Wednesday, January 31, 2024

பத்துக் குகைகள்


ராவணேசுவரனுக்கு
மொத்தம்
பத்துக் குகைகள்
போயொளிய
தோதான இடங்கள்

ஒன்றொன்றாயும்
ஒளிந்தான்
அனைத்திலும்
ஒரே சமயம்
ஒளிந்தான்

தேடிவரும் அஸ்திரமெல்லாம்
இன்றுபோய்
நாளை வந்தன

எந்தக் குகை
ராவணக் குகையென்று
அறியவில்லை ஏதும்
எந்த அஸ்திரத்தில்
ராமன் ஒளிந்திருக்கிறான்
என்பதையறிவான்
ராவணேச்வரன்

போக்கெல்லாம்
அதுவரையே
காட்ட முடியும்

எடுத்தான்
விடுத்தான் ராமன்
ஒளிவில்
வெளிப்பட்டுத்
தடுத்தான்
படுத்தான்
ராவணன்

குகையும்
அஸ்திரமும்
பரஸ்பரம்
மிகச் சரியாய்
அறிந்தன

அவ்வறிதலே
பிரம்மாஸ்திரம்
               -ஆசை

Tuesday, January 30, 2024

அல்லாஹூ அக்பர்


தன் ஸ்கூட்டியை
நிறுத்திவிட்டு வரும்
பர்தா அணிந்த பெண்ணை
நோக்கி ஓடிவருகிறது
உலகின் பெருமைக்குரிய நாகரிகம் ஒன்று
தனது தொன்மையான நாயகன் வெல்க
என்று முழக்கமிட்டபடி

அவர்களை நோக்கி
கைகளை ஓங்கி ஓங்கி
எதிர் முழக்கமிடுகிறாள்
அந்தப் பெண்
‘அல்லாஹூ அக்பர்
அல்லாஹூ அக்பர்’ என்று

அவளுக்குப் பின்னால்
இன்னொரு உருவமொன்று
ஓடிவருகிறது
மூன்று தோட்டாக்களை நெஞ்சில் ஏந்தி
’ஹே ராம்’ என்று சொல்ல வாயெடுத்துப்
பிறகு
‘அல்லாஹூ அக்பர்’ என்று முழக்கமிட்டபடி
          -ஆசை

(2022-ல் எழுதிய கவிதையின் மீள்பகிர்வு)


கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: 


திருவாளர் கோட்சேவை ஒன்றும் சொல்லாதீர்கள்


திருவாளர் கோட்சேவை
ஒன்றும் சொல்லாதீர்கள்
அவ்வளவாகத் திருவாளர் இல்லாத
காந்தியின் நெஞ்சுக்கு நேரே
அவராக ஒருபோதும் துப்பாக்கி நீட்டியதில்லை
திருவாளர் கோட்சேவின் துப்பாக்கியை
மந்திரவிசை போல் தன் மார்பை
நோக்கி நீளச் செய்தது
அவ்வளவாகத் திருவாளர் இல்லாத
காந்தியின் நெஞ்சுதான்
மூன்று தோட்டாக்களை
அடுத்தடுத்து உறிஞ்சிக்கொண்டதும்
அவரது நெஞ்சுதான்
தன் துப்பாக்கியிலிருந்து
பிடுங்கப்பட்ட
மூன்று தோட்டாக்கள்
எங்கே என்று
திகைத்துப் போன திருவாளர் கோட்சே
இன்னும் அதே இடத்தில்தான்
நிற்கிறார்
அவரைக் கொஞ்சம்
சாந்தப்படுத்தி
உட்கார வைக்கலாம்
இன்னொரு துப்பாக்கி தருகிறோம்
இனிமேல் நீங்களே சொந்தமாகச் சுடுங்கள்
என்று ஆறுதல் சொல்லலாம்
ஆனால்
அவ்வளவாகத் திருவாளர் இல்லாத காந்தியின்
முன்னால் மட்டும் சென்றுவிடாதீர்கள்
சுட்டது நீங்கள்தான் என்ற பெருமையை
உங்களிடமிருந்து
பறித்துவிடுவார்
என்பதை மட்டும்
திருவாளர் கோட்சேவிடம் சொல்லிவிட வேண்டும்
- ஆசை
(காந்தியைத் திரும்பத் திரும்பச் சுட முயல்பவர்களுக்கு, பரிதாபத்துடன்)

கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: 













Saturday, January 27, 2024

இந்தப் பிரபஞ்சத்தின் மையம் தேடி ஒரு வேள்வி


என்றாவது யோசித்ததுண்டா நீங்கள்
உங்கள் மூளை ஏன்
இன்னொருவர் தலையில் இல்லை என்று
உங்கள் தலைக்குள் இருப்பது
இன்னொருவர் மூளையோ என்று
உங்கள் மூளைக்குள் இருப்பது
இன்னொருவர் மனமோ என்று
உங்கள் உடலில் இருப்பது
இன்னொருவர் கைகளோ என்று
உங்கள் புலன்களில் இருப்பது
இன்னொருவர் உணர்வுகளோ என்று

நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று 
யாராவது கேட்டால்
என் மூளையை பார்க்கச்
சென்றுகொண்டிருக்கிறேன்
என்று சொன்னதுண்டா

எங்கோ என் மனதை வைத்துவிட்டேன் என்று 
நீங்கள் தேடியது உண்டா

உண்மையில் எதுவும் 
அதனதன் இடத்தில் இல்லை

அதனால்தான்
தலைக்கு மேல் மயிரிலிருந்து
தலைக்கு உள்ளே மூளையிலிருந்து
அதற்கு உள்ளே மனதிலிருந்து
இன்னும் புலன்கள் உணர்வுகள்
குறி குறிமயிர்
கால்கள்  
அனைத்துமே
இந்த நீட்டம் நீட்டுகின்றன
இந்த அலைச்சல் அலைகின்றன

அங்கொன்றும் இங்கொன்றுமாகத் 
தட்டுப்படுவதையெல்லாம்
எடுத்து வைத்துக்கொண்டு
தடவித் தடவி
ஆறுதல் கொள்கின்றன

உங்கள் பிரச்சினை
என்னவென்றால்
இதையும் நம்பிவிடுவீர்கள்
அவ்வளவு
சர்வநிச்சயம்
தேவைப்படுகிறது

நான்
அப்படியெல்லாம்
இருக்க மாட்டேன்
அதோ அங்கே போகிறாரே
அவரிடம் உள்ள என் கையைப்
பிடித்து
இதோ இங்கே இருக்கிறானே
இவன் கன்னத்தில்
மாறி மாறி அறையப் போகிறேன்

இந்த உலகம்
எவ்வளவு சிக்கலானது
என்பதைப் பிறர்க்கோ
எனக்கோ நிரூபிக்க
இங்கிருந்தே
தொடங்க வேண்டும்

ஆனால்
அதற்கு முன்னரே
'இங்கு'வையும் 'இதோ'வையும்
சந்தேகிக்க ஆரம்பித்துவிட்டேனே
இங்கிருந்தோ
எங்கிருந்தோ

இவ்வளவு
குழப்பத்துடன்
ஒரு பிரபஞ்சமும்
கவிதையும் தேவையா

     -ஆசை 

Thursday, January 25, 2024

ஒரு வேண்டுகோள்!

அனைவருக்கும் வணக்கம்! பெரும் ஊடகங்களுக்கும் இலக்கிய அதிகார மையங்களுக்கும் இடையே தனிநபர் தனது எழுத்துகளை எல்லோரிடமும் கொண்டுசேர்ப்பது மிகவும் கடினம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது மட்டுமல்லாமல் பெரும் ஊடகத்தில் பணியாற்றியிருந்தாலும் அந்தச் சூழல் தந்திருக்கக்கூடிய சிறு அதிகாரத்தைக் கூட என் தனிப்பட்ட நலன்களுக்காகவோ இலக்கிய நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தியதில்லை. ஆகவே தனிநபராக அதே நேரத்தில் அனைவருடன் நட்பாகவும் பாரபட்சமில்லாத அணுகுமுறையுடனும் தொடர்ந்து செயல்படுவது என்று முடிவெடுத்திருக்கிறேன். 

மிகவும் கடினமான காரியம்தான். ஆனால்...

தனிச்சிறு மீன்கள்



அருட்பெரும் உடல்
தனிப்பெரும் உயிர்

அருட்பெரும் ஆழி
தனிப்பெரும் கப்பல்

அருட்பெரும் அந்தம்
தனிப்பெரும் பாழ்

Tuesday, January 23, 2024

ஹே ராவண்


முந்நூறு
மூவாயிரம் ராமாயணங்களில்
இதுவுமொன்று
மாற்று அண்டத்தில்
மாற்றுக் காலத்தில் 
நிகழ்ந்தது

Monday, January 22, 2024

மராமரப் படலம்


வில்லடங்கா
புவிமீது
சொல்லடங்கா
சுடரழகன்
அம்பின் பாதையறிந்தான்

Sunday, January 21, 2024

வடுவூர் ராமர்

 


துப்பறியும் நாவலாசிரியர்
வடுவூர் துரைசாமி ஐயங்கார்
வரத்துப் பறவைகளும்
உள்ளூர்ப் பறவைகளும்
எச்சமிட்டு வளர்க்கும்
வடுவூர் ஏரி
இந்தியாவின்
கபடி கிராமம்
என்றெல்லாம்
பேர்பெற்றது
எங்கள் ஊர்
வடுவூர்

மாமத ராஜா - நீள்கவிதை

 


