Saturday, April 30, 2016

குப்பைகளின் கதை


ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 30-04-2016 அன்று வெளியான கட்டுரை)
 
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பெரிய குப்பைக் காட்டை என்றாவது கடந்திருக்கிறீர்களா? சென்னையின் பிரம்மாண்டமான, பிரத்யேகக் குப்பைத் தொட்டி அது. அந்தக் குப்பைக்காட்டில் எப்போதும் ஏதாவது புகைந்துகொண்டும் எரிந்துகொண்டும் இருப்பதை, அந்த இடத்தைக் கடந்தவர்கள் கண்டிருக்கலாம். சென்னையின் சூழலியல் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கிய பள்ளிக்கரணை சதுப்புநிலம், தற்போது அடைந்திருக்கும் சூழல் சீர்கேட்டின் அடையாளம்தான் இந்தக் குப்பைக் காடு. ‘எவ்வளவு மோசம் இந்த மாநகராட்சி! இப்படியா பள்ளிக்கரணையைக் குப்பைக்காடாக்கிச் சீரழிப்பது? இவ்வளவு குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டியிருக்கிறார்களே’ என்றெல்லாம் அங்கலாய்க்க நமக்கு கொஞ்சமும் அருகதை இல்லை. நாம் போட்ட குப்பையும்தானே அங்கே வளர்ந்து காடாகியிருக்கிறது.
குப்பைக் காடு
முன்பெல்லாம் நாம் குப்பை மேடுகளைத்தான் பார்த்திருந்தோம். அவற்றின் அடுத்த கட்டப் பரிமாணம்தான் குப்பைக் காடுகள். ஒரு வகையில் காடுகளுக்கும் குப்பைக் காடுகளுக்கும் பெரிய தொடர்பு உண்டு. இடம்பெயரச் செய்து, திரித்தழிக்கப்பட்ட காடுகள்தானே குப்பைக்காடுகள். இந்த உணர்வுதான் ‘பொருட்களின் கதை’ நூலாசிரியரான ஆனி லியோனார்டுக்கும் ஏற்பட்டது. நியூயார்க்கில் சூழலியல் வகுப்புகளுக்காகச் செல்லும்போது தான் கண்டதை அவர் இப்படி எழுதுகிறார்:

Thursday, April 28, 2016

இந்தப் பிரபஞ்சத்தின் மையம் எது?


ஆசை
(‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்கத்தில் ‘28-04-2016 அன்று வெளியான கட்டுரை)

இந்தப் பிரபஞ்சம் ஏதோ ஒரு இடத்தில் தொடங்கியது என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையல்ல. பிரபஞ்சத்தின் பிறப்புக்குக் காரணமான பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்தது இடத்தில் அல்ல, காலத்தில்.
"பெருவெடிப்பு நிகழ்ந்தது எங்கே?" என்று என்னிடம் பலரும் அடிக்கடி கேட்பதுண்டு. கையெறி குண்டு ஒன்று வெடிப்பதைப் போன்று பிரபஞ்சம் விரிவதையும், அந்தக் கையெறி குண்டின் சிதறல்கள் பறப்பதுபோல் சூரியக் குடும்பத்தையும், பால்வெளியையும் கற்பனை செய்துகொண்டு இது போன்ற கேள்வியைக் கேட்கிறார்கள்.
இந்தப் பிரபஞ்சம் ஒரு இடத்தில் தொடங்கவில்லை, காலத்தில்தான் தொடங்கியது. கிட்டத்தட்ட 1,380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சம் தொடங்கியது என்பது பிரபஞ்சவியலின் மேம்பட்ட தரவுகளின் கணிப்பு. பிரபஞ்சம் உருவானதிலிருந்து விரிவடைந்துகொண்டிருக்கிறது. விரிவடைந்துகொண்டிருக்கிறது என்றால், ஏற்கெனவே இருக்கும் வெளியைத் தனது விரிவால் நிரப்புகிறது என்றல்ல. பிரபஞ்சம் நிரப்புவதற்கான இடமென்று அதற்கு வெளியில், அதற்குப் புறத்தே, வேறு வெளி ஏதும் இல்லை. முடிவில்லாமல் வளர்ந்துகொண்டே இருப்பதாக நமக்குத் தெரியும் காலத்தில்தான் இந்த விரிவு நிகழ்கிறது.

