Monday, May 22, 2017

உரையாடல் நெகிழும் இடம் -ஒரு இந்துத்துவவாதியிடம் உரையாடல்


இந்துத்துவரான மாளவியாவுடன் காந்தி

ஆசை
  
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி, நீண்ட தலைப்புடன் என் வலைப்பூவில் வெளியிட்ட கட்டுரை ‘வரலாற்றின் மிகச் சிறந்த இந்துவின் இந்து மதமா, மிக மோசமான இந்துவின் இந்து மதமா? (அல்லது) இந்துபாகிஸ்தான் ஜிந்தாபாத்!’ (http://writerasai.blogspot.in/2015/10/blog-post_28.html). அந்தக் கட்டுரையைச் சமீபத்தில் படித்துவிட்டு ஒரு இந்துத்துவவாதி எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

அந்த மின்னஞ்சலில் காந்தியையும் சிறுபான்மையினரையும் முற்போக்காளர்களையும் அவர் கடுமையாக நக்கலடித்து எழுதியிருந்தார். கோட்சேவை தேசபக்தர் என்று வேறு எழுதியிருந்தார். நான் உட்பட முற்போக்காளர்கள் எல்லோரையும் போலிகள், சன்மானத்துக்காகக் கூவுபவர்கள் என்ற தொனியில் அந்த மின்னஞ்சல் முழுவதும் எழுதியிருந்தார். அதிலிருந்து சில உதாரணங்கள்:

1:
“சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் தொழுகை நேரங்களில் மட்டுமல்லாது எப்போதுமே ஹிந்துக்களின் ஊர்வலங்கள் மசூதி வழியாக செல்வதை ஆயுதம் தாங்கிய முஸ்லீம்கள் தடை செய்து மதக் கலவரங்கள் வெடித்திருக்கின்றன. இந்த பந்தத்துக்கு தீப்பந்தம் வைத்தது யார் என்று யார் ஒப்பாரி வைக்க முடியும்? காந்தி போலவே நீங்களும் ஆன்மீக அறிவுரைக்கு கிளம்பி விடுவீர்களே? கோவில் விக்கிரகங்கள் ஊர்வலமாக எடுத்து வர பட வேண்டும் என்று ஹிந்து மதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை என்று உங்களுக்கு பிடிக்காத ஹிந்து மதத்தை பற்றி எல்லாம் தெரிந்தது போல வியாக்கியானம் பண்ண கிளம்புவீர்கள்தானே?”

2:
“வாழ்வியல் கட்டாயங்களினால் அரையும் குறையுமாக படித்து புரிந்து கொண்டதை அவசரமாக ஆசை ஆசையாக எழுதி தள்ளுகிறீர்கள். தவறில்லை . வடக்கில் ராஜ் தீப் சர்தேசாய், அவரது மனைவி சாகரிகா கோஷ், 2 ஜி புகழ் பர்கா தத் இவர்கள் அளவுக்கு நீங்கள் என்னதான் முயன்றாலும் உபரி வருமானம் பார்க்க முடியாது என்பதை புரிந்து கொண்டால் சரி. (அதிலும் வடக்கு-தெற்கு இடைவெளியா என்று ஈ.வே.ரா சொன்னது சரிதான் என்று இன்னொரு கட்டுரைக்கு உட்கார்ந்து விடாதீர்கள்!)’
  
2:
“மொத்தத்தில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது, ஆசை! ஏனென்றால் இங்கு புனை கதை வல்லுனர்கள் -அதுவும் இடது சாரி சிந்தனைகளில் தோய்ந்தவராக இருந்துவிட்டால் நல்ல வருமானம் காத்திருக்கிறது! சன்மானம் நிறைய கிடைத்தால் தன்மானமாவது வெங்காயமாவது!

குட் லக்! காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளுங்கள்; தூற்றிக் கொண்டிருங்கள்!”


சரி, நம்முடன் ஒரு இந்துத்துவவாதி முதன்முறையாக  உரையாட வந்திருக்கிறார். அவருடன் சற்றுப் பொறுமையாகப் பேசிப்பார்க்கலாம் என்று முயற்சி செய்து அவருக்கு மிதமான ஒரு மொழியில் பதில் அனுப்பியிருந்தேன். ஒரு இந்துத்துவவாதியை மதித்து நான் பதில் அனுப்பியதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலின் முதல் இரண்டு வரிகள் இவை: “ஒரு நட்சத்திர அறிவுஜீவி பத்திரிகையாளர் என் போன்ற தீவிர ஹிந்துத்துவா ஆதரவாளனை கூட  மதித்து பதில் எழுதுவார் என்பது நான் எதிர்பாராத ஒன்று. நன்றி!”

ஆனால், அந்த மின்னஞ்சலிலும் அவர் கடுமையான மொழியில் அவதூறுகளைக் கொட்டினார். குறிப்பாக இந்த வரிகள்:
“…இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்தை உருவாக்கி வரும் நீங்கள்,  உங்கள் ஆசான்  சமஸ் இவர்கள் எல்லாம் காஷ்மீரில் ஒரு பத்து நாட்கள் உங்கள் குடும்பத்தோடு தங்கி விட்டு அப்புறம் கட்டுரை எழுத வாருங்கள். அங்கு இருக்கிற நாட்களில் பாதுகாப்பு படையினரை ஒதுங்க சொல்லி விட்டு "ரகுபதி ராகவ ராஜாராம்"   பஜனை கீதங்கள் இசைத்து கொண்டு கல்லெறியும் கூட்டத்தினரை அமைதி படுத்துங்கள்.
குறைந்தபட்சம் உங்கள் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர், சாலியமங்கலம், அய்யம்பேட்டை, ராஜகிரி, கொரடாச்சேரி இங்கெல்லாம் போய் மனிதம் தழைக்க மசூதிகளில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குங்களேன். அங்கு  நிறைய உண்மைகள் தெரிய வந்தாலும் திருடனுக்கு தேள் கொட்டியது போல உரத்து கத்த கூட முடியாது. இப்படி தீவிரவாதத்துக்கு சிம்மாசனம் போட்டு கவுரவம் தந்து கட்டுரை எழுதியது என் போன்ற ஒரு சிலருக்கு நினைவு வந்து  கேள்வி கேட்டால் வம்பு! உங்கள் கருத்தை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக உங்களோடு வாதம் செய்து கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம். நீங்கள் படு சாமர்த்தியமாக கக்கும் நஞ்சு கலந்த சிந்தனைகள்அப்படியே ஏற்றுக் கொள்ளாமல்  சிலரால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிராகரிக்கப்பட்டு வருகின்றன என்பதை தெரிய வைக்கும் எளிய முயற்சிதான் இது.”

அவதூறுகளோடு, நான் நட்சத்திரப் பத்திரிகையாளர், சமஸ் எனக்கு ஆசான் என்ற நகைச்சுவைத் துணுக்குகளும் இதில்  இடம்பெற்றிருந்தன. இந்த மின்னஞ்சலுக்குப் பிறகு நான் பொறுமை இழந்துவிட்டேன். “உரையாடுவதற்கான இடமே உங்களிடம் இல்லை என்று நினைக்கிறேன். நஞ்சைத்தான் கக்குகிறீர்கள். ஆகவே, தயவுசெய்து உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்” என்று அவருக்கு பதில் அனுப்பியிருந்தேன். அதற்கு அவர், “அடடா...என்னுடைய சொற்கள் உங்களது காந்திய போர்வையும், இண்டெலெக்சுவல் முகமூடியும் சரலென்று கழன்று விழும் அளவு உங்களை பாதித்து விட்டன என்பது வருத்தத்தை தருகிறது.
இது நான் எதிர்பார்த்ததுதான்என்று பதில் அனுப்பியிருந்தார். எனது அடுத்த மின்னஞ்சலில் நான் வெறுமனே, “Hail Hitler” என்று அனுப்பினேன். அவர் அதற்கு “Hail Hypocrisy! Hail doublespeak!! Hail pusillanimity!!! Hail quislings!!!! Hail fifth column!!!!’ என்று அனுப்பினார். நான் சீக்கிரம் பொறுமையிழந்துவிட்டதை உணர்ந்துகொண்ட நான் மறுபடியும் நிதானமாகச் சற்றுப் பேச முடியுமா என்பதை முயன்றுபார்க்கும் வகையில் மிகவும் அடங்கிய தொனியில் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதற்குப் பிறகுதான் ஒரு மாயம் நிகழ்கிறது.

அவர் இப்படி எழுதியிருந்தார் “பெரு மதிப்பிற்குரிய ஆசை அவர்களுக்கு, எனது ஆதங்கம்..ஏன் ஆத்திரம் என்று கூட சொல்லலாம்..மிகுந்த பதிவுகளை படித்த பின்னரும் கண்ணியம் குறையாமல், இவ்வளவு விரிவாக தன்னிலை விளக்கம் கொடுக்க முன் வரும் உங்கள் பொறுமை, முதிர்ச்சி இவற்றுக்கு தலை வணங்குகிறேன்.

