Tuesday, June 30, 2015

தேவதைப் பூ




ஆசை
( ‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர் இணைப்பிதழில் 12-03-2014 அன்று வெளியான கதை)


"அப்பா, பூக்கள்லாம் எப்படிப்பா இருக்கும்?" என்று கேட்டாள் குழலி.
"பூக்கள்லாம் அழகா இருக்கும்" என்றார் அப்பா.
"அப்படின்னா நம்ம வீட்டுப் பூனைக்குட்டியும் பூவாப்பா?" என்று விடாமல் கேட்டாள் குழலி.
"பூக்கள்லாம் வண்ணவண்ணமா இருக்கும்" என்றார் அப்பா.
"அப்படின்னா வானவில்தான் பூவாப்பா?" என்று கேட்டாள் குழலி.
பூக்கள் பூக்காத நாட்டில் உள்ள குழந்தைக்கு என்ன பதில் சொல்ல முடியும் அந்த அப்பாவால்?


ஆம், குழந்தைகளே அந்த நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் பூக்கள் பூப்பது திடீரென்று நின்றுபோனது. இதனால் அப்போது குழந்தைகளாக இருந்தவர்களெல்லாம் மிகவும் துயரமடைந்தார்கள். அவர்களுடைய கனவுகளில்கூட விதவிதமாகப் பூக்கள் பூத்தன. அதுவரை பார்த்திராத பூக்களையெல்லாம் கனவுகளில் அவர்கள் பார்த்தார்கள்.


அப்புறம் பிறந்த குழந்தைகளுக்கெல்லாம் பூக்கள் என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விட்டது. பூக்கள் பூத்த காலத்தில் குழந்தைகளாக இருந்தவர்கள் அப்போது சிறுவர்களாக வளர்ந்துவிட்டார்கள். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குப் பூக்களைப் பற்றி அந்தச் சிறுவர்கள்தான் விளக்கிச் சொன்னார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விளக்கினார்கள்.

Monday, June 29, 2015

இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்!


ஆசை
(‘தி இந்து’ நாளிதழில் 28-06-2015 அன்று வெளியான சிறு கட்டுரை)

போர்ஹேஸின் புகழ்பெற்ற ‘பேபல் நூலகம்’ (The Library of Babel) சிறுகதை “இந்தப் பிரபஞ்சம் (மற்றவர்களெல்லாம் அதை ஒரு நூலகம் என்று சொல்வார்கள்) எண்ணற்ற, சொல்லப்போனால் முடிவற்ற அறுகோண அறைகளால் ஆனது” என்று தொடங்குகிறது. முடிவற்ற அந்த நூலகத்தை போர்ஹேஸ் விவரித்துக்கொண்டே போகும்போது கனவில் ஒரு காலும் நனவில் ஒரு காலும் வைத்து இதில் எது கனவு, எது நனவு என்பது தெரியாமல் நடந்துபோவதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்படும். போர்ஹேஸின் பெரும்பாலான கதைகள் ஏற்படுத்தும் உணர்வுதான் இது.
இந்தப் புவியின் அனைத்து மொழிகளின் அனைத்து எழுத்துக்களாலும் சாத்தியமாகக் கூடிய அனைத்து சொல்லிணைவுகளையும் உள்ளடக்கியதாக இருக்கக் கூடிய நூல்களைத் கொண்ட அந்த நூலகத்தில் கடந்த காலப் புத்தகங்கள் மட்டுமல்ல எதிர்காலப் புத்தகங்களும் இருக்கும் என்று அந்த நூலகத்தைப் பற்றி அந்தச் சிறுகதையில் எழுதியிருக்கிறார் போர்ஹேஸ்.

இந்தப் பிரபஞ்சத்தின் மிக அரிதான சாத்தியங்களுள் ஒன்றான புவியில், உயிர் தோன்றியது எண்ணற்ற நிறைவேறாத சாத்தியங்களுக்கிடையே நிறைவேறிய ஒற்றைச் சாத்தியம். அதுபோன்றதுதான், போர் ஹேஸின் முடிவற்ற நூலகத்தின் முடிவற்ற அடுக்குகளில் ஷேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’ நாடகத்தின் ஒரு பக்கம் காணக் கிடைப்பதும்.

போர்ஹேஸ் குறிப்பிட்டிருக்கும் அந்த நூலகத்தை இருவரால்தான் உருவாக்க முடியும். ஒருவர் போர்ஹேஸ் (கதையில் உருவாக்கியிருக்கிறார்), இன்னொருவர் கடவுள் என்று நம்பப்படும் இந்தப் பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர்த்தா. எனினும் இணைய உலகத்தில் போர்ஹேஸின் கற்பனைக்கு உரு கொடுக்க முயன்றிருக்கிறார் ஜொனாதன் பேசில் என்பவர். இயற்பியல் விதிகளையும் மனித சாத்தியங்களையும் மீறி போர்ஹேஸ் கற்பனை செய்ததுபோல் ஒரு நூலகத்தை இணையத்திலும்கூட அப்படியே உருவாக்குவது சாத்தியம் இல்லை எனினும் தன்னளவில் முயன்றிருக்கிறார் ஜொனாதன்.

13,12,000 வேறுவேறு எழுத்துக்களால் சாத்திய மாகக் கூடிய அத்தனை சேர்க்கைகளையும் கொண்டிருக்கும் முடிவற்ற இணைய நூலகமாக அது உருவாகிக்கொண்டிருக்கிறது. அதனால், பொருளேயில்லாத சொற்களும் வாக்கியங்களும் கொண்ட நூல்கள்தான் அதில் பெரும்பான்மையாக இருக்கும். தற்செயலாக ஒரு ‘ஹாம்லெட்’ பக்கமோ, போர்ஹேஸ் கதையிலிருந்து ஒரு பக்கமோ அகப்படலாம். தற்போது 3,200 எழுத்துகள் அளவில் வேலை முடிந்திருக்கிறது. இதுவரை இந்த 3,200 எழுத்துகளை மட்டும் வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் எவ்வளவு தெரியுமா? 10 என்ற எண்ணுக்குப் பின்னால் 4,677 பூஜ்ஜியங்களைப் போட்டுக்கொள்ளுங்கள். ஒரு நொடிக்கு ஒரு புத்தகம் என்று புரட்டினால்கூட எவ்வளவு ஆண்டுகள் ஆகும் தெரியுமா? 10 என்ற எண்ணுக்குப் பின்னால் 4,678 பூஜ்ஜியங்களைப் போட்டுக்கொள்ளுங்கள்! ஆனால், புவியின் உச்சபட்ச வயதாகக் கணிக்கப்பட்டிருப்பது 750 கோடி ஆண்டுகள்தான், அதாவது 75-க்குப் பின்னால் 8 பூஜ்ஜியங்கள் மட்டுமே.

“இதுவரை எழுதப்பட்டிருக்கும் எந்தப் புத்தகமும், எழுதப்பட்டிருக்கக் கூடிய எந்தப் புத்தகமும், ஒவ்வொரு நாடகமும், ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு அறிவியல் ஆய்வுக் கட்டுரையும், ஒவ்வொரு தீர்ப்பும், ஒவ்வொரு அரசியலமைப்புச் சட்டமும், ஒவ்வொரு வேதமும், இன்னும் எல்லாமும்” அந்த நூலகத்தில் இடம்பெறும் என்கிறார் ஜொனாதன்.
வேலையற்ற வேலையைப் போல்தான் இது தோன் றும். ஆனால், போர்ஹேஸ் விளையாடிய முடிவின்மை என்ற மாய விளையாட்டில் மயங்கிப்போனவர்களால் வேறு என்னதான் செய்ய முடியும்! அந்த இணையதளத்தின் முகவரி: libraryofbabel.info
 - நன்றி: ‘தி இந்து’
  - ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: 

இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்!

