Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Wednesday, June 18, 2025

க்ரியா ராமகிருஷ்ணன்: தமிழில் முன்னுதாரணமில்லாத ஒரு எடிட்டர் - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு


ஆசை

தமிழில் புத்தகக் கலாச்சாரம் என்பது இல்லை என்பது க்ரியா ராமகிருஷ்ணன் அடிக்கடி வெளிப்படுத்தும் வருத்தங்களுள் ஒன்று. புத்தகக் கலாச்சாரம் என்பது புத்தகங்கள் அதிகம் வெளியாகும் சூழல் அல்ல, புத்தகங்களுக்கு நம் வாழ்க்கையில் நாம் முக்கிய இடம் கொடுப்பதே புத்தகக் கலாச்சாரம். அப்படிப்பட்ட கலாச்சாரம் இல்லாமல் போனதன் விளைவுகளுள் ஒன்றுதான் தமிழில் எடிட்டர்களும் ‘கிட்டத்தட்ட’ இல்லாமல் போனது. அந்தக் குறையைப் போக்க வந்த முக்கியமான இருவர் – ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் (2020), நஞ்சுண்டன் (2019) – சமீப ஆண்டுகளில் காலமானது தமிழுக்கும் தமிழ்ப் பதிப்புத் துறைக்கும் பேரிழப்பு.

எடிட்டிங்கை க்ரியா ராமகிருஷ்ணன் எப்படி அணுகினார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு ‘எடிட்டிங்’ என்பதைப் பற்றித் தமிழ்ச் சூழல் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருந்தது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.

Friday, November 22, 2024

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்: அபத்தத்தைக் கொண்டு அர்த்தத்தை அளவிடும் படைப்பாளி (பிறந்தநாள் மீள்பகிர்வு)


பாலசுப்ரமணியன் பொன்ராஜ் இதுவரை, ‘கனவு மிருகம்’ (பாதரசம் வெளியீடு), ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ (யாவரும் பப்ளிஷர்ஸ்) ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கிறார்.

பாலசுப்ரமணியனின் சிறுகதைகள் பல வகைகளிலும் உற்சாகப்படுத்துகின்றன. கூடவே, நம் மனஅடுக்கின் இயல்பான அமைப்பில் இடையூறும் ஏற்படுத்துகின்றன. உற்சாகப்படுத்துவதற்கு முதன்மையான காரணம், பாலசுப்ரமணியனிடம் வெளிப்படும் சிந்தனை வீச்சு. தத்துவம், அரசியல், உலக இலக்கியம், இசை, அறிவியல் என்ற பல துறைப் பரிச்சயத்தையும் சரியாக உள்வாங்கித் தனது படைப்புகளில் ஆழமான சுயவெளிப்பாடுகளாக வெளியிட்டிருக்கிறார். இதற்கு உதாரணமாக ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பல்’ தொகுப்பில் பல இடங்களையும் காட்ட முடியும்.

Saturday, March 16, 2024

நம்மாழ்வார் எல்லோருக்கும் உரியவர்: மொழிபெயர்ப்பாளர் அர்ச்சனா வெங்கடேசன் பேட்டி


ஆசை

(இன்று அர்ச்சனா வெங்கடேசன் பிறந்தநாள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் எடுத்த பேட்டியின் மறுபகிர்வு) 

ஆண்டாளையும் நம்மாழ்வாரையும் அழகான ஆங்கிலத்துக்குக் கொண்டுசென்றிருப்பவர் அர்ச்சனா வெங்கடேசன். ஏ.கே.ராமானுஜனின் தொடர்ச்சி. நம்மாழ்வாரின் ‘திருவாய்மொழி’ அர்ச்சனாவின் மொழிபெயர்ப்பில் ‘எண்ட்லெஸ் சாங்’ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த மொழிபெயர்ப்புக்காக ‘லூஸியன் ஸ்ட்ரைக் ஏசியன் ட்ரான்ஸ்லேஷன் பிரைஸ்’ என்ற விருது அர்ச்சனாவுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (டேவிஸ்) மதங்கள் சார்ந்த ஆய்வுகளுக்கும் ஒப்பிலக்கியத்துக்குமான இணைப் பேராசிரியராக இருக்கும் அர்ச்சனாவுடன் உரையாடியதிலிருந்து…

தமிழ் இலக்கியத்தின் பக்கம் எப்படி வந்தீர்கள்?

சென்னை பெசன்ட் நகரில் பிறந்து வளர்ந்தவள் நான். 12-ம் வகுப்பு வரை ஆங்கில வழி என்பதால், சென்னையில் இருக்கும் வரை தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது. பேசுவேன் அவ்வளவுதான். ஆனால், சிறு வயதில் ஆங்கில இலக்கியத்தின் மீது விருப்பம் அதிகம். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (பெர்க்லி) ஆங்கில இலக்கியம் படிக்கும்போது, என் அறைத்தோழி ஜார்ஜ் எல்.ஹார்ட்டின் வகுப்புக்கு என்னைக் கூப்பிட்டுச் சென்றார்.

Thursday, March 14, 2024

ஸ்டீவன் ஹாக்கிங் ஏன் நமக்கு முக்கியமானவர்?


ஆசை

(இன்று ஸ்டீவன் ஹாக்கிங் நினைவு நாள். 2018ல் அவர் மறைந்தபோது எழுதிய கட்டுரை இது)

 'மரணத்தின் குகைவாயில் கண்ணுக்குத் தெரியும்போது, எழுத்தில் ஒளி ஊடுருவுகிறது' என்று சுந்தர ராமசாமி ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலின் தொடக்கத்தில் எழுதியிருப்பார். அது ஸ்டீவனுக்கும் பொருந்தும்! ஆனால், அருகில் தெரிந்த குகைவாயிலைத் தனது அசாத்தியக் கற்பனையின் எரிபொருள் தந்த உத்வேகத்தின் மூலம் நெடியதாக்கி, இரண்டு ஆண்டுகளை 55 ஆண்டுகளாக ஆக்கி, இறுதியில் காலத்தின் குகைவாயில் என்ற கருந்துளைக்குள் போய் மறைந்தார்.

மரணத்தை வாழ்க்கை வென்ற தன் கதையைப் பற்றி ஸ்டீவன் கூறும்போது, “அகால மரணம் என்ற சாத்தியத்தை எதிர்கொண்டிருக்கும்போதுதான் இந்த வாழ்க்கையானது வாழத் தகுந்தது என்றும், நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளமாக இருக்கின்றன என்றும் உங்களுக்குப் புரிபடும்” என்றார். 

ஹாக்கிங்கால் எழுதவோ பேசவோகூட முடியாது. இருந்த ஒரே சாதனம் அவரது மூளைதான். மூளையின் அவரது ஆய்வகம். கற்பனைதான் அவரது கருவி.

Wednesday, March 13, 2024

மர்ரே ராஜமும் பொக்கிஷப் பதிப்புகளும்!


ஆசை

(மர்ரே-ராஜம் நினைவு நாளை முன்னிட்டு மீள்பகிர்வு)

மர்ரே-ராஜம் என்றழைக்கப்பட்ட ராஜம் (பிறப்பு: 22-11-1904, இறப்பு: 13-03-1986) தன்னலம் கருதாமல் தமிழுக்காக உழைத்தவர்களுள் ஒருவர்! கூடவே, தமிழர்களின் மறதியால் விழுங்கப்பட்ட மாமனிதர்களுள் ஒருவர். பழந்தமிழ் இலக்கியங்களை சந்தி பிரித்து, மலிவு விலையில் அவர் பதிப்பித்த நூல்கள் தமிழின் சமீப வரலாற்றின் சாதனைகளுள் ஒன்று. 1986-ல் ராஜம் மறைவுக்குப் பிறகு அவர் உருவாக்கிய பதிப்பு வளங்கள் கிட்டத்தட்ட முடங்கிப் போன நிலை! இந்த நிலையில் பழந்தமிழ் இலக்கியத்தை வெளியிடுவதற்காக 60-களில் ராஜம் ஏற்படுத்திய சாந்தி சாதனா அறக்கட்டளைக்கு அவரது நண்பரின் மகனும் ராஜத்தின் பங்குதாரருமான ஸ்ரீவத்ஸா 2001-ல் புத்துயிர் கொடுக்கிறார். அதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே பணிகள் முடிக்கப்பட்டுக் கைப்பிரதியாக இருந்த நூல்களெல்லாம் ஒன்றொன்றாக வெளிவரத் தொடங்கின. ‘தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி’, ‘வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி’போன்ற அகராதிகளும் ‘பெருங்காதை’, ‘வார்த்தாமாலை’, ‘ஸ்ரீதேசிகப் பிரபந்தம்’ போன்ற நூல்களும் வெளியாகின.

சாந்தி சாதனாவின் தற்போதைய அறங்காவலர்களுள் ஒருவரான சகுந்தலாவைச் சந்தித்தபோது ராஜத்தின் நினைவுகளில் மூழ்கினார்.

Monday, March 11, 2024

வார்ஸன் ஷைர்: வீடென்பது சுறாமீனின் வாயானால்...



ஆசை
(அறிமுகமும் கவிதைகளின் மொழிபெயர்ப்பும்)

சம காலத்தின் முக்கியமான இளம் பெண்கவிஞர்களுள் ஒருவர் வார்ஸன் ஷைர் (Warsan Shire). சோமாலியப் பெற்றோருக்கு கென்யாவில் 1988-ல் பிறந்தவர் வார்ஸன் ஷைர். சிறு வயதிலேயே இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்த வார்ஸன் ஷைர் லண்டன்வாசியானார். பிரிட்டனைத் தாயகமாக்கிக்கொண்டாலும் அங்கே ஒரு அந்நியராகவே வார்ஸன் ஷைர் தன்னை உணர்கிறார்.

தனது பூர்வீக நாடான சோமாலியாவுக்கு வார்ஸன் ஷைர் போனதே இல்லை என்றாலும் தனது எழுத்துகளின் வாயிலாக ஆப்பிரிக்கக் கலாச்சாரம், ஆப்பிரிக்கர்களின் வலி, அகதி வாழ்க்கையின் துயரம், குறிப்பாக அகதிப் பெண்களின் துயரம் போன்றவற்றை வார்ஸன் ஷைர் தொடர்ந்து பதிவுசெய்கிறார்.

Friday, March 8, 2024

தமிழ்ச் சமூகம் என்ற simulacrum - சாரு நிவேதிதா


(என்னுடைய ‘
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ கதை குறித்து சாரு நிவேதிதா தன் தளத்தில் எழுதிய அறிமுகம் இது. அவருக்கு என் மனமார்ந்த நன்றி - ஆசை)


Simulacrum என்ற கோட்பாடு ஃப்ரெஞ்ச் பின்நவீனத்துவத் தத்துவவாதியான Jean Baudrillard (உச்சரிப்பு: ஜான் பொத்ரியா) மூலமாகப் பிரபலம் ஆயிற்று.

