Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Thursday, August 21, 2025

நகுலன்: தன்னைத் தானே எழுதிக் கலைக்கும் எழுத்து - நகுலன் பிறந்தநாள் பகிர்வு


ஆசை

நவீன தமிழ் இலக்கிய உலகம் எத்தனையோ சிறந்த எழுத்தாளர்களைக் கண்டிருந்தாலும் சிலருக்கே கல்ட் (cult) அந்தஸ்து கிடைக்கிறது. இந்த அந்தஸ்து அவர்களின் படைப்புலகுக்குள் நுழைவதற்கே தடையாகவும் ஆகிவிடக்கூடியது. அப்படிப்பட்ட கல்ட் அந்தஸ்தைப் பெற்ற சிலருள் நகுலனும் ஒருவர். நவீன கவிதைக்குள் நகுலனின் இடம் உறுதியானதொன்று என்றாலும் அந்த இடத்தை எப்படி வரையறுப்பதென்பது எப்போதும் சிக்கலாகவே இருக்கிறது. சிதறுண்ட 20-ம் நூற்றாண்டு நவீன மனம் என்று சில சமயம் நகுலன் (அவரது நாவல்கள், சிறுகதைகளையும் உள்ளடக்கி) வரையறுக்கப்பட்டாலும் அவரிடம் மரபின் தொடர்ச்சியும் இருக்கிறது. அந்த மரபும் எப்படிப்பட்டதென்றால் காலம்காலமாக மரபுக்குள்ளிருந்து கலகம் விளைவித்த போக்கைப் பின்தொடர்வதாக இருக்கிறது. சில விஷயங்களில் நகுலன் சித்தர் மரபுக்கு அருகில் இருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது. சில இடங்களில் இருத்தலியல் கவிஞராகவும் தென்படுகிறார். 

Wednesday, August 13, 2025

பா.வெங்கடேசனை நீங்கள் ஏன் படித்தாக வேண்டும்?


தமிழின் மகத்தான படைப்பாளிகளுள் ஒருவரான பா.வெங்கடேசன் இன்று தன் 63-வது வயதை நிறைவு செய்கிறார். இந்தக் கட்டுரை அவரது 60-வது பிறந்தநாளில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியானது. அதனை இப்போது மீள்பகிர்வு செய்கிறேன். கடந்த 8 ஆண்டுகளாக அவருடைய புனைவுப் படைப்புகள் முழுவதையும் பல தடவை படித்தவன் என்ற முறையில் அவற்றைப் பற்றி ஒரு சுருக்கமான பார்வையை இத்தருணத்தில் முன்வைக்க விரும்புகிறேன். இந்தக் கட்டுரை பிரதானமாக, பா.வெங்கடேசனைப் படித்திராத வாசகர்களையும் அவரைப் படிக்க முயன்று இயலாமலோ பிடிக்காமலோ விலகிச் சென்ற வாசகர்களையுமே இலக்காகக் கொள்கிறது.

பா.வெங்கடேசனை நான் படிக்க வேண்டிய அவசியம் என்ன? இப்படி ஒருவர் கேட்கலாம். தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் தன் வாழ்வின் மிக முக்கியமானவையாகக் கருதும் ஒருவர் எப்படி சங்க இலக்கியமும் சிலப்பதிகாரமும் வள்ளுவரும் ஆண்டாளும் கம்பரும் பாரதியும் புதுமைப்பித்தனும் படித்தாக வேண்டுமோ அப்படியே பா.வெங்கடேசனையும் படித்தாக வேண்டும் என்று நான் உளமார நம்புகிறேன்.

Thursday, August 7, 2025

கலைஞர் இறுதி ஊர்வலத்தின் இலக்கியப் பதிவு!

ஓவியம்: ஜோ.விஜயகுமார்
அண்ணாவின் இறுதி ஊர்வலத்தை நேரில் கண்டவர் அப்பா. கலைஞரின் இறுதி ஊர்வலத்தை நேரில் கண்டவன் பிள்ளை. இரண்டு ஊர்வலங்களும் எனது ’மாயக் குடமுருட்டி’ (2025, எதிர் வெளியீடு) நெடுங்காவியத்தில் நெகிழ்ச்சியான ஆவணமாகியிருக்கின்றன. கலைஞர் இறுதி ஊர்வலத்தின்போது கலந்துகொண்ட ஒரு பிராமண இளைஞரைப் பற்றியும் இதில் பதிவாகியிருக்கிறது. அந்த இளைஞர் இந்தக் கவிதையைப் படித்துவிட்டு என்னிடம் நெகிழ்ந்துபோய்ப் பேசினார். கலைஞருக்கு ஒரு அஞ்சலி இக்கவிதை!

***
கோஷமிட்ட தீ
**
முன்னவர்
இறுதி ஊர்வலத்தில்
தான் கண்டதையெல்லாம்
கதைகதையாய்ச் சொன்னாரே அப்பா
ரயில்கூரையில் பயணித்ததையும்
பாலம் தட்டிப் பலபேர் மடிந்ததையும்
சென்னையே சேர்ந்து நகர்ந்ததையும்
மேலேறியவர்களின் பாரம் தாங்காமல்
மரக்கிளைகள் முறிந்து விழுந்ததையும்
உலகத்திலேயே இப்படியோர்
இறுதி ஊர்வலம்
வரலாறு கண்டதில்லை என்பதையும்
சொல்லிச்சொல்லி மாய்வாரே அப்பா
பின்னவர் இறுதி ஊர்வலத்தைக்
காண விடாத உடலுக்குள்
முடங்கிக்கிடந்த அப்பாவுக்காக
நான் போனேனே ஐயா
ஆ ஆ அது இறுதி ஊர்வலமா
கல்யாண ஊர்வலம் ஐயா
ஊர்தி கடக்கும் இடமெல்லாம்
நின்று நின்று
ஆயிரமாயிரம் தற்படங்கள்
ஆயிரமாயிரம் நாடகங்கள்
தலைவனுக்காகக் குத்தாட்டங்கள்
முன்னவர் காலம்
ஓங்கி உயர்ந்தெழுந்த
அழுகையின் காலமென்றால்
பின்னவர் காலமோ
அழுகைக்கு விடைகொடுத்த
ஆர்த்தெழும் காலம்
அப்பாவுக்காகத்தான்
வேடிக்கை பார்க்கப் போயிருந்தேன் ஐயா
ஆனாலும் அப்படி ஆகிவிட்டது
உடன்வந்திருந்த அய்யர் பையன்
ஊர்தி அருகே கடக்கும் தருணம்
அப்படி ஒரு குரலில் ஓலமிட்டான்
‘முத்தமிழறிஞர்
சமத்துவ நாயகர்…’
ஊர்தி மேலே ஒரு உருவம் மட்டும்
மௌனி கதையின் யாளியாய்
தன் விஸ்வரூபத்தால்
அந்த கோஷத்தை ஆசிர்வதித்ததை
நான் மட்டும் கண்டேன்
சற்றுப் பொறுங்கள் ஐயா
இன்னும் அந்த நொடி முடியவில்லை
இன்னொரு பாதி இல்லாமல்
இழுத்துக்கொண்டே போகுமல்லவா
கோஷமும் நொடியும்
நானே எதிர்பார்க்கவில்லை
பீறிட்டெழுந்தது ஒரு சொல்
என் அடிவயிற்றிலிருந்து
மூடிய வாயென்ன செய்யும்
அப்போது
‘வாழ்க’
அதையும் ஏற்றுக்கொண்டு
அமைதியானது யாளி
பூர்த்தியானது நொடியும் கோஷமும்
அமைதியிழந்தேன் நான்
ஆயிரம் ஆயிரம் நூல்கள்
எனக்குச் சொல்லித்தந்தது இதுதானா
நான் படித்த இலக்கியம்
எனக்குச் சொல்லித்தந்தது இதுதானா
ஒரு கவிஞன்
‘வாழ்க வாழ்க’ கோஷமிடலாமா
என்னை இனி நான்
எப்படி ஏறெடுத்துப் பார்ப்பேன் ஐயா
அடேய் தம்பி
ஏன்டா இந்தப் புலம்பல்
கோஷம் என்ன கெட்ட வார்த்தையா
அறிவு கோஷம் போடாது தம்பி
வயிறு கோஷம் போடும்
அப்படியே இருந்தாலும்
அங்கே இருந்தவன் கண்டவன் கேட்டவன்
மட்டுமே நீ
‘வாழ்க’வென்று கோஷமிட்டது
நீயில்லையடா
உன்னை ஓங்கியடித்து
உட்காரவைத்து
மாக்கடியென்று எகிறி குதித்த
உன் ஒப்பன்காரன்டா
உன் ஒப்பன்காரன்டா
ஏனென்றால்
அவன் வயிற்றுக் கவலை
ஓய்ந்த இடத்தில்தான்டா தம்பி
உன் அறிவுக் கவலை
தொடங்கியது
புலம்பலை விட்டுவிட்டு
இன்னொரு மடக்கை எடுத்துக் குடி
***