உங்கள் வயதில் நான் இவ்வளவு நிதானமாக இருந்திருப்பேனா என்று என் மனதில் எழும் கேள்வி உங்கள்  அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
முன்பு சொன்னது போல உங்கள் நம்பிக்கைகளை குலைத்து என் கருத்துக்களை வன்மையாக திணிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நான் இந்த வாதத்தை துவக்கவில்லை. ( அது நடக்காது என்பதோடு தேவையற்ற முயற்சி என்பதையும் நான் நன்கு உணர்ந்தவன்.)…. என்னுடைய சொற்களில் இருந்த காட்டம் ஆசை என்ற தனிமனிதரின் மீது நடத்திய தாக்குதல் அன்று. அவை உங்களை நிச்சயம்  புண்படுத்தி இருக்கக் கூடும். மன்னித்துவிடுங்கள். தொடர்ந்து எழுதுங்கள். அப்போதுதான் எதிர்வினையாற்றும் கூர்மையுடன் என் போன்றவர்கள் விழிப்புடன் இருக்க முடியும். உங்கள் கனிவான பதிலுக்கு மீண்டும் எனது பாராட்டுகள்.”

இந்தக் கடிதத்திலும் தன் கருத்துக்கள் சிலவற்றை அவர் விட்டுக்கொடுக்காமல் முன்வைத்திருந்தாலும் அவற்றை முன்வைத்த தொனி மிகவும் மட்டுப்பட்டதாக இருக்கிறது. அவருக்கு என் மேல் பெருமதிப்பு ஏற்படுத்த என் தொனி உதவியிருக்கிறது. அது உண்மையிலேயே நான் காந்தியிடம் சிறிதளவு கற்றுக்கொண்டது. எதிர்த் தரப்பிடம் உரையாடும்போது நம் தொனி எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சொல்லும்போது காந்தி இப்படிச் சொல்கிறார்: “நாம் எதிராளி சொல்வதைக் கேட்க மறுக்கையிலும், கேட்டாலும் அவர்கள் சொல்வதைக் கேலி செய்கையிலும் நம் நடவடிக்கைகளில் நியாயம் புகாது தடுக்கிறோம். எதிராளியின் பேச்சை சகிக்காமலே, பொறுக்காமலே பழகிவிடுகையில் நம்மால் உண்மையை அறிய முடியாமல்போகும். இயற்கையில் நமக்குள்ள அறிவாற்றலின் துணையால் செயல்படுகையில் நமக்கு சரியென்று தோன்றுவதை அஞ்சாமல் சொல்லவும்,செய்யவும் துணிய வேண்டும். ஆனால் நாம் உண்மையென்று நம்பியிருந்தது அவ்வாறில்லை என்று தெரிந்ததும் நம் கருத்தை மாற்றிக்கொள்ளவும், முன்பு நினைத்தது தவறு என்று தயங்காது ஒப்புக்கொள்ளவும் வேண்டும். இவ்வாறு செய்வதனால் நம்மிடமுள்ள உண்மை மேலும் உறுதியாவதோடு, அதிலிருந்த குறைகளும் நீக்கப்பெறும்” (ஹரிஜன்,31-5-1942)

காந்தியின் மிக முக்கியமான நண்பர்களில் ஒருவரான ஹென்றி போலக்கின் மனைவி மிலி போலக், காந்தியைப் பற்றிகாந்தி எனும் மனிதர்’ (தமிழில்: . கார்த்திகேயன், சர்வோதய இலக்கியப் பண்ணை) என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார்.
ஒரு நாள் மாலை தென்னாப்பிரிக்காவின் ஜோஹனஸ்பெர்கில் உள்ள ஒரு அரங்கில் இந்தியர்களும் இந்திய ஆதரவாளர்களும் கலந்துகொண்ட மிகப் பெரிய கூட்டமொன்று நடைபெற்றது. அரங்கமே நிரம்பி வழியும் கூட்டம். கூட்டம் முடிந்து காந்தியும் மிலி போலக்கும் வெளியேறுகிறார்கள். அப்போது வெளிக் கதவின் மறைவில் ஒரு இந்தியர் நிற்பதை மிலி போலக் காண்கிறார். காந்தி நேராக அந்த மனிதரிடம் சென்று, அவருடன் கைகோத்துக்கொண்டு, தீவிரமான தொனியில் ஏதோ பேசுகிறார். பிறகு, தயங்கித் தயங்கி காந்தியுடன் நடந்துசெல்கிறார். மிலியும் அவர்களைப் பின்தொடர்கிறார். தாழ்வான குரலில் இருவரும் பேசிக்கொண்டே நடக்கிறார்கள். தெருவின் முடிவில் அந்த நபர் காந்தியிடம் ஏதோ ஒரு பொருளைக் கொடுத்துவிட்டுச் செல்கிறார். அது என்ன என்று மிலி போலக் காந்தியிடம் கேட்ககத்திஎன்கிறார் காந்தி. அந்த நபர் காந்தியைக் கொல்வதற்காக வந்திருக்கிறார். காந்தி தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்திய மக்களுக்கு துரோகம் செய்வதாகவும், அரசாங்கத்தின் கையாளாக இருந்துகொண்டு இந்தியர்களிடம் நண்பராக, தலைவராக காந்தி நடிப்பதாகவும் அந்த நபர் கருதியிருக்கிறார்.
அதிர்ந்துபோன மிலிஇப்படிப்பட்ட மனிதர்கள் ஆபத்தானவர்கள், அவரைக் கைது செய்திருக்க வேண்டும், நீங்கள் ஏன் அவரை அப்படியே போக விட்டீர்கள்? அவர் ஒரு பைத்தியமாகத்தான் இருக்க வேண்டும்என்கிறார்
"அவர் பைத்தியமல்ல, தவறாகப் புரிந்துகொண்டிருந்தார். நான் அவருடன் பேசி முடித்ததும் என்னைக் கொலை செய்ய தான் கொண்டுவந்திருந்த கத்தியையும் அவர் என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றதைப் பார்த்தாயே," என்று காந்தி பதிலளிக்கிறார். ‘இருட்டில் அவர் உங்களை குத்தியிருப்பார், நான்... ’ என்று பேச ஆரம்பித்த மிலியை காந்தி மேற்கொண்டு பேசவிடவில்லை.
"இதை நினைத்து நீ அதிகம் குழப்பிக்கொள்ள வேண்டாம். என்னைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருப்பதாக அவர் நினைத்தார். ஆனால், உண்மையில் அவருக்கு அந்தத் துணிச்சல் கிடையாது. நான் அவர் நினைத்த அளவுக்கு உண்மையில் மோசமானவனாக இருந்தால் அப்போது நான் சாக வேண்டியவன்தானே? இனி நாம் இதை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை. இது முடிந்துவிட்டது. அவர் இனிமேல் என்னை கொலை செய்ய முயற்சிப்பார் என்று நான் நினைக்கவில்லை. நான் அவரை கைது செய்ய வைத்திருந்தால், அவர் எனக்கு ஒரு எதிரியாக மாறியிருப்பார். இனி அவர் ஒரு நண்பராகவே இருப்பார்."

நான் இதையெல்லாம் சொல்வது என்னை காந்திக்கு இணையானவனாகக் காட்டுவதற்காக அல்ல. காந்தியோடு ஒப்பிடும்போது நானெல்லாம் இன்னும் கோட்சே தரப்பில் இருப்பதற்கான குணங்களைக் கொண்டவனாகவே உணர்கிறேன். உண்மையில் இங்கே வென்றது எனது உரையாடல் அல்ல. காந்தியின் உரையாடல். அதை மிகச் சிறிதளவு பயன்படுத்தியதற்கே ஒரு இந்துத்துவவாதியின் மனம் நெகிழ்கிறது. அவர் தனது கருத்திலிருந்து மாறவில்லைதான். ஆனால், இங்கிருந்து பொறுமையுடன் செயல்பட்டால் அவரை நம் கருத்துகளின் நியாயத்தை நோக்கிக் கொண்டுவரலாம். எத்தனையோ ஆசாரமானா பிராமணர்கள் மாவோயிஸ்ட்டுகளாகவும் பிற இடதுசாரிகளாகவும் மாறவில்லையா! தீவிரம், மிதம் என்ற அளவுகோல்கள் பலவற்றிலும் இதற்கு உதாரணங்கள் காட்ட முடியும். சாரு மஜூம்தாரிலிருந்து ஆரம்பித்து இ.எம்.எஸ்., சீதாராம் யெச்சூரி நம்மூர் மகஇக வீராச்சாமி என்று எண்ணற்ற இடதுசாரிகள் பிரமாண வர்க்கத்திலிருந்து நகர்ந்திருக்கிறார்கள் அல்லவா! பெரியாரின் தொண்டர்களுள் ஒருவரான சின்னக்குத்தூசியும் பிறப்பால் பிராமணர்தானே! அவர்களுக்கு இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது. பெரும்பாலும் யாரோ ஒருவர் அவர்களுடன் நிதானமாக உரையாடியிருக்கக் கூடும். எடுத்தவுடனே அவர்களிடம் ‘போடா பாப்பாரப் பயலே’ என்று சொல்லி ஒதுக்கிவிட்டிருந்தால் அவர்களில் எத்தனை பேர் இன்று இந்தப் பக்கத்தில் வந்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