சிருஷ்டிகரத்துவத்தைப் போலவே எனக்குத் தத்துவமும் முக்கியம். நீட்ஷே, ஜார்ஜ் பத்தாய், ரொலாந் பார்த், மிஷல் ஃபூக்கோ என்ற தத்துவவாதிகள் இல்லையேல் என் எழுத்து இல்லை. நானும் சுந்தர ராமசாமியின் எழுத்தில் மயங்கிக் கிடந்திருப்பேன். தத்துவம் என்பது எனக்கு உடலும் உயிரும் போல. சிருஷ்டி பாதி, தத்துவம் பாதி. இந்தப் பிரபஞ்சத்தையும் இதில் வாழும் உயிர்களின் ஓட்டத்தையும் புரிந்து கொள்ள தத்துவம் எனக்குக் கிடைத்த ஒரு ஆதாரமான கருவி. தத்துவம் இல்லையேல் நான் ஒரு வெட்டி எழுத்தாளனாக ஆகியிருப்பேன்.

ஆனால் தத்துவத்தின் துணையின்றியே சிருஷ்டிகரத்துவத்தின் உச்சம் தொட்ட போர்ஹேஸ் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் நான் மறக்க மாட்டேன்.

Friday, February 2, 2024

தேசியப் பள்ளி (NHSS) - 125: நான் மலர்ந்த இடம்


ஆசை

(நான் 1990லிருந்து 1997 வரை படித்த மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி தனது 125வது ஆண்டில் நுழைவதையொட்டி ஒரு சிறப்புப் பகிர்வு. சமஸ் தொகுப்பாசிரியராக வெளியிட்ட ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலிலிருந்து...)

வணக்கம் தம்பி… நான் உங்க ஹெட்மாஸ்டர் சேதுராமன் பேசிறேன். ஞாபகம் இருக்கா? உங்களுக்கு சிறந்த கவிஞருக்கான விருது கிடைச்சிருக்குன்னும், முதல்வர் அந்த விருதை வழங்கப்போறாருன்னும் கேள்விப்பட்டேன். வாழ்த்துகள் தம்பி. பெருமையா இருக்கு!

இப்படி ஒரு செல்பேசி அழைப்பு வந்தபோது, நானும் என் நண்பன் இளங்.கார்த்திகேயனும் பள்ளியிறுதி ஆண்டில் எடுத்துக்கொண்ட சபதம் நினைவுக்கு வந்தது. அதைப் பற்றி இறுதியில் சொல்கிறேன்.

எனக்கு வாழ்த்துக் கூறிய என்னுடைய தலைமையாசிரியரிடம் நன்றி கூறியபோது அவர் கேட்டார், “ஆசை, நான் உனக்கு நல்ல ஆசிரியரா இருந்திருக்கேனா?” அந்தக் குரலில் ஒரு சிறு தவிப்பு தெரிந்தது. நான் கொஞ்சம் யோசித்தேன். முதலில், அவரைப் போன்ற கண்டிப்பும் அக்கறையும் கொண்ட ஒரு தலைமை ஆசிரியரின் அளவுகோலின்படி நான் ஒரு நல்ல மாணவனாக இருந்திருக்கிறேனா? வாழ்க்கையில் ஒரு சாதனை செய்த தன் மாணவனிடம் இவ்வளவு தவிப்புடன் கேட்பவர் நிச்சயம் நல்ல ஆசிரியராகத்தானே இருக்க முடியும்! மற்றவர்களுக்கெல்லாம் தங்கள் சாதனைகளுக்கு ஏதேதோ உயரங்கள் அடையாளமாக இருந்தாலும் ஒரு ஆசிரியர் தான் ஒரு ‘நல்ல ஆசிரியர்’ என்று அழைக்கப்படுவதைத்தானே தனது பெரும் சாதனையாகக் கருதுவார்!  

சேதுராமன் சாரிடம் பேசி முடித்ததும், தேசிய மேல்நிலைப் பள்ளிக்கு என்னுடைய கேப்டன் சைக்கிளை மாதாக்கோவில் தெருவிலிருந்து மிதித்துக்கொண்டு போவது போன்ற நினைவு எனக்கு ஏற்பட்டது. 6-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை, வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியான பதின்பருவத்தில் 7 ஆண்டுகளை ஆக்கிரமித்துக்கொண்ட இடம் தேசிய மேல்நிலைப் பள்ளி. பாரதி-பாரதிதாசன் அறிமுகம், சுஜாதா அறிமுகம், உயிர் நண்பன் அறிமுகம், நான் கவிஞனானது, கதை எழுதத் தொடங்கியது என்று நான் இன்று என்னவாகவெல்லாம் இருக்கிறேனோ அவற்றில் பலவற்றுக்குமான வித்துகள் விழுந்த இடம் அது.

சமீபத்தில், ஆன்லைன் கல்விச் செயலி ஒன்றின் விளம்பரத்தைப் பார்த்தேன், ‘உன்னை சந்தோஷப்படுத்துவது என் வேலையில்லை. உன்னை வெற்றி பெற வைப்பதுதான் என் வேலை’ என்று ஒரு ஆசிரியர் சொல்வதான விளம்பரம் அது!

கல்வியையே எப்படித் தலைகீழாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள் என்றுதான் தோன்றியது. இங்கிருந்து, நான் பயின்ற மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியை நான் பார்க்க விரும்புகிறேன். ஏனெனில், அந்தப் பள்ளியில் 7 ஆண்டுகள் படித்து முடித்த நிலையில் நான் ஒரு தோல்வியுற்ற மாணவன். ஆம்! 12-ம் வகுப்பில் கணக்கில் தோல்வி. ஆனால், படிக்கும் காலகட்டத்தில் நான் அதிகம் சந்தோஷமாக இருந்தேன். தேர்வுத் தோல்வியும்கூட பெரிய வருத்தத்தைக் கொடுக்கவில்லை. படிப்பில் தோல்வியுற்ற மாணவர்களும் பெரிய ஆட்களாக வருவார்கள் என்றே நம்பினேன்.

தேர்வு முடிவைப் பற்றிக் கேட்டவர்களிடமெல்லாம் சிறிதும் கூச்சமில்லாமல் “ஃபெயில்” என்று நெஞ்சை நிமிர்த்திச் சொன்னேன். இரக்கமோ, அக்கறையோ, அறிவுரையோ நீண்டால் “கலைஞரே எஸ்.எஸ்.எல்.சியில ஃபெயிலுதான்” என்று பதில் சொன்னேன். என் அப்பாவோ தினமும் விடியற்காலையிலேயே எழுந்து “என் சின்னப் புள்ளைக்கு இப்புடி ஆச்சே!” என்று அழ ஆரம்பித்தார். வீட்டாரின் கோபம், அலட்சியம், தெரிந்தவர்களின் இளக்காரம் என்று எல்லாவற்றையும் எதிர்கொள்ள ஆரம்பித்தேன். ஒரு தோல்வி எனக்கு உலகத்தைப் பெரிதாகத் திறந்துகாட்டியது. அதற்கு என் நன்றி!

ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை நான் படித்தது சின்ன கான்வென்ட்; அது எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தது. ரொம்பவும் மகிழ்ச்சிகரமான பருவம் அது. அங்கு முடித்து, வீட்டிலிருந்து சில கி.மீ. தொலைவில் இருந்த தேசிய மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும்போது நான் பயந்தது என் மகிழ்ச்சிக்கு ஏதும் குறைவு ஏற்பட்டுவிடுமோ என்றுதான். பெரிய அளவில் என் சுதந்திரமும் மகிழ்ச்சியும் பறிபோய்விடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  

நல்ல மதிப்பெண்ணை இலக்காகக் கொண்ட மாணவர்களுக்குப் பள்ளி வகுப்பறையே மையம். நான் மதிப்பெண்ணை ஒருபோதும் இலக்காகக் கொண்டதில்லை. எனது கனவுகள் வேறு, ஆனாலும் சுதந்திரமாக வானில் பறக்கும் பட்டத்தின் சிறு கட்டுப்பாட்டு நூலின் மறுமுனையாகப் பள்ளி இருந்து என்னைக் கண்காணித்துக்கொண்டது. பள்ளியின் சுவர்களைத் தாண்ட முடியவில்லை என்றாலும் வகுப்பறை என்னைத் திணித்துக்கொண்டுவிடாதபடி, பள்ளிக்குள்ளும், ஏன் வகுப்பறைக்குள்ளுமே ஒரு உலகத்தை என்னால் சிருஷ்டித்துக்கொள்ள முடிந்தது. கணிசமான ஆசிரியர்கள் அந்த சுதந்திரத்தைத் தந்தார்கள். கூடவே, அக்கறையையும் செலுத்தினார்கள். ஊடாகவே என்னுடைய சாகசங்களுக்கும் சின்ன இடம் இருந்தது. கட் அடிப்பது, பிட் அடிப்பது போன்றவை எல்லாம் பள்ளியின் ஒழுங்கு நோக்கில் தவறானவையாக இருந்தாலும், பெருந்தீங்கற்ற அந்த சாகசங்கள் எனக்குப் பள்ளி வாழ்க்கையின் பிரிக்க முடியாத நினைவுகள். ஒரு தேற்றத்தைப் படித்துவிட்டுச் செல்வது பெரிய விஷயம் இல்லை. ஆனால், செருப்பிலும் தொடையிலும் எழுதிக்கொண்டுபோய், பார்த்து எழுதியதெல்லாம் என்னை நானே பிதாகரஸாக உணர்ந்த தருணங்கள். திணிக்கப்பட்ட நற்செயல்களைவிட சுதந்திரமாகச் செய்த சிறுசிறு மீறல்கள் அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தன.

சிறுவயதிலிருந்தே எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாதென்றாலும், பள்ளிப் பிரார்த்தனை நேரத்தில் எம்.எஸ். குரலில் ஒலிக்கும் ‘குறையொன்றுமில்லை’, ‘பஜ கோவிந்தம்’ போன்ற பாடல்களுக்கு நான் அப்போதே பெரும் ரசிகன். எம்.எஸ். அப்படித்தான் எனக்கு அறிமுகமானார். ஆசிரியர் சூரியநாராயணன், ‘மானச சஞ்சரரே’ பாடும்போது நாள் முழுக்கவும் பிரார்த்தனையாகவே இருந்துவிடக் கூடாதா என்று மனம் ஏங்கும். நாத்திகரையும் உருக்கும் குரல் அவருடையது. பல ஆசிரியர்களையும் பல காரணங்களுக்காக மறக்க முடியாது. நகைச்சுவை கலந்து பாடம் எடுக்கும் ஆசிரியர் சுப்பராயலு, ஆசிரியர் சீனிவாசன் போன்றோரின் பாடங்களில் நல்ல மதிப்பெண் எடுக்க முடிந்தது. மாணவரை சந்தோஷப்படுத்தாமல் அவரை வெற்றிபெற வைக்க முடியாது என்பதற்கு அவர்கள்தான் எடுத்துக்காட்டு.