Saturday, July 26, 2025

கமல், ஸ்டேன்லி கூப்ரிக்கை என்ன செய்தீர்கள்? - ஸ்டேன்லி கூப்ரிக் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு


ஆசை

(இப்படைப்பு முழுவதும் கற்பனையே. ஆனால் யாருடைய கற்பனை என்பது தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்தான் இந்தப் படைப்பு தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறது. இறுதியில் படைப்பும் அதன் பார்வையாளர்களும் சேர்ந்து இது யாருடைய கற்பனை என்று கண்டுபிடித்தால் மகிழ்ச்சியே. கமல், சத்யராஜ், வாகை சந்திரசேகர், நிக்கி கல்ரானி, ஜெய் மற்றும் ஸ்டேன்லி கூப்ரிக் ஆகியோரின் ரசிகர்கள் மனம் புண்படும் என்றால் அவர்களிடம் இந்தப் படைப்பு, மனமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.)

**
நடிப்பு: பத்மஸ்ரீ கமல்ஹாசன் (அப்போது உலக நாயகன் பட்டம் தரப்படவில்லை), சத்யராஜ், வாகை சந்திரசேகர், ஜெய், நிக்கி கல்ரானி இவர்களுடன் நானும் நீங்களும்.

கதை-திரைக்கதை-வசனம்: ஸ்டேன்லி கூப்ரிக், கமல்ஹாசன், நானும் நீங்களும்

இயக்கம் – முதல் அத்தியாயத்தின் முடிவில் தெரிந்துகொள்வீர்கள்   

குறிப்பு: இத்திரைப்படம் மன்னார்குடி சத்யா திரையரங்கில் மட்டுமே தினமும் இரவு ஒரு மணிக்குத் திரையிடப்படும்

**

1.

சைக்கிளை விட்டு இறங்காமல் ஒற்றைக்காலை ஊன்றிக்கொண்டு  “கோபாலகிருஷ்ணன்” என்றான் பிரகாஷ்.

நானும் “கோபாலகிருஷ்ணன்” என்றேன். சங்கேதம் ஒப்புக்கொள்ளப்பட்டது.

“ஆனா இன்னைக்கு ரொம்ப ரொம்ப வேற விஷயம் அப்படின்னாரு சண்முகம் அண்ணே” என்றான். 

அவ்வளவு தூரம் சைக்கிள் மிதித்து வந்ததில் இன்னும் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது அவனுக்கு.

“சரி நீ போ. நான் வந்துடுறேன்.”

Saturday, July 12, 2025

பாப்லோ நெருதா கவிதைகள் - பிறந்தநாள் பகிர்வு



1. ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு ஒரு பாடல்

ஃபிடல், ஃபிடல்,
செயலாக மாறிய சொற்களுக்கும்
பாட்டாக ஒலிக்கும் செயல்களுக்கும்
நன்றிகாட்டுகிறார்கள் மக்கள்,
காணாத தூரத்தைக் கடந்து நானொரு கோப்பையில்
என் நாட்டின் மதுவோடு வந்திருப்பதும் அதனால்தான்:
நிலத்தடி மக்களின் உதிரம் அது
இருட்டிலிருந்து புறப்பட்டு உனது தொண்டையை
வந்தடைகிறது,

உறைந்துகிடந்த நிலத்திலிருந்து
நூற்றாண்டுகளாய்த் தீயைப் பிழிந்து
வாழ்ந்த சுரங்கத் தொழிலாளிகள் அவர்கள்.
கடலின் ஆழத்திலும்
நிலக்கரியைத் தேடும் அவர்கள்
பேயுருகொண்டு கரையேறுகிறார்கள்:
முடிவில்லா இரவுக்குப் பழகிக்கொண்டுவிட்டார்கள் அவர்கள்,
பகல் வேளையின் வெளிச்சம் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது,

ஆயினும், இதோ, இந்தக் கோப்பை.
சொல்லொணாத் துயரத்தினதும்,
கண்காணாத தூரத்தினதும் கோப்பை.
இருளும் பிரமைகளும்
பேயாய்ப் பற்றிக்கொண்ட,
சிறைப்பட்ட அந்த மனிதர்களின்
மகிழ்ச்சி அது.

சுரங்கங்களின் உள்ளே இருந்தாலும்
வசந்தத்தின் வரவையும்
அந்த வரவோடு வந்த சுகந்தங்களையும்
உணர்கிறார்கள் அவர்கள்.
தெளிவின் உச்சத்துக்காக மனிதன் போராடுகிறான்-
இதனை அறிந்தவர்களல்லவா அவர்கள்.