Thursday, June 25, 2015

காலங்களில் அவன் வசந்தம்



ஆசை
(சென்ற ஆண்டு கண்ணதாசன் பிறந்த நாள் அன்று ‘தி இந்து’ நாளிதழில் வெளியான கட்டுரை)

அது என்ன பருவம் என்று அப்போது தெரியவில்லை. சென்னையில் ஒருநாள் காலையில் பெட்டிக்கடையில் செய்தித்தாள் வாங்கிக்கொண்டு நிமிர்ந்தேன். எதிர்ப்புறச் சாலையோரத்தில் மஞ்சள் கொன்றையொன்று தகதகக்கும் மலர்களோடு நின்றுகொண்டிருந்தது. எட்டு மணி வாக்கில் சூடில்லாத வெயிலில் மஞ்சள் வண்ணம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. சட்டென்று என் மனதில் ஒரு பாடலின் வரிகள் சம்பந்தமில்லாமல் வந்து விழுந்தன: ‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்'

Tuesday, June 23, 2015

சுற்றுச்சூழல் மூடநம்பிக்கைகள்: கூண்டுப் பறவையைப் பறக்க விடலாமா?


ஆசை
 (‘தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 08-04-2014 அன்று வெளியான கட்டுரை.)

தொலைக்காட்சியில் படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அந்தத் திரைப்படத்தில் வரும் கதாநாயகி சுதந்திரத்தை மிகவும் விரும்புபவள். ஒரு கடைவீதியில் வளர்ப்புப் பறவைகள் விற்கும் கடைக்குச் சென்று கூண்டுகளோடு நிறைய பறவைகளை விலைக்கு வாங்கி, அந்தப் பறவைகள் எல்லாவற்றையும் பறக்க விட்டுவிடுவாள். ஒளிந்துகொண்டு பார்க்கும் கதாநாயகனுக்கு நாயகி மேல் காதல் வருவதற்கு இது போதாதா?
பறவைகள் சுதந்திரமாகப் பறக்க வேண்டியவை என்ற நல்லெண்ணம்தான் அந்தக் கதாநாயகியின் செயலுக்கு அடிப்படை. ஆனால், நல்லெண்ணம் பல நேரங்களில் சரியான எண்ணங்களாக இருப்பதில்லை. பெரும் பாலான கூண்டுப் பறவைகள் காலம்காலமாகக் கூண்டுப் பறவைகளாகவே வளர்க்கப் படுபவை. சொல்லப்போனால், பிரத்யேகமாக உற்பத்தி செய்யப்படுபவை.
அவற்றால் அதிக உயரத்திலோ, அதிக தொலைவுக்கோ பறக்க முடியாது. பருந்து போன்ற இரைகொல்லிப் பறவைகள் வந்தால், அவற்றுக்குத் தற்காத்துக்கொள்ளத் தெரியாது. தாமாக இரை தேடத் தெரியாது. கூடு அமைத்துக்கொள்ளத் தெரியாது. அப்படி இருக்கும் போது அந்தப் பறவைகளைச் சுதந்திரமாகப் பறக்க விடுவது, அவற்றைக் கொல்வதற்குச் சமம்.
ஆதிகாலத்து நாயைப் போலச் சுதந்திரமாக இருக் கட்டும் என்று நம் வீட்டு நாயைக் கொண்டுபோய்க் காட்டில் விட்டால் என்ன வாகும்? வெகு விரைவில் சிறுத்தைக்கோ, புலிக்கோ இரையாகிவிடுமல்லவா? அதைப் போலத்தான் கூண்டுப் பறவைகளைப் பறக்க விடுவதும்.
ஆரம்ப காலத்தில் சுதந்திர மாகத் திரிந்து கொண்டிருந்த பறவைகளைப் பிடித்துத்தான், கலப்பினப் பெருக்கம் செய்து கூண்டுப் பறவைகளாக்கி வைத்திருக்கிறார்கள். காக்கட்டீல் கிளிகள், காதல் பறவைகள், கானரிகள், ஃபிஞ்ச்சுகள் போன்றவை மிகவும் பிரபலமாக இருக்கும் கூண்டுப் பறவைகளாகும்.
வளர்ப்புப் பறவைகளாக இல்லாமல் இயற்கையாகத் தற்போது பறந்து திரியும் கிளி, மைனா, புறா போன்ற பறவைகளையும் பிடித்துவந்து கூண்டுப் பறவைகளாக ஆக்குகிறார்கள். வளர்ப்புப் பறவைகளாக்குவதற்காக இயற்கைப் பறவைகளைப் பிடிப்பதால், பஞ்சவர்ணக் கிளி போன்ற பல்வேறு பறவை இனங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.
கூண்டுப் பறவைகளை விடுதலை செய்வதைவிட புத்திசாலித்தனம், கூண்டுப் பறவைகளை வாங்காமல் இருப்பதுதான். அப்படிச் செய்தால்தான், இந்த நோக்கில் பறவைகளைப் பிடிப்பவர்கள் குறைவார்கள். காலப்போக்கில் கூண்டுப் பறவைகள் என்ற தனி இனமும் இல்லாமல்போகும்.
எனவே, அடுத்த முறை கடைவீதியில் யாராவது கூண்டுப் பறவைகளுக்கு விடுதலை வாங்கித்தந்தால் அவரை அவசரப்பட்டுக் காதலிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்.
 - நன்றி: ‘தி இந்து’
 ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: சுற்றுச்சூழல் மூடநம்பிக்கைகள்: கூண்டுப் பறவையைப் பறக்க விடலாமா?

Saturday, June 20, 2015

நீர்: புவியின் விநோதமான திரவம்


அலோக் ஜா

('தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 20-06-2015 அன்று முழுப் பக்கம் வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை. தமிழில்: ஆசை)

புவியில் உள்ள திரவங்களிலேயே நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு மட்டும்தான், நமது அன்றாட வாழ்க்கையின் மொழியில் நுழைந்திருக்கிறது. H2O என்பதில் என்னென்ன இருக்கிறது என்பது பற்றித் தெரியவில்லையென்றாலும், H2O என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். நீர் என்பது மிகவும் சாதாரணமான விஷயம்போல் தெரிந்தாலும், உண்மையில் அப்படியல்ல.
அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய இந்தப் பொருள், நம்முடன் மிகவும் நெருங்கியிருப்பதாலேயே கொஞ்சம் சலிப்பூட்டுவதுபோல் தோன்றலாம். ஆனால், அது எந்த அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துவது என்பதும், தலையைப் பிய்த்துக்கொள்ள வைப்பது என்பதும் நீரின் இயல்புக்குள் ஆழமாய் எட்டிப்பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.
விதிகளை உடைக்கும்
எல்லா விதிகளையும் உடைக்கும் இயல்புடையது நீர். திரவங்கள் என்றால் என்ன என்பதை விவரிப்பதற்கான பெரிய வரையறையை 19-ம் நூற்றாண்டிலிருந்து வேதியியலாளர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நீரின் விநோதமான பண்புகளை விளக்குவதில், இந்த வரையறைகள் எல்லாம் பெரும்பாலும் பொய்த்தே போகின்றன.
ஒரு பானத்தில் ஐஸ் கட்டியைப் போடும்போது என்ன நிகழ்கிறது என்பதில்தான், நீரின் விநோதமான இயல்பு அடங்கியிருக்கிறது. இதை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்: உங்கள் முன்னே ஒரு திடப்பொருள் இருக்கிறது, அது தன்னுடைய திரவ நிலையின் மீதே மிதக்கிறது! ஆனால், திட மெழுகு திரவ மெழுகில் மிதக்காது; உருக்கிய வெண்ணெயில் வெண்ணெய்க் கட்டி மிதக்காது; எரிமலையிலிருந்து பீறிட்டு வரும் எரிமலைக் குழம்பில் கற்கள் மிதக்காது.
விநோத இயல்பு
உறைய வைக்கப்படும்போது நீர் விரிவடைவதால், ஐஸ் கட்டிகள் மிதக்கின்றன. குளிர்பதனப் பெட்டியின் உறைநிலைப் பெட்டியில் ஓர் இரவு முழுவதும் சோடாவை விட்டுவைத்தால், அதனால் ஏற்படும் விரிவு எவ்வளவு சக்திமிக்கது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்: கண்ணாடியையே சுக்குநூறாகச் சிதறடித்துவிடும்.
நீரின் இந்த இயல்பு கொஞ்சம் விசித்திரமாகவோ, முக்கியமற்றதாகவோ தோன்றலாம். ஆனால், நீரின் எண்ணற்ற விநோதங்களுள் ஒன்றான இந்த விசித்திர இயல்புதான், நமது கோளையும் அதிலுள்ள உயிர்வாழ்க்கையையும் வடிவமைத்தது.
யுகம்யுகமாக நிகழ்ந்த உறைதல், உருகுதல் என்ற தொடர் நிகழ்வுகள் காரணமாகப் பெரும் பாறைகள் வழியாக நீர் துளைத்துக்கொண்டு வெளியேறியிருக்கிறது, அந்தப் பாறைகளை இரண்டாகப் பிளந்திருக்கிறது, அவற்றைச் சுக்குநூறாகச் சிதறடித்து மண்ணாக மாற்றியிருக்கிறது.

