Showing posts with label க்ரியா ராமகிருஷ்ணன். Show all posts
Showing posts with label க்ரியா ராமகிருஷ்ணன். Show all posts

Wednesday, June 18, 2025

க்ரியா ராமகிருஷ்ணன்: தமிழில் முன்னுதாரணமில்லாத ஒரு எடிட்டர் - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு


ஆசை

தமிழில் புத்தகக் கலாச்சாரம் என்பது இல்லை என்பது க்ரியா ராமகிருஷ்ணன் அடிக்கடி வெளிப்படுத்தும் வருத்தங்களுள் ஒன்று. புத்தகக் கலாச்சாரம் என்பது புத்தகங்கள் அதிகம் வெளியாகும் சூழல் அல்ல, புத்தகங்களுக்கு நம் வாழ்க்கையில் நாம் முக்கிய இடம் கொடுப்பதே புத்தகக் கலாச்சாரம். அப்படிப்பட்ட கலாச்சாரம் இல்லாமல் போனதன் விளைவுகளுள் ஒன்றுதான் தமிழில் எடிட்டர்களும் ‘கிட்டத்தட்ட’ இல்லாமல் போனது. அந்தக் குறையைப் போக்க வந்த முக்கியமான இருவர் – ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் (2020), நஞ்சுண்டன் (2019) – சமீப ஆண்டுகளில் காலமானது தமிழுக்கும் தமிழ்ப் பதிப்புத் துறைக்கும் பேரிழப்பு.

எடிட்டிங்கை க்ரியா ராமகிருஷ்ணன் எப்படி அணுகினார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு ‘எடிட்டிங்’ என்பதைப் பற்றித் தமிழ்ச் சூழல் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருந்தது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.

Sunday, November 17, 2024

க்ரியா ராமகிருஷ்ணன்: தமிழில் முன்னுதாரணமில்லாத ஒரு எடிட்டர்: நினைவுநாள் பகிர்வு


ஆசை

தமிழில் புத்தகக் கலாச்சாரம் என்பது இல்லை என்பது க்ரியா ராமகிருஷ்ணன் அடிக்கடி வெளிப்படுத்தும் வருத்தங்களுள் ஒன்று. புத்தகக் கலாச்சாரம் என்பது புத்தகங்கள் அதிகம் வெளியாகும் சூழல் அல்ல, புத்தகங்களுக்கு நம் வாழ்க்கையில் நாம் முக்கிய இடம் கொடுப்பதே புத்தகக் கலாச்சாரம். அப்படிப்பட்ட கலாச்சாரம் இல்லாமல் போனதன் விளைவுகளுள் ஒன்றுதான் தமிழில் எடிட்டர்களும்கிட்டத்தட்டஇல்லாமல் போனது. அந்தக் குறையைப் போக்க வந்த முக்கியமான இருவர் – ‘க்ரியாராமகிருஷ்ணன் (2020), நஞ்சுண்டன் (2019) – சமீப ஆண்டுகளில் காலமானது தமிழுக்கும் தமிழ்ப் பதிப்புத் துறைக்கும் பேரிழப்பு.

எடிட்டிங்கை க்ரியா ராமகிருஷ்ணன் எப்படி அணுகினார் என்பதைப் பார்ப்பதற்கு முன்புஎடிட்டிங்என்பதைப் பற்றித் தமிழ்ச் சூழல் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருந்தது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.