கொண்டுவர
வேண்டுமென்று
ஆடிய
பள்ளு பாடிய
ஆண்டிகள் பலர்
 
கொண்டுவந்தும்
மொண்டுகுடிக்காத
ஆண்டிகள் பலர்
 

ஜெய் ஹே



மிக மிக
அடிப்படையானவை
'ஜெய்’க்கும்
‘ஹே’க்கும் இடையிலான
வேறுபாடுகள்

முன்னதுக்கு வேண்டியது
வெற்றி மட்டுமே
எவரையும்
எதனையும் நசுக்கியாவது

பின்னது

Friday, January 19, 2024

கண்ணதாசனைத் தேடிய மறதி - சிறுகதை



ஆசை

ஒருமுறை சீன ஞானி சுவாங் ட்சு ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் ஒரு வண்ணத்துப்பூச்சியாக இருந்தார். மிகவும் மகிழ்ச்சியுடனும் சுதந்திரமாகவும் விரும்பிய இடமெல்லாம் பறந்து திரிந்தார். ஆனால், கனவில் வண்ணத்துப்பூச்சியாக வந்த சுவாங் ட்சுவுக்குத் தான் சுவாங் ட்சு என்பது தெரியாது. திடீரென்று விழிப்பு வந்துவிட அந்த வண்ணத்துப்பூச்சி தான்தான் என்று அறிந்துகொள்கிறார். ஆனால், அவருக்கு ஒரு சிக்கல்: வண்ணத்துப்பூச்சியின் கனவில் வந்தது சுவாங் ட்சுவா அல்லது தன்னை சுவாங் ட்சுவாக எண்ணி வண்ணத்துப்பூச்சியொன்று தன்னைக் கனவுகண்டுகொண்டிருக்கிறதா?

கிட்டத்தட்ட 2,300 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கும் அதே பிரச்சினை வந்திருக்கிறது என்று சொன்னால் சுவாங் ட்சுவுக்கு உன்னை இணைவைத்துக்கொள்கிறாயா என்று பலருக்கும் கோபம் வர வாய்ப்பிருக்கிறது. அதற்காக, இந்தச் சிக்கல் எனக்கு வரவில்லை என்று நான் மறுத்துக்கொள்ள முடியுமா?

2012-ம் ஆண்டின் முற்பகுதியாக இருக்க வேண்டும். மன்னார்குடிக்கு ரயிலில் சென்றுகொண்டிருக்கிறேன். அப்போது வந்த கனவு இது. நனவில் காகத்தைப் பற்றி அதற்கு முந்தைய ஆண்டு நான் எழுதிய கவிதையைப் பற்றிய கனவு. கனவிலோ அது நிகழ்நேரத்தில் எழுதப்பட்ட கவிதையாக வருகிறது. காகம் ஒன்றோடு கொஞ்சம் கொஞ்சமாக நட்பை ஏற்படுத்திக்கொண்டு இறுதியில் அது என் கையிலிருந்து பிஸ்கெட் வாங்கிச்செல்லும் அளவுக்கு நான் நிஜத்தில் நெருங்கியதைப் பற்றிய கவிதை அது. பறவைகளிடமும் விலங்குகளிடமும் நம் அகத்தைக் காட்டி அல்ல, நம் அகத்தைச் சிறிதுசிறிதாகக் குறுக்கிக்கொண்டு, இறுதியில் முற்றிலுமாக ‘நம்’மை மறைத்துக்கொண்டால் மட்டுமே அவற்றின் நட்பை நாம் பெற முடியும். நம்மை மறைத்தால் நாம் காகமாகலாம். காகம் நாம் ஆகும். ஒரு காகம் என்னைச் சிறிதும் பொருட்படுத்தாமல், அதாவது என் இருப்பு அதற்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தாமல் என் கையிலிருந்து பிஸ்கெட்டை வாங்கிச் சென்றபோது அளவற்ற ஆனந்தத்தை உணர்ந்தேன். இதையெல்லாம்தான் அந்தக் கவிதையில் எழுதியிருந்தேன்.

துரைசிங்கம் என்னுடன் மிகவும் அன்பாகப் பழகும் ஈழத்தமிழர். காகத்தைப் பற்றி நான் நிஜத்தில் எழுதிய கவிதையை அவருக்கு நான் கனவில் அனுப்பி வைக்கிறேன். அந்தக் கவிதையைப் படித்துவிட்டு எனக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார் துரைசிங்கம். அந்தக் கனவில் அவர் எனக்கு எழுதிய கடிதத்தின் ஒவ்வொரு சொல்லும் மாறாமல் எனக்கு அப்படியே நினைவில் இருக்கிறது.


‘அன்புள்ள ஆசை, வணக்கம்! தங்கள் கவிதையைப் படித்தேன். என்ன சொல்ல? ‘கொண்டலாத்தி’ கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளைப் போல் இல்லை. அது மட்டுமல்ல, ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் கண்ணதாசன் இப்படி எழுதியிருப்பார்:

‘ஞானியர் தேடும் மதி/

மறதி’

இந்த வரிகளைத் தாண்டியொன்றும் நீங்கள் எழுதிவிடவில்லை.”

துரைசிங்கத்தின் எழுத்திலும் சரி பேச்சிலும் சரி ஈழத்தமிழின் தனித்துவம் அலாதியாக வெளிப்படும். கனவில் வந்த அவரது கடிதத்திலோ அவரது ஈழத்தமிழ் முழுக்கவும் தமிழ்நாட்டுத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைப் போல உணர்ந்தேன். அது மட்டுமல்லாமல் வழக்கமான அவரது துயரம் இழையோடும் அபாரமான நகைச்சுவையுணர்வுடன் கூடிய நலவிசாரிப்புகள் ஏதுமின்றிக் கடுமையான தொனியில் அந்தக் கடிதம் இருந்தது. அது துரைசிங்கத்துக்கு மிகவும் அந்நியமானது. ஆனாலும், என் கனவில் எனக்குக் கடிதம் எழுதியது துரைசிங்கம்தான். பிரச்சினை இதுவல்ல. ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் கண்ணதாசன் எழுதியதாக துரைசிங்கம் குறிப்பிடும் அந்த வரிகள்தான்.

 ‘தெய்வம் தந்த வீடு’ பாட்டு எனக்கு மனப்பாடமாகத் தெரியும் என்பதால் அந்தப் பாடலுக்குள் இந்த வரிகளை இட்டுத் தேடிப்பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமலே இந்த வரிகள் அந்தப் பாடலைச் சேர்ந்தவை அல்ல என்பதை என்னால் உறுதியாகக் கூறிவிட முடியும் என்றாலும் அதீத நம்பிக்கை சில சமயம் நம் முகத்துக்கு முன்பு தொங்குவதைக் கூட நம் பார்வையிலிருந்து மறைத்துவிடக்கூடும் என்பதால் ‘தெய்வம் தந்த வீடு’ பாடலை அதுவரை அறிந்தேயிராத ஒருத்தனின் மனநிலையை எனக்குள் வர வைக்க முயன்றேன். தெரியாத ஒன்றைத் தெரிந்ததாக ஆக்கிக்கொள்வது மிகவும் எளிது என்பதையும் நன்கு தெரிந்த ஒன்றைத் தெரியாததாக ஆக்கிக்கொள்வதுதான் இந்த உலகிலேயே மிகவும் கடினம் என்பதையும் அப்போதுதான் உணர்ந்துகொண்டேன். அம்னீஷியா, மரணம் போன்று ஏதும் வராமல் இதைச் செய்யவே முடியாது என்றாலும் எதற்கும் ஒரு சுருக்கு வழி இருக்குமல்லவா என்று ‘தெய்வம் தந்த வீடு’ பாடலை எனக்குத் தெரியாமல் ஆக்கும் முயற்சியில் முழு மூச்சில் ஈடுபட ஆரம்பித்தேன்.

முதலில் அந்தப் பாடல் வரிகளிலிருந்தும், ஒலிப்பேழையிலும் மனதுக்குள்ளும் ஒலிக்கும் அந்தப் பாடலின் சத்தத்திலிருந்தும் விலகி ஓடுவதன் மூலம் அந்தப் பாடல் வரிகளை மறக்க முயற்சித்தேன். எங்கு ஓட முயற்சித்தாலும் எனக்கு முன்னே அந்தப் பாடல் என் முகத்துக்குத் தன் முகத்தைக் காட்டியபடி ஓடிக்கொண்டிருந்தது. மூர்க்கமாக ஏதாவது செய்யலாம் என்று போர்ன் தளங்களுக்குச் சென்று ‘தேஸி எம்.எம்.எஸ்’, ‘தேஸி பாத்ரூம்’, ‘தேஸி நிப்பிள் ஸ்லிப்’, ‘தேஸி சிஸ்டர்’, ‘தேஸி ப்ளோஜாப்’, ‘தேஸி ஹனிமூன்’, ‘மல்லு ஹனிமூன்’, ‘ஆண்டி அண்ட் யங் பாய்’ என்று சு’தேஸி’ப் பற்று மாறாமல் ‘தேஸி’யில் என்னென்ன காமவகை, நிலை, தொகையெல்லாம் சாத்தியமோ அத்தனை சாத்தியங்களிலும் சொற்களை இட்டுத் தேடி, அந்த வீடியோக்களின் உக்கிரப் பெருமூச்சில் எல்லாவற்றையும் மறக்க வேண்டும் என்று காதில் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு உட்கார்ந்தேன். ரகசிய கேமரா இருப்பது தெரிந்தோ தெரியாமலோ, அல்லது தொழில்முறையில் தெரிந்ததைத் தெரியாதவாறு காட்டிக்கொண்டோ குளிக்கும் பெண் ஒரு பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தாள்: ‘தெய்வம் தந்த வீடு’. பஞ்சாபி பெண்ணுக்கு எப்படி ‘தெய்வம் தந்த வீடு’ தெரியும்? ஜெய்கணேஷ் ஏதோ ஒரு படத்தில் சிங் வேடத்தில் வந்திருப்பதையும் இதையும் எப்படி முடிச்சுப் போட்டுப் பார்க்க முடியும்? மல்லு ஜோடிகள் ஹனிமூனில் உச்சக்கட்டத்தை எட்டிக்கொண்டே ‘தெய்வம் தந்த வீடு’ என்கிறார்கள். ‘நிப்பிள் ஸ்லிப்’ ஆகும் ஃபேஷன் ஷோ பெண்ணும் முகத்தில் சலனமில்லாமல் ‘தெய்வம் தந்த வீடு’ என்று சொல்லிவிட்டுப் போகிறாள். நம் நாட்டுப் பெண்களாகப் பார்த்தால் அப்படித்தான் வரும்போல என்று ரஷ்யா, பிரான்ஸ் என்று தேடிப்பார்த்தேன். எல்லோரும் தெளிவாகத் தமிழ் உச்சரிப்பில், அவர்களுடைய அந்நியக் குரலிலேயே, அழகாக ‘தெய்வம் தந்த வீடு’ என்கிறார்கள். ரஷ்யா, பிரான்ஸுக்கெல்லாம் தமிழர்கள் சகஜமாகப் போய்வருகிறார்கள். ரஷ்யாவுக்குக்கூட கண்ணதாசன் எம்.எஸ்.வியுடன் போயிருக்கிறார் என்று படித்திருக்கிறேன். இன்பநாட்டத்தில் திளைத்திருந்த கண்ணதாசன் பிரான்ஸுக்கும் கட்டாயம் போயிருப்பார். ஆகவே, கண்ணதாசனோ, எம்.எஸ்.வியோ தமிழர்களோ போகாத தேசம் ஏதும் இருக்குமா என்று தேடித்தேடி போர்ன் வீடியோ பார்த்தேன். எங்கும் ‘தெய்வம் தந்த வீடு’தான். தமிழர்கள் போகாத இடமே இருக்காது போல.