சமீபத்தில் குறுநாவல் தொகுப்பு ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் தேசிய மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவரான பாலாஜி பிரசன்னா ஒரு நல்ல குறுநாவல் எழுதியிருக்கிறார். அதில் பள்ளியைப் பற்றியும் சில குறிப்புகள் வரும். ஒரு இடத்தில் இப்படி எழுதியிருப்பார்: ‘பி.டி. வாத்தியார் தினம் ஒரு பத்து பேரையாவது வெயிலில் முட்டிப் போடவைத்துவிட்டு, கட்டி வந்த டிஃபனைச் சாப்பிட உட்காருவார். இரண்டு வகை சட்னி இருந்தாலும் முட்டிப்போடும் பத்துப் பேரைப் பார்த்தால்தான் இட்லி இறங்கும். பின் வெற்றிலை வாயோடு ஆளுக்கொரு பிரம்படி பட்டெக்ஸில் கொடுத்து வகுப்புக்குத் துரத்துவார்.’ படித்துக்கொண்டிருக்கும்போதே அது யாரென்று தெரிந்துவிட்டதால் குபீர் என்று சிரித்துவிட்டேன். இதுபோல பல குணாம்சங்களின் பிரதிபலிப்புகளாக அமைந்த ஆசிரியர்களை அங்கு சந்தித்திருக்கிறேன்.

கோபுலு கார்ட்டூன்கள், சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’, தி.ஜானகிராமனின் பாத்திரங்கள் போன்றவற்றைப் புத்தக வடிவில் சந்திக்கும் முன்பே பள்ளியில் ரத்தமும் சதையுமாக சந்திருக்கிறேன். தோலை உரித்துவிடும் கடுமையான ஆசிரியரும் உண்டு;  ஒருமுறைகூட மாணவர்களை அடிக்காத, தி.ஜானகிராமனின் ‘முள் முடி’ அனுகூலசாமி போன்ற ஆசிரியர்களும் உண்டு. ஆசிரியர்போல் அல்லாமல் நண்பர் போல் பழகியவர்களில் ஆங்கில ஆசிரியர் சண்முகம் முக்கியமானவர். ஒரு எழுத்தாளனாக மலர்வதற்கு ஆரம்பக் காலத்தில் ஆசிரியர் கருணாகரன் பெரும் ஊக்கம் தந்திருக்கிறார்!

எல்லாவற்றுக்கும் மேலாக, எங்கள் அனைவரையும் அரவணைத்துச் சென்ற தலைமை ஆசிரியர் சேதுராமனை மறக்க முடியாது. மிகவும் கண்டிப்பானவர் என்றாலும் அதே நேரத்தில் மிகவும் அக்கறையானவர். பள்ளிதான் அவருடைய முழு நேர வாழ்க்கை! ஒருமுறை, தலைமை ஆசிரியர் சேதுராமன் காட்டிய மேற்கோள் கவிதையை, நான் ஒரு கவிஞன் என்ற முறையில், என்னால் மறக்க முடியாது. தலைமை ஆசிரியர் அறையிலிருந்து ஒலிபெருக்கியில் பேசினால் எல்லாக் கட்டிடங்களின் எல்லா வகுப்புகளுக்கும் கேட்கும். அந்த ஒலிபெருக்கியில் பேசியபோது மாணவர்களின் மறைந்துகிடக்கும் திறமையைப் பற்றிப் பேசும்போது தாமஸ் கிரேயின் ‘Elegy Written in a Country Churchyard’ கவிதையிலிருந்து இந்தக் கவிதையை மேற்கோள் காட்டினார்:

            Full many a gem of purest ray serene,
                   The dark unfathom'd caves of ocean bear:
            Full many a flow'r is born to blush unseen,
                   And waste its sweetness on the desert air.

            (தூய ஒளி பொருந்திய ரத்தினங்கள் பற்பல
            ஆழங்காணாத கடல்களின் இருட் குகைகளில் அமைதியாக:
            கணக்கிலாத மலர்கள் பிறக்கின்றன யாரும் காணாமல்
            புன்னகைக்க,
            பாலைவனக் காற்றில் தம் இனிமை வீண்போக.)

பள்ளியில்தான் எத்தனை எத்தனை நட்புகள்! மரபெஞ்சில் ‘காட்டுக் குயிலு மனசுக்குள்ள’ பாடலின் தாளத்தை அச்சுப்பிசகாமல் கொண்டுவரும் பிரகாஷை நினைத்தால் அப்படியொரு வியப்பு ஏற்படும். எங்கள் இருவருக்குமான நட்பு, வெறுப்பும்-நேசமுமானது. இரண்டு குடும்பங்களின் சண்டை வரை போய்விட்டது. ஆனால், ஒன்பதாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு செல்லும்போது இன்னின்னார் இன்னின்ன வகுப்புக்கு என்று பிரிப்பார்கள்; முதல் ஆண்டு சேர்ந்து படித்தவர்கள் அடுத்த ஆண்டும் சேர்ந்து படிப்பார்கள் என்று சொல்ல முடியாது. அன்று வகுப்பு பிரிப்பதற்கு முன்பு நானும் பிரகாஷும் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதோம். வெவ்வேறு வகுப்புகளில் இருவரும் போடப்பட்டால் ‘யூரின் இண்டெர்வெல்’, ‘லஞ்ச் டைம்’ போன்ற நேரங்களில் தவறாமல் ஒரு இடத்தில் சந்தித்துக்கொள்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். இறுதியில் என்னையும் அவனையும் ஒரே வகுப்பில்தான் போட்டார்கள். நிம்மதி! ஆனால், 10-ம் வகுப்புக்குப் பிறகு வேறு வேறு வகுப்புகளுக்கு நாங்கள் சென்றுவிடவே தூரத்துச் சிரிப்பாக அந்த நட்பு மாறிவிட்டது. இப்போதும் மன்னார்குடிக்கு வரும்போது பிரகாஷ் எப்போதாவது எதிர்ப்பட்டால் நாங்கள் கட்டிப்புரண்டு சண்டைபோட்டதும், கட்டிப்பிடித்து அழுததும்தான் நினைவுக்கு வரும்!


தொடக்கப் பள்ளியிலேயே ‘சிறுவர் மலர்’, ‘அம்புலிமாமா’, ‘கோகுலம்’ படித்துவந்த நான், ஆறாம் வகுப்புக்கு வந்த வேகத்தில் க்ரைம் நாவல்களுக்கு வந்துவிட்டேன். அந்த க்ரைம் நாவல்களைக் குப்பை நூல்கள் என்று ஒருவர் ஒதுக்கித் தள்ளலாம். ஆனால், பல்வேறு விஷயங்களை அவை எனக்கு அந்த வயதில், எனக்குக் குறுகுறுப்பு ஏற்படும்படி, கற்றுக்கொடுத்தன. என் சக வகுப்புத் தோழர்களுக்கு ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா நாவல்களின் சுருக்கத்தைச் சொல்வேன். நான் சொன்னவற்றுள் அந்த வயதுக்கு மீறிய விஷயங்களை என் நண்பர்கள் நம்பவே இல்லை. ஆறாவது படிக்கும்போது என் முதல் கவிதையை நான் எழுதினேன். அது தொலைந்துபோய்விட்டது என்றாலும், அது போட்ட விதை தற்போது நான்கு கவிதைத் தொகுப்புகளாக விரிந்து நிற்கிறது.

இப்படி ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்ப என் வாசிப்பின் அடுக்குகளும் ஏறிக்கொண்டேபோயின. பாடப் படிப்பு என்பது எனக்கு இரண்டாம்பட்சம்தான். என் உலகம் கதைகள், புத்தகம், சினிமாதான். அந்த வயதிலேயே முடிவெடுத்துவிட்டேன், நாம் ஒரு ஒரு திரைப்பட இயக்குநர்! பின்னாளில் எழுத்தாளராகவும் அகராதியியலராகவும் பத்திரிகையாளராகவும் ஆனாலும் அன்று அந்தக் கனவு மிகத் தீவிரமானதாக இருந்தது. என் வகுப்புத் தோழர்களும் அதைத் தீவிரமாக நம்பினார்கள். ஒரே கனவைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்க வேண்டுமா என்ன, அதற்கும் பரிணாம மாற்றம் இருக்கிறதில்லை அல்லவா!

எட்டாவது படிக்கும்போது என் அண்ணன் எனக்கு அன்பளிப்பாகத் தந்த ‘பாரதியார் கவிதைகள்’ நூல் என்னைப் பாரதி பித்தனாக மாற்றியது. கூடவே, கொஞ்சம்கொஞ்சமாகக் காசு சேர்த்து ‘பாரதிதாசன் கவிதைகள்’ நூலை அழகப்பா தாளகத்தில் வாங்கினேன். அதன் விலை 17 ரூபாய். அதுதான் நான் காசு கொடுத்து வாங்கிய முதல் புத்தகம். இரண்டு புத்தகங்களின் தாக்கத்தாலும் நிறையக் கவிதைகள் எழுதினேன். எட்டாம் வகுப்பில் பள்ளி அளவிலான தேர்வில் பாடப் புத்தகத்திலிருந்து ஒரு வெண்பாவை எடுத்துக்கொண்டு ‘நேர்-நேர்-தேமா’ பிரித்து எழுதச் சொன்னபோது சொந்தமாக அப்போதே ஒரு வெண்பா எழுதி ‘நேர்-நேர்-தேமா’ பிரித்து எழுதும் அளவுக்கு மரபுக் கவிதையில் தேர்ச்சி பெற்றிருந்தேன். பள்ளியின் பிரதானக் கட்டிடத்துக்கு உள்ளே சதுர வடிவில் முற்றம்போல் இருந்த இடத்தில் இருந்த செடிகளின் பூக்கள் எனக்குக் கவிதைகளை வாரி வழங்கின.