Tuesday, June 18, 2024

க்ரியா ராமகிருஷ்ணன் 80வது பிறந்த நாள்

தமிழின் முன்னோடிப் பதிப்பாளர்களுள் ஒருவரும் என் வழிகாட்டியுமான க்ரியா ராமகிருஷ்ணனுக்கு இன்று 80வது பிறந்த நாள் நிறைவு. இருபது ஆண்டுகள் அவருடன் பயணித்திருக்கிறேன். இயற்கை, அறிவியல், கலை, இலக்கிய, சினிமா, இசை ரசனை என்று ஏராளமான விஷயங்களை அவரிடமிருந்து கற்றிருக்கிறேன். எல்லாவற்றையும் விட வாழ்க்கை சார்ந்த தார்மீக நெறிகளை அவரிடம் பெற்றிருக்கிறேன். அவரது இழப்பை ஒவ்வொரு நாளும் உணர்ந்தாலும் ஒரு விதத்தில் அவர் என்னுடன் இருப்பது போலவே உணர்கிறேன். க்ரியா வெளியிட்ட ஒவ்வொரு புத்தகமும் கண்ணில் படும்போதெல்லாம் அவரை நான் பார்க்கிறேன்.

இதையெல்லாம் தாண்டி காலத்துடன் உறவாடிய ஒரு தீர்க்கதரிசனப் பதிப்பாளராகவே அவரை நான் உணர்கிறேன். சமூக ஊடகங்கள் பெரிய அளவில் உருவாகும் முன்பே அவர் வெளியிட்ட பியர் பூர்தியுவின் ‘தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்’, ரே பிராட்பரியின் ‘ஃபாரன்ஹீட் 451’ போன்ற படைப்புகள் முக்கியமானவை. புத்தகங்கள் தடைசெய்யப்படும் காலத்தில் ஆசிரியர்கள் கொல்லப்படும், தாக்கப்படும் காலத்தில் பிராட்பரியின் புத்தகம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னோடியான சுற்றுச்சூழல் புத்தகங்களை வெளியிட்டவர் ராமகிருஷ்ணன். நீர்வளம் குறைந்துகொண்டே வரும் காலகட்டத்தில் ‘தோண்டுகிணறுகளும் அவற்றின் அமைப்புகளும்’ புத்தகத்தை 80களின் தொடக்கத்தில் சி.மணியின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டார். 1986ல் வெளியான ‘இந்தியாவின் சுற்றுச்சூழல்’ ஒரு முன்னோடிப் புத்தகம். அதுமட்டுமல்ல அணுசக்தி பிரச்சினையைப் பேசும் ஜோஷ் வண்டேலூவின் ‘அபாயம்’ குறுநாவல்கள் தொகுப்பு பிரமாதமானது. துரதிர்ஷவசமாக இவையெல்லாம் தூய இலக்கியச் சூழலில் பேசப்படவில்லை.
பாசிசம், நாசிசம் இரண்டும் மறுஎழுச்சி பெறும் காலகட்டத்தில் யூழேன் இயனெஸ்கோவின் ‘காண்டாமிருகம்’, ஸீக்ஃப்ரீட் லென்ஸின் ‘நிரபராதிகளின் காலம்’, காஃப்காவின் ‘விசாரணை’ போன்ற படைப்புகளை வெளியிட அவர் தேர்ந்தெடுத்ததில் வெளிப்படும் தீர்க்கதரிசனம் வியக்க வைக்கிறது.
மரண தண்டனை, போர், வன்முறை, அதீதம் என்ற போன்ற நம் காலத்தின் முக்கியமான பிரச்சினைகளுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட 2500 ஆண்டுகளுக்கும் முந்திய ‘தாவோ தே ஜிங்’ படைப்பை சி.மணியின் மொழிபெயர்ப்பில் அவர் வெளியிட்டார். அதுவே அவர் வெளியிட்ட புத்தகங்களுள் அவருக்கு மிகவும் பிடித்தமானது, எனக்கும் கூட. மேலும் ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’, விக்தோர் ஹ்யூகோவின் ‘மரண தண்டனைக் கைதியின் இறுதிநாள்’ போன்ற படைப்புகளும் மரண தண்டனைக்கு எதிரானவை.
இவை தவிர சாதியத்தின் கொடுமை பற்றிப் பேசும் இமையத்தின் படைப்புகளும் பூமணியின் படைப்புகளும் முக்கியமானவை.
என் 5 நூல்கள் க்ரியாவில் வெளியாகியிருக்கின்றன என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
காலத்துடன் உறவாடிய, காலத்துக்கு முன்பே சிந்தித்த பதிப்பாளர் க்ரியா ராமகிருஷ்ணனின் 80வது பிறந்த நாளில் அவரை வணங்குகிறேன்!