தெற்குப் பிரதேசத்தின் சுரங்கத் தொழிலாளிகளும்,
பரந்த புல்வெளிப் பிரதேசத்தில் தனியர்களாய் இருக்கும் மைந்தர்களும்,
படகோனியாவின் குளிரில் வாடும் மேய்ப்பர்களும்,
தகரத்துக்கும் வெள்ளிக்கும் பிறப்பளிக்கும் தகப்பன்களும்,
காதில்யெரா மலைத் தொடர்களுக்கு வாழ்க்கைப்பட்டு
சூகீக்கெமாதெ சுரங்கங்களிலிருந்து செம்புத் தாதுவை அகழ்பவர்களும்,
பேருந்துகளின் கூட்டமும்,
நேற்றைய நினைவிலேயே நிலைத்துவிட்ட நெரிசலும்,
வயல்கள் பட்டறைகளில் உழைக்கும் பெண்களும்,
குழந்தைப் பருவத்தை அழுதே கழித்த குழந்தைகளும்,
க்யூபாவைப் பார்க்கிறார்கள்:

இதுதான் அந்தக் கோப்பை, எடுத்துக்கொள் ஃபிடல்.
அவ்வளவு நம்பிக்கையால் நிறைந்திருக்கும் கோப்பை இது!
அருந்தும்போது நீயறிவாய்
ஒருவரால் அல்ல, பலராலும்
ஒரு திராட்சையால் அல்ல, பல தாவரங்களாலும் உருவான,
எனது தேசத்தின்
பழம் மதுவைப் போன்றது உனது வெற்றி என்பதை.

ஒரேயொரு துளியல்ல; பல நதிகள்:
ஒரேயொரு படைத்தலைவன் அல்ல, பற்பல போர்கள்.
நீண்ட, நெடிய போராட்டம் நம்முடையது,
அதன் ஒட்டுமொத்த மகத்துவத்தின் முழு உருவம் நீ.
அதனால்தான் அவர்களின் ஆதரவெல்லாம் உனக்கு.

க்யூபா வீழுமென்றால் நாங்களும் வீழ்வோம்,
அவளைக் கைதூக்கிவிட நாங்கள் வருவோம்,
அவள் பூத்துச் சொரிந்தால்
நாம் வென்றெடுத்த தேன்கொண்டு செழித்திடுவாள்.
உன் கைகளால் கட்டவிழ்ந்த
க்யூபாவின் நெற்றியை யாராவது தொடத் துணிவார்களென்றால்,
மக்களின் முஷ்டிதான் அவர்களுக்கு பதிலளிக்கும்,
புதைந்திருக்கும் நமது ஆயுதங்களைக் கைக்கொள்வோம்:

எங்கள் நேசத்துக்குரிய க்யூபாவைப் பாதுகாக்க
எங்களுக்குத் துணையாய் வரும்
உதிரமும் மாண்பும்!


2. தேனீக்களுக்கு ஒரு பாடல்

மொய்க்கும் தேனீக்கூட்டமே
உலகின் மென்மைக்கும் மென்மையான
சிவப்பு, நீலம், மஞ்சளின் உள்ளே
புகுந்தும் புறப்பட்டும்
தொழிலுக்காகப்
பூவிதழின் அடுக்கினுள்
கவிழ்ந்து விழுந்து, மீண்டு,
பொன்மயமான உடையும்,
கணக்கில்லா மஞ்சள் காலணிகளும்.
கச்சிதமான இடை, கரும்பட்டைக் கோடிட்ட கீழ்வயிறு
துருதுருக்கும் சின்னஞ்சிறிய தலை
புத்தம்புதிய நீராலான இறக்கைகள் ---
மணங்கமழும் ஜன்னல்கள் எல்லாம் நுழைந்து,
பட்டுக் கதவுகளைத் திறந்து,
இணையில்லா மணம் வீசும் காதலின் மணவறையில் நுழைந்து,
வைரப் பொட்டாகப் பனித்துளியைக் கண்டெடுக்கிறீர்கள்.

சென்றுவரும் வீடெல்லாம்
தேன் என்னும் புதிரை, வளத்தை, கட்டமுதை
அள்ளிச்செல்கிறீர்கள்
அது அடர் மணம், ஓடையாய் ஒளிரும் திரவம்.

கூடிவாழும் கூடத்துக்கு மீண்டுவந்து
அதன் கைப்பிடிச் சுவரில்
பூவின், விண்வெளிப் பாய்ச்சலின்
விளைச்சலான அந்த
கந்தர்வ ரசத்தை, மணநாளின் ரகசியச் சூரியனை,
தேனை, சேமித்து வைத்து
மொய்க்கும் தேனீக்களே,
ஒற்றுமையின் புனித முகடே,
ரீங்கரிக்கும் கல்விக்கூடமே.

ரீங்கார ஆரவாரத்தில்
பூவின் மதுவைப் பக்குவமாக்க
அமுதத் துளிகளைப் பரிமாறி
பசுமை படர்ந்த
ஒசர்னோ எரிமலையின் ஏகாந்த வெளியில்
வெய்யில்காலப் பிற்பகலின் கண்ணயர்வு--
உச்சி சூரியன்
ஈட்டிக் கிரணங்களைப் பனிமீது பாய்ச்ச,
எரிமலைகள் ஒளிர
கடலாக நிலம் விரிகிறது.

நீல வெளியின் ஏதோவொரு நடுக்கம்.
கனன்றுவரும் கோடையின் இதயம்,
தேனினிக்கும் இதயங்கள் பெருகின
ரீங்கரிக்கும் தேனீ
நொறுங்கிச் சடசடக்கும் தேன்கூடு
பொன்வண்ணம், சிறகின் படபடப்பு!
தேனீக்களே,
களங்கமில்லா உழைப்பாளிகளே, ஊன்பெருக்காத கூன் உடல்
தொழிலாளர்களே ஒளிவீசும் தொழிலாள வர்க்கமே!

தன்னையே மாய்த்துவிடும் கொடுக்கோடு கொட்டிச் சாடும்
குறையில்லா தீரப் போர்ப்படையே
இரைச்சலிடுங்கள், புவியின் கொடைகளின்மேல்
பொன்வண்ணக் குடும்பமே,
காற்றின் மந்தையே
பூக்களின் தீயை,
மகரந்தக் கேசரத்தின் தவிப்பை,
நாசியைத் துளைக்கும் நறுமண நூலை,
நாட்களை இணைத்துத் தைக்கும் நூலை,
அந்தத் தேனை விசிறித் தெளியுங்கள்
வெம்மையான கண்டங்களைக் கடந்து
மேலை வானின் தொலைதூரத் தீவுகளுக்கும்.

ஆம்,
பசுமைச் சிலைகளை
தேன் மெழுகு உருவாக்கட்டும்!
எண்ணில்லா நாவில் தேன் சிதறட்டும்,
தேன்கூடாய் ஆகட்டும் அந்தப் பெருங்கடல்
புவியே பூக்களாலான கோபுரமாய், அங்கியாய் மாறட்டும்!
உலகமே ஓர் அருவியாகட்டும்
எரிகல்லின் ஒளிரும் வாலாக
தேன்கூடுகளின் முடிவில்லாச் செல்வமாய் ஆகட்டுமே!