அது மட்டுமல்லாமல், பள்ளி என்பது சித்தாந்தரீதியான களமாகவும் எனக்கு அமைந்தது. ஒன்பதாம் வகுப்பில் நண்பன் ஹரிஹரனும் நானும் பெரியார், தமிழ் ஆகிய விஷயங்களில் மோதிக்கொண்டோம். திடீரென்று பேச்சை நிறுத்திக்கொள்ளும் அளவுக்குப் போன விவாதம் அது. அதன் பின் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்க்குட்டில் (Orkut) அவன் என்னைக் கண்டுபிடிக்கவே, நட்பை மீட்டுக்கொண்டோம். அதேபோல், பிரிந்த இன்னொரு நண்பன் கலைவாணன். அவன் நன்றாகப் படிக்கும் மாணவன். நானும் கார்த்திகேயனும் வகுப்பில் கடைசி வருபவர்கள். ஆனால், எப்போதும் இலக்கியம், சினிமா என்று தனியுலகத்தில் இருந்த எங்களால் கவரப்பட்ட கலைவாணன் எங்களுடன் நட்பானான். அப்படியும் பள்ளி வாழ்க்கையின் இறுதியில் ஒரு பிணக்கினால் நாங்கள் பிரிந்துவிட்டோம். “நம் சந்திப்பை ரஃபேல், மைக்கேலேஞ்சலோ லியனார்தோ டா வின்ஸி ஆகிய மூவரின் சந்திப்புபோல முன்பு கருதினேன்” என்று அவன் சொல்லிவிட்டுச் சென்றதை நினைத்தால், இன்றும் மிரட்சியாகத்தான் இருக்கிறது. இந்த ஃபேஸ்புக் யுகத்திலும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

எங்கள் பள்ளிக்கும் காஞ்சி சங்கராச்சாரியாருக்கும் மிக நெருங்கிய உறவு உண்டு. ஊருக்கு அவர் வந்தால், பள்ளி திருவிழாக் கோலம் பூணும். எல்லா மாணவர்களுக்கும் திருநீறு வழங்கப்பட்டபோது, நான் வாங்கிக்கொள்ள மறுத்ததும், அதற்காக என்னை யாரும் வேறுபாடாகப் பார்க்காததும் இன்றைக்கு குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கின்றன!

நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு போட்டி குறித்து அறிவிக்கப்பட்டது. நீடாமங்கலம் கலை இலக்கியக் கழகத்தால் நடத்தப்பட்ட போட்டி அது. கவிதை, சிறுகதை, ஓவியம், நடனம் போன்றவற்றுக்காக நடத்தப்படும் அந்தப் போட்டி ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட அளவில் முக்கியமான ஒன்றாகும். நான் கவிதைக்குப் பெயர் கொடுத்திருந்தேன். சும்மா போய்தான் கலந்துகொண்டேன்.  மன்னார்குடி அளவில் என்னுடைய கவிதை தேர்வானது. அடுத்து, அதே கவிதை மூன்று மாவட்ட அளவிலும் முதலாம் இடத்துக்குத் தேர்வானது. நீடாமங்கலத்தில் பரிசு வழங்கும் விழாவுக்கு ஆசிரியர் கருணாகரன் அழைத்துச்சென்றார். அங்கே போட்டியில் வென்றதற்காக ‘கண்ணதாசன் கவிதைகள்’ நூல் பரிசாக வந்தடைந்தது. பாரதியார், பாரதிதாசன் வரிசையில் எனக்குப் பிடித்த அடுத்த கவிஞருடைய நூல். வாழ்க்கையில் என் எழுத்துக்காக நான் வென்ற முதல் பரிசு.

அடுத்து, பதினோராம் வகுப்பிலும் அந்தப் போட்டி குறித்த அறிவிப்பு வந்தது. வகுப்பில் பெயர் கொடுக்க நான் கைதூக்குவதற்கு முன்பே இன்னொரு மாணவன் கைதூக்கினான். எனக்கு அதிர்ச்சி, ‘யாரடா, நம்முடைய பேட்டையில் இன்னொரு ஆள்!’ அமைதியாகக் காட்சி அளித்த அந்த மாணவன், அநாயசமாகப் போட்டியில் என்னை அடித்துத் தூக்கி வீசியதோடு, அந்த ஆண்டின் போட்டியில் வெற்றியாளராகவும் ஆனான். போதாக்குறைக்கு, அறிவியல் ஆசிரியர் வெங்கட்ராஜுலு போன்றவர்கள் வகுப்பறையிலேயே அவனை அவ்வப்போது, கவிதை சொல்லச் சொல்லி, ‘அவள் முகத்தில் இல்லாத ஈர்ப்புவிசையையா / நியூட்டன் புவியிடம் கண்டுபிடித்துவிட்டான்?’ என்று அவன் வகுப்பில் வெடிக்கும் கைதட்டல்களை அள்ளிக்கொண்டிருந்தான். அந்த இளங்.கார்த்திகேயன் பிற்பாடு என் உயிர் நண்பனாகவும் ஆகி, அந்த நட்பு இன்றுவரை அப்படியே நீடிக்கவும்செய்கிறது.

சரி, கவிதைக்கான இடம் போய்விட்டது; அடுத்து எந்த இடத்தைக் குறிவைக்கலாம் என்று பார்த்திருந்தபோதுதான் அடுத்த ஆண்டுக்கான போட்டி அறிவிப்பு வந்தது. கார்த்திகேயன் கவிதைக்கும், நான் சிறுகதைக்குமாகப் பெயர் கொடுத்தோம். சொல்லிவைத்தாற்போல மன்னார்குடி அளவில் வென்றதோடு, மூன்று மாவட்ட அளவிலும் வென்றோம். பரிசுகள் அதிகம் வென்ற பள்ளி என்ற கேடயத்தையும் பள்ளிக்குப் பெற்றுத்தந்தோம்.

இம்முறை எனக்குக் கிடைத்த பரிசு என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று நான் நினைத்துப்பார்க்கவில்லை. ‘சுந்தர ராமசாமி சிறுகதைகள்’ நூல்தான் அது. அடுத்த சில ஆண்டுகளில் சுந்தர ராமசாமியின் எழுத்துகள் என் சிந்தனையிலும் எழுத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. இதோ எனது சமீபத்திய நூலை அவருக்குத்தான் சமர்ப்பித்திருக்கிறேன். அந்தப் பரிசில் இன்னொரு ஆச்சரியம், அந்த நூலை வெளியிட்டது ‘க்ரியா’ பதிப்பகம். அந்தப் பதிப்பகத்தில்தான் பின்னாளில் 10 ஆண்டுகள் பணியாற்றி, அது வெளியிட்ட ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் துணை ஆசிரியர் பொறுப்பு வகித்தேன். என் ஐந்து நூல்களை வெளியிட்டதும் அந்தப் பதிப்பகம்தான். எல்லாவற்றுக்கும் மேல் என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும் பேறுகளில் ஒன்றானது ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணனுடனான நட்பு.

பள்ளியே பாராட்டித்தள்ளியது இந்த வெற்றியை. வகுப்பில் எங்கள் இருவரையும் எழுந்து நிற்கச் சொல்லி, எல்லா மாணவர்களையும் கைதட்டச் சொல்லி, வெகுவாகப் பாராட்டினார் ஆசிரியர். ஆனால், இந்தப் பெருமைகள் எல்லாம் நிரந்தரமானவை இல்லை. அரையாண்டுத் தேர்வில் கணக்கில் நானும் கார்த்திகேயனும் தோல்வியுறவே அதே வகுப்பில் எங்களை எழுந்து நிற்கச் சொன்ன ஆசிரியர் இப்படியும் சொன்னார், ‘இது சிறுகதை, இது பெருங்கதை. இரண்டும் உருப்பட்டாற்போல்தான்!’

அன்று நானும் கார்த்தியும் ஒரு சபதம் எடுத்துக்கொண்டோம்: ‘பள்ளி வாழ்க்கை முடிந்த பிறகு எல்லோரும் வியக்கும்படி பெரிய ஆளாகித்தான் இந்தப் பள்ளிக்கு மறுபடியும் வர வேண்டும்!’

பள்ளி வாழ்க்கைக்குப் பிறகு மறுபடியும் அங்கே செல்லவில்லை. எனினும், ஒருமுறை என் கட்டுரையைப் படித்துவிட்டு, அதில் மன்னார்குடி என்ற குறிப்பைப் பார்த்துவிட்டு சென்னை ‘இந்து தமிழ்’ பத்திரிகை அலுவலகத்துக்கே என்னைப் பார்க்க வந்துவிட்டார் ஆசிரியர் கௌதமன். யாரோ ஓர் எழுத்தாளனாகக் கருதி என் எழுத்துகளை அதுவரை வாசித்து, நேசித்துவந்த அவருக்கு, நான் அவருடைய மாணவன் என்பதை அறிந்துகொண்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதே மகிழ்ச்சியின் வெளிப்பாட்டைத்தான் தலைமையாசிரியர் சேதுராமன் பேசியபோதும் உணர்ந்தேன். பள்ளிக்கு நான் திரும்பச் செல்லாவிட்டாலும், மறுபடியும் தேசியப் பள்ளிக்குள் நுழைவதுபோலும் பள்ளியில் எல்லோரும் பெருமையுடன் என்னை வரவேற்பதுபோலவும் ஒரு உணர்வு ஓடி மறைந்த கணங்களில் திளைத்தேன்.


ஒரு பள்ளிக்கூடமும், ஆசிரியர்களும் நம்முள் எத்தகு மாற்றங்களையெல்லாம் உண்டாக்கியிருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாக வரையறுத்திடுவது கடினம். ஆனால், ஒட்டுமொத்தமாக அங்கே என்ன நிகழ்ந்தது என்பதை உணர்வின் வழிச் சொல்ல முடியும். நான் அங்குதான், எங்கள் தேசிய மேல்நிலைப் பள்ளியில்தான் மலர்ந்தேன்!


Thursday, January 25, 2024

ஒரு வேண்டுகோள்!

அனைவருக்கும் வணக்கம்! பெரும் ஊடகங்களுக்கும் இலக்கிய அதிகார மையங்களுக்கும் இடையே தனிநபர் தனது எழுத்துகளை எல்லோரிடமும் கொண்டுசேர்ப்பது மிகவும் கடினம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது மட்டுமல்லாமல் பெரும் ஊடகத்தில் பணியாற்றியிருந்தாலும் அந்தச் சூழல் தந்திருக்கக்கூடிய சிறு அதிகாரத்தைக் கூட என் தனிப்பட்ட நலன்களுக்காகவோ இலக்கிய நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தியதில்லை. ஆகவே தனிநபராக அதே நேரத்தில் அனைவருடன் நட்பாகவும் பாரபட்சமில்லாத அணுகுமுறையுடனும் தொடர்ந்து செயல்படுவது என்று முடிவெடுத்திருக்கிறேன். 