சரி, போர் உத்தியை மாற்றிவிட வேண்டியதுதான். தெய்வம் தந்த வீட்டுக்கு தெய்வம் தந்த வீடுதான் மருந்தே. அதை அளவுக்கதிகமாகத் தெரிந்துகொண்டால் ஒரு கட்டத்தில் அது முற்றிலும் தெரியாமல் போகும் தருணம் வரும் அல்லவா! அந்தத் தருணத்தில் அதற்குள் ‘ஞானியர் தேடும் மதி/ மறதி’ மறைந்திருந்தால் என் கண்ணுக்கு அகப்படும் என்று நினைத்தேன். என் வீட்டின் ஒவ்வொரு அறையின் சுவரிலும் என் குளியலறைச் சுவரிலும் அந்தப் பாடல்களை எழுதி வைத்தேன். கைபேசியில் ரிங்டோனாக வைத்து என்னிடம் உள்ள இன்னொரு கைபேசி மூலம் அதற்கு அடிக்கடி அழைப்பு விடுத்தேன். அழைப்பு விடுத்த கைபேசியிலும் அதையே ரிங்டோனாக வைத்து இந்தக் கைபேசியிலிருந்து அதை அழைத்தேன். வீட்டில், நேரத்துக்குத் தகுந்தபடி, அதிக ஒலியுடனோ மெதுவாகவோ ‘தெய்வம் தந்த வீ’ட்டை எப்போதுமே ஒலிக்க விட்டேன். சில ஆன்மிகக் குழுக்களைச் சேர்ந்தவர்களைத் தொலைபேசியில் அழைக்கும்போது ‘வாழ்க வளமுடன்’ என்று கூறிய பிறகே அவர்கள் நம்முடனான உரையாடலைத் தொடங்குவதுபோல் நானும் எனக்குக் கைபேசியில் வரும் அழைப்புகளை ‘தெய்வம் தந்த வீடு’ சொல்லி உரையாடல்களை ஆரம்பித்தேன். இறுதியில் எனக்கு நிகழ வேண்டியது மற்றவர்களுக்கு நிகழ்ந்தது. எல்லோருக்கும் என் பெயர் மறந்துபோய் என்னை ‘தெய்வம் தந்த வீடு’ என்றே அழைக்க ஆரம்பித்தார்கள்.

ம்கூம்! முந்தைய உத்தியைவிட மோசமானது மட்டுமல்லாமல், ஆபத்தானதாகவும் அமைந்துவிட்டது இது. மனநலக் காப்பகத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கப்படுவதற்கு முன்பு விழித்துக்கொண்டு எல்லாவற்றையும் நிறுத்திக்கொண்டேன். மெதுமெதுவாக, ‘தெய்வம் தந்த வீடு’ உச்சாடனத்தைக் குறைத்துக்கொண்டே வந்தேன். சூழவும் அதன் தரிசனம், சப்தம், வாசனை, ஸ்பரிஸம், சுவை முற்றிலும் குறைந்துபோய் தற்போது மூளையில் போடப்பட்ட தையலாக ஒரு ஓரத்தில் போய் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் ‘தெய்வம் தந்த வீடு’ உட்கார்ந்துகொண்டது.

தெய்வம் தந்த வீட்டைத் தேடுவதை விட்டுவிட்டு ‘ஞானியர் தேடும் மதி/ மறதி’யைத் தேட ஆரம்பித்தேன். தெய்வம் தந்த வீட்டு வெறியால் நான் பட்ட சிரமங்களையெல்லாம் மறக்க முடியாது என்பதால் ‘ஞானியர் தேடும் மதி/ மறதி’யை நிதானமாகத் தேட ஆரம்பித்தேன். கூகுள், நண்பர்கள் என்று இரண்டே தெரிவுகள். இரண்டு பேரிடமும் என் கனவில் வந்த வரிகள் என்று நான் சொல்லவில்லை. ‘ஞானியர் தேடும் மதி/ மறதி’ யாருடைய வரிகள் என்று மட்டும் கேட்டேன். கூகுள், ‘ஞானியர்’, ‘தேடும்’, ‘மதி’, ‘மறதி’ என்ற தனித்தனிச் சொற்களையும் இந்தச் சொற்களின் சாத்தியமாகும் சேர்க்கைகளையும் சேர்த்து 56 முடிவுகளை மட்டுமே காட்டியது. நண்பர்களோ கையை மட்டும் விரித்துக் காட்டினார்கள். நான் அதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டதை அவர்களால் அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை (கூகுளாலும்தான்). பார்க்கும்போதெல்லாம், ஒரு விரலால் நெற்றியைத் தேய்த்தபடி, அல்லது தலையைச் சொறிந்தபடி ‘ஞானியர் தேடும்…’ என்று ஆரம்பித்துவிடுவார்கள். கைபேசியில் என்னிடம் வேறு ஏதாவது பேசும்போதுகூட இடையில், “மச்சான், நீ சொன்னியே அந்தக் கவிதை, அது ஏதோ பண்ணுதுடா. அதுல ஏதோ இருக்கு. நானும் யோசிச்சு யோசிச்சுப் பார்த்துட்டேன் எங்கேயும் கண்டுபிடிக்க முடியலை. அதுக்கு என்ன மச்சான் அர்த்தம்?” என்று கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். இதுகூட பரவாயில்லை. துரைசிங்கம் சொல்லித்தான் நான் தெய்வம் தந்த வீட்டைப் பிடித்துத் தொங்க ஆரம்பித்தேன். என் நண்பர்களில் ஒருவனோ அவனாகவே ‘ஞானியர் தேடும் மதி/ மறதி’க்கும் தெய்வம் தந்த வீட்டுக்கும் ஏதோவொரு ஒற்றுமையைக் கண்டுபிடித்து அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பப் பாடியும் கேட்டும்கொண்டிருந்தவன் ஒருமுறை கைபேசியில் நான் அழைத்தபோது ‘தெய்வம் தந்த வீடு’ என்று கூறிவிட்டு “சொல்லு மச்சான்…” என்றான். அதற்குப் பிறகு அவன் எண்ணை என்னுடைய கைபேசியில் தடுத்துவைத்தேன். அவனைப் பார்ப்பதையும் தவிர்த்துவிட்டேன். ‘நாயி கடைசியாக தெய்வம் தந்த வீட்டை மறப்பதற்கு எக்ஸ்.என்.டபிள் எக்ஸின் துணையையும் எக்ஸ்.வீடியோஸின் துணையையும் தேடிப் போகட்டுமே’ என்று விட்டுவிட்டேன்.

நண்பர்கள் இப்படியென்றால் கூகுள் வேறுவிதம். ஈஷா யோகா, ராம்தேவின் பதஞ்சலி யோகா, ஸ்ரீலஸ்ரீ ரவிஷங்கரின் ‘வாழும் கலை’, பிரம்மகுமாரிகளின் தியான வகுப்புகள் என்று ஆரம்பித்து ‘மதி’ ஃபர்னிச்சர், ‘மதி’ செக்ஸாலஜிஸ்ட் என்று என் கைபேசியில் விளம்பரங்கள் அனுப்பியும் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று நான் போகும் திசையெங்கும் விளம்பரங்களைக் காட்டியும் என்னை இம்சிக்க ஆரம்பித்தது. ‘நீங்கள் மறதிப் பேர்வழியா? அப்படியென்றால் பதஞ்சலியின் வல்லாரை லேகியம் சாப்பிடுங்கள்’ என்று என் கைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததுதான் உச்சம்.