யோகா: அமைதியிலிருந்து அமைதியை நோக்கி..


யோகி அஸ்வினி

(‘தி இந்து’ நாளிதழில் 20-06-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை. தமிழில்: ஆசை )

நமது உடலை நமது மனமும் மூளையும்தான் கட்டுப்படுத்துகின்றன. அப்படியென்றால் மூளை யையும், மனதையும் கட்டுப்படுத்துவது எது? நிச்சயமாக உடல் அல்ல. மனதையும் மூளையையும் கட்டுப்படுத்துவது ஆன்மாவின் ஆசையே. ஆன் மாவின் ஆசை என்பது என்ன?
கண்களை மூடிக்கொண்டு, உங்கள் மூளைக் குள் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள். குழந்தைகள், குடும்பம், மனைவி, தொழில், உணர்ச்சிகள் என்று எக்கச்சக்கமான எண்ணங்கள் நெருக்கியடித்துக்கொண்டு ஓடுவதை உணர்வீர்கள்.
மனித வாழ்க்கையின், பௌதிக உலகின் எல்லைகளை நாம் தாண்ட முடியாமல் போவதற்கு இந்த எண்ணங்களும் ஆசைகளுமே காரணம். நமது உடலுக்குள்ளேயே அமைதியையும் மகிழ்ச்சி யையும் காண முடியாமல் போவதற்கும் அவையே காரணம். பௌதிக வடிவில் உள்ளவை எல்லாம் தற்காலிகமானவையே. இந்த ஆசைகளைத் துரத்திக் கொண்டு தினமும் ஓடுவதால்தான் துயரம் ஏற்படுகிறது.
பணம், குடும்பம், தொழில், உறவுகள் போன்றவற் றிலேயே நம் மனம் மூழ்கிக் கிடக்கும் என்றால் அவற்றைத் தாண்டி நம்மால் எதையும் யோசிக்க முடியாது. ஏனென்றால், ஒரு சமயத்தில் நம்மால் ஒன்றைப் பற்றித்தான் சிந்திக்க முடியும், ஒரு செயலைத்தான் செய்ய முடியும்.
ஆகவே, சிந்திக்கும்போது நமது சிந்தனை ஒரே ஒரு விஷயத்தின்மீதுதான் இருக்க வேண்டும். ஒரே ஒரு விஷயத்தின் மீது குறியாக இருந்தால் அதைச் சாதிக் கும்படிதான் நமது உடல் அமைப்பு கள் அமைந்திருக்கின்றன. ஒருமுகப் படுத்தல்தான் வெற்றிக்கான பாதை. அதுவே யோகம்!
நமது ஆசைகள் பிளவுறும்போதுதான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறோம் என்பது குறித்த புரிதல் இல்லாமல்தான் பலரும் வெற்றி அடைய முடியாமல் போகின்றனர்.
இந்த உலகத்தைப் பற்றி நம் மனதுக்குள் ஓடும் எண்ணங்கள்தான் நம்மை இந்த உலகத்தோடு பிணைக்கின்றன. மாயையான இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கும் அதுதான் காரணம். அதனால்தான் அதைத் தாண்டி நம்மால் போக முடியவில்லை. கண்ணுக்குப் புலனாகக்கூடிய உலகத்தைத் தாண்டி நாம் செல்ல வேண்டும் என்றால் புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது. அவை எல்லாம் இன்னொருவரின் சிந்தனைகள், இன்னொருவரின் அனுபவங்கள். அவற்றை நம்பி நமது ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்ள முடியாது.
நமது மனதை அமைதிப்படுத்தினால் நம்மால் இந்த பௌதிக உலகத்தையும் தாண்டிச் செல்ல முடியும். மனது அமைதியானால், நம் எண்ணங்கள் எல்லாம் படைப்பின் திசை நோக்கிக் குவியும். அப்போது படைப்பின் ரகசியம் நமக்குப் புலனாவதுடன் மேம்பட்ட பரிமாணங்களை நோக்கியும் செல்லமுடியும்.
ஆதிப் பிரக்ஞை, வளர்ச்சியடைந்த பிரக்ஞை என்று அறிவியலில் சொல்வார்கள். மூளையின் கீழ்ப் பகுதியான முகுளம் (மெடுல்லா அப்லங்காட்டா) ஆதிப் பிரக்ஞை எனப்படுகிறது. அதுதான் அடிப்படை எண்ணங்கள், அடிப்படை சுவாசம் போன்றவற்றுக்குப் பொறுப்பு.
சுவாச முறைகளை பிராணாயாமங்கள் மூலம் மாற்றி அமைக்க வேண்டுமானால், மூளையின் மேல்நிலைப் பகுதிகளின் பங்கேற்பு அவசியம்.
அதனால்தான் அந்த சுவாச முறைகள் ‘மேம்பட்ட சுவாச முறைகள்’ எனப்படுகின்றன. மனதை நாம் அமைதிப்படுத்தினால், மூளையின் மேல்நிலைப் பகுதிகள் செயலூக்கம் பெறுகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அதுபோன்ற அமைதி நிலையில் நாம் இருக்கும்போது மேல்நிலைப் பகுதிகளின் மேல் நம் கவனம் குவியும், அதுவரை புலப்படாதது எல்லாம் புலப்படும். இந்தப் புலப்பாடுகள் நமக்குள்தான் இருக்கின்றன. பௌதிக உலகின் காரியங்களிலேயே மும்முரமாக இருப்பதால் புலனாகாமல் இருக்கின்றன.
யோகப் பயிற்சிகள் மூலம் மனதை அமைதி நிலைக்குக் கொண்டுசெல்லும்போது அந்த உயர்ந்த ஆற்றல்களை பெறுகிறோம்.
ரிஷிகள் அமைதி நிலையை அடைந்தபோதுதான் அவர்களுக்கு வேதங்கள் புலப்பட்டன. எனவே, அமைதி நிலை மூலமாக மூளையின் மேல்நிலைப் பகுதிகள் மீது கவனத்தைக் குவியுங்கள். அமைதி நிலையில் இருந்தே எல்லாம் தோன்றுகின்றன, மறுபடியும் அமைதி நிலை நோக்கிச் செல் கின்றன.
எதையாவது படைக்கவேண்டும் என்றால் அமைதிநிலைக்குச் செல்லுங்கள். ஒருமுகமான இந்த அமைதி நிலைதான் உங்களைப் பரிணமிக்கச் செய்வதுடன் படைப்பின் ஞானத்தை உங்களுக்கு வெளிப்படுத்தும். மற்றவை உபயோகமற்றவை, நம்மை நச்சுச் சுழலில் சிக்கவைப்பவை.
-(தியான் ஃபவுண்டேஷன் என்னும் அமைப்பை வழிநடத்திவரும் யோகி அஸ்வினி வேதங்களை ஆழமாகப் பயின்றவர். சனாதன் கிரியா என்னும் யோகப் பயிற்சியை உருவாக்கிப் பயிற்றுவித்துவருகிறார். தொடர்புக்கு: dhyan@dhyanfoundation.com )
 - நன்றி: ‘தி இந்து’
 ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: அமைதியில் இருந்து அமைதியை நோக்கி..

பெயர் திருடிக் குருவி


ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர் இணைப்பிதழில் 09-04-2014 அன்று வெளியான கதை.)

பெயர் திருடிக் குருவியைப் பார்த்திருக்கிறீர்களா? வருணாக் குட்டியின் செல்லப் பெயர்தான் அது. வைத்தது யார் தெரியுமா? பறவைகள்தான்.

வருணாக் குட்டிக்குத் தன் பெயர் பிடிக்கவே பிடிக்காது. “வருணாவாம் வருணா, வேற பேரே கிடைக்கலையா உங்களுக்கு?” என்று தன் அப்பா, அம்மா இருவரையும் திட்டிக்கொண்டே இருப்பாள்.

