Monday, June 6, 2016

புதிய வெளிச்சம்: உலக அரங்கை நோக்கி தலித் இலக்கியம்


ஆசை
('தி இந்து’ நாளிதழின் ‘கலைஞாயிறு’ பகுதியில் 05-06-2016 அன்று வெளியான கட்டுரை)

சின்னி என்ற அந்தச் சிறுமி சாப்பிட்டு மூன்று நாட்களாகிறது. நெடுஞ்சாலையோரக் கிராமமொன்றில் வசிக்கிறாள் அவள். வீட்டில் நிறைமாதக் கர்ப்பிணியாய் சாப்பிடாமல் படுத்திருக்கும் அம்மா. அவளுக்கு ஒரு அக்காவும் ஒரு தம்பியும் இருக்கிறார்கள். வேலை தேடிச் சென்ற அப்பா இன்னும் வீடு திரும்பவில்லை. வீட்டில் கைப்பிடியளவு எஞ்சியிருந்த அரிசியை அம்மா தன் மூத்த மகளுக்குக் கொடுக்க, அவள் சாப்பிடாமல் சின்னிக்குக் கொடுக்க, சின்னி அதை அப்படியே தம்பிக்குக் கொடுத்துவிடுகிறாள். இந்த நிலையிலும் தன் பிள்ளைகளை நினைத்து அந்த அம்மாவுக்குப் பெருமிதம்.
பசியே அன்றாடமாக இருக்கும் சின்னியின் வாழ்க்கையில் ஓராண்டுக்கு முன்பு ஒரு வசந்த காலம் வந்தது. அதுவும் எப்படித் தெரியுமா? ஒரு விபத்தால். சாலையில் விளையாடிக்கொண்டிருக்கும்போது லாரியில் சின்னி அடிபட்டுவிட, லாரியின் உரிமையாளர் சின்னியை ஒரு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்க்கிறார். தினமும் சின்னிக்குப் பழங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் என்றெல்லாம் வாங்கிக்கொண்டு வருகிறார். அவள் குணமாகி வீட்டுக்குச் சென்ற பின்னும் மாதாமாதம் அவள் வீட்டுக்கு நூறு ரூபாய் கொடுக்கிறார். அந்தச் சாலையைக் கடக்கும்போதல்லாம் சின்னிக்குத் தின்பதற்கு ஏதாவது தந்துவிட்டுப் போவார். இப்படியே கொஞ்ச காலம் கழிந்த பிறகு அந்த உபகாரங்கள் நின்றுவிடுகின்றன. வெறுமனே சிரிப்பைத் தந்துவிட்டுப் போகும் லாரியைத் தினமும் பார்க்கிறாள் சின்னு. இப்படியே எதிர்பார்த்து எதிர்பார்த்துக் கடைசியில் துணிந்து ஒரு முடிவெடுக்கிறாள், லாரிக்குக் குறுக்கே பாய்ந்து லாரியை நிறுத்துவதென்று. கதையில் தொடக்கத்தில் ஒரு தவளை அடிபட்டுச் செத்துக் கிடக்கும். அதேபோல் இறுதியில் சின்னியும் லாரியில் அடிபட்டுச் செத்துக் கிடக்கிறாள். தலித் மக்களின் வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் உதாரணமாக இந்த ஒப்புமை ஆகிவிடுகிறது.

Friday, June 3, 2016

அதிவேக குவாண்டம் கம்ப்யூட்டர்!


ஜான் நாட்டன்
('தி இந்து’ நாளிதழின் வெற்றிக்கொடி இணைப்பிதழில் 31-05-2016 அன்று என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)