Saturday, May 20, 2023

‘க்ரியா’ 50!

 


ஆசை

தமிழின் மிகச் சிறந்த முன்னோடிப் பதிப்பகங்களில் ஒன்றான ‘க்ரியா’வின் 50-ம் ஆண்டு இன்று தொடங்குகிறது. பத்தாண்டு காலம் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் அவர்களுடன் பக்கத்தில் இருந்து பணிபுரிந்தும், அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகள், பிந்தைய பத்தாண்டுகள் எல்லாம் சேர்த்து 22 ஆண்டுகாலம் அவருடைய நட்பில் இருந்தும் நான் கற்றதும் பெற்றதும் ஏராளம். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’, ‘டாக்டர் இல்லாத இடத்தில்’, தமிழின் தொன்மையை நிறுவுவதற்கு உதவும் நூல்களுள் ஒன்றான ஐராவதம் மகாதேவன் அவர்களின் ‘Early Tamil Epigraphy' (க்ரியாவின் இணை பதிப்பாளர் ஹார்வர்டு பல்கலைக்கழகம்) போன்ற நூல்களும் இலக்கிய நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் போன்றவையும் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் ‘க்ரியா’வின் பெரும் பங்களிப்புகள். புத்தக உருவாக்கம், கண்ணில் ஒற்றிக்கொள்ளக்கூடிய நேர்த்தி, எடிட்டிங் போன்றவற்றில் உலகத் தரத்தைக் கொண்டுவந்தவர் க்ரியா ராமகிருஷ்ணன். தனக்கு முன்னோடியாகத் தமிழில் வாசகர் வட்டம் லெட்சுமி கிருஷ்ணமூர்த்தியை க்ரியா ராமகிருஷ்ணன் கூறுவார்.

பதிப்பு மட்டுமல்லாமல் கூத்துப்பட்டறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், மொழி அறக்கட்டளை போன்றவற்றின் உருவாக்கத்திலும் ராமகிருஷ்ணனுக்கும் க்ரியாவுக்கும் பெரும் பங்குண்டு. புரிசை கண்ணப்ப தம்பிரானின் தெருக்கூத்துக் குழுவின் சென்னை முகவரியாகவும் க்ரியா சில காலம் இருந்திருக்கிறது. ராயப்பேட்டையில் க்ரியா இருந்த காலங்களில் தமிழ் நவீன ஓவிய இயக்கத்துக்கு முக்கியப் பங்களித்திருக்கிறது.  ஓவியர்கள் ஆதிமூலம்,  ஆர்.பி.பாஸ்கரன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோருடன் க்ரியா இணைந்து செயல்பட்டிருக்கிறது. அநேகமாக ட்ராட்ஸ்கி மருதுவின் முதல் ஓவியக் கண்காட்சி க்ரியாவில் நடந்தது என்று நினைக்கிறேன். ஜோசப் ஜேம்ஸ், ஆர்.பி. பாஸ்கரன் உள்ளிட்டோரின் உதவியுடன் நவீன ஓவியங்கள் பற்றிய அறிமுகத்தை க்ரியா பல கல்லூரிகளுக்கும் எடுத்துச் சென்றது. மேலும், அச்சுதன் கூடலூர், எஸ்.என். வெங்கட்ராமன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஓவியர்களும் கலைஞர்களும் க்ரியாவுடன் நெருக்கமாகச் செயல்பட்டிருக்கிறார்கள். 