மிகவும் கடினமான காரியம்தான். ஆனால்...

Tuesday, June 29, 2021

மகிழ் ஆதனின் கவிதை உலகம் - ஒரு ரசனை மதிப்பீடு


டாக்டர் கு. கணேசன்

அன்பு நண்பர், கவிஞர் ஆசைத்தம்பியின் மூத்த மகன் மகிழ் ஆதன் சொல்லித் தொகுத்த சிறார் கவிதை நூல் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ ஒரு பிரதியை எனக்கு அனுப்பி 2 மாதங்கள் ஆகின்றன. கரோனா கொடுத்த வேலைப் பளுவில் இன்று, நாளை என்று நாட்கள் தள்ளிக்கொண்டே வந்து, இன்றுதான் அதை வாசிப்பது சாத்தியமாயிற்று.

சின்னச்சின்ன கவிதைகள்தாம். பலவும் ஹைக்கூ நடையைக் கொண்டவைதாம். எப்படி ஒரு பிஞ்சுக் குழந்தை அம்மாவின் மார்போடு இறுக ஒட்டிக்கொள்கிறதோ அப்படிப் பார்த்ததும், படித்ததும் ‘பசக்கென’ நம்மோடு ஒட்டிக்கொள்ளும் வார்த்தைகள்தான். ஆனாலும், நிறுத்தி நிதானமாக, வரிவரியாய், வார்த்தை வார்த்தையாய் வாசித்தேன். சில கவிதைகளை மறுபடியும் மறுபடியும்கூட வாசித்தேன். ஒரு மணி நேரம் ரசித்து, மகிழ்ந்து முகிழ்ந்தேன் என்றால் மிகையில்லை.  

நான்காம் வகுப்பு படிக்கும் பாலகன் என்ன சொல்லியிருக்க முடியும் என்ற கேள்வியோடு கவிதைகளை வாசிப்பவருக்கு நிச்சயம் பல ஆச்சரியங்கள் காத்திருக்கும்.

அனுபவங்களைப் பதிவு செய்வது கவிதை. அதை வாசிக்கும்போது புதிய அனுபவங்களைத் தருவது நல்ல கவிதை. ஆனால், அந்த அனுபவங்களின் வாயிலாக ஒரு புதிய தேடலைக் காண்பிப்பது மிகச் சிறந்த கவிதை. கவிதை குறித்து இப்படி ஒரு வரையறை உண்டு. இந்த ரகத்தைச் சார்ந்த கவிதைகளை மகிழ் ஆதன் கவிதைகளில் நான் கண்டு வியந்தேன்.

இந்தச் சின்ன வயதில் அவனுக்குக் கிடைத்துள்ள அனுபவங்கள் கொஞ்சமே! இது எல்லோருக்கும் இயல்புதான். ஆனாலும் அவற்றை மறக்காமல் கவிதைகளாக்கியிருக்கிறான் பாருங்கள், அதைத்தான் நாம் பாராட்ட வேண்டும்.

‘அனுபவப் பகிர்வு கவிதை’ என்று எடுத்துக்கொண்டால், அவன் வயதுக்கு என்ன அனுபவம் கிடைத்ததோ அதைக் கவிதையாக்கியிருக்கிறான். குழந்தைகளுக்கு அம்மாக்கள் தரும் அன்புநிறை முத்தங்கள்தானே பல அனுபவங்களைத் தந்திருக்கும்!

‘முத்தம்

முறைவடிவான முத்தம்

என் கன்னத்தில் தொங்கிச்சொட்டும்

தேன் மாதிரிப் பொங்கும்!’

‘முத்தம்’ குறித்த வெறும் அனுபவ வார்த்தைகளாக அல்லாமல் ‘தேன் மாதிரி’ என்று கொஞ்சம் கற்பனையையும் கலந்து சொல்லியிருக்கிறான், பாருங்கள். அங்கேதான் மகிழ் ஆதன் ‘சிறார் கவிஞன்’ ஆகிறான்.

‘தேன் மாதிரி’ என்று சொல்லும்போது ‘இனிமை தந்த முத்தம்’ என்று உடனடி அனுபவத்தையும், அந்த முத்தத்தை நினைக்கும்போதெல்லாம் அம்மாவின் இனிய நினைவுகளையும் சேர்த்து மனதில் தேக்கிக் கொள்ளும்போது அது நாட்பட்ட அனுபவத்தையும் அல்லவா அவனுக்குத் தந்திருக்கிறது! அந்தக் கவிதையை வாசித்ததும் இதே போன்று நம் சின்ன வயது அனுபவங்களையும் அல்லவா போகிறபோக்கில் அவன் கிளறிச்செல்கிறான்.

‘நான்தான்

உலகத்தை வரைந்தேன்

வானத்தில் மிதந்தேன்

வானத்தை நான்

கையில் பிடித்துக் கூட்டிச்சென்றேன்

வானம் என்னைக் காற்றால் கட்டிப்போட்டது

கட்டிப்போடும் நேரத்தில

சூரியன் என்னை வரைந்தது’

மகிழ் ஆதனின் அனுபவங்களின் வாயிலாக ஒரு புதிய தேடலை  நமக்குக் காண்பிக்கும் மிகச் சிறந்த கவிதை இது.

இயற்கையை ரசிக்காத மனிதர் உண்டா? அதிலும் குழந்தைப் பருவத்தில் வான் மேகங்களின் பல வண்ண வடிவங்களைக் கண்டு ரசிக்காதவர்தான் உண்டா? பாலகன் மகிழ் ஆதன் அதற்கு விதிவிலக்கல்ல! இதோ அந்தக் கவிதை!

‘தண்ணியில் நடக்கும் யானை

தண்ணியாக மாறும் யானை

கடலைக் குடிக்கும் யானை

தண்ணியிலே தூங்கும் யானை

தாயாக மாறும் யானை

தனக்குள் போகும் யானை’

மகிழ் ஆதன் ‘கண்ணாடி’ குறித்து ஒரு கவிதை சொல்லியிருக்கிறான்.

‘நம்மள் கண்ணாடியில்

பார்க்கும் அற்புதம்

நம்மளைத் திரும்பியும்

கண்ணாடியில் பார்க்க வைக்கும்’

இந்தக் கவிதையை வாசிக்கும்போது குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா எழுதிய ‘கண்ணாடி’ கவிதை என் நினைவுக்கு வந்தது. அவர் 16 வரிகளில் சொன்னதை மகிழ் ஆதன் 4 வரிகளில் சொல்லியிருப்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

மகிழ் ஆதன் ஒரு ‘மழலைக் கவிதை மேதை’ என்பதில் ஐயமில்லை!

மகிழ் ஆதனுக்கு இது ஆரம்பம்தான். கவி சுகம் கண்ட மனம் அவனை சும்மா விடாது. போகப்போக அனுபவங்கள் கூடும்போது இன்னும் நிறைய கவிதைகள் அவனிடம் பிறக்கத்தான் போகின்றன.

அதிலும் அவனுக்கு இயற்கையை ரசனையோடு அனுபவிப்பதில் ஒரு பிடிப்பு இருக்கிறது. வானம், நிலா, நட்சத்திரம், மழை, மேகம், பூமி, வெயில், நிழல், பூக்கள், ரோஜா, மரம், மான், யானை, புலி, குயில், காகம், பறவை, மீன்கொத்தி, மூங்கில், புல்லாங்குழல் என வரிசைகட்டி கவிதைகளில் சொல்லியிருக்கிறான். இனியும் சொல்லப்போகிறான்.

நண்பர் ஆசைத்தம்பியும் அவரது துணைவியார் சிந்துவும் செய்ய வேண்டியதெல்லாம் இந்த கரோனா காலம் முடிந்த பிறகு வீடு, பள்ளி, படிப்பு என்று அவனைச் சுருக்கிவிடாமல் வெளி உலகத்தை அவனுக்கு விரிவாக அறிமுகப்படுத்த வேண்டும். அதன் பலன் அவனுடைய அடுத்தடுத்த கவிதைகளில் தெரியும் என்பது திண்ணம்.

இதன் தொடக்கமாக, எங்கள் ஊருக்கு (இராஜபாளையம்) அவனை அழைத்து வாருங்கள். அருகில் இருக்கும் குற்றாலத்துக்கு அழைத்துச் செல்லலாம். இயற்கை அழகு கொஞ்சும் மலைத்தொடர்களையும் ஆர்ப்பரிக்கும் குற்றால அருவிகளையும் அவன் பார்த்து, ரசித்து, பரவசமடைந்து ஒரு புதிய குற்றாலக்குறவஞ்சிகூடப் படைக்கலாம்!

சிப்பிக்குள் இருக்கிறது இன்னும் பல முத்துக்கள். அவற்றை வெளியில் கொண்டுவரலாம்.

ஆரம்ப காலத்தில் நானும் ஒரு குழந்தை எழுத்தாளர் எனும் வகையில், சிறார் கவிஞர் மகிழ் ஆதனுக்கு என் நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளும் மனம் மகிழ்ந்த பாராட்டுகளும் ஆசிகளும் நிறையட்டும்.

அன்பு முத்தங்களுடன்,

டாக்டர் கு. கணேசன்,

இராஜபாளையம்.

28.06.2021 


புத்தக விவரங்கள்:

நான்தான் உலகத்தை வரைந்தேன்
(கவிதைகள்)
மகிழ் ஆதன்
வானம் பதிப்பக வெளியீடு
விலை: ரூ.50
தொடர்புக்கு: 9176549991

Monday, April 19, 2021

ஸ்பைடர்மேனால் வரையப்பட்டவன் – மகிழ் உலகத்துக்கு ஓர் அறிமுகம்

 


ஆசை

நான் வெகுகாலமாகக் குழந்தைகளின் மொழியைக்  கவனித்துக்கொண்டுவருகிறேன். மொழியை அவர்கள் வெளிப்படுத்தும் விதத்தில் அறியாமையும் அழகும் ஒன்றுசேர்ந்து வெளிப்படும். கவிதைக்கேயுரிய அதர்க்கம் அவர்களின் மொழியில் வெளிப்படுவதை நாம் காணலாம். 

