்வளவாகப் பரிச்சயப்படாத ஒன்று. வரலாற்றின் விசித்திரப் போக்கில் சிக்கிக்கொண்ட தேசம் எஸ்தோனியா. இரண்டாம் உலகப் போரில் எஸ்தோனியாவைப் பலவந்தமாக ஆக்கிரமிப்பு செய்துகொண்டது சோவியத் ருஷ்யா. எதிர்த்த எஸ்தோனியர்களை சைபீரியா உள்ளிட்ட வதைமுகாம்களுக்கு அனுப்பித் தீர்த்துக்கட்டியது. இந்த நிலையில் ஜெர்மனியின் நாஜிப் படையும் எஸ்தோனியாவில் ஊடுருவுகிறது. அவர்கள் தங்களுக்கு விடுதலை பெற்றுத்தருவார்கள் என்று நம்பி எஸ்தோனியர்கள் வரவேற்கிறார்கள். செம்படைக்கும் நாஜிப் படைக்கும் வித்தியாசம் ஏதுமில்லை என்பது போகப் போக எஸ்தோனியர்களுக்குத் தெரியவருகிறது. எஸ்தோனியர்கள் விரும்பியோ விரும்பாமலோ இரண்டு தரப்புகளுடன் சேர்ந்துகொண்டு போரிடுகிறார்கள். எஸ்தோனியர்களை எஸ்தோனியர்களே சுட்டுக் கொல்கிறார்கள். சுட்டுக்கொல்வதற்கு இருவேறு சித்தாந்தங்கள் அதிகாரமும், உரிமையும் வழங்குகின்றன. வரலாற்றின் இந்தக் கட்டத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது ‘1944’.
 
பதுங்கு குழிகளினூடாக படத்தின் முதல் பாதி செல்கிறது. இடைவிடாத துப்பாக்கிச் சண்டை, பீரங்கிச் சண்டை. நாஜிப் படைகளுக்குச் சார்பாகப் போரிடும், ஆனால் ஹிட்லரை வெறுக்கும் எஸ்தோனியப் போர்வீரர்கள் அந்தப் பதுங்கு குழிகளில் இருந்தபடி செம்படையை எதிர்த்துப் போரிடுகிறார்கள். ஃபின்னிஸ் படைகளின் பிரிவு அது. சக வீரர்களுக்கிடையிலான நட்பை குறுகிய நேர நட்பாக ஆக்கிவிடுகின்றன சீறிவரும் குண்டுகள். கார்ல் என்பவன் முதல் பகுதியின் பிரதான பாத்திரம். செம்படையினரால் சைபீரிய வதைமுகாமுக்கு அனுப்பப்பட்ட தன் குடும்பத்தினரை நினைத்து ஏங்குபவன் அவன். தான் கவனமாக இருந்திருந்தால் அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று நினைத்து நினைத்துக் குற்றவுணர்ச்சி கொள்கிறான். இதற்கிடையே அந்தப் படையில் இளம் இரட்டையர்கள் வந்து சேர்கிறார்கள். பால் மணம் மாறாத முகம். இரட்டையர்களில் ‘அரை மணி நேரம்’ மூத்தவன் தன்னுடைய தம்பியைப் பாதுகாப்பதை முக்கியக் கடமையாகக் கொண்டிருக்கிறான். அடிக்கடி இருவரும் மாறி மாறி கண்காணிப்பு வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். தம்பியை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு துப்பாக்கியின் லென்ஸ் வழியாக எதிர் முனையைப் பார்க்கும் தருணத்தில் ஒரு குண்டு அவனது நெற்றியைத் துளைக்க, அண்ணன் செத்து வீழ்கிறான். இரண்டு நொடி வித்தியாசத்தில் தம்பி தப்பித்துக்கொள்ள அண்ணன் இறந்துபோகிறான். என்ன நடந்தது என்பதை உணர்ந்துகொள்வதகு தம்பிக்குச் சில நிமிடங்கள் ஆகிறது. ஓவென்று அழ ஆரம்பிக்கிறான்.
 
இடையில், நாஜிக்களுக்கு ஆதரவாக இந்தப் படைப்பிரிவினரிடம் பேசுவதற்கு ஒருவன் வருகிறான். “நீண்ட கால அறிவியல் ஆராய்ச்சிக்குப் பிறகு எஸ்தோனியர்களும் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்களே என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, நாமெல்லோரும் நாஜிக்களுடன் இணைந்துகொண்டு ஒருங்கிணைந்த ஆரிய இனத்துக்காகப் பாடுபடுவோம்” என்று உரையாற்றுகிறான். வீரர்களுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. எல்லோருக்கும் ஹிட்லரின் புகைப்படங்கள் கொடுக்கப்படுகின்றன. ‘ஹிட்லர் வாழ்க!’ என்று சொல்வதற்குப் பணிக்கப்படுகிறார்கள் அந்த வீரர்கள். ஆனாலும் யாரும் அப்படிச் சொல்ல மறுக்கிறார்கள். இரவில் ஹிட்லரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு கிண்டலடிக்கிறார்கள். மலம் கழித்துவிட்டுத் துடைத்துக்கொள்ளக் கூட இந்தப் புகைப்படம் பயன்படாது என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார்கள்.
 