1974-ல் க்ரியா ராமகிருஷ்ணனும் அவரது நண்பர் ஜெயாவும் பெருங்கனவுடன்  க்ரியா பதிப்பகத்தைத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில், இடைக்காலத்தில், பின்னாளில், அல்லது நெடுங்காலம் என்று வெவ்வேறு வகையில் கவிஞர் சி.மணி, சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், பேராசிரியர் சிவராமன், ரமணி, சங்கரலிங்கம், கி.அ. சச்சிதானந்தம், இ.அண்ணாமலை, அ. தாமோதரன், தங்க. ஜெயராமன், பா.ரா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்குதாரர்களாகவோ பக்கபலமாகவோ இருந்திருக்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்களான பத்மநாப ஐயர், மு.நித்தியானந்தன் உள்ளிட்டோரும், டேவிட் ஷுல்மன் போன்ற சர்வதேச அறிஞர்களும் க்ரியாவின் முக்கியமான நண்பர்கள். சா. கந்தசாமி, ந.முத்துசாமி, சுந்தர ராமசாமி, ந.பிச்சமூர்த்தி, மௌனி, ஜி.நாகராஜன், அசோகமித்திரன், சார்வாகன் உள்ளிட்ட ஆளுமைகளில் தொடங்கி சமகால இலக்கியத்திலும் அறிவுத் துறையிலும் பெரும் பங்களிப்பு செய்துவரும் எஸ்.வி.ராஜதுரை, தியடோர் பாஸ்கரன், பூமணி, இராசேந்திர சோழன், திலீப் குமார், இமையம் உட்பட பலருடைய எழுத்தியக்கத்துக்கும் க்ரியா உறுதுணையாக இருந்திருக்கிறது.  

கோபி கிருஷ்ணன், திலீப் குமார், சி.மோகன், பிரபஞ்சன், வண்ணநிலவன் உள்ளிட்ட முக்கியமான எழுத்தாளர்களும் க்ரியாவில் பணியாற்றியிருக்கிறார்கள். ஈழத் தமிழர்களின் நூல்களை தமிழ்நாட்டில் முதலில் வெளியிட்ட பதிப்பகங்களுள் க்ரியாவும் ஒன்று. வெ.ஸ்ரீராம், ஏ.வி. தனுஷ்கோடி உள்ளிட்டோரின் மொழிபெயர்ப்பில் பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளிலிருந்து க்ரியா வெளியிட்ட நேரடி மொழிபெயர்ப்புகள் அசாத்திய உழைப்பினாலும் அக்கறையினாலும் திறமையினாலும் உருவானவை என்பதை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். இலக்கியம், அகராதி, கல்வெட்டியல், சுற்றுச்சூழல், மருத்துவம், விவசாயம், தத்துவம், மார்க்சியம், வரலாறு உள்ளிட்ட பரந்துபட்ட அளவில் க்ரியாவின் பங்களிப்பு விரிகிறது.  க்ரியா வெளியிட்ட ‘இந்தியாவில் சுற்றுச்சூழல்’ (1986) என்ற நூல் தமிழில் வெளிவந்த முதல் சுற்றுச்சூழல் நூல்களுள் ஒன்று. அணுசக்தியின் ஆபத்து பற்றிப் பேசும் ஜோஷ் வண்டேலுவின் நாவலின் மொழிபெயர்ப்பை 1992-ம் ஆண்டிலேயே ‘அபாயம்’ என்ற தலைப்பில் க்ரியா வெளியிட்டது .