Wednesday, April 27, 2016

பிஞ்சுகள்: சொல்லின்றி உயிரில்லை!


ஆசை
('தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 26-04-2016 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது.)  

இயற்கைக்கும் பழந்தமிழ் இலக்கியத்துக்கும் உள்ள உறவு முக்கியமானது, நுட்பமானது. சங்கப் பாடல்களில் எதை எடுத்துப் பார்த்தாலும் இயற்கையோடு தொடர்புடைய ஏதாவது ஒரு செய்தி இருக்கும். ஆனாலும், சங்கக் கவிதைகளின் பாடுபொருளாக இயற்கை இருக்காது. மனிதர்கள், இயற்கை என்ற இருமை நிலை உருவாகாத காலத்தில் இயற்கையைத் தனியாக வைத்து மனிதர்கள் இலக்கியமாக்கியதில்லை. இயற்கையிலிருந்து அந்நியமாகிக்கொண்டிருக்கும் தற்காலத்தில் இயற்கையைப் கருப்பொருளாகக் கொண்டு படைப்புகள் உருவாவதே இந்த இருமை நிலையின் அடையாளம்தான்.

ஆங்கிலத்தில் இருபதாம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை இயற்கை இலக்கியம் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. தமிழ் நவீன இலக்கியத்திலோ இயற்கை இலக்கியம் என்பது இன்னும் குழந்தைப் பருவத்தில்தான் இருக்கிறது. இயற்கை என்பது குழந்தைகளுக்கு மட்டும்தான் என்பதுபோல் எழுதப்படுகிறது. அல்லது குழந்தைத்தனமாக எழுதப்படுகிறது. எனினும், தமிழின் மிகச் சில இயற்கை சார்ந்த பதிவுகளில் கி. ராஜநாராயணன் எழுதியபிஞ்சுகள்குறுநாவலைக் குறிப்பிட வேண்டும்.

விரல் நுனியில் விண்மீன்


ஆசை

('தி இந்து’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் 26-04-2016 அன்று வெளியான கட்டுரை)

வேகம்! மனித குலத்துக்கு எப்போதும் வேகத்தின் மீது தீராத வேட்கை இருந்துவந்திருக்கிறது. வேகம் அதிகரிக்க அதிகரிக்க அதன் மீது வேட்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் ஒரு மணி நேரத்துக்கு 2.6 மைல் தூரம் நடந்திருக்கிறார்கள். சமீப காலத்தில் நிலவுக்கு அருகே சென்று திரும்பி வந்திருக்கும் அப்போல்லோ-10 விண்கலத்தின் வேகம் கிட்டத்தட்ட மணிக்கு 26,000 மைல்கள். மனிதர்களைச் சுமந்து சென்ற வாகனம் ஒன்றின் உச்சபட்ச வேகம் இதுதான். ஆக, பத்தாயிரம் ஆண்டுகளில் மனிதர்களின் வேகம் பத்தாயிரம் மடங்கு அதிகரித்திருக்கிறது.
அதுக்கும் மேலே
வேகம் என்றாலே அது தூரத்தை இலக்காகக் கொண்டதுதானே! தூரத்தில் தெரியும் அருவி, தூரத்தில் தெரியும் காடு, மலை என்றெல்லாம் ஆரம்பித்த வேகத்துக்கான தாகம் ஒரு கட்டத்தில் நாடுகளைத் தாண்டுவதை இலக்காகக் கொண்டது. அப்படியே செங்குத்தாக மேல்நோக்கி நிலவையும் இலக்காகக் கொண்டு வெற்றி பெற்றது. வேகத்தை, தூரத்தை வெற்றி கொள்வதில் இன்றுவரை மனிதர்கள் அடைந்த / அடைந்துகொண்டிருக்கும் பெருவெற்றி வாயேஜர்-1 என்ற விண்கலம்தான். 1977-ல் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் மணிக்கு 38,610 மைல் வேகத்தில், 2 ஆயிரம் கோடி கிலோ மீட்டருக்கும் மேல் பயணித்து, தற்போது சூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்றிருக்கிறது. விண்மீனுக்கு இடைப்பட்ட பகுதியில் சென்றுகொண்டிருக்கும், மனிதரால் உருவாக்கப்பட்ட ஒரே பொருள் வாயேஜர்-1 கலம்தான்.