ஒருநாள் அழகான பறவை ஒன்றைப் பார்த்தாள். தரையில் அவசர அவசரமாக எதையோ கொத்திக் கொண்டிருந்தது. இவர்களைப் பார்த்ததும், அதன் கொண்டை விசிறிபோல விரிந்தது. பறவை பறந்தோடிவிட்டது.

அப்பா, இந்தப் பறவை யோட பேரு என்னாப்பா?” என்று கேட்டாள் வருணா.

அது பேரு கொண்டலாத்தி. அழகான கொண்டை இருக்குறதுனால அந்தப் பேருஎன்றார் அப்பா.

பாருங்கப்பா, அதுக்கெல் லாம் எவ்வளவு அழகா பேரு இருக்கு. எனக்கு மட்டும் ஏன்பா இப்படி வச்சிங்க?” என்று சிணுங்கினாள் வருணா.

இதையே எத்தனை தடவ சொல்வ நீ. வேணும்னா அந்தப் பறவையோட பேரைக் கடன் வாங்கிக்கஎன்று சொல்லிவிட்டு அப்பா போய்விட்டார்.

அன்றைக்கு ஆரம்பித்ததுதான் வருணாக் குட்டியின் பெயர் வேட்டை.

Friday, June 19, 2015

வீட்டுக்குப் போன நிலா


சிந்து

(என் மனைவி சிந்து எழுதிய இந்தக் கதை ‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர் இணைப்பிதழில் 30-04-2014 அன்று வெளியானது)

நிலா வானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்துவிட்டது. நல்லவேளை, கடலில் விழுந்ததால் அடி ஏதும் இல்லாமல் தப்பித்துக்கொண்டது. ஆனாலும், பயத்தில் நிலா அழ ஆரம்பித்தது. அப்போது, வெளிச்சமாக ஏதோ மிதக்கிறதே என்று மீன்களெல்லாம் நிலாவை நோக்கி வர ஆரம்பித்தன. மீன்களின் கூட்டத்தைப் பார்த்ததும் நிலாவின் அழுகை மேலும் அதிகரித்தது.
குட்டிப் பையன் மகி கரையில் விளையாடிக்கொண்டிருந்தான். கடலிலிருந்து ஏதோ அழுகைச் சத்தம் வருகிறதே என்று வந்து பார்த்தான். கொஞ்ச தூரத்தில் உருண்டையாக ஏதோ ஒன்று மிதப்பது தெரிந்தது. கண்ணைக் கசக்கிக்கொண்டு நன்றாகப் பார்த்தான். ஆ… நிலா!
நிலா அழுதுகொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. நிலா எப்படிக் கடலில் விழுந்தது என்று அந்தக் குட்டிப் பையனுக்கு சந்தேகம். சரி! முதலில் நிலாவைக் காப்பாற்றியாக வேண்டுமென்று அவன் நினைத்துக்கொண்டான். அங்குமிங்கும் தேடி ஒரு காகிதத்தைக் கண்டுபிடித்தான். அழகான காகிதப் படகு செய்தான்.
“அழாதே நிலா. நான் படகு அனுப்புறேன். அதுல ஏறி வந்துடு” என்று நிலாவுக்குக் கேட்கும் விதத்தில் சொல்லிவிட்டுப் படகை வேகமாகக் கடலில் தள்ளிவிட்டான். “அலையே அலையே படகை மூழ்கடிச்சிடாம நிலாகிட்ட சேர்த்துடு. திரும்பவும் படகைக் கரைக்குக் கொண்டு வந்துடு” என்று அலையிடம் கேட்டுக்கொண்டான்.

Thursday, June 18, 2015

க்ரியா எஸ். ராமகிருஷ்ணனுக்கு 70-வது பிறந்த நாள்


ஆசை

(ராமகிருஷ்ணனின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டுப் பழைய பதிவொன்றை மீண்டும் பகிர்ந்துகொள்கிறேன். விரிவாக அவரைப் பற்றி எழுதுகிறேன் என்று வாக்களித்துவிட்டு இன்னும் அதை நிறைவேற்றவில்லை. கூடிய விரைவில் அதை செய்துவிடுவேன் என்று நம்புகிறேன்- ஆசை)


இன்று எனது நண்பரும் வழிகாட்டியும் க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாசிரியருமான க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பிறந்த நாள்.

அகராதி, மொழி, இலக்கியம் போன்றவற்றைக் குறித்த பல விஷயங்களை அவரிடம்தான் கற்றேன். எல்லாவற்றையும்விட என் வாழ்வில் நேரடியாகப் பெரும் தாக்கத்தைச் செலுத்தியதும் அவர்தான். நாற்பது வருடங்கள் பதிப்புத் துறையில் இருந்து பலருக்கும் முன்னோடியாக இருந்திருக்கிறார். (ஆனால் இதைப் பெரும்பாலானோர் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள்). தமிழ்ச் சமூகத்துக்கு இவர் வழங்கிய கொடைதான் 'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி'. இந்த அகராதிக்காக அவர் இழந்ததும் இழந்துகொண்டிருப்பதும் நிறைய.

மொழியை வைத்து அரசியல் செய்து ஆட்சிக்கு வந்தவர்களிடமிருந்து எந்தவித உதவியும் கிடைக்காத சூழலில் பெரும் போராட்டத்துடன் இந்த அகராதியைக் கொண்டுவந்தார். சிங்கப்பூர் அரசாங்கம் இந்த அகராதியின் சிறப்பை உணர்ந்துகொண்டு தங்கள் மாணவர்களுக்காக இதைப் பரிந்துரைத்தது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த அகராதியின் முதல் பதிப்புக்கு நூலக ஆணைகூட கிடைக்கவில்லை என்பதுதான் சிறப்பு. கருணாநிதிக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதியும் கடைசிவரை இந்த அகராதிக்குக் கிடைத்தது பாராமுகம்தான். இதில் வெட்கக்கேடு என்னவென்றால் 2009 பாராளுமன்றத் தேர்தலின்போதும் 2011 சட்டமன்றத் தேர்தலின்போதும் தி.மு.க. அரசு தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தமிழுக்குச் செய்த சேவைகளில் ஒன்றாக இந்த அகராதியையும் தொலைக்காட்சி விளம்பரங்களில் குறிப்பிட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டுப் பலரும் க்ரியா அகராதி தி.மு.க. அரசின் உதவியால்தான் வெளியானதா  என்று எங்களிடம் கேட்டார்கள். பற்றிக்கொண்டு வந்தது.

அகராதி மட்டுமல்ல ராமகிருஷ்ணனின் பங்களிப்பு. ந. முத்துசாமியுடன் சேர்ந்து 'கூத்துப்பட்டறை' ஆரம்பித்தது, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தது, மொழிக்காக இயங்கும் 'மொழி' அறக்கட்டளையை உருவாக்கியது போன்ற அவரது பங்களிப்புகளும் மிக முக்கியமானவை.

எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக நான் கருதுவது ராமகிருஷ்ணன் மிகத் தீவிரமாகப் பின்பற்றிய அறம்தான். எல்லாச் செயல்களிலும் அறம் இருக்க வேண்டும் என்பதுதான் அவரது வாழ்க்கை முறை.

அவரது பங்களிப்புகள் இதுவரை புறக்கணிப்பும் இருட்டடிப்பும் செய்யப்பட்டே வந்திருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் தமிழில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள் என்று நான் இரண்டு விஷயங்களை உறுதியாகக் கூறுவேன்; ஒன்று வையாபுரிப்பிள்ளை ஆசிரியராக இருந்து தொகுத்த தமிழ் லெக்சிகன், இன்னொன்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. இவை இரண்டுமே புறக்கணிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியை எப்படி ஆங்கிலேயர்கள் கொண்டாடுகிறார்களோ அப்படி நாம் இந்த இரண்டு அகராதிகளையும் கொண்டாடியிருக்கவேண்டும். ஆனால் நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் கொண்டாடுவதற்கு நமக்கு சினிமா நடிகர்கள் ஏராளமானோர் இருக்கும்போது நாம் எப்படி மேற்குறிப்பிட்ட விஷயங்களைக் கொண்டாடுவோம்?

க்ரியா அகராதியைக் குறித்தும் க்ரியா ராமகிருஷ்ணனைக் குறித்தும் நான் விரைவில் விரிவாக எழுதுவேன். இன்று ராமகிருஷ்ணனுக்கு பிறந்தநாள் என்பதால் சுருக்கமாக இந்தப் பதிவு.

ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்!

தி.ஜா. என்றொரு சக்தி உபாசகர்

                                                    கோட்டோவியம்: ரோஹிணி மணி
ஆசை

தி.ஜா. என்று பிரியமாக அழைக்கப்படும் தி. ஜானகிராமனை நினைத்தாலே மாலைப் பொழுதில் காவிரியாற்றில் சிலுசிலுவென்று ஓடும் நீரில் காலை மட்டும் வைத்துக்கொண்டு படிக்கரையில் உட்கார்ந்திருக்கும் சுகமான உணர்வுதான் ஏற்படும். அவரே தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும்போது வாழ்க்கை என்ற நதியின் கரையில் அமர்ந்துகொண்டு வேடிக்கைபார்க்கும் மகாரசிகன் என்று எங்கோ சொன்னதாக நினைவு.
தமது வாசகர்களுக்கு தி.ஜா. அளவுக்கு வாசிப்பு இன்பம் கொடுத்தவர்கள் மிகக் குறைவு. சந்தோஷம், நெகிழ்ச்சி இந்த இரண்டையும் ஒரே சமயத்தில் சாதித்தவர் அவர் என்பதுதான் விசேஷம். 

தமிழ் இலக்கியத்தின் எல்லைகள்,சாத்தியங்களெல்லாம் இன்று விரிந்திருக்கின்றன. எத்தனையோ வகையான எழுத்து முறைகள் தமிழுக்கு வந்திருக்கின்றன. அவையும் சுவாரஸ்யமாகவும் மானுட வாழ்வின் வேறு தளங்களைக் காட்டுபவையாகவும் இருக்கின்றன. எனினும், தி.ஜாவை ஆரம்ப காலத்தில் படித்துவிட்டு வேறு வேறு எழுத்துகளைப் படித்துத் தன் வாசிப்பை விரிவுபடுத்திக்கொண்டே செல்லும் ஒரு வாசகர் தன் அடிமனதில் தி.ஜா.வுக்காக ஏங்குவதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் தி.ஜாவிடம் அடைக்கலம் புகுவதும் தவிர்க்க முடியாத ஒன்று. தி.ஜா. என்ற பெயரே எத்தனை பேரைப் பித்துப்பிடிக்க வைத்திருக்கிறது என்ற தகவல் இன்றைய நிதானமான, உணர்ச்சிக்கு இடம்கொடாத வாசகர்களுக்கு வியப்பளிக்கக் கூடும். உண்மையில், தி.ஜாவை ஒருவர் படித்துவிட்டு அவருக்குப் பித்துப்பிடிக்கவில்லை என்றால் அவர் தி.ஜாவை இதயத்தால் படிக்கவில்லை என்றே அர்த்தம்.

Wednesday, June 17, 2015

குழந்தைப் பாடல்: தவளையின் கடன்


ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர் இணைப்பிதழில் 11-06-2014 அன்று வெளியான குழந்தைப் பாடல்)

கடன்கொடு கடன்கொடு என்றே
குண்டுத் தவளை கேட்கும்
தர்றேன் தர்றேன் என்று
தாவும் தவளை சொல்லும்

தகரப் பெட்டியின் மீது
தூறல் விழுந்ததைப் போல
தவளைகள் இரண்டும் அங்கே
கடனுக்காகக் கத்தும்

குறுக்கே புகுந்த பாம்பு
கணக்கைச் சரியாய்த் தீர்க்கும்
பாம்பின் வயிற்றில் சென்று
பாடம் கிடைத்தது நன்று

(மழை பெய்யும்போது தவளைகள் ஒரே குரலில் கத்துவதைக் கேட்கும் சிறுவர்கள், தவளைகள் ‘கடன்கொடு, கடன்கொடு’ என்று கேட்பதாகவும் கடன் வாங்கிய தவளைகள் ‘தர்றேன் தர்றேன்’என்று சொல்வதாகவும் கற்பனையாக அமைத்துப் பாடுவார்கள்)
 - நன்றி: ‘தி இந்து’
‘தி இந்து நாளிதழின் இணையதளத்தில் இந்தப் பாடலைப் படிக்க: தவளையின் கடன்

எனது உடல் உயிருள்ள உடல்!

ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் 08-02-2015 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம்)

குற்றங்களில் பல வகை உண்டு. நேரடியாக ஒரு குற்றத்தைச் செய்தல், குற்றத்தைத் தூண்டுதல், குற்றத்துக்கு உடந்தையாக இருத்தல், குற்றத்தைக் கண்டும்காணாமலும் இருத்தல். இந்தக் குற்றங்களைத்தான் குற்றங்களாக நாமும் சமூகமும் அங்கீகரித்திருக்கிறோம்.இந்தக் குற்றங்களுக்காகத்தான் நாம் குற்றவுணர்வு கொள்வோம். ஆனால், இன்றைய இணைய யுகத்தில் குற்றங்கள், குற்றவுணர்வுகளின் எல்லைகள் எல்லாம் மங்கலாக்கப்பட்டுவிட்டன. ஒரு பெண்ணின் அல்லது ஒரு ஜோடியின் அந்தரங்கத்தைக் குற்றவுணர்வின்றி இணையத்தில் பார்த்துவிட்டு மற்ற எல்லாக் குற்றங்களுக்கும் எதிராக நாம் குரல்கொடுப்போம். அந்தப் பெண்ணை நாம் எந்த வகையிலும் தொடவோ, பலாத்காரம் செய்யவோ இல்லை. நாம் பார்ப்பதும் அந்தப் பெண்ணுக்குத் தெரியாது. மேலும், இது காட்சிதானே. அதாவது, திரையில் தெரிவது டிஜிட்டல் பிம்பம்தானே. அதற்கு உயிர் கிடையாது. உணர்வு கிடையாது. இப்படியெல்லாம் நமக்குள் பல சமாதானங்கள். இந்தச் சமாதானங்கள் நமது குற்றவுணர்ச்சியை மெல்ல முதுகில் தட்டித் தட்டித் தூங்க வைத்துவிடுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, யாருக்கும் எந்தத் தீங்கும் இல்லாமல் நமக்கு இன்பம் கிடைக்கிறதே. இதில் என்ன தவறு?

இரண்டு ஊர்கள்: வடுவூர், தாராசுரம்



ஆசை
 (‘தி இந்து’ மலரில் வெளியான சிறு குறிப்புகள்)

வடுவூர், சிலையழகு

தஞ்சாவூரிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் மன்னார்குடியிலிருந்து 13 கி.மீ. தொலைவிலும் உள்ள ஊர் வடுவூர். வடுவூரைச் சுற்றியிருக்கும் புதுக்கோட்டை (வடுவூர் புதுக்கோட்டை), தென்பாதி, வடபாதி, சாத்தனூர் போன்ற கிராமங்களும் வடுவூரில் உள்ளடக்கம். நான்கு விஷயங்களுக்காகப் பெயர்பெற்றது இந்த ஊர். 1. வடுவூர் பறவைகள் சரணாலயம், 2. கோதண்டராம சுவாமிகள் கோயில் ராமர் சிலை, 3. வடுவூர் துரைசாமி ஐயங்கார், 4. கபடி.
வடுவூர் ஏரிக்கு வெளிநாடுகளிலிருந்தும் நிறைய பறவைகள் காலம்காலமாக வந்துகொண்டிருந்தாலும் 1999-ம் ஆண்டில்தான் அந்த ஏரி, பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. நவம்பரிலிருந்து ஜனவரி வரைக்கும் பறவைகள் வரத்து அதிகமாக இருக்கும். பருவத்தின் உச்சத்தில் அதிகபட்சமாக 20000 பறவைகள்கூட இங்கு காணப்படும்.
இந்தியாவிலேயே சிறந்த விளையாட்டு கிராமங்களுள் ஒன்றாக வடுவூர் திகழ்கிறது. இங்கு வீட்டுக்கு வீடு கபடி வீரர்கள் இருக்கிறார்கள். மாவட்ட அளவிலிருந்து தேச அளவு வரைக்கும் கபடிப் போட்டிகளில் விளையாடி சாதனை புரிந்த வீரர்கள் இங்கு இருக்கிறார்கள். இந்த ஊரைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பலருக்கும் அரசு, வேலைவாய்ப்பை வழங்கி கவுரவப்படுத்துகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு கிராமத்தில் உள்விளையாட்டரங்கம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது இங்கேதான்.