அதை விடுங்கள். இப்போது என் முன்னே, அதனால் உங்கள் முன்னே என்றும் சொல்லலாம், மொத்தம் மூன்று கேள்விகள். 1. ‘ஞானியர் தேடும் மதி/ மறதி’ வரிகள் கண்ணதாசன் எழுதியவையா? 2. துரைசிங்கம் எழுதியவையா? 3. நான் எழுதியவையா? கூடுதலாக, கனவையும் ஒரு நபராகக் கற்பனைச் செய்துபார்க்கலாமா என்று எனக்குத் தோன்றுகிறது. எது எப்படியோ, கண்ணதாசன், துரைசிங்கம், காகம், என்னை வைத்துக் கனவு ஒரு விளையாட்டு விளையாடியிருக்கிறது. இறந்துபோனாலும் கண்ணதாசனாலும், இது தெரியாமல் இருந்தாலும் துரைசிங்கத்தாலும், பறந்துபோக முடிந்தாலும் காகத்தாலும், கனவைப் போல இவை யாவற்றையும் அறிந்துவைத்திருந்தாலும் என்னாலும் இந்த விளையாட்டிலிருந்து விடுபட முடியுமா என்று தெரியவில்லை.

சுவாங் ட்சுவைப் படிக்கவில்லையென்றால்கூட எனக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்காது. இந்தக் கனவு வந்த பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் சுவாங் ட்சுவின் கனவைப் படித்தேன். ஞானி என்றாலும்கூட நமக்கு இணையாக, அவரும் வகையாக மாட்டிக்கொண்டிருக்கிறார், வண்ணத்துப்பூச்சியின் கனவில் சுவாங் ட்சுவாகவோ, சுவாங் ட்சுவின் கனவில் வண்ணத்துப்பூச்சியாகவோ, தன்னை வண்ணத்துப்பூச்சியாகவோ சுவாங் ட்சுவாகவோ எதுவாகவோ அறிந்திராத எதுவாகவோ. 

    -ஆசை

      - (2018ல் எழுதிய சிறுகதை முதன்முதலாக இங்கே வெளியாகிறது)



Wednesday, January 17, 2024

பேஸிவ் ஸ்மோக்கிங் நாய்கள்*



பேஸிவ் ஸ்மோக்கிங் நாய்களைப் பற்றி
முதன்முறையாகக்
கவலை கொண்டபோது
சம்பந்தமே இல்லாமல்
ஆன்மா பற்றிய
நினைப்பு
அவனுக்கு
தன் முன்னே கிடக்கும்
பேஸிவ் ஸ்மோக்கிங் நாய்க்கும்
தனக்கும் இடையிலான
எட்ட முடியாத ஒரு தொலைவு
ஆன்மாவுக்கும் தனக்கும்
இருப்பதால்
அப்படி நினைப்பு
ஆனால்
நாய் இருக்கிறது
ஆன்மா இருக்கிறதா இல்லையா
என்பது தெரியாது
அவனுக்கு
அப்படியென்றால்
இல்லாத இடத்திலிருந்து
இருக்கும் இடம் வரையிலான
தொலைவை
அளப்பது போன்றுதான்
இந்த ஒப்பீடே
அர்த்தமற்ற
இந்தத் தொடர் அளத்தலில்
அவன் அலுத்தும் களைத்தும்
போய்விட்டான்
ஆன்மா இருக்கிறதா
இல்லையா என்பதை
அறிந்தாக வேண்டும்
அதற்காகத்தான்
எலிவளைக்குள் செலுத்துவதுபோல்
இவ்வளவு புகை
ஆன்மா இருந்தால்
மூச்சுத் திணறி
வெளியே வந்து
ஓடட்டும்
வரமுடியாது போனால்
உள்ளேயே செத்து
அழுகிக் கிடந்து நாறட்டும்
ஆன்மா
இல்லவே இல்லை என்றால்கூட
பரவாயில்லை
வெற்றிடத்தைப் புகைபோட்டுப்
பழுக்க வைத்தவன் என்ற பெயர்
தனக்குக் கிட்டட்டும் என்று
தொடர்ந்து
புகைபோடுகிறான்
-ஆசை
*புகைப்பிடித்தல் மனிதர்க்கும் நாய்க்கும் கேடு தரும் (ஆன்மாவுக்கு என்ன தரும் என்று தெரியாது)

Tuesday, January 16, 2024

வாழ்த்துகள்! நன்றி! வேண்டுகோள்!

 


நவீனக் கவிதைகளுக்குப் பொது வெளியில் இதுபோன்ற முன்னெடுப்புகள் சமீப காலமாக செய்யப்பட்டுவருவது மிகவும் வரவேற்புக்குரியது. கலந்துகொள்ளும் அத்தனை கவிஞர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துகள். 

நவீனக் கவிதைக்கு  உள்ளே நான் வரும்போது காலச்சுவட்டில்தான் என் முதல் கவிதை வெளியானது. அதற்கு மனுஷ்ய புத்திரன் பிரதான காரணம். அந்தக் கவிதை வெளியாகி இந்த ஆண்டுடன் 25ஆம் ஆண்டு. அப்போதிலிருந்து இதுவரை எந்தக் கவியரங்கத்துக்கும் நான்  அழைக்கப்படாததும் ஒரு சாதனை. நூறு கவிஞர்களின் கவியரங்கமாக இருந்தாலும் சரி, லட்சம் கவிஞர்களின் கவியரங்கமாக இருந்தாலும் சரி. முன்பெல்லாம் இதை ஒரு வகை இலக்கியத் தீண்டாமையோ என்று நினைத்தது உண்டு. தாங்கள் ஒதுக்கப்படுகிறோம், புறக்கணிக்கப்படுகிறோம், தமக்கெதிராக சதி வேலை நடக்கின்றது என்று புலம்பும் பலரும் தங்களுக்கு இடமும் வாய்ப்பும் கிடைக்கும் போதெல்லாம் எப்படியெல்லாம் நடந்துகொள்வார்கள் என்பதில் ரகசியம் ஏதுமில்லை. 

போன ஆண்டு நடந்த கவியரங்கத்தின் போது நண்பர் ஒருவர் என் கைபேசி எண்ணுக்கு அழைத்து வருத்தப்பட்டார். அவரவருக்கு ஒரு ரசனை, அவரவருக்கு ஒரு தெரிவு இருக்கும். இதில் வருத்தப்பட ஏதுமில்லை என்றேன். ஆனால் இந்த Benefit of the doubtஐ நாம் மற்றவருக்கு வழங்க மாட்டோம். என்னை யாரும் எந்தக் கவியரங்கத்துக்கும் அழைத்ததில்லை. ஒருவேளை என் கவிதைகள் நன்றாக இல்லாமல் இருக்கலாம், அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அவ்வளவுதான்.

இதுவரை அழைக்காதவர்களுக்கு உண்மையில் மனமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன். இனிமேலும் அப்படி அழைக்கவே வேண்டாம் என்றும் மனதார வேண்டுகோள் விடுக்கிறேன். 

சமீபத்திய எனது பதிவொன்றுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறிய ஜீரோ டிகிரி காயத்ரி 'cause some hurricanes' என்று கூறினார்.  அதை நான் பிரேக்கிங் பேட் பாணியில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்:  'I will not cause any hurricanes. I'll be the hurricane. If that is not possible I'll not put on any airs❤❤❤'

ஒப்பந்தம் அல்லது இடைவெளி வளர்ப்பு


எனக்கொரு
பிளாஸ்டிக் நாற்காலி
தேவைப்படுகிறது
ஒருவர்
அதில் உட்கார்ந்து
தம்மடித்துக்கொண்டிருக்கிறார்
முடித்ததும்
எழுகிறார்
போய்
உட்கார்ந்துகொள்கிறேன்
எழுந்தவர்
டீ வாங்கிக்கொண்டு
திரும்பிப் பார்க்கிறார்
பின்
சிறு நிம்மதியின்மை வெளிப்பட
டீக்குடிக்கிறார்
நின்றபடி
சற்று நேரம்
ஓரிடத்தில்
இருந்தால்கூட
அதனுடன்
உருவாகிவிடுகிறது
ஓர் ஒப்பந்தம்
அதனை
நான் மீறிவிட்டேன்
மீறுபவர்களைப்
பொறுத்தவரை
இருப்பதெல்லாம்
இடைவெளி
அப்படித்தான்
இவ்வளவு பெரிய
பிரபஞ்சத்தில்
வந்து
உட்கார்ந்துகொண்டுவிட்டேன்
என்
இடைவெளியை
எதுவரை
நிறைப்பது
என்று தெரியாமல்
-ஆசை

Monday, January 15, 2024

ஒளிசெய் கோ


ஓவியம்: வான்கா

குடும்பத் தலைவனுக்கு முதல் வணக்கத்துடன் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துகள்!
**

ஒளிசெய் கோவே
ஒளிசெய் கோவே
நீ வடித்த ஒளி
குடித்த விழி
உனைப் பொற்கலமாக்கும்

விழிசெய் கோவே
விழிசெய் கோவே
உன் பொற்கலமிட்டு
தகிப்புச் சுடர்
கலந்தினிக்குமொரு
மதுவாக்கு எனை
எனையருந்தியொரு
மொழி பிறக்கட்டும்

மொழிசெய் கோவே 
மொழிசெய் கோவே
நாவிலிட்ட தீத்துண்டமுனைத்
தாளாமல் நா தத்தளிக்க
அத்தத்தளிப்பில்
நீ தாவித் தாளமிட
தோன்றுமொரு 
மொழி தா என் கவிக்கு

கவிசெய் கோவே
கவிசெய் கோவே
உன்செஞ்சுடர்
தடவிக்கொடுக்க
ஆசையுற்று
தணல்கொண்டு
தடுமாறித் தலைவிரித்தாடும்
செம்மேகமாக்கு என்கவியை
எரியும் அம்மேகத்திடையிருந்தே
எப்போதும்
எட்டிப்பார்
என்கவியில்
       -ஆசை, குவாண்டம் செல்ஃபி (2021) கவிதைத் தொகுப்பிலிருந்து...

