Tuesday, June 24, 2025

தமிழால் ஆடுகின்றான் கண்ணதாசன்! - கண்ணதாசன் பிறந்தநாள் கவிதைப் பகிர்வு

மன்னார்குடியில் ஒரு இசையகத்தில் நாங்கள் அடிக்கடி பாடல்களைப் பதிவுசெய்து கொண்டுவந்து கேட்போம். ‘உங்களிடம் அதிகம் பதிவுசெய்யப்பட்ட பாடல் எது?’ என்று அவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறிய பாடல் ‘கண்ணே கலைமானே’. கண்ணதாசன், இளையராஜா, பாலுமகேந்திரா, ஸ்ரீதேவி, கமல் என்று எல்லோருக்குமான பெருமை அது. பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு வந்தவர்களில் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்களில் ஒருவர் கண்ணதாசன். ‘உனக்கே உயிரானேன்... எந்நாளும் எனை நீ மறவாதே’ என்பது அவரது மரண சாசனமாகவே அமைந்துவிட்டது. எப்படி மறப்போம் கண்ணதாசா?

எனது ‘அண்டங்காளி’ தொகுப்பின் இந்தக் கவிதை கண்ணதாசனுக்கு அர்ப்பணம்!
பார் சிவனே
மீனாளின் குங்குமத்தைத்
தானாள வேண்டுமென்று
ஏன் விரும்பினான் கண்ணதாசன்
தானும் சிவனாகும்
ஆசையினாலா
இடம்பெயர்ந்த
உன் நெற்றிக்கண்ணின்
குளிர்சிவப்பைப்
பார்த்து
அவனுக்கும்
ஆசை விடவில்லை
உன் நெற்றிக்கண்ணை
ஒரு பொய்கையாக்கி
அதில் குளித்து விளையாடிக்
கரைமீண்ட மீனாள்
தன் நெற்றியில் துளியாய்த் தங்கிவிட்ட
உன் தகிப்பை
எப்படித்
தன் குங்குமமாக மாற்றிவிட்டாள்
பார்
உன் நெற்றியிலிருந்து
அவள் நெற்றிக்குப்
பயணிக்கும் துடிப்பில்
குளிரைத் துரத்தும்
வெம்மையும்
வெம்மையில் குளிக்கும்
குளிரையும்
உள்ளடக்கிய
தீராத விளையாட்டு
திரைபோட்டு
நடக்கிறது
அதுதான்
நீயாடும் அம்பலம்
அவளாடும்
தன்பலம்
சிவனாகும் ஆசையில்
கண்ணதாசனும்
ஆட முயல்கின்றான்
மீனாளின்
குங்குமப் பரப்பென்ற
குளிர்சிவப்பு
மேடையில்
அம்மை தன்
மேடையெறிந்து
அதைச் சூரியனாக்கிவிடுவாள்
தாங்க மாட்டான்
கண்ணதாசன்
அவள் குங்குமமென்பது
நீ ஒட்டிக்கொண்ட
நெற்றிக்கண்ணோடு
ஆடும் பரப்பல்ல
உன்னைப் போல
வெம்மையை வீசிக்கொண்டு
யாரும் அணுக முடியாத
நெற்றிக்கண் வாசல்
கொண்டதுமல்ல
அவளுடையது
கண்ணதாசா
உற்றுப்பார் உள்ளே
அது அவள்
இதயத்துக்குப்
போகும் வழி
அவள் இதயத்துக்குப்
போகும் வழிக்கு
உன் இதழால்தான்
ஆட்டமிட வேண்டும்
ஆட்டம் தொடங்கியும்கூட
எத்தனையெத்தனை
இதழ்களை எரித்த
குளிர்சிவப்புக்
குங்குமம் அது
தமிழால் ஆடுகின்றான் சிவனே
கண்ணதாசன்
தாங்குவானா
நான் பார்க்க வேண்டும்
ஆடட்டும் அவன்
-ஆசை (‘அண்டங்காளி’, 2021, டிஸ்கவரி வெளியீடு)
நன்றி: ‘ஆகாயப் பந்தலிலே’ பாடலின் ‘மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா’ வரிகள்

No comments:

Post a Comment