திறன், அறிவு போன்றவற்றைத் தவிர க்ரியாவில் நான் கற்றுக்கொண்டவற்றுள் பிரதானமானது வாழ்க்கை சார்ந்த விழுமியங்கள். கடினம் என்றாலும் அவற்றைப் பின்பற்றுவதற்கு மிகவும் முயன்றுகொண்டிருக்கிறேன். ‘க்ரியா’ 50-வது ஆண்டில் கால் பதிக்கும் இந்நாளில் க்ரியா ராமகிருஷ்ணன் இருந்திருக்க வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது. அவர் என்றும் என்னுடன் இருப்பார் என்ற நினைப்பிலேயே இருந்துவிட்ட எனக்கு அவருடைய மரணம் என் தந்தையின் மரணம் போல பெரும் அதிர்ச்சியையும் வெற்றிடத்தையும் ஏற்படுத்திவிட்டது. வழிகாட்டல் பெறவும், புரிதலுடன் கூடிய அன்பைப் பெறவும், இன்னும் இன்னும் கற்றுக்கொள்ளவும், கருத்துவேறுபாடுகளை முன்னிட்டு நான் சண்டை போடவும் இன்று அவர் இல்லை. வாழ்க்கை அப்படித்தான், அவரிடமிருந்து பெற்றதைச் சிறிதாவது நல்ல முறையில் செலவிடுவதுதான் அவருக்கும் க்ரியாவுக்கும் நான் செலுத்தும் நன்றிக்கடன்.

50 ஆண்டுகளில் சற்றேறக்குறைய 150 புத்தகங்கள்தான் ‘க்ரியா’ வெளியிட்டிருக்கும். அவற்றுள் உள்ளடக்கம், தயாரிப்பு எல்லாவற்றிலும் மிகவும் பிடித்த ஒரே ஒரு புத்தகத்தைச் சொல்லச் சொன்னால் எந்தப் புத்தகத்தைச் சொல்வீர்கள் என்று ஒரு முறை க்ரியா ராமகிருஷ்ணனிடம் கேட்டேன். தயங்காமல் சொன்னார், ‘சி. மணி மொழிபெயர்த்த சீன ஞானி லாவோ ட்சுவின் தாவோ தே  ஜிங்’ என்று. என்னுடைய தெரிவும் அதுவே. நான் படித்த ஞான நூல்களுள் முதல் இடத்தில் அதனையே வைப்பேன்.   

‘க்ரியா’ பதிப்பகத்துக்கும், (இப்போது நம்மிடையே இல்லையென்றாலும்) ‘க்ரியா’ ராமகிருஷ்ணனுக்கும் அவருடன் பங்களிப்பு செய்திருப்பவர்களுக்கும் வாழ்த்துகளும் அன்பும் நன்றியும்! 

Friday, June 19, 2020

க்ரியா ராமகிருஷ்ணன்-75 : 2


ஆசை

அப்போது நான் சினிமா கனவுகளில் இருந்தேன். சென்னைக்கு வந்து திரைப்படக் கல்லூரியில் படித்து சத்யஜித் ரே மாதிரி பெரிய இயக்குநராகும் கனவு. மன்னார்குடியில் இருக்கும்போது கூடப் படித்த நண்பர் ஸ்டாலினையும் அழைத்துக்கொண்டு சில முறை ராமகிருஷ்ணனை சந்திக்க வந்தேன். என் குடும்பத்தினர் சாதிக்காததை அவர் சாதித்தார். எனது சினிமா கனவுகளிலிருந்து உலுக்கி என்னை வெளியே கொண்டுவந்தார். எனக்கு இருந்தது கனவு மட்டுமே தவிர அதற்காக பாடுபடக் கூடிய தைரியம் இல்லை என்பது புரிந்தது. “ஒரு மாஸ்டர்ஸ் டிகிரி செய்யுங்கள்” என்றார். மன்னார்குடியில் அப்போது முதுகலை இல்லை என்பதால் 2001-ல் மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன். அண்ணனின் ஆதரவில் விக்டோரியா விடுதியில் தங்கிப் படித்தேன். அவ்வப்போது க்ரியாவுக்கோ அப்போது ராயப்பேட்டையில் இருந்த அவரது வீட்டுக்கோ சென்றுவருவேன். நல்ல இசை, நல்ல திரைப்படம், நல்ல இலக்கியம் என்று பலவற்றையும் அறிமுகப்படுத்தினார். சில முறை கடற்கரைக்கோ வேறுசில இடங்களுக்கோ சென்று பேசுவதுண்டு. அப்போது ஒருமுறை “சுந்தர ராமசாமி பிராமணர் என்று தெரிந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது” என்றேன். “அப்படியெல்லாம் பாகுபடுத்திப் பார்க்கக் கூடாது. செயல்களைத்தான் பார்க்க வேண்டும்” என்றார். அவரும் பிறப்பால் பிராமணர்தான் என்றாலும் சாதி சார்ந்த அடையாளங்களை இளம் வயதிலேயே துறந்தவர்.