ஆம், அது கொல்லப்படுவதில்லை!

ஆசை

(புத்தக வாரத்தை முன்னிட்டு ‘தி இந்து’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில்
வெளியான நூல் விமர்சனம்)

பிரபல இந்தியவியல் அறிஞரான மிர்சா அலியாதெ 1933-ல் எழுதிய ‘மைத்ரேயி’ என்ற ரொமேனிய மொழி நாவலுக்கும் 1974-ல் வங்க மொழியில் மைத்ரேயி தேவி எழுதிய ‘கொல்லப்படுவதில்லை’ (ந ஹன்யதே) நாவலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? இரண்டு நாவல்களும் ஒரு காதல் கதையின் இரண்டு பக்கங்களைச் சொல்பவை. முதல் நாவலுக்குக் கொடுத்த பதிலடியாகவும் இரண்டாவது நாவலைக் கருதலாம். 

இந்த நாவல்கள் 41 ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்டவை என்பது கூடுதல் கவர்ச்சியையும் மர்மத்தையும் அளிக்கிறது.
சம்ஸ்கிருதமும் இந்தியத் தத்துவமும் கற்பதற்காக 1928-ல் இந்தியாவுக்கு வந்த மிர்சா அலியாதெ, பிரபல இந்தியத் தத்துவவியல் அறிஞரான சுரேந்திரநாத் தாஸ் குப்தாவிடம் மாணவராகச் சேர்கிறார். 1930-ல் மிர்சாவைத் தன் வீட்டிலேயே தங்கவைத்து, சொல்லிக்கொடுக்கிறார் சுரேந்திரநாத். சுரேந்திரநாத்தின் மனைவியும் மிர்சாவைத் தன் மகன்போல பாவித்து அன்பு காட்டுகிறார். ஆனால், மிர்சாவுக்கும் சுரேந்திரநாத்தின் மூத்த மகள் மைத்ரேயி தேவிக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்தக் காதல் விவகாரம் வெளிப்பட, சுரேந்திரநாத், மிர்சாவைத் துரத்திவிடுகிறார். துரத்தப்பட்ட மிர்சா காதல் வலி தாங்காமல் கொஞ்ச நாள் இமயமலையில் திரிகிறார். கிட்டத்தட்ட துறவியாகவே ஆகிவிடுகிறார். அதற்குப் பிறகு தனது சொந்த நாட்டுக்குத் திரும்பும் மிர்சா நாவல்கள் எழுதுகிறார். அவரது இரண்டாவது நாவல் ‘மைத்ரேயி’, அவருக்கும் மைத்ரேயிக்கும் இடையிலான காதலை அடிப்படையாகக் கொண்டது. காதலை மட்டும் சொன்னால் பரவாயில்லை, இருவருக்கும் இடையே உடலுறவு நிகழ்ந்தது என்று மிர்சா எழுதியிருப்பது 41 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு நாவல் உருவாகக் காரணமானது.

Tuesday, April 26, 2016

மொழிபெயர்ப்புகளைக் கொண்டாடுவோம்!



ஆசை

('தி இந்து’ நாளிதழின் ‘நூல்வெளி’ பகுதியில் உலக புத்தக தினத்தன்று [23-04-2016] மொழிபெயர்ப்புகளைக் கொண்டாடி எழுதப்பட்ட கட்டுரையின் முழு வடிவம் இது)
  
உலகளாவிய அறிவுப் பகிர்தலுக்குப் பெரும்பாலும் நாம் மொழிபெயர்ப்புகளையே நம்பியிருக்கிறோம். அப்படிப்பட்ட மொழிபெயர்ப்புகளை இந்த உலக புத்தக தினத்தன்று கொண்டாடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஷேக்ஸ்பியர், மிகைல் செர்வாண்டீஸ் போன்ற முக்கியமான உலக எழுத்தாளர்களின் நினைவாகக் கொண்டாடத் தொடங்கப்பட்டதுதான்உலக புத்தக தினம்’. இந்த ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதியன்று மகத்தான அந்த படைப்பாளிகள் இறந்துபோய் 400 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன என்பது இந்த ஆண்டு உலகப் புத்தக தினத்துக்குக் கூடுதல் சிறப்பு. இந்தத் தருணத்தில் உலக மொழிகளிலிருந்தும் இந்திய மொழிகளிலிருந்தும் தமிழுக்கு வந்த முக்கியமான நூல்களை வாசகர்களுடன் இங்கே கொண்டாடுகிறோம்!