வடுவூரின் கோதண்டராம சுவாமிகள் கோயிலில் உள்ள ராமர் விக்கிரகம் மிகவும் பிரசித்தி பெற்றது. பிற்காலச் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்தச் சிலை அதிக அலங்காரங்கள் இல்லாமல் எளிமையான அழகுடன் காட்சி தரும். அபிஷேகம் செய்யும்போது ஒரு அழகு, அலங்காரம் செய்யும்போது ஒரு அழகு, மல்லாரி வாசிப்பின் பின்னணியில் பவனி வரும்போது ஒரு அழகு என்று ராமர் சிலையின் அழகை பக்தர்கள் சிலாகிப்பார்கள். இந்த ராமரின் அழகில் மயங்கி, பவனியின்போது மல்லாரி வாசித்த ராஜரத்தினம் பிள்ளை தனது வைரக்கடுக்கனை ராமருக்குப் போட்டதாகவும் சொல்வார்கள். 'திருவாரூர் தேரழகு, மன்னார்குடி மதிலழகு, வடுவூர் சிலையழகு' என்றே ஒரு சொலவடை ஒருங்கிணைந்த தஞ்சாவூர் பக்கத்து கிராமங்களில் உண்டு.






தாராசுரம்: சிற்பங்களின் சரணாலயம்


கும்பகோணத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் இருக்கும் தாராசுரம் மிகவும் சிறிய ஊர். மொத்த மக்கள்தொகை கிட்டத்தட்ட 13,000. ஆனால், உலகப் புகழ்பெற்ற ஐராவதீஸ்வரர் கோயில் இருக்கும் ஊர் இது. தஞ்சாவூர் பெரிய கோயில் பிரம்மாண்டத்தின் உச்சம் என்றால் ஐராவதீஸ்வரர் கோயில் நுட்பத்தின் உச்சம் என்று சொல்லலாம். 40,000-க்கும் மேற்பட்ட சிற்பங்களைக் கொண்டு சிற்பங்களின் சரணாலயம் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது தாராசுரம். இங்குள்ள சிற்பங்களில் பெரும்பாலானவை மிகமிகச் சிறியவை. விரல் நுனியளவுச் சிற்பங்களும் உண்டு, ஓரிரு அங்குலச் சிற்பங்களும் உண்டு, ஆளுயரச் சிற்பங்களும் உண்டு.
இங்குள்ள பல சிற்பங்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புகழ்பெற்றவை. அன்னபூரணி சிற்பத்தைப் பார்க்க ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆயிரக் கணக்கானோர் வருகிறார்கள். அன்னபூரணியின் சிரித்த முகத்தை, டாவின்சியின் மோனாலிசா ஓவியத்துடன் ஒப்பிட்டுப் பலரும் மகிழ்கிறார்கள். காளையின் தலையும் யானையின் தலையும் ஒன்றாகச் சேர்ந்து இருக்கும் புகழ்பெற்ற சிற்பம் ஒன்று இங்கு இருக்கிறது. காளையை மட்டும் பார்க்கும்போது அந்தத் தலை காளைத் தலையாகவும், காளையை மறைத்துக்கொண்டு பார்க்கும்போது அது யானையின் தலையாகவும் காட்சியளிக்கும்.

பிள்ளையாரின் மிகச் சிறிய சிற்பம், கதை சொல்லும் எண்ணற்ற சிற்பங்கள், பல்வேறு அலங்காரக் கோடுகளையும் கோலங்களையும் தாங்கியிருக்கும் கற்சுவர்கள் என்று கோயில் முழுக்கவும் சிற்பங்களின் அற்புதங்கள். குதிரைகள் பூட்டப்பட்டு, ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தேரின் மேல் அமைந்திருப்பதைப் போல கோயில் அமைக்கப்பட்டிருப்பது காலத்தேரின் மேல் இந்தப் பிரபஞ்சம் பயணிப்பதை உணர்த்தும் விதத்தில் இருக்கிறது. இந்தக் கோயிலுக்கு வந்த கார்ல் சகன் என்ற வானியலாளர், பரவெளியின் ரகசியத்தைச் சுட்டிக்காட்டும் விதத்தில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது என்று வியந்ததாகச் சொல்வார்கள்.




இரண்டாம் ராஜராஜன் காலத்தில் அதாவது 12-ம் நூற்றாண்டில் இந்தக் கோயில் கட்டப்பட்டது. ஐராவதீஸ்வரர் என்றால் வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் மேல் வந்தவர் என்பது ஐதிகம். தஞ்சாவூர் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், மாமல்லபுரம் ஆகியவற்றுடன் இந்தக் கோயிலையும் பாதுகாக்கப்பட வேண்டிய கலைச்சின்னங்கள் என்று யுனெஸ்கோ அறிவித்திருக்கிறது.
 - நன்றி: ‘தி இந்து’

Wednesday, June 10, 2015

மழைக்கொத்தியைக் கண்டுபிடித்த சிறுமி!


ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர் இணைப்பிதழில் 04-02-2015 அன்று வெளியான கதை)

வருணா குட்டி என்ன செய்துகொண்டிருக்கிறாள் தெரியுமா? இதுவரை யாரும் செய்யாத ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கிறாள். ஆமாம், பறவைகளுக்குப் பெயர் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறாள். இதில் என்ன புதுமை, காலங்காலமாக எத்தனையோ பேர் செய்த விஷயம்தானே; எல்லாப் பறவைகளுக்கும் ஏற்கெனவே பெயர் வைத்திருக்கிறார்களே என்று கேட்கிறீர்களா? நீங்கள் கேட்டது சரிதான்.
ஆனால், வருணா குட்டி செய்வது வேறு விஷயம். இல்லாத பறவைகளுக்குப் பெயர் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறாள். அதுசரி, இதில் என்ன புதுமை? சக்கரவாகம், அண்டரண்ட பட்சி, ஃபீனிக்ஸ் போன்ற பறவைகள்கூட இல்லையே என்றுதானே கேட்கிறீர்கள்?
இதுவும் சரிதான். ஆனால், வருணா குட்டி செய்வது முற்றிலும் வேறு விஷயம். இனிமேல் புதிதாக உருவாகப்போகிற பறவைகளுக்குப் பெயர்களைக் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறாள்.

எல்லோரிடமிருந்தும் விடைபெறுகிறேன்!


ஆலிவர் சாக்ஸ்
(‘தி இந்து’ நாளிதழில் 06-06-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை இது. தமிழில்: ஆசை)

ஒரு மாதத்துக்கு முன்னால் நல்ல உடல்நிலையில்தான் இருந்தேன். சொல்லப்போனால், அருமையான உடல்நிலை. இந்த 81 வயதில் தினமும் ஒரு மைல் தூரம் என்ற அளவில் நீந்திக்கொண்டிருக்கிறேன். ஆனால், எனது அதிர்ஷ்டம் வற்றிப்போய்விட்டது, எனது கல்லீரலில் ‘மெட்டாஸ்டேஸிஸ்’ என்ற இரண்டாம் நிலைப் புற்றுக்கட்டிகள் நிறைய இருப்பதாகச் சில வாரங்களுக்கு முன்பு அறிந்தேன். (இந்த வகைப் புற்றுக்கட்டிகள் புற்றுநோய் இருக்கும் பாகத்திலிருந்து தொலைவாக உருவாகும் இயல்புடையவை).
9 ஆண்டுகளுக்கு முன்பு கண்களில் மிகவும் அரிதாக ஏற்படும் கட்டி ஒன்று எனக்கு உருவாகியிருப்பதைக் கண்டறிந்தார்கள். அந்தக் கட்டியின் பெயர் ஆக்யுலர் மெலனோமா. அந்தக் கட்டியை நீக்குவதற்காக எனக்கு அளிக்கப்பட்ட கதிரியக்கச் சிகிச்சையாலும் லேசர் சிகிச்சையாலும் எனது ஒரு பக்கக் கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டது. ஆக்யுலர் மெலனோமா கட்டிகள் வந்திருப்பவர்களில் 50 சதவீதத்தினருக்கு மெட்டாஸ்டேஸிஸ் ஏற்படுவதுண்டு. எனது நிலையைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட மெட்டாஸ்டேஸிஸ் உருவாவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால், நானோ துரதிர்ஷ்டசாலிகளில் ஒருவனாக ஆகிவிட்டேன்.
நெருங்கும் மரணம்
முதல் தடவை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு எனக்கு 9 ஆண்டு வாழ்க்கை வழங்கப்பட்டிருந்திருக்கிறது. இந்த ஆண்டுகளில் நல்ல உடல்நலத்துடனும் படைப்புத் திறனுடனும் நான் இருந்ததுகுறித்து நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறேன். ஆனால், இப்போது நான் மரணத்தை எதிர்கொண்டிருக்கிறேன். எனது கல்லீரலில் மூன்றில் ஒரு பகுதியைப் புற்று ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. இதன் வளர்ச்சியை மட்டுப்படுத்த முடிந்தாலும் தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லை.