Sunday, January 14, 2024

தட்டொளி உடைந்த மார்கழி

 

மார்கழியின்
கடைசி நாளன்று
மன்னார்குடி வந்திருக்கிறேன்
பிராயத்தில்
தவறவிட்ட
மார்கழிப் பெண்டிரை
அவர்தம்
கோலப்பொடி கையுடனும்
தாவணிகளுடனும்
காலடிவிரி
கோலங்களுடனும்
காண வந்திருக்கிறேன்
ராஜகோபாலசுவாமியின்
திருவில்லம்சூழ்
நான்கு திருவீதிகளிலும்
தெப்பக்குளத்தின்
நான்கு கரைகளிலும்
அக்கிரகாரங்கள்
ஆவிகளாய்த்
திரிந்துகொண்டிருக்கும்
அனைத்து வீதிகளிலும்
அலைந்து திரிந்து
பார்த்துவிட்டேன்
திரைமூடிய
மார்கழித் தரையில்
புள்ளிகளாய்
முன்பு தோன்றிய
கோதைகள்
எங்கே
அவர்தம்
பூசணிப்பூம் பாதமெங்கே
பூசணிப்பூக்களைச்
சூழ்ந்து கோலமாக்கும்
மார்கழியின் கூவுகுயில்கள்
எங்கே
பங்குனியில் நின்றுகொண்டு
இன்னும் மார்கழியில்
கோலம் போடும்
பேரிளம்பெண்டிரே
நான் இப்போது
மாசியில் நிற்கிறேன்
மன்னார்குடி
அங்கேதான் இருக்கிறது
திருவீதிகளும்
அங்கேதான்
இருக்கின்றன
மார்கழிப் பெண்டிரும்
அங்கேதான்
இருக்கிறார்கள்
மார்கழியும்
அங்கேதான்
இருக்கிறது
ஆனால்
அது எப்போதும்
ஒரே மார்கழியாக
இருப்பதில்லை
அதுதான்
அவர்களைப்
பங்குனியிலும்
என்னை மாசியிலும்
கொண்டுவந்து நிறுத்தி
அதனை வேடிக்கை
பார்க்க வைத்திருக்கிறது.
-ஆசை

Thursday, January 11, 2024

கமல், ஸ்டேன்லி கூப்ரிக்கை என்ன செய்தீர்கள்?

 

(குறுநாவலின் தொடக்கப் பகுதி)

ஆசை

(இப்படைப்பு முழுவதும் கற்பனையே. ஆனால் யாருடைய கற்பனை என்பது தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்தான் இந்தப் படைப்பு தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறது. இறுதியில் படைப்பும் அதன் பார்வையாளர்களும் சேர்ந்து இது யாருடைய கற்பனை என்று கண்டுபிடித்தால் மகிழ்ச்சியே. கமல், சத்யராஜ், வாகை சந்திரசேகர், நிக்கி கல்ரானி, ஜெய் மற்றும் ஸ்டேன்லி கூப்ரிக் ஆகியோரின் ரசிகர்கள் மனம் புண்படும் என்றால் அவர்களிடம் இந்தப் படைப்பு, மனமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.)

**

நடிப்பு: பத்மஸ்ரீ கமல்ஹாசன் (அப்போது உலக நாயகன் பட்டம் தரப்படவில்லை), சத்யராஜ், வாகை சந்திரசேகர், ஜெய், நிக்கி கல்ரானி இவர்களுடன் நானும் நீங்களும்.

கதை-திரைக்கதை-வசனம்: ஸ்டேன்லி கூப்ரிக், கமல்ஹாசன், நானும் நீங்களும்

இயக்கம் – முதல் அத்தியாயத்தின் முடிவில் தெரிந்துகொள்வீர்கள்   

குறிப்பு: இத்திரைப்படம் மன்னார்குடி சத்யா திரையரங்கில் மட்டுமே தினமும் இரவு ஒரு மணிக்குத் திரையிடப்படும்

**

1.

சைக்கிளை விட்டு இறங்காமல் ஒற்றைக்காலை ஊன்றிக்கொண்டு  “கோபாலகிருஷ்ணன்” என்றான் பிரகாஷ்.

நானும் “கோபாலகிருஷ்ணன்” என்றேன். சங்கேதம் ஒப்புக்கொள்ளப்பட்டது.

“ஆனா இன்னைக்கு ரொம்ப ரொம்ப வேற விஷயம் அப்படின்னாரு சண்முகம் அண்ணே” என்றான். 

அவ்வளவு தூரம் சைக்கிள் மிதித்து வந்ததில் இன்னும் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது அவனுக்கு.

“சரி நீ போ. நான் வந்துடுறேன்.”

சண்முகம் அண்ணன் சத்யா திரையரங்கின் உரிமையாளர். எங்களைப் போல கமல் ரசிகர். மன்னார்குடியில் நாங்கள் மூன்று பேர் மட்டும்தான் கமல் ரசிகர்கள். அதிலும் அதிதீவிர ரசிகர்கள். அது வெளியே. உள்ளுக்குள் நாங்கள் கமலின் ரகசிய சங்கத்தினர். ஓடுமோ ஓடாதோ என்ற கவலையின்றி கமலின் எல்லாப் படங்களையும் அவர் தன் திரையரங்கில் திரையிடுவார். இரண்டாவது, மூன்றாவது ரிலீஸ்களும் உண்டு. அவையெல்லாம், சகலகலா வல்லவன், அபூர்வ சகோதரர்கள் மாதிரி நன்றாக ஓடிய படங்கள். அதிலெல்லாம் எங்களுக்கு ஈடுபாடு இல்லை. நான் பிறக்கும் முன்னே வந்த படங்கள், முதல் வெளியீட்டிலும் ஓடாத ஆனால் நல்ல படங்கள், பிற மொழியில் கமல் நடித்த நல்ல படங்கள் போன்றவற்றை நாங்கள் இரண்டாம் ஆட்டம் முடிந்து ஒரு மணிக்குப் போட்டுப் பார்ப்போம். இது மாதிரி மாதத்துக்கு ஒரு தடவையாவது ஏதாவது ஒன்று நடக்கும். இதெல்லாம்கூட ‘அதிதீவிர’ என்ற பதத்துக்குள் நாங்கள் சேர்க்க மாட்டோம். 

அது வேறு விஷயம். ஆம்! எங்களைப் போல் தமிழ்நாடு முழுவதும் கமலின் ரகசிய சங்கத்தினர் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எங்களுக்கு ஏதாவது ஒரு பொக்கிஷத்தைக் கொண்டுவருவார்கள். அது கமலின் கைவிடப்பட்ட படத்தின் திருடப்பட்ட ஃபிலிம் சுருள்களாக இருக்கலாம். படத்திலிருந்து நீக்கிய காட்சிகளாக இருக்கலாம். பட உருவாக்கத்தின்போது யாரோ ரகசியமாக எடுத்த வீடியோவாக இருக்கலாம். இதில் எனக்குப் புரியாத விஷயம் என்னெவென்றால் கொஞ்சம் எடுக்கப்பட்டுக் கைவிடப்பட்ட கமலின் வெளிவராத படங்களின் படச்சுருள் நெகட்டிவாகத்தானே இருக்கும். அதை எப்படி புராசஸ் செய்தார்கள்? ஜெமினி லேப், விஜயா லேப் போன்றவற்றில் இதெல்லாம் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை பிற மாநிலங்களில் புராசஸ் செய்தபின் இங்கே வந்திருக்குமோ என்று நினைத்துக்கொள்வேன். நாங்கள் செய்வது ஒரு வகையில் சட்டத்துக்குப் புறம்பான வேலை என்பதால் இதைப் பற்றியெல்லாம் வெளியில் சொல்வதில்லை. சண்முகம் அண்ணன்தான் ஆப்பரேட்டர். அதிகம் ஆப்பரேட்டர் அறையில் இருந்தே பார்ப்போம். சற்றே நீளமான படம் என்றால் திரையரங்கில் அமர்ந்து பார்ப்போம்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் தொடங்கப்பட்ட ‘டாப் டக்கர்’, ருத்ரையாவின் ‘ராஜா என்னை மன்னித்துவிடு’ போன்ற படங்களின் காட்சிகளைப் பார்த்தபோது எங்களைவிட அதிகப் பரவசம் அடைந்தவர் சண்முகம் அண்ணன். இருக்காதா, அந்தப் படங்கள் அறிவிக்கப்பட்ட காலத்தில் ஒரு இளைஞராக, கமல் ரசிகராக எவ்வளவு ஆர்வத்துடன் இருந்திருப்பார். அந்தப் படங்கள் கைவிடப்பட்ட பின்னும் வரும் வரும் என்று எவ்வளவு எதிர்பார்ப்புடன் இருந்திருப்பார். வரவே வராது என்று ஆன பின் அவற்றின் முடிவுபெறாத வடிவமாவது கிடைக்கிறதே என்பது எத்தகைய உணர்ச்சியை அவருக்குள் ஏற்படுத்தியிருக்கும் என்பதை கடந்த சில மாதங்களாக மருதநாயகம் குறித்து நான் கொள்ளும் கவலைகளின் பின்னணியில் புரிந்துகொள்ள முடிகிறது.

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒரே ஒரு முறைதான் பிரகாஷை அடிக்கப் போய்விட்டார். 