3.

உனது உடலின் வரைபடத்தை
நெருப்பின் குறியீடுகளால் 
குறித்துக்கொண்டு செல்கிறேன்எனது இதழ்கள்
உன் உடல் முழுதும் செல்கிறது
ஒளிந்துகொள்ள முயலும் சிலந்தியாய்.
உனக்குள், உன் பின்னே, கோழையாய்,
தாகத்தால் விரட்டப்பட்டு.

மாலையின் கரையில்
உனக்குச் சொல்வதற்கு 
கதைகளுண்டு நிறைய,
சோகவயப்பட்ட நளினமான பொம்மையே,
எனவே நீ துக்கமடைய மாட்டாய்.
ஒரு அன்னம், ஒரு மரம்,
தூரத்திலிருக்கும் மகிழ்ச்சியான ஏதோ ஒன்று.
திராட்சைகளின் பருவம், முதிர்ந்த, நிறைந்த பழங்களின் பருவம்.

எங்கு உன்னைக் காதலித்தேனோ 
அந்த துறைமுகத்தில் வாழ்ந்த நான்.
கனவாலும், அமைதியாலும் 
குறுக்கிடப்பட்ட அந்தத் தனிமை.
கடலுக்கும் துயரத்துக்கும் மத்தியில்
அடைக்கப்பட்டு.

நிசப்தமாக, பீடிக்கப்பட்டு, 
அசைவற்ற இரு படகோட்டிகளுக்கு மத்தியில்.
உதடுகளுக்கும் குரலுக்கும் இடையே
மங்கிக்கொண்டு வருகிறது
ஏதோ ஒன்று.
பறவையின் சிறகுகளுடன் ஏதோ ஒன்று,
வலியுடன், சுயநினைவற்று,
ஏதோ ஒன்று.
வலையால் தண்ணீரைப் 
பிடித்துவைத்திருக்க முடியாததைப் போல.
என் விளையாட்டுப் பொம்மையே,
ஓரிரு துளிகள் மட்டும் 
தனித்து நடுங்கிக்கொண்டிருக்கின்றன.

அப்படியும், ஏதோ ஒன்று பாடுகிறது,
நிலையற்ற இந்த சொற்களால்.
ஏதோ ஒன்று பாடுகிறது, 
எனது பசிகொண்ட வாயில்
பற்றி ஏறுகிறது.
ஓ! பரவசத்தின் அனைத்துச் சொற்களாலும் 
கொண்டாட முடிகிறது
உன்னை.

பாடு, எரி, பற, 
ஒரு பைத்தியக்காரனின் கையில் 
அகப்பட்ட கோயில் மணியைப் போல.
என் சோகவயப்பட்ட கனிவே,
உன்னை சட்டென்று ஆட்கொள்வது எது?
மிகவும் கிளர்ந்திழுக்கும்
குளிர்ச் சிகரத்தை எட்டி முடித்ததும்
என் இதயம் மூடிக்கொள்கிறது
ஒரு இரவு நேர மலரைப்போல.


4.

உன் முலைகள் 
என் இதயத்திற்குப் போதுமானவை
என் சிறகுகள் 
உன் விடுதலைக்கு.
உனது இதயத்தின் மேல் உறங்கிக்கொண்டிருப்பது
என் உதடுகளின் வழியாக வானத்தை நோக்கி
உயரும்.

உனக்குள் ஒவ்வொரு நாளின் 
மாயத்தோற்றம்.
விரிந்த மலர்களில் வீழும் 
பனித்துளிகளைப் போல் வருகிறாய் நீ. 

தொடுவானத்தை மங்கச் செய்கிறாய் நீ
உனது பிரிவால்.
அலைகளைப் போன்று 
முடிவில்லாமல் பறந்துகொண்டிருக்கிறாய்.
ஊசியிலை மரங்களைப் போல
பாய்மரங்களைப் போல
நீ காற்றில் பாடுகிறாய் என்று 
சொல்லியிருக்கிறேன் நான்.
அவற்றைப்போல நீயும் உயரமாக, 
பேசாமடந்தையாக
மேலும் சட்டென்று சோகமாக, 
ஒரு கடற்பயணத்தைப்போல.

பொருட்களை திரட்டிக்கொள்கிறாய் உன்னிடத்தில்
ஒரு பழைய சாலையைப்போல.
எதிரொலிகளாலும்
பழைய நினைவுகளின் குரல்களாலும்  
நிறைந்திருக்கிறாய்.

நான் எழுகிறேன்
சில சமயங்களில் 
பறந்துசெல்கின்றன, இடம்பெயர்கின்றன
உன் இதயத்தில் உறங்கிக்கொண்டிருந்த பறவைகள்.


5.

பெண்ணுடல், வெள்ளை மலைகள், வெண்ணிறத் தொடைகள்,
உனது சரணாகதித் தோற்றத்தில் இந்த உலகைப் போன்று தோன்றுகிறாய் நீ.
எனது கொடிய முரட்டுத்தனமான உடல் உன்னில்  தோண்டி
துள்ளியெழச்செய்கிறது குழந்தையைப் புவியின் ஆழத்திலிருந்து.

நான் தனியாகச் சென்றேன் ஒரு வளையைப்போல. பறவைகள் பறந்துசென்றன என்னிடமிருந்து, மற்றும் இரவு தனது வலிமையால் ஊடுருவியது என்னில்.
நான் பிழைத்திருப்பதற்காக உன்னைத் தட்டிதட்டி செய்தேன் ஒரு ஆயுதமாக,
எனது வில்லில் அம்பாக, எனது கவணில் கல்லாக.

ஆனால் பழிவாங்கும் தருணம் வந்துவிட்டது, அதனால் உன்னை நான் நேசிக்கிறேன்.தோலின், பாசியின், விடாயின், நிதானமான பால்.
ஓ முலைகளின் கோப்பைகளே! பிரசன்னமின்மையின் விழிகளே!அடிவயிற்றின் ரோஜாக்களே! ஓ உனது மெல்லிய, துயரமான குரலே!

பெண்ணுடலே, நான் உனது மகிமையால் நிலைத்திருப்பேன்.
எனது விடாய், எனது கட்டற்ற ஏக்கம், எனது குழப்பமான பாதை!முடிவற்ற தாகங்கள் பாய்ந்துசெல்லும்,
களைப்பு பாய்ந்துசெல்லும், எல்லையற்ற சோகம் பாய்ந்துசெல்லும் கருநிற நதிப்படுகைகள்.


 

Thursday, June 26, 2025

குளம்படிகளின் சரித்திரம் - நெடுங்கவிதை

 


1.