என்னிடம் என்ன கண்டாரோ தெரியவில்லை, ஒவ்வொரு முறை சந்திக்கும்போது எனக்கென்று தாராளமாக நேரத்தை ஒதுக்கினார். நான் தத்துப்பித்து என்று உளறியதையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். அவருடைய நேரத்தை நாம் திருடுகிறோம் என்ற குற்றவுணர்ச்சி மட்டும் எனக்கு எப்போதும் இருக்கும். ஆனால், அவரோ என்னுடன் பேசியதை விரும்பியே செய்தார். அவர் வீட்டில்தான் முதல்முதலாக சைக்காவ்ஸ்கியின் இசையைக் கேட்டேன்; ராவெலின் போலரோவைக் கேட்டேன். அவர்தான் எனக்கு பிஸ்மில்லா கானை அறிமுகப்படுத்திவைத்தார். கேட்டதும் உடனே பிடித்துவிட்டது. “இவர்கள்தான் எனக்கு உண்மையில் கடவுள்கள்” என்றார், கடவுள் நம்பிக்கையற்ற ராமகிருஷ்ணன்.

விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த எனக்கு நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று ஆசை. திருவல்லிக்கேணியில் நிறைய சாலையோரப் புத்தகக் கடைகள் இருக்கும். எனக்குக் கொடுக்கப்பட்ட மாதாந்திரத் தொகையைச் சிக்கனப்படுத்தி பழைய புத்தகங்கள் நிறைய வாங்குவேன். அப்படியும் பணம் போதவில்லை என்று ஒருமுறை ராமகிருஷ்ணனிடம் குறிப்பிட்டேன். “நான் வேண்டுமானால் உங்களுக்கு மாதாமாதம் கொஞ்சம் பணம் தரட்டுமா?” என்றார். அதேபோல், சிறிது காலம் கொடுக்கவும் செய்தார். எனக்கு, சங்கோஜமாகவே இருந்தது.
(தொடரும்...)