உலகம் ஒரே கிராமமாக ஆனதற்குத் தொழில்நுட்பம் மட்டுமல்ல, மொழிபெயர்ப்புகளும் காரணம். “ஒவ்வொரு மொழியும் ஒரு உலகம். மொழிபெயர்ப்பு என்ற விஷயம் இல்லையென்றால் மவுனத்தை எல்லைகளாகக் கொண்ட வட்டாரங்களில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருப்போம்என்று ஜார்ஜ் ஸ்டெய்னர் கூறியிருப்பது மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. மூல மொழிப் புத்தகங்களுக்குச் செய்யப்பட்ட துரோகங்களாகவே மொழிபெயர்ப்புகளை அறிவுஜீவிகளும் இலக்கியகர்த்தாக்களும் ஏன், சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களும் கருதினாலும் எளிய மக்களைப் பொறுத்தவரை நுட்பங்களைப் பற்றி அவர்கள் அதிகம் கவலைப்படுவதில்லை. மூல நூலின் ஆத்மா எளிய வாசகருக்கும் போய்ச்சேரும் வகையில் இருந்தாலே ஒரு மொழிபெயர்ப்பின் நோக்கம் பெருமளவு வெற்றியடைந்துவிடுகிறது.

புத்தகம் வாழும்


ஆசை
(உலக புத்தக தினத்தை முன்னிட்டு 2014-ல் ‘தி இந்து’ நாளிதழில் வெளியான கட்டுரையை இந்த ஆண்டு புத்தக தினத்தை முன்னிட்டு மறுபடியும் பதிவிடுகிறேன்.)  

ஃபாரென்ஹீட் 451. காகிதம் தானாகவே எரிய ஆரம்பிக்கத் தேவைப்படும் தோராயமான வெப்பநிலை. புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளர் ரே ப்ராட்பரி தன்னுடைய நாவலுக்கு வைத்த தலைப்பும் இதுதான். 'புத்தகங்கள் தடைசெய்யப்பட்ட எதிர்காலத்தில்' நடப்பதாக எழுதப்பட்ட அந்த நாவலின் நாயகன் தீயணைப்பு வீரன். யார்யாரெல்லாம் புத்தகங்களை வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து அவர்கள் வீட்டுக்குச் சென்று அந்தப் புத்தகங்களை எரிக்கும் பணியில் இருப்பவன். ஒரு நாள் அவனுடைய புத்தக எரிப்புக் குழு ஒரு மூதாட்டியின் ரகசிய நூலகத்தை எரிக்கச் செல்கிறது. புத்தகங்களை எரிப்பதை அனுமதிக்காத அந்த மூதாட்டி தன்னைத் தானே எரித்துக்கொண்டு இறந்துபோகிறார். போயும்போயும் புத்தகங்களுக்காகத் தங்கள் உயிரையும் மாய்த்துக்கொள்பவர்கள் இருக்கிறார்கள் என்பது நாவலின் நாயகனுக்கு அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது. அதன் பிறகு அவன் வாழ்க்கை முற்றிலுமாக மாறிப்போகிறது.

சிறந்த மொழிபெயர்ப்புகள்! உலக புத்தக தினத்தை முன்னிட்டு ‘தி இந்து’ நாளிதழில் வெளியான தொகுப்பு



தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள், வாசகர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரைச் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களைப் பரிந்துரைக்கும்படிக் கேட்டு, அவர்களுடைய பட்டியல்களிலிருந்து இறுதிசெய்யப்பட்ட பட்டியல்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