இதுவரை நேரடியாக நாஜிக்களுடன் இணையாமல் ஃபின்னிஷ் படையினருடன் போரிட்டுக்கொண்டிருந்த அந்த வீரர்கள் இப்போது நாஜிக்களுடன் சேர்ந்து போரிட அழைக்கப்படுகிறார்கள். அதற்காகப் போய்க்கொண்டிருக்கும் வழியில் மக்கள் கூட்டம் ஒன்று சாரைசாரையாகப் போய்க்கொண்டிருப்பதைப் பார்க்கிறார்கள். ஜெர்மனிக்குப் போக வேண்டும் என்று பணிக்கப்பட்ட மக்கள் அவர்கள். சிறுகுழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று சிரமப்பட்டு நடந்துபோய்க்கொண்டிருக்கிறார்கள். வழியிலேயே செம்படையின் விமானம் அவர்கள் மீது குண்டுவீச சிலர் பலியாகச் சிலர் பிழைக்கிறார்கள். கையில் பொம்மையுடன் இருக்கும் ஒரு சிறுமி தனது தாயை இழக்கிறாள். ஆனால், அதை அவள் அறியவில்லை. அவளைக் காப்பாற்றி ராணுவ வண்டியில் கார்ல் அனுப்பிவைக்கிறான்.
 
ஒரு காடு தொடங்கும் இடத்துக்குப் பக்கத்தில் மறைவிடம் அமைத்து தாக்குதலுக்குத் தயாராக இருக்கிறார்கள், கார்ல் உள்ளிட்டோர். செம்படையின் வாகனங்கள் வருவதைப் பார்த்து இவர்கள் தாக்குதலை ஆரம்பிக்க மாறி மாறி சுட்டுக்கொல்கிறார்கள். கார்லை ஒருவர் சுட்டுக்கொன்றுவிட்டு தயக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறான். தான் சுட்டுக்கொன்றது தனது சக நாட்டவனைத்தான் என்பதை உணர்ந்து திகைத்துப் போய் நிற்கிறான். மகாபாரதத்தில் குருஷேத்திரத்தில் தனது பங்காளிகளையே போரிட்டு அழிக்க வேண்டுமா என்று திகைத்துப் போய் நிற்கும் அர்ஜுனன் நினைவுக்கு வருகிறான். கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சொன்ன உபதேசம் போல சுட்டவனுக்கு அவனது நண்பன் ஆறுதல் சொல்கிறான், “கொன்றது நீயல்ல, இந்தப் போர்தான்.”
 
கீழே விழுந்துகிடக்கும் கார்லின் ஆடைக்குள் துழாவிப் பார்க்கிறான் சுட்டவன். ஒரு கடிதம் சிக்குகிறது. அன்னா என்ற பெண்ணின் முகவரி அதில் எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் எல்லாப் போர்வீரர்களும் அப்படித்தான் ஒரு கடிதத்தை எழுதி, தங்கள் சட்டைப் பையில் வைத்திருப்பார்கள். மேற்கொண்டு மற்றவர்களையும் சுட மனதில்லாமல் நிற்கிறார்கள் அந்த செம்படை எஸ்தோனியர்கள். செம்படையில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் எஸ்தோனியத் தளபதி கிரெம்ள் அங்கே வருகிறார். மற்றவர்களைத் தப்ப விட்டதற்காக அவர்களைக் கடிந்துகொள்கிறார். அந்தச் சண்டையில் உயிரிழந்த செம்படையின் எஸ்தோனியர்களையும் நாஜிக்களின் எஸ்தோனியர்களையும் ஒரே இடத்தில் புதைத்துவிட்டு அவர்கள் அங்கிருந்து நகர்கிறார்கள். இப்போதிலிருந்து திரைப்படம் கார்லைச் சுட்டவனை, அவன் பெயர் யூரி யோகி, மையமிடுகிறது. கார்லின் கடிதத்தில் இருந்த முகவரியைத் தேடிப் போகிறான் யூரி. அந்த வீடு இருக்கும் தெருவே குண்டுவீச்சில் சிதிலமடைந்து கிடக்கிறது. முகவரியில் இருந்த வீட்டின் கதவைத் தட்டுகிறான் யூரி. ஒரு பெண் திறக்கிறாள். ‘அன்னா தம்மிக் நீங்கள்தானே? என்று கேட்கிறான். “ஆமாம்” என்கிறாள் அந்தப் பெண். “உங்கள் கணவர் கார்ல் எழுதிய கடிதத்தை உங்களிடம் கொடுக்க வந்திருக்கிறேன்” என்கிறான் ஜூரி. “கார்ல் எனது அண்ணன்” என்கிறாள். ஜூரியை உள்ளே வரச் செய்து அன்னா அவனை உபசரிக்கிறாள். தன் அண்ணனின் மரணத்தை அறிந்து ஒரு கணம் வாடினாலும் மறுபடியும் வெறுமையான ஒரு புன்முகம் அவளுக்குத் தோன்றுகிறது. “யோகி என்பவன்தான் எங்கள் குடும்பத்தை சைபீரியாவுக்கு அனுப்பும்படிப் பரிந்துரைத்தான்” என்று அன்னா சொல்கிறாள். அவர்களுக்கிடையே மெல்லிய காதல் பூக்கிறது. அவளிடமிருந்து விடைபெறும்போது “உங்கள் குடும்பப் பெயர் என்ன என்பதைச் சொல்லவில்லையே” என்று கேட்கிறாள் அன்னா. ‘யோகி’ என்ற பெயரைச் சொல்லாமல் வேறு பெயரைச் சொல்கிறான் யூரி.
 