மகிழ் ஆதன் 2012-ல் பிறந்தான். அவன் ‘அம்மா’, ‘அப்பா’ சொல்ல ஆரம்பித்ததிலிருந்து மொழியை எப்படி உள்வாங்குகிறான், மொழி அவனிடமிருந்து எப்படி வெளிப்படுகிறது என்பதையெல்லாம் நெருக்கமாக கவனித்துக்கொண்டிருந்தோம். உலகத்தை அவன் புதிதாகத் தெரிந்துகொள்ள ஆரம்பித்த நாட்கள் என்பதால் அழகான, ஆனால் நாம் பதில் சொல்ல முடியாத கேள்விகளை, எல்லாக் குழந்தைகளையும் போலவே, கேட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு 4 வயது இருக்கும்போது அவனுக்கும் எனக்கும் பின்வரும் உரையாடல் நிகழ்ந்தது:

எனக்கு ஏசப்பா ரொம்பப் பிடிக்கும்

ஆனா அம்மா என்னை ஏசப்பா கோயிலுக்கு அடிக்கடி அழைச்சுட்டுப் போக மாட்டேங்கிறா.

(ஏசப்பா உன்னோட பேசினாரா?)

அவர் எப்படிப் பேசுவாரு? 

அவரு நிஜம் இல்லை. வரைஞ்சது.

நாமளும் வரைஞ்சதுதான்.

நம்மளை யாரோ வரைஞ்சு அனுப்பியிருக்காங்க.

(யாரு?)

ஸ்பைடர்மேன்.

அவன் பேசியதைக் கேட்டதும் மௌனியின் ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’ எனக்கு நினைவுக்கு வந்தது. ‘கவிதை மாதிரியே பேசுறியே’ என்று அள்ளி அணைத்துக்கொண்டேன். அடுத்ததாகச் சில நாட்கள் கழித்து ஒன்றைச் சொன்னான். அதுவும் அப்படித்தான் இருந்தது. கவிதை என்பதற்கான வரையறை தெரியாவிட்டாலும் எந்தக் கவிதையையும் அவனுக்கு நாங்கள் சொல்லித்தராவிட்டாலும் ‘கவிதை மாதிரியே பேசுறியே’ என்று சொன்னதிலிருந்து இதுதான் கவிதை என்று பிடித்துக்கொண்டுவிட்டான் போல. ஆரம்பத்தில் அவ்வப்போது சொல்லிக்கொண்டுவந்தவன் ஒரு கட்டத்தில் மழையாய்க் கொட்ட ஆரம்பித்துவிட்டான். சொந்த ஊருக்குத் தன் அம்மாவுடன் அவன் சென்றிருந்தபோது விளையாடிக்கொண்டிருந்தபோதெல்லாம் வந்துவந்து கவிதை சொல்லியிருக்கிறான். இரண்டே நாளில் 20-க்கும் மேற்பட்ட கவிதைகள். தொடக்கத்தில் என் மனைவியிடம்தான் அதிகக் கவிதைகளைச் சொல்லியிருக்கிறான். எழுதவோ படிக்கவோ பழக்கப்படாத சமயம் அது. இப்போதுகூட எழுதுவதில் அவனுக்குத் தேர்ச்சி வரவில்லை. ஆகவே, அவன் கவிதை சொல்லச்சொல்ல அவன் கவிதைக்கென்றே வைத்திருக்கும் நோட்டில் எழுதிக்கொள்வோம். நோட்டு கையில் இல்லாத சமயத்தில் கைபேசியில் பதிவுசெய்துகொள்வோம். இப்படியாக இன்று வரை சுமார் 300 கவிதைகள் சொல்லிவிட்டான். அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து ஒரு 80 கவிதைகளை இந்தத் தொகுப்பில் வெளியிடுகிறோம். தற்போது 9 வயதைத் தொடும் மகிழ், 6 வயதுக்குள் ஒரு தொகுப்புக்குத் தேவையான அளவுக்குக் கவிதைகள் சொல்லிவிட்டான்.


குழந்தையிடம் மொழி வெளிப்படுவதைப் பார்ப்பது ஆற்றின் தோற்றுவாயில் உள்ள ஊற்றை அள்ளிக்குடிப்பது போல என்பதை நாங்கள் கண்டுவருகிறோம். அவனே பல சொற்களை உருவாக்கியிருக்கிறான். பல சொற்களுக்கு அவனே அர்த்தம் கொடுத்திருக்கிறான். ‘என் பாடல் சனம் பாடல்’ என்ற வரியில் வரும் ‘சனம்’ என்ற சொல்லுக்கு நாம் அறிந்த பொருள் ’மக்கள்’ (ஜனம்). ஆனால், அவனுக்கு அந்தப் பொருளில் ‘சனம்’ என்ற சொல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதி அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டபோது, ‘காக்கா மாதிரி குயில் மாதிரி கத்துறது’ என்றான். ஆக, மிமிக்ரி என்ற பொருளில் அதைப் பயன்படுத்தியிருக்கிறான். அந்தந்தத் தருணத்துக்குத் தோன்றும் சொல்லும் பொருளும் கூட அவனுடைய கவிதைகளில் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு கவிதையில் ‘தேவகதை’ என்ற சொல்லைக் கூறியிருந்தான். அதன் அர்த்தம் என்ன என்று நாங்கள் கேட்டதற்கு அவன் கூறிய விளக்கத்தை வைத்துப் பார்த்தபோது ‘தேவதை’ என்பதைத்தான் அப்படிக் கூறுகிறான் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. 


இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சில இடங்களில் ‘நம்மள்’, ’பளிச்சின்னு’ என்று பேச்சு நடையில் கவிதை சொல்பவன் சில இடங்களில் ’என் காற்றும் என்னை நேசிக்கும்’ என்று இலக்கிய நடையில் சொல்லியிருக்கிறான். பேச்சு வழக்கு-எழுத்து வழக்கு என்ற இரட்டைப் பண்பு தமிழ், அரபி போன்ற மொழிகளுக்கே உரிய தனித்துவம். அதை மகிழும் பிரதிபலிப்பது வியப்பே. மகிழ் எப்படிக் கூறினானோ அப்படியே நாங்கள் கவிதைகளைப் பதிவுசெய்திருக்கிறோம். நடையையோ மொழியையோ மாற்றவில்லை. எழுத்தில் பதிவுசெய்யும்போது தேவையான இடங்களில் ஒற்று மட்டும் போட்டிருக்கிறோம். அவன் கவிதையைச் சொல்லும்போது கொடுக்கும் இடைவெளிகளுக்கு ஏற்ப வரிகளைக் கூடுமானவரை உடைத்திருக்கிறோம். நிறுத்தற்குறி எதையும் கிட்டத்தட்ட இடவில்லை.  


மகிழின் கவிதைகள் சிலவற்றை என் நண்பர்களும் வழிகாட்டிகளுமான க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன், மருத்துவர் சீதா  ஆகியோரிடம் அனுப்பிக் கேட்டபோது ‘இந்தக் குழந்தையிடம் அசாத்தியத் திறமை இருக்கிறது’ என்று சொன்னதுடன் மகிழைப் பற்றிக் கவலை கொள்ளவும் ஆரம்பித்தார்கள். மழலை மேதைமை என்பது ஒரு சுமை என்றும் வெளியுலகம் அவர்களுக்கு நிறைய ஆபத்துகளை வைத்திருக்கும் என்றும் அந்தச் சுமையை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் கருதினார்கள். அவனுடைய கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டுவர வேண்டும் என்று கேட்டபோது அவர்கள் அப்படிச் செய்யக் கூடாது என்றுதான் கூறினார்கள். இதன் பின்னர் மகிழ் கவிதைகளைப் புத்தகமாக்க வேண்டும் என்ற என் ஆசையை நான் நிறுத்திக்கொண்டுவிட்டேன். ஆனால், ஆண்டுகள் செல்லச்செல்ல, அவன் அதிகமாகக் கவிதைகள் சொல்லச்சொல்ல, என் பிடி தளர்ந்தது. “நம்முடைய அபிப்பிராயங்களின் அடிப்படையில் ஒருவருடைய பணியை மறைக்கக் கூடாது. மகிழை வெறுமனே குழந்தையாக நீ பாவிக்கிறாய். அப்படிச் சுருக்கிப் பார்க்கக் கூடாது” என்று நண்பர் சமஸ் சொன்னார். இதனால் என்னுடைய எண்ணத்தில் மாற்றம் உருவானது. சிறு வயதில் தனக்கு நிகழ்ந்திருக்கக் கூடிய நல்ல விஷயம் ஒன்று தவறிப்போய்விட்டிருக்கிறதே என்று அவன் இளைஞனாக ஆன பிறகு வருந்தக் கூடும் என்பதாலும், உண்மையிலேயே மகிழின் கவிதைகள் ஒரு ‘நிகழ்வு’ என்று நானும் என் மனைவியும் கருதியதாலும்தான் புத்தகம் கொண்டுவர முடிவெடுத்தோம். ஆயினும் இப்போதும் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. 


மகிழ் தனக்குத் தோன்றும்போது கவிதை சொல்வான். சில வரிகள் நன்றாக இல்லை, வேறு சொல் என்றால் யோசித்துச் சொல்வான். அப்போதும் சரியில்லை என்றால் விட்டுவிடுவோம். சினிமா பாடல்களைத் தவிர கவிதைகளின் பரிச்சயம் அவனுக்கு இல்லை. நல்ல கவிதைகள் படித்துக்காட்டலாம் என்று நினைத்து பாரதியாரில் தொடங்கினோம். ‘காக்கைச் சிறகினிலே’, ‘சின்னஞ்சிறு கிளியே’ தவிர ஏதும் பிடிக்காமலும் அவன் வயதுக்குப் பிடிபடாமலும் போனதால் அத்துடன் நிறுத்திக்கொண்டோம். மிகச் சிறு வயதிலேயே பறவைகள் அறிமுகம், அடிக்கடி மாடிக்குச் சென்று வானத்தைப் பார்த்தல் போன்ற பழக்கங்கள் அவனுக்கு ஏற்படுத்திக்கொடுத்தோம். கவிதை சொல்லச் சொல்லி வற்புறுத்தாமல் இருக்கவும் எங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டோம். சில சமயம் மாதக் கணக்கில் கவிதை சொல்லாமல் இருப்பான்; சில சமயம் ஒரே நாளில் 5, 6 என்று தினந்தோறும் கவிதைகள் சொல்லுவான். அவன் போக்கில் விட்டுவிட்டோம். 


தற்போது கூடுவாஞ்சேரியில் அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மகிழ் தமிழ்வழிக் கல்வி கற்கிறான். கதை சொல்வதில் மிகுந்த ஈடுபாடு உடையவன். யோசித்துச்  சொல்லாமல் தோன்றியதைச் சொல்லிக்கொண்டே இருப்பான். அவற்றுள் அழகிய பல கதைகள் இருக்கின்றன. ஸ்பைடர்மேன், விஜய், ஜாக்கிசான் ஆகியோரின் தீவிர ரசிகன். குறிப்பாக, ‘டோராவின் பயணங்கள்’, ‘வருத்தப்படாத கரடி சங்கம்’ போன்ற குழந்தைகள் தொடர்களின் தீவிர ரசிகன்.