அவருக்கு இறுதியாக நான் அனுப்பிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன்: “நானும் சில காலம் வரை ‘சங்கி’, ‘பக்த்’, ‘அரைடவுசர்ஸ்’ என்றெல்லாம் வலதுசாரிகளைக் கிண்டலடித்து ஃபேஸ்புக்கில் பதிவுகள் போட்டிருக்கிறேன். ‘என்றும் காந்தி!’ என்ற தொடரை நான் எழுதுவதற்காக காந்தியை மேலும் மேலும் படித்தபோது ‘சே, இந்த மனிதர் எதிர்த் தரப்பை எவ்வளவு கண்ணியமாக அணுகியிருக்கிறார். அவரைப் பற்றி எழுதும் நாம் எந்த அளவுக்குக் கிண்டலடித்துக்கொண்டிருக்கிறோம்’ என்பதை உணர்ந்தேன். அதற்குப் பிறகு நான் அப்படிக் கிண்டலடிப்பதை நிறுத்திக்கொண்டேன். கிண்டலைத்தான் நிறுத்திக்கொண்டேனே தவிர, விமர்சனத்தை அல்ல!”

அதெப்படி வலதுசாரிகளுடன் பேசுவது? முன்பு நான் எழுதிய கட்டுரையொன்றில் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன்: “பாபர் மசூதியை இடித்துத் தொடர் கலவரங்களுக்கும் குண்டுவெடிப்புகளுக்கும் காரணமானவர்கள், குஜராத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்றவர்கள், இன்று மாட்டுக்கறி பிரச்சினையிலும் கருத்து சுதந்திரத்திலும் மூர்க்கமாக நடந்துகொண்டிருப்பவர்களைக் குற்றம் சாட்டாமல் சாத்விகமாகப் பேசுவதா? மிதமான இந்துத்துவாவாதியின் பேச்சு போல் இருக்கிறதே என்று என்னையும் சுட்டிக்காட்டி எளிதாகப் பேசிவிட முடியும். அவர்கள் செய்ததை நம்மால் மறைக்கவோ அவர்களால் மறைக்கவோ முடியாதுதான். அவர்களின் கொடூரத்துக்கு வரலாற்றில் அவர்களால் பதில்சொல்ல முடியாதுதான். (வரலாற்றில் கொடூரங்களை வலது மட்டுமா நிகழ்த்திருக்கிறது என்ற கேள்வியையும் நாம் திறந்த மனதுடன் கேட்டுக்கொள்ள வேண்டும்!) ஆனால், என்ன செய்வது, இன்று அவர்கள் வரலாற்றையும் சட்டங்களையும் உருவாக்கும் அல்லது அழிக்கும் இடத்தில் இருக்கிறார்கள். நாம் அவர்களுக்குச் சரியாக எதிர் தரப்பில் இருக்கிறோம். எடுத்தவுடன் குஜராத் கொலைவெறியர்களே என்று ஆரம்பித்தால் அவர்களுக்கு அடுத்த வரியைப் படிக்க பொறுமை இருக்காது. அடுத்த வாதத்தைக் கேட்க பொறுமை இருக்காது. ‘நண்பரே, நான் சொல்வதைக் கொஞ்சம் காதுகொடுத்துக் கேட்பீர்கள் என்று நம்புகிறேன்என்று சொன்னால் அடுத்தததாக நாம் சொல்லப்போவதை அவர்கள் கேட்பதற்குச் சிறிதளவாவது வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். இம்முயற்சி தோற்றும்போகலாம். ஆனால், ஜனநாயகத்துக்குட்பட்டு இந்த முயற்சியளவுக்கு வெற்றிகரமாகச் செயல்படும் (சிறிதளவே வெற்றி என்றாலும்), வேறொரு வழிமுறை எனக்குத் தெரியவில்லை. இந்தத் தருணத்தில் வன்முறையைத் தவிர்த்த எந்த வழிமுறையையும் முயற்சித்துப் பார்ப்பதால் நமக்கு இழப்பு அதிகம் இருக்காது என்றே தோன்றுகிறது.”             

ஆகவே, நாம் நிதானமான உரையாடலை வலதுசாரிகளிடம் நிகழ்த்தியே ஆக வேண்டும். சற்றுப் பொறுமையாகப் பேசியதில் ஒரு இந்துத்துவ அன்பருக்கு நம்மேல் அன்பு ஏற்படுகிறது என்றால் நூற்றுக்கணக்கான இடதுசாரித் தோழர்கள் இதுபோன்ற உரையாடலை மேற்கொண்டால் எவ்வளவு மாற்றம் ஏற்படும்! இதற்குத்தான் திரும்பத் திரும்ப தொண்டை வரள நான் கத்திக்கொண்டிருக்கிறேன், ‘நிதான உரையாடலை மேற்கொள்ள வேண்டும்’ என்று. ஆனால், அப்படிப்பட்ட குரலை எழுப்புபவர்களுக்கு நாம் இங்கே ‘சங் பரிவாரக் கைக்கூலி’, ‘பார்ப்பன அடிவருடி’ போன்ற பரிசுகளைத்தானே வழங்கிக்கொண்டிருக்கிறோம். ஒருவர் பார்ப்பன அடிவருடியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அவருடன் நிதானமாக நம்மால் பேச முடியாதா?


எங்களுக்கு இடையிலான மின்னஞ்சல் பரிவர்த்தனைகளின் முழு வடிவம்:

இந்துத்துவவாதியின் முதல் கடிதம்:

அன்புள்ள ஆசை என்கிற ஆசைத்தம்பி அவர்களுக்கு,
  
பல தசாப்தங்களாக எவ்வளவோ முயன்று பார்த்து விட்டு சரக்கு விற்பனை ஆகவில்லை என்பதால் இப்போதெல்லாம் நம்ம ஊர் இடதுசாரி அறிவுஜீவிகள் காந்தீய போர்வை போர்த்திக் கொண்டு கடை விரிக்கிறார்கள் என்பதற்கு தொடர்ந்து உங்களை போன்றவர்கள் எழுதும் கட்டுரைகளே சான்று.  
பெருங்குரலில் "ரகுபதி ராகவ ராஜாராம் பாடுவதின்  மூலம் மனதில் பீறிட்டு பொங்கி எழும் கடைந்தெடுத்த ஹிந்துமத துவேஷத்தை மறைக்க முயற்சித்திருக்கிறீர்கள்.

உங்கள் எழுத்தில் அழகு இருக்கிறது ஆனால் ஆழம் இல்லை; ஆர்வம் இருக்கிறது ஆனால் உண்மை இல்லை. எல்லாவற்றயும் மீறி இடதுசாரி பத்திரிக்கையாளர்களில் ஒருவராக அடையாளம் காட்டிக் கொண்டு அது தரும் உபரி வருமானத்தில் நாட்டம் இருப்பது தெள்ளத்தெளிவாக  தெரிகிறது. 

ஆனால் பெரிய கறுப்புக் கண்ணாடி தொப்பி சகிதம் கன்னத்தில் மச்சத்தை ஒட்டிக் கொண்டு கிளைமேக்ஸுக்கு கொஞ்சம் முன்னர் எம்ஜியார் கோமாளித்தனமான மாறு வேடத்தில்  வருவது மாதிரி (வில்லன் அவனது கையாட்கள் தவிர மற்ற அனைவருக்கும் தெரிந்துவிடுவது போல) இது போன்ற எழுத்துக்கள் உங்கள் அடிப்படை வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது என்பது நன்றாகவே தெரிகிறது. 

வாழ்வியல் கட்டாயங்களினால் அரையும் குறையுமாக படித்து புரிந்து கொண்டதை அவசரமாக ஆசை ஆசையாக எழுதி தள்ளுகிறீர்கள். தவறில்லை . வடக்கில் ராஜ் தீப் சர்தேசாய், அவரது மனைவி சாகரிகா கோஷ், 2 ஜி புகழ் பர்கா தத் இவர்கள் அளவுக்கு நீங்கள் என்னதான் முயன்றாலும் உபரி வருமானம் பார்க்க முடியாது என்பதை புரிந்து கொண்டால் சரி. (அதிலும் வடக்கு-தெற்கு இடைவெளியா என்று ஈ.வே.ரா சொன்னது சரிதான் என்று இன்னொரு கட்டுரைக்கு உட்கார்ந்து விடாதீர்கள்!)