போரின் சித்திரத்தைத் 
தெளிவாக உருவாக்கக்
குளம்படிகளைத் தவிர
வேறெதுவும் இல்லை

சரித்திரத்தின் அடிமரத்தில்
இதோ
ஆணியாய்ப் படிந்துவிட்ட
குளம்படியை
இறந்துபோன அந்த மன்னன்
--ஆம் அவன்தான்
போரை நிர்மாணித்தவன்--
பிடுங்கியெறிய முயல்கிறான்
பிடிவாதமாய்

அவனுக்குத் தெரியாது
அந்தக் குளம்படியின் வேர் 
பூமியின் எல்லையைக் கடந்துவிட்டது


2.
அதோ அந்தக்
குளம்புகளற்ற ஏராளமான
குதிரைகள் ஓடுகின்றன

அவற்றுடன் 
தீர்மானிக்கப்பட்ட யாவும் அர்த்தமற்று
தலைதெறிக்க ஓடுகின்றன
எதற்குள்ளும் எதுவும்
பொருந்திப்போக முடியவில்லை

தலையற்ற வீரனைக் கொண்டு
போரின் எல்லைவரை சென்ற
குதிரைக்குத்
தன்மேலுள்ள சுமையாலே
போரைப் பற்றிய முடிவுறாக் கற்பனைகள்
கிளர்ந்தெழுகின்றன

அதன் முதுகிலிருந்து
அந்த வீரன்
சரிந்து விழும்வரை
போர் இன்னமும் 
நடந்துகொண்டிருப்பதாகவே
எண்ணிக்கொள்கிறது

இறந்து கிடக்கும் யானைகள்
குதிரைகள் வீரர்கள்
மன்னர்களின் ஊடே
அது அலைந்துகொண்டிருக்கிறது
போர் முடிந்துவிட்ட பிறகும்

தன் வீரனுடன் போர் புரிய
எவருமில்லையா?

குதிரைகளைக் காலம்
பரிகசிக்கிறது


3.
சூரியன் மறைகிறது
குதிரைகளுக்கு விடுதலை

தங்கள் தலைகளைச் சரிபார்த்துப் 
பொருத்திக்கொள்கிறார்கள் மன்னர்கள்
இளைப்பாறும் குதிரைகள்
குளம்புகளை நக்கிக்கொள்கின்றன
நடக்கவிருக்கும் எல்லாப் போர்களுக்குமாக

பொழுது விடிகிறது
இன்னுமொரு போர்


4. 
குளம்படிகளுக்குள் நிகழ்ந்தவையாகக்
கொள்ளப்படுகின்றன
போர்கள்

குளம்படிகள் புலம்புகின்றன
அவற்றால்கூட முடியவில்லை
தங்களை இப்புவியிலிருந்து
--மற்றும் சரித்திரத்திலிருந்து--
விடுவித்துக்கொள்ள

ஒரு சரித்திர ஆசிரியன்
எழுதுகிறான்
‘...ஆண்டில்
குளம்படிகளுக்கிடையே நடந்த போரில்
குளம்படிகள் வென்றன
குளம்படிகள் தோற்றன’


5.
குதிரைகளெல்லாம் முற்றிலும்
தீர்ந்துபோன ஒரு போர்க்களத்தில்
மண்ணில் கெட்டிப்பட்டுப்போன
குளம்படிகள்
மனிதர்களின் பாதங்களை உள்வாங்கி
அவர்களை மாற்றிவருகின்றன
குதிரைகளாய்

பழைய குதிரைகள்
கடிவாளங்கள் காற்றில் பிய்ந்துசெல்லப்
பிடரியைச் சிறகாய்ப் பொருத்திக்கொண்டு
கால்களுக்கெதிராகப் பறந்துவிட்டன
இலவம்பஞ்சைப் போன்று

மண்ணில் பாவாமல்
மிதந்துகொண்டிருக்கும்
அவற்றின் முடிவற்ற கனவுகளை
மீண்டும் ஒரு மன்னன்
தன் பாதி உறக்கத்தில் கண்டு தெளிந்து
தேடிச்செல்கிறான்
போர்களுக்கான குளம்படிகளை


6.
மனித வாடையற்ற
பனிமலையின் அடியில்
உறைந்துபோன குதிரைகள் குளம்புகளற்றுக்
கண்டுபிடிக்கப்பட
அதற்குள் முடிந்துவிட்டது
எல்லாம்

சரித்திரம் குளம்படிகளால் எழுதப்பட்டுக்
காத்திருக்கிறது
குளம்படிகளால் அழிக்கப்படவும்

                          01-07-2001 (2006-இல் ‘க்ரியா’ வெளியீடாக வெளியான எனது ‘சித்து’ கவிதைத் தொகுப்பிலிருந்து...)



Tuesday, June 24, 2025

தமிழால் ஆடுகின்றான் கண்ணதாசன்! - கண்ணதாசன் பிறந்தநாள் கவிதைப் பகிர்வு

மன்னார்குடியில் ஒரு இசையகத்தில் நாங்கள் அடிக்கடி பாடல்களைப் பதிவுசெய்து கொண்டுவந்து கேட்போம். ‘உங்களிடம் அதிகம் பதிவுசெய்யப்பட்ட பாடல் எது?’ என்று அவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறிய பாடல் ‘கண்ணே கலைமானே’. கண்ணதாசன், இளையராஜா, பாலுமகேந்திரா, ஸ்ரீதேவி, கமல் என்று எல்லோருக்குமான பெருமை அது. பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு வந்தவர்களில் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்களில் ஒருவர் கண்ணதாசன். ‘உனக்கே உயிரானேன்... எந்நாளும் எனை நீ மறவாதே’ என்பது அவரது மரண சாசனமாகவே அமைந்துவிட்டது. எப்படி மறப்போம் கண்ணதாசா?