இந்தத் தொகுப்பு வெளிவரும்போது க்ரியா ராமகிருஷ்ணன் எங்களுடன் இல்லாமல் போனது எங்களுக்குப் பெரும் இழப்பு. மகிழ் கவிதைகளைப் பற்றி எப்போதும் வியந்துகொண்டே இருப்பார். அவருக்கு எங்கள் நன்றி. மகிழைப் பற்றி எப்போதும் கவலைப்படும் மருத்துவர் சீதாவுக்கும் நன்றி. மகிழை எங்கள் கையில் பத்திரமாகத் தந்த மருத்துவர் கீதா அர்ஜூனுக்கும் நன்றி. மகிழ் கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டுவர வேண்டும் என்று ஆதரவளித்த சமஸுக்கு நன்றி. இந்தப் புத்தகத்தை அழகுற வெளியிடும் ‘நூல்வனம்’ மணிகண்டனுக்கு நன்றி. அவரிடம் ஆற்றுப்படுத்திய தம்பி ராஜனுக்கு நன்றி. பொருத்தமான பின்னட்டை வாசகம் எழுதிக்கொடுத்தவரும், தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரும், மகிழ் கவிதைகளின் ரசிகருமான பா.வெங்கடேசனுக்கும் நன்றி.  


மகிழின் கவித்துவத்தில் எப்போதும் பூரித்திருக்கும் அவனுடைய அம்மா சிந்துவுக்கு என் அன்பு. மகிழுக்கும் அவனுடைய குட்டித் தம்பி நீரனுக்கும் முத்தங்கள்.

நூல் விவரங்கள்:

நான்தான் உலகத்தை வரைந்தேன்
(கவிதைகள்)

மகிழ் ஆதன்

வானம் பதிப்பகம் வெளியீடு

விலை: ரூ.50

புத்தகத்தை வாங்குவதற்கு: மணிகண்டன் - 9176549991

                                                            ஆசைத்தம்பி - 9962292137 

Thursday, December 14, 2017

சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’: முதல் மனப் பதிவுகள்


ஆசை

சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ (யாவரும் பதிப்பக வெளியீடு, 2017) சிறுகதைத் தொகுப்பைப் பற்றிய என் முதல் மனப்பதிவுகளை, அது வெளியான சூட்டுடன், எழுதுகிறேன்.

நிறைகள்:
  1. சுனிலுக்குத் தங்கு தடையில்லாமல் எழுத வருகிறது. அலுப்பூட்டவில்லை. முதல் தொகுப்பு எழுத்தாளர் போன்று தெரியவில்லை.
  2. தான் நினைத்ததைத் தெளிவாகச் சொல்லத் தெரிகிறது சுனிலுக்கு. அவருடைய துறை சார்ந்த அறிவும் பல்வேறு ஈடுபாடுகளும் கதைகளுக்குக் கைகொடுக்கின்றன.
  3. ஒரே மாதிரியான கதைகளை எழுதாமல் வகைமை ரீதியாகவும் பொருள்ரீதியாகவும் மாறுபடும் வகைகளில் எழுதியிருக்கிறார். காந்தி பற்றிய ஆரோகணம் கதை, தொன்மத்தைப் பற்றிய ‘குருதிச் சோறு’ கதை, பெரும்பாலும் உரையாடல் வடிவில் அமைந்த ஜார்ஜ் ஆர்வெலின் பாத்திரத்தைச் சந்திப்பது குறித்த ‘2016’ கதை, அறிவியல் புனைகதையான ‘திமிங்கிலம்’ கதை, அதிநவீனச் செயலிகளினதும் நுகர்வோரை வேட்டையாடுவதுமான நவீன உலகில் எளிய மனித மனம் சிக்கிக்கொள்வதைப் பற்றிய ‘பேசும் பூனை’ கதை, ராஜா காலத்து மாயயதார்த்த உருவக பாணி கதையான ‘கூண்டு’, யதார்த்த பாணியிலான ‘பொன் முகத்தை…’ கதை என்று தன் முதல் தொகுப்பின் 10 கதைகளுக்குள் சற்று வேறுவேறு மாதிரி எழுதிப் பார்த்திருக்கிறார்.
  4. ப்ளூவேல்விளையாட்டு போன்ற அபாயமான செயலிகள், வெறுமை ஊடுருவியிருக்கும் மனித மனதை எப்படி ஆக்கிரமித்திருக்கின்றன என்பதை மட்டுமல்லாமல்  நுகர்வு கலாச்சாரத்தின் வணிக உத்திகள் தொழில்நுட்பத்தின் மூலம் எப்படி நம்மை வேட்டையாடுகின்றன என்பதையும் உணர்த்தியிருப்பதன் மூலம் ‘பேசும் பூனை’ முக்கியத்துவம் பெறுகிறது. முடிவு சற்று சாதாரணமாக இருப்பது போல் தோன்றுகிறது.
  5. ‘பொன் முகத்தைப் பார்ப்பதற்கும்’ கதை சற்று நழுவினாலும் சுந்தர ராமசாமியின் ‘விகாசம்’ கதையைப் போன்று ஆகியிருந்திருக்கக் கூடும். நல்லவேளை, காவிய சோகமாக ஆக்காமல் பகடியாக முடித்திருக்கிறார் சுனில்.
  6. ‘அம்புப் படுக்கை’யில் கதையில் நாடியைப் பிடிக்கும்போது வரும் உணர்வுகள், படிமங்கள் அழகாக இருக்கின்றன. காலத்தில் இடத்தையும் இடத்தில் காலத்தையும் கட்டியெழுப்பும் புனைவு அந்த இடத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
  7. ‘குருதிச் சோறு’ கதை இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கதை. ஒரு நிகழ்காலம், அதற்கு வித்திட்ட கடந்த காலம், கடந்த காலமானது பிராமணியத் தொன்மமாக்கப்படுதல் என்று நீளும் சிறுகதை. ஒரு நாட்டார் தொன்மமாகியிருக்க வேண்டிய பாலாயி அவளால் பிராமணக் குடும்பம் காப்பாற்றப்பட்டதால் பல காலங்களுக்குப் பிறகு பிராமணப் பெண்ணாகக் கட்டமைக்கப்பட்டு பிராமணியத் தொன்மமாக ஆக்கப்படுகிறாள். இதை அவ்வளவு விரிவாகக் கொடுத்திருக்கத் தேவையில்லை. ஆங்காங்கே வரும் குறிப்புகளாலேயே உணர்ந்துகொள்ள முடிகிறது. கதையில் வரும் மருலாளியைச் சுற்றிலும் உள்ள மவுனமும் புதிரும்தான் கதையை மேலே உயர்த்துகின்றன. மருலாளி யார் என்பதை ஒருவாறு ஊகிக்க முடிவது வாசகருக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியது.


குறைகள்
  1. மிகவும் தெளிவாக இருக்கிறார் சுனில். அதனால் அவருடைய கதைகள் கச்சிதமான பாதையில் நடந்துசெல்கின்றன. வழிதவறலும், அதன் மூலம் நிகழச் சாத்தியமான அற்புதங்களும் இல்லாமல் போகின்றன. தனக்குச் சாத்தியமானதையே செய்துகொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. இது முதல் தொகுப்புதான் என்பதால் இது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அடுத்தடுத்த தொகுப்புகளில் சுனில் இன்னும் மேலெழுந்து பறக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஏனெனில், மொழி, கதைசொல்லல் எல்லாம் இயல்பாக வாய்த்திருப்பதால் அவற்றையெல்லாம் கொண்டு அடுத்த கட்டப் பாய்ச்சலை நிகழ்த்துவதற்கான சாத்தியமும் வெகு இயல்பாகக் காத்திருக்கிறது. அதை சுனில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக் கூடாது.   
  2. தூயனின் தொகுப்புக்கு நான் முன்வைத்த விமர்சனத்தை சுனிலுக்கும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. ஆங்காங்கே ஜெயமோகன் தெரிகிறார். ஆரம்ப கால எழுத்துகளில் பெரும்பாலான படைப்பாளிகளின் படைப்புகளில் அவரவர் முன்னோடிகளின் தாக்கம் இயல்பாகவே இருக்கும். ஆகவே, அதைப் பற்றிப் பெரிதும் கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் அடுத்தடுத்த படைப்புகளில் அதை உதற வேண்டியது முக்கியம். இந்த விஷயத்தை சுனில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
  3. கதைகள் சுவாரசியமாக இருந்தாலும் புதுமை உணர்வு சற்றே குறைபடுவதுபோல் தோன்றுகிறது. இது முதல் மனப் பதிவுதான், அடுத்தடுத்த வாசிப்புகளில் மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.


சுனில் மிகுந்த நம்பிக்கையை ஊட்டுகிறார். தன் சக இளம் எழுத்தாளர்களைக் குறித்தும் தொடர்ந்து எழுதுகிறார். (என் போன்ற வருங்கால எழுத்தாளர்களையும் பற்றி எழுதுவார்!). ஆகவே, சுனிலின் வருங்கால இலக்கியச் செயல்பாடு என்பது தன்னையும் புதுக்கிக்கொண்டு தன் சகாக்களுடன் சேர்ந்து வளர்வதாக இருக்கும் என்பதன் கீற்று இப்போதே வெளிப்படுகிறது. படைப்பில் மேலே மேலே சென்றுகொண்டிருக்க சுனிலுக்கு வாழ்த்துத்  தெரிவித்துக்கொள்கிறேன்.  

Tuesday, November 8, 2016

மொழியின் பெயர் பெண்! - பிக்குனிகளின் பாடல்




(உலகப் பெண் கவிஞர்கள் பற்றிய தொடர் ஒன்றை ‘தி இந்து’ இதழின் ஞாயிறு இணைப்பிதழான ‘பெண் இன்று’வில் எழுதிவருகிறேன். ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் என்று வரும் தொடர் இது. இதன் முதல் அத்தியாயத்தின் முழு வடிவம், இங்கே. பிரசுரிக்கப்படாத மொழிபெயர்ப்பும் இங்கு இடம்பெறுகிறது.)

ஆசை

எல்லாத் துறைகளிலும் ஆண்கள் ஆதிக்கம் காணப்படுவதைப் போல கவிதைகளைப் பொறுத்தவரையிலும் ஆண்களின் ஆதிக்கம்தான் அதிகம். கல்வியறிவு பெறுவது, திறமைகளை வெளிப்படுத்துவது போன்றவற்றைச் செய்ய விடாமல் பெண்களை எல்லாச் சமூகத்திலும் ஆண்கள் தடுத்தே வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு இதுவே காரணம். ஆனாலும், கிடைக்கும் சிறு இடத்திலும் பெண்கள் தங்கள் திறமைகளை நிரூபித்தே வருகிறார்கள்.