சரி., நீங்கள் உதிர்த்திருக்கும் முத்துக்களை ஒவ்வொன்றாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்வோம்:  

கிட்டத்தட்ட பாகிஸ்தான் மக்கள்தொகை அளவுக்கு இந்தியாவிலும் முஸ்லிம்கள் எஞ்சியிருந்தனர். கிறிஸ்தவர்களும் கணிசமாக இருந்தனர். அது மட்டுமல்லாமல், ஏராளமான மொழிகள், இனங்கள் என்று பிளவுகளுக்கும் வேறுபாடுகளுக்கும் பஞ்சமே இல்லை. ஆகவே, சுதந்திரம் அடைந்த சில ஆண்டுகளிலேயே இந்தியா சுக்குநூறாக உடைந்துவிடும் என்றே மேலை நாடுகள் ஆரூடம் சொன்னார்கள். ஒவ்வொரு பத்தாண்டுக்கும் அந்த ஆரூடத்தை அவர்கள் மறுபடியும் புதுப்பித்துக்கொண்டே இருந்தார்கள். ஆனாலும் இந்தியா அப்படியேத்தான் இருக்கிறது. சிலபல மோசமான பிரச்சினைகள் நீடித்தபோதும் இந்தியா சிதைந்துபோகவில்லை. என்ன காரணம்? அதுதான் இந்தியாவின் பன்மைத்தன்மை. எவற்றைப் பிளவுகளாக மேலை உலகமும் இந்தியாவின் அழிவை எதிர்பார்த்தவர்களும் கருதினார்களோ அவற்றைப் பிளவுகளாகக் கருதாமல் இந்தியாவின் ஒருங்கிணைக்கும் நூலிழையாகச் சரியாகக் கண்டுகொண்டவர் காந்தி. 

இதைத்தான் இந்துத்வாவும் சொல்லி வருகிறது. நீ எந்த மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் இந்த தொன்மையான பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்கிறவன் என்று அவனை உள்ளடக்கி கொள்ள முன் வருகிறது. இந்த நாட்டு முஸ்லீம்கள் இஸ்லாமிய ஹிந்துக்கள்  ; இந்த நாட்டின் கிறித்தவர்கள் மதத்தால் கிறித்தவர்கள் மரபினால் ஹிந்துக்கள். உங்கள் தாய் வேளாங்கண்ணி போவதையும் கிறித்தவர்கள் திருநீர் பூசிக்க கொள்வதையும் எதோ நியூட்டன் அல்லது கலிலியோ கண்டுபிடிப்பு போல தெரிவிக்க கிளம்பிவிட்டீர்களே. ஏன், இன்னும் சில முஸ்லீம்கள் ராகுகாலம் பார்க்கிறார்கள், ஜாதகம் கணித்து நல்ல முகூர்த்தமாக பார்த்து கல்யாண தேதி குறிக்கிறார்கள். சுப நிகழ்ச்சிகளுக்கு துணி எடுக்க போனால் மங்களகரமான மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் துணிமணிகளை வாங்குகிறார்கள்.  ஸ்ரீ ராம நவமி அன்று கடப்பா அருகே உள்ள ராமர் கோவிலுக்கு போய் வழிபட்டுவிட்டு தீர்த்தம் சடாரி ஏற்றுக் கொள்கிறார்கள். (உங்கள் கைபேசி எண் இருந்தால் சொல்லுங்கள் வாட்சப்பில் காணொளிக்காட்சியாக அனுப்பி வைக்கிறேன்.)

சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா சிதறவில்லை என்றால் அதற்கு முக்கிய காரணம் நீங்கள் அடிக்கடி சொல்லும் பன்முகத்தன்மையை ஒன்றிணைக்கும் மாபெரும் சக்தியாக விளங்கி வரும் ஹிந்துத்துவா சித்தாந்தம்.  நீங்கள் சொல்லுகிற மாதிரி எதோ தீய சக்திகளால் உந்தப்பட்டு ஹிந்துக்கள் சிறுபான்மையினரை வேட்டையாட தயாரக இருக்கிறார்கள் என்பது உண்மயானால் பிரிவினை ஏற்படுத்திய காயங்கள், பரஸ்பர அச்சங்கள் நீங்காத 52 தேர்தலிலேயே ஹிந்து மஹா சபா அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்திருக்கும். இங்கு ஒரு முஸ்லீம் கூட  இருந்திருக்க முடியாது. காந்திக்கும் முன்பே அஹிம்சை பற்றி நன்கு தெரிந்தவர்கள்   ஹிந்துக்கள் என்பதால்தான் இது சாத்தியமாயிற்று. 

நாடு துண்டாடப் பட்ட போது இருந்த வெறுப்பையும் அச்சுறுத்தலையும் விடவா இப்போது முஸ்லீம்கள் அவற்றை சந்தித்து வருகிறார்கள்?
 'இல்லை'  என்று சொல்ல  நிறைய மனசாட்சியும், சரித்திர அறிவும், உண்மையை சொல்லும் துணிச்சலும் வேண்டும்.  
"ஆமாம்' என்று அடித்து சொன்னால் முன்போக்கு சிந்தனாவாதி, தாராளர், அறிவுஜீவி  இந்த பட்டங்களோடு இது போன்ற கருத்துருவாக்கத்துக்கு கணிசமான நிதியுதவியும் கிடைக்குமே என்கிறபோது அதுதான் வசதியாக இருக்கும்.    

"அவர்களின் தனித்துவ அடையாளங்களை அழித்துவிட்டு ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். அதாவது நம் வீட்டுக்கு வரும் விருந்தாளி, தான் டீ குடிப்பது மட்டுமே வழக்கம், காப்பி குடிப்பதில்லை என்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நாமோ டீ குடிப்பதில்லை, காபிதான் குடிப்போ.....

ராமசாமி நாயக்கரும் அவரது கூலிப்படைகளும் பிராமணர்களை தாக்கி குடுமி அறுப்பு போராட்டம் செய்தார்களே? "பாப்பாத்தியை பொது உடமையாக்கு" என்று தமிழ்நாடு நெடுக சுவரில்  எழுதி தங்களது புரட்சி மனப்போக்கையும் பெண்ணிய சிந்தனையையும் கண்ணியத்தையும் வெளியிட்டார்களே? 
அது அவர்களது தனித்துவ அடையாளங்களை அழிப்பது ஆகாதா? உங்களுடைய இடதுசாரி சிந்தனை அதை சமூக நீதி கணக்கில் சேர்த்து விடுமோ?
(அது மட்டும் அல்ல. ஜூலை 16 ,  1953 தூத்துக்குடியை அடுத்துள்ள புதுக் கிராமத்தில் பிராமணர்கள் மீது நடந்த  வெறித்தாக்குதல், கற்பழிப்பு சம்பவங்கள் பற்றி நேரம்கிடைக்கும்போது ஆய்வு மேற்கொள்ளவும். அந்த மாதிரி சம்பவங்களை கண்டிக்க வேண்டாம், குறைந்த பட்சம் அது போன்ற சம்பவங்கள் நடந்தன என்று ஏதாவது ஒரு வரி உங்கள் கட்டுரையில் குறிப்பிட உங்கள் முன்போக்கு சிந்தனை இடங்கொடுக்குமா?)

இந்த நோக்கில் நம் சமயத்திலுள்ள குறைபாடுகளையும் நாம் ஏற்க வேண்டும். 

இதுவும் யாருக்கும் தெரியாத உண்மையை உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து உணர்த்தி விட்டோம் என்று காலரை தூக்கி வீட்டுக் கொள்ள வேண்டாம். நம் மதத்தில் உள்ள குறைபாடுகளை  புராண கால  சார்வாகனன், ஜாபாலி முனிவர் தொடங்கி நம்ம ஊர் சித்தர்கள், பிற்காலத்தில் கர்நாடகத்தில் பசவேஸ்வரர்  - அக்கம்மாதேவி, ஒரிசாவில் சைதன்ய மஹா பிரபு, கேரளத்து நாராயணகுரு இவர்களெல்லாம் சாடி இருக்கிறார்கள். எனவே சீர்திருத்தம் பற்றி   இந்துக்களிடம் பேசுவது தூத்துக்குடிக்கு உப்பு சப்ளை செய்வது அல்லது சேலத்துக்கு மாம்பழம் அனுப்புவது போல தேவையில்லாத முயற்சி.  

எல்லா மதங்களும் சமமானவை என ஏற்பது சமயங்களுக்கிடையே வித்தியாசங்களை நீக்குவது அல்ல....
இது காந்தியின் இன்னொரு முத்து. கிட்டத்தட்ட சகோதரர் பால் தினகரன், ஜாகீர் நாயக்  ரேஞ்சுக்கு காந்தியார் யோசித்திருக்கிறார் என்று படுகிறது. ஏனென்றால் எம்மதமும் சம்மதம் அல்ல என்ற உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில்தான் மானாவாரியாக மதமாற்றம் நடத்தப்பட்டு வருகிறது. சாதியத்தை காரணம் காட்டி அதையும் நியாயப்படுத்த உங்களை போன்றவர்கள் கிளம்பி வந்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கைதான் அவர்களுக்கு! 