உலக இலக்கியம்
* அந்நியன்-ஆல்பெர் காம்யு;
(பிரெஞ்சிலிருந்து) வெ.ஸ்ரீராம், க்ரியா பதிப்பகம்.
அன்னா கரீனினா- டால்ஸ்டாய்;
(ஆங்கிலம் வழி) நா. தர்மராஜன், பாரதி புத்தக நிலையம்.
கடலும் கிழவனும் - எர்னஸ்ட் ஹெமிங்வே;
(தமிழில்) ச.து.சு. யோகியார், எஸ்.எஸ். பப்ளிகேஷன்.
கரமசோவ் சகோதரர்கள் - பியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி;
(ரஷ்ய மொழியிலிருந்து), அரும்பு சுப்பிரமணியம், காலச்சுவடு பதிப்பகம்.
நம் காலத்து நாயகன்- லெர்மன்தேவ்;
(தமிழில்) பூ. சோமசுந்தரம், சந்தியா பதிப்பகம்.
பட்டாம்பூச்சி - ஹென்றி ஷாரியர்;
(தமிழில்) ரா.கி. ரங்கராஜன், நர்மதா பதிப்பகம்.
பாரபாஸ் (அன்பு வழி) - பேர் லாகர் குவிஸ்ட்;
(தமிழில்) க.நா.சு, மருதா பதிப்பகம்.
போரும் வாழ்வும்- லியோ டால்ஸ்டாய்;
(தமிழில்) டி.எஸ்.சொக்கலிங்கம், என்.சி.பி.எச்.
விசாரணை - ஃபிரன்ஸ் காஃப்கா,
(ஜெர்மன் மொழியிலிருந்து) ஏ.வி. தனுஷ்கோடி, க்ரியா பதிப்பகம்.
வேர்கள் - அலெக்ஸ் ஹேலி,
(தமிழில்) பொன்.சின்னத்தம்பி முருகேசன், எதிர் வெளியீடு.

சாதியை ஒழிப்பது எப்படி?



சுஹாஸ் போர்க்கர்

(அம்பேத்கர் மாதத்தை முன்னிட்டு 'தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்கத்தில் 25.04.2016 அன்று எனது மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரையின் முழுவடிவம் இது.) 

பாபா சாஹேப் அம்பேத்கரின் பிறந்த நாளை ஐநா முதன்முறையாகக் கொண்டாடியிருக்கிறது. இதற்கு இந்திய அரசு துணைநின்றிருக்கிறது. அம்பேத்கரின் பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாக அவரது 125-வது பிறந்த நாளை . நாவின் தலைமையகத்தில்.நா.வுக்கான இந்திய நிரந்தரத் திட்டச்செயல்பாடுநிறுவனம் கொண்டாடியிருக்கிறது. இதன் ஒரு பகுதியாகநீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுதல்என்ற தலைப்பில் கருத்தரங்கும் நடைபெற்றிருக்கிறது. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும், உலகெங்கும் சமத்துவத்துக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடுபவர்களுக்கும் உத்வேகமாகத் திகழ்பவர் இந்தியாவின் நாயகரான அம்பேத்கர் என்று அந்த அமைப்பின் குறிப்பு தெரிவிக்கிறது. “2030-க்குள் வறுமை, பட்டினி, சமூக-பொருளாதார சமத்துவமின்மை போன்றவற்றை ஒழிப்பது குறித்து .நா. உறுதி பூண்டிருக்கும்நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளில் பாபாசாஹேபின்ஆழமான பார்வையின் சுவடுகளைக் காண முடியும்; இந்த நேரத்தில் எவ்வளவு பொருத்தமான விஷயம் இது!” என்கிறது அந்த அமைப்பு.

Monday, April 18, 2016

இயற்கைக்கும் நமக்கும் இடையே ஒரு கேமரா! காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் கல்யாண் வர்மா நேர்காணல்



ஆசை

('தி இந்து’ சித்திரை மலரில் (2016) வெளியான நேர்காணலின் முழு வடிவம் இது. இந்த நேர்காணலின் மிகவும் சுருக்கமான வடிவம் ‘தி இந்து’வின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 16-04-2016 அன்று வெளியாகியிருக்கிறது)

இயற்கையிடமிருந்து நாம் பெறும் மகிழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்வதுதான் பேரானந்தம் என்று சொல்பவர் கல்யாண் வர்மா. இந்தியாவின் முக்கியமான காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்களுள் ஒருவாராக இருந்தாலும் தனது அனைத்து ஒளிப்படங்களையும் ‘பொதுவுடைமை’ ஆக்கியவர் அவர். சென்னைக்கு வந்திருந்த கல்யாண் வர்மாவை சந்தித்துப் பேசியதிலிருந்து…  


யாஹூவில் ‘சிறந்த பணியாளர்’ விருது பெற்ற நீங்கள் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞராக ஆனது எப்படி?