Saturday, April 9, 2016

அஸிமோவுடன் ஓர் அறிவியல் சவாரி!


                     ஐசக் அஸிமோவ்

ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் ‘நூல்வெளி’ பகுதியில் 09-04-2016 அன்று வெளியான நூல் விமர்சனத்தின் முழு வடிவம் இது.)     
  

அமெரிக்க எழுத்தாளரான ஐசக் அஸிமோவ் (1920-1994) எழுத்துலகம் மிகவும் பிரம்மாண்டமானது. அவர் எழுதிய, தொகுத்த புத்தகங்களின் பட்டியல் மட்டும் ஐநூறைத் தாண்டும். இதில் அறிவியல் புனைகதை, புதிர்க் கதைகள், அறிவியல் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், பைபிள் குறித்த நூல்கள் என்று பல்வேறு வகைகளில் கிட்டத்தட்ட பிரபஞ்சத்துக்கு உட்பட்ட அனைத்தையும் பற்றி எழுதியிருக்கிறார். 500 புத்தகங்களுக்கு மேல் எழுதிய சாதனையை ஐசக் அஸிமோவைப் போலப் பலரும் வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமாகவும் தரமாகவும் எழுதிய வேறொரு எழுத்தாளரைக் காண்பது அரிது.

ஐசக் அஸிமோவின் சாதனைகளில் மிகவும் முக்கியமானது அறிவியலை மக்களிடம் எளிதில் கொண்டுபோய்ச் சேர்த்ததுதான். வழக்கமாக, நிபுணர்களின் எழுத்து நிபுணர்களின் வட்டத்தைத் தாண்டிச்செல்வது அரிது. உயிர்வேதியியல் பேராசிரியராக இருந்தாலும் ஐசக் அஸிமோவின் எழுத்தும் மனதும் பாமரர்களுக்கு நெருக்கமானது. அதனால்தான், அவருடைய புத்தகங்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள, அறிவியல் தாகமுள்ள சாதாரண மக்களால் கொண்டாடப்படுகின்றன.

Saturday, April 2, 2016

பெர்த்தா காசிரீஸ் படுகொலை எழுப்பும் சுற்றுச்சூழல் கேள்விகள்



ஆசை

('தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 12-03-2016 அன்று வெளியான கட்டுரை) 

ஹோண்ட்யூரஸ் நாட்டைச் சேர்ந்த சூழலியல் போராளி பெர்த்தா காசிரீஸ் கடந்த மார்ச் 3-ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடன் இருந்த மெக்ஸிக சூழலியல் போராளி குஸ்தாவோ கேஸ்ட்ரோ சோத்தோ இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்திருக்கிறார். பெர்த்தாவின் படுகொலை உலகெங்குமுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கோபத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. பூர்வகுடி மக்களுடைய உரிமைகளுக்கும் அவர்கள் மீது அக்கறை காட்டுபவர்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே இந்தப் படுகொலை கருதப்படுகிறது.

ஹோண்ட்யூரஸில் மார்ச்-4, 1971-ல் பிறந்தவர் பெர்த்தா காசிரீஸ். லென்கா என்ற பூர்வகுடியைச் சேர்ந்தவர் அவர். செவிலியராக இருந்த அவரது தாயும் ஒரு செயல்பாட்டாளரே. சிறு வயதிலிருந்து  லத்தீன் அமெரிக்க நாடுகளின் கொந்தளிப்பான காலகட்டத்தில் வளர்ந்தவர் பெர்த்தா. பிற லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து ஹோண்ட்யூரஸில் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு மருத்துவரீதியில் உதவியவர் பெர்த்தாவின் தாய். நலிவடைந்தோருக்கு உதவுதல் என்ற இயல்பை இப்படித் தன் தாயின் மூலம் சிறுவயதிலேயே பெற்றிருந்தார் பெர்த்தா.

Monday, August 4, 2014

நான் 'ஆசை' ஆனது எப்படி?



சிறு வயதிலிருந்து எனக்கு திரைப்பட இயக்குநராக வேண்டும் என்பது பெரிய கனவு. அதுவும் சத்யஜித் ரே, மகேந்திரன், பாலு மகேந்திரா மாதிரியான இயக்குநராக ஆக வேண்டும் என்ற கனவு. ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு இருந்தது கனவு மட்டும்தான் அந்தக் கனவைத் தாங்கிப் பிடிக்கக் கூடிய திறமையும் துணிச்சலும் எனக்கு இல்லை என்பதை க்ரியா ராமகிருஷ்ணன் எனக்குப் புரிய வைத்தார். அது மட்டுமல்லாமல் மொழியும் இலக்கியமும்தான் என்னுடைய உண்மையான தளம் என்பதைக் கண்டுபிடித்து அதில் செயல்படுவதற்கான ஊக்கமும் அளித்தார். என் வாழ்க்கை அங்கிருந்துதான் புதிய தடத்தில் செல்ல ஆரம்பித்தது.

Tuesday, June 18, 2013

க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பிறந்த நாள்

இன்று எனது நண்பரும் வழிகாட்டியும் க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாசிரியருமான க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பிறந்த நாள்.

அகராதி, மொழி, இலக்கியம் போன்றவற்றைக் குறித்த பல விஷயங்களை அவரிடம்தான் கற்றேன். எல்லாவற்றையும்விட என் வாழ்வில் நேரடியாகப் பெரும் தாக்கத்தைச் செலுத்தியதும் அவர்தான். நாற்பது வருடங்கள் பதிப்புத் துறையில் இருந்து பலருக்கும் முன்னோடியாக இருந்திருக்கிறார். (ஆனால் இதைப் பெரும்பாலானோர் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள்). தமிழ்ச் சமூகத்துக்கு இவர் வழங்கிய கொடைதான் 'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி'. இந்த அகராதிக்காக அவர் இழந்ததும் இழந்துகொண்டிருப்பதும் நிறைய.

மொழியை வைத்து அரசியல் செய்து ஆட்சிக்கு வந்தவர்களிடமிருந்து எந்தவித உதவியும் கிடைக்காத சூழலில் பெரும் போராட்டத்துடன் இந்த அகராதியைக் கொண்டுவந்தார். சிங்கப்பூர் அரசாங்கம் இந்த அகராதியின் சிறப்பை உணர்ந்துகொண்டு தங்கள் மாணவர்களுக்காக இதைப் பரிந்துரைத்தது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த அகராதியின் முதல் பதிப்புக்கு நூலக ஆணைகூட கிடைக்கவில்லை என்பதுதான் சிறப்பு. கருணாநிதிக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதியும் கடைசிவரை இந்த அகராதிக்குக் கிடைத்தது பாராமுகம்தான். இதில் வெட்கக்கேடு என்னவென்றால் 2009 பாராளுமன்றத் தேர்தலின்போதும் 2011 சட்டமன்றத் தேர்தலின்போதும் தி.மு.க. அரசு தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தமிழுக்குச் செய்த சேவைகளில் ஒன்றாக இந்த அகராதியையும் தொலைக்காட்சி விளம்பரங்களில் குறிப்பிட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டுப் பலரும் க்ரியா அகராதி தி.மு.க. அரசின் உதவியால்தான் வெளியானதா  என்று எங்களிடம் கேட்டார்கள். பற்றிக்கொண்டு வந்தது.

அகராதி மட்டுமல்ல ராமகிருஷ்ணனின் பங்களிப்பு. ந. முத்துசாமியுடன் சேர்ந்து 'கூத்துப்பட்டறை' ஆரம்பித்தது, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தது, மொழிக்காக இயங்கும் 'மொழி' அறக்கட்டளையை உருவாக்கியது போன்ற அவரது பங்களிப்புகளும் மிக முக்கியமானவை.

எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக நான் கருதுவது ராமகிருஷ்ணன் மிகத் தீவிரமாகப் பின்பற்றிய அறம்தான். எல்லாச் செயல்களிலும் அறம் இருக்க வேண்டும் என்பதுதான் அவரது வாழ்க்கை முறை.

அவரது பங்களிப்புகள் இதுவரை புறக்கணிப்பும் இருட்டடிப்பும் செய்யப்பட்டே வந்திருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் தமிழில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள் என்று நான் இரண்டு விஷயங்களை உறுதியாகக் கூறுவேன்; ஒன்று வையாபுரிப்பிள்ளை ஆசிரியராக இருந்து தொகுத்த தமிழ் லெக்சிகன், இன்னொன்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. இவை இரண்டுமே புறக்கணிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியை எப்படி ஆங்கிலேயர்கள் கொண்டாடுகிறார்களோ அப்படி நாம் இந்த இரண்டு அகராதிகளையும் கொண்டாடியிருக்கவேண்டும். ஆனால் நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் கொண்டாடுவதற்கு நமக்கு சினிமா நடிகர்கள் ஏராளமானோர் இருக்கும்போது நாம் எப்படி மேற்குறிப்பிட்ட விஷயங்களைக் கொண்டாடுவோம்?

க்ரியா அகராதியைக் குறித்தும் க்ரியா ராமகிருஷ்ணனைக் குறித்தும் நான் விரைவில் விரிவாக எழுதுவேன். இன்று ராமகிருஷ்ணனுக்கு பிறந்தநாள் என்பதால் சுருக்கமாக இந்தப் பதிவு.

ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்!

Saturday, May 18, 2013

நான் 'ஆசை' ஆனது எப்படி?



சிறு வயதிலிருந்து எனக்கு திரைப்பட இயக்குநராக வேண்டும் என்பது பெரிய கனவு. அதுவும் சத்யஜித் ரே, மகேந்திரன், பாலு மகேந்திரா மாதிரியான இயக்குநராக ஆக வேண்டும் என்ற கனவு. ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு இருந்தது கனவு மட்டும்தான் அந்தக் கனவைத் தாங்கிப் பிடிக்கக் கூடிய திறமையும் துணிச்சலும் எனக்கு இல்லை என்பதை க்ரியா ராமகிருஷ்ணன் எனக்குப் புரிய வைத்தார். அது மட்டுமல்லாமல் மொழியும் இலக்கியமும்தான் என்னுடைய உண்மையான தளம் என்பதைக் கண்டுபிடித்து அதில் செயல்படுவதற்கான ஊக்கமும் அளித்தார். என் வாழ்க்கை அங்கிருந்துதான் புதிய தடத்தில் செல்ல ஆரம்பித்தது.