தளபதி கிரெம்ள், யூரியின் காதலை மோப்பம் பிடித்துவிடுகிறார். சற்றே மிரட்டலான தொனியில் யூரியிடம் பேசுகிறார். அது தனது தங்கைதான் என்கிறான் யூரி. முகாமுக்குத் திரும்புகிறான் யூரி. இறந்த வீரர்களை ஈடுசெய்வதற்காக முகாமுக்குப் புதுவீரர்கள் வருகிறார்கள். முன்பு பார்த்த இரட்டைச் சகோதரர்களில் உயிர்பிழைத்த தம்பி அவர்களில்  ஒருவன். அவர்களுடைய உடல் அசைவுகளை வைத்து அவர்கள் நாஜிப்படையில் இருந்தவர்கள் என்பதைக் கண்டுபிடிக்கிறான் யூரி. அவர்களின் நாஜித் தொடர்பை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் எச்சரிக்கும்போது பக்கத்து அறையில் இருக்கும் தளபதி கிரெம்ள் அவனைக் கூப்பிட்டு அனுப்புகிறார். செம்படைக்கு எதிரான எந்த விஷயமும் சிறிதுகூட தலையெடுக்கக் கூடாது என்றும் வீரர்களிடம் செம்படைக்கு எதிரான உணர்வுகள் சிறிது தென்பட்டாலும் அவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கிறார். படைப்பிரிவுத் தலைவர் வீரேஸைப் பற்றி அதிருப்தியை அவர் வெளிப்படுத்துகிறார். “வீரேஸ், வெளியில்தான் சிவப்பு, உள்ளுக்குள்ளே வெள்ளை” என்று சொல்லிவிட்டு, வீரேஸின் இடத்துக்கு யூரி வர வேண்டும் என்கிறார் கிரெம்ள். அவர் சொல்வதையெல்லாம் விருப்பமில்லாமல் கேட்டுக்கொண்டிருக்கிறான் யூரி.
 