முதல் பகுதி: http://writerasai.blogspot.com/2020/06/75.html

Thursday, June 18, 2020

க்ரியா ராமகிருஷ்ணன்-75


ஆசை

நுழைவாயில்

நவீனத் தமிழுக்குப் பெரும் பங்காற்றியவர்களுள் ஒருவரான க்ரியா ராமகிருஷ்ணனுக்கு இன்று 75-வது பிறந்த நாள். அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து தமிழுக்குப் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அவரைப் போல ஒருவர் மேலைச் சமூகத்தில் இருந்திருந்தால் அவரை அந்தச் சமூகம் கொண்டாடியிருக்கக்கூடிய விதமே வேறு. அவரைப் போல பல சாதனையாளர்களுக்கும் வாழும் காலத்தில் புறக்கணிப்பையே தந்துவந்திருக்கிறோம். க்ரியா ராமகிருஷ்ணனைப் பொறுத்தவரை அதிகார பீடங்களிலிருந்து விலகி இருப்பதாலும், தன்னை முன்னிறுத்துவதில் அவருக்குச் சிறிதும் ஆர்வம் இருப்பதில்லை என்பதாலும் இந்தப் புறக்கணிப்பில் அவருக்கும் ஒரு பங்குண்டு.   க்ரியா பதிப்பகத்தின் மூலம் சி.மணி, ந.முத்துசாமி, அசோகமித்திரன், மௌனி, ஜி. நாகராஜன், எஸ்.வி. ராஜதுரை, சுந்தர ராமசாமி, பூமணி, திலீப் குமார், இமையம்  முக்கியமான பல படைப்பாளிகளின் எழுத்துக்களை ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கிறார். காஃப்கா, காம்யு, அந்த்வான் து எக்சுபரி உள்ளிட்ட உலகப் படைப்பாளிகள் பலரின் புத்தகங்களின் நேரடி மொழிபெயர்ப்புகளை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்ட ‘டாக்டர் இல்லாத இடத்தில்…’ நூல் மிகவும் பிரபலமானது. தமிழின் தொன்மையை நிறுவும் ஐராவதம் மகாதேவனின் ‘Early Tamil Epigraphy’ என்ற நூலும் (ஹார்வார்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து வெளியிடப்பட்டது) க்ரியாவின் மைல்கற்களுள் ஒன்று. கூத்துப்பட்டறை, மொழி ட்ரஸ்ட், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் போன்றவற்றை உருவாக்கியதில் அவருக்கும் பெரும் பங்கு உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ (முதல் பதிப்பு 1992, விரிவாக்கப்பட்ட பதிப்பு 2008) தமிழுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் செய்த மிகப் பெரிய பங்களிப்பு. க்ரியா ராமகிருஷ்ணன் தனது 75-வது வயதை நிறைவு செய்திருக்கும் இத்தருணத்தில் அவருடன் 20 ஆண்டுகாலம் பழகியவன் என்ற முறையில் எனக்கென்று சொல்வதற்குச் சில அனுபவங்களும் விஷயங்களும் உள்ளன. அவற்றைக் குறுந்தொடர் வடிவில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். அவருடன் பழகியவர்களும் அவர் மீது மதிப்பு கொண்ட பிறரும் கூட இத்தருணத்தில் அவரைப் பற்றி எழுதலாம். 'பெரியோரை வியத்தலும் இலமே’ என்பது மிகச் சரியானதுதான் என்றாலும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது முக்கியம் என்று நான் கருதியதால் இந்தக் குறுந்தொடர்.

1.

க்ரியா ராமகிருஷ்ணனை நான் சந்தித்து இருபது ஆண்டுகள் நிறைவடைகின்றன. அப்போது, மன்னார்குடியில் பி.ஏ. ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். சென்னையில் காலச்சுவடு பதிப்பகம் ‘தமிழினி-2000’ என்ற நிகழ்வை நடத்தினார்கள். அதுவரை இலக்கிய இதழ்களிலும் புத்தகங்களிலும் மட்டுமே நான் சந்தித்திருந்த எனது அபிமான எழுத்தாளர்களை சந்திக்க வேண்டும் என்று அந்த நிகழ்வை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். என் சித்தி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த 500 ரூபாயை எனக்குக் கொடுத்து அந்த நிகழ்வுக்கு அனுப்பிவைத்தார். சென்னையில் சைதாப்பேட்டையில் சித்தப்பா வீட்டில் தங்கியபடி ‘தமிழினி’ நிகழ்ச்சிக்கு தினமும் போய்வந்தேன். அங்கே, பிரம்மராஜன், அம்பை, பெருமாள் முருகன், சாரு நிவேதிதா என்று பலரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார்கள். நான் முக்கியமாக அந்த நிகழ்வுக்கு வந்தது என்னுடைய அப்போதைய ஹீரோ சுந்தர ராமசாமியைப் பார்த்துப் பேசத்தான். ஆனால், அவர் அந்த நிகழ்வில் இருந்தாலும் அவரைப் பார்க்க முடியாமல் ஏதோ ஒரு மனத்தடை என்னைத் தடுத்துவிட்டது. மனுஷ்யபுத்திரன் ஒருவருடன் மட்டும்தான் பேசினேன். அங்கே நிகழ்ச்சி நடந்த அரங்குக்கு வெளியில் என் பட்ஜெட்டுக்கு உட்பட்டு ஒருசில புத்தகங்களை வாங்கினேன். அதில் ஒன்றிரண்டு க்ரியா புத்தகங்களும் அடக்கம்.