புகழ்பெற்ற உயிரியலாளர் ஜே.பி.எஸ். ஹால்டேன் ஒருமுறை இப்படிச் சொன்னார்: “இந்த உலகம் நாம் நினைப்பதைவிட விசித்திரமானது மட்டுமல்ல, நம்மால் நினைக்க முடிவதைவிட விசித்திரமானது.” குவாண்டம் இயக்கவியல் பற்றிப் (Quantum Mechanics) படிக்கும்போது ஹால்டேனின் வாசகங்கள்தான் நினைவுக்குவருகின்றன.
தெரிந்ததெல்லாம் பிழையா?
அணுக்களுக்கு உள்ளே என்ன நிகழ்கிறது என்பதைப் பற்றி ஆய்வு செய்யும் இயற்பியல் துறைதான் குவாண்டம் இயக்கவியல். மென்மையான மனம் படைத்தவர்களுக்கான விஷயம் அல்ல இது. ஏனெனில், நம் புலன்களால் நாம் உணரக்கூடிய இந்த பெளதிக உலகத்தைப் பற்றி (physical world) நாம் தெரிந்துவைத்திருக்கும் எல்லாமே பிழையானவை என்று குவாண்டம் கோட்பாடு சொல்கிறது.
குவாண்டம் உலகில், அதாவது அணுக்களுக்கு உள்ளே, எல்லாமே விசித்திரமாகத் தோன்றுகின்றன. உதாரணத்துக்கு, அணுத் துகள்கள் ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் இருக்க முடியும். இதற்கு ‘இருநிலை இருப்பு’ (Superposition) என்று பெயர். அதுமட்டுமல்ல, அணுத் துகள்களின் ஜோடிகளுக்கு இன்னொரு விசித்திரப் பண்பு உண்டு.

சகஜமாகிப் போன நம் வன்முறை



ஷிவ் விஸ்வநாதன்
 ('தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் 01-06-2016 அன்று என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது)

அதிகாரப்பரவலாக்கலை விரும்பும் நாடு இந்தியா. கிட்டத்தட்ட அதன் ஒவ்வொரு பகுதியையும் அது அரவணைக்கிறது. கொடுங்கோன்மை என்ற விஷயத்தைப் பற்றித்தான் இங்கே நான் பேசப்போகிறேன். எடுத்துக்காட்டாக, நம் காவல் நிலையங்களைப் பாருங்கள். ஹாப்ஸியன் இறையாண்மை நம்மை ஆள்வதற்கு எந்த அவசியமும் நமக்கு இல்லை. அரசியல் சித்தாந்தத்தில், ஹாப்ஸியன் சொல்லாடல்களின்படி விவாதிக்கப்படும் கோட்பாடு ஒன்று இருக்கிறது. தாமஸ் ஹாப்ஸ் என்ற தத்துவ அறிஞரின் கருதுகோள் என்னவென்றால் ஒரு ஆட்சியாளரின் இறையாண்மை என்பது அவருடைய குடிமக்களால் அவருக்கு வழங்கப்படும் ஓர் ஏற்பாடே. பதிலுக்கு அந்த ஆட்சியாளர் அந்த மக்களைப் பாதுகாக்க வேண்டும். அந்த ஆட்சியாளர் தன் கடமையைச் செய்யத் தவறினால் மக்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்வதற்கான அவர்களின் திறனை மறுபடியும் பெற்று, புது ஒப்பந்தமொன்றை அவர்கள் உருவாக்குவார்கள் என்ற முடிவுக்கு தாமஸ் ஹாப்ஸ் வருகிறார். இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு போலீஸ்காரர் போதும், இந்தியாவின் எல்லாக் கொடுங்கோன்மைக்கும் உதாரணமாக. அவர்தான் உள்ளூர் வம்பர், உள்ளூர் பிரதமர், நீதிபதி; இவை எல்லாம் கலந்த கலவையும் அவரே. நம் சமூகத்தில் ஆட்சி நிர்வாகம் என்ற விஷயத்தை உருவாக்கும் கூறுகள் தொடங்கும் இடமும் முடியும் இடமும் காவல் நிலையம்தான். சட்டம் என்பதும் கொடுங்கோன்மையின் ஒருவித வடிவமே, அதற்கும் நீதிக்கும் உள்ள தொடர்பு மிகக் குறைவே. இந்தியாவின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் கொடுங்கோன்மைகளைப் பெற்றிருக்கும் நமக்குத் தனியாகச் சர்வாதிகாரிகள் வேண்டுமா என்பதுதான் நான் பேச வரும் விஷயம். இங்குள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு வேண்டுமானால் இந்தியா என்பது நம்பிக்கையை விதைக்கக் கூடிய ஒரு ஜனநாயகமாக இருக்கலாம், இங்கே அவர்களின் கனவுகள் நனவாவதற்கு வாய்ப்பு இருக்கலாம். ஆனால், பழங்குடியினருக்கும் நாடோடிச் சமூகத்தினருக்கும் தலித் மக்களுக்கும் சாதாரணப் பெண்களுக்கும் இந்தியா என்பது சர்வாதிகாரத்தனங்களின் பன்மைத்துவம் என்றே பொருள்படும்.