.....ஆனால், கார்கில் பிள்ளையாரை இப்போது அந்த கிறித்தவத் தெருவில் என்னால் இழுத்துச்செல்ல முடியுமா? எவ்வளவு அற்புதமான பந்தத்தை நாம் இப்படிச் சிதைத்துவிட்டோம். அதுவும் இந்து மதத்தின் பெயரால்?

ஓஹோ, கார்கில் விநாயகரை  அவர்கள் வசிக்கும் பகுதி வழியாக கிறித்தவர்கள்  அனுமதிக்காவிட்டால் அது ஹிந்துக்களின் குற்றம்! மத நல்லிணக்கம் தழைக்க அனுமதியுங்களேன் என்று அவர்களுக்கு இது போல அறிவுரை வழங்குவது முடியாது என்பதைஒப்புக் கொள்கிறீர்களா? (அது சரி, பொது இடங்கள் வழியாக ஊர்வலங்களை நடத்தி செல்ல காவல் துறையினர் அனுமதி இருந்தால் போதாதோ?சிறுபான்மையினருக்கு அந்த அதிகாரம் வேறு உண்டா, சபாஷ்!) இந்த மாதிரி வெட்கமே இல்லாமல், நடு நிலை வகிப்பது போல நடிக்கக்கூட முயலாமல் எப்படி   உங்களால் பிதற்றி தள்ள முடிகிறது, ஆசைத்தம்பி?

சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் தொழுகை நேரங்களில் மட்டுமல்லாது எப்போதுமே ஹிந்துக்களின் ஊர்வலங்கள் மசூதி வழியாக செல்வதை ஆயுதம் தாங்கிய முஸ்லீம்கள் தடை செய்து மதக் கலவரங்கள் வெடித்திருக்கின்றன. இந்த பந்தத்துக்கு தீப்பந்தம் வைத்தது யார் என்று யார் ஒப்பாரி வைக்க முடியும்? காந்தி போலவே நீங்களும் ஆன்மீக அறிவுரைக்கு கிளம்பி விடுவீர்களே? கோவில் விக்கிரகங்கள் ஊர்வலமாக எடுத்து வர பட வேண்டும் என்று ஹிந்து மதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை என்று உங்களுக்கு பிடிக்காத ஹிந்து மதத்தை பற்றி எல்லாம் தெரிந்தது போல வியாக்கியானம் பண்ண கிளம்புவீர்கள்தானே?

சிறுபான்மையினரும் பெரும்பான்மையினரும் கலந்து வசிக்கும் எல்லா தேசங்களிலும் நடப்பதுபோலத்தான் இந்தியாவிலும் நடக்கிறது. பெரும்பான்மையினர் தங்களைச் சூழ்ந்திருப்பதே சிறுபான்மையினரின் அச்சத்துக்கு முதல் காரணமாகிறது. அடுத்ததாக, பெரும்பான்மையினரின் ஆதிக்கம் சிறுபான்மையினரில் சிலரை வன்முறைப் பாதையில் ஈடுபடத் தூண்டுகிறது. யாரோ சிலர் அப்படி ஈடுபடும்போது சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கான வாய்ப்பாக அதைப்  பயன்படுத்திக்கொண்டு பெரும்பான்மையினர் மூர்க்கமாகச் செயல்பட பிரச்சினை பூதாகரமாகிறது. விளைவு இரண்டு தரப்பிலும் அமைதியின்மை. 

What a simplistic interpretation! Absolute bunkum!!
இஸ்லாம் அல்லது முஸ்லீம்களின் மனோபாவம் பற்றின சரியான புரிதல் இல்லாததால் இன்னொரு பிதற்றல்!
எங்கெல்லாம் பெரும்பான்மையினரோ அங்கெல்லாம் சிறுபான்மையினர் ஒழிப்பு அல்லது உரிமை மறுப்பு! ஜனநாயகம் என்பது பற்றி மூச்சு விட முடியாது. எங்கெல்லாம் சிறுபான்மையினரோ அங்கெல்லாம் இஸ்லாமிய நாடுகளையும் விட கூடுதல் உரிமைகள், சுதந்திரம்!  இது சரித்திரம் சொல்லும் உண்மை.

சிறுபான்மையினர் தவறிழைக்க வாய்ப்பில்லை. அப்படியே தவறிழைத்தாலும் அதைத் திருத்திக்கொள்ள முடியும். ஆனால், பெரும்பான்மையினரைப் பொறுத்தவரை அதிகாரபோதை, ஆதிக்க போதை அவர்களின் தலைக்கேறுமென்றால் என்றால் அதைத் திருத்துவது மிகமிகக் கடினம்.” காந்தி எச்சரித்த தருணம் இன்று உருவாகியிருக்கிறது. இந்தத் தருணம் இந்து மதத்தின் கிளையில் உட்கார்ந்துகொண்டு அதன் அடிமரத்தை இந்துத்துவம் வெட்டும் தருணம்.

பகுத்தறிவு என்பதை கழற்றி வைத்துவிட்டால் சிக்கல் இல்லமல் ஏற்றுக் கொள்ளலாம். 
காந்தியின் காமடிக்கு ஒரு எல்லையே கிடையாதா? ஒரு பக்கம் அவர்...இன்னொரு பக்கம் அவரை  சீரியஸாக எடுத்துக் கொண்டு ஹிந்துத்துவாவை தாக்க அவரது கொள்கைகளை ஒரு கருவியாக பயன் படுத்த முற்படும் உங்கள் போன்றவர்கள்.. உங்கள் இருவரில் யார் பெரிய கோமாளி என்பதை தீர்மானிப்பது அத்தனை  எளிதல்ல! 

முஸ்லிம்களும் ஆங்கிலேயரும் சேர்ந்து கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக நம்மை அடக்கியாண்டு பெருங்கொடுமைக்குள்ளாக்கிவிட்டார்கள் என்பதுதான் இன்று அவர்கள் மீது இந்துத்துவர்களுக்கு இவ்வளவு கோபம் எழுவதற்குக் காரணம். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளாக நம் இந்து மக்களிலேயே பெரும் பிரிவினரைச் சூத்திரர்களென்றும், அதைவிடக் கொடுமையாக இன்னும் பலரை பஞ்சமர்கள் என்றும் இந்து மதத்தின் பெயரால் கொடுமைப்படுத்திவருகிறோமே, அதற்கு யார் மீது கோபப்படுவது? முஸ்லிம்களையும் கிறித்தவர்களையும் எதிரிகளாக அடையாளம் காண்பதற்குப் பதில் நம்மிடம் உள்ள சாதியத்தையல்லவா நமது பெரும் எதிரியாக நாம் கருதியிருக்க வேண்டும். நம்மைச் சேர்ந்தவர்களையே கீழான இழிநிலைக்கு ஆளாக்கிவிட்டு முஸ்லிம்கள் மீது மட்டும் கோபம் கொள்வதில் சிறிதும் தார்மிக உரிமை நமக்கு இல்லை.


சிலிர்க்க வைக்கிறீர்கள் உங்கள் அறிவு சார்ந்த சிந்தனையினால்!
பிரிவினைகள் பேதங்கள் எதோ ஹிந்து மதத்தின் புராதன சொத்துக்கள் என்பது போல திரிப்பது சரித்திரம் பற்றிய சரியான புரிதலோ வாசிப்போ உங்களுக்கு அமையவில்லை என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. 
இது மாதிரி வேறுபாடுகள் இன்று வரை ஒவ்வொரு மதத்திலும் நிலவி வருகின்றன என்பது விரலிடுக்கின் வழியாக உலகை பார்க்கும் உங்களை போன்றவர்களுக்கு தென்படாது. இஸ்லாத்தில்   எத்தனை   பிரிவுகள், கிறித்தவத்தில் எத்தனை   பிரிவுகள்,  மத வெறியினால் ஏன் இத்தனை ரத்தம்ஆறாக ஓடுகிறது என்று ஒரு நெடுங்கட்டுரைக்கான விஷயம் உண்டு.    

அதனால்தான் அவர் வரலாற்றிலேயே சிறந்த இந்து. அதனால்தான் அவரைக் கொன்றவன் வரலாற்றிலேயே மோசமான இந்து.

 காந்தி  தனது பரிசோதனைகளை சத்தியத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் ஒட்டு மொத்த ஹிந்துக்களின் நலனோடு விஷப் பரீட்சை செய்ய முயன்றவர் என்றாலும்    
கோட்ஸேயின் குற்றம் மன்னிக்க முடியாத மாபாதகம் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.  சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன் படுத்தி அவரை விடுவித்து விடலாம் என்று ஆலோசனை வழங்க சென்னை மைலாப்பூரை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் முன் வரும்போது செய்த குற்றத்துக்கு மரண தண்டனைதான் ஏற்றது என்று  அவரே அந்த  உதவியை மறுத்து விடுகிறார். எனவே அரை குறை தவல்களை வைத்துக் கொண்டு உங்கள் புனைகதை ஆற்றலை வைத்து அவரை ஒரு மோசமான இந்து என்று பழிப்பது  உங்களை ஒரு இண்டெலெக்சுவலாக அடையாளம் காட்டும் ஆனால் உண்மைக்கும் உங்கள் எழுத்துக்கும் சம்பந்தமில்லை என்பதையும் தவறாது பறை சாற்றும். 