எனது ‘அண்டங்காளி’ தொகுப்பின் இந்தக் கவிதை கண்ணதாசனுக்கு அர்ப்பணம்!
பார் சிவனே
மீனாளின் குங்குமத்தைத்
தானாள வேண்டுமென்று
ஏன் விரும்பினான் கண்ணதாசன்
தானும் சிவனாகும்
ஆசையினாலா
இடம்பெயர்ந்த
உன் நெற்றிக்கண்ணின்
குளிர்சிவப்பைப்
பார்த்து
அவனுக்கும்
ஆசை விடவில்லை
உன் நெற்றிக்கண்ணை
ஒரு பொய்கையாக்கி
அதில் குளித்து விளையாடிக்
கரைமீண்ட மீனாள்
தன் நெற்றியில் துளியாய்த் தங்கிவிட்ட
உன் தகிப்பை
எப்படித்
தன் குங்குமமாக மாற்றிவிட்டாள்
பார்
உன் நெற்றியிலிருந்து
அவள் நெற்றிக்குப்
பயணிக்கும் துடிப்பில்
குளிரைத் துரத்தும்
வெம்மையும்
வெம்மையில் குளிக்கும்
குளிரையும்
உள்ளடக்கிய
தீராத விளையாட்டு
திரைபோட்டு
நடக்கிறது
அதுதான்
நீயாடும் அம்பலம்
அவளாடும்
தன்பலம்
சிவனாகும் ஆசையில்
கண்ணதாசனும்
ஆட முயல்கின்றான்
மீனாளின்
குங்குமப் பரப்பென்ற
குளிர்சிவப்பு
மேடையில்
அம்மை தன்
மேடையெறிந்து
அதைச் சூரியனாக்கிவிடுவாள்
தாங்க மாட்டான்
கண்ணதாசன்
அவள் குங்குமமென்பது
நீ ஒட்டிக்கொண்ட
நெற்றிக்கண்ணோடு
ஆடும் பரப்பல்ல
உன்னைப் போல
வெம்மையை வீசிக்கொண்டு
யாரும் அணுக முடியாத
நெற்றிக்கண் வாசல்
கொண்டதுமல்ல
அவளுடையது
கண்ணதாசா
உற்றுப்பார் உள்ளே
அது அவள்
இதயத்துக்குப்
போகும் வழி
அவள் இதயத்துக்குப்
போகும் வழிக்கு
உன் இதழால்தான்
ஆட்டமிட வேண்டும்
ஆட்டம் தொடங்கியும்கூட
எத்தனையெத்தனை
இதழ்களை எரித்த
குளிர்சிவப்புக்
குங்குமம் அது
தமிழால் ஆடுகின்றான் சிவனே
கண்ணதாசன்
தாங்குவானா
நான் பார்க்க வேண்டும்
ஆடட்டும் அவன்
-ஆசை (‘அண்டங்காளி’, 2021, டிஸ்கவரி வெளியீடு)
நன்றி: ‘ஆகாயப் பந்தலிலே’ பாடலின் ‘மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா’ வரிகள்

Wednesday, June 18, 2025

க்ரியா ராமகிருஷ்ணன்: தமிழில் முன்னுதாரணமில்லாத ஒரு எடிட்டர் - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு


ஆசை

தமிழில் புத்தகக் கலாச்சாரம் என்பது இல்லை என்பது க்ரியா ராமகிருஷ்ணன் அடிக்கடி வெளிப்படுத்தும் வருத்தங்களுள் ஒன்று. புத்தகக் கலாச்சாரம் என்பது புத்தகங்கள் அதிகம் வெளியாகும் சூழல் அல்ல, புத்தகங்களுக்கு நம் வாழ்க்கையில் நாம் முக்கிய இடம் கொடுப்பதே புத்தகக் கலாச்சாரம். அப்படிப்பட்ட கலாச்சாரம் இல்லாமல் போனதன் விளைவுகளுள் ஒன்றுதான் தமிழில் எடிட்டர்களும் ‘கிட்டத்தட்ட’ இல்லாமல் போனது. அந்தக் குறையைப் போக்க வந்த முக்கியமான இருவர் – ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் (2020), நஞ்சுண்டன் (2019) – சமீப ஆண்டுகளில் காலமானது தமிழுக்கும் தமிழ்ப் பதிப்புத் துறைக்கும் பேரிழப்பு.

எடிட்டிங்கை க்ரியா ராமகிருஷ்ணன் எப்படி அணுகினார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு ‘எடிட்டிங்’ என்பதைப் பற்றித் தமிழ்ச் சூழல் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருந்தது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.

Friday, June 13, 2025

நிலாவுக்குப் போகும் வழி


அண்ணன்காரன் சொல்லிக்கொண்டிருந்தான்
'நான் பெரியவனாகி
சயன்டிஸ்ட் ஆகி
அயன்மேன் சட்டை கண்டுபுடிப்பேன்
தோர் சுத்தியல் கண்டுபுடிப்பேன்
கேப்டன் அமெரிக்கா கவசம் கண்டுபிடிப்பேன்
ஸ்பைடர்மேன்பூச்சி கண்டுபிடிப்பேன்'
கடற்கரை மணலில்
குழி தோண்டிக்கொண்டிருந்த
தம்பிக்காரனிடம் கேட்டால்
நாற்பத்தைந்து டிகிரியில் கையை
உயர்த்தி
நிலாவைக் காட்டிச் சொல்கிறான்
'இலா ஆவணும்'
நிலா பதறிப்போய்விட்டதைப்போல்
தெரிந்தது
நானே குத்துமதிப்பாக நிலாவாக இருக்கிறேன்
என்று புலம்ப ஆரம்பித்ததைப் போன்றும்
தெரிந்தது
சற்றைக்கெல்லாம்
நிலாவுக்குப் பரிதாப முகம்
'அம்மாவும் நிலா
ஆகணும்னா என்ன
செய்யணும்டி'
என்று கேட்டால்
'இந்த மண்ண நோண்டணும்'
என்கிறான்
'எப்போ வரைக்கும்
நோண்டணும்'
என்று கேட்டதற்கு
'நேத்தைக்கு வரைக்கும்'
என்று தலைநிமிராமல்
சொல்லிவிட்டுத்
தொடர்ந்து மண்ணைத் தோண்டுகிறான்
நான்கு திசையிலும்
அண்ணனின்
அயன்மேனையும்
தோரையும்
கேப்டன் அமெரிக்காவையும்
ஸ்பைடர்மேனையும்
காவலுக்கு நிறுத்திவிட்டு
மலைப்பாக இருந்தது எனக்கு
நிலாவுக்குப் போகும் வழியில்
இவ்வளவு மண்ணை யார் கொட்டியது என்று
அதனால்தான்
அம்மாவுக்காக அதையெல்லாம்
அப்புறப்படுத்திக்கொண்டிருக்கிறான்
-ஆசை

Tuesday, June 3, 2025

காஃப்காவின் முன் இரு சிறுமிகள் - காஃப்கா நினைவுநாள் சிறுகதை



ஆசை

1. சர்வீஸ் சாலை

அந்த நெடுஞ்சாலை மிகவும் பெரியது என்றாலும் அதன் ஓரம் நடப்பதற்கு நிறைய இடம் இருக்கிறது என்றாலும் அந்த சாலையில் செல்லும் மிக நீண்டதும் ஏராளமான சக்கரங்களைக் கொண்டதுமான லாரிகளையும் கண்டெய்னர்களையும் பார்க்க எனக்கு அச்சமாக இருந்ததால் அந்த நெடுஞ்சாலையின் இடது பக்கம் இருந்த சர்வீஸ் சாலை என்று சொல்விவிட முடியாத ஆனால் இணையாகச் செல்லும் மண்ணும் தார்ச் சாலையும் கலந்த அந்த சாலையில் குறுக்காக இறங்கி நடக்க ஆரம்பித்தேன். எங்கும் புழுதி மயம். நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்வதால் அங்கே ஓரத்தில் இருந்த புழுதி கிளம்புகிறது என்றால் இந்த சர்வீஸ் சாலையில் ஏன் இந்த அளவுக்குப் புழுதி என்று எனக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் காற்றே இல்லாத புழுக்கமான பகல் பொழுது இது. இந்தப் புழுதிக் காட்டில் சர்வீஸ் சாலையின் ஓரத்தில் வழக்கமாக நெடுஞ்சாலைகளில் இருப்பது போன்று டீக்கடை, பிஸ்கெட் சிகரெட் விற்கும் தண்ணீர் போன்றவை விற்கும் கடைகளும் இருந்தன.