சின்ன வயதிலிருந்து எனக்கு இயற்கை மீதும் காட்டுயிர் மீதும் ஈடுபாடு உண்டு. ஆனால், தென்னிந்தியக் குடும்பங்களைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே! அதெல்லாம் கூடாது, இன்ஜினியராகவோ டாக்டராகவோதான் நான் ஆக வேண்டும் என்பது எங்கள் குடும்பத்தில் விருப்பம். எனக்கும் கூட தொழில்நுட்பம் பிடித்தமான விஷயம்தான். இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு யாஹூவில் வேலைக்குச் சேர்ந்தேன். மூன்று ஆண்டுகள் அங்கே வேலை பார்த்தேன். ரொம்பவும் நேசித்துதான் அந்த வேலையைச் செய்தேன். ஒரு கட்டத்தில் வேறு நிறுவனத்துக்கு மாறலாம் என்ற எண்ணத்தில் அந்த வேலையை விட்டேன். வேறு வேலைக்குப் போவதற்கு முன் ஆறு மாதமோ ஒரு வருடமோ ஏதாவது காட்டுக்குப் போய், இயற்கைச் சூழலுடன் நன்றாகப் பழக வேண்டும் என்று நினைத்தேன். சிறு வயதிலிருந்தே அது எனது கனவு. கர்நாடகத்தின் பிலிகிரிரங்கனா மலைப் பகுதிக்குச் சென்றிருந்தேன். ஆரம்பத்தில் ஒரு ஆறு மாதத்தில் வந்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், வேலையை விட்டு 11 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் நான் காட்டை விட்டு வெளியேறவில்லை.
இயற்கையுடன் திரிய ஆரம்பித்தவுடன் என்னால் வழக்கமான வாழ்க்கைக்கோ, வேறு வேலைக்கோ திரும்ப முடியவில்லை. எனக்கு இப்படி இருப்பதில்தான் சந்தோஷமே.

திருப்புமுனை என்று குறிப்பாக எதைச் சொல்வீர்கள்?

Saturday, April 16, 2016

அம்பேத்கர் பேசுகிறார்!


டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

(தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: ஆசை. அம்பேத்கரின் 124-வது பிறந்த நாளன்று ‘தி இந்து’ நாளிதழில் வெளியான தொகுப்பை அண்ணலின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு மறுபடியும் பதிவிடுகிறேன்)

வாழ்க்கை முறை
ஜனநாயகம் என்பது வெறுமனே ஒரு ஆட்சி முறை மட்டுமல்ல. அடிப்படையில் அது ஒரு கூட்டு வாழ்க்கைக்கான வழிமுறை. அனைத்துக் கருத்துப் பரிமாற்ற அனுபவங்களுக்குமான வழிமுறை. சக மனிதர்கள் மீது நாம் காட்ட வேண்டிய மதிப்புக்கும் மரியாதைக்குமான அடிப்படை அணுகுமுறை ஜனநாயகம்தான்.

ஆவணம் அல்ல; ஆன்மா!
அரசியல் அமைப்புச் சட்டம் என்பது வெறுமனே வழக்கறிஞர்கள் சேர்ந்து உருவாக்கிய ஆவணம் அல்ல; அது வாழ்க்கைக்கான வாகனம். அதன் ஆன்மா என்பது எப்போதுமே இந்த யுகத்தின் ஆன்மாதான்.

அக மேம்பாடு
கடலோடு சேரும் நீர்த் துளி தனது அடையாளத்தை இழக்கும். ஆனால், மனிதன் தான் வாழும் சமூகத்தின் அங்கமாக இருப்பதால் தனது அடையாளத்தை இழப்ப தில்லை. மனிதனுடைய வாழ்க்கை என்பது சுதந்திரமானது. அவன் பிறந்தது சமூகத்தின் மேம்பாட்டுக்காக மட்டுமல்ல, அவனது அக மேம்பாட்டுக்காகவும்தான்.

Friday, April 15, 2016

இயற்கை எனும் பிரம்மாண்டத்தின் முன்: லைஃப் ஆஃப் பை



ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில் 15-04-2016 அன்று வெளியான கட்டுரை. புத்தக மாதமான ஏப்ரலை முன்னிட்டு ‘திரைப்படமாகிய நாவல்’ என்ற கட்டுரைத் தொடர் வரிசையின் கட்டுரைகளுள் ஒன்றாக இது எழுதப்பட்டிருக்கிறது.)