“அண்ணே, எனக்கு ஒரே ஒரு ஆசைண்ணே. கமலுக்கும் ….க்கும் ஒரு வீடியோ இருக்குன்னு நெறைய பேரு பேசிக்கிறாங்க. அதை மட்டும் பார்த்துடணும்” என்று பிரகாஷ் கேட்டுவிட்டான். நான் குறுக்கே போய்ப் பாய்ந்து தடுக்காவிட்டால் அன்று அவனுக்கு உண்மையில் முதுகு பிளந்திருக்கும். அது மட்டுமல்ல, எங்கள் ரகசியச் சங்கத்தின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்திருக்கும். அல்லது, சண்முகம் அண்ணன் மட்டுமே ஒற்றை உறுப்பினராகத் தொடர்ந்திருப்பார்.

அவர் அடங்கிச் சற்று ஓய்ந்திருந்தபோது மெல்லிய குரலில் பிரகாஷ் மன்னிப்பு கேட்டுவிட்டுச் சொன்னான், “அதில்லண்ணே, காதல் காட்சிகள்லயே ரெண்டு பேருக்கும் இடையில அவ்வளவு லவ்வு தெரிஞ்சிதுண்ணே. உலகத்துலேயே அழகான அந்த ரெண்டு பேரும் உடம்பால இணையிற சமயத்துல அவங்க இன்னும் எவ்வளவு அழகா இருப்பாங்க. அதுவும் நடிப்பை மறந்து. அதுக்காகத்தான் அப்படிச் சொன்னேண்ணன். எனக்கு அந்த மாதிரி படங்கள்லாம் பாக்குறதுன்னா பாக்யா தியேட்டருக்குப் போக மாட்டேனா” என்று அவன் சொன்னதும் முடிந்தது கதை என்று நினைத்தேன். அவரோ குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். “அய்யோக்கியப் பயலே” என்று வி.கே.ராமசாமி மாதிரி சொல்லிவிட்டு அவன் முதுகில் ஒரு அடி கொடுத்தார். அப்பாடா சங்கம் தப்பித்தது என்ற நிம்மதி எனக்கு.

இன்றைக்கு ‘ரொம்ப ரொம்ப வேற விஷயம்’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறாரே என்னவாக இருக்கும். ‘ஹே ராம்’ படம் வருவதற்கு இன்னும் ஒரு வருஷமாவது ஆகிவிடும். எல்.சுப்பிரமணியத்தை நீக்கிவிட்டு இளையராஜாவைப் போடப்போகிறார்கள் என்று வேறு கேள்விப்பட்டேன். அண்ணன் ’ரொம்ப ரொம்ப’ என்று சொல்லி அனுப்பினால் ரொம்ப ரொம்ப வேறு விஷயமாகத்தான் இருக்கும் என்று சில முறை கண்டிருக்கிறேன். 

பன்னிரண்டு மணிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.  


2. 

“இன்னைக்கு என்ன போடப் போறோம்னு நான் சொல்லப் போறதில்லை. ஏன்னா எனக்கே இன்னும் தெரியாது. ரீலை ஒரு மணிக்கு ஓட விடப் போறப்பதான் எனக்கும் தெரியும். அப்புறம் எனக்கு ரீலைக் கொடுத்தவங்க ரொம்ப ரொம்பக் கண்டிப்பா சொன்ன விஷயம் இந்த ரகசியத்தை சாகிற வரைக்கும் காக்கணும்ங்கிறதுதான். நமக்கு மட்டும் முதல் தடவையா தரப்பட்டிருக்குன்னு சொன்னாங்க” என்றார் சண்முகம் அண்ணன்.

“சரிண்ணேன்” என்று ஆப்பரேட்டர் அறையிலேயே நாற்காலியை இழுத்துப் போடப்போன என்னைப் பார்த்து “ம்கூம், ரெண்டு பேரும் உள்ளே போங்க” என்றார். அது வழக்கத்துக்கு மாறாக ஒரு ஆணை மாதிரி இருந்தது.

அரங்கத்தின் கதவைத் திறந்துவிட்டு ஒவ்வொரு படியாக இறங்கிக்கொண்டிருந்தோம். ஆனால், எனக்கென்னவோ ஏறிக்கொண்டிருப்பதுபோலவே ஒரு உணர்வு ஏற்பட்டது. பிரகாஷ் முகம் எப்படி இருக்கிறது என்பதும் இருட்டில் தெரியவில்லை. படத்தின் ஒளி வருவதற்கான பொந்து வழியாகக் குரல் வந்தது:

“வழக்கமா ஒக்கார்ற இடம் வேண்டாம். நட்ட நடுவுல உக்காருங்க”

அவர் சொன்னபடியே உட்கார்ந்தோம். எங்கள் மூச்சு சீராகும்வரை காத்திருந்தாற்போல் திரையில் ஒலி விழ ஆரம்பித்தது. 

“நான் வணக்கம் சொல்லப்போறதில்லை, நன்றிதான் சொல்லப்போறேன். ஏன்னா நீங்க பார்க்கப் போறது ஒரு படத்தோட கிளைமாக்ஸ்.” 

தலைவரின் குரல்.

அதனைத் தொடர்ந்து ஒளியும் திரையில் விழ ஆரம்பித்தது. எந்த எழுத்தும் இல்லை. இரவு தொடங்கும் நேரம் போல் இருக்கிறது. ஒரு பணக்கார வீட்டின் திறந்த வெளியில் ஏதோ விருந்து தொடங்கவிருக்கிறது. மிக மிக நீளமான அலுமினிய பெஞ்சில் வரிசையாக பஃபே போன்ற விருந்துக்காகப் பாத்திரங்களில் உணவு வைக்கப்பட்டிருக்கிறது.

பணக்காரத் தந்தை சத்தியராஜ் வருகிறார். (ஆ, மருதநாயகத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் இதில் எப்படி?) உணவுப் பாத்திரங்களை ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்கிறார். ஓரமாக நிற்கும் மாப்பிள்ளை வீட்டாரை இளக்காரமாகப் பார்த்துவிட்டு, 

“செய்வினையெல்லாம் செய்ய வக்கு இல்லதான். ஆனா அதுக்காக சும்மாவா வேடிக்கை பார்ப்பீங்க” என்கிறார்.

பதறிப்போன மாப்பிள்ளையின் தாயும் தந்தையும் (அப்படித்தான் இருக்க வேண்டும்) ஒரு பாத்திரத்தை ஒன்றாகத் தொடப்போக, அந்த நவீன வடிவமைப்பு கொண்ட அலுமினிய பெஞ்சில் அது வழுக்கிக்கொண்டுபோய் மறுமுனையைத் தாண்டிக் கீழே விழுந்து அதிலிருந்து ரசம் சிதறுகிறது. சத்தியராஜ் மறுபடியும் அவர்களை இளக்காரமாகப் பார்ப்பதற்குள் காட்சி மாறுகிறது. 

இரவுதான். அன்றைய இரவா, பல ஆண்டுகளுக்கு முந்தைய இரவா, பல ஆண்டுகள் கழித்து வரப்போகும் இரவா என்பதற்கெல்லாம் எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், நீச்சல் குளத்திலிருந்து நீச்சல் உடையுடன் வெளிப்பட்டு நிக்கி கல்ரானி அழுதபடி, உடலில் நீர்ச் சொட்டச் சொட்ட ஓடுகிறார். அவர் பின்னாலேயே நீச்சல் குளத்திலிருந்து அப்பா சத்யராஜும் வெளிப்பட்டு மெதுவாக நிக்கி கல்ரானியைப் பின்தொடர்கிறார். எப்போதும் நீந்திக் குளித்தபின் அங்கிபோல் அணியும் தூவாலை உடையை நீச்சல் குளத்திலிருந்து வெளிப்படும்போதே சத்யராஜ் அணிந்திருந்தார். காட்சி அங்கே வெட்டப்படுகிறது. மாப்பிள்ளைக் கோலத்தில் ஜெய் பிணமாகப் படுத்திருந்தார். (இந்தக் காட்சிக்கு கமலை வசனம் எழுதச் சொன்னால் ‘மாப்பிள்ளைக் கோலத்தில் பிணம் படுத்திருந்ததா, இல்லை பிணக் கோலத்தில் மாப்பிள்ளை படுத்திருந்தாரா’ என்று நிச்சயம் எழுதியிருப்பார்).        

ஜெய்க்கு அருகில் வாகை சந்திரசேகர் போலீஸ் உடையில், கூடவே மழை கோட்டு போல ஏதோ ஒன்றையும் அணிந்திருந்தார். கமலும் அதே மாதிரி ஆடைகளை அணிந்தபடி புரியாத மாதிரி சன்னமான குரலில் ஏதோ வசனம் பேசுகிறார். பிறகு விசிலடிக்க ஆரம்பிக்கிறார். 

அது ‘உன்னையறிந்தால் உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்’ பாடல். விசிலடித்துக்கொண்டே கமல் கேமரா நோக்கி வருகிறார். பின்னால் வாகை சந்திரசேகர் ஜெய்யின் மேலே உட்கார்ந்துகொண்டு தலையை ஆட்டிக்கொண்டு காலை இரண்டு பக்கமும் ஆட்டுகிறார். பாட்டின் தாளத்துக்கு ஏற்ப கமல் இன்னும் கேமரா நோக்கி நெருங்கி வருகிறார்.

பின்னால் வாகை சந்திரசேகர் தொடர்ந்து இன்னும் தலையையும் காலையும் ஆட்டிக்கொண்டிருப்பது தெரிகிறது. ஜெய் திடீரென்று கார் ஆகிறார். வாகை தொடர்ந்து கால் ஆட்டுகிறார். கமல் பாடிக்கொண்டே இருக்கிறார். படம் முடிந்துவிடுகிறது.