என்னை ஒரு ஹிந்து வெறியன் என்று நீங்கள் புரிந்து கொண்டாலும் ஒன்றை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன்: கோட்ஸே அவன் கொன்ற காந்தியை போலவே இந்த மண்ணையும், அதன் மாண்பையும், அதன் மக்களையும், அதன் நலனையும் அதே தீவிரத்துடன் நேசித்தான். 

( நீதிமன்றத்தில் அவரது  வாதத்தை கேட்ட முக்கிய நீதிபதி கோஸ்லா "அன்று மட்டும்  பொது மக்களில் யாரவது ஒரு சிலர் ஜூரிகளாக அமர்த்தப்பட்டிருந்தால் அவர் குற்றமற்றவர் என்று ஏகமனதாக முடிவு சொல்லி இருந்திருப்பார்கள்" என்று சொன்னது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
ஆதாரமுள்ள இன்னொரு கொசுறுத் தகவல்! இன்று போராளிகள்,  புரட்சியாளர்கள் என்று அமைப்புக்கு எதிராக கொடி பிடிப்பது அல்லது அடியோடு தகர்த்தெறிந்துவிடுவது என்று முயன்று கொண்டிருக்கிற உங்கள் மனதுக்குகந்த  அனைத்து  குழுக்களும் போற்றும் அம்பேத்கர் தனது சட்ட நுண்ணறிவை பயன் படுத்தி கோட்ஸே விடுதலைக்காக தீவிரமாக முயற்சி செய்தார்!  என்ன மூச்சடைத்து போய் விட்டீர்களா?)

கருணையில், அன்பில், விருந்தோம்பலில், நட்பில், பன்மைத்தன்மையில் தலைசிறந்த நாடாக உலகமே இந்தியாவை வியந்து பார்த்திருக்கிறது. லட்சக் கணக்கான மேற்கத்தியர்கள் இந்தியாவுக்கு வருவது உலகுக்கே ஞானத்தையும் அன்பையும் போதித்த நாடு என்பதனால்தான்.

ஹிந்துக்கள் பெரும்பான்மையினராகவும் பரந்த மனது கொண்டவர்களாகவும் இருப்பதால்தான் அது சாத்தியமாயிற்று என்பது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது? 

நிச்சயம் ஒரு விஷயத்திற்காகவாவது உங்கள் கட்டுரை கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெறும்- நீளமான, குழப்பும் தலைப்புக்காக! தமிழ் இந்து தலைப்புகளையே தூக்கி சாப்பிடுவது போல..

வாலிபம், உடலில் வலு, உண்மைகளை அறியாது உணர்ச்சிவசப்படும் குணம், பாரம்பரியத்தின் மீது வெறுப்பு, எங்கிருந்தோ இறக்குமதியான தத்துவங்களில் ஈடுபாடு, சரித்திரம் பற்றிய புரிதல் இல்லாமை  இதெல்லாம் இருக்கும் வரை  விளையாட விட்டெறிந்த துணிப்பந்தை ஆர்வத்துடன் கிழித்து சின்னாபின்னம் செய்யும் நாய் போல புரட்சி ஜுரத்தில்  மனம் கிடந்தது அல்லாடும். உண்மைகள் தெரிய வரும்போது பொய்களை விற்று பொருள் தேடியது கருப்பு-வெள்ளை படங்களில் வருகிற மனசாட்சி போல பிரம்மாண்டமாய் கண் முன் நின்று தொந்தரவு செய்யும்

அது சரி, உங்கள் பிதற்றலில் ஓரிடத்தில் "பங்குத்தந்தை கூட  அதை  ஏற்றுக்  ஏற்றுக்கொள்ள மாட்டார்தான்" என்று ஒரு வரி பார்த்தேன். அந்த பங்குத்தந்தைக்கு என்ன பொருள் என்பதை இந்த சாமானியனுக்கு புரிகிறமாதிரி சொல்ல முயலுங்களேன்? உங்கள் அறிவுஜீவி தனத்தை இதில் கூடவா காட்ட வேண்டும்?

மொத்தத்தில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது, ஆசை!
ஏனென்றால் இங்கு புனை கதை வல்லுனர்கள் -அதுவும் இடது சாரி சிந்தனைகளில் தோய்ந்தவராக இருந்துவிட்டால் நல்ல வருமானம் காத்திருக்கிறது!

சன்மானம் நிறைய கிடைத்தால் தன்மானமாவது வெங்காயமாவது!

குட் லக்! காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளுங்கள்; தூற்றிக் கொண்டிருங்கள்
XXXXXXX (பெயர்)


எனது பதில்:
அன்புள்ள நண்பருக்கு வணக்கம்!

இந்தப் பக்கம் இடதுசாரிகள் என்னவென்றால்இந்துத்துவவாதி, ஏகாதிபத்திய கைக்கூலி, பார்ப்பனிய அடிவருடி, மோடி அடிவருடிஎன்றெல்லாம் முத்திரை குத்துகிறார்கள்.

அந்தப் பக்கம் உங்களைப் போல வலதுசாரிகளெல்லாம்போலி அறிவுஜீவி’, ‘சன்மானத்துக்காகக் குலைக்கும் நாய்’, ‘Presstitute', ‘Anti-indian' என்றெல்லாம் முத்திரை குத்துகிறார்கள்.

நான் எங்கு போய் ஒளிந்துகொள்வது? alt="😁" goomoji=1f601 data-goomoji=1f601 class=CToWUd v:shapes="_x0000_i1025">


பிற மனிதர்களை நன்னம்பிக்கையுடனே (good faith) அணுக வேண்டும் என்று நாம் நம்பும் சித்தாந்தமும் மதமும் நமக்குக் கற்றுக்கொடுக்கவில்லையென்றால்

அல்லது

அவற்றிடமிருந்து நம்மால் கற்றுக்கொள்ள முடியவில்லையென்றால்

அல்லது 

மதங்கள், கோட்பாடுகள் போன்றவற்றைவிட மனிதர்களும் இயற்கையுமே முக்கியம் என்று நாம் நம்பும் சித்தாந்தமும் மதமும் நமக்குக் கற்றுக்கொடுக்கவில்லையென்றால்

அல்லது 

அவற்றிடமிருந்து நம்மால் கற்றுக்கொள்ள முடியவில்லையென்றால்

அவர் இடதுசாரியோ வலது சாரியோ இருவருமே மனிதத்துக்கு எதிரானவர்கள் என்று கருதுகிறேன்.

உங்களுக்கு இரண்டு தகவல்கள்: நீங்கள் படித்த கட்டுரை எந்தப் பத்திரிகையிலும் வெளியாகாதது. என் வலைப்பூவில் மட்டுமே வெளியானது. இதற்கென்று எந்த ஆண்டி-இந்தியர்களிடமும் நான் சன்மானம் பெறவில்லை. அப்படிச் சொன்னாலும் நீங்கள் நம்புவதில்லை. ஏனெனில், இந்தியா, இந்துத்துவா, மோடி மீதெல்லாம் விமர்சனம் வைப்பவர்கள் எல்லோரும்ஆண்டி-இந்தியர்கள்என்றே நீங்கள் கருதுகிறீர்கள். உங்கள் நம்பிக்கை உங்களுக்கு! என் நம்பிக்கை எனக்கு.

இரண்டாவதாக, கம்யூனிஸ்டுகளை விமர்சித்து ஃபேஸ்புக்கிலும் பத்திரிகையிலும் எழுதுவதற்காக நானும்  என் நண்பர்களும் தொடர்ந்து இடதுசாரிகளால் அவதூறு செய்யப்படுவதை நீங்கள் அறிய மாட்டீர்கள்

தீவிரமாகப் போனால்இடதும் வலதும் ஒண்ணு! இதை அறியாதவர் வாயில் மண்ணுஎன்பதை நீங்கள் எல்லோரும் நிரூபித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் கோட்ஸேவுக்குச் சொல்லும் சாக்குப்போக்கைத்தான் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். காந்தியைக் கொல்வதற்குப் பதிலாக வெள்ளையர்களை எதிர்த்து பகத் சிங் போலவாவது கோட்ஸே ஏதாவது செய்திருந்தால் (நமக்கு வன்முறையில் உடன்பாடு இல்லை என்றாலும்அவரை ஒரு தேசபக்தர் என்று கொண்டாடியிருக்கலாம். தேசத்தந்தையைக் கொன்றுவிட்டு என்னதேசபக்திபட்டம் வேண்டிக்கிடக்கிறது?