Thursday, June 2, 2016

ஜஹா துக்குரேஹ்: கொடுமையை எரிக்கும் நெருப்பு



ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் 29-05-2016 அன்று வெளியான கட்டுரையின் சற்றே விரிவான வடிவம் இது)
    
பெண்ணுறுப்பு சிதைப்பு’ (Female Genital Mutilation) என்னும் கொடூரமான வழக்கத்தை எதிர்த்துப் போராடிவரும் ஜஹா துக்குரேஹ் என்ற போராளி (வயது 26), டைம்ஸ் பத்திரிகையின்உலகின் செல்வாக்கு மிக்கவர்கள்பட்டியலில் சமீபத்தில் இடம்பிடித்திருக்கிறார். இது போன்ற போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டவர்களுக்கும் இது மிகுந்த உத்வேகத்தை அளிக்கும் செய்தி.

தற்போது அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் வசித்துவரும் ஜஹா காம்பியா நாட்டைச் சேர்ந்தவர். பிறந்து ஒரு வாரத்திலேயே அவர்களின் குல வழக்கப்படி (மற்றும் பல நாடுகளின் வழக்கப்படி) அவரது பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டது. 15 வயதில் வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்துவைக்கப்பட்டு அமெரிக்கா அனுப்பப்பட்டார் ஜஹா. அப்போது அவரது கணவருக்கோ 40 வயதுக்கும் மேல். ‘பெண்ணுறுப்புச் சிதைப்பின் காரணமாக உடலுறவின் போது கொடுமையான வலியை அனுபவித்தார் ஜஹா. கந்து (clitoris) நீக்கம் செய்யப்பட்டிருந்தது மட்டுமல்லாமல், சிறு இடைவெளி மட்டும் விடப்பட்டு பிறப்புறுப்பு தைக்கப்பட்டிருந்ததால் சிறுநீர் கழிக்கக்கூட மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை ஜஹாவுக்கு. மருத்துவரிடம் சென்ற பிறகுதான் சிறிதளவாவது அவரது பிரச்சினை சரிசெய்யப்பட்டது.

Wednesday, June 1, 2016

புத்தாயிரத்தின் கவிஞர்கள்



ஆசை
(சென்னைப் புத்தகக் காட்சியையொட்டி ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் 01-06-2016 அன்று வெளியான என் கட்டுரையின் விரிவான வடிவம் இது)

புத்தாயிரத்துக்குப் பிறகான காலகட்டம் என்பது நவீனத் தமிழ்க் கவிதையின் வரலாற்றில் பல்வேறு காரணங்களை முன்னிட்டு மிகவும் முக்கியமான காலகட்டமாகும். 90-களுக்கு முன்பு வரை கவிதைகளும் கவிஞர்களும் சமூக வெளி, சமூகப் பிரச்சினைகள் போன்றவற்றுக்குக் கொடுத்திருந்த இடம் குறைவே. 90-களுக்கு முந்தைய கவிஞர்கள் பெரும்பாலும் மனவெளியில் உலவியவர்களாகவே தெரிந்தார்கள். ஆத்மாநாம் போன்ற ஒருசிலர்தான் விதிவிலக்காக இருந்தார்கள்.

புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக உலகுக்கு இந்தியா திறந்துவிடப்பட்டது 1990-களின் தொடக்கத்தில். இதன் தொடர்ச்சியாக பொருளாதாரத் தாரளமயமாதல், உலகமயமாதல் போன்றவற்றின் கரங்கள் இந்தியாவை இறுகப்பற்ற ஆரம்பித்தன. இந்தப் போக்குக்கான எதிர்க்குரல்கள் தமிழ்க் கவிதைகளில் தீவிரமாகப் பிரதிபலிக்க ஆரம்பித்தது புத்தாயிரத்துக்குப் பிறகுதான். கூடவே, தலித்தியம், பெண்ணியம், சுற்றுச்சூழல் சார்ந்த குரல்கள் 90-களில் தமிழில் வெளிப்பட ஆரம்பித்தாலும் கவிதையில் ஆழமாகக் காலூன்றியது புத்தாயிரத்துக்குப் பிறகுதான்.