என்ன இது? என்ன பார்த்தோம்? இதுவரை இப்படி ஒன்றைப் பார்த்ததே இல்லையே? எப்படி அர்த்தப்படுத்திக்கொள்வது? கருமாந்திரத்தை எடுத்துவைத்திருக்கிறாரா, இல்லை அபத்தத்தை அபத்தமாகவே கலைப்படுத்தியிருக்கிறாரா? யாரோ ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஏன் நிக்கி கல்ரானி என்ற பெயர் எனக்குத் தோன்றியது? பிணமாகக் கிடக்கும் அந்த நடிகரின் பெயர் ஜெய் என்று எனக்கு எப்படித் தோன்றியது? 

“கமல் கனவில் படம் எடுத்தால்கூட இப்படித்தான் எடுப்பார் போல” என்று நினைத்துக்கொண்டு பக்கத்தில் பிரகாஷைத் தேடினேன். அவனைக் காணவில்லை. அவன் அப்போதே போய்விட்டான் போல.

சண்முகம் அண்ணனிடம்கூட சொல்லாமல் எழுந்து, திக்பிரமையிலிருந்து விடுபடாமலேயே வெளியே வந்தேன். சைக்கிளில் ஏறியபோது திரையரங்குக்கு வெளியே ஓரத்தில் மிகவும் விலையுயர்ந்த கார் ஒன்று நிற்பது தெரிந்தது. காருக்குள் சிறு செவ்வக வடிவத்தில் மங்கலான வெளிச்சம் ஒரு ஜோடிக் கண்களின் மீது விழுந்திருந்தது. அந்தக் கண்கள் அங்கிருந்தே என்னைப் பின்தொடர்வது தெரிந்தது. எங்கேயோ பார்த்த கண்கள்.

3.

மறுநாளும் பிரகாஷ் வந்தான். இம்முறையும் “கோபாலகிருஷ்ணன்” என்றான்.

அடுத்தடுத்த நாட்களில் இப்படி நிகழ்ந்ததில்லையே என்ற குழப்பத்துடன் அவனிடம் இது குறித்துக் கேட்பதற்கு வாயைத் திறப்பதற்கு முன் தன் வாய் மேல் ஆட்காட்டி விரலை வைத்து எச்சரித்துவிட்டு மறுபடியும் “கோபாலகிருஷ்ணன்” என்றான். நானும் “கோபாலகிருஷ்ணன்” என்றேன். சங்கேதம் ஒப்புக்கொள்ளப்பட்டது. “இன்னும் ரொம்ப ரொம்ப வேற மாதிரி” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

பன்னிரண்டரை மணிக்குத் திரையரங்க வாசலில் எனக்காக பிரகாஷ் காத்திருந்தான். நேற்று போலவே அதே மாதிரியான சடங்குகள். இருட்டுக்குள் நடுவாந்திரமாகப் போய் உட்கார்ந்ததும் ஒலி தொடங்கியது. தலைவரின் அதே குரல், அதே வார்த்தைகள். அதே போன்ற காட்சிகள். ஆனால், ஜெய் பிணமாகக் கிடப்பது வரைதான் நேற்று மாதிரி. 

“கொலையா தற்கொலையா?” என்று கமல் கேட்கிறார்.

“இரண்டுக்கான அறிகுறியும் தெரியலை” என்கிறார் வாகை.

“உயிரோட இருக்கானா இல்லையா?” என்று கமல் கேட்கிறார்.

“இரண்டுக்குமான அறிகுறியும் தெரியலை” என்கிறார் வாகை.

“வாகை, யூ ரிப்பீட் யுவர்செல்ஃப். மேக் ஹிம் டு பி சம்ஒன்” என்று சொல்லிவிட்டுத் திரையின் முன்னுள்ள திசை நோக்கிக் கண்ணடிக்கிறார் கமல்.

‘நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்’ படத்தின் காட்சிப்படுத்தும் விதத்தை கமல் காப்பியடித்திருக்கிறார் என்ற நினைப்பு என்னுள் தோன்றி மறைவதற்குள்,

மாப்பிள்ளைக் கோலத்தில் பிணம் படுத்திருக்கிறதா, இல்லை பிணக் கோலத்தில் மாப்பிள்ளை படுத்திருக்கிறாரா? நோ கன்ட்ரி ஃபார் யங் மென்” என்று சொல்லிவிட்டு திரையின் முன்னுள்ள திசை நோக்கி, இல்லை என்னை நோக்கிக் கண்ணடிக்கிறார் கமல். 

“ஓ மை காட்! கமல் மைண்ட் ரீடிங் ஃபிலிம் எடுத்திருக்கிறார், அல்லது எடுத்துக்கொண்டிருக்கிறார். அதுதான் ‘ரொம்ப ரொம்ப வேற மாதிரி’ என்பதன் அர்த்தம். ஒரே ஒருவருக்காக, அல்லது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரே படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார். அதுதான் இங்கே நடந்துகொண்டிருக்கிறது. அறிவியல் வரலாற்றில், சினிமா வரலாற்றில் இதுபோன்ற ஒன்றைக் கேள்விப்பட்டதே இல்லையே. அல்லது நாம் கனவு கண்டுகொண்டிருக்கிறோமா? திரும்பிப் பக்கத்தில் பார்த்தால் பிரகாஷை இன்றும் காணோம்.

கமல் விசிலடிக்க ஆரம்பிக்கும்போதே எழுந்து ஆப்பரேட்டர் அறைக்குச் செல்கிறேன். அங்கே சண்முகம் அண்ணன் நக்கலா முறைப்பா என்று சொல்ல முடியாத ஒரு பார்வையுடன் என்னைப் பார்த்தபடி நிற்கிறார். 

“படத்தை நிப்பாட்டுங்கள் அண்ணே. நான் ஃபிலிமைப் பார்க்கணும்,”

அவர் நிப்பாட்டுகிறார். நான் சொன்னதை அவர் உடனே கேட்டதில் கூட ஏதோ சூட்சமம் இருப்பதுபோல் தெரிந்தது.

அவர் நிறுத்தியதும் மின்விளக்கைப் போட்டுவிட்டு ஃபிலிமைப் போய் எடுத்துப் பார்த்தேன். என்ன இது, ஒரே ஒரு ஃபிரேம்தான் ஒட்டுமொத்தப் படச் சுருளிலும் தொடர்ந்து வருகிறது. கமல் பார்வையாளர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார், பின்னணியில் ஒரு கார் மேலே வாகை உட்கார்ந்திருக்கிறார். ஒரே ஒரு காட்சிதான், எல்லா ஃபிரேம்களிலும். என் உதடுகள் “ஆல் வொர்க் நோ ப்ளே மேக்ஸ் ஜாக் எ டல் பாய்” என்று உச்சரிக்கத் தொடங்குகின்றன. அதையே உச்சாடனம் போல் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். அறையிலிருந்து சண்முகம் அண்ணன் பதுங்கிச் சென்றுவிடுகிறார். நான் உச்சாடனத்தை நிறுத்தாமல் பக்கவாட்டில் பார்க்கிறேன். ஆப்பரேட்டர் அறையிலிருந்து திரையரங்கை விட்டு வெளியேறுவதற்கான கதவு நிலையில் சாய்ந்துகொண்டு குறுஞ்சிரிப்புடன் கமல் நிற்கிறார். ஷெல்லி டூவாலின் கையில் இருந்ததைப் போலவே ஒரு பேஸ்பால் மட்டையுடன் கமல். மன்னார்குடியில் இப்போதுதான் ஒரு பேஸ்பால் மட்டையை முதன்முதலில் பார்க்கிறேன்.

சண்முகம் அண்ணனின் குரல் மட்டும் வெளியிலிருந்து கேட்கிறது. “தம்பி, சங்கத்துக்கு இன்னொரு உறுப்பினர் இருக்காரு. நேத்துவரைக்கும் உன் கண்ணுக்குத் தெரிஞ்சதில்ல.” இப்போது புரிந்தது, கிடைப்பதற்கே வாய்ப்பில்லாத படச்சுருள்கள் பலவும் எப்படி சங்கத்துக்குக் கிடைக்கிறது என்பது.

பேஸ்பால் மட்டையை கமல் தனது இன்னொரு கைமீது மெதுவாக அடித்தபடி என் மீது விழிகளை விலக்காமல் என்னை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பிக்கிறார். அந்த அறையின் இன்னொரு கதவு நோக்கி ஓடுகிறேன். ஆனால், அது திரையரங்குக்குள் செல்லும் கதவு.


4.

திரையரங்குக்குள் நுழைந்ததும் ஒரே ஒரு மின்விளக்கு மட்டும் போடப்பட்டது. திரையில் வேறொரு படம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், நான் இருக்கும் நிலையில் அது என்ன படம் என்று நான் கவனிக்கவில்லை. நான் கமலை நோக்கியவாறே பின்பக்கமாக இறங்கிக்கொண்டிருந்தேன். திரும்பி நேராக ஓடலாம். ஆனால், எனக்கு என்ன நிகழப் போகிறது என்பதை கடைசி நொடித் துகள் வரை நேரே கண்டுவிட விரும்பினேன். 

கமல் கேட்டார், “இந்த ஊரில் எனக்கு எவ்வளவு ரசிகர்கள்?”

“நிறைய பேர். அபூர்வ சகோதர்கள், தேவர் மகன்லாம் நூறு நாள் ஓடுச்சு”

“அப்புறம் ஏன் குணா, மகாநதி எல்லாம் ஒரு வாரத்தைக்கூட தாண்டவில்லை? இப்போ சொல்லு இந்த ஊரில் எனக்கு எத்தனை ரசிகர்கள்”

“மூன்று பேர்.”