மேகி: இரண்டு நிமிடப் பாடம்


தீரஜ் நய்யார்
('தி இந்து’ நாளிதழில் 07-06-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை இது. தமிழில்: ஆசை)

இந்தியாவின் அபிமான துரித உணவுகளில் ஒன்றின் புகழைத் தகர்த்திருக்கும் இந்த மேகி விவகாரம் என்பது பொருளியல் அறிஞர்களைப் பொறுத்தவரை மிகவும் விநோதமான ஒரு நிகழ்வு. சந்தையில் ஏற்பட்ட தோல்வியும் அரசாங்கத்தின் தோல்வியும் ஒரே சமயத்தில் நிகழ்ந்திருக்கிறது. இது போன்ற விஷயங்கள் நடக்கும்போது பெரிய அளவிலான பாதிப்பு என்பது, முற்றிலுமாகக் கைவிடப்பட்ட நுகர்வோருக்குத்தான். பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களை மீறியது மேகி மட்டுமல்ல என்பதுதான் உண்மை. இந்தியாவின் சந்தைப் பொருளாதாரம் இன்னும் வளர்ந்துவரும் நிலையில்தான் இருக்கிறது. இந்த நிலையில் ஒழுங்காற்று முறைகள் என்பவையே வெறும் பெயரளவில்தான். அப்படி இருந்தும், தனது கெட்ட நேரம் காரணமாக மேகி மாட்டிக்கொண்டிருக்கிறது. காரீயமும் மோனோசோடியம் குளுடாமேட்டும் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் அதற்கு இந்த கதி.
நெஸ்லே என்ற பன்னாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்படுவதுதான் மேகி. நெஸ்லேவின் உணவுத் தயாரிப்புகள் உலகெங்கும் உள்ள பெருவாரியான மக்களால் உட்கொள்ளப்படுகின்றன.
போட்டி மிகுந்த ஒரு சந்தையில் இந்த நிறுவனம் இயங்குகிறது. நூடுல்ஸ் சந்தையில் மேகிக்கு நிறைய போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இருந்தும் அதிக அளவில் அது விற்கப்படுவதற்குக் காரணம் நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பு என்றால் மிகவும் தரமாக இருக்கும் என்று நம்பப்படுவதால்தான். தனக்கிருக்கும் நற்பெயரை ஒரு தயாரிப்பு இழந்துவிட்டது என்றாலே அந்தத் தயாரிப்புக்கு மூடுவிழா நடத்தப்பட்டுவிட்டது என்றும் மக்கள் வேறு தயாரிப்புகளை நாட ஆரம்பித்துவிடுவார்கள் என்றும்தான் அர்த்தம். இந்தியாவில் (நெஸ்லேவுக்கு அப்படி ஆகாமல் போனாலும்) மேகிக்கு அப்படித்தான் ஆகும். நுகர்வோரால் அது குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிடும். நெஸ்லே என்ன சொன்னாலும் சரி... கடைகளில் அதை மக்கள் ஒருபோதும் வாங்கப்போவதில்லை. போட்டி நிறைந்த சந்தையின் தாரக மந்திரத்தின்படி நெஸ்லே போன்ற ஒரு நிறுவனம் தொடர்ந்து தொழிலில் நீடித்திருப்பதற்காக இதுபோன்ற ஒரு சூழலைத் தவிர்ப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளத் தயங்காது, குறைந்தபட்சம் இந்தியாவிலாவது. ஆனால், நெஸ்லே வழுக்கி விழுந்துவிட்டது.

இன்னமும் தொடரும் கண்காணிப்பு


எட்வர்டு ஸ்னோடன்
('தி இந்து’ நாளிதழில் 09-06-2015 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது. தமிழில்: ஆசை)

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் (04-06-2014 அன்று ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் வெளியான கட்டுரை இது) மூன்று பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து ஹாங்காங்கில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் பதற்றத்துடன் இயங்கிக்கொண்டிருந்தேன். அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு தொலைபேசி அழைப்பையும் ‘தேசிய பாதுகாப்பு முகமை’ (என்.எஸ்.ஏ.) பதிவுசெய்த விவகாரம் வெளியே கசிந்ததை இந்த உலகம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்று காத்திருந்தோம். எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிக் குடிமக்களை உலகமெங்கும் உள்ள ஜனநாயக அரசுகள் எப்படியெல்லாம் கண்காணித்துக்கொண்டிருந்தன என்பது தொடர்பான ஆவணங்களை அதற்குப் பிறகான நாட்களில் நானும் அந்தப் பத்திரிகையாளர்களும் வெளியிட்டோம்.
ஒருசில நாட்களுக்குள் அமெரிக்க அரசு முதல் உலகப் போர் காலத்திய உளவுச் சட்டங்களின் கீழ் என்மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது. என்னுடன் இருந்த பத்திரிகையாளர்கள் நாடு திரும்பினால் அவர்கள் கைதுசெய்யப்படும் அபாயத்தையோ, நீதிமன்றத்தால் சம்மன் அனுப்பபடும் நிலையையோ எதிர்கொள்ள வேண்டிவரும் என்று அவர்களின் வழக்கறிஞர்கள் எச்சரித்தார்கள். எங்கள் முயற்சிகளையெல்லாம் அமெரிக்காவுக்கு எதிரானவை என்றும், தேச விரோதம் என்றும்கூட குற்றம்சாட்டுவதற்கு அரசியல்வாதிகளிடையே போட்டாபோட்டி நிலவியது.
இருந்தாலும், தனிப்பட்ட அளவில் சில சமயம் ஒரு கவலை ஏற்பட்டதுண்டு. எந்த விதப் பலனும் ஏற்படாமல் போய்விடக் கூடிய விஷயத்துக்காக நாங்கள் எங்கள் வாழ்க்கையைப் பணயம் வைக்கிறோமோ என்ற கவலைதான் அது. எங்கள் முயற்சிகளை மக்கள் அலட்சியப்படுத்திவிடுவார்களோ, வழக்கமான சந்தேகத்துடன் நடந்துகொள்வார்களோ என்றெல்லாம் பயந்தோம்.
ஆனால், எனது பயமெல்லாம் பொய்த்துப்போனதில் எனக்கு ஏற்பட்ட நன்றியுணர்ச்சிக்கு ஈடே கிடையாது.

Monday, June 8, 2015

ஐஐடி என்றால் எல்லோருக்கும் மேலானவர்களா?


டி.எம். கிருஷ்ணா

(‘தி இந்து’ தமிழ் நாளிதழில் 08-06-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை. தமிழில்: ஆசை)

அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்துக்கும் (ஏபிஎஸ்சி) ஐஐடி-சென்னைக்கும் இடையிலான பிணக்கு தொடர்பாகக் கடந்த ஒரு வார காலமாக ஏராளமான செய்திகளையும் கட்டுரைகளையும் படித்தாகிவிட்டது. தடை செய்யப்பட்டிருக்கிறதா அல்லது அங்கீகாரம் மறுக்கப்பட்டிருக்கிறதா? அல்லது, வெறுமனே ‘காரண விளக்கம் கோரும்’ நோட்டீஸா? இந்த விவகாரத்தில் ‘ஈடுபட்டிருக்கும்’ மாணவர்கள் வெறுமனே உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வளாகத்தின் அமைதியைச் சீர்குலைக்கிறார்களா?
இந்த ‘வளாகக் கேள்வி’களோடு இன்னும் முக்கியமான வேறுசில கேள்விகளும் சேர்ந்துகொள்கின்றன: அரசின் கொள்கைகளையும், அதே அளவுக்குப் பிரதமரையும் எதிர்ப்பது என்பது பதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய செயலா? அநாமதேயப் புகார்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்காக மனிதவளத் துறை அமைச்சகம் ஐஐடி நிர்வாகத்தின் கருத்துகளையும் விளக்கத்தையும் கோரியது சரியா? ‘விளக்கம்’ கேட்டு அமைச்சகத்தால் அனுப்பப்படும் கடிதம் என்பது மறைமுக எச்சரிக்கை இல்லையா?
இதற்கிடையே, அரசியல் கட்சிகளெல்லாம் அவரவர் தரப்பு விளக்கங்களையும் கருத்துகளையும் அடுக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆதரவு தெரிவிக்கும் திறந்த மடல்களைச் சிலர் அனுப்புகிறார்கள், மற்றவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். இதற்கிடையே, மிகவும் விநோதமான விஷயம் எதுவென்றால், ஏபிஎஸ்சியைத் தடைசெய்ய வேண்டும் என்று கோரும் இந்து அமைப்புகள் அம்பேத்கருக்கு உரிமை கொண்டாடுவதுதான்.