எனக்கு இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், கம்யூனிஸம், காந்தியம் எல்லாவற்றையும் விட முக்கியமானது மனிதமும் என் மனசாட்சியும். இவற்றுக்கு உதவி செய்யும் வகையில் மதங்களிலும் கோட்பாடுகளிலும் எந்தப் பகுதிகள் இருக்கின்றனவோ அந்தப் பகுதிகளை மட்டுமே என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்!  

என் கருத்துகள் தங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்

அன்புடன்
ஆசைத்தம்பி

இந்துத்துவவாதியின் இரண்டாவது மின்னஞ்சல்:

ஒரு நட்சத்திர அறிவுஜீவி பத்திரிகையாளர் என் போன்ற தீவிர ஹிந்துத்துவா ஆதரவாளனை கூட  மதித்து பதில் எழுதுவார் என்பது நான் எதிர்பாராத ஒன்று. நன்றி!

குடுமி அறுப்பு, இந்து மதம் குறித்த ஆபாச பட்டிமன்றம், ராமாயண எரிப்பு, சேலம் ஊர்வலம், ராமருக்கு செருப்பு மாலை இதெல்லாம் நீங்கள் நம்புவதாக கூறும் மனிதத்தில் அடக்கம் என்றால் என்னிடம் கேள்விகளே கிடையாது. இவை எல்லாம்  உங்கள்சீர்திருத்த பட்டியலில் வந்து விடும் ஐட்டங்கள் போலும்

மனசாட்சி பற்றி சொல்லி இருக்கிறீர்கள். இடதுசாரி அமைப்புகள், நாயக்கர் சித்தாந்தங்கள் இதர தேச விரோத சக்திகள் இவை பற்றி விமரிசனம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டு எழுதுவதில் ஒரு செல்லமான  ஆதங்கம் கலந்த அங்கலாய்ப்பு-"என்ன நீங்க.... நம்ம ஆளுங்க; நீங்க போய் இப்புடி பண்ணினா எப்புடி..?" என்கிற தொனி தென்படுகிறதே தவிர ஹிந்துத்துவாவை தாக்கும் ஆக்ரோஷம் அதில் இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும்இப்போது அதே மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பின்னதில் இருக்கிற முனைப்பு முன்னதில் இருக்கிறதா என்பதை?

பிராமணர்கள் பற்றின ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லாமல் பசப்பி இருக்கிறீர்கள்.
அவர்கள் பற்றின கொச்சையான விமரிசனங்கள் நக்கல் நையாண்டிகள் எல்லாம் சமூக நீதி கணக்கில் சேர்ந்து விடும்; தவிர எதிர்த்து ஒரு பயல்  வாயை திறக்க மாட்டான். வேறு கோஷ்டிகளை பற்றி வாயை திறந்தால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் என்பது புரியாதவரா நீங்கள்

இன்று வெறுப்பரசியல் என்று கூக்குரல் இடும் நீங்கள் அதன் மூல கர்த்தாவைத்தானே பகுத்தறிவு பகலவன் என்று தலை மேல் வைத்துக் கொண்டு கூத்தாடியதோடு அல்லாமல் அவரது எடைக்கு எடை என்னவெல்லாம் கையில் கிடைத்ததோ அதை எல்லாம் அன்பளிப்பாக கொடுத்தீர்கள்? அவரை விட ஒரு பாசிஸ்ட் தமிழ் நாட்டில் உண்டா?
இன்னமும் சொல்கிறேன். உங்களுக்கு நல்ல வளமான எதிர்காலம் காத்திருக்கிறது. ஏனென்றால் புனைகதை வல்லுநர்களை தமிழர்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.  

இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்தை உருவாக்கி வரும் நீங்கள்,  உங்கள் ஆசான்  சமஸ் இவர்கள் எல்லாம் காஷ்மீரில் ஒரு பத்து நாட்கள் உங்கள் குடும்பத்தோடு தங்கி விட்டு அப்புறம் கட்டுரை எழுத வாருங்கள். அங்கு இருக்கிற நாட்களில் பாதுகாப்பு படையினரை ஒதுங்க சொல்லி விட்டு "ரகுபதி ராகவ ராஜாராம்"   பஜனை கீதங்கள் இசைத்து கொண்டு கல்லெறியும் கூட்டத்தினரை அமைதி படுத்துங்கள்.

குறைந்தபட்சம் உங்கள் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர், சாலியமங்கலம், அய்யம்பேட்டை, ராஜகிரி, கொரடாச்சேரி இங்கெல்லாம் போய் மனிதம் தழைக்க மசூதிகளில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குங்களேன். அங்கு  நிறைய உண்மைகள் தெரிய வந்தாலும் திருடனுக்கு தேள் கொட்டியது போல உரத்து கத்த கூட முடியாதுஇப்படி தீவிரவாதத்துக்கு சிம்மாசனம் போட்டு கவுரவம் தந்து கட்டுரை எழுதியது என் போன்ற ஒரு சிலருக்கு நினைவு வந்து  கேள்வி கேட்டால் வம்பு

உங்கள் கருத்தை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக உங்களோடு வாதம் செய்து கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம். நீங்கள் படு சாமர்த்தியமாக கக்கும் நஞ்சு கலந்த சிந்தனைகள்அப்படியே ஏற்றுக் கொள்ளாமல்  சிலரால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிராகரிக்கப்பட்டு வருகின்றன என்பதை தெரிய வைக்கும் எளிய முயற்சிதான் இது.

Good Luck! You have a bright future!
xxxxxxxxxx


எனது பதில்:
அன்புள்ள நண்பருக்கு,

நம் இருவருடைய கடிதங்களையும் பொறுமையாக நடுநிலையாளர் யாராவது ஒருவரிடம் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொல்லுங்கள். யாருடைய எழுத்தில் நஞ்சு இருக்கிறது என்று தெரியும். ஒவ்வொரு நாளும் இடது சாரிகளுடன் போராடிக்கொண்டிருக்கும் எனக்குத்தான் தெரியும் நிதானத்தின் வலி!

உங்கள் மொழியில் சொல்வதானால், மோடியின் ஆட்சி நீடிக்கும்வரை (இன்னும் 12 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என்று நினைக்கிறேன்) bright future மோடிக்கு ஜால்ரா அடிப்பவர்களுக்கு மட்டுமே!

உரையாடுவதற்கான இடமே உங்களிடம் இல்லை என்று நினைக்கிறேன். நஞ்சைத்தான் கக்குகிறீர்கள். ஆகவே, தயவுசெய்து உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்

இந்துத்துவவாதியின் மூன்றாவது மின்னஞ்சல்:
அடடா...என்னுடைய சொற்கள் உங்களது காந்திய போர்வையும், இண்டெலெக்சுவல் முகமூடியும் சரலென்று கழன்று விழும் அளவு உங்களை பாதித்து விட்டன என்பது வருத்தத்தை தருகிறது.
இது நான் எதிர்பார்த்ததுதான்.
சரியான பதில் தர அவகாசமோ அல்லது அடிப்படை  தகவலோ  இல்லாது போகும்போது இந்த மாதிரி நிலை தடுமாறுவது இயற்கைதான்.
என் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு உங்கள் பணியை தொடருங்கள்.
ஆசிகளுடன்
XXXXXXXXX


எனது பதில்:
Hail Hitler!

இந்துத்துவவாதியின் பதில்:
Hail Hypocrisy!
Hail doublespeak!!
Hail pusillanimity!!!
Hail quislings!!!!
Hail fifth column!!!!😀😀😀😀😀 alt="😀" goomoji=1f600 data-goomoji=1f600 class=CToWUd v:shapes="_x0000_i1033">


மறுபடியும் சற்றுத் தணிவான தொனியில் எனது மின்னஞ்சல்:
நண்பரே நீங்கள் ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருக்கும் குணங்கள் யாவும் நம் அனைவருக்குமே இருக்கின்றன. எனக்கு மட்டுமே அல்லது உங்களுக்கு மட்டுமே இந்த குணங்கள் இருப்பதாக நான் நம்பவில்லை. இந்த குணங்கள் ஏதுமற்ற மகாத்மா நான் என்று நான் சொன்னால் நீங்கள் எப்படி நம்ப மாட்டீர்களோ அதேபோல்இந்த குணங்கள் துளிகூட எனக்குக் கிடையாதுஎன்று சொன்னால் நானும் நம்ப மாட்டேன்தானே. நல்ல குணம் என்பது எனக்கோ அல்லது உங்களுக்கோ தனிச்சொத்து அல்ல. எப்படிச் சட்டென்று சுட்டுவிரலை நாம் அடுத்தவரை நோக்கி நீட்டிவிடுகிறோம்

என்னுடைய கட்டுரைகள் அனைத்தையும் படித்தீர்கள் என்றால் இஸ்லாமியத் தீவிரவாதத்தை நான் எந்த அளவுக்கு எதிர்த்திருக்கிறேன் என்பதையும் அறிந்துகொள்ள முடியும். ஒரு போட்டி வைத்துக்கொள்வோம். நான் இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு எதிராக எழுதியதையெல்லாம் உங்களுக்குக் காட்டுகிறேன். நீங்கள் இந்துத் தீவிரவாதத்துக்கு எதிராக எழுதியதையெல்லாம் (!) எனக்கு அனுப்ப முடியுமா