Sunday, April 20, 2025

புனித கல்லறையர் சொன்ன சுவிசேஷம்


தேவனே
நீர் உம்மை
உயிருள்ள அப்பமும்
திராட்சை ரசமும் என்றீர்
நானோ
உயிருள்ள கல்லறையாக
இருக்கிறேன்
யாரேனும் திறந்து பார்த்தால்
இப்படி
வெட்டவெளியைப்
புதைத்துவைத்திருக்கிறார்களே
என்ன மடத்தனம்
என்று காறியுமிழ்வார்கள்
மேலும்
வாழ்வது கல்லறை சுமப்பதற்கான
கூலி
என்று நான் எழுதிக்கொண்ட
கல்லறை வாசகத்தைப் பார்த்து
உம் வாக்காக
எடுத்துக்கொண்டு
எல்லோரும்
அஞ்சி அகன்றுவிடுகிறார்கள்
சிலுவை சுமத்தலுக்குக்
கிடைத்த வெளிச்சம்
கல்லறை சுமத்தலுக்குக்
கிடைப்பதில்லையே
என்ற கடுப்பில்
உமக்கே நான் செய்த
இடைச்செருகல் அது
சிலுவையில் மரித்தபின்
உம்மையும்
ஒரு கல்லறையில்
கொண்டுபோய்
வைத்தார்கள்
மூன்று நாட்கள் கூட
தாக்குப்பிடிக்க
முடியவில்லை
இப்போதாவது
ஒப்புக்கொள்ளுங்கள்
கல்லறை சுமத்தலில்
நான்
எவ்வளவு பெரிய
வீரன் என்று
-ஆசை, வெளிவரவிருக்கும் ‘திருவயிற்றின் கனி’ கவிதைத் தொகுப்பிலிருந்து...

Friday, April 18, 2025

புனித வெள்ளியின் உதிரத் துளி


இவ்வெள்ளியின்
தரையில்
ஆழ ஊன்றியிருக்கிறது
ஒரு புனித மனம்
அசைவாடா கிளைபோல
தொய்ந்திருக்கும் தலை
களைப்பு நிரம்ப
இனி
இடமில்லா உடல்
கீழிறங்கும்
ஒவ்வொரு சொட்டும்
தரையின் ஆழத்துக்குள்
மேலும் மேலும்
ஒரு அடி என
இறுதிச் சொட்டு
பூமியின் மையத்தை
எட்டியதும்
பெருங்குரலொன்று
ஓவென்றெழுந்து
அண்டம் உலுக்கியது
ஆதியிலிருந்து
அங்கே குமைந்திருப்பதும்
எல்லா உதிரச் சொட்டுகளின்
ஆகர்ஷணப் புள்ளியாய்
அமைந்திருப்பதும்
படைப்பின்போது
பிதாவிடமிருந்து பிய்ந்து தங்கியதுமான
ஆதாரவலியின் குரல் அது
‘என் தேவனே என் தேவனே
என்னை ஏன் கைவிட்டீர்’
என்றபோது
விசும்பி எழுந்தாலும்
வெளிப்பட விரிசலில்லாமல்
தவித்த குரல் அது
ஒரு சொட்டு
தட்டிக் கதவகற்ற
வீறிட்டெழுந்து
மூன்றாம் நாளில்
கல்லறை பெயர்த்ததும்
எழுப்பித்ததும்
உயிர்ப்பித்ததும்
விண்ணேற்றியதும்
அக்குரலே
அக்குரலை எட்டுமொரு
சொட்டு
எம்முடலிலும்
தாருமென் பிதாவே
அது
கண்ணீராக இருந்தாலும் சரி
உதிரமாக இருந்தாலும் சரி
-ஆசை

Wednesday, April 16, 2025

மகிழ் ஆதன்-13: சிறப்புப் பகிர்வு



கவிஞரும் எங்கள் மகனுமான மகிழ் ஆதனுக்கு இன்று 13-ஆம் பிறந்த நாள். இன்று அவர் பதின்பருவத்தில் அடியெடுத்துவைக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. மகிழ் ஆதனின் கவிதைகளுள் சிலவற்றை இங்கே படிக்கலாம்.

மகிழ் ஆதனின் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ (2021) தொகுப்பிலிருந்து…



1.
பூக்கள் நம்மளை
வாசனை ஏத்த வைக்கும்
நம்மள்
புல்லாங்குழல் வைச்சு
வாசனை ஏத்த வைப்போம்


2.
என் வெயில்
என் முகத்திலே பட்டு
நினைவாய் ஆகிறது

3.
கண்முத்தம்
பறவை முத்தம்
ஊதா முத்தம்
மனசு முத்தம்
ஏசப்பா முத்தம்
நீலப்பறவை முத்தம்


4.
நான் பறவை ஒளி
நீ பறவை கண்காட்சி
நான் முந்திரிக் கண்
நீ முத்தம் கண்

5.
சிறுத்தைக் கண்
என்மீது பாயும்போது
ஒரு நடு ஒளி வரும்

6.
நீலத்துக்குள்ளே வட்டம்
வட்டத்துக்குள்ளே நான்
எனக்குள்ளே ரயில் பூச்சி

7.
எரிகல்
வானத்தில் இருக்கும்போதே
வானத்தைக்
காதலிக்கும்


8.
மழைச் சொட்டுக்கள்
என் கண்ணில் விழுந்து
என் கண்
பழச்சொட்டுக்களாக மாறும்


9.
நான்தான்
உலகத்தை வரைந்தேன்
வானத்தில் மிதந்தேன்
வானத்தை நான்
கையில் பிடித்துக் கூட்டிச்சென்றேன்
வானம் என்னைக்
காற்றால் கட்டிப்போட்டது
கட்டிப்போடும் நேரத்தில்
சூரியன் என்னை வரைந்தது
         -மகிழ் ஆதனின் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’
         தொகுப்பிலிருந்து.
         நூலைப் பெற: வானம் வெளியீடு – 91765 49991    

**

மகிழ் ஆதனின் ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’ (2022) கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்…



1.

காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்
காலத்தில் பறப்பான்
காலத்தை நேரில் பார்ப்பான்
காலத்தைக் கற்பனை பண்ணிப்பான்

2.
காலம் என்றால் என்ன
அது ஒரு பூ
அந்தப் பூவுக்குள்
ஒரு உலகம் இருக்கிறது


3. காலத்தின் சொல்

காலத்திற்கு வடிவம் இருக்கா
சொல்லுக்கு முடிவு இருக்கா
காலத்திற்கு இடம் உண்டா
சொல்லுக்கு வெளிச்சம் உண்டா
காலத்திற்கு வீடு இருக்கா
சொல்லுக்கு முத்தம் இருக்கா
காலத்திற்குக்  கனவு இருக்கா
சொல்லுக்கு உடம்பு இருக்கா
காலத்திற்கு உணர்வு இருக்கா
சொல்லால் வளர முடியுமா
சொல் என்றால் என்ன
அது ஒரு நிறம்
காலம் என்றால் என்ன
அது ஒரு புதிய மண்


4. புதிய காலம்

காலத்தின் அழகு
கண்ணால் மறைந்து
காதால் தெரியும்

நான் காலத்தின் மேல்
காலத்தின் வெளிச்சத்தை வரைந்தேன்

காலம் ஒரு கற்பனை

அந்தக் கற்பனையை
நான் உடைத்தேன்

காலத்துக்குள் ஒரு புதிய காலம்
பிறக்கிறது


5. பகலிரவு

பகல்
வண்ணங்களின் நிழலைக்
காட்டும்

இரவு
வண்ணங்களின்
கலைந்த கனவைக் காட்டும்

பகல்
ஒளியின் கோடு

இரவு
வண்ணங்களின் திட்டம்

பகல்
பார்வையின்  ஒளி

இரவு
வெளிச்சத்தின் குளிர்


6. நமக்குள் கருந்துளை

கருந்துளை காலத்தை முழுங்கியது
நம்மள் கருந்துளைக்குள் இருக்கிறோம்
கருந்துளை ஒரு கருப்புபூதம்
கருந்துளை  காந்தத்தின் கண்
காலத்தின் நிறம் கருப்பு
காலத்தின் நிறம்
கருந்துளையைக் கற்பனையில் உருவாக்கியது
கருந்துளை ஒரு கதையிலிருந்து வந்தது

நமக்குள் கருந்துளை

கருந்துளை
பூவுக்குள் தூங்கியது

காலமும் கருந்துளையும்
ஒரு பாட்டின் சந்தம்

கருந்துளை
சத்தத்தின் கனவு


7. எதிர்காலத்தில் வீசும் காற்று

பூக்கள்
பூக்களில் ஒட்டும் காலம்

காலம்
ஒளியைக் கூறிச் செல்லும் காலம்

பூக்களின் நிறம்
காலத்தின் மேல்

காலம்
ஒரு தட்டில் தெரியும் முகம்

கனவு
ஒரு எதிர்காலத்தில் வீசும் காற்று

காலம்
காற்றின் நிழல்

காலம்
கண்கட்டும் பூச்சாண்டி

காலத்துக்குள்
கரைந்த மேகம் இருக்கு


8. காலம் என்றால்

காலம் என்றால் மேகம்
ஒளி
மழை
கடல்
பறவை
சிங்கம்
சத்தம்
காற்று
புலி
ஆறு
சுனாமி
சூறாவளி
காட்டு யானை
நெருப்பு
குளிர்
மண்
வாசனை
விசில் குருவி
இறகு
கிளி
பச்சை
மான்
உலகம்
காலம் என்றால் கதை சொல்லும் பூ
          - மகிழ் ஆதனின் ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’
           தொகுப்பிலிருந்து.
           நூலைப் பெற: எதிர் வெளியீடு – 99425 11302, 98650 05084

**

இன்னும் நூலாக்கம் பெறாத புதிய கவிதைகள்

1.
ரயில் பூச்சி
நீங்கள்
என் மனசைத் தொட்டால்
என் மனசு
புதிய இடமாக
ஆகும்

2. விக்கலால் இறந்துபோன எலி

ஒரு நாள் காலையில்
விக்கலால் இறந்துபோன எலி
இறந்த உடனே
தூரத்தில் இருந்து
கண்காணித்துக்கொண்டு இருக்கும் காகங்கள்
ஆசையால் பறந்துவந்து
இறந்த எலியைக் கொத்திக் கொத்திக்
கனவின் முடிவிற்கு வரவைத்தது

நானும் விக்கிக்கொண்டுதான் இருந்தேன்
இரண்டு நிமிடம்


3. அதிசயங்கள்

இயற்கை நமக்குத் தரும்
அதிசயங்கள்
நம் நினைவைப்
பூட்டுப் போட்டுப் பூட்டும்

அதிசயங்கள் சிட்டுக்குருவியின்
இறகில் வாழ்ந்துகொண்டு
இருக்கட்டுமே


4.
வானத்தின் ஜன்னல்
என் நினைவின் முயல்


5.
காட்டுக்கு அடங்கிய ஆடு
ஆட்டைப் பார்த்த பூக்கள்
மரத்திடம் என்ன சொன்னது
ஆட்டுக்கு வந்த பசிதான்
நம் எதிரி
ஆட்டின் மனசைப் பார்த்து ஓடிய புலி
காட்டுக்குள் ஆடிய ஒளி
காட்டின் சத்தம் பறவைகளின் இதயம்
காட்டுக்குள் நுழைந்த ஒளியின் பதில்
காடு காலத்தில் படுக்கும் பாய்
காட்டுக்கு வந்த தூக்கம்
உணர்வில்லாத மரம்


6.
‘பூவுக்குள் இருக்கும் தேன்
யாருக்காக ஒளிந்திரிக்கிது

பறவைகளின் குரல் தேனின் காதில்
புல்லாங்குழல் வாசித்தது

தேனின் நிறம் ஆசையின் புதையல்

தேனிடம் மாட்டிய சத்தங்களை
பூமியில் புதைத்தது

பூமியில் இருந்து சத்தத்தின் பூக்கள் பூக்கும்
அதில் இருந்த தேன்கள் சிரித்தன

பூவுக்குள் இருக்கும் தேன்
முத்தத்தின் இருள்

பூவின் மேல் படும் வெயில்
தேனுக்கான அலாரம்
**


மகிழ் ஆதன் உலகத்துக்கு நான் எழுதிய அறிமுகம்:

ஸ்பைடர்மேனால் வரையப்பட்டவன் – மகிழ் உலகத்துக்கு ஓர் அறிமுகம்


மகிழ் ஆதன் கவிதைகள் தொடர்பாக மேலும் விரிவாக அறிந்துகொள்ள கீழ்க்கண்ட கட்டுரைகளைப் படிக்கலாம்:


எஸ். ராமகிருஷ்ணன்:

https://tinyurl.com/4tswh7pu

https://tinyurl.com/sy24wtt3

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்: https://tinyurl.com/3anudu2f

சுந்தர் சருக்கை: https://tinyurl.com/yrrt7vk3

டாக்டர் கு.கணேசன்: https://tinyurl.com/3bredys2

மு.இராமநாதன்: https://tinyurl.com/bdaavhjj

ந. பெரியசாமி: https://tinyurl.com/yu3y94jk

The New Indian Express: https://tinyurl.com/543wx4zj

இந்து தமிழ் திசையின் ‘மாயாபஜார்’: https://tinyurl.com/5bzpcdts

குங்குமம்: https://tinyurl.com/4ak3pmwh

தமிழ் விக்கி: மகிழ் ஆதன் - Tamil Wiki