அடுத்ததாக ஒரு காட்டுக்குள் துழாவல் வேட்டை நடத்துகிறார்கள்செம்படையினர்ஓடை பக்கத்திலிருந்து ஏதோ சலசலப்பு கேட்க அங்கேவந்து பார்த்தால் நாஜிப் படையினரின் சீருடையில் பதின்வயதுஎஸ்தோனியச் சிறுவர்கள் சிலர் தப்பித்து ஓடப் பார்க்கிறார்கள்அவர்களைஇரண்டு திசையிலிருந்தும் வளைக்கின்றனர் செம்படையினர்நாஜிக்கள்படையிலிருந்து தப்பித்து வந்திருக்கிறோம்எங்களை ஏதும்செய்துவிடாதீர்கள் என்று கெஞ்சுகிறார்கள் அந்தச் சிறுவர்கள்அவர்களின்வயதைக் கேட்கிறான் யூரிஎல்லோரும் ‘16’ என்கிறார்கள். “இந்ததுரோகிகளைச் சுட்டுக்கொல்லுங்கள்” என்று யூரியிடம் ஆணையிடுகிறார்கிரெம்ள். “இந்தச் சிறுவர்களைக் கொல்ல என்னால் முடியாது” என்று யூரிமறுத்துவிடவே அவனை சுட்டுக்கொன்றுவிட்டு வீரேஸிடம்ஆணையிடுகிறார்வீரேஸும் தயங்கி நின்றுகொண்டிருக்க அவனைநோக்கித் துப்பாக்கியை நீட்டுகிறார் கிரெம்ள்சட்டென்று எங்கிருந்தோ வரும்துப்பாக்கிக் குண்டு கிரெம்ளை வீழ்த்துகிறதுசுட்டது யூரியின் நண்பன்.எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்சீருடையைக்களைந்தெறிந்துவிட்டு அந்தச் சிறுவர்களைத் தப்பியோடச் சொல்கிறார்கள்.யூரியின் நண்பன் யூரியின் சட்டையைத் துழாவிப் பார்க்கிறான். ‘அன்னாதம்மிக்’ என்ற பெயருக்கு எழுதப்பட்டிருக்கும் கடிதம் ஒன்று கிடைக்கிறது.படத்தின் இறுதிக் காட்சியில் அன்னாவின் வீடு தேடிப் போய் கதவைத்தட்டுகிறான் யூரியின் நண்பன்யூரி போனபோது நடந்த காட்சியைப்போலவே இந்தக் காட்சியும் அமைக்கப்பட்டிருக்கிறதுஅன்னா, அவனைஉள்ளே கூட்டிச் செல்கிறாள்உள்ளே ஒரு பாட்டியும் அனாதைக் குழந்தைஒன்றும் இருக்கிறார்கள்அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் யூரியின்நண்பன் கடிதத்தை மேசையில் வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறான்படம்முடிகிறது.
 
மனிதர்களை, உணர்வுகளைப் போர் சின்னாபின்னமாக்கிவிடுவது உண்மைதான். ஆனால், மனிதத்துக்கு எதிராக முழு வெற்றியைப் போர்களால் அடைந்துவிட முடியாது என்பதை இந்தப் படம் சொல்கிறது. எல்லாம் ஒரு சங்கிலித் தொடர் போல் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன. குண்டுகள், மனித உயிர்கள், சித்தாந்தங்களின் ஈவிரக்கமற்ற தன்மை… இவற்றுக்கு இடையிலும் அன்பு துளிர்க்கிறது. ஒரு துளி ஈரம் இருந்தாலும் போதும் அந்த இடத்தில் அன்பு துளிர்த்துவிடும். மெல்லிய வேர்களைக் கொண்டு பெரும் பாறையைப் பிளந்துவிடும். இந்தப் படத்தில் வரும் வீரர்களில் பெரும்பாலானோர் விருப்பப்பட்டுப் போரில் கலந்துகொள்ளவில்லை. நிர்ப்பந்தம் அவர்களை இங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறது. சகோதரர்களுக்கு எதிராகத் துப்பாக்கித் தூக்க வைத்திருக்கிறது. சகோதர எதிரியைச் சுட்டுவிட்டு ஈவிரக்கமின்றிப் போக அவர்களுக்கு மனம் வருவதில்லை. அவர்களைக் குற்றவுணர்ச்சி கொல்கிறது. எல்லா சித்தாந்தங்களும் ஆதிக்கத் தரப்பாகும்போது கொல்கின்றன. அவற்றை எதிர்த்து நிற்கும் அன்பு இன்னும் இந்த உலகத்தைத் தாக்குப்பிடித்து நிற்க வைக்கிறது. அது இருக்கும் வரை இந்த உலகம் அழியாது.
“இன்று உலகில் எண்ணற்ற மக்கள் உயிரோடிருக்கிறார்கள் என்றால் அதன் பொருள் உலகம் தொடர்வது ஆயுத பலத்தினால் அல்ல. மாறாக உண்மை அல்லது அன்பு ஆகியவற்றின் பலத்தினால்தான் என்று பொருள். இத்தனை யுத்தங்கள் நடந்த பின்னரும் உலகம் அழியவில்லை என்பதே இந்த சக்திகளின் மறுக்க முடியாத வெற்றி” என்ற காந்தியின் மேற்கோள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
 
‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ போன்ற படங்களின் உச்சத்தை ‘1944’ எட்டவில்லை என்றாலும் இரண்டாம் உலகப் போரைப் பற்றிய நல்ல திரைப்படங்களுள் ஒன்று என்ற அந்தஸ்தை எளிதில் பெற்றுவிடுகிறது. அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.  
 - நன்றி: 'தி இந்து’ இணையதளம்
- ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/HNYmlU
 

1 comment:

  1. திரைப்பட விழாவில் நாங்கள் கலந்துகொள்ள இயலாத குறையை தங்களது பதிவு நிறைவு செய்தது. நல்ல அலசல். நன்றி.

    ReplyDelete