நான் என்னை காந்தி போல் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், மிதமும் நிதானமும் கொண்ட உரையாடல் வேண்டும் என்று ஃபேஸ்புக்கிலும் வலைப்பதிவிலும் பத்திரிகையிலும் திரும்பத் திரும்பக் கூவிக்கொண்டிருக்கிறேன். இடதுசாரிகளிடமும் வலதுசாரிகளிடமும் திரும்பத் திரும்ப நான் முன்வைக்கும் வேண்டுகோள் இதுதான்: “சித்தாந்தம் தாண்டி, மதம் தாண்டி நிதானமாகச் செயல்படுங்கள். எல்லோரிடமும் இருக்கும் நல்லியல்புகளையே நாடுங்கள். யாரையும் எதிரியாகக் கருதிக்கொண்டே இருக்க வேண்டாம். எதிர்த் தரப்பிடம் கண்ணியமாக உரையாடுங்கள். எடுத்தவுடனே சங் பரிவாரக் கைக்கூலி, பார்ப்பன அடிவருடி என்றோ (இது இடதுக்கு), ஆண்டி-இந்தியன், தேசத்துரோகி என்றோ (இது வலதுக்கு) யாரையும் சொல்லி உங்கள் உரையாடலை ஆரம்பிக்காதீர்கள். சக மனிதரை மனிதராகப் பார்க்காத சித்தாந்தத்தையோ மதத்தையோ பிடித்துத் தொங்க வேண்டாம்.” 

இப்போது சொல்லுங்கள் நான் ஆண்டி இந்தியன் என்றால் சந்தோஷமாக ஆண்டி இந்தியனாக இருந்துவிட்டுப் போகிறேன்! என்றாவது ஒரு நாள் நம் மனது திறக்கும் என்றும் எல்லாவற்றையும் எல்லோரையும் திறந்த மனதுடன் நாம் அணுகுவோம் என்றும் கண்டிப்பாக நம்புகிறேன்!





அன்புடன்
ஆசை


இந்துத்துவவாதியின் நெகிழ்வான பதில்:
பெரு மதிப்பிற்குரிய ஆசை அவர்களுக்கு,
எனது ஆதங்கம்..ஏன் ஆத்திரம் என்று கூட சொல்லலாம்..மிகுந்த பதிவுகளை படித்த பின்னரும் கண்ணியம் குறையாமல், இவ்வளவு விரிவாக தன்னிலை விளக்கம் கொடுக்க முன் வரும் உங்கள் பொறுமை, முதிர்ச்சி இவற்றுக்கு தலை வணங்குகிறேன்

உங்கள் வயதில் நான் இவ்வளவு நிதானமாக இருந்திருப்பேனா என்று என் மனதில் எழும் கேள்வி உங்கள்  அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
முன்பு சொன்னது போல உங்கள் நம்பிக்கைகளை குலைத்து என் கருத்துக்களை வன்மையாக திணிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நான் இந்த வாதத்தை துவக்கவில்லை. ( அது நடக்காது என்பதோடு தேவையற்ற முயற்சி என்பதையும் நான் நன்கு உணர்ந்தவன்.)

தலித்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினரின் வேதனைகளை புரிந்து கொண்டு அவற்றை மக்களிடம் எடுத்து செல்ல முன் வரும் பலர் அவர்கள் போன்றே சிறுபான்மையினராக இருக்கும் ஒரு சாரார் கொச்சை படுத்தப்பட்டு ,  வன்முறைக்கும்    ஆளாக்கப்பட்டு கிட்டத்தட்ட பொது வாழ்க்கையில் இருந்தே துரத்தவும் பட்ட பின்னர் கண்டு கொள்ளாமல் இருப்பது  பற்றி எனக்கு நிறையவே வருத்தம் உண்டு. (அது மட்டும் அல்ல; அதை சமூக நீதி என்று நியாயப்படுத்துவதுடன் சாதனையாகவும் மார் தட்டி பிரகடனம் செய்வது வெறுப்பரசியல் இல்லாது வேறென்ன?)

அதை பற்றி  பேச, எழுத அச்சப்பட்டு ஒதுங்குபவர்கள் எப்படி நேர்மையாளர்களாகவோ அல்லது நடுநிலையாளர்களாகவோ இருக்க முடியும் என்பதுதான் என்னுடைய கேள்வி.

போகட்டும் விடுங்கள். என்னுடைய சொற்களில் இருந்த காட்டம் ஆசை என்ற தனிமனிதரின் மீது நடத்திய தாக்குதல் அன்று. அவை உங்களை நிச்சயம்  புண்படுத்தி இருக்கக் கூடும். மன்னித்துவிடுங்கள்.
தொடர்ந்து எழுதுங்கள். அப்போதுதான் எதிர்வினையாற்றும் கூர்மையுடன் என் போன்றவர்கள் விழிப்புடன் இருக்க முடியும்.

உங்கள் கனிவான பதிலுக்கு மீண்டும் எனது பாராட்டுகள்.

அன்புடன் 
XXXXX



எனது பதில்:

அன்புள்ள XXXXX அவர்களுக்கு,

உங்கள் கருத்துகள் சிலவற்றுடன் நான் உடன்படவில்லை என்றாலும் உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. ஒரு கருத்துடன் கூட உடன்படாமல் ஆனால் கண்ணியமாக ஒருவருடன் உரையாட முடியும் என்பது காந்தியிடமிருந்து நான் கற்றுக்கொண்டது. ஆனால், நானே உங்களிடம் இடையிடையே கிண்டல் தொனியில் எழுதியிருக்கிறேன். அதற்காக என்னை மன்னியுங்கள்! உங்களிடமிருந்து நான் மேலும் ஒன்றைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். கண்ணியம் என்பது தனிப்பட்ட சொத்து இல்லை என்பதுதான் அது. என்னை மிகவும் நெகிழவைத்திருக்கிறீர்கள். இந்துத்துவத்தை நான் துளிகூட ஏற்றுக்க்கொள்ளவில்லை. அதற்காக இந்துத்துவவாதிகளை நான் வெறுக்கிறேன் என்று அர்த்தமே இல்லை. அவர்களும் நம் தரப்பில் வந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆதங்கம்தான். நிச்சயம், இடதுசாரிகள்  உள்ளிட்ட எங்கள் நண்பர்கள் தீவிர தொனியைக் கைவிட்டு நிதானமான உரையாடலை நிகழ்த்தினால் நீங்கள் மேலும் எங்கள் தரப்பின் நியாயங்களைக் காண்பீர்கள் என்று நம்புகிறேன். அதேபோல் நீங்களும் அதீதமான தொனியைக் கைவிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.  

நானும் சில காலம் வரைசங்கி’, ‘பக்த்’, ‘அரைடவுசர்ஸ்என்றெல்லாம் வலதுசாரிகளைக் கிண்டலடித்து ஃபேஸ்புக்கில் பதிவுகள் போட்டிருக்கிறேன். ‘என்றும் காந்தி!’ என்ற தொடரை நான் எழுதுவதற்காக காந்தியை மேலும் மேலும் படித்தபோதுசே, இந்த மனிதர் எதிர்த் தரப்பை எவ்வளவு கண்ணியமாக அணுகியிருக்கிறார். அவரைப் பற்றி எழுதும் நாம் எந்த அளவுக்குக் கிண்டலடித்துக்கொண்டிருக்கிறோம்என்பதை உணர்ந்தேன். அதற்குப் பிறகு நான் அப்படிக் கிண்டலடிப்பதை நிறுத்திக்கொண்டேன். கிண்டலைத்தான் நிறுத்திக்கொண்டேனே தவிர, விமர்சனத்தை அல்ல!

ஒரு வேண்டுகோள்! உரையாடலில் நம்பிக்கை வைத்தால் எப்படிப்பட்ட நெகிழ்வு கிடைக்கும் என்பதை, அப்படி நம்பிக்கை இல்லாதவர்களுக்குக் காட்டுவதற்காக என் வலைப்பூவிலும் ஃபேஸ்புக்கிலும் நம் உரையாடலைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உங்கள் பெயரில்லாமலே இதைப் பகிர்ந்துகொள்வேன். இது நிச்சயம் என்னை நல்லவனாகவும் உங்களை வில்லனாகவும் காட்டுவதற்காக அல்ல. நானும், 'Hail Hitler' என்றெல்லாம் போட்டு உங்களைக் கிண்டலடித்திருக்கிறேன். நம் இருவரிடமுமே, நமது நேரெதிரான சித்தாந்தங்களைத் தாண்டி, உரையாடல் எப்படி முகிழ்த்திருக்கிறது என்பதைக் காட்டுவதுதான் நோக்கம்.

உங்கள் மனதை நான் புண்படுத்தியிருந்தால் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்!

உரையாடலைத் தொடர்வோம்!


அன்புடன்
ஆசை