ஒரு நாவல் படமாகும்போது அதன் ஆசிரியரைத் திருப்திப்படுத்துவதென்பது ரொம்பவும் சிரமம். ‘நாவல் போல படம் இல்லை. நாவலின் ஜீவனைப் படத்தில் கொண்டுவர முடியவில்லைஎன்று வாசகர்களும் சொல்வார்கள். இதற்கு நேர்மாறாக, ஆசிரியர்-வாசகர் என அனைத்துத் தரப்பையும் ஆட்கொண்ட படங்கள் மிகவும் குறைவே. அந்த வரிசையில்லைஃப் ஆஃப் பைமிகவும் முக்கியமானது.
பிஸின் மோலிடோர் பட்டேல் என்ற வித்தியாசமான பெயரைக் கொண்டபைதான் இந்தக் கதையின் நாயகன். அவனது தந்தை, புதுச்சேரியில் விலங்குக் காட்சி சாலை வைத்திருக்கிறார். அங்குள்ளரிச்சர்ட் பார்க்கர்என்னும் பெயருள்ள புலியிடம் நட்பு ஏற்படுத்திக்கொள்ள பைக்கு ஆசை ஏற்படுகிறது. விலங்குகளுக்கும்கூட ஆன்மா இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளவன் பை. புலிக்கு பை உணவு கொடுக்கப் போகும்போது அவனது தந்தைக்கு அது தெரிந்துவிடுகிறது. புலிக்கு ஆன்மாவெல்லாம் கிடையாது என்பதை நிரூபிக்க அவன் கண் முன்னாலேயே ஒரு ஆட்டைப் புலிக்கு இரையாக நீட்ட, அது கவ்விக்கொண்டு போய்விடுகிறது.

நான் ஏன் புத்தரை நோக்கிப் போகிறேன்?



டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
(அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய நாள்: அக்டோபர் 14, 1956 
நாக்பூரில் லட்சக்கணக்கான மக்களுடன் அம்பேத்கர் புத்தமதத்தைத் தழுவியதற்கு மறுநாள் அவர் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள் 14-10-2014 அன்று ‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் என் மொழிபெயர்ப்பில் வெளியானது. அதன் முழுவடிவத்தை அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு மறுபடியும் பதிவிடுகிறேன்) 

கவுரவம்தான் முக்கியம், சுயலாபங்கள் அல்ல!
 நேற்று ஒரு பிராமணப் பையன் என்னிடம் வந்து, “நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உங்கள் மக்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் உதறிவிட்டுச் செல்கிறீர்களே?” என்று கேட்டான். நான் அவனிடம் சொன்னேன், “நீ மஹராக (அம்பேத்கர் பிறந்த குலம்) மாறி நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் நாங்கள் விட்டுச்செல்லும் இடைவெளியை நிரப்பிக்கொள்!... அந்த இடங்களுக்காக பிராமணர்களிடமிருந்தும் பிறரிடமிருந்தும் எவ்வளவு மனுக்கள் வருகிறதென்று பார்ப்போம்!...”

எந்த தியாகத்துக்கும் தயார்
உண்மையில், கவுரவம்தான் மனிதகுலத்துக்கு இன்றியமையாதது, பொருள் சார்ந்த லாபங்கள் அப்படிப்பட்டவையல்ல. நல்ல இயல்புகளைக் கொண்ட ஒரு பெண்ணுக்குத் தெரியும் பாலியல் தொழிலில் லாபம் கிடைக்குமென்று. ஆனால், அவர் அப்படிச் செய்வாரா? தாழ்த்தப்பட்ட என்னுடைய சகோதரிகளுக்குச் சாதாரண சப்பாத்தி-சட்னிகூட கிடைப்பதில்லை. ஆனாலும், அவர்கள் கண்ணியத்துடன் வாழ்கிறார்கள். நாங்கள் எங்கள் கவுரவத்துக்காகப் போராடுகிறோம். மனிதகுலத்தைப் பூரண நிலையை நோக்கி வழிநடத்தத் தயாராகிக்கொண்டிருக்கிறோம். தேவைப்பட்டால், இதற்காக நாங்கள் எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம்.