Thursday, June 4, 2015

வானமும் ஒரு தொலைநோக்கிதான்!



டெனிஸ் ஓவர்பை
(‘தி இந்து’ நாளிதழில் 04-06-2015 அன்று வெளியான கட்டுரையின் முழுமையான வடிவம் இது. தமிழில்: ஆசை)

‘கிரவுண்டுஹாக் டே’ என்ற திரைப்படத்தில் வருவதுபோல் அண்டவெளியிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

1993-ல் பில் முர்ரேயின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கிரவுண்டுஹாக் டே’. தொலைக்காட்சி நிறுவனமொன்றில் வானிலை அறிவிப்பாளராக இருக்கும் கதாநாயகன் மீண்டும் மீண்டும் ஒரே நாளிலேயே வாழ்ந்துகொண்டிருப்பார். ஹப்பிள் அண்டவெளி தொலைநோக்கியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் வானியலாளர்களும் பெருவிண்மீன் வெடிப்பில் (சூப்பர்நோவா) ஒரே விண்மீன் திரும்பத் திரும்ப வெடித்துச் சிதறுவதைக் கண்டதாக சமீபத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஐன்ஸ்டைன் ஒளியியல் கூறும் தோற்றப்பிழைதான் இது.
பிரபஞ்சத்தின் வேறொரு மூலையில் 900 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வெடித்த விண்மீன் அது. அண்டவெளியின் உதவியின்றி இவ்வளது தொலைவில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை ஹப்பிள் தொலைநோக்கியால் பார்க்க முடியாது. குறிப்பிட்ட இந்த நிகழ்வைப் பொறுத்தவரை அந்த விண்மீன் வெடிப்பிலிருந்து வெளிப்பட்ட ஒளிக்கதிர்கள் பயணிக்கும் பாதையில் இருக்கும் விண்மீன் மண்டலங்களின் ஈர்ப்பு காரணமாக வளைக்கப்பட்டு பெரிதாக்கப்பட்டு அவற்றின் பல பிம்பங்கள் உருவாகியிருக்கின்றன.
அந்த பிம்பங்களுள் நான்கு ‘ஐன்ஸ்டைன் சிலுவை’ என்று அழைக்கப்படும் நெருக்கமான தொகுப்பாகக் காட்சியளிக்கின்றன. அந்த விண்மீன் மண்டலங்களுள் ஒன்றைச் சூழந்து இந்த பிம்பங்கள் காணப்படுகின்றன. விண்மீனிலிருந்து புறப்படும் ஒளிக்கதிர் ஒவ்வொன்றும் வேறு வேறு பாதை வழியாக அந்த இடத்தை வந்தடைவதால் அந்தச் சிலுவையில் உள்ள ஒவ்வொரு பிம்பமும் பெரு விண்மீன் வெடிப்பின் சற்றே வேறுபட்ட தருணங்களைப் பிரதிபலிக்கின்றன.

Wednesday, June 3, 2015

நீரின்றி அழியும் உலகு!


அலோக் ஜா
('தி இந்து’ நாளிதழில் 02-06-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை. தமிழில்: ஆசை)

ஒவ்வொரு நாளும் எவ்வளவு நீர் அருந்த வேண்டும்? கிட்டத்தட்ட இரண்டு லிட்டர் என்பது சரியானதுபோல் தோன்றுகிறது அல்லவா? உங்கள் உடலில் அதிக அளவுக்கு நீரிழப்பு ஏற்பட்டால், ஏற்படக்கூடும் என்று நீங்கள் நினைக்கும் பிரச்சினைகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளுவதற்காக உங்கள் அலுவலகத்தில் உங்கள் மேசைக்கு அருகே ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு அவ்வப்போது ஒரு மடக்கு என்று நாள் முழுக்கக் குடிக்கலாமல்லவா?
பிரிட்டனின் பொதுமருத்துவர்களிடையே தேசிய நீரூட்ட மையம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. அந்த மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக வருபவர்களில் ஐந்தில் ஒருவர் களைப்பு, தலைவலி, கவனச் சிதறல் போன்றவற்றால் அவதியுறுவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். போதுமான அளவு நீர் அருந்தாததால் ஏற்படும் பிரச்சினைகள் என்று இவை கருதப்படுகின்றன. தேசிய நீரூட்ட மையம் என்பது பாட்டில் தண்ணீர் நிறுவனங்களின் கூட்டமைப்பு என்ற தகவல், பொருட்படுத்த வேண்டாத தகவலாக நாம் விட்டுவிட முடியாது. நாம் எவ்வளவு குறைவாக நீர் அருந்துகிறோம் என்பதுகுறித்து நம்மைக் கவலையுறச் செய்வது அவர்களது தொழிலுக்கு முக்கியமல்லவா! அதே நேரத்தில் நிறையத் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்று சொல்லும் எளிய அறிவுரைக்கு எதிராக வாதிடுவது அவ்வளவு எளிதல்ல.

Monday, June 1, 2015

சிறையிலிருந்து ஒரு விசிலூதியின் ஓலம்


செல்சியா மேனிங் பிடிபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

                             செல்சியா மேனிங்கின் தற்போதைய உருவ அமைப்பைச் சித்தரிக்கும் ஓவியம்

செல்சியா ஈ மேனிங்

(இராக்-ஆப்கன் போர்கள் தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு அமெரிக்காவின் முகத்தைத் தோலுரித்தவர்)

(‘தி இந்து’ நாளிதழில் 01-06-2015 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது. தமிழில்: ஆசை)

இன்றோடு 5 ஆண்டுகள் முடிவடைகின்றன, 2010-ல் இராக்கில் ராணுவப் பணியாற்றிய நான் ராணுவச் சிறைக்கு அனுப்பப்பட்டு. எவ்வளவு காலம் நான் சிறையில் இருந்திருக்கிறேன் என்பதை நினைத்துப்பார்த்தால் சில சமயங்களில் எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் நிறைய ஏற்ற இறக்கங்களுடன் உடல் ரீதியாகவும் உணர்ச்சிரீதியாகவும் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரிபோல்தான் அடிக்கடி நான் உணர்ந்தேன்.

2010-ம் ஆண்டின் முதல் சில வாரங்களின்போதுதான் இதெல்லாமே தொடங்கின. இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடைபெற்ற போர்களைப் பற்றிய பயங்கரமான, தெளிவான ஒரு எண்ணத்தைத் தரும் ரகசிய ஆவணங்களை (கூடவே, ரகசியமில்லாத ஆனால் பிரச்சினைக்குரிய ஆவணங்களையும்) மக்கள் மத்தியில் கசிய விடுவதென்ற முடிவுக்கு நான் வந்தேன்; என் வாழ்க்கையையே மாற்றிப்போட்ட முடிவு இது. ஆப்கானிஸ்தானுக்கு ராணுவப் பணியாற்றச் செல்வதற்காகப் பல மாதங்கள் என்னைத் தயார்ப்படுத்திவிட்டு, 2009-ல் இராக் செல்வதற்காக ஆயத்தமாகினேன். 2009-2010-ல் இராக்கிலேயே தங்கினேன். அப்போதுதான் உலக அளவில் பார்க்கும்போது இந்த ஆவணங்களின் முக்கியத்துவத்தைச் சட்டென்று உணர்ந்துகொண்டேன்.