“அதெப்படி இன்னும் ஒன்பது வருஷம் கழிச்சு வரப்போற ‘நோ கன்ட்ரி ஃபார் ஓல்டு மென்’ படத்தை நான் இப்பவே காப்பியடிச்சிருக்கேனா?”

“……..”

“நான் என்ன படம் எடுக்கிறேன்?”

“மைண்ட் ரீடிங் படம்”

”சபாஷ்! அப்புறம்”

“மைண்ட் கன்ட்ரோலிங் படம்”

“ட்ரூ ட்ரூ! அப்புறம்”

“இன்டெராக்டிவ் படம்”

“அற்புதம்! அப்புறம்”

“டைம் ட்ராவலிங் படம்”

“யூ மீன் டைம் ட்ராவல் படம்?”

“இல்லை இல்லை! டைம் ட்ராவல் செய்யுற படம்”

“ப்ரில்லியண்ட்! அப்புறம்”

“செல்ஃப் திங்க்கிங் படம்”

“வாவ்! அப்புறம்”

“செல்ஃப் ட்ரீமிங் ஃபில்ம்”

“எவ்ரிதிங்… எவ்ரிதிங்… எவ்ரிதிங்… எவ்ரிதிங்… யூ காட் மை பாய்ண்ட் பீம் பாய். அண்ட் அனதர் திங்க், படச்சுருள் இட்செல்ஃப் இஸ் எ திங்கிங் பீயிங். எ சென்டியண்ட். என் ரசிகன் ஒரு சென்டியண்ட் படச்சுருளாகத்தான் இருக்க வேண்டும். அவனைத் தேடித்தான் இதுநாள் வரை நான் படம் எடுத்துக்கொண்டிருந்தேன். என் கலையைப் பரிபூரணமாக உள்வாங்கக் கூடிய ரசிகன் நீயே” என்று சொல்லிவிட்டு ‘விக்ரம்’ (1986 & 2022) பாட்டுக்கிடையில் வருவதைப் போல் பயங்கரமாகச் சிரிக்கிறார். இவ்வொரு படி இறங்கும்போதும் மட்டையால் தன் கையில் மெதுவாக அடிப்பதை நிறுத்தவே இல்லை.

“கமல் தயவுசெஞ்சு நிறுத்துங்க” என்று கெஞ்சினேன்.

“இங்க கமல்னு யாரும் இல்லை. நான் ஜாக் நிக்கல்சன்” என்றார்.

“இல்லை நீங்க கமல், நான் ஆசை, ஆசைத்தம்பி.”

“இனிமே நீ ஆசை இல்லை, ஷெல்லி டூவால். வேண்டுமென்றால் கண்ணாடியில் பார்த்துத் தெரிந்துகொள்” குரூரமாக இளித்தார்.

“இங்கே கண்ணாடி ஏதும் இல்லையே.”

“நான் எங்கிருந்து வந்தேனோ அதுதான் கண்ணாடி. டயலாக் நல்லா இருக்குல்ல?” 

“கூப்ரிக் கூப்ரிக் நிறுத்துங்க. கட் சொல்லுங்க” என்று குத்துமதிப்பாக ஒரு திசையைப் பார்த்துக் கதறினேன்.

“இந்த ஷாட்டை கட் செய்வதற்கு கூப்ரிக் என்று யாரும் வர மாட்டார். இப்போதுதான் இதே மட்டையால் அடித்து அவரைக் கொன்றுவிட்டு வந்தேன். வேண்டுமென்றால் இந்த மட்டையைப் பார். ரத்தம். திஸ் ஷாட் இஸ் ஹியர் டு ஸ்டே ஃபாரெவர் லைக் ‘ஆல் ஒர்க் நோ ப்ளே மேக்ஸ் ஜாக் எ டல் பாய்.” 

திரையை நோக்கி ஓடுகிறேன். திரைக்குள் பாய்ந்தால் கிழித்துக்கொண்டு அந்தப் பக்கம் வழியாகத் தப்பிக்கலாமே என்ற யோசனை வருகிறது. திரையின் அந்தப் பக்கம் இதுவரை பார்த்ததில்லையே, வழி இருக்குமோ இருக்காதோ என்றாலும் இப்போது எங்காவது பாய்ந்தாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டு பாய்கிறேன். 


5.

பாய்ந்துவிட்டேன். ஆனால் திரைக்கு அந்தப் பக்கம் இல்லை நான். வேறு எங்கே இருக்கிறேன்? அங்கே ஒரு கறுப்புச் செவ்வகக் கல் இருந்தது. அதைச் சுற்றிலும் சிம்பன்சிகள் இங்குமங்குமாக அலமலந்துகொண்டிருந்தன. ஓ கூப்ரிக், விடவே மாட்டீர்களா? சற்று அருகே சென்று பார்த்தேன். அதன் மேல் பக்கம் ஸ்டேன்லி கூப்ரிக் என்று எழுதி அதன் கீழே இப்படி இருந்தது: “Here lies our love Stanley with Eyes Shut Wide, born in New York city on 26 July 1928, Died here at home on 7 March 1999 buried 2,00,000 years ago” 

இன்றைய தேதி என்ன? அப்படியென்றால் கமல் உண்மையைத்தான் சொல்கிறாரா? ஸ்டேன்லி கூப்ரிக் இறந்துவிட்டாரா? நான் திரையரங்குக்கு வரும் வரை எந்தச் செய்தியிலும் பார்க்கவில்லையே. தமிழர்களுக்கோ இந்தியர்களுக்கோ கூப்ரிக்கின் முக்கியத்துவம் தெரியாது என்பதால் இன்றோ நாளையோ எப்போதும் தமிழ்ச் செய்திகளில் அவரது மரணம் இடம்பெறுவது கடினம். எனக்கு ஒரு ப்ரேக்கிங் நியூஸ் கிடைத்திருக்கிறது. சினிமா ஆர்வலர்களிடமாவது பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், வெளியே எப்படிப் போவது?

இவ்வளவு நேரமும் என்னையே குரூரக் குறுஞ்சிரிப்பு மாறாமல் பார்த்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார் கமல்.

என் முன்னே எத்தனை வாய்ப்புகள், தெரிவுகள் இருக்கின்றன என்று யோசிக்க ஆரம்பித்தேன். 

இன்னும் சற்று நேரத்தில் அந்தச் செவ்வகக் கல் இருக்கும் இடமருகே ஒரு சக குரங்கின் எலும்பாயுதத்தால் அடிவாங்கிச் சாகவிருக்கும் ஒரு குரங்கு போலவே நானும் கமல் கையால் அந்த மட்டையாலேயே அடிவாங்கி செத்துப்போகலாம்.

இல்லையெனில் அங்கேயே இருந்துகொண்டு குரங்கின் அறிவு வளர்ச்சியைத் தூண்டும், அதன் மூலம் பரிணாம மாற்றம் நிகழ்த்தும் செயல்களை இப்போதோ அப்போதோ சாகும் வரை செய்துகொண்டிருக்கலாம். 

இல்லையெனில் குரங்கிலிருந்து மனிதன் என்பதன் முதல் படியாக முதல் மனிதக் குழந்தையின் தகப்பனாகலாம். பரிணாம மாற்றத்தைப் பொறுத்தவரை அது படிப்படியானதாக இல்லாமல், ஆம்ஸ்ட்ராங் கூறியதுபோல் ’ஜெயண்ட் லீப்’பாக இருக்கும். கூடவே, தன் இணையைக் கவர்ந்ததால் என்மேல் பொறாமை கொண்ட ஆண் குரங்கொன்றால் அடித்துக் கொல்லப்பட்ட முதல் மனிதனாகவும் நான் ஆகலாம். 

தப்பிக்க வழி இல்லாமல் இருக்காது. எனினும் ஸ்டேன்லி குப்ரிக் படத்துக்கு ஒருபோதும் முடிவு கிடையாது. தெரியவில்லை, இது ஸ்டேன்லி படமா கமல் படமா என்று. ஸ்டேன்லி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் கொண்டுபோய்த் தன் கல்லறைக் கல்லை சும்மா வைத்திருப்பார் என்று தோன்றவில்லை. அது நிச்சயம் என்னை எதிர்காலத்துக்கோ வேறு பிரபஞ்சத்துக்கோ கொண்டுசெல்லும் புழுத்துளையாகத்தான் இருக்கும். 

ஆனால், அசைக்கவே முடியாத ஆகிருதியுடன் அது இருந்தது. திறப்புகளோ, ஒட்டவைக்கப்பட்ட விளிம்புகளோ ஏதும் இல்லை. படச்சுருளின் ஃப்ரேமும், கையில் பேஸ்பால் மட்டையுடன் இருக்கும் கமலும் அனுமதிக்கும் காலத்துக்குள் நானும் எவ்வளவோ யோசித்துப் பார்த்துவிட்டேன். பிறகு ‘த யூஸுவல் சஸ்பெக்ட்ஸ்’ ஏனோ நினைவுக்கு வந்தது. ஆம், உடைத்துப் பார்த்துவிட வேண்டியதுதான். துணிந்து கமலிடம் கேட்டேன்:


“கமல், அந்த பேஸ்பால் மட்டையைத் தாங்களேன்”

“கட்” என்ற சத்தம் திரைக்கு முன்னாலிருந்து கேட்டது. அது ஸ்டேன்லி கூப்ரிக் குரல் போல இல்லை, சந்தானபாரதி குரல் போலத்தான் இருந்தது. 

(தொடரும்)


நன்றி:

‘The Shining’ and ‘2001: A Space Odessey’ by Stanely Kubrick

‘No Country for Old Men’ by Coen Brothers

‘The Usual Suspects’ by Christopher McQuarrie

கமல் ரகசியச் சங்கம், மன்னார்குடி கிளை