Thursday, April 14, 2016

சமத்துவம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை


டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

(தமிழில்: ஆசை. அம்பேத்கரின் 124-வது பிறந்த நாள் அன்று ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியான இந்தக் கட்டுரையை அண்ணலின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு மறுபடியும் பதிவிடுகிறேன்)

 டிசம்பர் 25, 1949-ல் அரசியல் சட்ட நிர்ணய சபையில் அம்பேத்கர் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்...

ஜனவரி 26, 1950 அன்று முரண்பாடுகள் நிறைந்த ஒரு வாழ்க்கையில் நாம் அடியெடுத்து வைக்கப்போகிறோம். அரசியலில் சமத்துவமும் சமூக, பொருளாதார வாழ்வில் சமத்துவமின்மையையும் ஒருங்கே அடையவிருக்கிறோம். அரசியலைப் பொறுத்த வரை ‘ஒரு மனிதர் ஒரு ஓட்டு ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தை நாம் அங்கீகரிக்கவிருக்கிறோம்.
அதே நேரத்தில் நமது சமூக, பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக நமது சமூக, பொருளாதார வாழ்வில் ‘ஒரு மனிதர் ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தைப் புறக்கணிப்பதைத் தொடரப்போகிறோம். இப்படிப்பட்ட முரண்பாடுகளின் வாழ்க்கையை இன்னும் எவ்வளவு காலம்தான் நாம் தொடரப்போகிறோம்? நமது சமூக, பொருளாதார வாழ்வில் இன்னும் எவ்வளவு காலம்தான் சமத்துவத்தை நாம் புறக்கணிக்கப்போகிறோம்? இப்படியே நாம் வெகு காலமாக அதைச் செய்தால் கடைசியில் நமது அரசியல் ஜனநாயகத்தைப் படுகுழியில்தான் போய்த் தள்ளிவிடுவோம்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த முரண்பாட்டை நாம் அகற்ற வேண்டும். இல்லையென்றால், சமத்துவமின்மையால் பாதிக்கப்படும் மக்களெல்லாம் அரசியல் ஜனநாயகம் என்னும் கட்டமைப்பை, அதாவது நாமெல்லாம் அரும்பாடுபட்டு உருவாக்கிய அந்தக் கட்டமைப்பை, தகர்த்தெறிந்துவிடக் கூடும்.

Wednesday, April 13, 2016

ஊரூரில் ஓர் சமத்துவக் கொண்டாட்டம்!


ஆசை

(கடந்த பிப்ரவரி 27, 28-ம் தேதிகளில் ஊரூர் ஆல்காட் குப்பத்தில் நடந்த கலாச்சார-கலை சங்கமக் கொண்டாட்டத்தைப் பற்றி நான் எழுதி ‘தி இந்து’ நாளிதழின் ‘இளமை புதுமை’ இணைப்பிதழில் மார்ச்-24, 2016 அன்று வெளியான கட்டுரையைச் சற்று தாமதமாகப் பதிவிடுகிறேன்.)

ஊரூர் ஆல்காட் குப்பத்துக்கும் ஆழ்வார்பேட்டைக்கும் இடையில் எவ்வளவு தூரம் இருக்கும்? 7 கி.மீ. என்கிறது ‘கூகுள்’. ஆனால், இந்த இரண்டு பகுதிகளின் வாழ்க்கை முறைக்கும் கலாச்சாரத்துக்கும் இடையேயுள்ள இடைவெளி இதைவிட பல மடங்கு அதிகம். இந்த இடைவெளியைக் குறைப்பதற்கும், கலையுலகில் எல்லாத் தரப்பு மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும் கர்னாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா உள்ளிட்டோரால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் முயற்சிதான் ‘ஊரூர் ஆல்காட் குப்பம் விழா’.
இதுவரை மேல்தட்டு மக்களின் கலை என்று அறியப்பட்டுவந்த கர்னாடக இசை, பரத நாட்டியம் போன்றவற்றைக் குப்பத்து மக்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கலை விழா அதன் இரண்டாவது ஆண்டில் கூடுதல் அம்சங்களுடன் தற்போது கொண்டாட்டமாக நடந்து முடிந்திருக்கிறது.