Friday, January 3, 2020

என்றும் காந்தி - 2019-ன் சிறந்த புத்தகங்கள்- 3



எஸ்.ராமகிருஷ்ணன்

(எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய வலைத்தளத்தில் எழுதியிருக்கும் பதிவு)

இந்து தமிழ் நாளிதழில் ஆசை எழுதி வந்த காந்தி பற்றிய தொடர் கட்டுரைகள்   ‘என்றும் காந்தி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியுள்ளது.

அரிய புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் காந்திய நூல் வரிசையில் முக்கியமானது.

ஆசை காந்தியை ஆழ்ந்து வாசித்திருக்கிறார். காந்தி குறித்து மிகச்சிறப்பான பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பத்திரிக்கையாளரின் துல்லியமும் எழுத்தாளரின் கவித்துவமும் ஒன்று சேர்ந்த இக்கட்டுரைகள்  இன்றைய தலைமுறைக்கு காந்தியை மிகச்சரியாக அடையாளப்படுத்துகின்றன.

“காந்தியின் அகிம்சை, சத்தியாகிரகம், சத்தியம், நேர்மை, அன்பு இவை எதையும் பிரித்துப் பார்க்க முடியாது ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டவை. ஒருவர் முதலில் தனக்கு நேர்மையாக இருக்க வேண்டும். பிறகு, அடுத்தவர்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும். இதுதான் நேர்மையைப் பற்றிப் பொதுவாகச் சொல்லப்படும் இலக்கணம். காந்தி இதையெல்லாம் தாண்டி, எதிராளியிடமும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருப்பவர்.

நேர்மையாக இருப்பதற்குக் காந்தியிடம் எந்தவித ஜாக்கிரதையுணர்வும் கிடையாது. நேர்மை என்பது அவரது அடிப்படை இயல்பு. மேலும், பிறரின் நன்மதிப்பைப் பெறுவதற்காகவும் அவர் நேர்மையைக் கடைப்பிடிக்கவில்லை. தான் தவறிழைத்துவிட்டதாகக் கருதினாலோ, பிறர் தவறாகக் கருதும் விஷயங்களைச் செய்தாலோ அவற்றை வெளிப்படையாகக் காந்தியே ஒப்புக்கொண்டுவிடுவார். இன்று காந்தியைப் பற்றி ஏராளமான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன, ஏராளமான அவதூறுகள் வைக்கப்படுகின்றன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை காந்தி நமக்குச் சொல்லியிருக்காவிட்டால் தெரிந்திருக்காது என்பதுதான் உண்மை.“ எனத் தனது கட்டுரையில் ஆசை காந்தி பற்றித் தெரிவிக்கிறார். இந்த நூலின் சாராம்சத்திற்கு இந்த இரண்டு பத்திகளே எடுத்துக்காட்டு

காந்தியை அறிந்து கொள்வதற்கான சிறந்த நூல்.

ஆசைக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.
- எஸ்.ராமகிருஷ்ணனின் வலைதளத்தில் படிக்க: shorturl.at/lHPX5

No comments:

Post a Comment