க்ரியா பதிப்பகத்துக்கே சென்று சில புத்தகங்களை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு, அந்தப் பதிப்பகத்தின் தொலைபேசி எண்ணை அழைத்தேன். எடுத்தவர் க்ரியா ராமகிருஷ்ணன். எனக்கு அப்போது தொலைபேசியில் அதிகம் பேசிப் பழக்கமில்லை. மேலும், புதிய மனிதர்களுடன் பெரிய ஆட்களுடன் பேசுவதில் ஒருவகை பீதியும் (phobia) உண்டு. ஆகவே, அவருடன் பேச ஆரம்பித்தபோது எனக்கு ‘திக் திக்’ என்றது. சைதாப்பேட்டையில் நான் எந்த பேருந்தில் ஏற வேண்டும் என்பதில் தொடங்கி, திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இறங்கி எப்படி வர வேண்டும் என்பதுவரை கையில் தெளிவான  வரைபடத்தைக் கொடுப்பதுபோல் அவர் நான் வர வேண்டிய வழியை விவரித்தார். என்னுடைய பிரச்சினை என்னவென்றால் யாருக்கும் என்னால் ஒழுங்காக வழி சொல்லத் தெரியாது, யாரும் சொல்லும் வழியையும் மனதில் சித்திரமாக மாற்றிக்கொள்ளவும் தெரியாது. ஆனாலும் என்ன ஆச்சரியம்! திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இறங்கி யாரையும் விசாரிக்காமலேயே அவர் சொன்ன வழியைப் பின்பற்றி க்ரியா அலுவலகத்துக்கு வந்துவிட்டேன்.

அலுவலகத்தில் அவரே என்னை வரவேற்றார். மிகக் குறைவானவர்களே அங்கு இருந்தார்கள். எங்கிருந்து வருகிறீர்கள், என்ன (படிப்பு) படிக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டார். மன்னார்குடி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கிறேன் என்று சொன்னதும் “ ஓ தங்க.ஜெயராமன் மாணவரா? ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் அவர் நிறைய பங்களிப்பு செய்திருக்கிறார் தெரியுமா?” என்று கேட்டார். “அதில் வேலை பார்த்திருக்கிறார் என்பதை அறிவேன்?” என்றேன். க்ரியாவின் புத்தகங்கள் ஒவ்வொன்றையும் பற்றி எனக்கு விளக்க ஆரம்பித்தார். நான் வைத்துள்ள சொற்ப பணத்தில் எல்லாவற்றையும் வாங்க முடியாது என்பதால் ’அந்நியன்’, ‘விசாரணை’ உள்ளிட்ட சில புத்தகங்களை வாங்கிக்கொண்டேன். “ஏன் இது வேண்டாமா?” என்று ‘குட்டி இளவரசன்’ புத்தகத்தை எடுத்து நீட்டினார். தயக்கத்துடன் “பணம் குறைவாகத்தான் இருக்கிறது” என்றேன். இத்தனைக்கும் அப்போது அதன் விலை 40 ரூபாய் மட்டும்தான். “பரவாயில்லை, எடுத்துக்கொள்ளுங்கள். ஊருக்குப் போய்ப் படித்துவிட்டுப் பிடித்திருந்தால் பணத்தை மணியார்டர் செய்யுங்கள். ஆனால், தவற விடக்கூடாத புத்தகம்” என்றார். எடுத்துக்கொண்டேன். ஊர் திரும்பிய பிறகு ‘குட்டி இளவரசன்’ படித்தேன். அது எவ்வளவு அழகான பரிசு என்பதை உணர்ந்தேன். க்ரியாவுக்கு 36 ரூபாயை மணியார்டர் செய்தேன். ஒரு சிறுநகரத்திலிருந்து சென்னைக்கு வந்த, வெளியுலகமே ஏதும் தெரியாத ஒரு இளைஞனுக்கு அவருடைய இந்த எளிய செய்கைகள் எவ்வளவு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.
(தொடரும்)